New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழக அரசுகளும் மௌரிய பேரரசும்-கணியன்பாலன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழக அரசுகளும் மௌரிய பேரரசும்-கணியன்பாலன்
Permalink  
 


" பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர் 
சீர்மிகு பாடலிக் குழிஇக், கங்கை
நீர்முதற் கரந்த நிதியம் கொல்லோ! " (அகம் - 265)

என்கிறார் சங்ககாலக் கவிஞர் மாமூலனார். மகதத்தை ஆண்ட நந்தர்கள் பெரும் புகழை உடையவர்களாகவும், பெரும் படை உடையவர்களாகவும் இருந்ததோடு, மிகப் பெரிய அளவிலான செல்வத்தையும் கொண்டிருந்தனர் என்கிறார் அவர். நந்தர்கள் காலம் கி.மு.4 ம் நூற்றாண்டு ஆகும். நந்தர்கள் குறித்து பேசிய அவர், தனது வேறு இரு சங்கப் பாடல்களில் நந்தர்களுக்குப் பின் வந்த மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு குறித்து

" ..................................மோகூர்
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த" (அகம் - 251) எனவும்

"முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர் 
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற ஓங்கிய பனிஇருங் குன்றத்து
எண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த " (அகம் - 281) எனவும் இருபாடல்களை பாடியுள்ளார்.

அதில், பாண்டியர் படைத் தலைவன் மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின் எல்லைக் காவல் படைத்தலைவர்கள், பணியாததால் வடுகர்கள் வழிகாட்ட, வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது பிராகிருதச் சொல்லாடல் ஆகும்), மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைக் குன்றுகளை வெட்டி தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார். நந்தர்களுக்குப் பின் வந்த மௌரியர்களை புதியவர்கள் என்ற பொருளில், முதல் பாடலில் மட்டுமே வம்ப மோரியர் என்கிறார். (வம்ப என்றால் புதிய எனப் பொருள் படும்.). இரண்டாவது பாடலில் மோரியர் என்றே குறிப்பிடுகிறார்.

மாமூலனார் தவிர வேறு சில சங்கக்கவிஞர்களும், மௌரியர்களின் படையெடுப்பு குறித்து குறிப்பிட்டுள்ளனர். வேங்கடமலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாட வந்த கள்ளில் ஆத்திரையனார்,

"விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர. 
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த" (புறம் - 175) என்கிறார்.

உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் தனது அகப் பாடலில், காதலன் கடந்து சென்ற பாதை குறித்து,

"விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் 
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த (அகம் - 69) என்கிறார்.

இச்சங்கப் பாடல்கள், மோரியர்கள் தங்களின் தேர்படை முதலான பெரும்படைகளைக் கொண்டு வர மலைக் குன்றுகளை வெட்டி பாதை அமைத்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றன.

நந்தர்களை அகற்றிய பின், ஆட்சி ஏற்ற மௌரியர்கள் வட இந்தியாவில் பெரும்பகுதியைக் கைப்பற்றிய பின் தென் இந்தியா மீது படை எடுத்ததும், இன்றைய மைசூர் வரை தங்கள் ஆட்சியை விரிவுபடுத்தியதும், வரலாற்று மாணவன் அறிந்த செய்தி தான். ஆனால் மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு தமிழகத்தை தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள் தரும் செய்தி பல வரலாற்று மாணவர்களுக்கு ஒரு புதிய செய்தியே! இவை நடந்த காலம் கி.மு.4ம், 3ம் நூற்றாண்டுகள் ஆகும்.மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தலைமையில் தமிழக அரசுகளால் முறியடிக்கப்பட்டது. இளஞ்சேட்சென்னியின் தந்தையான பெரும்பூட்சென்னி குறித்தும் அவனது கழுமலப் போர் குறித்தும் அகம் 44இல் பாடியவர் குடவாயிற் கீரத்தனார் என்ற சங்ககாலக் கவிஞர் இக்கவிஞர் கி.மு.4ம் நூற்றாண்டைச் சார்ந்தவர்; மாமூலனாருக்கும் முற்பட்டவர்.

அடுத்ததாக படுமரத்து மோசிகீரனார் என்பவர் பாடிய குறுந்தொகை 75ம் பாடலில், தனது காதலன் வரவைச் சொல்லிய பாணனிடம், "என் காதலன் வரவை நீ பார்த்தாயோ, பார்த்தவர் சொல்லிக் கேட்டனையோ, உண்மையைச் சொல், உனக்குப் பரிசாகத் தருகிறேன், யானைகள் உலவும், சோனையின் கரையிலிருக்கும் பாடலிப் பொன் நகரை" என்கிறாள் பெருமகிழ்ச்சி அடைந்த தலைவி.

இப்பாடலில், மகத அரசின் தலைநகராக, கி.மு.4ம், 3ம் நூற்றாண்டுகளில் புகழ் பெற்று விளங்கிய பாடலிபுத்திரம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக சங்க காலக் கவிஞர்கள் நிகழ்கால நிகழ்வுகளை மட்டுமே தங்கள் பாடல்களில் குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கும் முந்தைய கால நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே குறிப்பிடப்படுகின்றன. உதாரணமாக பரணர் என்ற சங்ககால கவிஞர் இந்த மௌரியப் படையெடுப்புக்குப் பின் சில ஆண்டுகள் கழித்து வாழ்ந்தவர். மௌரியப் படையெடுப்பை முறியடித்த இளஞ்சேட்சென்னியின் மகனான முதலாம் கரிகாலன் காலத்தில் வாழ்ந்தவர். அவர்தான் அதிக அளவான வரலாற்றுக் குறிப்புகள் கொண்ட பாடல்களைப் பாடியவர். எனினும் அவர் மௌரியர்களைக் குறித்தோ அவர்களின் படையெடுப்பு குறித்தோ எங்கும் குறிப்பிடவில்லை. அவர் தனது காலத்தில் நடந்த நிகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். மௌரியப் படையெடுப்பு அவர் காலத்துக்கு முன்பே நடந்து விட்டதால், அது குறித்து அவர் குறிப்பிடவில்லை.

ஆகவேதான் மேலே குறிப்பிடபட்டுள்ள சங்ககாலப் பாடல்களைப் பாடிய மாமூலனார், குடவாயிற் கீரத்தனார், கள்ளில் ஆத்திரையனார், உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார், படுமரத்து மோசிகீரனார், பொன்றவர்கள் கி.மு.4ம், 3ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் எனக் கூறமுடியும்.

மேலும் “ஒரு வீட்டில் சாவு, இன்னொரு வீட்டில் மணவிழா. சாவு வீட்டில் துக்கம். மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டதுதான் வாழ்க்கை. இதனைப் படைத்தவன் பண்பில்லாதவனே! எனினும் வாழ்க்கையின் இயல்பை உணர்ந்தவரே அதில் இனிமையைக் காணமுடியும்." என்று பொருள்படும் புகழ்பெற்ற புறம் 194வது பாடலைப் பாடிய பக்குடுக்கை நன்கணியார் என்பவர்தான், ஊழியல், ஒருமையியம் என்கிற அணுவியத்தை தோற்றுவித்த, கி.மு.5-ம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்த, பகுத கச்சாயனார் ஆவார் எனப் பேராசிரியர் பே.க. வேலாயுதம் என்பவர் ஆய்ந்தளித்துள்ளார். ‘தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” என்ற நூலை எழுதிய முனைவர் க.நெடுஞ்செழியன் என்பவர் அக்கருத்தை மேலும் ஆய்ந்து உறுதி செய்துள்ளார். (ஆதாரம்: வள்ளுவத்தின் வீழ்ச்சி” பக்.44, ஆசிரியர் : பெங்களூர் குணா). ஆக சங்க இலக்கியங்களின் காலம் கி.மு.5 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது எனலாம்.

அசோகரின் கல்வெட்டுகள்:

மௌரிய அரசர் அசோகர் தனது 32 கல்வெட்டுகளில், இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமே தனது எல்லைக்கப்பாலுள்ள அரசுகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். இரண்டிலும் (2வது, 13வது) தமிழரசுகளின் பெயர்கள் வருகின்றன. 2வது கல்வெட்டில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான மருத்துவப் பணிகளை எந்தெந்த பகுதிகளில் செய்து வருகிறேன் என்று சொல்ல வந்த அசோகர், சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் முதலில் சொல்லிவிட்டு, அதன் பின்னரே கிரேக்க அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். 13வது கல்வெட்டில், தர்ம நெறி எந்தெந்த நாடுகளில் பரவ வேண்டும் என்று சொல்ல வந்த அசோகர் முதலில் கிரேக்க அரசர்களின் பெயர்களையும், பின்னர் சோழர்கள், பாண்டியர்கள் என இரு தமிழரசுகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறார்.

இரண்டு கல்வெட்டுகளிலும் தமிழக அரசுகளில் சோழர்களே முதன்மையாகக் குறிப்பிடப்படுகின்றனர். புகழ்பெற்ற அரச குலங்களால் ஆளப்படும் புகழ் பெற்ற மக்களைக் கொண்ட நாடுகள் என்பதால்தான் கிரேக்க மன்னர்களுக்கு முன் தமிழக அரசுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பல துறைகளிலும் தனித்துவமிக்க வளர்ச்சியும், சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்கள் படைக்கப்பட்டுக் கொண்டுமிருந்த தமிழக அரசுகளின் வலிமையையும், பண்பாட்டு பாரம்பரியத்தையும் அசோகர் உணர்ந்திருந்ததன் காரணமாகவே தனது கல்வெட்டில் தமிழரசுகளை முதலில் பதிவு செய்துள்ளார் எனில் அது மிகையாகாது.

மெகஸ்தனிசும் சாணக்கியரும் :

அசோகருடைய ஆட்சிக்காலம் கி.மு.269 முதல் கி.மு.232 ஆகும். அசோகரின் தாத்தா சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்தில், இந்தியா வந்திருந்த கிரேக்க தூதர் மெகஸ்தனிசின் காலம் கி.மு.350 முதல் கி.மு.290 வரை எனக் கருதப்படுகிறது. அதே காலகட்டத்தில் (கி.மு.350 முதல் கி.மு.283 வரை) வாழ்ந்தவர்தான் நந்தர்களிடமிருந்து மகத அரசைக் கைப்பற்ற உதவிய கௌடில்யர் எனப்படும் சாணக்கியர் ஆவார். மெகஸ்தனிஸ் மற்றும் அர்ரியன் என்பவர்கள் எழுதிய தகவல்களைக் கொண்டு 1877ல், ‘மெகஸ்தனிஸ் மற்றும் அர்ரியன் அவர்களால் விவரிக்கப்படும் பழமை இந்தியா” (Ancient India as described by Megasthenes and Arrian” By J.W. Mccrindle, M.A.,) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. அந்நூலில் ‘கெராக்கிளிஸ் (Herakles) என்பவருக்கு பல மகன்களும், பாண்டைய் (Pandai) என்ற ஒரு மகளும் இருந்தனர் என்றும், தனது அன்புக்குரிய மகளுக்கு தென்பகுதியிலுள்ள முத்து விளைகிற பாண்டிய நாட்டைக் கொடுத்து விட்டு இந்தியாவின் வேறு சில பகுதிகளை தனது மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்து விட்டு, தான் பாடலிபுத்திர அரசை வைத்துக் கொண்டார் என்றும், மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பாண்டிய அரசியின் சந்ததிகள் 300 நகரங்களும், 1,50,000காலாட் படைவீரர்களும், 4000 குதிரைப் படைகளும், 500 யானைகளும் கொண்ட அரசை ஆண்டு வருகின்றனர் என்றும், அங்கு முத்து விளைகிறது என்றும், பாடலிபுத்திர அரசு 6,00,000 காலாட்படைகளும், 30,000 குதிரைப் படைகளும், 9000 யானைகளும் கொண்டு ஆண்டு வருகிறது என்றும் குறிப்பிடுகிறார். (நூலின் பக்கங்கள் : 39, 114, 139, 147, 156, 158, 201 to 203)

‘மெகஸ்தனிசும், இந்திய மதமும்” (Megasthenes and Indian Religion) என்ற நூலை எழுதிய ஆலன் (Allan Dahlaguist) என்பவர், தனது நூலில் மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ள கெராக்கிளிஸ் என்பவர் இந்திரனா, கிருஷ்ணனா, சிவனா என்பது குறித்து பல்வேறு மூல இந்து புனித நூல்கள், புராணங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வு முடிவுகள் கல்வெட்டுகள் முதலியன கொண்டு ஆய்வு செய்து, கெராக்கிளிஸ் என்பவர் இந்திரனே என்றும், பாண்டைய் என்ற இளவரசிக்கு வழங்கப்பட்டது பாண்டிய நாடே என்றும், அது கி.மு.400க்கு முன்பிருந்தே இருந்து வருகிறது என்றும், அன்று அங்கு இந்திர விழா கொண்டாடப்பட்டு வந்தது என்றும், கிருஷ்ணன்தான் கெராக்கிளிஸ் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கி.மு.4-ம் நூற்றாண்டில் இல்லை என்றும் விரிவான ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

மேலும் இந்திய வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் மெகஸ்தனிஸ் பயணம் செய்த இந்தியப் பகுதிகள் குறித்த உறுதியான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர் பாண்டிய அரசின் தலைநகர் மதுரைக்கு பயணம் செய்ததற்கான தகவல் குறிப்புகள் உள்ளதாகவும் (மதுரை அப்பொழுது வளர்ச்சி பெற்ற விறுவிறுப்பான நகரமாக இருந்தது) விக்கிபீடியா குறிப்பிடுகிறது. அர்ரியன், மெகஸ்தனிஸ், ஆலன் ஆகியவர்களின் மேற்கண்ட பல ஆதாரக் குறிப்புகள் இந்தியாவில் கி.மு.4-ம் நூற்றாண்டளவில் மகதப் பேரரசுக்கு அடுத்த நிலையில் பாண்டிய அரசு இருந்தது என்பதையும், கி.மு.4-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பாண்டிய அரசு இருந்து வருகிறது என்பதையும் உறுதி செய்கின்றன.

சாணக்கியன் தனது அர்த்தசாஸ்திரம் என்ற நூலில் பாண்டிய நாட்டிலிருந்து பாண்டிய கவாடகா, தாமிரபரணிகா எனப்படும் பல்வேறு வகை முத்துக்களும், பல்வேறு வகை கல்மணிகளும், முசிறி துறையிலிருந்து சௌர்ணியா என்ற வகை கல்மணிகளும், முத்துக்களும் மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெண்மையும், மென்மையும் உடைய ‘துகுளா”, ‘வங்கா” (துகில், வங்கம் ஆகிய தமிழ் சொற்களுக்கு துணி என்பது பொருள்) என்கிற பலவகைப் போர்வைத் துணிகளும், கருப்பாகவும், மதிப்பு மிக்க நவரத்ன கல்மணிகளின் மேற்பகுதி போன்று மிகவும் மென்மையாகவும் உள்ள ‘பாண்ட்ரகா” என்ற போர்வைகளும், கசௌமா, பாண்ட்ரகா, சௌர்ணா குடியகா என்ற பல்வேறு வகையான ஆடை வகைகளும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகி, மகதத்துக்கு விற்பனைக்கு வருவதாகவும் சாணக்கியர் தனது நூலில் குறிப்பிடுகிறார். ஆதாரம் : ஆங்கில நூல் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் – ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு திரு. சு. சாமசாஸ்திரி அவர்கள் பக் : 101, 107, 109, 110 முதலியன.

ஆக கி.மு.4-ம் நூற்றாண்டு அளவிலேயே பல்வேறு வகையான முத்துக்களும், நவரத்ன கல்மணிகளும், பல்வேறு வகையான போர்வைத் துணிகளும், பல்வேறு வகையான ஆடை வகைகளும், பல்வேறு வகையான வாசனைப் பொருட்களும் தமிழகத்திலிருந்து முக்கியமாக பாண்டிய நாட்டிலிருந்து பெருமளவில் உற்பத்தியாகி மகதப் பேரரசின் சந்தைகளுக்கு விற்பனைக்கு போயிருந்திருக்கின்றன என்பதை சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் தெரிவிக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழக அரசுகளும் மௌரிய பேரரசும்
Permalink  
 


சங்க கால வணிகம்:

தலைவன் பொருள் தேடுவதற்காக தலைவியைப் பிரிந்து மொழிபெயர்தேயம் (இன்றைய கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்கள்) கடந்து சென்று பல மாதங்கள் தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர் என்ற தகவல் நூற்றுக்கணக்கான சங்க கால அகப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக பாலைப் பாடல்கள் பாடிய மாமூலனார் போன்ற சங்க கால புலவர்கள் இச்செய்தியை மிக விரிவாகவும், விளக்கமாகவும் தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஆக கி.மு.4-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மகதப் பேரரசு மட்டுமில்லாமல், இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் தமிழ்வணிகர்கள் நேரடியாகச் சென்று அங்கு தங்கி, வணிகம் செய்து வந்துள்ளனர் என்பதை சங்க கால அகப் பாடல்களில் உள்ள குறிப்புகளும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும் உறுதி செய்கின்றன.

ஆக சங்க இலக்கியங்கள் மகதஅரசு மற்றும் அதன் தலைநகர் பாடலிபுத்திரம் குறித்தும், அதன் அரச வம்சங்களான நந்தர்கள், மௌரியர்கள் குறித்தும் பேசுகின்றன. அசோகரின் கல்வெட்டும், சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமும், மெகஸ்தனிசின் இண்டிகாவும் தமிழரசுகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. ஆக அன்று வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்குமிடையே மிக நெருங்கிய தொடர்பு, முக்கியமாக வணிகத் தொடர்பும், பண்பாட்டுத் தொடர்பும் இருந்து வந்துள்ளது என்பதை இவை உறுதிப்படுத்துகின்றன.

தமிழகத்திலிருந்து வணிகம் செய்ய வடநாடு செல்பவர்கள், முதலில் வெய்யூர் (இன்றைய வேலூர்) வழியாக அல்லது கொங்கு நாட்டிலுள்ள தகடூர் (இன்றைய தர்மபுரி) வழியாகச் சென்று, இன்றைய கர்நாடகத்தைக் கடந்து சாதவ கன்னர்களின் தலைநராக இருந்த படித்தானம்(இன்றைய ஒளரங்காபாத் அருகே) போய்ச் சேர்ந்தனர். சேர நாட்டிலிருந்து துளு நாட்டு வழியாகவும் படித்தானம் போய்ச் சேர முடியும். பின், படித்தானத்திலிருந்து தக்காணப் பாதை வழியாக உஜ்ஜயினி முதல் பாடலிபுத்திரம் வரையான வடநாட்டு நகரங்களுக்குச் சென்று வந்தனர்.

சங்க காலத்தில் ஆந்திர, கலிங்க நாடு வழியாக வடநாடு செல்லும் பாதையும் இருந்துள்ளது. மாமூலனார் தனது அகம்-61, 295, 311, 359, 393 ஆகியபாடல்களில் புல்லி என்ற குறுநில மன்னனின் வேங்கடமலையை (இன்றைய திருப்பதி)க் கடந்து மொழிபெயர் தேயம் வழியாக தமிழர்கள் சென்றது குறித்து பாடியுள்ளார். இவ்வழியில் செல்பவர்கள் கலிங்கத்துக்கு வணிகம் செய்யச் சென்றவர்களாக இருத்தல் வேண்டும். பின் கலிங்கத்திலிருந்து வடநாடு செல்ல பாதைகள் இருந்தன. ஆனால் கர்நாடகம் வழியாக படித்தானம் சென்று, பின் வடநாடுகள் போகும் பாதையே புகழ்பெற்ற தக்காணப் பாதையாக இருந்துள்ளது.

இந்த ஆந்திர, கன்னட நாடுகளைக் கொண்ட தக்காணப் பகுதியும், இந்த வணிகப் பாதைகளும் தமிழகத்தின் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்தது என்றும், இந்தத் தக்காணப் பகுதியில் கொடுந்தமிழே மக்கள் மொழியாக இருந்தது என்றும், தமிழகத்தின் வட எல்லைக்கு அப்பால் வடக்கே செல்லச் செல்ல தமிழ்மொழி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து கொடுந்தமிழாக மாறியது என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

வட இந்திய மகத ஆட்சியும், சமண, பௌத்த மதமும் தக்காணத்தில் பரவியபோது, கொடுந்தமிழுடன் பிராகிருதம், சமற்கிருத மொழிக் கலப்பு ஏற்பட்டு கி.பி.5ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கன்னட, தெலுங்கு மொழிகள் உருவாகின. சங்க காலத்தில் அங்கு கொடுந்தமிழே பேசப்பட்டது. கொடுந்தமிழ் என்பது அடிப்படையில் தமிழே. தமிழ்தான் திரிக்கப்பட்டு வட இந்தியர்களால் திராவிடம் என அழைக்கப்பட்டது. பண்டைய தமிழ் எழுத்தான ‘தமிழி” என்பது முதலில் வட இந்தியாவில் ‘தம்ளி” என அழைக்கப்பட்டுவந்து, பின்னர் ‘திராவிடி” என திரித்து வழங்கப்பட்டது. (ஆதாரம் : தமிழெழுத்தின் வரி வடிவம்” பக்.18, 19, ஆசிரியர் சி. கோவிந்தராசனார் அவர்கள்). அதுபோலவே தமிழ் என்பதும் திராவிடம் எனதிரிக்கப்பட்டது. ஆக தமிழ் என்பதன் வடமொழி உச்சரிப்புதான் திராவிடம் ஆகும்.

அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவ கன்னர்கள் தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். ஒரு சமயத்தில் இவர்கள், மகதத்தையே பிடித்து சிறிது காலம் ஆண்டனர். சாதவ கன்னர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் (சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன. (ஆதாரம் : 24ஃ6ஃ2010, இந்து ஆங்கில நாளிதழில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் எழுதிய, ‘An epigraphic perspective, on the antiquity of Tamil' என்ற கட்டுரை)

ஆக, கி.மு.4-ம், 3-ம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. (கி.மு.1500 வாக்கில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததாக அம்பேத்கார் குறிப்பிடுகிறார் என்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவும். ஆதாரம் : வள்ளுவத்தின் வீழ்ச்சி - பெங்க@ர் குணா) வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தழிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழ் பேசப்பட்ட பகுதியை, மொழி பெயர் தேயம் என்றனர். (வடமொழி என்பது பொதுவாக சமற்கிருதம் எனக் கருதப்படுகிறது. அது தவறு. கி.பி.2ம் நூற்றாண்டு வரை வடமொழி என்பது பெரும்பாலும் பிராகிருதம் அல்லது பாலி மொழியையே குறிக்கும்). இந்த மொழி பெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31வது பாடல்,

‘தமிழ்க்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர்தே எத்த” என உறுதிப்படுத்துகிறது.

காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு :

மொழி பெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்துவந்தது என்றால் தமிழ் அரசுகள் முக்கியமாக மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்துசெயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும். கலிங்க மன்னன் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165ஆகும்.

அத்திக்கும்பா கல்வெட்டு :

11வது வரி : ’11-ம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, புகழ்பெற்ற நாடுகளைக் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து, முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, ‘பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது,பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்”.

13வது வரி : ‘12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங் களையும் கலிங்கத்தின் தலைநகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன். (ஆதாரம் : www.jatland.com/home/Hathigumpha - inscription). சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய ‘சிரி காரவேலா” என்ற நூலில் இப்பகுதி உள்ளது.

‘11வது வரியில் சமற்கிருதத்தில் புகழ்பெற்ற ‘ஜனபத்” என்பதை ஆங்கிலத்தில் புகழ்பெற்ற கிராமங்கள் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஜனபத் என்பது நாடுகளைக் குறிக்கும். எனவே புகழ்பெற்ற நாடுகள் என இங்கு மாற்றி மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழரசுகளின் கூட்டணி என்பது நாடுகளின் கூட்டணியே அன்றி கிராமங்களின் கூட்டணி அல்ல. அடுத்ததாக ‘பித்துண்டா” என்ற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்நகரம் கலிங்கத்தின் தென் எல்லையோரத்தில்தான் அமைந்திருக்க வேண்டும்.

கலிங்கத்தின் தென் எல்லையேரத்தில் இருந்த, முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நகரம் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக இருந்தது என்றால் அதன் கருத்து என்ன? தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் காவல் அரணாக பித்துண்டா நகரம் இருந்து வந்துள்ளது என்பதும், தமிழகத்தின் வட எல்லையில் இருந்து, கலிங்கத்தின் தென் எல்லை வரையான இன்றைய ஆந்திரத்தின் சில பகுதிகள் தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்து வந்துள்ளது என்பதும் அதன் பொருளாகிறது. அதன்மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின்கீழ்தான் இருந்து வந்தது என்ற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.

மேலும், இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கீழ் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அது தரைமட்டமாக்கப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டுள்ளது. www.freeindia.Org/biographies/kharavela/index.htm என்ற இணைய தளப் பக்கத்தில் D.N. சன்பக் (Shanbhag) என்பவர், தனது கட்டுரையில், தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படையெடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை, தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்கு பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தை தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென்கிழக்கு எல்லையில் இருந்த தமிழக அரசுகளின் காவல் அரண் என்பதையும், மொழிபெயர் தேயமான ஆந்திரத்தின் சில பகுதிகள் தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்துள்ளது என்பதையும் உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கனவாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழரசுகளிடையே ஐக்கிய கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வடநாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து, அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். இதைத்தான் கல்வெட்டின் 13-வது வரி குறிப்பிடுகிறது எனலாம்.

ஆக மாமூலனாரின் பாடல்களும், காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதையும், மொழி பெயர் தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

தமிழரசுகளின் கடல் வல்லமை :

தமிழ் அரசுகள் அன்று மாபெரும் கடல் வல்லரசுகளாகவும் இருந்தன. இதுகுறித்து வின்சென்ட் யு.ஸ்மித் என்கிற புகழ்பெற்ற வரலாற்றறிஞர், ‘தமிழ் அரசுகள் வலிமை மிக்க கடற்படைகளை வைத்திருந்தனர். கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வாணிபக் கப்பல்கள் தமிழகம் நாடி வந்தன” என்று தனது இந்திய வரலாறு என்ற நூலில் குறிப்பிடுவதாக கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் பண்டைத் தமிழ் சமூகம் என்ற தனது நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார். வின்சென்ட் யு. ஸ்மித் அவர்கள் தனது அசோகர் என்ற மற்றொரு நூலில் ‘தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள் பராமரித்து வந்துள்ளன” எனக் குறிப்பிடுகிறார். (ஆதாரம் : ‘அசோகர்” வின்சென்ட் யு. ஸ்மித், தமிழில் சிவமுருகேசன் பக்: 79) தென்னிந்திய நாடுகள் என்பன தமிழக நாடுகளே ஆகும்.

பண்டையத் தமிழக அரசுகள் வலிமை மிக்க கடற்படைகளைக் கொண்டிருந்த போதிலும் அவர்களிடையே நடைபெற்ற போர்கள் அனைத்துமே நிலப் போர்களாகவே இருந்தன. அவைகளுக்கிடையே கடற் போர்கள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகிய இருவரும் கடம்ப மன்னர்களை, அவர்களின் கடற் கொள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடற்படை கொண்டு அவர்களைத் தாக்கி அழித்தனர். தமிழக கடல் வாணிபத்துக்குத் தடையாக இருந்த கடற் கொள்ளையர்களையும் தாக்கி அழித்தனர் என பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. அதுபோன்றே சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்செட் சென்னியும், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியனும் தென் பரதவர்களை, அவர்களின் கடல் வல்லமையை, தங்கள் கடற்படை கொண்டு அடக்கினர் என சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

ஆக கடற் பகுதியையும், கடல் வணிகத்தையும் பாதுகாக்க மட்டுமே கடற்படை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. கடல் வணிகத்தை பாதுகாப்பதிலும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி இருந்ததாகத் தெரிகிறது. அதனால்தான் தமிழரசுகளுக்கிடையே கடற்போர் எதுவும் நடைபெறவில்லை. ஆக வடக்கே சென்று வணிகம் புரியவும், கடல் வாணிகத்தை பாதுகாக்கவும், வடக்கிலிருந்து வடுகர்கள் போன்ற அநாகரிக மக்களைகட்டுப்படுத்தி வைக்கவும், மொழி பெயர் தேயப் பகுதியைப் பாதுகாக்கவும், வடக்கேயிருந்து வந்த படையெடுப்புகளைத் தடுக்கவும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிகநீண்ட காலமாக இருந்து வந்தது என்பதை மேலே சொல்லப்பட்ட செய்திகள் அனைத்தும் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

புகழ்பெற்ற நெடியோன் எனப்படும் நிலந்தருதிருவிற்பாண்டியன் கி.மு.5-ம்நூற்றாண்டிலேயே மிகப்பெரும் கடற்படை வைத்திருந்தான் எனவும், ‘சாவகம்” (இன்றைய இந்தோனேசியா தீவுகள) அன்றே அவனது கடற் படை கொண்டு கைப்பற்றப்பட்டது எனவும், அப்பாதுரை அவர்கள் குறிப்பிடுகிறார். அதன்மூலம் ‘கிராம்பு” எனப்பட்ட வாசனைப் பொருள் வணிகம் தமிழர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது எனத் தெரிகிறது.

கிராம்பு என்பது உலகிலேயே இந்தோனேசியாவில் மட்டுமே விளைந்தது என்றும், உலகம்முழுவதும் அதற்கு மிக அதிகத் தேவை இருந்தது என்றும் அறிகிறோம். கி.மு.500 க்கு முன்பிருந்தே அத்தேவை கடல் வணிகம் மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. அதனால்தான் அவ்வணிகத்தை தமிழர்கள் தமது கடற்படை கொண்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். சங்க காலத்தில் சாவகத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை காப்பியத்தின் கூற்று அச்செய்தியை உறுதிப்படுத்துகிறது. (ஆதாரம் : கா. அப்பாதுரை அவர்களின் தென்னாட்டு போர்க்களங்கள் பக் : 43 முதல் 48 வரை).

மேலும் நரசய்யா அவர்களின் ‘கடல் வழி வணிகம்” என்ற நூல் தமிழர்களின் பண்டையக் கடல் வணிகம் குறித்து பல விரிவான தகவல்களைத் தருகிறது. ஆக கி.மு.5-ம் நூற்றாண்டிலிருந்தே பண்டைய தமிழக அரசுகள் கடற் போரிலும், கடல் வணிகத்திலும் புகழ் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக இருந்துள்ளனர்.

பண்டைய தமிழ் அரசுகள் :

பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுக்களில் சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரள புத்திரர்கள் என பன்மையில்தான் குறிப்பிட்டுள்ளார். சங்க காலத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் ஒவ்வொருவரிலும் பலர் இருந்து ஆண்டு வந்துள்ளனர். அதாவது சேரர்களில் மூன்று நான்கு பேரும், பாண்டியர்களில் மூன்று நான்கு பேரும் சோழர்களில் மூன்று நான்கு பேரும் இருந்து ஆண்டு வந்துள்ளனர். இதனைக் கவனத்தில் கொண்டுதான் பண்டைய தமிழக வரலாற்றை ஆராய வேண்டும். சேரர்கள் வஞ்சி, கரூர் ஆகிய இடங்களிலும், சோழர்கள் உறையூர், காவிரிப் பூம்பட்டினம் ஆகிய இடங்களிலும், பாண்டியர்கள் மதுரை, கொற்கை ஆகிய இடங்களிலும் இருந்து கொண்டு மூன்று நான்கு சேர, சோழ, பாண்டிய பரம்பரையினர் ஆண்டு வந்துள்ளனர்.

உதாரணமாகச் சேரன் கடற்பிற கோட்டிய செங்குட்டுவன் காலத்தில் அதற்குச்சற்று முன்பும் பின்பும் (1) இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,(2) பல்யானைச்செல் குழுகுட்டுவன், (3) சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்,(4) சேரன் செல்வக்கடுங்கோ வாழியாதன், (5) களங்காய்கண்ணி நார்முடிச்சேரல், (6) ஆடு கோட்பாட்டு சேரலாதன், (7) தகடூர் எறிந்த நெடுஞ்சேரல் இரும்பொறை, (8) சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை ஆகிய 8 பேர் இருந்துள்ளனர். செங்குட்டுவனையும் சேர்த்து 9 பேர் ஆகிறது. இதேபோன்றுதான் சோழ, பாண்டிய அரசர்களும் இருந்துள்ளனர். அதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுகளில் தமிழக அரசர்களை பன்மையில் குறிப்பிட்டுள்ளார்.

சோழர்களின் முதன்மை

மெகஸ்தனிஸ், சாணக்கியர் குறிப்புகளில் இருந்தும், அசோகரின் கல்வெட்டுகளில் இருந்தும் தமிழக வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வை அறிய முடிகிறது. கி.மு.325 முதல் கி.மு.300 வரையான காலகட்டத்தில், அதாவது கி.மு.4-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழக மூவேந்தர்களில் முதன்மையான அரசாக மெகஸ்தனிஸ், சாணக்கியர் ஆகிய இருவரும் குறிப்பிடுவது பாண்டிய அரசைத்தான். ஆனால் கி.மு.3-ம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பொறிக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகளில் முதன்மை பெற்றிருப்பது சோழ அரசுதான்.

பாண்டிய அரசு இரு கல்வெட்டுகளிலும் இரண்டாவது இடத்தில் தான் குறிக்கப்பட்டுள்ளது.(அசோகர்-வின்சென்ட் A ஸ்மித், தமிழில் சிவ. முருகேசன், பக்: 123, 139)அரை நூற்றாண்டுக்குள் சோழர்கள் முதன்மை பெற்று, பாண்டியர்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்று, அது அன்றைய இந்தியாவெங்கும் பிரதிபலித்துள்ளது. அந்நிகழ்வு என்ன என்பதை அறிவோமாக!

சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலம் கி.மு.321 முதல் கி.மு.292 ஆகும். அவர் மகன் பிம்பிசாரரின் ஆட்சிக் காலம் கி.மு.293 முதல் கி.மு.272 ஆகும். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக் காலத்திலேயே, கி.மு. 300-க்கு பின் தக்காணத்தைக் கைப்பற்றும் பணி தொடங்கி விடுகிறது. ஆனால் பிம்பிசாரரின் ஆட்சிக் காலத்தில் அதாவது கி.மு.293-க்குப் பிறகு அது தீவிரப்படுத்தப் படுகிறது.

இதுகுறித்து கா.அப்பாதுரையார் அவர்களின் ‘தென்னாட்டுப் போர்க் களங்கள்” என்ற நூல், முனைவர் எம். இராசமாணிக்கனார் அவர்கள் சங்க இலக்கியங்களில் இருந்து திரட்டிய தொகுப்பை அடிப்படையாகக் கொண்டு, ஒரு விரிவான விளக்கத்தை வழங்குகிறது. தென்னிந்தியாவை கைப்பற்றிய காலம் அசோகரின் ஆட்சிக் காலம் என்கிறது அந்நூல். ஆனால் பிந்துசாரரின் ஆட்சிக் காலத்தில் தான் அது நடைபெறுகிறது. அசோகரின் ஆட்சிக் காலத்தில் அது நடந்திருக்க வாய்ப்பில்லை.

பிந்துசாரன் ஆட்சிப் பொறுப்பேற்ற போது வடக்கு, மத்திய கிழக்கு இந்தியாவும், ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளும் மௌரிய ஆட்சியின் கீழ் இருந்தன என்றும், பிந்துசாரன் காலத்தில் தான் தெற்குப் பகுதியில் பேரரசு விரிவு பெற்றது என்றும், இரு கடல்களுக்கு இடைப்பட்ட நிலத்தை கைப்பற்றியவன் என பிந்துசாரன் புகழப்படுகிறான் என்றும், விக்கிமீடியா குறிப்பிடுகிறது. பிந்துசாரன் ஆட்சிக் காலத்தில் இன்றைய மைசூர் வரை மௌரியப் பேரரசு விரிவு பெற்றது.

தமிழக அரசுகள் பிந்துசாரரின் நட்பு நாடுகள் என்பதால், அதனைக் கைப்பற்றும் முயற்சி எதுவும் நடைபெற வில்லை என்ற சில வரலாற்று அறிஞர்களின் கருத்தை, சங்க இலக்கியக் குறிப்புகள் மறுக்கின்றன. பெருஞ்செல்வமும், நல்ல வளமும், வணிக விரிவாக்கமும் பெற்றுத் திகழ்ந்த தமிழக அரசுகளைக் கைப்பற்ற, மௌரியப் பேரரசு தனது முழுப் பேராற்றலை பயன்படுத்தி முயற்சித்தது என்பதை சங்க இலக்கியக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

ஏரணக் கண்ணோட்டத்திலும், வரலாற்று அனுபவ முறையிலும் அதுவே பொருத்தமான செய்தியாகும். தக்காணத்தையும், தமிழகத்தையும் கைப்பற்றும் மௌரியர்களின் படையெடுப்பு கி.மு.293 முதல் கி.மு.280 வரையான காலங்களில் மிகத் தீவிரத்தோடும், மௌரியப் பேரரசின் முழு ஆற்றலோடும் நடைபெற்றது. தக்காணத்தின் பல பகுதிகள் பிடிக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தை பொருத்தவரை அப்படையெடுப்பு ஒரு பெரும் தோல்வியில் முடிந்தது என்பதுதான் வரலாறு. சங்க இலக்கியங்கள் தரும் செய்தியும் அதுவே. பாரசீகப் பேரரசு கி.மு.5-ம் நூற்றாண்டில் கிரேக்க அரசுகளைக் கைப்பற்ற முயன்றபோது அம்முயற்சி பெருந்தோல்வியில் முடிந்தது. அதுபோன்ற நிலையே மௌரியப் பேரரசின் தமிழகப் படையெடுப்புக்கும் ஏற்பட்டது. பின் பிம்பிசாரரின் கடைசி ஆட்சி ஆண்டுகளில் தமிழகரசுகளோடு நட்புறவு ஏற்படுத்தப்பட்டது.

மௌரியப் பேரரசின் படையெடுப்பு :

மௌரியர்கள் முதலில் வடுகர்கள் துணை கொண்டு துளுவ நாட்டைத் தாக்கி, அதனை ஆண்ட நன்னன் மரபினனை முறியடித்து, அவனது தலைநகர் பாழியை கைப்பற்றிக் கொண்டனர். பின் அதனை ஒரு வலிமையான அரணாக மாற்றியமைத்து, அங்கிருந்து அவர்கள் அதியமான் மரபினனாகிய எழினியையும், சோழ நாட்டின் எல்லையிலுள்ள அமுந்தூர்வேல் திதியனையும், பாண்டிய நாட்டு எல்லையிலுள்ள மோகூர்த் தலைவனையும், படிப்படியாகத் தாக்கத் தொடங்கினர். சேரர் எல்லையில் இருந்த நன்னனை முதலிலேயே தாக்கியழித்திருந்ததால், முதலில் சேரர்களைத் தாக்கினர்.

சேரர் படைத் தலைவன் பிட்டங்கொற்றன் மோரியர்களோடு பல தடவை போர் புரிகிறான். போர் வெற்றி தோல்வி இல்லாமல் தொடர்கிறது. பின் மௌரியர்களை அதியமான் மரபினன் எழினி என்பான் முதலில் வட்டாறு என்ற இடத்திலும், பின் செல்லூர் என்ற இடத்திலும் எதிர்த்து தாக்குதல் நடத்துகிறான். இறுதியில் செல்லூர் போரில் எழினி வீர மரணமடைந்து பெரும் புகழடைகிறான். அதன் பின்னரும் அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில், அவர்களின் அரச குல வடமொழிப் (பிராகிருதம்) பெயரில் ‘சத்திய புத்திரர்கள்’ என மூவேந்தர்களுக்கு இணையாக இடம் பெற்றனர் எனலாம்.

சோழ நாட்டெல்லையில் உள்ள அமுந்தூர்வேல் திதியனும், பாண்டிய நாட்டெல்லையிலுள்ள மோகூர்த் தலைவனும் மோரியர்களை எதிர்த்துத் தாக்கி அவர்களைத் தடுத்து நிறுத்து கின்றனர். இறுதியில் திதியனும் மோகூர்த் தலைவனும் மோரியர்களைப் போரில் தோற்கடித்து தங்களது எல்லையை விட்டு துரத்தி விடுகின்றனர். மோரியர் படை பின்வாங்கி துளுவ நாட்டை அடைந்து, பாழி நகரில் நிலை கொள்ளுகிறது.

மௌரியப் பேரரசின் படை இதுவரை முழுமையாக போரில் ஈடுபடவில்லை. அதன் தென்பகுதி படைத்தலைவர்களே வடுகர்களின் துணை கொண்டு போரை நடத்தி வந்தனர்.தமிழக எல்லையில் ஏற்பட்ட பெருந்தோல்வி மௌரியப்பேரரசினை கொதித்தெழச்செய்தது.உடனடியாக பெரும்படை திரட்டப்பட்டது.முதலில் துளு நாட்டையும், எருமை நாட்டையும் கடந்து வரும் வழிகளிலுள்ள பாறைகளை வெட்டிச் செப்பனிட்டு மௌரியப் பெரும்படை வருவதற்கான பாதைகள் உருவாக்கும் பணி நடைபெற்றது.

இந்த பெரும் போருக்கான ஆயத்தப் பணிகள் சில ஆண்டுகள் நடைபெற்றதாகத்தெரிகிறது. இப்பாறைகளை வெட்டி பாதை அமைக்கும் பணி குறித்தும், மோகூர் தலைவன் பணியாதது குறித்தும், வடுகர் வழி காட்டியாக இருந்து மோரியர்களுக்கு உதவினர் என்பது குறித்தும் சங்க புலவர்கள தங்கள் பாடல்களில் தெரிவித்துள்ளனர். இந்த பெரும்போருக்கான ஆயத்தப் பணிகள் முடிந்த பின் மௌரியப் பேரரசின் பெரும்படை துளுவ நாட்டில் வந்து தங்கி, தமிழகத்தின் மீது படையெடுக்கத் தயாராகியது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழகத்தின் பெருவெற்றி :

தமிழகத்துக்கு வந்துள்ள மிகப்பெரிய ஆபத்தை, சோழ அரசன் இளஞ்செட்சென்னி நன்கு உணர்ந்து கொள்கிறான். எல்லையிலுள்ள படைத் தலைவர்களை வேளீர்கள் மற்றும் சிற்றரசர்களை மட்டும் இப்பெரும் போருக்கு பொறுப்பாக்குவது பெரும் ஆபத்தில் முடியும் என்றெண்ணி, தமிழர் ஐக்கிய கூட்டணி அரசுகளை (மாமூலனார் மற்றும் கலிங்க மன்னர் குறிப்பிடும் தமிழக அரசுகளின் கூட்டணி) ஒன்று திரட்டி, தனது தலைமையில் பெரும் படையைத் திரட்டுகிறான். இப்போர் தமிழகப் போராக, தமிழக கூட்டணி அரசுகளின் போராக நடைபெற்ற போதிலும், இப்போரின் வெற்றி சோழர்களின் வெற்றியாகவே வடவரிடத்திலும், நமது இலக்கியங்களிலும், புராணங்களிலும் பதிவாகி, சேர, பாண்டியர்களை விட சோழர்கள் பெரும் புகழடைகின்றனர்.

தமிழக கூட்டணி அரசுகளுக்கும், மௌரியப் பேரரசுக்குமிடையே பெரும் போர் துவங்கியது. சோழ நாட்டெல்லையிலேயே பல தடவை மௌரியர்கள் தோல்வியுற்றனர். எனினும் தொடர்ந்து புதுப் புதுப் படைகளை போருக்கு அனுப்பினர். மௌரியப் பேரரசின் முழு ஆற்றலும் திரட்டப்பட்டு பெரும்படை கொண்டு தமிழகம் தாக்கப்பட்டது. தமிழகத்தின் வடபகுதி முழுவதும் மௌரியப் பெரும்படையால் தாக்கப்பட்டது. வட ஆர்க்காட்டில் உள்ள வல்லம் என்ற இடத்தில் நடைபெற்ற பெரும்போரில், இளஞ்செட்சென்னி மௌரியர்களை பெருந்தோல்வியடையச் செய்து துரத்தியடித்தான்.

வல்லம் போர் குறித்து அகம் 336-ல் பாடிய பாவைக் கொட்டிலார்என்ற பெண்பாற் புலவர், மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிடுகிறார். மௌரியர்கள் தங்களைஆரியர் என்றே அழைத்துக் கொண்டனர். (இது கி.மு.3-ம் நூற்றாண்டுப் பாடல் ஆகும். இதில் குடும்ப மகளிர்கள், ‘கள்” அருந்தி தங்கள் கணவன்மார்களின் பரத்திமை நடத்தை குறித்து வம்பளந்து கொண்டிருப்பது குறித்த குறிப்பு வருகிறது). அதன்பின்னரும், மௌரியர்கள் சளைக்காமல் தொடர்ந்து பல தடவை, பெரும் படைகளை அனுப்பிக் கொண்டேயிருந்தனர்.

ஆனால் போரில் பெரும் இழப்புகள் ஏற்பட்டதே ஒழிய, அவர்களுக்கு வெற்றி கிடைப்பதாகத் தெரியவில்லை.இறுதியில் தொடர்ந்து அடைந்து வந்த தோல்விகளால் தாக்குப்பிடிக்க இயலாமல் பெரும் இழப்போடு பாழி நகருக்குப் பின்வாங்கினர். இளஞ்செட் சென்னி போரை தொடர்ந்து நடத்தி, பாழி நகர் வரை படையெடுத்துச் சென்று, அதனைத் தாக்கி, இறுதியில் பெரும் வெற்றியை தமிழகத்துக்கு வாங்கித் தந்தனன்.

இளஞ்செட் சென்னியின் பாழி நகர் வெற்றி குறித்து இடையன் சேந்தன் கொற்றனார் என்பவர் அகம் 375-ல் பாடியுள்ளார். அதில் மௌரியர்களை அவர் வம்ப வடுகர் என்கிறார். தமிழகத்தின் வடக்கே வாழ்பவர்களை வடுகர் என்பது பொது வழக்கு. வடக்கேவாழும் வடுகர்களை அவர் அறிவார். ஆனால் மௌரியர்களை அவர் அறியார். ஆனால் மௌரியர்களும் வடக்கிருந்தே வருவதால், புதிய வடுகர்கள் என்பதால், அவர்களை வம்ப வடுகர் என்கிறார்.

பாழி நகரில் நடந்த இறுதிப் பெரும் போருக்குப் பின்னர் மௌரியர்கள் தமிழக அரசுகளைப் படைகொண்டு வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்து கொண்டு நிரந்தரமாக பின்வாங்கினர். தமிழகத்தைக் கைப்பற்றும் முயற்சி கைவிடப்பட்டு தமிழக அரசுகளோடு நட்பு கொண்டனர். கி.மு.293-ல் பிம்பிசாரன் காலத்தில் தீவிரப்படுத்தப்பட்ட தக்காணப் படையெடுப்பும், தமிழகப் படையெடுப்பும் 13 ஆண்டுகள் தொடர்ந்து நடந்ததாகக் கொண்டு, பாழி நகரில் நடந்த இவ்விறுதிப் பெரும்போர் கி.மு.280 வாக்கில் நடந்ததாகக் கணிக்கலாம். இந்தப் பெரும்போரில் சோழர் பெற்ற பெரும் புகழின் காரணமாகவே, அசோகன் தனது இரு கல்வெட்டுகளிலும் சோழர்களை முதன்மைப்படுத்தியுள்ளான்.

‘இந்தியாவின் வரலாறு” என்ற நூல் கொ.அ. அன்தோனவா, கி.ம.போன்காரத்-லேவின் ஆகிய இரு இரசிய வரலாற்று அறிஞர்களால் எழுதப்பட்டு, முன்னேற்றப் பதிப்பகத்தால் 1987ல் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அசோகன் இளவரசனாக இருக்கையில் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்ட அவந்தி மாநிலத்துக்கு தனது தந்தையால் அனுப்பப்பட்டு அப்பகுதியை அவன் நிர்வகித்து வந்தான் என்ற செய்தி தரப்பட்டுள்ளது. (பக்.93)

தக்காணத்தின் துவக்கத்தில் அவந்தி மாநிலம் இருப்பதால் தமிழகப் படையெடுப்பு குறித்த முழு விபரத்தையும் அசோகன் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இதே புத்தகம் பக்.104-ல் இன்னொரு முக்கிய தகவல் உள்ளது. அசோகன் ஆட்சிக் காலத்தில் தனிப்பட்ட தெற்கு மாநிலம் அமைக்க, பிந்துசாரன் ஆட்சிக் காலத்தில் இருந்த, முக்கியத்துவம் பெற்றிருந்த ‘தெற்குப் பிரச்சினையே”காரணம் என்றும், பிற மாநில ஆட்சித் தலைவர்கள் குமாரர்கள் என பட்டம் பெற்றிருந்த போது, தெற்கு மாநில ஆளுநர் மட்டும் பட்டத்து இளவரசன் என்கிற‘ஆர்ய புத்ர” என்ற பட்டத்தைப் பெற்றிருந்தான் எனவும் அந்நூல் குறிப்பிடுகிறது.

ஆக ‘தெற்கு பிரச்னை” என்பது என்ன? அதுவும் பிம்பிசாரன் ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த தெற்குப் பிரச்னை என்பது என்னவாக இருக்க முடியும்? தமிழக கூட்டணி அரசுகளிடம் மௌரியப் பேரரசு பெருந்தோல்வி அடைந்ததும், பேரரசின் தெற்கிலுள்ள தமிழக அரசுகளிடமிருந்து எப்பொழுதும் பேரரசுக்கு ஆபத்து இருப்பதையுமே அது சுட்டிக்காட்டுகிறது. மேலும் மொழி பெயர் தேயம் எனப்படும் ஆந்திர, கர்நாடகப் பகுதியிலுள்ள பல காவல் அரண்கள் தொடர்ந்து தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

ஆக தமிழரசுகளின் புகழையும், செல்வாக்கையும், வலிமையையும் அறிந்திருந்ததால்தான் அசோகர் தமிழரசுகளை, கிரேக்க மன்னர்களுக்கு முன் தனது கல்வெட்டில் பதியச் செய்துள்ளார் என்றால் அது மிகையாகாது. மேலும் கி.மு.230-ல், அசோகர் இறந்த உடன், சாதவ கன்னர்கள் தமிழக அரசுகளின் ஆதரவோடு தனி அரசாகினர் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்வது நல்லது. சாதவ கன்னர்கள் (நூற்றுவர்கன்னர்), தமிழரசுகளோடு நட்பு கொண்டிருந்தனர். சேரன் செங்குட்டுவன் சாதவ கன்னர்களின் துணையோடுதான் வட நாடுகள்மீது படையெடுத்தான் என சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

சிலப்பதிகார காலம் :

சிலப்பதிகாரம் குறித்துப் பேசும் பொழுது இராம.கி அவர்களின் சிலம்பின் காலம் கட்டுரையில் உள்ள ஒரு முக்கிய தரவை இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. இலங்கை அரசன் கயவாகு, கண்ணகி விழாவுக்கு வந்திருந்ததாக ‘வரம்பறுகாதை” குறிப்பிட்டுள்ள செய்தியைக் கொண்டு செங்குட்டுவனின் படையெடுப்பு காலம் கி.பி.177 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இளங்கோவடிகள், செங்குட்டுவனின் தம்பி எனவும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியம் எனவும் கருதப்படுகிறது. வரம்பறுகாதை என்பது பிற்காலத்திய இணைப்பு என்றும் அதில் தரப்பட்டுள்ள இதுபோன்ற செய்திகள் ஆதாரமற்றவை என்றும் இராம.கி அவர்கள் தனது கட்டுரையில் ஆதாரத்தோடு நிறுவுகிறார்.

அதன்படி கி.பி.177 என்ற ஆண்டு நிர்ணயம் தவறாகி விடுகிறது. அதற்குப் பதில் சிலப்பதிகாரகால படையெடுப்பு ஆண்டு நிர்ணயம் கி.மு.75 என அவர் குறிப்பிட்டுள்ளார். அது ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு கருதுகோள் ஆகும். எனினும், தமிழக கூட்டணி அரசுகளின் மௌரியப் பேரரசுக்கெதிரான இறுதிப் பெரும்போரான செருப்பாழிப் போரின் காலம் கி.மு.280 எனும்பொழுது சேரன் செங்குட்டுவனின் காலம் கி.பி.177 என்பது பொருந்தி வராது. எனவே கி.பி.177 என்பதை அடிப்படையாகக் கொண்டு தமிழக வரலாற்றின் காலத்தை நிர்ணயிப்பது ஒரு தவறான அடிப்படை என்ற இராம. கி அவர்களின் கருத்து மிக மிகச் சரியாகும்.

சிலப்பதிகாரச் சிறப்பு :

மணிமேகலை போன்று சிலப்பதிகாரம் ஒரு மதச் சார்பான நூல் அல்ல. சிலப்பதிகாரம் தமிழ் தேசிய ஒற்றுமையை வலியுறுத்துகிறது. தமிழக வணிகம் ஒரு உயர்வளர்ச்சியடைந்த காலத்தைக் குறிக்கிறது. பண்டைய தமிழிசையின், தமிழ்க் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்துகிறது. தமிழ் சமுதாயத்தின் பரந்துபட்ட மக்களின் பண்பாட்டை எடுத்துக் காட்டுவதோடு, முதலாளித்துவத்துக்கு முந்திய வளர்ச்சியடைந்த வணிகக் குழுக்களின் முடி அரசுக்கெதிரான கருத்தை பிரதிபலிக்கிறது. தமிழ் தேசியத்துக்கான கருவைக் கொண்டு, தனித்துவமிக்க தமிழ்ச் சமுதாயத்தின் முதல் காப்பியமாகத் திகழ்கிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகக் காப்பியங்கள் அனைத்தும் கடவுளையும், வேந்தனையும் கொண்டு புனையப்பட்டதற்கு மாறாக, சாதாரண ஒரு வணிகனை, அதுவும் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு புனையப்பட்டதோடு, முடி அரசுக்கு சவால்விட்டு, நியாயத்தின் அடிப்படையில் அதனை எரித்து அழிக்கும் ஆற்றல் பெற்ற பெண்ணாகவும் படைக்கப்பட்டுள்ளது.

வரம்பறுகாதை போன்ற பிற்கால இணைப்புகளையும், இன்னபிற இடைச் செருகல்களையும் நீக்கிப் பார்க்கும்பொழுது சிலப்பதிகாரம் ஒரு மதச் சார்பற்ற படைப்பே ஆகும். இக்காப்பியத்தில் வருகிற மதக் கருத்துக்களும் உயர்நவிற்சி மிக்க கற்பனைகளும், அக்காலத்திய தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கைகளையும், காப்பியத்துக்குத் தேவையான கற்பனை புனைவுகளையும் கொண்டு படைக்கப் பட்டதாகவே கருத முடியும். எனவே இதனையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்பது தவறு. கோவலன் - மாதவியின் மகள் மணிமேகலை என்பதைத் தவிர இரு காப்பியங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. எனவே மணிமேகலையின் காலத்தைக் கொண்டு சிலப்பதிகாரத்தின் காலத்தை நிர்ணயிப்பதோ அல்லது சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கொண்டு மணிமேகலையின் காலத்தை நிர்ணயிப்பதோ தவறு ஆகும்.

சிலப்பதிகாரம் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய படைப்பு. அன்றே தமிழ்ச் சமுதாயம் வணிக வளர்ச்சியில், பொருள் உற்பத்தியின் வளர்ச்சியில், ஒரு உச்சகட்ட வளர்ச்சியை அடைந்திருந்தது. அக்காலகட்டத்தில், முதலாளித்துவக் கூறுகளும், தமிழ் தேசியக் கூறுகளும் தமிழ் சமுதாயத்தில் முளைவிட்டிருந்தன, கருக்கொண்டிருந்தன என்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது. கி.பி.15-ம் நூற்றாண்டில் ஐரோப்பா அடைந்த வளர்ச்சியை, கிறித்துவ சகாப்தத்தின் தொடக்கத்திலேயே அதனை அடைய தமிழகம் முயற்சி செய்திருப்பதை சிலப்பதிகாரம் காட்டுகிறது.

அதனால்தான் ஒரு வணிகப் பெண், காப்பியத்தின் தலைவியாக ஆக முடிந்தது. அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்ற சங்க இலக்கியப் படைப்புகளின் உயர்தரமும், தமிழ் சமுதாயம் ஒரு உயர் கட்ட வளர்ச்சியை அடைந்த சமுதாயமாக இருந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது.

ஆய்வு முடிவு:


ஆக ஒட்டுமொத்தமாக, கீழ்க்கண்ட ஆய்வு முடிவுகளை இக்கட்டுரை வழங்குகிறது எனலாம்.

 

(i) தமிழ் சமுதாயம் உயர் வளர்ச்சி பெற்றதாக, வலிமை மிக்கதாக இருந்ததால்தான் அசோகர் தனது கல்வெட்டில் தமிழரசுகளை, கிரேக்க மன்னர்களுக்கு முன் பதிவு செய்துள்ளார்.

 

(ii) மௌரியப் பேரரசுக்கெதிரான செருப்பாழிப் போரின் பெருவெற்றி காரணமாக அசோகரின் கல்வெட்டுகளில் சேர பாண்டியர்களைவிட சோழர்கள் முதன்மை பெற்றனர்.

 

(iii) செருப்பாழிப் போரின் காலமான கி.மு.280 என்பது தமிழக வரலாற்றுக்கு ஒரு அடிப்படையாக இருக்க முடியும். மாமூலனாரின் சங்க காலப் பாடல்கள் இக்காலத்தை நிர்ணயிக்கக் காரணமாகின்றன.

 

(iv) பண்டைய தமிழகத்தில் தமிழரசுகளிடையே பல நூற்றாண்டுகளாக ஒரு ஐக்கிய கூட்டணி இருந்து வந்துள்ளது. அக்கூட்டணியின் பாதுகாப்பில்தான் தென் இந்தியக் கடல் பகுதிகளும் மொழிபெயர் தேயமும் இருந்து வந்துள்ளன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
தமிழ் எழுத்தின் பழமை-கணியன்பாலன்தமிழ் எழுத்தின் பழமை
Permalink  
 


தமிழ் எழுத்தின் பழமை

மனித சமுதாயத்தின் கருத்துப் பரிமாற்றத்திற்கும், அவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் பேச்சு மொழிக்கு உள்ள முக்கியத்துவம், எழுத்துக்கும் இருக்கிறது. உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளன. பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. silசில மொழிகள் தங்களுக்கான சொந்த எழுத்து வடிவம் இல்லாததால் பிற மொழிகளின் எழுத்து வடிவத்தை பயன்படுத்துகின்றன. ஆனால் ஆரம்பம் முதல் தனக்கென ஒரு சொந்த எழுத்து வடிவத்தைக் கொண்ட மொழியாகவும், மிக நீண்ட கால வரலாறு உடைய மொழியாகவும் தமிழ் மொழி இருக்கிறது.

தமிழி:

பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி ஆகும். கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்ட ‘சமவயங்க சுத்த’ என்னும் சமண நூலில் 18 வகை எழுத்துகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ‘தம்ளி’ என்ற எழுத்தும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர் தம்ளி என்றே ஒலித்துள்ளனர். அதன் காரணமாகவே பண்டைய தமிழ் எழுத்தின் பெயர் தமிழி என ஆகியது. கி.பி.5 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘லலித விஸ்தாரம்’ என்ற பௌத்த நூலில் தமிழின் எழுத்து ‘திராவிடி’ எனச் சொல்லப்பட்டுள்ளது. (ஆதாரம்: தமிழெழுத்தின் வரி வடிவம் – சி.கோவிந்தராசனார், பக்: 18,19.)

குறியீடுகள்:

தமிழகத்தின் புதிய கற்கால கட்டத்திலும் அதற்குப் பிந்திய முதுமக்கள் தாழி மற்றும் பெருங்கற்படை காலகட்டத்திலும் உருவான ஓவிய வரைவுகளில், மட்பாண்டங்களில், காசுகளில், அணிகளில், முத்திரைகளில், கல்வெட்டுகளில் இறுதியாக தமிழ் எழுத்துகள் இடையேயும் கூட ‘குறியீடுகள்’ இடம்பெற்றுள்ளன. தமிழகக் குறியீடுகளில் பல, பண்டைக்கால சுமேரிய , எகிப்திய, சீன, கிரேக்க, ஜப்பான் நாட்டுக் குறியீடுகளோடும், முக்கியமாக சிந்து வெளிக் குறியீடுகளோடும் ஒப்புமை உடையனவாக உள்ளன. அகழாய்வுகளின், கீழ் அடுக்கில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு குறியீடுகளும், குறைந்த அளவு தமிழி எழுத்துக்களும் உள்ளன. அதே சமயம் மேல் அடுக்குகளில் உள்ள மட்பாண்டங்களில், அதிக அளவு தமிழி எழுத்துகளும் குறைந்த அளவு குறியீடுகளும் உள்ளன. அதாவது அகழாய்வுகளில் தமிழி எழுத்துகள் கிடைக்கத் தொடங்கியவுடன் குறியீடுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்குகிறது எனலாம். அதன் காரணமாகவும், இக்குறியீடுகள் தமிழி எழுத்துகள் இடையே இடம்பெரும் பாங்கும், இன்ன பிற காரணங்களாலும், தமிழி எழுத்து பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு, கருத்துப் பரிமாற்றத்திற்கான வரி வடிவமாக, தமிழர்களால் இக்குறியீடுகள் பயன்படுத்தப் பட்டன எனலாம்..

குறியீடுகள்- எழுத்து வரி வடிவம்:

முனைவர் கா.ராஜன் அவர்கள் இது குறித்து தனது ‘தொல்லியல் நோக்கில் சங்க காலம்’ என்ற நூலில், “தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இவை (இக்குறியீடுகள்) கிடைப்பதாலும், தமிழ் வரிவடிவங்களைப் போன்றே இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்து வருவதாலும், பானை ஓடுகள், நாணயங்கள் , கல்வெட்டுகள் மற்றும் மோதிரங்கள் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாக இவை வெளிப்படுவதாலும், சங்க காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சிந்து சமவெளி பண்பாடு தொட்டு, சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து இவை இருந்து வந்துள்ளதாலும், தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்து பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார். (பக்: 55,56)

முனைவர் இராசு.பவுன்துரை அவர்கள் தனது ‘பண்டையத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்’ என்ற நூலில்"குறியீடுகளின் எண்ணிக்கைகளும் பயன்பாடும் மிகுதியாக இருக்கும் காலத்தில் எழுத்துகளின் பொறிப்புக் குறைவாகவும், எழுத்துப் பொறிப்பு மிகுதியாகும் பொழுது குறியீடுகளின் பொறிப்புக் குறைந்தும் அமைகின்றன என்பது இந்த ஆய்வால் உறுதி செய்யப்படுகின்றது. இந்த ஆய்வு முடிவினைக் காணும் பொழுது குறியீடுகளை முதலில் ஒலி எழுத்துகளாகவோ, பொருள் வெளிப்பாட்டு வரைவுகளாகவோ அக்காலத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர் எனக் கருதலாம்" என்கிறார் (பக்: 257). மேலும், இக்குறியீடுகளின் வளர்ச்சி தந்த பங்களிப்பு தான், எழுத்துருவாக்கமும் மொழியாக்கமும் என்பதோடு, தமிழகப் பெருங்கற்காலத்து மட்பாண்டக் குறியீடுகள், தமிழி அல்லது பிராமி எழுத்துத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சி கூறுகளையும் அறிய உதவும் அடிப்படைச் சான்றுகளாக உள்ளன என்கிறார். இறுதியாக"தமிழ் மொழியின் வளர்ச்சியில், குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும், எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெருவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல் தொடர்புச் சாதனமாகவும் குறியீடுகள் திகழ்ந்தன எனக் கருதலாம்"என்கிறார் முனைவர் திரு. பவுன்துரை அவர்கள்.(பக்: 263)

ஆக திரு. ராஜன் மற்றும் திரு. பவுன்துரை ஆகியவர்களின் கருத்துப்படி தமிழி எழுத்துக்கு முன்பு, தமிழகத்தில் இக்குறியீடுகள் மிக நீண்ட காலமாக கருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்பட்டு வந்துள்ளன என்பது உறுதியாகிறது. மேற்கண்ட இருவரும் சிந்துவெளி எழுத்துகளுக்கும் தமிழக குறியீடுகளுக்கும் இடையே நல்ல ஒப்புமை உள்ளது என்பதையும் தங்கள் நூல்களில் தெரிவித்துள்ளனர்.

"பண்டைய தமிழ் மக்கள் கி.மு.1000 ஆண்டு வாக்கிலேயே ஒரு வகையான எழுத்துப் பொறிப்புகளை அல்லது வரிவடிவத்தை தமது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தினர்"என்றும், தமிழகத்தில் இக்குறியீடுகள் பரவலாகக் கிடைப்பதால் இந்நிலையை அடையப் பல்லாண்டு காலம் ஆகியிருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார் முனைவர் கா.ராஜன் அவர்கள். (தொல்லியல் நோக்கில் சங்ககாலம்,பக்: 74, 56) ஆக இன்றைக்கு 3000 ஆண்டு வாக்கிலேயே தமிழ் மொழி தனக்கான ஒரு வரிவடிவத்தை பெற்றிருந்தது எனக் கருதலாம்.

மையிலாடுதுறை கைகோடாலி :

1.5.2006 & 21.5.2008 ஆகிய தேதிகளின் இந்து நாளிதழ் படி, மையிலாடுதுறையில் உள்ள செம்பியன் கண்டியூர் (SEMBIAN KANDIYUR) என்னும் இடத்தில், கல்லால் ஆன புதிய கற்காலத்தைச் சார்ந்த கைகோடாலி ஒன்று கிடைத்துள்ளது. அதில் நான்கு குறியீடுகள் உள்ளன. அந்த நான்கு குறியீடுகளும் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒப்புமை உடையனவாக உள்ளன. புகழ் பெற்ற தென்னிந்திய தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், அக்குறியீடுகளை நன்கு ஆய்வு செய்து ‘முருகன்’ என படித்தறிந்துள்ளார். மேலும் அவர், இக்குறியீடுகள் சிந்துவெளி குறியீட்டு எண்கள் 48, 342, 367, 301 ஆகியவற்றோடு முழுமையாக ஒப்புமை கொண்டுள்ளன என்றும், இதன் காலம் கி.மு.1500 முதல் கி.மு.2000 எனவும் நிர்ணயித்துள்ளார். இந்தக் கல்கோடாலி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது எனவும் , ஏனெனில் இந்தக் கல்கோடாலி தமிழகப் பகுதியில் உள்ள கல்வகையினைச் சார்ந்தது என்றும் குறிப்பிடுகிறார். மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களும் சிந்துவெளி மக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்தியவர்களே எனச் சொல்லும் அவர் , இது இந்த நூற்றாண்டுக்கான மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஆக கி.மு.1500 வாக்கிலேயே தமிழர்கள் எழுதுவதற்கு ஏதோ ஒரு வகையான வரிவடிவத்தை பயன்படுத்தியுள்ளனர் என்பதை இக்கண்டுபிடிப்பு வெளிப்படுத்துகிறது எனலாம்.

Source : Hindu Newspaper Dated 1.5.2006 and 21.5.2008 - “Significance of Mayilaaduthurai Find” and “Discovery of a century” in Tamil Nadu.

ஆக கி.மு.1500 வாக்கில், தமிழர்கள், குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வகை வரிவடிவமாக, ஒரு வகை எழுத்தாகப் பயன்படுத்தத் தொடங்கினர் எனவும், சில நூற்றண்டுகளுக்குப் பின், கி.மு.1000 வாக்கில் அக்குறியீடுகளை பயன்படுத்தும் நிலை, பரவலாக தமிழகமெங்கும் பரவியிருந்துள்ளது எனவும் கருதலாம். சங்ககால மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் இக்குறியீடுகள் கிடைப்பதால், ஆய்வாளர்கள் இவைகளை சேகரித்து பதிவு செய்வதும், அவைகளை படித்தறிந்து பொருள் காண்பதும் அவசியம். அதன்மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கையை மேலும் நன்கு புரிந்து கொள்ளமுடியும் என்பதோடு, தமிழர்களின் வரலாற்றை, பல நூற்றாண்டுகள் மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: தமிழக அரசுகளும் மௌரிய பேரரசும்-கணியன்பாலன்
Permalink  
 


தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் :

1970ல் கொற்கைத் துறையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு 2.6 மீட்டர் ஆழத்தில் உள்ள ஒரு குழியில் (KRK 4 ), மரக்கரித் துண்டு (charcoal) ஒன்று தோண்டி எடுக்கப்பட்டு, கரிமக்கணிப்பு (கார்பன் 14) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் கி.மு.755 (கி.மு.850 முதல் கி.மு.660 வரை) என கணிக்கப்பட்டது.

அதே குழியில்( KRK 4), 2.44 மீட்டர் ஆழத்தில், பண்டைய தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கண்டுபிடிக்கப் பட்டதால், அந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலமும் கி.மு.755 ஆகத்தான் இருக்கவேண்டும் என்கிறார், தொல்பொருள் ஆய்வாளர் நடனகாசி நாதன் அவர்கள். ஆகவே அந்த ‘தமிழி’ எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு.8 ஆம் நூற்றாண்டு என ஆகிறது. (SOURCE: Tamil’s Heritage , PAGE: 31).

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வில், அதன் இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள், பழங்காலத் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்பை கண்டறிந்ததாக குறிப்பிட்டு உள்ளார். 100 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுதுதான் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும், இந்த எழுத்துப் பொறிப்பின் காலம், அறிவியல் ஆய்வின் படி AYVIN (PRELIMINARY THERMO LUMINESCENCE DATING), கி.மு.1500 முதல் கி.மு.500 எனவும் கண்டறியப் பட்டுள்ளது என்கிறார் அவர். ஆகவே இந்த தமிழ் பிராமி (தமிழி) எழுத்துப் பொறிப்பின் காலம் குறைந்த பட்சம் கி.மு.500 க்கு முற்பட்டதாக இருக்க வேண்டும் என இயக்குநர் சத்தியமூர்த்தி அவர்கள் அறுதியிட்டு கூறுகிறார். ஆக இந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு.1500 க்கும் கி.மு.500 க்கும் இடைப்பட்டது என்பதால், இந்தத் தமிழி எழுத்துப் பொறிப்பின் காலத்தை கி.மு.800 எனக் கொள்ளலாம். ( Source : Hindu Newspaper Dated 17.2.2005, ‘Rudimentary Tamil-Brahmi Script ‘ unearthed at adichanallur)

ஆக கொற்கை அகழாய்வும், ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழி எழுத்தின் தொடக்க காலம் கி.மு. 8ம் நூற்றாண்டு என்பதை வெளிப் படுத்துகின்றன எனலாம்.

பொருந்தல் அகழாய்வு:

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் கி.மு. 450 என கணிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் கி.மு. 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இதன் அகழாய்வு இயக்குநர் பாண்டிசேரி பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கா.ராஜன் அவர்கள் ஆவார். அவர் இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது என்கிறார்.

மேலும் இந்தக்கண்டுபிடிப்பின் மூலம், தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள்.

(Source : Hindu Newspaper Dated 15.10.2011, porunthal Excavations prove existence of Indian scripts in 5th century BC : expert)

அசோகர் பிராமி- தமிழ் பிராமி:

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, முதல் நெல் மாதிரிக்கான காலக்கணிப்பை வெளியிட்டபோது, புகழ்பெற்ற ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் மற்றும் சுப்பராயலு ஆகியோர், தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்ற கருத்தை மறுத்தனர். மேலும் ஒரே ஒரு காலக்கணிப்பை வைத்து முடிவு செய்ய முடியாது என்றும், இந்த தமிழ் பிராமி எழுத்து மகாதேவன் அவர்களின் இரண்டாம்நிலை தமிழ் பிராமி எழுத்து என்பதால் அதன் காலத்தை கி.மு 5ம் நுற்றாண்டுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும் தெரிவித்தனர்.

ஆனால், ஓய்வுபெற்ற அகழாய்வுத்துறை இயக்குநர் கே.வி. இரமேஷ் அவர்கள், தமிழ் பிராமி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அகழாய்வுத்துறை பேராசிரியர் திலிப் கே. சக்ரபர்த்தி (Dilip K.Chakrabarti ) அவர்கள் தான் வெளியிட்ட, 1. இந்தியன் அகழாய்வுக்கு ஒரு ஆக்ஸ்போர்டு நண்பன் (An Oxford Companion to Indian Archaeology ) 2. இந்திய அகழாய்வு வரலாறு ( Indian Archaeological History ) ஆகிய இரு நூல்களிலும், தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. 500 என குறிப்பிட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமின்றி தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

1993ல் ஓய்வு பெற்ற அகழாய்வுத்துறை உயர் அதிகாரி டாக்டர் ரமேஷ் அவர்கள், தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பதை, பொருந்தல் கண்டுபிடிப்பு மேலும் வலுப்படுத்துகிறது என்றும், மாங்குளம் தமிழ் கல்வெட்டுப்பொறிப்பு அசோகன் காலத்திற்கு முந்தியது என்றும் குறிப்பிடுகிறார். காலிகட் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரியரும், கேரள அகழாய்வு இதழின் கௌரவ paபதிப்பாசிரியரும் ஆன திரு இராகவ வாரியர் ( Raghava varier ) அவர்கள், இந்த அறிவியல் முறைப்படியான கண்டுபிடிப்பு, தமிழ் எழுத்து பொறிப்பு கி.மு. 5ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பதை உறுதி செய்கிறது என்பதோடு, இக்கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது என்கிறார். அதேசமயம் அசோகர் காலத்துக்கு முந்தைய அனுராதபுரக் கண்டுபிடிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்கிறார். ( Source : Hindu Newspaper Dated 29.8.2011, Palani Excavation triggers fresh depate )

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழ்பிராமியின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு ஆகும். இது ஓரளவு வளர்ச்சி அடைந்த தமிழ் வரிவடிவம் ஆகும் (இரண்டாம் நிலை, தமிழ் பிராமி-2). முதல் நிலை இதற்குப் பல நூற்றாண்டுகள் முந்தியதாகும். ஆக தமிழ் பிராமியின் தொடக்க நிலையை கி.மு 8ம் நூற்றாண்டு எனலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கொடுமணல்:

தமிழ் பிராமி, அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்பதைக் கூறவந்த முனைவர் கா.ராஜன் அவர்கள், 2004ல் வெளியிட்ட, தனது “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” என்ற நூலில் பக்; 59 முதல் 78 வரை பல்வேறு தரவுகளை எடுத்துச்சொல்லி, விளக்கி, தமிழ் பிராமி, அசோகன் பிராமிக்கு முற்பட்டது தான் என்பதை உறுதிபடச் சொல்கிறார். அவரது தரவுகள் சிலவற்றை இங்கு காண்போம்.

ராஜன் அவர்கள், கொடுமணல் அகழாய்வு குழிகளில் 8 வாழ்விட (வீட்டு) மண்தரைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன எனவும், ஒருவீட்டு மண்தரையின் பயன்பாட்டுக்காலம் சுமார் 50 ஆண்டுகள் எனவும், தெரிவிக்கிறார். ஐராவதம் மகாதேவன் அவர்களின் காலக்கணிப்புப்படி, மேல் மண்ணடுக்கில் கிடைக்கும் தமிழ் வரிவடிவத்தின் காலம் கி.மு. முதல் நுற்றாண்டு எனக்கொண்டால், கீழ் மண்ணடுக்கில் உள்ள தமிழ் வரிவடிவத்தின் காலம் கி.மு. 400 ஆகிறது என்றும், அதுவே ஏற்புடையதாகவும் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார் அவர்.(பக்: 66) ஆக கொடுமணல் தமிழ் பொறிப்பின் காலம் கி.மு. 400 என்றால், தமிழ் பிராமியின் காலம் அசோகன் பிராமிக்கு முந்தியது என உறுதியாகிறது.

ஐராவதம் மகாதேவன் அவர்கள், தமிழ் பிராமியை, தமிழ்பிராமி-1, தமிழ்பிராமி-2, தமிழ்பிராமி-3 என பகுத்துள்ளார். தமிழ்பிராமி-1 எழுத்து முறை, காலத்தால் முந்தியது எனவும், தமிழ்பிராமி-2 எழுத்து முறை, காலத்தால் பிந்தியது எனவும், தமிழ்பிராமி-3 தொல்காப்பியரின் எழுத்து சீர்திருத்தத்தால் ஏற்பட்டது எனவும் ராஜன் கூறுகிறார். அசோகர் பிராமி எழுத்து, தமிழ்பிராமி-2 வகையைச் சேர்ந்தது என்றும், அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி வந்திருக்க வேண்டுமானால், நேரடியாக தமிழ்பிராமி-2 வகை எழுத்துத்தான் தமிழகத்தில் புழக்கத் திற்கு வந்திருக்க வேண்டும் என்றும், சிக்கலான வரிவடிவத்தைக் கொண்ட தமிழ் பிராமி-1 ஏன் தமிழத்தில் புழக்கத்தில் இருக்க வேண்டும் என்றும் கா.ராஜன் வினவுகிறார்.

ஆகவே காலத்தால் பிந்திய தமிழ்பிராமி-2 வகை வரிவடிவம் தான் அசோகர் பிராமி முறையில் இருப்பதால், காலத்தால் முந்திய, சிக்கலான தமிழ் பிராமி-1 வகை வரிவடிவம் கண்டிப்பாக அசோகர் பிராமி வரிவடிவத்துக்கு முந்தியதாக இருக்கவேண்டும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது என்பதே ராஜன் அவர்களின் கருத்தாகும். இதனை ஏற்றுக்கொண்டால், தமிழ் பிராமி-2 வகை வரிவடிவம், அசோகர் பிராமிக்கு சமகாலத்தை சார்ந்ததாக அல்லது அதற்கு முந்தியதாக இருக்கவேண்டும் என ஆகிறது. அதுதான் உண்மையும் கூட. பல தமிழ் பிராமி-2 வகை கண்டுபிடிப்புகள் அசோகர் பிராமிக்கு முந்தியனவாக உள்ளன. தற்போதைய பொருந்தல் அகழாய்வு தமிழ் வரிவடிவத்தின் (தமிழ் பிராமி-2) காலம் கி.மு 5ம் நூற்றாண்டு ஆகும்.

கா.ராஜன் அவர்கள், அசோகர் பிராமியிலிருந்து தமிழ்பிராமி தோன்றியது என்பவர்கள், அசோகர் பிராமி எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை சொல்லவேண்டும் என்றும், அதற்கு தேவையான சான்றுகள் வட இந்தியாவில் இல்லை என்றும் குறிப்பிடுகிறார். மேலும் அவர், தமிழகத்தைத் தவிர்த்து இந்தியாவில் கிடைக்கும் அனைத்து பிராமிக் கல்வெட்டுகளும் மன்னரின் ஆணையின்பேரில் உருவாக்கப் பட்டவை என்றும், சமூகத்தின் பிற படிநிலைகளில் வாழும் சாதாரண மக்கள் அதனை பயன்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் வட இந்தியாவில் இல்லை என்கிறார்.

“இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த, பிராமி எழுத்துப்பொறிப்பு பெற்ற பானை ஓடுகளின் மொத்த எண்ணிக்கை, தமிழகத்தில் கொடுமணலில் கிடைத்த எண்ணிக்கைக்கு ஈடாகாது. கொடுமணலில் மட்டும் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பிராமி பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. இவை ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்தவை. கொடுமணல் முழுவதையும் அகழ்ந்து பார்த்தால் மீதமுள்ள 99% எழுத்துப் பொறிப்புகள் வெளிப்படும். இவை அங்கு வாழ்ந்த மக்களின் கல்வி அறிவை, அறிவதுடன் சமூகத்தின் பல்வேறு கூறுகளை அறியப் பெரிதும் உதவும் என்பது திண்ணம்.” என்கிறார் கா.ராஜன் அவர்கள்.(பக்: 71)

மேலும், இந்தியாவின் பிற பகுதிகளில் இந்த பிராமி எழுத்துக்கள் பெரும்பாலும் கல்வெட்டுகளில் மட்டுமே காணப் படுகின்றன. ஆனால் தமிழகத்தில், கல்வெட்டுகளில் மட்டுமில்லாது பரவலாகக் காலத்தால் அழியாத பிற பொருட்களான நாணயங்களிலும், ஆபரணங்களிலும், பானைஓடுகளிலும் இவை பொறிக்கப்பட்டுள்ளன. பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில்கூடப் பெரும்பாலானவை மன்னர்களால் உருவாக்கப்படவில்லை என்கிறார் அவர்.

தமிழகத்தில் மிகச்சாதாரண மக்கள் கூட இந்த தமிழ் பிராமி எழுத்துக்களை மிக அதிக அளவில் பயன்படுத்தினர் என்பதை திரு ராஜன் அவர்களின் கூற்று உறுதி செய்கிறது. கொடுமணல் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 400 வரை வருகிறது. பண்டைய காலத்தில் mikasmi இந்த தமிழி எழுத்தை, மிகச் சாதாரண மக்கள்கூட, மிக அதிக அளவில், பரவலாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால், அதற்குச் சில நூற்றாண்டுகளாவது தேவைப்பட்டிருக்கும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமிக்கு அளித்துள்ள கி.மு. 2ம் நூற்றாண்டு என்ற காலவரையரையை, இப்பொழுது கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், மொழியியல், நாணயவியல் போன்ற தரவுகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள இயலாதநிலை உள்ளது என்றும், கொடுமணலில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இவற்றின் காலத்தை அசோகருக்கு முன்பாக எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது என்பதையும் கா.ராஜன் அவர்கள் 2004 லேயே சுட்டிக்காட்டியுள்ளார்.(பக்: 73)

கா.ராஜன் அவர்கள், அசோகர் பிராமியிலிருந்து தான் தமிழ் பிராமி தோன்றியது என்பதை, கே.வி. ரமேஸ், கே.வி. ராமன், நடனகாசிநாதன், சு.ராஜவேல் போன்றவர்கள் மறுப்பதோடு, அதற்கு எதிரான தங்கள் கருத்துக்களை விரிவாக பதிவும் செய்துள்ளனர் எங்கிறார். மேலும், “தமிழகத்தில் கிடைக்கும் தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியியல் தரவுகளின் அடிப்படையிலும், மண்ணடுக்காய்வின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட பண்பாட்டுக்கூறுகளின் தோற்றம், வளர்ச்சி, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், குறியீடுகளின் அமைப்பு, எழுதும்முறை, எண்ணிக்கை, பரவல் ஆகியவற்றின் அடிப்படையிலும், தமிழகத்திற்கும் பிற பகுதிகளுக்கும் இடையே காணப்படுகின்ற பண்பாட்டு உறவுகளின் அடிப்படையிலும், தமிழகத்தில் கிடைக்கின்ற பழந்தமிழ் வரிவடிவங்களான தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கல், அசோகர் காலத்திற்கும் முற்பட்டவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை”(பக்: 77) என அறுதியிட்டுக் கூறுகிறார் அவர்.

ஆக மேற்குறிப்பிட்ட பல்வேறு தரவுகளைக்கொண்டு, கா.ராஜன் அவர்கள், தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்து, அசோகர் காலத்திற்கும் முற்பட்டது என்றும், அதன் காலம் கி.மு. 400க்கும் முந்தியது என்றும் உறுதிபட நிறுவுகிறார்.

இலங்கையில் தமிழி:

இதே காலகட்டத்தில் வடஇலங்கையில்(ஈழம்) தமிழி கல்வெட்டுகளும், தென் இலங்கையில் பிராகிருத பிராமி கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. அவைகளில் சில அசோகர் காலத்திற்கும் முந்தியவை என இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் தந்தை எனக் கருதப்படும் பரனவிதான கணித்துள்ளார். இலங்கை அறிஞர்கள் கருணாரத்னா, பெர்ணான்டோ, மற்றும் அபயசிங்கி ஆகியோர் அசோகர் பிராமிக்கு முன்பே, பண்டைய தமிழி எழுத்து, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டது என்ற கருத்தை தெரிவித்துள்ளனர். டாக்டர் சிற்றம்பலம் அவர்கள் தனது ‘யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு’ என்ற நூலில் கி.மு.4ம், 3ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புகள் இலங்கையில் கிடைப்பது குறித்து தெரிவித்து உள்ளார்.(SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 34)

தென் இலங்கையில் திசாமகரமா என்ற இடத்தில், ஜெர்மன் அகழாய்வுக்குழு, தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்றை கண்டு பிடித்துள்ளது. அதன் காலம் கி.மு. 200 என அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதனை ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன் அவர்கள், ‘வணிகக் குழுவின் ஒப்பந்தம்’ என்ற பொருளில் படித்துள்ளார். ஆனால் டாக்டர் பி.ரகுபதி அவர்கள் அதனை மறுத்து, ‘கன அளவை அளப்பதற்கு ஆன கருவி’ என்ற பொருளில் எழுதப்பட்டுள்ளதாக படித்துள்ளார். இதில் தமிழி எழுத்து, முதலில் இடமிருந்து வலமாக, பின் வலமிருந்து இடமாக எழுதப்பட்டுள்ளது. இடையே பெருங்கற்படை குறியீடுகள் உள்ளன.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளில், உலக அளவில் இதுவே மிகமிக பழமையானது என்கிறது விக்கிபீடியா. கி. மு 200க்கு முன்பிருந்து அங்கு தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்கிறார் ரகுபதி அவர்கள். ஆக இதன் மூலம் தமிழி எழுத்து, கி.மு 3ம் நுற்றாண்டின் இறுதியில் தென்இலங்கையில் இருந்துள்ளது என ஆகிறது. (SOURCE: TISSAMAHARAMA POTSHERD EVIDENCES ORDINARY EARLY TAMILS AMONG POPULATION, TAMIL NET DT: 28.7.2010 & TISSAMAHARAMA TAMIL BRAHMI INSCRIPTION-WIKIPEDIA).

நாணயங்களில் தமிழி:

டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வெளியிட்ட பெருவழுதி நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகள், அசோகர் காலத்துக்கு முந்தியவை என புகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் கே.ஜி. கிருஷ்ணன் அவர்கள் தெரிவிக்கிறார். தமிழகத்தில், அசோகருக்கு முன்பே, தமிழி எழுத்துக்கள் புழக்கத்தில் இருந்துள்ளன என்பதை, இவை உறுதி செய்கிறது எனலாம். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 34, 35)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தக்காணத்தில் தமிழி:

அசோகருக்குப் பின், தக்காணத்தில் ஆட்சிக்கு வந்த சாதவ கன்னர்கள் எனப்படும் நூற்றுவ கன்னர்கள் கி.மு 230 முதல் கி.பி 220வரை 450 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு முன்பும், அவர்கள் காலத்திலும் தக்காணத்தில் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. அதனால்தான் சங்க இலக்கியத்தில் தக்காணத்தை, மொழிபெயர் தேயம் என்றனர். மொழி பெயர்ந்து வருகிற அல்லது மொழி திரிந்து பேசுகிற தேயமே, மொழிபெயர் தேயம் ஆகும். திரிந்து பேசுகிற மொழியே கொடுந்தமிழ் ஆகும். சாதாரண மக்கள் கொடுந்தமிழில் பேசினாலும், உயர்நிலை மக்கள் பிராகிருத மொழியிலேயே பேசினர். இவைகளின் காரணமாக சாதவ கன்னர்கள் ஆட்சியில், தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளும் ஆட்சி மொழிகளாக இருந்தன. அவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், ஒரு பக்கம் பிராகிருதமும் இருப்பதே அதற்கு ஆதாரமாகும்.( SOURCE: AN EPIGRAPHIC PERSPECTIVE ON THE ANTIQUITY OF TAMIL BY IRAVATHAM MAHADEVAN - THE HINDU, DT : 24.6.2010)

நடுகற்களில் தமிழி:

2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று நடுகற்கள், தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி தாலுக்காவில் புளியம்கோம்பை என்ற இடத்தில் கிடைத்துள்ளது. அதில் தமிழி எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழகத்தில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகளில் மிகமிக பழமையானது இது என்றும், மாங்குளம் கல்வெட்டின் எழுத்து பொறிப்பு போல் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.. தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சி. சுப்பிரமணியம் அவர்கள், இந்தியாவில் கிடைத்த நடுகற்களில் மிகமிக பழமையானது இது என்கிறார். முதல் கல்வெட்டு கால்நடைக்கான போரில் இறந்த தீயன் ஆண்டவன் என்பவருக்காகவும், இரண்டாவது கல்வெட்டு ஆதன் என்பவரின் நினைவாகவும், மூன்றாவது கல்வெட்டு பாட்டவன் அவ்வன் என்பவரின் நினைவாகவும் நடப்பட்டுள்ளது.

இதில் இரண்டாவது, மூன்றாவது கல்வெட்டுகள் கி.மு. 3ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றும், முதல் கல்வெட்டு அதற்கும் முந்தியது என்றும் முனைவர் கா. ராஜன் அவர்கள் தெரிவிக்கிறார். அப்படியானால் அம்முதற் கல்வெட்டு கி.மு. 4ம் நூற்றாண்டு, அல்லது அதற்கும் முந்தியது என ஆகிறது. ஆகவே இதில் உள்ள தமிழி எழுத்துப் பொறிப்புகள் அசோகருக்கும் முந்தியது என்பது உறுதியாகிறது. (SOURCE: 2300 YEARS OLD HERO STONES FOUND IN THENI DISTRICT - THE HINDU, DATED: 5.4.2006)

கிஃவ்ட் சிரோமணி:

டாக்டர் கிஃவ்ட் சிரோமணி என்பவர், 1983லேயே, 1. தமிழ் பிராமி, அசோகர் பிராமிக்கு முந்தியது 2. தமிழ் பிராமியில் இருந்துதான் அசோகர் பிராமி உருவானது, ஆகிய இரண்டு கருதுகோள்களை முன்வைத்து உள்ளார். அதற்கு அவர், தமிழில் மூன்று அல்லது நான்கு வகை தமிழ் பிராமி வரிவடிவங்கள் இருப்பதையும், ஆனால் அசோகர் பிராமியில் ஓரளவு வளர்ச்சிபெற்ற ஒரே ஒரு பிராமி வரிவடிவம் இருப்பதையும், வேறு சில காரணங்களையும் குறிப்பிட்டு, தமிழ் பிராமியில் இருந்துதான் அசோகர் பிராமி தோன்றியிருக்க வேண்டும் என்றும், அதனால் தமிழ் பிராமி, அசோகர் பிராமியைவிட முந்தியது என்றும் அவர் தனது கருதுகோள்களை தெரிவித்துள்ளார்.(SOURCE: E/DOCUMENTS/DR.GIFT SIROMONEY, ORIGIN OF THE TAMIL – BRAHMI SCRIPT)

பிராமி வரிவடிவங்களின் பெயர்கள்:

பொதுவாக தமிழில் எழுதப்பட்ட பிராமி வரிவடிவத்தை, அறிஞர்கள் தமிழ் பிராமி என பெயரிட்டு அழைக்கின்றனர். ஆனால் இந்த பண்டைய தமிழ் வரிவடிவத்துக்கு “தமிழி” என்றபெயர் இருந்ததை பண்டைய நூல்கள் தெரிவிப்பதால், தமிழி என்ற பெயர் கொண்டு அழைப்பதே சரியானது ஆகும். வட இந்தியாவில் அசோகரின் ஆணைகளில் முதல் முதலாக பயன்படுத்தப் பட்டதன் காரணமாக, இப் பிராமி வரிவடிவத்துக்கு அசோகர் பிராமி என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். ஆனால், அசோகர் பிராமி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளதால், அதனை பிராகிருதப் பிராமி எனப் பெயரிடுவதே சரியானது ஆகும் என நடனகாசிநாதன் அவர்கள் தெரிவிக்கிறார்.

இலங்கையில் கிடைக்கும் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராமி வரிவடிவத்திற்கு, சிங்கள பிராமி என ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரிட்டுள்ளார். இது குழப்பத்துக்கு வழிவகுக்கிறது எனலாம். சிங்கள பிராமி என குறிப்பிடும்பொழுது, அப்பிராமி வரிவடிவம் சிங்கள மொழியில் எழுதப்பட்டது போன்றும், அக்காலத்திலேயே சிங்கள மொழி தோன்றி, அது நன்குவளர்ந்த நிலையை அடைந்துவிட்டது போன்றும், அந்த பிராமி வரிவடிவம் பிராகிருத மொழியில் எழுதப்படவில்லை போன்றும் ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே தமிழில் எழுதப்பட்டதை தமிழ் பிராமி என்பதுபோல், இலங்கை மற்றும் இந்தியாவில் பிராகிருத மொழியில் எழுதப்படும் வரிவடிவத்தை, பிராகிருத பிராமி என அழைப்பதே சரியானது ஆகும். இதே கருத்தைத் தான் நடனகாசிநாதன் கா.ராஜன் மற்றும் புஸ்பரத்னம் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.(ஆதாரம்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-கா.ராஜன், பக்: 57,58)

சிங்கள மொழிக்கான எழுத்து வரிவடிவம் கி.பி 7ம் நூற்றாண்டிற்கு பிறகுதான் தோன்றியது. அம்மொழியில் தற்பொழுது இருக்கும் முதல் இலக்கிய படைப்பு கி.பி 9ம் நூற்றாண்டில் தான் உருவானது. இந்நிலையில் 1000 ஆண்டுகளுக்கு முந்திய, பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராமி வரிவடிவத்தை, சிங்கள பிராமி என பெயரிட்டழைப்பது எவ்விதத்திலும் பொருந்தாது. ஆகவே தொல்லியல் அறிஞர்கள் குழப்பத்தை தவிர்க்க, எந்த மொழியில் வரிவடிவம் எழுதப்பட்டுள்ளதோ அந்த மொழியில் பெயரிட்டு அழைக்க வேண்டும் என்பதை ஒரு நடைமுறை விதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். .(SOURCE: E/ INTRODUCTION TO THE INSCRIPTIONS OF SRILANKA & E/SINHALA LANGUAGE, WIKIPEDIA)

நான்கு தமிழ் வரிவடிவங்கள்:

நடனகாசிநாதன் அவர்கள், பண்டைய தமிழ் வரிவடிவத்தை, தமிழ் பிராமி என்று அழைக்கக்கூடாது எனவும், தமிழி என்றுதான் அழைக்கவேண்டும் எனவும் உறுதிபடக் கூறுகிறார். தமிழி வரிவடிவம் நான்கு படிநிலைகலைக்(தமிழி-1 முதல் தமிழி-4 வரை) கடந்து வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் அவர். ஆனால் அசோகர் பிராமி ஒரே ஒரு படிநிலையை (மூன்றாவது படிநிலை, தமிழி-3) மட்டுமே கொண்டது. நடனகாசிநாதன் அவர்களது, முதல் இரு படிநிலைகளை, ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமி-1 என்றே கணித்துள்ளார். நடனகாசிநாதன் அவர்களது மூன்றாம் படிநிலை என்பது தமிழ் பிராமி-2 ஆகவும், நான்காம் படிநிலை என்பது தமிழ் பிராமி-3 ஆகவும் கணிக்கப் பட்டுள்ளது.

நடன காசிநாதன் அவர்கள், மாங்குளம் கல்வெட்டு முதல்படிநிலை(தமிழி-1) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என்றும் அறுதியிடுகிறார். அவர், புகளூர் கல்வெட்டு இரண்டாம் படிநிலை(தமிழி-2) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.மு. 4ம் நூற்றாண்டு என்றும், ஜம்பை கல்வெட்டு மூன்றாம் படிநிலை(தமிழி-3) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.மு 230 முதல் கி.மு.270 வரை (கி.மு. 3ம் நூற்றாண்டு) என்றும் குறிப்பிடுகிறார். மேலும் அவர், பட்டிபொருலு வரிவடிவத்தின் காலம் கி.மு 270 முதல் கி.மு 290 என்றும், நேகனூர் கல்வெட்டு நான்காம் படிநிலை(தமிழி-4) வரிவடிவம் என்றும், அதன் காலம் கி.பி. 1 முதல் கி.பி 3ம் நூற்றாண்டு என்றும் தெரிவிக்கிறார்.

மூன்றாம் படிநிலை (தமிழி-3) வரிவடிவம், அதாவது ஜம்பை கல்வெட்டு, அசோகர் பிராமிக்கு சமகாலத்தவை என்றும், பட்டிபொருலு வகை, அதற்குச் சற்று முந்தியது என்றும், மூன்றாம் படிநிலை வரிவடிவம் சற்று வளர்ந்த நிலை என்றும், அதனைத்தான் அசோகர் பயன்படுத்தியுள்ளார் என்றும் நடன காசிநாதன் தெரிவிக்கிறார். பட்டிபொருலு வரிவடிவம், தமிழி வரிவடிவத்திலிருந்து கிளைத்தது என்றும், அது எல்லாவற்றையும்விட சிறந்த முறை என்றும், ஆனால் ஏனோ அது பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். மேலும், சற்று வளர்ந்த மூன்றாம் படிநிலை வரிவடிவத்தை, அசோகர் பயன்படுத்தி இருப்பதாலும், அதற்கு முந்தைய இருபடிநிலைகள் தமிழில் இருப்பதாலும், அசோகர் பிராமியிலிருந்து தமிழி உருவாக வில்லை என்றும், தமிழி வரிவடிவத்திலிருந்துதான் அசோகர் வரிவடிவம் உருவாகியுள்ளது என்றும் நடன காசிநாதன் தெரிவிக்கிறார். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 25, 26)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஜம்பை கல்வெட்டு:

ஜம்பை கல்வெட்டு சத்யபுத்ர அதியமான் நெடுமான் அஞ்சி குறித்து பேசுகிறது. சத்யபுத்ர என்ற இச்சொல் எந்த மாறுதலும் இன்றி, அசோகர் கல்வெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே அவை அசோகர் கல்வெட்டுக்கு சம காலத்தவை என்றுகூற வாய்ப்புள்ளது. அசோகர் பிராமியின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதி என்பதால், ஜம்பை கல்வெட்டின் காலம் கி.மு. 270 முதல் கி.மு. 230 என நடன காசிநாதன் அவர்கள் வரையறுத்துள்ளார்.

அடுத்ததாக, சங்ககால இலக்கியத்தில், வரலாற்றுப் பெரும்புலவர் மாமூலனார் அவர்கள், நந்தர்களையும், மௌரியர் களையும் குறித்துப் பாடியுள்ளார். ஆகவே அவரின் காலத்தை, கி.மு. 4ம் நூற்றாண்டின் இறுதிக்கு சற்று முன்பும், கி.மு. 3ம் நூற்றாண்டின் தொடக்கத்துக்கு சற்று பின்பும், என வரையறுக்கலாம். அவர் முதியவராக இருந்தபொழுது, இளையவராக இருந்தவர் பரணர் என்ற பெரும்புலவர் ஆவர். அவரது காலத்தை கி.மு. 3ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் அந்த நூற்றாண்டின் இறுதிக்குச் சற்று முன்பு வரை நிர்ணயிக்கலாம். பரணர் அவர்களுக்கு இளையவர்கள்தான் கபிலரும், ஒளவையாரும் ஆவர். ஆகவே கபிலர், ஒளவையார் ஆகியவர்களின் காலத்தை, கி.மு. 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் கி.மு. 2ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வரையறுக்கலாம்.

இந்த பரணர், கபிலர், ஒளவையார் ஆகியவர்களின் காலத்தில் வாழ்ந்தவர்தான் சத்யபுத்ர அதியமான் நெடுமான் அஞ்சி ஆவார். ஆகவே நடன காசிநாதன் அவர்கள் வரையறுத்த கி.மு. 270 முதல் கி.மு. 230 என்ற காலமானது, ஜம்பை கல்வெட்டுக்கு மிகவும் பொருந்துகிறது எனலாம். ஆக மூன்றாம் படிநிலை வரிவடிவமான, ஜம்பை கல்வெட்டின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டுதான் என உறுதியாவதால், தமிழின் முதல், இரண்டாம் படிநிலை(தமிழி-1,2) வரிவடிவங்களின் காலம் கண்டிப்பாக அதற்கு சில நூற்றாண்டுகள் முந்தியதாகத்தான் இருக்கவேண்டும் என உறுதிபடக் கூறலாம்.

அழகன்குளம் அகழாய்வில் கிடைத்த மட்பாண்ட ஓடுகளில் உள்ள தமிழ் எழுத்துப் பொறிப்புகளின் காலம் கார்பன் கணிப்புப்படி, கி.மு. 4ம் நுற்றாண்டு என்கிறார் நடன காசிநாதன் அவர்கள். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 31)

ஆனைக்கோட்டை முத்திரை:

ஆனைக்கோட்டை முத்திரையில் உள்ள எழுத்துப்பொறிப்பு இருவரிசையில் கிடைத்துள்ளது. அதன் முதல் வரிசையில் பெருங்கற்படைக்கால குறியீடுகளும் (சிந்துவெளிக்குறியீடுகள்), இரண்டாவது வரிசையில் அதற்கு இணையான தமிழி எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன். தமிழி எழுத்துப் பொறிப்புகளை டாக்டர் இந்திரபாலா அவர்கள் ‘கோவேந்தா’ என படித்துள்ளார். நடன காசிநாதன் அவர்கள் இது மிக மிக பண்டைய தமிழி எழுத்துப்பொறிப்பு என்பதால், இதன் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டு என்கிறார். இதன் இன்னொரு சிறப்பு, இதன் மேல்வரிசைக் குறியீடும் ‘கோவேதா’ என்ற கருத்தைக் கொண்டது என்பதுதான். எனவே தமிழி உருவாவதற்கு முன் இந்த பெருங்கற்படைக்கால குறியீடுகள் ஒலிவடிவம் அல்லது கருத்துவடிவம் கொண்ட ஒரு எழுத்தாக பயன்படுத்தப் பட்டுள்ளது எனலாம். (ஆதாரம்: இலங்கையில் தமிழர் – கா. இந்திரபாலா, பக்:105,328&329 & TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 33)

வட்டெழுத்தும் தமிழில் புள்ளியிடும் முறையும்:

பூலான் குறிச்சி தமிழ் எழுத்துப்பொறிப்பு, வட்டெழுத்து தன்மை கொண்டது ஆகும். அதன் காலம் சாகா வருடம் 192 ஆகும். சாகா வருடமுறை என்பது கி.பி 78ல் தொடங்குகிறது. 1957ம் ஆண்டுமுதல் (சாகாவருடம் 1879), இந்திய தேசிய காலண்டர் ஆக இந்த சாகா வருட முறையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே பூலான் குறிச்சி தமிழ் எழுத்துப்பொறிப்பின் காலம் கி.பி. 270க்கு(192+78) சமம் ஆகும். அதாவது கி.பி. 3ம் நூற்றாண்டு ஆகும். ஆக பூலான் குறிச்சிக் கல்வெட்டின் காலத்தை எந்தவித குழப்பமும் இன்றி கி.பி. 3ம் நூற்றாண்டு என திட்டவட்டமாக வரையறுக்கலாம். .(SOURCE: E/INDIAN NATIONAL CALENDER-WIKIPEDIA).

இந்த வட்டெழுத்து தன்மை கொண்ட எழுத்துக்கள் உருவாவதற்கு முன் மெய் எழுத்துக்கள் அனைத்தும் புள்ளிபெற்ற எழுத்துக்களாக இருந்தன. அரச்சலூர் கல்வெட்டில்தான் முதல் முதலாக ஒரே ஒரு எழுத்துக்கு புள்ளியிடும் முறை தொடங்கியது எனலாம். இந்த புள்ளியிடும் முறை துவங்கி, அது வளர்ந்து அங்கீகாரம் பெற சில நூற்றாண்டுகள் ஆகியது. இந்த புள்ளியிடும் முறை அங்கீகாரம் பெற்ற சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரே வட்டெழுத்துத் தன்மை கொண்ட எழுத்துக்கள் உருவாகத் தொடங்கின எனலாம்.

ஆக பூலான் குறிச்சிக் கல்வெட்டுக்கு சில நூற்றாண்டுகள் முன்தான், எல்லா மெய்களும் புள்ளிபெற்ற காலம் என்பது உருவாகி யிருக்க வேண்டும். அதாவது கி.பி. 3ம் நூற்றாண்டுக்கு முந்தைய கி.பி. முதல்நூற்றாண்டின் துவக்கம் முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு வரையான காலகட்டம் என அதனை வரையறுக்கலாம். இந்த காலகட்டத்திற்கு ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன் முதல் புள்ளி பெறும் எழுத்து முறை துவங்கி இருக்க வேண்டும். அதாவது கி.பி. முதல் நூற்றாண்டுக்கு முந்தைய, கி.மு 2ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் கி.மு. முதல் நூற்றாண்டு வரையான காலமே முதல் முறையாக புள்ளி பெரும் முறை துவங்கிய காலமாகும். ஆக இக்காலமே அரச்சலூர் கல்வெட்டின் காலமாகும். (SOURCE: TAMILS HERITAGE- NATANA. KASINATHAN, PAGE: 32,33).

ஆக இந்த அரச்சலூர் கல்வெட்டிற்கு முந்தைய காலமே, புள்ளி பெறாத எழுத்துக்களைக் கொண்ட காலமாகும். அதனை கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தைய, கி.மு 3ம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலம் எனலாம். ஆக ஜம்பை கல்வெட்டின் அதியமான் காலம் மற்றும் அசோகர் காலம் இது எனலாம். இவைகளின் காலம் வரலாற்று முறைப்படி கி.மு. 3ம் நூற்றாண்டு என முன்பே தெளிவாக வரையறுக்கப் பட்டு விட்டது. ஆகவே, ஜம்பை கல்வெட்டின் புள்ளி இல்லாத கி.மு 3ம் நூற்றாண்டு முதல், பூலான் குறிச்சிக் கல்வெட்டின் வட்டெழுத்து தன்மை கொண்ட எழுத்து துவங்கிய கி.பி. 3ம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 5முதல் 6 நூற்றாண்டுகள் ஆகியுள்ளது எனலாம். ஜம்பை கல்வெட்டு மற்றும் பூலான் குறிச்சிக் கல்வெட்டு ஆகிய இரண்டும் வரலாற்று முறைப்படி திட்டவட்டமாக வரையறுக்கப்பட்ட காலங்களாகும். ஆக பண்டைய காலத்தில் மாற்றங்கள் மிக மிக மெதுவாகவே நடைபெற்றுள்ளது என்பதை இந்த இடைவெளி உறுதி செய்கிறது.

தமிழின் வளர்ச்சி நிலைகள்:

ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ் பிராமியின் வளர்ச்சிப் படிநிலைகளை, மூன்று படிநிலைகளாக மட்டும் கணித்துள்ளபோது, நடன காசிநாதன் அவர்கள் நான்கு படிநிலைகளாக கணித்துள்ளார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஜம்பை கல்வெட்டினை இரண்டாம் படிநிலை (தமிழ் பிராமி-2) ஆகக் கணித்துள்ள போது, நடன காசிநாதன் அவர்கள் அதனை மூன்றாம் படிநிலை (தமிழி-3) ஆகக் கணித்துள்ளார். ஜம்பை கல்வெட்டிற்கு முந்தைய தமிழின் வளர்ச்சி நிலையை, ஐராவதம் மகாதேவன் அவர்கள் ஒரே ஒரு படிநிலை யாகவும், நடன காசிநாதன் அவர்கள் இரண்டு படிநிலைகளாகவும் கணித்துள்ளனர்.

தமிழ் எழுத்தின் வரிவடிவ வளர்ச்சிப் படிநிலையை, அதிக அளவில் கணிக்கும்பொழுது, தமிழ் எழுத்து பொறிப்புகளின் காலத்தை ஓரளவு துல்லியமாக வரையறை செய்வது எளிதாக இருக்கும். ஆகவே அசோகர் பிராமிக்கு முந்தைய, தமிழ் எழுத்தின் வரிவடிவ வளர்ச்சிப் படிநிலையை, இரண்டுக்கு மேல் மூன்றாகப் பகுத்துக் கணிப்பது கூட சிறப்பு தரும். ஒரு மொழிக்கான எழுத்தின் தொடக்க கால வரிவடிவ வளர்ச்சியில் அதிக படிநிலைகள் இருக்க வாய்ப்புள்ளது. தமிழிக்கும் அது பொருந்தும் என்பதால், தமிழின் வரிவடிவ வளர்ச்சிப் படிநிலைகளை, துல்லியமாகக் கணித்து மேலும் பல படிநிலைகளாகப் பகுத்துக் காண்பது மிகுந்த பயன் தரும்.

தொல்காப்பியர் காலம்:

பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்பு, நடன காசிநாதன் அவர்களின் கணிப்புப்படி, மூன்றாம் படிநிலை ஆகும். ஐராவதம் மகாதேவன் அவர்களின் கணிப்புப்படி, இரண்டாம் படிநிலை ஆகும் (Source : Hindu Newspaper Dated 29.8.2011, Palani Excavation triggers fresh depate) அதாவது இந்த எழுத்துப் பொறிப்பு அசோகர் பிராமி அல்லது ஜம்பை கல்வெட்டின் வரிவடிவ நிலையாகும். பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என கணிக்கப் பட்டுள்ளது. ஆக இதன்மூலம், கி.மு. 5ம் நூற்றாண்டு அளவில், மூன்றாம் படிநிலை (தமிழி-3) எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துள்ளன என்பது உறுதியாகிறது.

இதே காலகட்டத்தில் வாழ்ந்த தொல்காப்பியர் அவர்கள், மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கினார் எனலாம். மூன்றாம் படிநிலைக்குப் பின்னர் தான், புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கியது என்பதால், புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொடங்கிய தொல்காப்பியர் அவர்கள், மூன்றாம் படிநிலை (தமிழி-3) எழுத்துப் பொறிப்புகள், தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த காலத்தில்தான் வாழ்ந்திருக்க வேண்டும். அதற்கு முன் அவர் வாழ்ந்திருக்க முடியாது.

ஆகவே மூன்றாம் படிநிலை தமிழி எழுத்து, தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த, கி.மு. 5ம் நூற்றாண்டு தான் தொல்காப்பியர் காலம் என்பது மிகவும் பொருந்துகிறது. கி.மு. 5ம் நூற்றாண்டிலேயே மெய்யெழுத்துக்களுக்கு புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தத்தை தொல்காப்பியர் தொடங்கி விட்டார் எனினும், அது கி.மு. 3ம் நூற்றாண்டுக்குப் பின்னர் தான் நடைமுறைக்கு வந்தது எனலாம். பண்டைய காலத்தில் புதிய சீர்திருத்தங்கள் செயல்பாட்டுக்கு வர பல நூற்றாண்டுகள் ஆகும் என்பது வரலாற்றுப் படிப்பினை ஆகும். அதனால்தான் தொல்காப்பியரால் தொடங்கப்பட்ட, புள்ளியிடும் எழுத்துச் சீர்திருத்தம், நடைமுறைக்கு வர பல நூற்றாண்டுகள் ஆகியது எனலாம்.

வெளிநாடுகளில் தமிழி:

எகிப்தில் உள்ள குவாசிர் அல் காதீம் என்ற செங்கடல் துறைமுகத்தில் தமிழி எழுத்துப் பொறிப்பு கொண்ட ‘பானை உறி’ கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் சவுத்தர்ம்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தொல்லியல் அகழாய்வு குழு இதனை கண்டறிந்தது. பானையியல் வல்லுநர் டாக்டர் இராபர்ட் டாம்பர் இதனை இந்தியாவை சார்ந்த பானை என கண்டறிந்தார். ஐராவதம் மகாதேவன் அவர்கள், அதனை ஆய்வு செய்து, “பானை ஒறி” என எழுதப்பட்டுள்ள, இந்த தமிழி எழுத்துப் பொறிப்பின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு என தெரிவித்துள்ளார். அவர், பாண்டிசேரி பிரெஞ்சு நிறுவன பேராசிரியர் பு.சுப்பராயலு, பாண்டிசேரி பல்கலைக்கழக முனைவர் கா.ராஜன், தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் ப. செல்வகுமார் ஆகியவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

மேலும் 30 வருடங்களுக்கு முன் அதே இடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில், கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த இரு மட்பாண்ட தமிழி எழுத்துப் பொறிப்புகள் கிடைத்தன. அவற்றில் கணன், சாதன் என எழுதப்பட்டிருந்தது. 1995ல் எகிப்தில் உள்ள பெரனிகே என்ற துறைமுகத்தில், கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு மட்பாண்ட தமிழி எழுத்துப் பொறிப்பு கிடைத்தது. ஆக கி.மு முதல் நூற்றாண்டிலேயே தமிழி எழுத்து எகிப்தில் இருந்திருப்பது, அதன் பழமை குறித்த முந்திய தரவுகளை உறுதி செய்கிறது எனலாம். (SOURCE: TAMIL BRAHMI SCRIPT IN EGYPT- THE HINDU, DATED: 21.11.2007)

தாய்லாந்தில் பூகவோ தாங் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில், இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது. தாய்லாந்து மற்றும் பிரெஞ்சு அகழாய்வு குழு ஒன்று இதனைக் கண்டறிந்தது. ஐராவதம் மகாதேவன் அவர்கள், அதனை ஆய்வு செய்து, ‘துறவன்’ என்று பொருள்படும் சொல்லின் மூன்று எழுத்துக்கள் மட்டுமே அதில் இருப்பதாகவும் அதன் காலம் கி.பி 2ம் நூற்றாண்டு எனவும் குறிப்பிட்டுள்ளார்.( SOURCE: TAMIL BRAHMI INSCRIPTION ON POTTERY FOUND IN THAILAND-THE HINDU, DATED: 16.7.2006)

1992-93ல் நொபுரு கரோசிமா தலைமையில் தாய்லாந்தில் நடைபெற்ற அகழாய்வில், கி.பி 3ம் நூற்றாண்டைச் சார்ந்த “பெரும் பதன் கல்” என தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட உரைகல் ஒன்று கிடைத்துள்ளது. இது பெரும் பத்தன் உரைகல் எனத் தெரிகிறது. ஆக தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், கி.பி. 2ம், 3ம் நூற்றாண்டு அளவில் தமிழி எழுத்துக்கள் கிடைத்துள்ளன. (ஆதாரம்: தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-ராஜன், பக்: 104)

2000ஆண்டுகளுக்கு முந்தைய, பண்டைய தமிழி எழுத்துக்கள் மேற்கு நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும் கிடைப்பது என்பது, தமிழர்களின் உலகளாவிய வாணிபத்தை, அவர்களின் கல்வியறிவை, அவர்களின் தொழில்நுட்ப மேன்மையை, அவர்களின் பொருளாதார வளர்ச்சியை, அவர்களின் செல்வ வளத்தைப் பறை சாற்றுகிறது எனலாம்.

மேற்கண்ட பல்வேறு தரவுகளிலிருந்து கீழ்கண்ட முடிவுகளுக்கு நாம் வரமுடியும்.

1) கி.மு.1500 வாக்கிலேயே தமிழர்கள் குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கென பயன்படுத்தத் துவங்கி, கி.மு.1000 வாக்கில் குறியீடுகளை, தமிழகமெங்கும் ஒரு எழுத்து வரிவடிவமாகப் பரவலாக பயன்படுத்தி உள்ளனர். ஆகவே, அதனை சேகரித்துப் பாதுகாப்பதும், படித்தறிவதும் அவசியம்.

2) பண்டைய நூல்களில் தமிழ் எழுத்து தமிழி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளதால், அதனை தமிழ் பிராமி என்பதற்குப் பதில் ‘தமிழி’ என்று அழைப்பதுதான் பொருத்தமாகும்.

3) இந்தியாவில், இலங்கையில் கிடைக்கும் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பிராமி வரிவடிவங்களை, சிங்கள பிராமி பொன்ற குழப்பமான பெயர்களைக் கொண்டு அழைக்காமல் பிராகிருத பிராமி என்று அழைப்பதே சிறப்பு.

4) தமிழி எழுத்தின் துவக்க காலம் கி.மு.8ம் நூற்றாண்டு ஆகும்.

5) அசோகர் பிராமியின் காலம் கி.மு 3ம் நூற்றாண்டு எனில், தமிழ் பிராமியின் காலம் கி.மு 5ம் நூற்றாண்டுக்குமுன் என்பதால் அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை. ஆனால் தமிழ் பிராமியில் இருந்து அசோகர் பிராமி உருவாகி இருக்கலாம்.

6) பண்டைய தமிழகத்தில் சமூகத்தின் அனைத்துப் படிநிலை மக்களும் பரவலாக தமிழி எழுத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். வட இந்தியாவில் இந்நிலை இல்லை. அங்கு மிக மிகக் குறைந்த அளவு எழுத்துப் பொறிப்புகளே கிடைக்கின்றன. அவைகளும் அரசர்களுடையது தான் ஆகும்.

7) தொல்காப்பியர் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு, ஜம்பை அதியமான் கல்வெட்டின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு, பூலான் குறிச்சிக் கல்வெட்டின் காலம் கி.பி. 3ம் நூற்றாண்டு, போன்ற சில தமிழக வரலாற்றுக் கால வரையறைகள் மேலும் வலுப்படுத்தப் பட்டுள்ளன.

8) பொதுவாக, வட இந்திய வரலாற்றுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், தமிழக வரலாற்றுக்குத் தரப்படுவதில்லை. அதனால் தான் கொடுமணலில், ஆதிச்சநல்லூரில் இதுவரை ஒரு சதவீத அகழாய்வே நடந்துள்ளது. பல சங்க கால ஊர்களில் அகழாய்வுகளே நடத்தப்படவில்லை. இந்நிலை மாற வேண்டும்.

9) 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய தமிழி எழுத்துக்கள் மேற்கு நாடுகளிலும் கிழக்கு நாடுகளிலும் கிடைப்பது என்பது தமிழர்களின் உலகளாவிய வாணிபத்தை, அவர்களின் கல்வியறிவை, அவர்களின் தொழில்நுட்ப மேன்மையை, அவர்களின் பொருளாதார வளர்ச்சியை, அவர்களின் செல்வ வளத்தைப் பறை சாற்றுகிறது எனலாம்.

- கணியன்பாலன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பழந்தமிழர் கடல் வணிகம்-1

“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக

களியியல் யானைக் கரிகால் வளவ!”

 என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார்.

 நந்தர்களை, மௌரியர்களை பாடிய, கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டை சார்ந்த மாமூலனார், தனது இறுதிக் காலத்தில் இந்த முதல் கரிகாலனையும் பாடியுள்ளார். எனவே வெண்ணிக்குயத்தியார் மற்றும் முதல் கரிகாலனின் காலம் கி.மு. 3ஆம் நூற்றாண்டு ஆகும். ஆக கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு வெகு காலம் முன்பே காற்றின் தொழில் நுட்பம் அறிந்து, நடுக்கடலில் கப்பல் செலுத்துவதில் தமிழர்கள் திறமையும், வல்லமையும் உடையவர்களாக இருந்தனர் என்பதை இப்பாடல் எடுத்துரைக்கிறது.

பண்டைய தமிழர்களின் கடல் வணிகத்தை மூன்று பெரும் காலகட்டமாக பிரிக்கலாம். முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். இரண்டாம் காலகட்டம் என்பது வரலாற்றுத் தொடக்கத்துக்கு சற்று முந்தைய கி.மு. 700 முதல், சங்க காலத்தின் இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரையான 1000 ஆண்டுகள். மூன்றாவது காலகட்டம் என்பது சங்க காலத்திற்கு பிந்தைய காலமான கி.பி. 300 முதல், பிற்கால பாண்டியர்களின் இறுதிக் காலமான கி.பி. 1300 வரையான 1000 ஆண்டுகள்.

 பண்டையகால தமிழர் கடல் வணிகம் என்பது, முதல் இரண்டு காலகட்டத்தை மட்டும் கொண்டதாகும்(தொடக்ககாலம் முதல் கி.பி. 300 வரை) . மூன்றாம் காலகட்ட கடல் வணிகம் (கி.பி.300 முதல் கி.பி.1300 வரை), இதில் சேராது. பண்டைய தமிழர் கடல் வணிகத்தின் முதல்காலகட்டம் என்பது போதிய ஆதாரங்கள் இல்லாததாகும். ஆனால் இரண்டாவது கால கட்டத்திற்கோ ஓரளவு ஆதாரங்கள் உள்ளன. நாம் இங்கு முதல் காலகட்ட கடல் வணிகம்(கி.மு.3000 முதல் கி.மு.700 வரை), குறித்து மட்டும், முதலில் பார்ப்போம்.

பண்டைய உலக வணிகம்: 

tamilar_sea_travel_630

SsSOURCE: E-DOCUMENTS-SPICE TRADE-WIKI.

 மேற்கண்ட வரைபடத்தில் நீல நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய கடல் வணிகத்தையும், சிவப்பு நிறத்தில் இருக்கும் கோடு பண்டைய தரை வணிகத்தையும் காட்டுகிறது. சீனா முதல் ரோம் வரையான பண்டைய வாணிகம் நடைபெற்ற நாடுகள் இதில் தரப்பட்டுள்ளன. ஆரம்பகால thதமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசியத் தீவுகளில் இருந்து தமிழகம் வழியாக பாரசீக வளைகுடா வரையில் கடற்கரை ஓரமாக மட்டுமே நடந்து வந்தது. பின்னரே அது நடுக்கடல் வணிகமாக பரிணமித்தது. அதன் பின்னரே அது மேற்கே எகிப்துக்கும், ரோமுக்கும் கிழக்கே சீனா வரையிலும் பரவியது.

 தமிழர்கள் ஆரம்பகாலம் முதல் மிக நீண்டகாலம் வரை, இந்தோனேசியத் தீவுகளுக்கும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கும் மட்டுமே சென்று வந்தனர். அரேபியர்களே தமிழகம், Iஇலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளின் பொருட்களை முக்கியமாக, வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் தமிழர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு, மேற்குலக நாடுகளுக்கு விநியோகித்தனர். பழங்காலத்தில் மேற்குலக நாடுகளுக்கு வாசனைப் பொருட்களும், வாசனைத் திரவியங்களும் மிக மிக தேவைப்பட்டது. பின்னர் தமிழர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவரை சென்று (சொமாலியா) வணிகம் செய்தனர். தமிழர்கள் மிக பழங்காலத்தில் இருந்தே, அந்தந்த நாடுகளில் தங்கி இருந்து வணிகம் செய்து வந்தனர்.

 மேலே வரைபடத்தில் உள்ள பாரசீகம்(Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா, அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. மேலே வரைபடத்தில் உள்ள ஜாவா(Java) என்ற இடத்தின் அருகே தான் வாசனைத் தீவும்(மொலுக்கஸ்), இன்னபிற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் உள்ளன. பண்டைய மேற்கு தமிழகத்தில்(கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த முசிறியும், இன்றைய மும்பாய் அருகே அன்று இருந்த பாரிகாஜாவும்(Barygaza) வரைபடத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.

தமிழர் கடல் வணிகம்-திரு. ஸ்காப் அவர்கள்:

 “காட்டுமிராண்டி நிலையிலிருந்து கிரேக்கர்கள் எழுவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தும் பழம்பெரும் இந்தியாவும் பாரசீக வளைகுடாவைத் தங்கள் வணிகத்திற்கான மையமாகக்கொண்டு வணிகப் பொருட்களை வாங்க, விற்க ஒரு வணிகமுறையை உருவாக்கிக் கொண்டனர் என்பதோடு அவர்கள் அன்றே ஆப்பிரிக்காவோடும் வ்ணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்தியாவில்(தமிழகத்தில்) உருவாகியிருந்த வளர்ந்த நாகரிகம் தம் சொந்த கப்பல் போக்குவரத்து மூலம் இந்த வணிகத்தை சாத்தியமாக்கியிருந்தது” என எரித்ரேயக்கடலில் பெரிப்ளஸ் என்கிற கிரேக்க நூலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பின் முன்னுரையில், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் திரு.ஸ்காப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.3 )

 கிப்பாலஸ்(Hippalus) அவர்கள் பருவக்காற்றை கடல் பயணத்திற்கு பயன்படுத்தும் முறையை கண்டுபிடிப்பதற்கு பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, திராவிடியர்களும்(தமிழர்களும்), அரேபியர்களும் பருவக்காற்றை பயன்படுத்தி கடல் பயணம் செய்து கொண்டிருந்தனர் என்கிறார் ஸ்காப் அவர்கள். கென்னடி eஎன்கிற மற்றொரு வரலாற்று ஆய்வாளர் தனது கட்டுரை ஒன்றில்(Journal of the royal asiyatic society 1898-pp;248-287), இதனை ஏற்றுக் கொண்டாலும் கி.மு. 7ஆம் நூற்றாண்டில் இருந்துதான், இந்திய - பாபிலோனிய வர்த்தகம் மிகப்பெரிய அளவில் திராவிடர்களாலும், சிறிய அளவில் ஆரியர்களாலும் நன்கு செழித்து வளர்ந்தது என்றும், இந்திய வணிகர்கள் அரேபிய, கிழக்கு ஆப்ரிக்கா, பாபிலோனியா, சீனா போன்ற இடங்களில் தங்கி வணிகம் புரிந்தனர் என்றும் குறிப்பிடுவதாக ஸ்காப் அவர்கள் தெரிவிக்கிறார்.

 இதனை மறுத்து மிக நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, கடல் வணிகம் நடந்து வந்ததை பேசவந்த ஸ்காப் அவர்கள், ஏழரா(eeEZRA) அவர்கள் யூதர்களின் பண்டைய வேத நூலை மறுபதிப்பு செய்ததன் காரணமாகவே (ஏழரா என்பவர் யூதர்களின் முக்கிய மதகுரு ஆவார். அவரால் பண்டைய எபிரேய சமய வழிபாட்டு நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. அதனால் அந்நூல் அவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது. அவருடைய காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு ஆகும்.) இந்த பண்டைய வணிகக் குறிப்புகள் இடம் பெறுகின்றன எனக்கருதி, கென்னடி அவர்கள் பண்டைய எகிப்திய வணிகத்தை மறுதலிக்கிறார் என்றும், ஆனால் பண்டைய எகிப்திய ஆவணங்களில், இந்திய மூலம் கொண்ட பொருட்கள் என்ன குறிப்பிடப்பட்டு உள்ளனவோ, அதே பொருட்கள்தான் ஏழராவின் மறுபதிப்பிலும் இடம்பெறுகின்றன என்கிறார்.

 ஆகவே ஏழராவின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இந்திய மூலம்கொண்ட வணிகப் பொருட்கள் சோமாலிய கடற்கரைக்கும், நைல் நதிக்கும் அப்பால் விற்கப்பட்டு வந்த ஒரு வணிகம், நடைபெற்று வந்துள்ளது என்பதே உண்மை என்கிறார். மேலும் நாகரிக வளர்ச்சி பெறா மிகப்பழங்காலத்தில் ஒரு பழங்குடியினரிடமிருந்து மற்றொரு பழங்குடியினருக்கும், ஒரு கடற்துறை நகரிலிருந்து பிறிதொரு கடற்துறைக்குமாக வணிகம் நடைபெற்றது என்கிறார். (SOURCE ; THE PERIPLUS OF ERITHRYAN SEA-English translation by W.H.SCHOFF Page.227,228 )

 ஆக திரு. ஸ்காப் அவர்களின் கூற்றுப்படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டுக்கு மிக நீண்டகாலம் முன்பிருந்தே தமிழர்கள், அரேபியர்கள் மூலம் மெசபடோமியப் பகுதிகளுக்கும், கிழக்கு ஆப்பிரிக்காவுக்கும், எகிப்துக்கும், பாலஸ்தீனத்துக்கும், கிழக்கே சீனா வரையிலும் வணிகம் செய்து வந்தனர் எனலாம்.

 திரு.ஸ்காப் அவர்களுடைய “எரித்ரேயக் கடலில் பெரிப்ளஸ்” என்ற ஆங்கில நூல் மொத்தம் 325 பக்கங்களைக் கொண்டுள்ளது. அதில் பெரிப்ளஸ் அவர்களுடைய மூல நூலின் பக்கங்கள் 28 ஆகும்.(பக்:22-49). மீதி உள்ள பக்கங்களில் 234 பக்கங்கள்(பக்:50-283), ஸ்காப் அவர்களின் விரிவான விளக்கக் குறிப்புகளைக் கொண்டவை. பண்டைய தமிழகத் துறைமுகங்கள், நகரங்கள், வணிகப்பொருட்கள் பற்றி மட்டும் 40 பக்கங்கள்(பக்:203-242) உள்ளன. பெரிப்ளஸ் காலத்தில் இருந்த நாடுகள், நகரங்கள், வணிகப் பொருட்கள் குறித்த முழுமையான வரலாறுகளையும், நிலவியல் தரவுகளையும், இன்ன பிறவற்றையும் திரு.ஸ்காப் அவர்கள் நன்கு அறிந்து கொண்டுதான் விளக்கக் குறிப்புகளை அளித்துள்ளார்.

 தமிழகம் குறித்து பல்வேறு நூல்களை நன்கு படித்து, ஆழ்ந்து புரிந்து கொண்டு எழுதியுள்ளார். ஆக பொதுவாக அவரது இந்த நூல், பண்டைய காலத்திய கடல் வாணிகம் குறித்த, மிக முக்கியமான அதிகாரபூர்வமான ஆவணம் எனலாம். பிளினி, ஸ்ட்ராபோ, டாலமி போன்ற பண்டைய நூலாசிரியர்களை மட்டுமல்லாது வின்சென்ட் ஸ்மித், ஸ்வெல், கென்னடி போன்ற நவீன வரலாற்று ஆசிரியர்களையும் நன்கு ஆழ்ந்து படித்தே விளக்கக் குறிப்புகளை திரு. ஸ்காப் எழுதி உள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சிந்து-இந்து-இந்தியா:

தென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சேஸ்(sayce) என்பவர் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார். atharஅதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின் தலைநகர் ஊர்(Ur) என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில் சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு கேரள(பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக “சிந்து” என்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளது.

 சிந்து என்ற சொல்லுக்கு பழந்தமிழில் துணி என்று பெயர். இன்றும் கன்னடத்திலும் துளுவிலும் துணியைக்குறிப்பிட சிந்து என்ற சொல் பயன்படுகிறது. எனவே பழந்தமிழகத்தில் இருந்து துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என அறிய முடிகிறது. மேலும் சிந்து என்பது ஆற்றிலிருந்து வந்த பெயர் அல்ல. துணிக்கான பண்டைய தமிழ் சொல்லிலிருந்து வந்த பெயர் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கார். (ஆதாரம்: தமிழக வரலாறு –மக்களும் பண்பாடும்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்; 51,52. பதிப்பு; 2008 & தமிழர் வரலாறு-பி.டி.சீனிவாச அய்யங்கார், தமிழ் பதிப்பு. பக்; 29.)

 சிந்து என்ற ஆற்றின் பெயரிலிருந்து, இந்த சிந்து என்ற சொல் வரவில்லை என்றால், இந்த சிந்து என்ற தமிழ் சொல்லில் இருந்து தான், இந்து மதத்திற்கான “இந்து” என்ற பெயரும், நமது நாட்டிற்கான “இந்தியா” என்ற பெயரும் வந்ththதுள்ளன என கருதலாம். (சிந்துவெளி மக்கள் சிந்து நதிக்கு என்ன பெயர் வைத்திருந்தனர் என அறியும் போதே இவை குறித்து இறுதியாகச் சொல்ல முடியும்.) தமிழ் சொல்லில் இருந்து இந்தியா என்ற பெயர் வந்ததன் காரணமாகவே, ஆரம்பகாலம் முதலே தமிழகம் பொதுவாக உலக மக்களால் இந்தியா என்றே கருதப்பட்டு, இந்தியா என்றே சொல்லப்பட்டும் வந்துள்ளது. இவை தமிழர் வணிகத்தின் பழமையை சுட்டிக்காட்டுகிறது எனலாம்..

தமிழர் கடல் வணிகம்-பி.டி சீனிவாச அய்யங்கார்:

 கி.மு.2600 இல் ஆட்சிபுரிந்த எகிப்திய நான்காவது வம்ச அரசன் மெர்னரே(MERNARE) என்பவனின் கீழ் பணிபுரிந்த அசுவான் (ASSWAN) இனத்து ஹர்க்குப்(HARKHWF) என்பவனின் கல்வெட்டில் “நறுமணப் புகைதரும் மெழுக்கு,கருங்காலிமரம், நவதானியம், சிறுத்தைப்புலி, தந்தம், தடிகள் மற்றும் பிற சிறந்த பொருள்களைக் கொண்ட பொதி மூட்டைகள் ஏற்றப்பட்ட 300 கழுதைகள் தெற்கு நுபியாவில்(SOUTHERN NOBIA) உள்ள யாம்(YAM) நாட்டிலிருந்து வந்திறங்கின” என்ற குறிப்பு உள்ளது. இதிலுள்ள கருங்காலி மரம், நவதானியம், சிறுத்தைப்புலி முதலியன தென்னிந்தியாவிலிருந்தே சென்றிருக்கக்கூடும் என்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார் .( தமிழக வரலாறு பக்.31).

 கி.மு.26 ஆம் நூற்றாண்டின் ஆறாவது அரச குடும்பத்தைச் சார்ந்த இரண்டாம் பெபி (PEppPEPI) என்பவனின் கீழ் பணிபுரிந்த செப்னி(Sebni) என்பவனுடைய குறிப்பில் மெழுக்கு உடைகள் (பருத்தி உடைகள்), யானைத்தந்தம், விலங்கின் தோல் முதலியன உள்ளன. அந்நாட்களில் தென்னிந்தியாவில்தான் பருத்தி ஆடைகள் நெய்யப்பட்டன என்றும் தந்தம் இந்தியத் தந்தமே என்றும், இரும்புப்பொருட்கள் (வாய்ச்சி, கோடரி, வாள்) பலவற்றை எகிப்து, சோமாலியா போன்ற நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வந்தது என்றும், அது குறித்த பிற்காலத்திய ஆவணம் இருக்கிறது என்றும் பி.டி.சீனிவாச அய்யங்கார் குறிப்பிடுகின்றார். (தமிழக வரலாறு பக்.32.)

 தமிழர்கள் தொடக்ககாலத்திலிருந்தே மிகப்பெரிய கடல்வணிகத்தை வளர்த்து வந்தனர் என்றும் அன்றைய வட இந்தியர்கள் மாலுமித் தொழில் தெரிந்தவர்களல்லர் என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார் (பக்.32). பழங்காலத்தில் வட இந்தியர்கள் கடல் வணிகம் செய்ததில்லை என்பதை, திராவிடியர்களே அதாவது தமிழர்களே கடல் வணிகம் செய்தனர் என்பதை வின்சென்ட் ஸ்மித், ஸ்காப், கென்னடி, ஸ்வெல் போன்ற பல உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்.

இந்தியா பெருமளவில் இலவங்கம், மிளகு,முத்து முதலியவைகளை உற்பத்தி செய்தது என்றும் பருத்தி ஆடைகளை புதிய கற்காலம் முதலே நெய்து வந்தது என்றும் பி.டி.சீனிவாசஅய்யங்கார் குறிப்பிடுகிறார்.(பக்.33.)

அரேபிய இடைத்தரகர்களால் எகிப்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் தென்னிந்தியப் பொருட்கள்தான் என்பதையும், தென்னிந்தியப் பரதவர்கள் அப்பண்டங்களை தங்களுடைய படகுகளில் ஏடனுக்கும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கும் கொண்டு சென்றனர் என்பதையும் தெரிவிக்கிறார் பி.டி.சீனிவாச அய்யங்கார்.(பக்.30,31)

தமிழர் கடல் வணிகம்-பழைய ஏற்பாடு:

 யூதர்களின் ஆதிசமயத் தலைவரான மோசஸ்(MMOSES), தாம் நிகழ்த்திய இறை வழிபாட்டில் வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிக அதிக அளவில் பயன்படுத்தினார் என பழைய ஏற்பாடு தெரிவிக்கிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்த ஆண்டு கி.மு. 1490 ஆகும். மோசஸ் அவர்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டிய தங்கம் முதலான பொருட்களோடு, இறுதியாக வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் குறிப்பிடுகிறார்.

 மேலும் வாசனைத் திரவியங்களை எப்படி ஒன்றிணைக்க வேண்டும் என்றும், அந்த புனிதமான வாசனைத் திரவியங்களைக் கொண்டு எந்தெந்த பொருட்களை புனிதப் படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். குருமார் மற்றும் அவரது புதல்வர்களைக்கூட இந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டே புனிதப்படுத்த வேண்டும் என்கிறார் மோசஸ். (ஆதாரம்: 1. பழைய ஏற்பாடு- EXODUS, 35: 4-9, 37: 29 & 40: 9-15. 2. தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- டாக்டர் கே.கே. பிள்ளை பக்: 50,51).

 ஆக கி.மு. 15ஆம் நூற்றாண்டில், வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும் மிகச்சிறந்த புனிதப் பொருட்களாக யூதர் களின் சமயத்தலைவரான மோசஸ் கருதி, அவைகளை அன்றே பெருமளவு பயன் படுத்தியுள்ளார் என்பதை பழைய ஏற்பாடு மிகத் தெளிவாகவும் மிக விரிவாகவும் குறிப்பிடுகிறது.

 கி.மு. 1000 வாக்கில், இஸ்ரேலை ஆண்ட சாலமன்(SSOLOMON) மன்னனுக்கு தென் அரேபிய நாட்டு அரசி சேபா(SHEBA), மிக அதிக அளவான வாசனைப் பொருட்களையும், வாசனைத் திரவியங்களையும், தங்கத்தையும், மதிப்புமிக்க கற்களையும் பரிசாக வழங்கினார். மூன்று வருடங்களுக்கு ஒரு முறை டயர் நாட்டு மன்னன் கிராம்(HHIRAM) அவர்களின் கப்பல்களுடன், சாலமனின் தார்சிஸ்(TARSHISH) கப்பல்களும் சேர்ந்து ஒபீர்(OOPHIR) துறைமுகம் சென்று நிறைய தங்கத்தையும், அகில் மரங்களையும், மதிப்புமிக்க கற்களையும், வெள்ளி, குரங்குகள், மயில்கள், தந்தங்கள், முதலியனவற்றையும் கொண்டு வந்தன ( ஆதாரம்: பழைய ஏற்பாடு-KINGS 1, 9:27,28, & 10:2,10,11,22,25).

சாலமன் மன்னனுக்கு வந்து சேர்ந்த பண்டங்களில் பல தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளே என்கிறார் கே.கே.பிள்ளை அவர்கள். உதாரணம்: 1.துகிம்- தோகை, மயில்தோகை; 2.ஆல்மக் மரங்கள்- அகில் மரங்கள் 3.Kகஃபி- கவி, (பழந்தமிழில் கவி என்பது குரங்கு என பொருள்படும்). முதலியன ஆகும்(தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும்- பக்: 50,51).

 பாண்டிய நாட்டின் தலைநகராய், துறை முகமாய் கடலைத் தொட்டுக் கொண்டிருந்த கொற்கை நகரம் இப்போது கடலிலிருந்து ஏழு மைல் தூரத்தில் உள் நாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. ஓஃபிர் அல்லது உவரி இவ்வூரின் பகுதியாகும். இப்போதும் இதே பெயரில் இங்கிருக்கும் மீனவர் கிராமத்தில் மணல் மேடுகள் உள்ளன. இம் மணல மேடுகள் ஒரு காலத்தில் தங்கச் சுரங்கங்களாய் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. மழை பெய்தபின்னர் கிராமவாசிகள் அங்கு சென்று தங்கப் பொடியைப் பொறுக்குகின்றனர் என்கிறார் நரசய்யா அவர்கள்.( கடல் வழி வணிகம், பக்:63.)

 ஆக சாலமன் மன்னனுக்கு வந்த பொருள்களில் பல பெயர்கள், தமிழ்ப் பெயர்களின் சிதைவுகளாக இருப்பதும், ஒஃபீர் (அ) உவரி என்ற பகுதி இன்றும் கொற்கைத் துறை அருகே இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய தரவுகளாகும்.

பண்டைய தமிழகம்:

 பண்டைய தமிழகம் இன்றைய தமிழகம் போன்று மூன்று மடங்கு நிலப்பரப்பு கொண்டதாகவும், இன்றைய தமிழகக் கடற்கரை போல மூன்று மடங்கு நீளம் கொண்டதாகவும் இருந்த, ஒரு பரந்த விரிந்த மாபெரும் பரப்பாகும். இன்றைய தமிழகம் முழுமையும், இன்றைய கேரள மாநிலம் முழுமையும், அதன் கடற்கரைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. இவை போக இன்றைய கர்நாடகத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கோவா வரையிலான துளு நாடு முழுமையும் அதனை ஒட்டிய கடற்கரையும் (பழந்தமிழகத்தில் இதனை நன்னர்கள் ஆண்டனர்), கர்நாடகத்தின் தென் பகுதியும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள ஒரு சில மாவட்டங்களும், அதனை ஒட்டிய கடற்கரையும் பண்டைய தமிழகத்தில் இருந்தன.

 இவை போக இன்றைய இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமேற்கு, தென் கிழக்குப் பகுதிகளும், அநுராதபுரத்தை ஒட்டிய பகுதிகளும், இலங்கைக் கடற்கரையில் 75 விழுக்காட்டுக்கு மேற்பட்டவைகளும் பண்டைய தமிழகத்தில் இருந்தன. ஆக ஒட்டு மொத்தமாக பண்டைய தமிழகத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பும், கிட்டத்தட்ட 2500 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையும் இருந்தன.

 இவைகளை ஒப்பிட, கீழ்க் கண்ட சில தரவுகளை அறிவது நலம். நமது இன்றைய தமிழகத்தின் பரப்பு சுமார் 1.3 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய தமிழக கடற்கரையின் நீளம் சுமார் 800 கி.மீ. இன்றைய இந்திய நாட்டின் பரப்பு சுமார் 33 இலட்சம் சதுர கிலோ மீட்டர். இன்றைய இந்திய கடற்கரையின் நீளம் சுமார் 6000 கி.மீ. பிற்கால சோழப்பேரரசு உச்ச நிலையில் இருந்தபொழுது, அதாவது இராசேந்திர சோழன் காலத்தில் அதன் ஆட்சிக்குட்பட்ட பரப்பு சுமார் 16.5 இலட்சம் சதுர கிலோ மீட்டர். பண்டைய தமிழகத்தின், சுமார் 2500 கி.மீ நீளக்கடற்கரை, தமிழர்களை கடலோடிகளாகவும் கடல் வணிகத்தில் தலை சிறந்தவர்களாகவும் ஆக்கியது எனலாம்.

தமிழர் கடல் வணிகம்- இணையதளத் தரவுகள்:

 கி.மு.3000வாக்கில் அசீரியர்களின் தொன்மக்கதை ஒன்றில் அவர்களது கடவுள் நல்லெண்ணையைக் குடித்த பின் தான் (எள் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்) உலகத்தைப் படைத்தார் என்ற பதிவு உள்ளது. இந்த எள் செடியின் மூலம்(ORIGIN) இந்தியத் துணைக்கண்டம் என்று கருதப்படுகிறது. ஆக அன்றே இந்தியாவிலிருந்து இந்த எண்ணெய் அசீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 கி.மு.2500க்கு முந்திய எகிப்து அரசன் சியொப்ஸ் (Cheops) அவர்களின் மிகப்பெரிய பிரமிடுகளைக் கட்டிய தொழிலாளர்களுக்கு ஆசியக்கண்டத்து வாசனைப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வலிமையூட்டப்பட்டது என எகிப்திய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

 கி.மு.2400இல் சுமேரியாவில் கிராம்பு(Cloves) பயன்படுத்தப்பட்டதாக தொல்பொருள் ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கிராம்பு (வாசனைப்பொருள்) அன்று உலகிலேயே இந்தோனேசியாவில் உள்ள மொலுக்கஸ்(Moluccas) தீவில் மட்டுமே கிடைத்தது. இத்தீவிற்கு வாசனைத்தீவு என்றே பெயரிடப்பட்டுள்ளது. இத்தீவுடன் நடத்தப்பட்ட வணிகமே மிகப்பழமையான வணிகம் ஆகும்.

பாபிலோனிய மன்னன் ஹமுராபி(HHAMMURABI) (கி.மு.1792-1750) தனது சட்டத்தில் அறுவை மருத்துவத் தோல்விக்கு கடுமையான தண்டனை விதித்ததால் அங்கு மிகப்பெரிய அளவில் வாசனைத்திரவியங்களும் வாசனைப் பொருட்களும் தேவைப்பட்டன.

 எகிப்திய ஆவணங்களின் படி கி.மு.1550 இல் மருத்துவத்திற்காகவும், உடலை அழிவிலிருந்து பாதுகாக்கவும் வாசனைத் திரவியங்கள் பயன் படுத்தப்பட்டன. இலவங்கப்பட்டை(Cassia), கருவேலம்பட்டை(Cinnamam) முதலியன மனித உடலை அழியாமல் பாதுகாக்க அவசியமாகக் கருதப்பட்டது. இவை தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே கிடைக்கின்றன.

 எகிப்தில் கி.மு.1473-1458 வரை ஆண்ட இளவரசி ஹட்செப்சுட்ஸ் (Hatcepsuts) , “ பண்ட்” என்ற இடத்திற்கு கப்பல் பயணம் செய்து கருவேலம்பட்டை, வாசனைப் பொருட்கள் போன்றவைகளை எகிப்துக்குக் கொண்டுவந்ததாக எகிப்திய ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

 எகிப்தில் கி.மு.1213 இல் இறந்த இரமேசஸ்-2(Ramasses) உடைய மம்மியின் இரு மூக்குத் துவாரங்களிலும் மிளகுப்பொருள்(Peppercorn) செருகி வைக்கப்பட்டிருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (Source; E-Document-Trade,History of the spice trade, introduction page )



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தமிழர் வணிகம்-திருமதி. இலட்சுமி:

 பண்டைய தென்னிந்திய வணிகம் குறித்த தனது கட்டுரையில் திருமதி இலட்சுமி அவர்கள், தொல்லியல், கல்வெட்டுகள், மொழியியல் சான்றுகள், வரலாற்று நூல்கள், மனித இன ஆய்வு, சமயத் தொடர்பு போன்ற பலகோணங்களில் ஆய்வு செய்து, மிகப் பழங்காலத்தில் இருந்தே தமிழகம் கடல் வணிகம் செய்து வருகிறது என உறுதிபடக் கூறுகிறார். அவரது தரவுகள் சிலவற்றை காண்போம்.

எகிப்தின் 17 ஆவது அரச வம்சம் நிறைய யானைத் தந்தங்களைப் பெற்ற தற்கான ஆவணங்கள் உள்ளன. மேலும் அதனால் ஆன பொருட்களான மேசை, நாற்காலி, சிலை போன்றவற்றைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. ஆப்பிரிக்கக் காடுகளை விட தென்னிந்தியக் காடுகளில் யானைகளைப் பிடிப்பது எளிது. எனவே இவை தென்னிந்தியாவில் இருந்து தான் அதிக அளவில் வந்துள்ளன. எகிப்திய 18வது அரச வம்சம் மதிப்பு மிக்க கற்கள், வாசனைப் பொருட்கள், தந்தங்கள், தங்கம், கருவேலம்பட்டை, மனிதக்குரங்கு, குரங்கு, நாய், புலித்தோல் முதலியவற்றை அரேபியர்கள் மூலம் பெற்றதற்கான குறிப்புகள் உள்ளன.

 இந்தியாவோடு அசீரியா கொண்ட வணிகத் தொடர்பு குறித்து, கிட்டிட்டி (Hittiti) அரசனான மிட்டானியுடைய (Mitani) கி.மு.14ஆம், 15ஆம் நூற்றாண்டை சார்ந்த கியூனிபார்ம் எழுத்துப் பொறிப்புகள் உள்ளன. அதே காலத்தைச் சார்ந்த அசீரிய அரசனான டிக்ளத் பைல்சர்-3 (Tiglath pileser) உடைய நிம்ருட் (Nimrud) எழுத்துப் பொறிப்புகளில், இந்தியப் பொருட்களான துணிகள், நறுமணப் பொருட்கள் முதலியனவற்றை யக்கிம் (Yakim) என்ற அரசன், அசீரிய அரசனுக்கு பரிசாக வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன.

எகிப்தின் 20 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்த இரமேசஸ்-3 (கி.மு.1198-1167) என்பவரும், எகிப்தின் 28 ஆவது அரச வம்சத்தைச் சார்ந்தவர்களும் தென்னிந்திய பொருட்களை பெற்றதாகக் குறிப்புகள் உள்ளன. திருமதி இலட்சுமி அவர்கள் தந்துள்ள தரவுகள் பல முன்பே தரப்பட்டுள்ளதால் அவை இங்கு தவிர்க்கப் படுகின்றன்.

 தமிழகப் பரதவர்கள் தங்கள் படகுகள் அல்லது சிறு கப்பல்கள் மூலம் பாரசீக வளைகுடா, ஏடன், கிழக்கு ஆப்பிரிக்கத் துறைமுகங்களுக்கு தமிழக, தென்கிழக்கு ஆசிய பொருட்களைக் கொண்டு சென்று ஒப்படைக்க, அதனைப் பெற்றுக் கொண்ட பொனீசியர்களும், அரேபியர்களும் அவைகளை எகிப்துக்கும் பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் மிகப் பழங்காலத்திலேயே கொண்டு போய்ச்சேர்த்தனர் என்பதை சில ஆதாரங்களுடன் திருமதி. வி.டி. இலட்சுமி அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.(Source: E- Document-Trade, Ancient south Indian commerce – Srimathi. V. T. Lakshmi)

பெருங்கற்கால குறியீடுகள்:

 தமிழத்தில் உள்ள பெருங்கற்படை சின்னங்களிலும், முதுமக்கள் தாழிகளிலும் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பானை ஓடுகள், மட்பாண்டங்கள், அணிகலங்கள், முத்திரைகள் போன்ற பொருட்களிலும், நாணயங்களிலும், கல்வெட்டுகளிலும், தமிழி எழுத்துகளோடும் குறியீடுகள் உள்ளன. இக்குறியீடுகள் பண்டைய நாகரிகங்களில் உள்ள குறியீடுகளோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை முக்கியமாக சிந்துவெளி எழுத்துக்களோடு நெருங்கிய தொடர்பு உடையனவாக உள்ளன.

 இவை குறித்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட “பண்டைத்தமிழக வரைவுகளும் குறியீடுகளும் “ என்ற நூலில் கீழ்க்கண்ட தரவுகளை வழங்குகிறார் முனைவர் இராசு பவுன்துரை அவர்கள்.

சுமேரியன், அக்கேடியன், ஹிட்டடைட் ஆகிய மூன்று தொன்மையான மொழி எழுத்து மரபுகளுடன் பெருங்கற்காலத் தமிழகக் குறியீடுகளின் வடிவங்கள் ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்:237)

சுமேரிய-எகிப்து மொழியில், இலினியர்(Linear-B) எழுத்துமுறை கலந்திருப்பதாகவும், இலினியர் எழுத்துக்களில் 87 குறியீடுகள் உயிர்மெய் எழுத்துக்கள் எனவும், அந்த 87 எழுத்துக்களும் தென்னிந்தியக்குறியீடுகள், வரிவடிவங்களோடு ஒப்புமை உடையனவாக உள்ளன. (பக்: 248)

தமிழகத்தில் கண்டறியப்பட்ட பண்டைய குறியீடுகளையும், சிந்து வெளிக் குறியீடுகளையும் தொகுத்துக் காணும் பொழுது அவற்றிற்கு இடையே காணப்படும் வரைவு ஒற்றுமைகளும், மொழி, எழுத்து குறித்த சிந்தனைகளும் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைப் பெற்றுத் திகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது. (பக்:252.) மேலும் சிந்து வெளிக் குறியீடுகளின் எழுத்துரு அமைப்பில் தமிழின் தொடர்பையும், தொல் குறியீடாகிப் பின்னர் மொழியாக்கம் பெற்ற தமிழியில் சிந்து வெளிக் குறியீடுகளின் ஒப்புமையும் காணமுடிகிறது. (பக்:253)

தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுக்கும், கி.மு. 500 - கி.பி. 200 ஆம் காலத்திய ஜப்பானிய யாயோய் (Yayoi) பண்பாட்டு மட்பாண்டக் குறியீட்டு வரைவுகளுக்கும் இடையே தெளிவான வடிவ ஒற்றுமை இருக்கிறது.(பக்:230)

சீனம், எகிப்து, இலங்கை, ஜப்பான், கிரேக்கம் ஆகிய நாடுகளின் 130 பழங்காலக் குறியீடுகள் தமிழகப் பெருங்கற்காலக் குறியீடுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.(பக்: 239-244) அதில் எகிப்து நாட்டுக் குறியீடுகளோடு 121 குறியீடுகளும், சீனத்தோடு 103 குறியீடுகளும், ஜப்பானோடு 94 குறியீடுகளும், கிரேக்கத்தோடு 64 குறியீடுகளும் ஒப்புமை கொண்டுள்ளன என்பது கணக்கிட்டு அறியப்பட்டது.

பண்டைய உலக நாகரிகங்களின் சமகாலத்துப் பண்பாட்டிற்கு இணை -யாகவே சங்ககாலத் தமிழகம் திகழ்ந்தது என்பதை, உறுதி செய்யும் வண்ணம் இப்பெருங்கற்காலக் குறியீடுகள் அமைகின்றன(பக்:262).

மேலே தரப்பட்ட முனைவர் பவுன் துரை அவர்களின் தரவுகள் கி.மு.3000 முதல் கி.மு.1500 வ்ரையும், கி.மு.800 முதல் கி.மு. 200 வரையுமான இரு காலத்தைக் கொண்டவை என்றும், இதில் எகிப்து, சிந்து, சீனம், சுமேரியா போன்ற பண்டைய நாகரிகங்கள் முதல் காலத்தையும், இலங்கை, ஜப்பான், கிரேக்கம் போன்ற நாடுகள் இரண்டாம் காலத்தையும் சார்ந்தவை ஆகும் என்றும் அவரே தெரிவித்துள்ளார். (பக்:263)

பண்டைய நாகரிக நாடுகளின் குறியீடுகளோடு கொண்டுள்ள இந்த ஒப்புமையை தற்செயலானவை எனக் கருத இயலாது. பண்டைய தமிழகம் இந்த நாடுகளோடு கி.மு. 3000 முதல் வணிகப் பண்பாட்டுத் தொடர்பைக் கொண்டிருந்தன என்பதற்கு இக்குறியீடுகளின் ஒப்புமை ஒரு ஆதாரமாகத் திகழ்கிறது எனலாம்.

தமிழக இலங்கைத் தொல்பொருள் ஆய்வு:

 பண்டைய வணிகம் குறித்து மேலே சொல்லப்பட்ட தரவுகளில், குறிப்பிடப்பட்ட வாணிப பொருட்களில் பெரும்பாலானவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றில் விளைகிற, உற்பத்தி ஆகிற பொருட்களே ஆகும். பண்டைய காலத்தில் இவை அனைத்தும் சிந்து வெளிப் பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், மேற்குலக நாடுகள் ஆகியவைகளுக்கு தமிழகம் வழியாகவே அனுப்பி வைக்கப்பட்டன.

 தமிழகத்தில் உலோக காலத்துக்கு முந்தைய, மூன்றாம் நிலைக் கற்காலக் கருவிகள் திருநெல்வேலி மாவட்டம் சாயர்புரம் பகுதியில் கிடைத்துள்ளது. அதன் காலம் கி.மு. 4000 ஆகும். அதன் பின் உலோக காலம் தொடங்குகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை உலோக காலம் பிற இடங்களைப் போல் அல்லாமல், நேரடியாக இரும்புக் கால நாகரிகமாகவே தொடங்குகிறது.( தமிழக வரைவுகளும், குறியீடுகளும்- இராசு பவுன்துரை, பக்: 85-86.)

 இலங்கையின் அநுராதபுரத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்புகளின் காலம் கி.மு. 1000 என சிரான் தரணியகல (இலங்கை தொல்லியல் ஆய்வாளர்) தெரிவித்துள்ளதாக, “இலங்கையில் தமிழர்” என்ற தனது நூலில் இந்திரபாலா குறிப்பிட்டுள்ளார்.( பக்.113.) இலங்கையின் வடமேற்குக் கரைக்குத் தமிழ் நாட்டிலிருந்து பரவிய புதிய ஆதி இரும்புக் காலப் பண்பாடு, அவ்விடத்தில் நன்கு வேரூன்றிய பின், உள்ளே பரவத் தொடங்கி அநுராதபுர இரும்புக் காலக் குடியிருப்பு தோன்றியது எனலாம் என்கிறார் இந்திர பாலா. (பக்:110). புதிய ஆதி இரும்புக்கால நாகரிகம் தமிழ் நாட்டில்(ஆதிச்ச நல்லூர்) நன்கு வேரூன்றிய பிறகே, இலங்கையின் வடமேற்கு கரைக்கு(பொம்பரிப்புப் பகுதி) பரவியிருக்க வேண்டும்.

 பொம்பரிப்பு பகுதியில் நன்கு வேரூன்றிய பிறகே அநுராதபுரத்திற்கு பரவி இருக்கவேண்டும். இதற்கு சில நூற்றாண்டுகள் ஆகியிருக்கும். ஆக அநுராதபுர இரும்புப் பண்பாட்டின் தொடக்கக் குடியிருப்பு காலம் கி.மு. 1000 எனில், இலங்கையின் வடமேற்கில்(பொம்பரிப்புப் பகுதி) பரவிய ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க குடியிருப்பு காலம் கி.மு. 1200 ஆக இருக்கவேண்டும். இலங்கையின் இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1200 என்றால், அதற்கு முன் தமிழகத்தின் ஆதிச்ச நல்லூரில் அப்பண்பாடு நன்கு வேரூன்றிய பிறகே இலங்கைக்கு பரவியிருக்க வேண்டும்.

 எனவே தமிழக ஆதி இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் இரும்புப் பண்பாடு, தென்னிந்தியாவில் கி.மு. 1200 அளவில் தோன்றியதாகவும், இலங்கையில் கி.மு. 1000ல் தோன்றியதாகவும் கருதப்படுகிறது என்கிறார் இந்திரபாலா.(பக்: 114).

ஆதிச்ச நல்லூர்:

 தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் பெருங்கற்படை சின்னங்களும், தென்கிழக்கு பகுதியில்( ஆதிச்ச நல்லூர்) முது மக்கள் தாழிகளும் தமிழகத்தின் இரும்புப் பண்பாட்டு காலச் சின்னங்களாக உள்ளன. தக்காணத்தில் உள்ள வடபகுதி பெருங்கற்படைச் சின்னங்களின் அகழாய்வு கொண்டுதான் தென்னிந்திய இரும்புக் காலப் பண்பாடு கி.மு. 1200 எனக் கொள்ளப்படுகிறது ஆனால் தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆதிச்ச நல்லூரில் இது வரை 1%க்கு குறைவான அகழாய்வே நடத்தப்பட்டுள்ளது(தொல்லியல் நோக்கில் சங்ககாலம்-கா.ராஜன், பக்:26). அலெக்சாண்டர் ரே அவர்கள் சுதந்திரத்திற்கு முன்பு நடத்திய அகழாய்விற்குப்பின், 2004 இல் தான் மீண்டும் அகழாய்வு தொடங்கப்பட்டது. அதுவும் முழுமையாக நடத்தப்படவில்லை

 ஆதிச்ச நல்லூர் அகழாய்வு இயக்குநர் டாக்டர் சத்யமூர்த்தி அவர்கள், 25.5.2007 இந்து நாளிதழில், பொருள் உற்பத்தி பண்பாடு தெற்கிலிருந்து வடக்கே சென்றிருக்கலாம் என்பதைக் காட்டுவதாக, ஆதிச்ச நல்லூர் அகழாய்வில் கிடைத்த( 1% ஆய்வில்) பொருட்களின் தயாரிப்பில் உள்ள உயர்தொழில்நுட்பம் இருக்கிறது என குறிப்பிட்டு உள்ளார். தென்னிந்தியாவின் வடபகுதியில் கி.மு 1200ல் தோன்றிய இரும்பு பண்பாடு தெற்கே பரவியதாகவே முன்பு கருதபட்டது.

 தெற்கிருந்து வடக்கே பொருள் உற்பத்தி பண்பாடு பரவியது என்றால், இரும்பு பண்பாடு முதலில் ஆதிச்ச நல்லூர் பகுதியில் துவங்கி இருக்க வேண்டும் என்பதோடு அதன் காலம் கி.மு 1200க்கு முன்பாக இருக்க வேண்டும்.. ஆதிச்ச நல்லூர் மற்றும் பிற முதுமக்கள் தாழி உள்ள இடங்களில் அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டால் , தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு.1500 ஆக இருக்க வாய்ப்புள்ளது. இலங்கை, ஆதிச்ச நல்லூர் தொல்லியல் ஆய்வுகள் அதைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

 இரும்பு காலத்திற்கு முன்பே, புதிய கற்காலத்திலேயே, மனிதர்கள் கடல் பயணம் மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் மூன்றாம்நிலை புதிய கற்காலம் கி.மு 4000 ஆகும். இரும்பு பண்பாட்டின் தொடக்கம் கி.மு. 1500ஆகும். ஆக, கி.மு. 4000த்துக்கும், கி.மு. 1500க்கும் இடைபட்ட காலத்தில், தமிழர்கள் கடல் வணிகத்தைத் தொடங்கிவிட்டனர் எனலாம். இரும்பு பண்பாட்டின் துவக்க காலத்தில் இருந்து, இக்கடல் வணிகம் ஒரு வளர்ச்சி பெற்ற வணிகமாக மாறுவதோடு, ஒரு நிலையான, தொடர்ச்சியான வணிகமாகவும் மாறியிருக்கும். அதற்கு பின்னரே இரும்பு பொருட்களின் ஏற்றுமதி தொடங்கி இருக்க வேண்டும்.

 ஆக, பண்டைய தமிழர் கடல் வணிகம் மிகப்பழங்காலத்தில் இருந்து நடந்து வருகிறது என்பதற்கான சில ஆதாரங்களும் காரணங்களும் வருமாறு,

1.பண்டைய நாகரிக நாடுகள் பயன்படுத்திய பொருட்களில் (தரவுகளில் சொல்லப்பட்டவை) பெரும்பாலனவை தமிழகம், இலங்கை, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவைகளில் மட்டுமே கிடைப்பவை. ஆகவே, அவை அனைத்தும் தமிழகம் வழியாகவே, தமிழர் கடல் வணிகம் மூலமே மேற்குலக நாடுகளுக்கு கிடைத்துள்ளன.

2.தமிழக பெருங்கற்கால குறியீடுகள், பிற தொன்மையான நாகரிகங்களின் குறியீடுகளோடு ஒப்புமை கொண்டிருப்பது, பண்டைய தமிழகத்திற்கும் பிற தொன்மையான நாகரிக நாடுகளுக்கும் இடையே இருந்த வணிகப் பண்பாட்டுத் தொடர்பை உறுதிப்படுத்துகிறது.

3.பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும், அதன் பரந்த விரிந்த பரப்பும், தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல் வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற ஒரு முக்கிய காரணியாகும்.

4.சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள், இலங்கை போன்ற கிழக்குலக நாடுகளுக்கும், சிந்துவெளிப்பகுதி, பாரசீக வளைகுடா நாடுகள், கிழக்கு ஆப்ரிக்கா, எகிப்து, பாலஸ்தீனம், ரோம் போன்ற மேற்குலக நாடுகளுக்கும் இடையே ஒரு கேந்திரமான இடத்தில் தமிழகம் அமைந்திருப்பதும் ஒரு காரணமாகும்.

5.தமிழகத்தில், புதிய கற்காலத்தின் மூன்றாம்நிலை காலம் கி.மு. 4000 என்பதும், தமிழக இரும்பு பண்பாட்டின் தொடக்க காலம் கி.மு. 1500 என்பதும், தமிழகம் மிகப் பழங்காலத்தில் இருந்தே கடல் வணிகம் செய்வதற்கேற்ற சூழ்நிலையைக் கொண்டிருந்தது எனலாம்.

 மேற்கண்ட 5 ஆதாரங்களும், காரணங்களும் போக வேறு பல இருக்கலாம் எனினும், இவையே பிரதானமானவைகளாகும்.

 - கணியன்பாலன் 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Dates of the Sangam Books

Dates of the Sangam Tamil Books – This information is from the Tamil and Sanskrit scholar Kamil Zvelebil’s book, ‘The Smile of Murugan’.

There are 18 books  which comprise the Sangam genre.  They are the 8 anthologies  (ettuthokai), the 10 Lays (Pathupāttu). There is also Tholkāppiyam, parts of it were written before the anthologies, and parts of it were written after the anthologies.

The poetry probably started out as oral, got written down later, and finally got compiled and anthologized many centuries later.  Commentaries were written a few centuries after that. In this article, we are talking about the time that they were written on palm leaves.

There are many scholarly viewpoints out there regarding the dates of the Sangam books.   Scholars use many tools to estimate the dates of these books.  These are the following factors that are taken into consideration to arrive at possible dates:

1Historical correlations – The Pallavas took control of Kānchi in 250 A.D. The Pallavas do not appear in the Sangam books.  There is not a single reference to them in the earlier books.  Tamil and Sanskrit scholar Dr. Kamil Zvelebil says we can safely assume that the literature was written before the Pallavas appear in Tamil Nadu, and that it is before 250 A.D.  The Pallavas left Tamil Nadu in the 8th century.  The poems definitely were not written after that.

King Gajabāhu I of Sri Lanka was a contemporary of King Cheran Chenguttuvanan.  They both ruled around 180 A.D. There are references to Gajavāhu in Silapathikāram.  Cheran Chenguttavan’s rule has been calculated to be from 170 – 225 A.D. We have information of the Chera line of kings.  This computation based on Gajavāhu I is a well known method called ‘Gajavāhu Synchronism’.

2. Accounts of Graeco-Roman authors – The Greek and Roman trade is well described in the early Tamil texts.  The poems speak of Yavanas and their ships, of their gold coins and their wine.  There are 10 references to Yavanas in Sangam poems. Mullaipāttu 61,  66, Perumpānatrupadai 316, Pathitrupathu II, Akam  57, 149, Nedunalvādai  31, 101, Purananuru 56 and 353.  The Yavanas served as body-guards to the Tamil kings (Mullaipāttu).  They bought black pepper and paid in gold (யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – Akam 149), they made the pavai vilakku lamps that we still use in Tamil Nadu  – (யவனர் இயற்றிய வினைமாண் பாவை கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து யவனர் இயற்றிய வினைமாண் பாவை கை ஏந்தும் ஐ அகல் நிறைய நெய் சொரிந்து – Nedunalvādai), they also made the ‘annam kuthu vilakku’ that we still use to this day (யவனர் ஓதிம விளக்கின் உயர் மிசைக் கொண்ட – Perumpānatrupadai 316, ஓதிம is another word for அன்னம்).

It has been determined by scholars that the Greek and Roman trade could not have contined after the 2nd – 3rd century.  Sangam Tamil country was well known to Pliny the Elder (75 A.D.), Ptolemy (130 A.D.), and to the anonymous author of Periplus Maris Erythraei (240 A.D.).   Scholarly books that have researches these ancient trades are, ‘The Commerce between the Roman Empire and India’ by E. H. Warmington, ‘Trade Routes and Commerce of the Roman empire’ by M. P. Charlesworth, ‘Foreign Notices of South India’ by K. A. Nilakanta Sastri, ‘Arikkamedu: An Indo Roman Trading Station on the East Coast of India’ by Sir Mortimer Wheeler, A. Ghosh and Krishna Deva and others.

3. Tamil and Sanskrit Scholarly Analysis – Scholars in both Tamil and Sanskrit are able to estimate the dates of the Sangam poems by analyzing the amount of  northern language words (Prakrit and Sanskrit) that have entered into the poems.  Tamil words have entered Sanskrit and Prakrit literature.

4. Poets and Kings – Poets sang for kings in Puranānuru. Sometimes, more than one poet would sing for a king.  One of them would sing for another king or two and we know that they were all comtemporaries. Dr. Ralston Marr has done a lot of research about poets and kings.

5. The Satavāhanas were a powerful Andhra dynasty.  They ruled from 230 B.C. until the beginning of the 3rd century A.D. In a Satavāhana coin from King Siri Satakani (about 170 A.D.) , one side has Brahmi script. The other side has Tamil text also in Brahmi script, showing that Tamil was the lingua franca of the South at that time.

6. Religions in Sangam Books – The Tamils were a totally secular culture before the arrival of Budhism, Jainism and Hinduism.  The Tamil scholar Kailasapathy has conclusively proved that the oral bardic secular tradition is the basis of Sangam Tamil poetry.  These poems are pre-eminently of this world.  They make no allusions to supernatural matters.  There are rituals like the veriyāttam, but there are no concepts of any religion.  This original secularism that is unique to Sangam Tamil disappears over time and religious literature appears.  The earlier books have traces of religion and no more.  Then Buddhist and Jainism is seen a little bit. Finally, Hinduism arrives.  The later books like Kalithokai, Murukātrupadai and Paripādal have Hindu religious influences.  This is another tool used by scholars.

7. The Anthology layers – The anthologies have a range  as far as the dates go, since they are each a collection of poems written by many poets.  There are some poems which belong to the earliest layers, some belong to the middle layers and some belong to the later layers.

Dates for the books – Conclusions drawn by Kamil Zvelebil: Dr. Kamil Zvelebil writes that the bulk of the Sangam poems are from as early as 100 B.C. and upto 250 A.D. Parts of Tholkāppiyam are possibly the earliest, and they date to 100 B.C. These are the first two books of Tholkāppiyam – Eluthathikaram and Solathikaram.   Parts of Porulathikaram could have been written around the 3rd or even the 4th century.

The earliest poems of the following anthologies: Ainkurunuru, Kurunthokai, Natrinai, Pathitrupathu, Akanānuru and Puranānuru.  The Lays are later than most of the anthologies and the possible order is Porunarātrupadai, Perumpānātruppadai, Pattinapālai, Kurinjipāttu, Malaipadukadām, Nedunalvādai, Mathuraikānchi, Mullaippāttu and Sirupānātrupadai.

Layers of time: Not all the poems in the anthologies were written at the same time.  There are layers of time.

Ainkurunuru, Kurunthokai, Natrinai, Puranānuru and Akanānuru – 1st century B.C. – 2nd century A.D. Pathupāttu songs Porunarātrupadai, Perumpānātrupadai, Pattinapālai and Kurinjipāttu – 2nd – 3rd century A.D. Parts of Kurunthokai, Natrinai, Pathitrupathu, Akanānuru, Puranānuru, Malaipadukadām, Mathuraikānchi, and Nedunalvādai are between the 2nd – 4th century A.D.   Mullaipāttu and Sirupānātrupadai  are between 3rd – 5th century A.D.  Kalithokai (the Kapilar who wrote in Kalithokai is not the one who wrote in Ainkurunuru, Kurunthokai, Natrinai and Puranānanuru, since the first Kapilar wrote a few centuries before this one), Paripādal and Murukātrupadai belong to the 5th century.

Other Dravidian literature came much later.   The one that came after Tamil is Kannada, and that did not happen for at least 1,200 years.  To quote Kamil Zvelebil, “the first narrative Kannada literature  is Sivakōti’s Vaddārādhane in 900 A.D.  Telugu literature as we know it begins with Nannaya’s translation of Mahabharatha in the 11th century A.D.  In Malayalam, ‘Unnunīli Sandēsam, an anonymous poem of the 14th century, is based on the models of sandēsa or dūta poems;  its very language is true manipravālam, which is defined in the earliest Malayalam grammar  (15th century Lilāthilakam) as the union of Malayalam and Sanskrit”.

Influence of Sanskrit:  There is another important difference between Tamil and the other Dravidian literary languages:  the metalanguage of Tamil has always been Tamil, never Sanskrit.  As A.K. Ramanujan says (in Language and Modernization, p. 31), “In most Indian languages, the technical gobbledygook is Sanskrit;  in Tamil, the gobbledygook is ultra-Tamil’.  Kamil Zvelebil explains that there are traces of Aryan influence in early Tamil, just as the very beginnings of the Rigvedic hymns show traces of Dravidian influence.  In his words from the book ‘The Smile of Murugan’,  “Historically speaking, from the point of development of Indian literature as a single complex, Tamil literature possesses at least two unique features.  First, it is the only Indian literature which is, at least in its beginnings and in its first and most vigorous bloom, is almost entirely independent of Aryan and specifically Sanskrit influences.  Second, Tamil literature is the only Indian literature which is both classical and modern, while it shares antiquity with much of Sanskrit literature and is as classical, in the best sense of the word, as e.g. the ancient Greek poetry, it continues to be vigorously living modern writing of our days”.

http://sangamtamilliterature.wordpress.com/dates-of-the-sangam-books/

http://learnsangamtamil.com/



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Sanskrit words in Tamil

 From the Book ‘Dravidian Borrowings from Indo-Aryan’ by M.B. Emeneau, and T. Burrow, University of California, Berkeley, California

http://dsal.uchicago.edu/dictionaries/burrow/ - online etymological dictionary

Very few of these words can be seen in Sangam literature.  Dr. Hart says in his book that Thirumurukatrupadai which is one of the later Sangam books has less than two percent of Sanskrit words. These words came to us later through Prakrit and Sanskrit.  In fact, I’ll be adding the Sangam Tamil words in due course, for these loan words, if available – like  வேல் for  ஈட்டி (Sanskrit) .

Emeneau was a Dravidian and Sanskrit language scholar. He has done extensive research in many Dravidian languages including  Tamil, Brahui, Kodagu and Toda. He has lived in Tamil Nadu for a few years while doing his research. He has written about loan words from Sanskrit and Prakrit to Tamil and from Tamil to Sanskrit and Prakrit.  Please see the page titled ‘Tamil Words in Sanskrit”.

The Words are in Tamil, with meanings for difficult words and Sanskrit is implied by Skrit,  Prakrit by Prak, Hindi by H

அகங்காரம் -  Skrit ahamkaara
அகத்தியம் (கண்டிப்பாக) -  Skrit agati
அக்கிரமம்  -  Skrit akrama
அக்கி (தீ)  – Skrit agni, Prak aggi
அச்சன்  (father) – Skrit aarya, Prk ajja
அசட்டை  – Skrit asraddha, Prak asaddha
அக்கு (axle) – Skrit aksa, Prak akkha
அதிசயம் – Skrit athisaya
அதிட்டம் (unseen) – Skrit – adrsta, Prak addittha
அத்துவானம் (ruins, பாழ்) – Skrit adhvan
அந்தஸ்து – Skrit antahstha
அந்தி (twilight) – Skrit samdhi
அப்பட்டம் (pure) – Skrit asprsta
அப்பணை (command) – Skrit arpana, Prak appana
அரசன் - Prak raja, Skrit Rajan
அமையம் (opportunity) – Skrit samaya
அம்பாரம் – Skrit ambarisa, Prak ambadaga
அரங்கம் (island) – Skrit lanka
அரண் அரணம் – Skrit sarana
அர்த்தம் – Skrit artha
அருக்கம் (crystal) – Skrit arka
அந்திகொட்டை (cashewnut) – Skrit asti, Prak atthi
அல்லம் (ginger,இஞ்சி) – Skrit adraka, Prak allaa
அவகடம் (Evil act, தீச்செயல்) – Skrit apakrta, Prak apakata
அவசரம் – Skrit avasara
அவதி – Skrit avadhi
அவந்தரை (slander; பழி) – Skrit abandhuram
ஆகடியம் (banter, பரிகாசம்) – Skrit apakrta, Prak apakata (same as for Tamil அவகடம்)
ஆசாரி, ஆச்சாரி – Skrit aacaarya
ஆடி (Tamil month) – Skrit asaadhaa
ஆணை (command) – Skrit aajnaa, Prak aanaa
ஆதேசம் (rule) – Skrit aadesaa
ஆத்திரம் (anger) – Skrit aathura
ஆபாசம்  – Skrit aabhaasa
ஆயிரம் – Skrit Sahasra
ஆர்ச்சனம் (acquisition, சம்பாத்தியம்) – Skrit arj
ஆலை (factory, stall) – Skrit saalaa
ஆவணி – Skrit Shravana
ஆஸ்தி – Skrit astimat
ஈட்டி – Skrit rsti -  (வேல் in Sangam Tamil)
இட்டிகை – (Bricks, செங்கல்) – Skrit istakaa, Prak itthagaa
உக்கிராணம் (storekeeper) – Skrit ugranaa
உதி, உதய – Skrit udi, udaya
உத்தரவு – Skrit uttara
உதகான்னம் (food and drink) – Skrit Udaka
உத்தியோகம் – Skrit udyoga
உன்னம் (இலவம்பஞ்சு) – Skrit unnaa
உப்பரிகை (upper level, மேல் மாடி) – Skrit Upakaarikaa
உரு – Skrit rupa
ஊமத்தை (plant) – Skrit ummatta
உலகம் – Skrit uloka
உவா (Full moon – பௌர்ணமி) – Skrit upavaasa, Prak ovaasa
ஏணி – Skrit sreni, Prak seni
ஒட்டன் (diggers) – Skrit odra
ஒய்யாரம் – Skt vihara
ஓசன் (teacher; ஆசாரியன்) – Skrit Upadhaya
ஓணம் – Skrit srona, sravana (see Tamil ஆவணி)
ஓளி (continuous row, ஒழுங்கு) – Skrit aavali
காஞ்சம் – Skrit kamsa
கட்டை (wood) – Skrit – kastha, Prak kattha
கணக்கு – Skrit ganaka
கண்டம் (critical period) – Skrit ganda
கண்டி கண்டிப்பு – Skrit khand
கத்திரி – Skrit Kartari, Prak kattari
கபடு (deceipt) – Skrit Kapata, Prak kavada
கம்பளி (blanket) – Skrit kambalaka
கம்பு (post, stake) – Skrit skambha, Prak Khambha
கம்மி  – Persian through H
கர்மம் – Skrit karman
கவடி (cowry shell) – Skrit kaparda Prak kavadda, kavaddia
கவாடம் (bullock cart load) – H kabaar
கவுண்டன் – Skrit grdhra, Prak gaddha, giddha – same root word for Badaga and Gowda
கருடன் – Skrit grdhra, Prak gaddha
கனி (mine, quarry) – Skrit khani
கன்னி – Skrit kanya, Prak kanna, kannaa
காகிதம் – Persian through H
காணம் (oil press) – Skrit ghatana,  Prak ghaana
காண்டம் (rod, stem) – Skrit kanda
காயம் – Skrit ghata, Prak ghaa
கரகம் – Skrit garunda
காரணம் – Skt kaarana
காரியம் – Skrit kaarya
காரை (mortar, plaster for buildings) – H gaaraa
கார்த்திகை – Skrit kaarttika
காலம் காலை (time) – Skrit kaala
காவடம் (distance of abotu 10 miles) – Skrit kavyuthi
கிடிகி (window) – Skrit khatakkikaa, Prak khadakki
கிட்டம் (sediment) – Skrit kittaa, Prak kittaa
கீடம் (Worm, புழு) – Skrit kitaa
கீர்த்தி – Skrit keerthi
குத்தகை – Skrit kutta
குப்பாசம் (coat, bodice) – Skrit kurpaasa
குப்பி (cowdung) – Skrit gorvara, Prak govvara
குப்பி (bottle) – H kuppi
கும்பகாரன் (potter) – H kumhaar
குலம் – Skrit kula
கேவு, கேள்வு, கேர்வு (shipping charges) – Skrit ksepa
கேலி – Skrit keli
கொட்டாரம் (storeroom) – Skrit kostha, kosthaagaara
கொத்தமல்லி – Skrit kusthambari
கோதுமை – Skrit godhuma
கோமரம் (posessed by spirits) – Skrit kumaara (boy) for Murugan,  kaumaara,
கோலி (jujube, மலை இலந்தை) – Skrit koli
சாகாடு (cart) – Skrit sakata, sakati, Prak sadadi, saada
சங்கிலி – Skrit srnkhala, Prak sankhalaa
சதுரம் – Skrit catur
சந்து – Skrit samdhi
சந்தை – Skrit sansthaana
சப்பரம் – Skrit Chattvara
சம்பளம் – Skrit sambala
சம்பளி (Betel pouch; வெற்றிலைப்பை) – Skrit samputaka
சராகை (Metal cup; வட்டில்) – Skrit saraka
சல்லி (lie, பொய்) – Skrit H jali
சாவுக்கம் (piece of cloth) – Skrit catuska
சாடி – H saadi
சாணி (cowdung) – Skrit chagana, Prak chagana
சாணை (grind, sharpen) – Skrit saana
சாதம் – Skrit prasaada
சாமி – Skrit svaamin, Prak saami
சாமை (millet, தினை) – Skrit syaamaaka, Prak saamaa
சாராயம் – Skrit saara
சுரிகை (dagger) – Skrit ksurikaa, Prak chura
சுள் (little) – Skrit ksulla, Prak chulla
ஊசி – Skrit suci, Prak sui
சூது – Skrit syuta, Prak juda, jua
செக்கு – Skrit cakra, Prak cakka
செட்டி – Skrit sresthin
செட்டி (wrestler) – Skrit jyestha
சொந்தம் – Skrit sva
சோடி – H jor
சோதிக்க (examine) – Skrit sudh, sodhay
நியாயம் – Skrit nyaaya
தவலை (metal pot) – Skrit tap
தாம்பூலம் – Skrit taambula
தர்க்கம் – Skrit takra, Prak takka
தர்ப்பை – Skrit darbha, Prak dabbha
தளம் (thick board) – Skrit drdha, Prak drdha
தளம் (army) – Skrit dala
தளி (temple) – Skrit sthali
தரை – Skrit dharaa
தாசி – Skrit dasi
தாம்பாளம் – Skrit taamra (copper)
தாவளம் (shelter) – Skrit sthaaman
திக்கு – Skrit dis
திரு – Skrit Shri
துதி  – Skrit stuti
துரை – Skrit dhurya, Prak dhoreya
தேதி – Skrit tithi
தேவதாசி – Skrit devadasi
தேவன் தெய்வம் – Skrit deva, daivya, Prak deva, devva
தோணி – Skrit droni
நகை – Skrit naga
நங்கூரம் – Skrit naagara
நாடி – Skrit naadi
நாணயம் – Skrit naanaka, Prak naanaka, naanaga
நிசம் – Skrit nija
நியமி – H niyam
பக்கம் – Skrit paksa
பட்சி – Skrit paksin, Prak pakkhi
பங்குனி – Skrit phaalguna
பட்டு – Skrit pata
படி – Skrit path
படிகம் – Skrit prathigraha
படை (offer) – Skrit vrdh
பட்டம் – Skrit patta
பட்டயம் – Skrit pattisa
பட்டன் – Skrit bhrastra
பணம் – Skrit pana
பண்டாரம் – Skrit pindara
பந்தி – Skrit pankti
பராமரி – Skrit paraamrs
பலகை – Skrit phalaka, Prak phalaga
பாகார் (fort) – Skrit
பாகு – Skrit paaka
பாடகம் – Skrit Paadakaataka
பாவம், பாபம் – Skrit paapa
பிட்டு – Skrit pistaaka
பித்தளை – Skrit pittala, Prak pittala
பூரி (happy, fill up) – Skrit puray
பொட்டணம்- Skrit pottala
போகம் – Skrit bhoga
மதி (esteem) – Skrit mati
மதுரம் – Skrit madhu
மத்தளம் – Skrit mardala
மரியாதை – Skrit maryaada
மாசி – Skrit magha
மாரி (Durga) – Skrit maari
மானம் – Skrit maana
முண்டம் – Skrit munda
மோசம் – Skrit mrsa, Prak mosa
லத்தி (cowdung) – Prak laddi
வக்கணம் (taunt) – Skrit vyakhyaana
வட்டம் – Skrt vaata
வட்டகை (small bowl) – Skrit vrttaka
வர்ணம், வண்ணம் – Skrit varna
வாடகை – Skrit bhataka
வாத்து – H batak from Persian batak
வேளை – Skrit velaa



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

When analyzing Tamil kingdoms with Mauryan empire, period could be around 500 years from 3rd century BC till 2nd century AD

The key elements for comparison should be Language, Culture, Religion and Trade relationships

Sanskrit is not being used by Mauryan empires, Sanskrit came as a written form later than 3rd century AD (after the fall of Mauryan empire) hence comparing Tamil with Sanskrit languages while analyzing history of 3rd century BC till 2nd century AD is out of syllabus

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

Prakrit is the spoken common form of Sanskrit. Entire Asokan inscriptions of Asoka leaving Mysore is in Prakrit.

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard