New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்
Permalink  
 


வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்

 

சாரு நிவேதிதாவின் தடாலடி சாய்பாபா சந்திப்பு பரவசத்தை முன்வைத்து நேசகுமார் எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படியாகவும், சிந்தனையைத் தூண்டுவதாகவும் இருந்தது. சில விமரிசனங்கள்.

// வேதத்தின் முடிவு, சிகரம் என்றெல்லாம் புகழப்படும் வேதாந்தத்தின் மீது எனக்கு அபரிதமான மரியாதை உண்டு. ஆனால், வேதங்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்ததில் எனக்கு இது நமக்கு விளங்காத விஷயம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். // 

நேசகுமார், இதை நீங்கள் சொல்வது எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. குரானையும், ஹதீஸ்களையும், பற்பல இஸ்லாமிய இலக்கியங்களையும் சளைக்காமல் படித்துக் கரைத்துக் குடித்திருக்கும் நீங்கள் இந்த முயற்சியில் அயர்ந்து விட்டீர்களா? ஒருவேளை மேற்சொன்ன நூல்கள் போன்று “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” (literally) என்று உள்ள சமாசாரங்களை நீங்கள் மிக அதிகமாகப் படித்துவிட்ட பழக்க தோஷத்தால், பல தளங்களையும், பற்பல படிமங்களையும், பல்வேறு அதீத உருவகங்களையும் உள்ளடக்கிய ஆகத் தொன்மையான வேத இலக்கியத்தை நிதானமாகப் படிக்கப் பொறுமை இல்லாமல் போய்விட்டதோ?

// சாருவைப் போன்று வேதங்களை திட்டத் தோன்றாததற்குக் காரணம் – உபநிஷத்துக்கள். வேதத்தின் சாரமென்று சொல்கிறார்களே அந்த உபநிஷத்துக்கள் உன்னதமானவை, இந்த பூமியில் என்றோ இத்துனை உயர் கருத்துக்களை சிந்தித்து போதித்துள்ளார்களே, அந்த முன்னோர்களை , மகான்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். அதே சமயம், வேதத்தின் பக்கம் போக வேண்டாம். உபநிஷத்துக்களுடன் நமது தேடலை நிறுத்திக்கொள்வோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். // 

உபநிஷதங்களும் வேதத்தின் பகுதி தான் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள். அதனால் இங்கே ‘வேதங்கள்’ என்று நீங்கள் சொல்ல வருவது சடங்குகள் மற்றும் தேவதைகள் பற்றிப் பேசும் கர்மகாண்டப் பகுதியை என்று எடுத்துக் கொள்கிறேன்.

நான்கு வேதங்களிலும் சம்ஹிதா (துதிப் பாடல்கள்), பிராமணம் (யாக செயல்முறைகள்), ஆரண்யகம் (விளக்கங்கள்), உபநிஷத் (தத்துவம்) என்ற எல்லா பகுதிகளும் உள்ளன. மந்திரங்கள் ரிஷிகளின் மெய்யுணர்வில் உதித்த காலத்தில் இந்த எல்லாப் பகுதிகளிலும் உள்ள பாடல்கள் ஒன்று கலந்தே வந்தன. இத்தகைய பகுப்புகள் பின்னால் வேதவியாசரால் உருவாக்கப் பட்டவை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உபநிஷதம் ஓரளவு படித்தவர்கள் கூட அது வேத கர்மகாண்டத்தினின்றும் வேறானது அல்ல, மாறாக அதன் தொடர்ச்சி, வளர்ச்சி, முதிர்ச்சி என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் இருவருமே இக்கருத்தைக் கூறியுள்ளனர். சுவாமி விவேகானந்தர் வேத சம்ஹிதைப் பகுதியில் இருக்கும் ஒரு பகுதியில் உள்ள வாசகத்தினை சுழுமுனைக்கு குறியீடாக தமது இறுதி நாளில் சீடரிடம் பேசினார். ஸ்ரீ அரவிந்தர் இன்னும் ஒருபடி மேல் சென்று சம்ஹிதை மந்திரங்களில் எல்லாம் கூட அடிநாதமாக இருப்பது உபநிஷதங்களின் வேதாந்தம் தான் என்கிற கருத்தை மிக அழுத்தமாகக் கூறுகிறார். இந்த கருத்து அடங்கிய அவரது “Hymns to the Mystic fire” என்ற நூல் மிகவும் புகழ்பெற்றது.


twobirds.jpg



உதாரணமாக, உபநிடதத்திலேயே மிகவும் அழகான இரட்டைப் பறவை படிமம் ரிக் வேதத்திலேயே (ரிக், 1.164) கூறப்பட்டுள்ளது. “அரச மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரே மாதிரியான இரு பறவைகள்: ஜீவன் மற்றும் பரமாத்மா” என்ற இந்த வேதப் படிமமே முண்டக உபநிஷதத்தில் இன்னும் அழகாக வளர்த்தெடுக்கப் படிகிறது : இவற்றில் ஒரு பறவை இனிப்பும், கசப்புமான பழங்களைத் தின்று கொண்டிருக்கிறது, இன்னொன்று அமைதியாக உட்கார்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதை முழுதாக உணர்வதற்கு சம்ஹிதை மந்திரங்களின் கவிதைகளில் பொதிந்துள்ள குறீயீடுகளுடன் பரிச்சயம் வேண்டும். இது இல்லாவிட்டால் பல ஆரம்பகால ஐரோப்பிய மொழிபெயர்ப்பாளர்கள் பல வேத சம்ஹிதை மந்திரங்களுக்கு அபத்தமும், அனர்த்தமும், அதிபயங்கர ஊகங்களும் கலந்து அளித்தது போன்ற, பல சமயம் சம்பந்தமே இல்லாத, மேம்போக்கான பொருள் தான் இருப்பதாகத் தோன்றும்.

கீதை உபநிஷதங்களின் சாரம். யோகம் பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தை அது அளிக்கிறது. இதே கருத்துக்கள் உபநிஷதங்களில் பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன, சில நேரிடையாக இல்லாமல் மறைபொருளாக உள்ளன. இதை அப்படியே நாம் உபநிஷதங்களின் முன்னோடியான வேத சம்ஹிதைகளுக்கும் பொருத்தலாம். துதிப் பாடல்களால் ஆன ரிக்வேதம் பக்தியோகத்தையும், யாக யக்ஞங்கள் பற்றி அதிகம் பேசும் யஜுர்வேதம் கர்மயோகத்தையும், இசைவடிவான சாம வேதம் ஞான யோகத்தையும் குறிப்பதாக சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்

// திருவிடைமருதூர் கோவில் வாயிலில் பிரம்மஹத்தி உட்கார்ந்து கொண்டிருக்கும். நமது கண்ணுக்குப் புலப்படா தலித்ஹத்திகள் ஒவ்வொரு கோவில் வாயிலிலும் அமர்ந்து கொண்டிருக்கின்றன. பிராம்மணக் கொலைகளுக்காக பிரம்மஹத்திகள் நம்மை பிடிப்பது பொய்யாகக் கூட இருக்கலாம், ஆனால் இந்த தலித்கத்திகள் இருப்பது நிஜம். தலித்ஹத்திகள் நம்மை விரட்டுமுன், நாமே முன்வந்து மாற்றங்களைச் செய்தல் நலம்.//

மிக அழகான ஒப்புமை. “தலித்ஹத்தி” என்ற பதப் பிரயோகத்தை மிகவும் ரசித்தேன். உங்கள் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

// இந்து மதத்தில் இதுதான் பிரச்சினை. வேதத்தில் என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது? எதற்கு ஒரு ஜாதி மட்டுமே படிக்க வேண்டும், பாராயணம் செய்ய வேண்டும்? … பெருவாரியான சனங்களுக்கு போய்ச்சேராத வேதங்களும், ஆகமங்களும், உபநிஷத்துக்களும், அறுவகைத்தத்துவங்களும் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன. //

இங்கு மறுபடியும் தவறு செய்கிறீர்கள் நேசகுமார். ஒரு உணர்ச்சி மேலீட்டில் இதை எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.


pic10.jpg



வேதம் ஒரு குறிப்பிட குழுவுக்கு மட்டும் உரியது என்ற கருத்து வேதங்களில் எங்குமே இல்லை. வேலைக்காரப் பெண்ணுக்குப் பிறந்த சத்யகாம ஜாபாலன் கதையை உபநிஷதத்தில் படித்திருப்பீர்கள். வேதங்களைத் தொகுத்த வியாசரே மீனவப் பெண்ணின் மகன் தான். சுக்ல யஜுர் வேதத்தின் இந்த மந்திரத்தை எடுத்துக் காட்டி சுவாமி விவேகானந்தர் இதனை அழகாக விளக்குகிறார்.

"yathA-imAm vAcham kalyaNIm AdadAmi janebhyah;
Brahma-rAjanyAbhyAm sUdrAya cha AryAya cha svAya-chAraNAya cha" 

Just as I am speaking these blessed words tothe people, 
in the same way you also spread these words among all men and women -
the Brahmanas, kshtriyas, vysayas, Sudras andall other, 
whether they are our own people or aliens.

வேத ரிஷி கூறுகிறார் - “(சீடர்களே) நான் உங்களிடம் இந்த நலம் பயக்கும் வேத மந்திரங்களைக் கூறியது போலவே, நீங்களும் பிராமணர், அரசர், வைசியர், சூத்திரர் எல்லா மக்களிடத்திலும் இவற்றைப் பரப்புங்கள். நம் மக்களாயினும் சரி, வேறு மக்கள் ஆயினும் சரி, எல்லாரிடமும் இச்சொற்களைப் பரப்புங்கள்"

செவிவழியாகவே கற்றுக்காக்க வேண்டிய கட்டாயத்தால் காலப்போக்கில் அது ஒரு குழுவின் சொத்தாகிப் போயிருக்கலாம். வேதத்தை முதல் மூன்று வர்ணங்களுக்கு மட்டும் என்று பிறகு வந்த மனு ஸ்மிருதி ஒதுக்கிற்று, பின்னர் காலத்தின் கோலத்தால் அது ஒரு ஜாதியில் உள்ள சிலருக்கு மட்டும் என்று ஆயிற்று. ஆனால் அதன் நுட்பங்கள், மெய்ஞானம், கருத்தியல் யாவும் பெருவாரி மக்களைப் பல விதங்களில் சென்று சேர்ந்தே இருக்கிறது. திருவைந்தெழுத்து மந்திரம் போதும், அதைவிடப் பெரியது வேதத்தில் என்ன இருக்கிறதென்று சில அரைகுறைச் சைவர்கள் கேட்கலாம். ஆனால் முழுதுணர்ந்த சைவர்கள் வேதரத்தினமான பஞ்சாட்சரம் கிருஷ்ண யஜுர்வேதத்தின் ரத்தினமான ஸ்ரீருத்ரம் என்ற துதியின் மையத்தில் ரத்தினம் போன்று திகழ்கிறது என்று அறிவார்கள். கார்காத்த வேளாளர் நற்குடியில் அவதரித்த அப்பர் பெருமான் இந்த ஸ்ரீருத்ரம் என்ற உத்தமமான துதியின் சாரத்தையே நின்ற திருத் தாண்டகமாகப் பாடினார்.

வேதக் கருத்துக்கள் அவரவர்களது மொழிகளில் மக்களைச் சென்று அடைந்திருக்கின்றன எனபதே உண்மை. பல இந்திய மொழிகளிலும் உள்ள பக்தி இலக்கியம் உள்ளிட்ட பல பழைய, புதிய இலக்கியங்களை நான் படிக்கையில் இந்த எண்ணம் வலுப்பெற்றுக் கொண்டே தான் வருகிறது. பிராமணர்களது ஆதிக்கத்தையும், சாதி வெறியையும் முனைந்து எதிர்த்த கன்னட வீரசைவ பசவேஸ்வரர் கூட தத்துவம் என்று வருகையில் முழுக்க முழுக்க உபநிஷதங்களின் உபதேசத்தையே சொல்கிறார், வேதங்களை எதிர்த்தாரில்லை. திருமந்திரமும், சித்தர் பாடல்களும், வள்ளலாரும், தாயுமானவரும் அப்படியே.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சொல்லப் போனால் இப்படி நீங்கள் பேசுவதும் உங்களுடைய மேட்டிமை சிந்தனை என்பேன். ஓஷோ யோகம் பயிலும் போது தாம் தொடக்க நிலையில் சமாதி அடைந்த போது தம் உயிர் போகாமல், அவர் என்ன நிலையில் இருக்கிறார் என புரிந்து கொண்டு ஒரு மாடு மேய்க்கிற பெண் காப்பாற்றியதை குறிப்பிடுகிறார். இந்த யோக முறை குறித்து அந்த பெண்ணுக்கு தெரிந்திருந்தது குறித்து ஆச்சரியமடைகிறார். அதே போல பஞ்சாட்சர மந்திரம் சொல்லி விபூதி அணிவதால் விபூதிக்கே பஞ்சாட்சரம் என்று ஒரு பெயர் உண்டு. பல பண்டிதர்களுக்கே தெரியாத விசயம் இது. திருமுருக கிருபானந்த வாரியார் ஒருமுறை ஒரு கோவிலுக்கு போய்கொண்டு திரும்பிக்கொண்டிருந்த போது ஒரு தலித் பெண்மணி அவரிடம் சர்வ சாதாரணமாக "ஓய் சாமி எனக்கு பஞ்சாட்சரம் கொடுத்துட்டு போ" என்றாராம். வாரியார் சுவாமிகள் திக்கித்து போய் நின்றுவிட்டாராம். பிறகு திருநீறு கொடுத்துவிட்டு வந்தாராம். தமது சுயசரிதையில் கூறுகிறார். ஐயா வைகுண்டர் எந்த வேதமும் படிக்கவில்லை ஆனால் அவருடைய பல வாசகங்களில் வேத எதிரொலியை காணமுடியும். நாராயணகுரு மருத்துவ ஈழவ (நாவிதர்)குலத்தை சேர்ந்தவர் ஆனால் அவருக்கு எளிதாக (அந்த சாதீய அமைப்பிலும் அதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை) ஆறுவகை தத்துவங்களையும் வேதோபநிடதங்களையும் பயில முடிந்ததே!

ஆன்மிகத் தளத்தில் மட்டுமல்ல, இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்திலும் இருப்பவை வேதக் கருத்துக்களே அல்லவா? “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்று குழந்தைகளுக்கு இயல்பாகவே ரத்ததோடு ஊறி வரும் கருத்தின் முதல் துடிப்பு எது? “மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ” என்ற வேத வாசகங்களே அல்லவா? “தாய் மண்” (இந்தச் சொல் கண்டிப்பாக அரபியில் இருக்காது என்று சொல்லலாம்) என்று நம் மொழியிலேயே கலந்து விட்ட அந்த உணர்வு எங்கேயிருந்து வந்தது? “மாதா பூமி: புத்ரோஹம் ப்ருதிவ்யா” (இந்த பூமி என் தாய், நான் அவள் அன்பு மகன்) என்ற வேத ரிஷியின் வாக்கு தானே அது?

நமக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தவர் செய்வது போல வழவழ கண்ணாடி பேப்பரில் வேதத்தை பிரிண்ட் போட்டு கொடுக்க முடியவில்லையாக இருக்கலாம். ஆனால் எத்தனை எத்தனையோ மகான்கள், சித்த புருசர்கள், கோவில் சிலைகள் முதல் தெருவோர சாந்து பூசிய கம்பங்கள் வரை மாலையிட்ட சுமைதாங்கிகள் வரை வேதத்தினை, வேதத்தின் சாறினை, வேத முடிவில் நடம் நவிலும் விமலத்தை நம் 'பாமர' மக்களுக்கு அளித்துக்கொண்டுதான் வருகின்றன.

இவ்வளவும் சொன்னது எப்படி வேதக் கருத்துக்கள் தாமாகவே பல வடிவிலும் மக்களைச் சேர்ந்தடைந்துள்ளன என்று காட்டுவதற்காகத் தான். வேதத்தை அதன் மூல வடிவிலேயே பலதரப் பட்ட மக்களும் பயில்வதும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது, இது மேன்மேலும் பெருக வேண்டும். எல்லாத் தரப்பினரும், வேத ஞானத்தின் பங்கு தாரர்கள். வேத ஞானம் உலகம் முழுவதற்கும் உரியது, தேவையானதும் கூட.

(இங்கே பயன்படுத்தியுள்ள சில குறிப்புக்களைத் தந்து உதவிய, தங்கள் பெயர்களைக் குறிப்பிட விரும்பாத இரு இணைய நண்பர்களுக்கு மிக்க நன்றி).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ரிக் வேதத்தில் ஒரு புதிர்!

vedas-by-the-great-priests-

Research Paper written by London Swaminathan
Post No. 1331; Dated 6 October 2014.

உலகிலேயே மிகப் பழைய நூல் ருக் வேதம். இந்த இருக்கு வேதத்துக்கு கி.மு.1200 என்று மாக்ஸ் முல்லர் தேதி நிர்ணயித்தார். அதாவது 1200-க்கு முன்னால் இது இருக்க முடியும் ஆனால் 1200-க்குப் பின் இது இருக்கவே முடியாது என்றார். மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான பால கங்காதர திலகரும், ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே ஆராய்ந்து கி.மு 6000 என்று முடிவுக்கு வந்தனர்.

துருக்கியில் பொகஸ்கோய் என்னும் இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த களிமண் பலகைக் கல்வெட்டில் ரிக் வேத கால தெய்வங்கள் வேதப் பாடலில் என்ன வரிசையில் சொல்லப்பட்டதோ அதே வரிசையில் காணக் கிடக்கின்றனர். இந்தத் தொல் பொருட்துறைத் தடயம் கி.மு. 1380 ஆம் ஆண்டுக்குரியது. ஆக வேதத்தை யாரும் இதற்குக் கீழே இழுக்க முடியாது. இதற்கு முன்னர் இந்தியாவில் இருந்தது என்பதே உண்மை.

வேதம் என்பது மிகப்பல ரகசியங்கள் நிறைந்தது. இதை நன்கு உணர்ந்த சங்க காலத் தமிழர்கள் இதற்கு பரம ரகசியம் “மறை’ என்று பெயர் சூட்டினர். இதை எழுதக்கூடாது என்பதால் சங்க காலத் தமிழர் இதற்கு எழுதாக் கற்பு என்றும் அழகான பெயரைச் சூட்டினர்.

வெள்ளைகாரர்கள் ஆராய்ச்சி செய்யும்வரை இதற்கு பெரிய மதிப்பு இருந்தது. அவர்கள் ஆராய்ச்சி செய்தவுடன் பல பொய்யுரைகளைப் பரப்பினர். மற்ற மதத்தினருக்கு எல்லாம் ஒரே ஒரு நூல்தான். அந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்க ஒரு சில மணி நேரம் போதும். ஆனால் இந்துக்களின் புனித நூல்களோ பசிபிக் மஹா சமுத்திரத்தைவிடப் பெரியவை. ஆகையால யாரும் எல்லாவற்றையும் படிக்க முடியாது. இதைப் பயன்படுத்தி பல பொய்க்கதைகளைக் கட்டிவிட்டனர். இன்றும் கூட வேதத்தையோ, மஹாபாரதத்தையோ, வால்மீகி ராமாயணத்தையோ முழுக்கப் படித்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நான் நாற்பது ஆண்டுகளாகப் படித்துவருகிறேன். இன்னும் முடிந்த பாடில்லை. ஒன்பது திருமுறைகளைத் தமிழில் படித்தேன். அதில் கூட இன்னும் மூன்று திருமுறைகள் பாக்கி.

வேதம் பற்றி வெளி நாட்டினர் சொல்வதை நம்பக் கூடாது; அதை படிக்காமலேயே வெளி நாட்டினர் பெயரை மேற்கோள்காட்டி எழுதிவரும் திராவிடக் கோமாளிகள். மார்க்சிஸ்ட் கூத்தாடிகள், அதுகள், இதுகள் ஆகியோரை ஏன் நம்பக்கூடாது என்பதற்கு ஒரு நாலு வரி எடுத்துக்காட்டு தருகிறேன். இது போல நூற்றுககணக்கான ரகசியங்கள், புதிர்கள், விடுகதைகள் வேதத்தில் உண்டு.

ரிக்வேதத்தை பத்து மண்டலங்களாகப் பிரித்துக் கொடுத்தார் வியாசர் என்னும் மாமுனிவர். அவர் காலத்திலேயே இது கடல் போலக் கரை காண முடியாமற் போகவே அவர் கவலைப் பட்டு இவைகளைத் தொகுத்து வகுத்துக் கொடுத்தார். அந்த பத்து மண்டலங்களில் வாமதேவரிஷியின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நாலாவது மண்டலத்தில் உள்ளன. பல ஆய்வாளர்கள் இதுதான் மிகப் பழைய மண்டலம் என்றும் இன்னும் சிலர் இது பழமையான மண்டலங்களில் ஒன்று என்றும் பகருவர்.

vedic-mathes-001

இதிலுள்ள ஒரு பாடல் யாருக்கும் விளங்கவில்லை. எண்களை வைத்து வார்த்தா ஜாலம் செய்திருக்கிறார் புலவர் வாமதேவர். அவர் செய்த சொற் சிலம்பத்தை அவருக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த சிவவாக்கியர், திருமூலர் போன்ற தமிழ் சித்தர்கள் கூடப் பயன்படுத்தினர். அதாவது எண்களை வைத்து கவிதை அமைப்பர். அந்த எண்ணின் பொருள் என்ன என்பதை வியாக்கியானம் இல்லாமல் யாரும் அறிய முடியாது. இதோ வாம தேவரின் கவிதை:

அவருக்கு நான்கு கொம்புகள், மூன்று காலகள் அவரைத் தாங்கி நிறுத்தும். தலைகளோ இரண்டு, கைகளோ ஏழு! அவரை பிணைத்து இருப்பன மூன்று. அவர் பயன்கர சப்தத்துடன் செல்கிறார். அந்த மகத்தான கடவுள் மானிடருக்குள் புகுந்து விட்டார் – ரிக் வேதம் 4-58-3

இதற்கு வெள்ளைக்காரர்கள் பல விதமான பொருள் கூறினர். கிரிப்பித் என்பார் அவர்களின் கருத்துக்களை தொகுத்தளித்தார்.

வெள்ளைக்காரர்கள் எதற்கு வேதம் படித்தார்கள்?

இதில் பல்வகையான பேர்வழிகள் உண்டு. சிலர் நாடகம் சர்க்கஸ் பார்ப்பது போல வேடிக்கை பார்க்க வந்தோர்; இன்னும் சிலர் இதில் உள்ள அசிங்கங்களை உலகிற்குப் பறை சாற்றி இந்தியாவையும் இந்து மதத்தையும் வேருடன் பிடுங்கி எரிவேன் என்று வந்தனர். இன்னும் சிலர் ஏதொ பொழுது போவதில்லை, இதில் என்னதான இருக்கிறது என்று பார்ப்போமே என்று வந்தவர்கள்.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயக் கிழகிந்திய கம்பெனியிடம் கூலி வாங்கிக் கொண்டு வேதங்களை மொழிபெயர்க்க வந்த மாக்ஸ் முல்லர் ஆரம்பத்தில் வேதங்களைப் பற்றி “கன்னா பினா மன்னார் கோவில்” — என்று எழுதினார்’ படிக்கப் படிக்க ஞான உதயம் ஏற்படவே நடையை மாற்றிக் கொண்டார். மெகாலே போன்றவர்கள், “இதோ பார், இதே வேகத்தில் ஆங்கிலக் கல்வி பரவினால் இந்து மதமும் இந்தியாவும் அழியும் பிறகு நம் ஆதிக்கம் ஓங்கும்” — என்று பகிரங்கமாக அறிக்கை விட்டனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். யார் இந்த அறிஞர்கள்? உலகில் இந்துக்களைத் தவிர வேறு யாரையும் சீண்ட அஞ்சும் கோழைகள்!! வேறு எந்த மத நூலையும் ஆராயத் துணியாத கூலிப் பட்டாளம். இந்துக்களை “காபிர்கள், பேகன்”கள் என்று எள்ளி நகையாடிய வம்சத்தினர்! உலகம் கி.மு 4100 ஆம் ஆண்டில் தோன்றியது என்று பரப்பியவர்கள்! மது,. மாது, மாட்டு மாமிசம் ஆகிய மூன்றிலும் ஊறியவர்கள். ஆக ஆரம்பத்திலேயே உள் நோக்கத்துடன் வந்தது தெள்ளிதின் விளங்கும்.

பல அறிஞர்கள் நேர்மையாக ஒப்புக் கொண்டனர்; இந்த வேதப் பாடலின் பொருள் தெளிவில்லை, இந்தப்பாடலின் பொருள் விளங்கவிலை, இது எங்களுக்கு சுத்தமாகப் புரியவில்லை. இதை சாயாணாச்சாரியார் இப்படி விளக்குகிறார். ஆனால் அப்படி இருக்குமா என்பது சந்தேகமே – இப்படி எல்லாம் எழுதி தங்கள் அறியாமையைப் பிரகடனப்படுத்தினர். அவர்களுக்கு இருந்த நேர்மை கூட வேதத்தை வியாக்கியானம் செய்ய வந்த மார்க்சிஸ்ட் கோமாளிகளுக்கும், திராவிட பஃபூன்களுக்கும் இல்லை.

Vedas flow chart
சாயனர் விளக்கம்

வேதத்துக்கு முதல் முதலில் முழு அளவு பொருள் எழுதத் துணிந்தவர் சாயனர் என்னும் 14ஆம் நூற்றாண்டு அறிஞர். வேதம் தோன்றியதாக வெள்ளைக்காரர் போட்ட கணக்கிற்கும் இவருக்கும் இடையில் 2600 ஆண்டு இடைவெளி! ஆக சாயனரே தவித்தார். ஆனால் சாயனர் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர். மற்ற அறிஞர்கள் இந்து மதத்தை தகர்க்க வந்தவர்கள்.

அவருக்கு 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மஹிந்தரா என்ற அறிஞர் முயன்று பார்த்தார். இந்த நாலு வரிக்கு மட்டும் ஒவ்வொருவரும் சொல்லும் விளக்கத்தை பாருங்கள். பிறகு வெளி நாட்டுக் கோமாளிகள் எழுதிய நகைச் சுவைகளைப் படித்து நீங்கள் சிரித்து மகிழ ஆயிரக் கணக்கான பக்கங்கள் காத்துக் கிடகின்றன.

சாயனர் சொல்லுவார்:

இந்தப் பாடல் யாகத்தில் ஊற்றப்படும் நெய் அல்லது எண்ணை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது.
யாகம் என்று பொருள் கொண்டால் நான்கு கொம்புகள் என்பதை நாலு வேதங்கள் என்று கொள்ளலாம்;
மூன்று கால்கள் என்பதை நாள்தோறும் செய்யும் மூன்று யக்ஞங்கள் என்று கருதலாம்;
இரண்டு தலைகள் என்பதை பிரம்மோதன, ப்ரவர்க்ய சடங்குகள் என்று சொல்லலாம்;
ஏழு கைகள் என்பதை ஏழு யாப்பு அணிகள் என்று சொல்லலாம்
மூன்று பிணைப்புகள் என்பதை மந்த்ர, கல்ப, பிராமணங்கள் எனலாம்.

இதை ஆதித்யன் என்று பொருள் கொள்வோமானால்
நான்கு திசைகள், மூன்று என்பது காலை, மதியம், மாலை; இரண்டு என்பது பகலும் இரவும், ஏழு என்பது சூரிய ஒளியின் ஏழு நிறங்கள்; மூன்று பிணைப்பு என்பது பூர், புவ, சுவர்லோகம் எனப் பொருள் சொல்லலாம்.

இது சாயனர் வியாக்கியானம்.

rishi_vedas_text03

மகீதரர் சொல்வதாவது:
4 கொம்புகள்:–பெயர்ச் சொல், வினைச் சொல், முன்னிடைச்சொல், பின்/முன் ஒட்டு
3 கால்கள்:– மூன்று வேதங்கள், அல்லது 3 காலங்கள் அல்லது தன்மை, முன்னிலை, படர்க்கை
2 தலைகள்:– 2 யக்ஞங்கள் அல்லது செய்பவர், செயப்படு பொருள்
7 கைகள் :– 7 யாப்பு அணிகள் அல்லது 7 வேற்றுமை உருபுகள்
3 பிணைப்புகள்: 3 தினசரி யக்ஞங்கள் அல்லது ஒருமை, இருமை, பன்மை

வெளிநாட்டோர் விளக்கம்:

பேராசிரியர் வில்சன்: “வேத கால இரு பொருள் பேச்சுக்கும் தெளிவின்மைக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. வியாக்கியானக் காரகள் கஷ்டப்பட்டு பொருள் கறக்கிறார்கள். ( தனக்கு விளங்கவில்லை என்று ஒப்புக்கொள்ளாமல் வேத காலத் தெளிவின்மையைக் காட்டுகிறது என்று பழையை ரிஷிகள் மீது பழி போடுகிறார். இந்த அப்பாவி வில்சனுக்கு சிவவாக்கியர், திருமூலர், திருமழிசை ஆழ்வார் பாடல்கள் தெரியாது. பிழைத்தார்கள் தமிழ்ச் சித்தர்கள்!!!)

பேராசிரியர் லுட்விக்:–
சாயனர் இந்த ‘ரிக்’கின் முதல் வரிக்கே பல விளக்கங்களைக் கூறுகிறார். அதைத் திருப்பிச் சொல்லுவதில் பொருளே இல்லை. சம்பிரதாயமாக வரும் அர்த்தம் கூட நிச்சயமற்றதாக இருக்கிறது. சமுத்ரம் (கடல்), ஊர்மி (அலை) என்ற சொற்களுக்குக் கூட அவர் பலவிதப் பொருள்களை ‘’ இது அல்லது, அது அல்லது” என்று மாற்றி மாற்றிச் சொல்லிவருகிறார்.

இதை எல்லாம் தொகுத்தளித்த கிரிப்பித் இன்னும் ஒரு கருத்தை ஏ.ஹில்பிராண்ட் சொல்லியிரூபதையும் கோடி காட்டுகிறார்.

vedas music

இதிருந்து தெரிவதென்ன?

1.வேத கால இந்துக்கள் எழுத்தறிவற்ற காட்டுமிராண்டிகளோ மாடு மேய்க்கும் இடையர்களோ அல்ல. முழு முதற் கடவுளை உணர்ந்து மறை பொருளில் ஆடிப்பாடி மகிழும் பெரும் ஞானிகள் அவர்கள்
2.பிற்காலத்தில் திருமழிசை ஆழ்வார், சிவவாக்கியர், திருமூலர் போன்றோரும் வேத கால முனிவர் போல அடையாளபூர்வ, சங்கேத, பரி பாஷைகளைப் பயன்படுத்துகின்றனர். இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கியது வியப்பை ஏற்படுத்துகிறது.

3. வேதங்களுக்குப் பொருள் காண்பது மிகக் கடினம். சாயனர் போன்ற பெரியோர்களே இதுவா, அதுவா எனச் சந்தேகிக்கும் போது வெளியே இருந்து வந்த கலாசாரமே தெரியாத, மது, மாது, மாட்டு மாமிச அறிஞர் களையும், கடவுளே இல்லை — சமயம் என்பது ஒரு அபினி — புராண, இதிஹாசம் எல்லாம் வர்க்கப் போராட்டமே — என்று கூறும் அறிஞர்களையும் அவர்களுக்கு “உரிய இடத்தில்” வைக்கவேண்டும்.

4.சுதாச, திவோதாச என்னும் தாசர்கள் வேத காலத்தில் பெரிய பதவிகளில் இருக்கும்போது, தாசர், தஸ்யு, சிஸ்நதேவா: எனபதற்கு எல்லாம் விஷமத்தமான பொருள் கற்பிப்போர் ஏராளமான பாடல்களுக்குப் பொருள் தெரியாமல் திக்கு முக்காடி மூச்சுத் திணறிப் போகிறார்கள். அப்படிப்பட்ட ஆட்களின் பொய்மை வாதத்தின் பெயரில் ஒரு ஆரிய—திராவிடக் கொள்கை வேறு!!!

5.இந்த குறிப்பிட்ட நாலே வரிகளில் வரும் சமுத்ரம் (கடல்), ஊர்மி (பெண்களின் பெயர்; பொருள்: அலை) ஆகியவற்றை இன்றும் எல்லா இந்திய மொழிகளும் பயன்படுத்துகின்றன. ஆக வேத காலப் பெயர்களும் சம்ஸ்கிருதமும் நம் வீட்டு முற்றத்திலேயே இருக்கின்றன. அது செத்து விடவில்லை. கண்டி முதல் காஷ்மீர் வரை எல்லோரும் இந்திரன், இந்திராணி பெயர்ளை இன்றும் குழந்தைகளுக்கு சூட்டுவதை முன்னொரு கட்டுரையில் தந்துள்ளேன்.

6.ஆக “வேதத்திற்கு பொருள் காண முயற்சிப்பதைவிட அதன் மந்திர சப்தத்தில் நம்பிக்கை வை” — என்ற சம்பிரதாயத்தை ஏற்று இந்து மதத் தலைவர்கள் அதற்கு சொல்லும் பொருளையே ஏற்கவேண்டும்.
7.தமிழர்களாகப் பிரந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்: திருக்குறளில் இருப்பதெல்லாம் வேதக்கருத்துகள் என்று திருவள்ளுவ மாலை கூறுவதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அழகாக எடுத்துரைத்தார். வேதம் தமிழ் செய்தான் மாறன் சடகோபன் என்றும், தேவார திருவாசக கருத்தெல்லாம் வேதக் கருத்துகளே என்று நால்வரும் கூறுவதால் அவைகளும் வேதம் எனக் கொளல் சாலப் பொருத்தம்.

வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே — (பாரதியார்)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard