New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 19. இந்திரன் என்பவன் இறைவன்!


Guru

Status: Offline
Posts: 24601
Date:
19. இந்திரன் என்பவன் இறைவன்!
Permalink  
 


19. இந்திரன் என்பவன் இறைவன்!

 

இந்தியாவின் சரித்திரம் புராண, இதிஹாசங்களில் உள்ளது. இந்தியாவின் சரித்திரத்தைத் தேடிய ஆங்கிலேயன் அவற்றைப் படிக்காமல், ரிக் வேதத்தை மட்டும் படித்து ஒரு ‘சரித்திரத்தை’ எடுத்துக் கொடுத்தது அவன் அறியாமையைக் காட்டுகிறது. அப்படி ரிக் வேதத்தை எடுத்ததுமல்லாமல் அதற்குத் தானே பொருள் கண்டது அதை விட அறியாமை. ஏனென்றால் வேதத்தில் வழங்கும் வடமொழிக்கும், பேசப்படும் வடமொழிக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒருவருக்கு வடமொழி தெரிந்திருந்தால் கூட அவரால் வேதத்திற்குப் பொருள் சொல்ல முடியாது.


ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்து தங்கள் ‘அறிவைப்’ பறைசாற்றி, பரப்பும் முன், நம் நாட்டில் மூன்று வித மொழிகள் வழங்கி வந்தன. அவை ‘பூத பாஷை’, ‘சந்தோ பாஷை’, ’லௌகீக பாஷை’ என்பவை.


பூத பாஷை என்பது பேச்சு வழக்கில் இருந்து வந்த பாஷை. கி-மு- 4 –ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ்என்பவர் இந்தியாவில் பேச்ச்சு மொழி வழங்கி வந்ததைக் கூறுகிறார். யாரும் எழுதிப் படிக்கவில்லையாம். இதுவே மனுஷ்ய பாஷை என்றும் சொல்லப்பட்டிருக்கலாம். ராமாயணத்தில், அசோக வனத்தில், அனுமன்சீதையிடம், ‘மனுஷ்ய பாஷையில் பேசினார் என்று சொல்லப்படுகிறது. அதாவது மக்களுக்கிடையே புழங்கி வந்த பாஷையில் அவர் பேசி இருக்கிறார். இந்த பாஷையை எழுதி வைத்துக் கற்கவில்லை. இப்படியே பல காலம் இருந்திருக்கிறது. மெகஸ்தனிஸ் இந்தியாவுக்கு வந்த காலம், இன்றைக்கு 2,300  ஆண்டுகளுக்கு முன்னால். அப்பொழுதும் எழுத்தில் இல்லாமல், பேசுவதற்கு மட்டுமே புழக்கத்தில் ஒரு பாஷை இருந்தது என்கிறார். பணம், பண்டம் போன்றவை கொடுக்கல் வாங்கல் எல்லாம், வாய் வார்த்தையாக, உறுதி மொழியாகத்தான் இருந்திருக்கிறது. எழுதிப் படிப்பது என்றால் அது வடமொழியில்தான் இருந்திருக்கிறது. ஆனால் வேதத்தை எழுதிப் படிக்கவில்லை. எழுதாக் கிளவி என்று தமிழிலும் வழங்கி வந்ததை முன்பே கண்டோம்.

அடுத்து ‘சந்தோ பாஷை’ என்பது வேதத்தில் வழங்கும் வடமொழி ஆகும். ‘லௌகீக பாஷையும் வடமொழிதான். ஆனால் அதுவும், வேதம் அமைந்த சந்தோ பாஷையான வடமொழியும் வேறு வேறானவை. அவை ஒன்றல்ல.


வேத பாஷையை  எழுதிப் படிக்க முடியாது. சந்தஸ் என்னும் ஒலி வடிவில் அது அமைந்தது. அதற்கு அகராதியும் கிடையாது. அதனால் அதை மொழிபெயர்க்கவும் முடியாது. அதைக் கற்க இலக்கண சாஸ்திரங்கள் இருந்தன. ஆனால் லௌகீக பாஷையான வட மொழி பேசப்பட்ட மொழி, எழுதப்பட்ட மொழி. அதற்கு அகராதிகள், நிகண்டுகள் உள்ளன.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்த வித்தியாசங்கள் அறியாமல், மாக்ஸ் முல்லர் போன்ற பல வெளிநாட்டவர் வேதத்தைக் கபளீகரம் செய்து விட்டனர். வேத பாஷையான வட மொழிக்கும், பேச்சு முறையிலான வடமொழிக்கும் வேறுபாடு உண்டு என்பது தெரியாமலேயே மாக்ஸ் முல்லர் வேதத்தை மொழி பெயர்த்தார் என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.


அவர் பொதுவாகவே அவருக்கு முன் இருந்தவர்கள் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்த வேதம், வடமொழி நூல்கள் போன்றவற்றைத்தான் லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். ஏதோ இவரே சொந்தமாக வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தார் என்று நம் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல. தான் எழுதிய தனது சுய சரிதையில் இதைச் சொல்கிறார். அது மட்டுமல்ல, அவருக்கு எந்த அளவு சம்ஸ்க்ருதம் தெரியும் என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் தன் சுய சரிதையில் (பக் 289) என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.




அவர் ஒரு முறை வேதத்தை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது, அவரைப் பார்க்க ஒரு இந்தியர் வந்தாராம். இனி மாக்ஸ் முல்லர் வாயிலாகவே அவர் சொல்வதைக் கேட்போமே:

“வந்தவர் என்னிடம், எனக்கு ஒரு வார்த்தை கூடப் புரியாத ஒரு மொழியில் பேச ஆரம்பித்தார். நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள் என்று அவரிடம் ஆங்கிலத்தில் கேட்டேன். அவர் ஆச்சரியத்துடன் ‘உஙளுக்கு சமஸ்க்ருதமே தெரியாதா? என்று கேட்டார். இல்லை. நான் சம்ஸ்க்ருத்தில் பேசிக் கேட்டதே இல்லை” என்றேன். அவர் பேசினது சமஸ்க்ருதம் என்று தெரிந்து கொண்டேன். உடனே நான் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த வேதப் பகுதிகளை அவரிடம் காட்டி அதை மொழிபெயர்த்துச் சொல்லச் சொன்னேன். அவர் அந்த வேதப் பகுதிகளைப் படிக்க ஆரம்பித்தார். ஆனால் சிறிது படித்தவுடனேயே நிறுத்தி விட்டார். அந்த வேதப் பகுதிகளின் பொருள் விளங்கவில்லை என்றார். ஒரு வார்த்தை கூட அவரால் மொழிபெயர்க்க முடியவில்லை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆச்சரியத்தை நான் வெளிக் காட்டிக் கொண்டிருக்கக்கூடாது. அவர் வேதத்தைத் தான் நம்புவதில்லை என்றும், தான் ஒரு கிருஸ்துவராக மாறி விட்டதாகவும் கூறினார். அவர் சிறந்த அறிவாளியாகவும், வடமொழியில் நல்ல பாண்டித்தியம் உடையவராகவும் தெரிந்தார். அவர் பெயர் சிவனின் பெயரைக் கொண்டு நீலகண்ட கோரே என்பது. அவர் கிருஸ்துவராக மாறின பின் நெஹமையா கோரே என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்.

மாக்ஸ் முல்லர் தனது வாக்குமூலம் போல இவ்வாறு தன் சுய சரிதையில் எழுதியுள்ளார். இவர் எழுதியதன்படி அவருக்கு சமஸ்க்ருத ஞானம் இல்லை என்று தெரிகிறது. வேத சமஸ்க்ருதமும், (சந்தோ பாஷை), பேசும் சமஸ்க்ருதமும் (லௌகீக பாஷை) வேறு என்பது அவருக்குத் தெரியவில்லை. பேச்சு வழக்கில் இருந்த சமஸ்க்ருதத்தை ஒருவர் பேசினபோதும் அவருக்கு அது சமஸ்க்ருதம் என்றும் தெரியவில்லை. அவர் சமஸ்க்ருதத்தைப் பேசிக் கேட்டதேயில்லை என்றும் சொல்கிறார். சமஸ்க்ருதம் பேசத் தெரிந்த ஒருவர், வேதத்தின் அர்த்தம் புரியவில்லை என்ற சொன்னபோதாவது, தான் செய்யும் மொழி பெயர்ப்பு எந்த அளவில் சரியாக இருக்கும் என்ற சந்தேகமும் அவருக்கு வரவில்லை. 


ஆனால் அவர் தனது ஆச்சரியத்தை வெளிக் காட்டிக் கொண்டிருக்கக்கூடாது என்று சொன்னத்தில் ஒரு விஷயம் பொதிந்திருக்கிறது. இவர் ஆச்சரியப்படவே, வேதத்தின் அர்த்தம் தனக்குத்தான் புரியவில்லை போலிருக்கிறது என்று வந்தவருக்கு ஒரு காம்ப்ளெக்ஸ் வந்து விட்டது. அதை மறைக்க, வேதத்தைச் சாடி விட்டார். வேதம் ஒரு அபத்தக் களஞ்சியம் என்றும், தான் அதை நம்புவதில்லை என்றும் சொல்கிறார். அந்த நம்பிக்கையின்மை காரணமாக அவரைப் போன்றவர்கள் அந்த நாளில் மதமாற்றம் செய்திருக்க வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வேதம் சொல்வதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர் ஒரு குருவை நாடி உபதேசம் பெற்றிருக்க வேண்டும். வேதம் காட்டும் அறிவை உபநிஷத்துக்கள் குரு மூலமாகக் காட்டுகின்றன. ஏன், மாக்ஸ் முல்லரே ஒரு இந்து மத ஞானியை அடைந்து அவர் மூலமாகக் கற்றிருந்தார் என்றால், இந்த ஆரிய  திராவிட அபத்தமே வந்திருக்காது. தங்களை ‘இன்டாலஜிஸ்ட்’  (Indologist)  என்று அழைத்துக் கொண்ட மாக்ஸ் முல்லர் போன்றவர்கள் ஜெர்மனியிலும், இங்கிலாந்திலும் உள்ள பல்கலைக் கழகங்களில்  உட்கார்ந்து ‘இண்டாலஜி’ படித்தார்கள். இந்தியாவில் உள்ள சம்ஸ்க்ருத பண்டிட்டிடம் படிக்கவில்லை. இந்தியாவுக்கு வந்து, குரு முகமாக வேதம் கற்ற டேவிட்ஃப்ராலே,  ஸ்டீஃபன் நாப் போன்றவர்கள் ஆரிய  திராவிடக் கதை, ஒரு கட்டுக் கதை என்று நிரூபித்திருக்கிறார்கள்.

அப்படி குரு முகமாகக் கற்றுக் கொண்டிருந்தால், மாக்ஸ் முல்லருக்கு இந்திரன் யார், ஆரியன் யார் என்று தெரிந்திருக்கும்.

உயிர்களின் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும், ஐதரேய உபநிஷத்தில், இந்திரன் என்பவன் யார் என்ற விளக்கம் வருகிறது. (1-3-14)
இது’ என்று ஸாக்‌ஷாத்காரமாகப் பார்க்கப் படுவதால், ‘இத்ந்திரன்எனப்படுகிறது.
அப்படிப் பார்க்கப் படுவது ‘பரமாத்மா’ ஆகும்.
“இதம் பச்யதீதி இதந்தரோ நாம பரமாத்மா” என்பது ‘இதந்த்ரன்’ என்பதன் பொருள்.
இதந்த்ரன் என்பது  ‘இந்திரன்’ என்று மறைத்துக் கூறப்படுகிறது என்கிறது இந்த உபநிஷத்து.
அப்படி மறைத்துக் கூறுவதற்கும் ஒரு காரணத்தைத் தருகிறது. “தேவர்கள் மறைந்திருப்பதில் பிரியமுள்ளவர்கள்” அதனால் இதந்த்ரன் என்பதை இந்த்ரன் என்று மறைத்துக் கூறுகிறார்கள் என்கிறது உபநிஷத்து.


அப்படி இந்திரன் என்று சொல்லப்படுபவன் பரமாத்மா எனப்படும் முழு முதற்கடவுள். மறைந்து இருப்பதில் தேவர்களுக்கு விருப்பம் என்பதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. மறைந்து இருந்தால்தான் தேடிக் கண்டுபிடிப்போம். தெய்வம் என்பதும், தெய்வத்தை அடைய வேண்டும் என்பதும் தேடிச் செய்ய வேண்டிய செயல்கள். தேடாமல் எளிதில் கிடைத்து விட்டால் அதன் அருமை தெரியாது. அது தவிர, தேடும்போது மனமுதிர்ச்சியும் வருகிறது. மனம் முதிர்ந்து பெறப்படும் விஷயங்கள் நிலைத்து நிற்கும். எனவே வேதமும், வேததில் மறைந்திருக்கும் கடவுளும், படிப்படியாக மனம் முதிர்ந்து, தேடிக் கிடைக்க வேண்டியவை.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அப்படித் தேடித் தெரிந்து கொள்ள வேண்டியவன் இந்திரன் என்று தெரிந்து கொண்டு, அதன் பிறகு, இதந்த்ரன் என்று தெளிவடைய வேண்டிய ஒரு உயர்ந்த ஆன்மீகக் கருத்தை, எப்படி சின்னாபின்னமாக்கி இருக்கிறார்கள்? காரணம், வேதத்தை அதை அறிந்தவர்களிடம், அவர்கள் முறையாகக் கற்கவில்லை. வேதத்தை அத்யயனம் செய்யவில்லை. அவர்கள் தங்கள் மொழியைப் போல சம்ஸ்க்ருதத்தையும் நினைத்து ‘மொழி பெயர்த்ததால்’ வந்த வினை இது.

இந்திரன் என்ற சொல்லை இறைவன் அல்லது தலைவன் போன்ற  பொருள்களில் பயன்படுத்துகிறோம். ராமனை ராகவேந்திரன்என்கிறோம். ரகு என்னும் மன்னனின் பரம்பரையில் வந்தவன் ராமன், அதனால் அவனுக்கு ராகவன் என்ற பெயர் உண்டு. ரகுவின் பரம்பரையில் வந்தவர்கள் எல்லோருமே ராகவன்தான். அந்த ராகவர்கள் அனைவருக்கும் தலைவன் (இந்திரன்) போன்றவன் என்பதால், ராமனை ராகவேந்திரன் என்கின்றனர்.

மனிதர்களுக்குள் சிறந்தவனை, அல்லது தலைவன் போன்று இருப்பவனை “மானவேந்திரன்” என்கிறோம். குலத்திற்கே ஒளி விளக்காகத் திகழ்பவனைக் ‘குலேந்திரன்’ என்கிறோம். அதுபோல தேவர்களுக்குத் தலைவனை தேவேந்திரன் என்கிறோம்.

தேவர்களைக் காப்பவன் தேவேந்திரன். அந்த தேவேந்திரன் நிலையில், தெய்வமே வந்து உதவிய ஒரு கதை புறநானூற்றில் (174 ) வருகிறது. ஒரு முறை தேவாசுர யுத்தத்தில், அசுரர்கள், சூரியனை மறைத்தனர். அதனால் உலகம் இருளில் மூழ்கியது. அப்பொழுது, அஞ்சன வண்ணனான (கண்ணன்) இறைவன் அவர்களை வெருட்டி, சூரியனை மீண்டும் வானத்தில் நிலை நிறுத்தினான். அப்படிப்பட்ட செயலை உடையவன் சோழ அரசன் என்று அந்தப் பாடல் கூறுகிறது. இங்கு தேவேந்திரன் என்று இந்திரனைச் சொல்லவில்லை. பொதுவாக எந்த தேவாசுர யுத்தத்திலும் இந்திரன்தான் தேவர்களைக் காப்பாற்றுவான். இந்தப் பாடலில் இந்திரன் இடத்தில் கண்ணன் சொல்லப்பட்டுள்ளான். இந்திரனும், தெய்வமும், இடத்துக்கேற்றபடி இப்படி மாறி மாறி வந்துள்ளனர். மேலும் அரசனையே இந்திரன் என்று சொல்லும் பண்பு தமிழ் வழக்கில் இருந்திருக்கிறது என்பதற்கும் இந்தப் புறநானூறு பாடல் சாட்சி.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ரிக் வேதத்திலும், இப்படி இடத்துக்கேற்றவாறு பொருள் கொள்ளும் வண்ணம் வருகிறது. இந்திரன் உதவியோடு ஆரியர்கள் வெற்றி பெற்றார்கள் என்றால், தெய்வ உதவியுடன் வெற்றி பெற்றார்கள் என்று அர்த்தமாகிறது.
ரிக் வேதம் 2-13-12 – இல் இப்படி வருகிறது:- “இந்திரனே, ஒடுக்கப்பட்டவர்களையும், ஒதுக்கப்பட்டவர்களையும் நீ தூக்கி விட்டாய். குருடர்களையும், நொண்டிகளையும் நீ பெருமைப்படுத்தினாய்.


இதற்கு மாக்ஸ் முல்லரும் அவர் வாரிசுகளும் என்ன விளக்கம் வைத்துள்ளார்கள்? ஒடுக்கப்பட்டவர்கள், என்றும் ஒதுக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லப்படுபவர்கள் ஆரியன் என்றோ, தஸ்யூக்கள் என்றோ சொல்லவில்லை. அப்படி என்றால் அவர்கள் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்க்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களைக் காப்பாற்றித் தூக்கி விடும் இந்திரனைத் தெய்வம் என்று சொல்லலாம் அல்லவா? இதில் இனம் என்னும் பாகுபாடு இல்லை. யாருக்கெல்லாம் உதவி தேவையோ, யாரெல்லாம் அவனைத் துதிக்கிறார்களோ அவர்களது துதியில் இந்திரன் பலவாறு பெருமைப்படுத்தப்பட்டுச் சொல்லப்பட்டுள்ளான் என்றே தெரிகிறது.


இன்றைக்கு அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில், இந்திரனது பலவிதமான பெருமைகளின் உண்மையான அர்த்தம் அறிவியல் பூர்வமாகவே தெரிகிறது. அவை என்னவென்றும் பார்ப்போம்.

 
 
 
 
 
 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மாக்ஸ் முல்லரது சமஸ்க்ருதப் பயிற்சியைப் பற்றி சொன்னால் நொந்து போய் விடுவீர்கள் திரு தனபால் அவர்களே.

அவருக்கு மொழி ஆர்வம் இருந்தது உண்மைதான். ஆனால் அவர் காப்பி அடித்து எழுதும் வேலை மூலமாகத்தான் அவர் சமஸ்க்ருததிற்கு அறிமுகமானார். அவர் படித்த பெர்லின் பல்கலைக் கழகத்தில் தத்துவம் சொல்லிக் கொடுத்தவர் ஃப்ரான்ச் பாப் என்பவர். லத்தீன் மொழியில் தான் காப்பி அடித்து வைத்திருந்த சமஸ்க்ருத நூல்களை முல்லருக்குக் கொடுத்து மேலும் சில காப்பிகள் எடுத்துத்தரச் சொன்னார். அந்த நாளில் கை எழுத்துப் பிரதிகளே இருந்தன. அப்பொழுது முல்லருக்கு வயது 18. 23 வயதுக்குள் பல சமஸ்க்ருத நூல்களது லத்தீன் மொழி பெயர்ப்பை அவர் காப்பி எடுத்துக் கொடுத்தார். அப்படிச் செய்த போது அவர் கையில் கிடைத்தது, ரிக் வேததின் ஆங்கிலப் பதிப்பு. அதை முதலில் எழுதியவர் தாமஸ் கோல்ப்ரூக் (Thomas Colebrooke) அதை வெளியிட்ட வருடம் 1801. கோல்ப்ரூக் எழுதின பதிப்பைப் பின்பற்றி அவருக்குப் பிறகு பலரும் தத்தம் மனம் போன போக்கில் பொருள் சொல்லி தங்களது புத்தகங்களாக வெளியிட்டனர். 

கோல்ப்ரூக்கின் ரிக் வேதப் புத்தகம் முல்லரை மிகவும் கவர்ந்தது. அதிலிருந்து அதைக் கண்டு பிடித்தேன், இதைக் கண்டு பிடித்தேன் என்று தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் அளந்து கொண்டிருந்தார். என்ன கண்டு பிடித்தார்? ரிக் வேதத்தில் வெள்ளையர்கள் பற்றி நிறைய விவரங்கள் உள்ளன. ஐரோப்பியர்களது முன் சரித்திரம் அதில் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது கிழக்கிந்தியக் கம்பெனியில், நூல்களைக் காப்பி செய்யும் வேலை கிடைத்தது. அப்படியே அவர் மெக்காலேயின் பார்வையில் விழுந்தார். 31 ஆம் வயதில் 10,000 பவுண்டுகள் வருட வருமானத்தில் மெக்காலேவுக்கு வேலை பார்க்க ஆரம்பித்தார். மெக்காலே விரும்பினாற்போல் ‘வேதக்’ கருத்துக்களைத் தந்தார். 

ஒருவர் சமஸ்க்ருதம், அதிலும் வேதம் கற்க எவ்வளவு வருடங்கள் பிடிக்கும்? 18 வயதில் காப்பி செய்யும் தொழிலில் நிழைந்து, 23 வயதில் தான் காப்பி அடித்து எழுதின ரிக் வேத்தைப் புரிந்து கொண்டு விட்டேன் என்கிறாரே, அவரது வேத அறிவை நம்பும் நம் மக்களுக்கு எவ்வளவு அறிவு? 

அவரே சொல்கிறார், சமஸ்க்ருதததை ஒரு பண்டிட்டிடம் இருந்து கற்றுக் கொள்வது மிகவும் கடினம். அதை எல்லாம் இங்கிலாந்திலேயே கற்றுக் கொண்டு வந்து விட வேண்டும் என்கிறார். 
அவரது வாய் மொழியாக:-

“To learn Sanskrit from a Pandit in India according to the native system of grammar, must be a most tedious process and this is the very reason why this part of a civilian’s education should be finished in England with the assistance of grammars, dictionaries, and reading books, composed on a more rational system than the grammar of Panini, the Mahabhashya, and the Amara-kosha.”



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard