இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது.
அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும்.
ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.
அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை
வளரும்.அவளைக் காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.
கனவு காணும்.
கற்பனை செய்யும்.
மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.
அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.
ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!
உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.
அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.
பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்து விட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறியமுடியாமல் போகிறது.
ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.
அந்தக் கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத்தன்மை வெளியாகிறது.
அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.
எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.
நடந்துகொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.
`கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற பழமொழிக்கேற்பக் கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுக்கு வந்த சில நாட்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும்.
(வட மொழியில் `தாசி’ என்றால் அடிமை.)
அவள் கல்வியறிவுள்ளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.
`பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்’ என்கிறார் களே, அந்த மகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.
அழகு என்றால், முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, பின்னால் வருவோருக்கு முக்கால் முதுகு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல.
காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, `மகாலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.
அவள் பார்க்கும்போது கூட நேருக்கு நேர் பார்க்கமாட்டாள்.
“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.”
என்றான் வள்ளுவன்.
`ஒரு கண் சிறக்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவனே.
எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்று அதிர்ச்சியைத் தருமென்றால், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.
இடிதாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டு விடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.
ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்பட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுமியின் இதயமாகவே காட்டுகிறது.
பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.
கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.
அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
நல்ல குலப்பெண்களால் அது முடியும்.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்கவேண்டும்.
`தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.
பள்ளியறையில் அவள் கணிகையைப் போலவே நடந்து கொள்ளவேண்டும்.
கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்கவேண்டும்.
மீண்டும் மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு எழவேண்டும்.
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் தன் பத்தினியாக ஏற்றுக் கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.
நல்ல பெண்ணை மணந்தவன், முட்டாளாய் இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.
தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும்
முட்டாளாகி விடுகிறான்; அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.
எல்லாம் சரி.
அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?
அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒரு பழமொழி உண்டு.
`தாயைப் பார்த்துப் பெண்ணெடு
தரத்தைப் பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்துப் பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
என்பார்கள்.
“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால், மகளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார் கள்.
“தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.
தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.
அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதிவிலக்கு.
ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால், பெண்ணைப் பார்க்க வேண்டியதில்லை.
இளைஞனின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாளிப்பான அங்கங் களே அவன் நினைவை மயக்குகின்றன.
அதனால்தான் `பெற்றோர் பார்த்து மகனுக்குப் பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.
பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்த பிறகுதான், பேசி
முடிக்கிறார்கள்.அத்தகைய திருமணங்கள் நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
என்று முடிந்த திருமணங்கள், நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.
ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண்களைத் தேடும் பொறுப்பைப் பெற்றோர்களிடம் விட்டுவிட வேண்டும்.
காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை.)
குடிப்பிறப்புப் பார்த்துத்தான் பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை முழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.
`குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.
எந்த ஜாதியிலும் நல்ல பெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.
நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி மதம் பார்ப்பது பயனற்றது.
குடிப்பிறப்புத்தான் இன்றியமையாதது.
இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அனுமன்,
ராமனிடம் இப்படிச் சொல்கிறான்:
“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”
“ஆரிய புத்ரா! நான் இலங்கையில் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.
குடிப்பிறப்பு என்ற ஒன்றையும், சிறந்த பொறுமை எனும்
ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.
“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்”
என்றான் வள்ளுவன்.
“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.
ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக் கூர்ந்து அறிதல் இன்றியமையாதது.
நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டுவிட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால் போதும். மற்ற குணங்கள் தாய் வழியே
வந்திருக்கும்.பொறுப்பற்ற இளைஞன், குடும்பப் பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.
நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்காரரைப் போல் உலவும் துர்ப்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்
தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
“பத்தாவுக் கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் சற்றேனும்
ஏறுமா றாக இருப்பாளே யாமாயின்
கூறா மற் சந்நியாசம் கொள்!”
“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்
போல்வடிவு
கொண்டாளைப் பெண்ணென்று கொண்டாயே
- தொண்டா
செருப்படிதான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”
என்றாள் தமிழ் மூதாட்டி.
“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில் ஒப்புடன் சென்று துயில்நீத்துப்
பின்வந்(து)
உறங்குவாளை எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”
என்று புலம்பினார் பட்டினத்தார்.
சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்று அப்படி ஆனவர்கள் என்பதால்
தான் நதி மூலம் ரிஷி மூலம் பார்க்கக் கூடாது
என்கிறார்கள்.
“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்.”
இதுவும் மூத்தோர் மொழி.
“இல்லாள் என்பவள் இல்லத்தை ஆள்பவள்; அவள் அன்பில்லாளாக, அடக்கமில்லாளாக பணமில்லாளாக, பத்தினித்தன்மை இல்லாளாக இருந்துவிட்டால், உன் வீடு புலி கிடந்த குகைபோல் ஆகிவிடும்” என்பது முன்னோர் எச்சரிக்கை!
இந்துப்புராணங்களில் ஈடுபாடு கொண்டவர்கள், நல்ல மனைவியின் இலக்கணங்களை அறிவார்கள்.
இன்றைய இளைஞனுக்கும் மத ஈடுபாடு
ஏற்பட்டுவிட்டால், அவன் கண்ணை மனது வென்று, நல்ல பெண்ணை நோக்கிக் கொண்டு போகும்.
`ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்’ என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு.
ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மதத்தில்தான் அதிகம்.
இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாகக் காட்சியளிப்பாள்.
குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்துமதம்.
கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக் கொள்வது.
அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளரவேண்டு மென்பதற்கு, இந்துமதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.
`பிற புருஷனை அவள் மனத்தால் நினைத்தாலும் கற்புஇழந்து விடுகிறாள்’ என்று இந்துமதம் அச்சுறுத்துகிறது.
பெண் `தலைகுனிந்து நடக்க வேண்டுமென்று, இந்துக்கள் விரும்புவது’ அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத் தான்.
அழகான ஆடவன் முகத்தை அவள் பார்த்து ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள் தன்னிலைக்கு மீண்டால்கூடக் `களங்கம்’ என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.
`காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும், வாழ்க்கையிலும் வழுக்கி விழாமல் இருப்பதற்கும்கூட!
பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும் `ஆணுக்கும் அது வேண்டும்’ என்கிறது இந்து மதம்.
நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்து வரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். `அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.
தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால் மெட்டி தெரியவேண்டும்; `அவன் திருமணமானவன்’ எனத் தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.
ஒரு பெண்ணும், காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.
ஆனால் திருமணமான ஒரு பெண்ணுக்கு பிரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது.
தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள் தாண்ட முடியாது.
தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் `தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு.
திருமணத்தின் போது `அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்?
அவர்களது எதிர்கால ஒழுக்கத்தில் `அக்கினி’ சாட்சியாகிறான்.
அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான்.
அதனால்தான், கற்பு நிறைந்த பெண்ணைக் `கற்புக்கனல்’ என்கிறார்கள்.
அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?
எல்லாக் குடும்பங்களுக்கும் இன்றியமையாதது அம்மி. அந்த அம்மியின் மீது காலை வைப்பது, `என் கால் உன்மீதுதான் இருக்கும்; உன்னைத் தாண்டிப் போகாது’ என்று சத்தியம் செய்வதே.
`படி தாண்டாத பத்தினி’ என்பது வழக்கு.
`படியைத் தாண்டமாட்டேன்’ என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.
அருந்ததியைப் பார்ப்பது ஏன்?
`அருந்ததியைப் போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்’ என்று ஆணையிடுவதே.
`பால் பழம்’ சாப்பிடுவது ஏன்?
அது `பாலோடு சேர்ந்த பழம்போலச் சுவை பெறுவோம்’ என்று கூறுவதே.
பூ மணம் இடுவது ஏன்?
`பூ மணம் போலப் புகழ் மணம் பரப்புவோம்’ என்றே!
மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்?
ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய் தந்தையருக்குக் கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப் பயந்தவளென்றும் உறுதி கொள்ளவைப்பதே.
ஆம்; பெண்ணிற்குத் `தற்காப்பு’ வேண்டும்; தாய் தந்தை `காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் `காப்பு’ வேண்டும்.
இந்தக் காப்புகளுக்காகவே கையில் `காப்பு’ அணியப்படுகிறது.
`அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் `காப்பு’க் கட்டப்படுகிறது.
குழந்தைப் பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை ஒரு பெண்ணைப் பக்குவமாக வைத்திருக்க இந்து மதம் கூறும் வித்தியாசங்கள்தாம் எத்தனை!
`கற்புடைய பெண் நினைத்தால் கடவுள்களையே குழந்தைகள் ஆக்கலாம்’ என்று போதிக்கும் அனுசூயையின் கதை.
`கற்புடைய பெண் விரும்பினால் சூரியனையே உதிக்காமல் செய்யலாம்’ என்று கூறும் நளாயினியின் கதை.
`கற்புடைய பெண் மரணத்தையும் வெல்லுவாள்’ என்று கூறும் சாவித்திரியின் கதை.
அதையே வேறு வடிவில் நாகபஞ்சமி கதை.
இவையெல்லாம் பொய்க்கதைகள் என்று வாதிக்கலாம். ஆனால் `அவர்களைப் போல’த் தன் மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவனுக்கு இவை மெய்க் கதைகளே!
கொல்லப்பட்டான் கணவன் என்றறிந்து, துடித்தெழுந்து மதுரை நகர் வலம் வந்து, `செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா?’ என்று நியாயம் கேட்டுத் துர்க்கை கோயிலில் வளையல்களை உடைத்து மதுரையை எரித்தாள் கண்ணகி.
`அவள் இடது பக்கத்து மார்பைத் திருகி எறிந்தாள்; மதுரை எரிந்தது’ என்கிறது சிலப்பதிகாரம்.
`மார்பைத் திருகி எறிந்தால் மதுரை எரியுமா?’ என்று கேலி பேசுவோருமுண்டு.
`இடது பக்கத்து மார்பை’ என்று இளங்கோ சொல்வதைக் கவனிக்க வேண்டும்.
இடது பக்கம்தான் இதயம் இருக்கிறது; அதுவும் மார்பை ஒட்டியே இருக்கிறது.
`அந்த இருதயத்து அக்கினி மதுரையையே எரித்தது’ என்பதைத்தான் இளங்கோ அப்படி விவரிக்கிறான்.
`கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்’ என்பது இந்துக்கள் பழமொழி.
`கல்லும் புல்லும் கணவனாகுமா?’ என்று கேலி பேசுவோருமுண்டு.
வெறும் ஜடப் பொருள்களான கல்லையும், புல்லையும் இது குறிக்கவில்லை.
`உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்குக் கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே’ என்பது அதன் பொருள்.
பெண்ணைத் தெய்வமாக்கிக் கணவனைப் பக்தனாக்கி வாழ்க்கையை சந்தோஷமாக்க, இந்துமதம் எடுத்துக் கொண்ட முயற்சியைப் போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.
அந்நியப் புருஷன் தன்னைப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் முந்தானையைச் சரி செய்துகொள்ளும் பெண்கள் இந்துமதத்தின் சிருஷ்டிகள்.
கற்புக்கு இவ்வளவு காவல் வேலிகள் போட்ட பிறகும், பலாத்காரமாக, வேறுவழியில்லாமல் கெடுக்கப்பட்ட பெண்களுக்குப் பரிகாரமென்ன?
இங்கே நிகழ்ச்சியொன்று பழைய தத்துவத்தை வலியுறுத்துகிறது.
1947-48ல் பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட இந்துப் பெண்கள் லட்சோபலட்சமாக இந்தியாவுக்கு வந்தார்கள்.
`அவர்கள் உடலால்தான் கெட்டார்கள். உள்ளத்தால் கெடவில்லை. அவர்களை இந்து இளைஞர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று காந்தியடிகள் வாதாடினார்.
எத்தனை இளைஞர்களுக்கு அந்த அநியாயம் புரிந்ததென்று தெரியவில்லை.
ஆனால், காந்தியடிகள் நேசித்து வணங்கிய ராமபிரானின் வரலாற்றிலேயே அதற்கு நேரடியாகச் சாட்சியம் உண்டு.
அது அகலிகையின் கதை. அகலிகையை முனிவன் மணந்தான்.
ஒருநாள் நள்ளிரவில் இந்திரன் சேவல் வடிவமெடுத்தான்; பொழுது விடிந்துவிட்டது போலக் கூவினான். உண்மையறியாத முனிவன் சந்தியாவந்தனத்திற்குப் புறப்பட்டான்.
திரும்பி வந்த முனிவன் உண்மையறிந்தான். அகலிகையைக் கல்லாகச் சபித்துவிட்டான்.
ராமபிரானின் காலடி பட்டுத்தான் அந்த சாபம் நீங்க வேண்டும்.
ராமபிரான் ஒருநாள் அந்தக் கல்லை மிதித்தார். அகலிகை மீண்டும் உயிர் பெற்றாள்.
முனிவனோ, “நான் என்று நினைத்து இன்னொருவனோடு அவள் கலந்ததெப்படி? இவள் பத்தினியானால் எனக்கும் இன்னொருவனுக்கும் `பேதம்’ தெரியாதா?” என்று கேட்டான்.
அதற்கு ராமபிரான் சொன்னார்:
`கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன் நீ! நீயே உண்மைச் சேவல் எது, பொய்ச் சேவல் எது என்று தெரியாமல் சந்தியாவந்தனத்துக்குப் புறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை! உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால்தான் கெட்டாள்; ஆகவே ஏற்றுக்கொள்வது உன் கடமை.’
முனிவன் அவளை ஏற்றுக்கொண்டுவிட்டான்.
பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றிய காந்தியடிகளின் வாதம், ராமபிரான் வாதத்தின் எதிரொலியே!
நான் ஏற்கெனவே சொன்னதுபோல அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்பட வேண்டியவையே!
அவை விதிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே!
`அறிந்து கெடக்கூடாது’ எனக் குலமாதருக்கு விதித்த தடை, நமது குடும்ப வாழ்வை எவ்வளவு நிம்மதியாக்கி இருக்கிறது!
கற்பு என்றொரு வேலி போட்டு, பெண்களைத் தெய்வங்களாக்கி, குடும்பங்களை மகிழ்ச்சிகரமாக்கிய `ஏ! இந்து மதமே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.’
சுயமரியாதை, சீர்திருத்த இயக்கம் தீவிரமாக இருந்த காலம்.
கடவுள் ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு,
மூட நம்பிக்கை ஒழிப்பு என, அது ஆரவாரம் செய்த காலம்.
அந்த ஆரவாரத்தால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
கறுப்புச்சட்டை போட்டுக் கொள்வதும், மதங்களையும் மதவாதிகளையும் கேலி செய்வதும், அந்த நாளில் இளைஞர்களுக்கு வேடிக்கை விளையாட்டாக இருந்தது.
அது ஒரு தத்துவமா?, அதில் பொருள் உண்டா?,
பயனுண்டா? என்று அறியமுடியாத வயது.
அந்த வயதிலும், அந்த நிலையிலும், இந்துக்களின் மங்கல வழக்குகள் மீது எனக்குப் பிடிப்புண்டு.
சில சீர்த்திருத்தத் திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கியிருக்கிறேன்.
மற்றும் சில திருமணங்களில் நான் பேசியிருக்கிறேன்.
மேலவைத் தலைவர் திரு.சி.பி.சிற்றரசுவின் மகளுக்கு சீர்திருத்தத் திருமணம் நடந்த போது, நானும் அதில் கலந்து கொண்டேன்.
அங்கே பேசியவர்களில் பொன்னம்பலனார் என்று ஒருவரும் பேசினார்.
மணமக்களின் தலைமீது மஞ்சள் அரிசியும், புஷ்பங்களும் தூவப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார்.
“இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக? பிணத்துக்கும்தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள். இவர்கள் மணமக்களா? இல்லை பிணங்களா?” என்று அவர் பேசினார்.
எனக்கு நெஞ்சில் அடிப்பது போலிருந்தது.
`திருமண வீட்டில் அமங்கலமாய்ப் பேசுகிறாரே’ என்று நான் வருந்தினேன்.
இன்னொரு சீர்திருத்தத் திருமணம்.
அங்கே ஒருவர் கீழ்க்கண்டவாறு பேசினார்.
“இங்கே நடப்பது சீர்த்திருத்தத் திருமணம். இரண்டே நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. ஐயர் வரவில்லை, ஓமம் வளர்க்கவில்லை, அம்மி மிதிக்கவில்லை, அருந்ததியும் பார்க்கவில்லை. இங்கே ஐயர் வராததால் இந்தப் பெண் வாழமாட்டாளா? இவளுக்குப் பிள்ளை பிறக்காதா? ஐயர் வந்து நடத்தாததால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா? அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். ஐயர் நடத்தும் திருமணங்களில் பெண் விதவையாவதில்லையா? அந்த ஐயர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே! அவர் வந்து கட்டினால்தான் தாலி நிலைக்குமா? நாங்கள் கட்டி வைத்தால் அறுந்து போகுமா?”
அவர் பேசி முடிக்கவில்லை. நான் அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தேன்.
“நடப்பது திருமணம்; நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதைப்பற்றி, பேசாமல் உட்கார்” என்றேன்.
பிறகு நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றிக் குறிப்பிட்டேன்.
`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம்.
நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது.சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.
மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.
திருமணத்தில் மாங்கல்யம் கட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள்?
ஏதாவது ஒரு மூலையில், யாரோ யாரையோ, `நீ நாசமாய்ப் போக’ என்றோ, `உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்கக்கூடும்.
அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக் கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.
இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு துள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்க ஆரம்பித்தது.
நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன. அவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை.
மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்.
மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?
ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்?
எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான்.
மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில் இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை.
`சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் `வலப்புறமாக வருவது நன்று’ என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள்.
`வலம்’ என்பது `நாம் வலிமையடைவோம்’ என்றும் பொருள் தருகிறது.
`வலியோம், வல்லோம், வல்லம், வலம்’
இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருள் உடையவை.
தனது வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் சொன்னார்கள் இந்துக்கள்.
சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ, திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச் செல்லும் போது, `போய் வருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு போவார்கள்.
அதன் பொருள், “இன்னும் பல திருமணங்கள், விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும்; நாங்கள் மீண்டும் வருகிறோம்” என்பதே.
அமங்கல வீடுகளுக்குச் செல்கிறவர்கள் திரும்பும் போது, “போகிறேன்” என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.
அதன் பொருள், “இனி உன் வீட்டில் அமங்கலம் நேராது. நாங்கள் வரவேண்டியதாயிருக்காது” என்று நம்பிக்கைட்டுவதாகும்.
மணமக்களை, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஏன் வாழ்த்துகிறார்கள்?
உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள்,
இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல் நலம் எனப் பதினாறு வகையாக விரியும்.
மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே, இந்துக்கள் `பதினாறும் பெற வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
நூற்றுக்கணக்கான ஆண்டுகள், விழுது விட்டு விழுது விட்டுத் தழைக்கும் மரம் ஆலமரம் ஒன்றுதான்!
ஓரிடத்தில் முளைக்கும் அருகம்புல் அத்தனையையும் ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான்.
`கணவரின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள்.
யாராவது ஒருவர் தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் `வாழ்க’ என்பார்கள்.
`தும்மினேனாக வழுத்தினாள்’ என்றான் வள்ளுவன்.
தும்மும் போது சிலர் `நூறு வயது’ என்பார்கள்.
எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் `இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.`நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள்.
தீபத்தை அணைக்கச் சொல்லும்போது, `அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள். `வளர்த்து விடு’ என்பார்கள்.
வீட்டில் ஒருவர் இறந்துவிட்டதைக் குறிக்கும் போது `சிவலோகப் பதவியடைந்தார்; பரலோகப் பிராப்தியடைந்தார்’ என்பார்கள்.
பெண் ருதுவாவதைப் `பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள்.
அதாவது `பெண் மொட்டாக இருந்து புஷ்பம் போல் மலர்ந்திருக்கிறாள்’ என்பது அதன் பொருள்.
பெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பர் கீழ்க்கண்ட கடிதத்தை எனக்கு எழுதியிருக்கிறார்.
அவர் எழுப்பியிருக்கும் ஐயம் சிந்தனைக்குரியது.
அதுபற்றி விளக்கம் கூறுமுன், அவரது கடிதத்தை அப்படியே சமர்ப்பிக்கிறேன்.
`தாயை வணங்கு; தந்தையைத் தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலுக்குச் சென்று அடையும் புண்ணியத்தை விடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்’ என்று, ஒரு வார இதழில் எழுதியுள்ளீர்கள். நானும் சிறிதளவு படித்திருக்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை; குழம்புகிறது.
அதாவது, தாய் எப்படிப்பட்டவராக இருப்பினும் அவர் எத்தகைய செயலைச் செய்பவராக இருந்தாலும் (கற்பல்ல ஈண்டு குறிப்பது) பிள்ளையிடம் வாஞ்சையோ பெரியோரிடத்து (தாய்க்கு) மதிப்போ, மஞ்சள் குங்குமம் தந்தவனிடத்து மாண்போ இன்றித் தான்தோன்றித்தனமாக நடக்கும் தாயைக்கூட மதிக்கலாகுமோ?
மேலும் கூட்டுக்குடும்பம் குழப்பமடைந்து சிதறிப்போகச் செய்யும் உள்ளம் படைத்து, கூச்சல் குழப்பம் மிகுதியும் விளைவித்து, வயது வந்த பிள்ளைகளை மதிக்காமல் நடக்கும் தாய்க்கு, “அர்த்தமுள்ள இந்து மதம்” என்ன சொல்கிறது?
இப்படிப்பட்ட ஒரு தாயை வைதால் ஏற்படக்கூடிய பாவ புண்ணியங்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை அறிய ஆவலுடன் இருப்பேன்! ஏன் தெரியுமா? நான் வீட்டுக்கும், வீட்டுப் பெரியோர்களுக்கும் நல்லது செய்ய முயல்கிறேன்; ஆனால் – என் இதன் மூலம் எனக்கு என்ன தண்டனை பாவ புண்ணியங்கள் கிடைக்கும்?”
உண்மைதான்.
ஒரு தாய் ராட்சசியாக இருந்துவிட்டால், அவளும் வணங்கத் தக்கவள்தானா?
மகனுக்குச் சோறு போடாமல், மணாளனை மதிக்காமல் கற்புநெறி உள்ளவளாக இருந்தாலும், இந்துக்கள் சொல்வது போல் ஓர் அன்னையின் குணம் இல்லாமல் ராட்சசப் போக்கில் நடப்பவளை எங்ஙனம் வணங்குவது?
முதலில் இதற்கு என் பதில்:
“அப்படிப்பட்ட தாய் லட்சத்தில் ஒருத்தியே” என்பதாகும்.
எந்த நியதியிலும் விதிவிலக்கு உண்டு.
ராட்சச தாயும் அப்படியே!
`மூன்று தலையோடு கன்றுக்குட்டி, ஐந்து குலை தள்ளிய வாழை மரம்’ என்பது போல, குணங்கெட்ட தாயும் ஓர் அபூர்வ சிருஷ்டியே!
பசுக்கள் சாந்தமானவை. அவற்றில் முட்டித் தள்ளுகிற பசுக்களும் உண்டு. அவற்றில் சொந்தக் கன்றுகளையே முட்டித் தள்ளுகிற பசுக்களும் உண்டு. இவை அபூர்வமானவை.
கண்ணாடித் துண்டுகளையே தின்று ஒருவர் ஜீவிக்கிறாராம்.
பூமிக்கடியில் ஆறு மாதங்கள் இருந்த ஒருவர் உயிரோடு வெளிவருகிறாராம்.
இவர்கள் எப்படி லட்சத்திலோ, கோடியிலோ ஒருவராகக் காட்சியளிக்கிறார்களோ, அப்படியேதான் குணங்கெட்ட தாயும்.
சத்திய தேவதை ருத்திர தாண்டவமும் ஆடுவதாக இந்துக்களின் புராணங்கள் கூறுகின்றன.
ருத்திர தாண்டவம் முடிந்த பிறகு அமைதியடைகின்றது.
ராட்சச குணங்கொண்ட தாயும் தன் முதுமையில் அமைதியடை கிறாள்.
சட்டி தூக்கி, தெருத் தெருவாக அலைய வேண்டிய நிலைமைக்கு வரு கிறாள்.
பரம்பொருள் அந்தத் தாயை அப்படித்தான் தண்டிக்கிறான்.
பசி, பட்டினி நோய்களால் வெந்து, தன் பாவங்களுக்குக் கழுவாய் தேடுகிறாள் அவள்.
அத்தகைய தாய்க்குத் துர்மரணமே சம்பவிக்கும் என்பது இந்துக்கள் நம்பிக்கை.
மலர் கல்லாகிவிட்டால் வாசம் போய்விடுகிறது.
தோற்றம் மலரானாலும் அது வெறும் கல்லே!
குணம் கெட்ட தாயும் அப்படியே!
இப்படிப்பட்ட தாய் எப்படி உற்பத்தியாகிறாள்?
இந்துக்களின் பூர்வஜென்ம நம்பிக்கையை இங்கேதான் நானும் ஒப்புக் கொள்கிறேன்.
பூர்வஜென்ம பாவ புண்ணியம் தொடர்ந்து வருகிறது.
காரணம் தெரியாத துயரங்களுக்கு அதுதான் காரணம் என்பது இந்துக்கள் நம்பிக்கை.
`போன ஜென்மத்தில் மகனாலும் மணாளனாலும் பழி வாங்கப்பட்ட தாயொருத்தி, அடுத்த ஜென்மத்தில் இருவரையும் பழி வாங்குகிறாள்’ என்றே நான் அதற்குப் பொருள் கொள்கிறேன்.
இது எனது யூகமே; வேறு பொருள்களும் இருக்கக்கூடும்.
இல்லையென்றால், உலகத்திலேயே மென்மையான அன்னையின் இதயம் கல்லாவது எப்படி?
இறைவனின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று என்பதைத் தவிர, வேறு பதில் சொல்ல எனக்குத் தோன்றவில்லை.
`எதிலும் விதிவிலக்கு உண்டு’ என்பதைத்தான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
கோடானு கோடி இந்துக்களில் இப்படிப்பட்ட தாய்மார்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே இருப்பார்கள்.
அதற்காக, அந்தத் தாயின் மகனோ, கணவனோ, தாய்க் குலத்தையே வெறுக்கக் கூடாது.
வகை வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும் உலகில் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு விதமான வாசம் உண்டு.
ஆனால் மலர் ஒன்று `மல நாற்றம்’ அடிப்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆனால் அபூர்வமான மலர்.
அது மலரும் செடியின் பெயர் `பீநாறிச் சங்கு’ என்பதாகும்.
அந்தச் செடியின் இலைகள்கூட மலநாற்றமே அடிக்கும்.
அந்த இலைகளை அரைத்துக் குடித்தால், உடம்பில் எவ்வளவு `சிரங்கு’ இருந்தாலும் உதிர்ந்துவிடும்.
அந்த மலரைத் தேடிப்பிடித்து வாங்கிப் பாருங்கள். அதைவிட அழகான மலர் உலகத்திலேயே கிடையாது.
ஆனால் அதை மூக்கிலே வைத்தால் மூன்று நாளைக்குச் சோறு செல்லாது.
அதுவும் இறைவனின் படைப்புத்தான்!
உலகத்திலுள்ள அபூர்வத் தன்மைகளை மனத்திற் கொண்டே, இந்துக்கள் பூர்வஜென்ம நம்பிக்கையை வளர்த்தார்கள்.
குணங்கெட்டவளைத் தாயாகப் பெற்றவர்கள், இந்தப் பூர்வஜென்ம நம்பிக்கையிலேயே அமைதியுற வேண்டும்.
அவர்கள் அவளை வணங்க வேண்டியதில்லை; அவளை விட்டு ஒதுங்கிவிட வேண்டும்.
முதுமையில் அவளே வந்து அவர்களை வணங்குவாள்.
விதிவிலக்குகளை வைத்துப் பொதுவான தத்துவங்களை யாரும் எடை போடக்கூடாது.
பொதுவில் `தாய்மை’ என்பது இந்துக்களால் சக்தி என்றழைக்கப்படுகிறது.
ரத்த பாசத்தை உடம்பு சிலிர்க்க வருணிப்பது இந்து மதம்தான்.
பூமியைப் `பூ மாதா’ என்றும் பசுவைக் `கோ மாதா’ என்றும் வருணிப்பவர்கள் இந்துக்கள்தாம்.
பொறுமையில் `பூமா தேவி’ என்றும், அமைதியில் `பசு’ வென்றும் சொல்பவர்கள் இந்துக்கள்தான்.
ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.
பொறுமை, அமைதி, ரத்த பாசம், தன் வயிற்றைப் பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் இவையே தாய்மை!
இந்துக்களிடையே ஒரு கதை உண்டு.
ஒரு தாய்; அவளுக்கு ஒரு மகன்; அந்த மகனோ தாசிலோலன்; ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான்.
`மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான்.
அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த கணிகை அவனைத் துரத்தியடித்தாள்.
அவனோ மோக லாகிரி முற்றி, “உனக்கு எது வேண்டுமோ கொண்டு வருகிறேன்” என்று காலில் வீழ்ந்தான்.
அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, “உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்” என்றாள்.
காம மயக்கத்தில் சிக்கிய அவன், தாயிடம் ஓடினான்.
“அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா” என்றழுதான்.
தாய் கேட்டாள்:
“அதன்மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளோ மகனே?”
“இருப்பாள்!” என்றான் மகன்.
தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக் கொள்ளும்படி தாய் கூறினாள்.
அவன் தாயைக் கொன்றான்; இருதயத்தை எடுத்தான். வலது கையில் ஏந்தியவாறு கணிகை வீடு நோக்கி ஓடினான். வழியில் ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.
அடிபட்டு விழுந்த அவனைப் பார்த்து, அதே இருதயம் சொன்னது:
“ஐயோ! வலிக்கிறதா மகனே! நான் உயிரோடில்லையே உனக்கு மருத்துவம் செய்ய!”
மகன் “அம்மா!” என்றலறினான். அவன் ஆவி பிரிந்தது.
ஆம், அதன் பெயர்தான் தாய்மை!
ஓர் இடத்தில் நான் சொன்னேன், “இறைவன் உன் ஆத்மாவுக்கு மட்டுமே பொறுப்பேற்றுக் கொள்கிறான்” என்று.
ஆனால், ஓர் அன்னையோ உன் ஆத்மாவுக்கும் உடம்புக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறாள்.
கடைசியாக, தாயை மதிப்பவர்களுக்கு, பக்தி செலுத்துவோர்களுக்கு, எப்படி வாழ்வு வரும் என்பதைச் சாதாரண மனிதனுக்கும் புரியும்படி சொல்கிறேன்.
இன்று படவுலகில் இருபது வருஷங்களாக அசைக்க முடியாமல் இருந்துவரும் நட்சத்திரங்கள், அரசியலில் திடீரென்று, அதிர்ஷ்டம் வாய்ந்த குறைந்த கல்வியே உள்ள தலைவர்கள், அனைவரையும் எண்ணிப் பாருங்கள். அவர்கள் அனைவரும் தாயிடம் பக்தி செலுத்திய ஒரே காரணத்தினால் முன்னுக்கு வந்தவர்கள்!
`நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம். `நம்மைத் தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம். ஞானம், பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது. ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.
***
நமது புராண இதிகாசங்களில் ஆணவத்தால் அழிந்தவர்களைச் சித்தரிக்காதது மிகவும் குறைவு.
இவர்களுடைய முடிவு கொடுமையானதைக் காட்டி, இந்து மதம் ஆணவக்காரர்களை எச்சரிக்கிறது.
“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகின்றது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்று பொருள்.
அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது.
நிறை குடங்களுக்கு அது வருவதில்லை.
வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள்தனமான தைரியம் தோன்றி, `எல்லாம் நாமே’ என்ற எண்ணம் பிறந்து, தடுமாறிக் காரியம் செய்யத் தொடங்கியதும் ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, ஆணவக்காரனைக் கூனிக் குறுகச் செய்கின்றன.
எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், நீண்ட கால நண்பர்.
ஆரம்பத்தில் மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
அந்தச் சிரமத்தோடு கடன் வாங்கி ஒரு படம் எடுத்தார்.
கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் அவரே.
படம், `ஓகோ’ என்று ஓடிற்று.
வெற்றி மயக்கத்தில் அவர் நிலை கொள்ளவில்லை!
உடனே ஒரே நேரத்தில், நாலைந்து படங்கள் எடுக்கப் போவதாக விளம்பரம் செய்தார்.
விநியோகஸ்தர்கள் அவரிடம் வந்து, “புதிய படங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்; யார் யார் நடிக்கிறார்கள்!” என்று கேட்டார்கள்.அதற்கு அவர் கோபமாக, “எல்லாம் நானே. என் பெயருக்குத் தான் படமே தவிர நடிப்பவர்களுக்காக அல்ல; இஷ்டமிருந்தால் கையெழுத்துப் போடுங்கள்” என்று மிரட்டினார்.
நான் ஒருநாள் அவரைச் சந்தித்தபோது, “என் ஒவ்வொரு படத்தையும் `பாக்ஸ் ஆபீஸ்’ பண்ணிக் காட்டுகிறேன்” என்று என்னிடமே சவால் விட்டார்.
“என்னுடைய படம் என்றால், ஓலையிலே பிரிண்ட் பண்ணினாலும் ஓடும்” என்று சொன்னார்.
பெரிய பெரிய கோவில்களுக்கெல்லாம் வேண்டிக் கொண்டும், அவரது அடுத்த படம் படுதோல்வியடைந்தது. மூன்றாவது படமும் படுதோல்வி. கடன்காரரானார்; கஷ்டப்படுகிறார்.
தன்னைத் தேடி வந்தவர்களிடம் ஆணவத்தோடு நடந்து கொண்ட அவர், தினமும் அவர்களைத் தேடி நடக்கிறார்.
இன்னொருவர்-
அவரும் கதை வசனம் எழுதி டைரக்ஷன் செய்கிறவர்.
அவர் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரும்பகுதி தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.
நீங்கள் அவரோடு பேசப்போனால் நீங்களும் அவரைப்பற்றியே பேசினால்தான் அவர் உங்களோடு பேசுவார்.
வசனத்திலே வல்லினம், மெல்லினம் இருக்காது. ஆனால் குருட்டுத்தனமாக வந்த வெற்றி, அவரைக் குருடனாகவே ஆக்கிவிட்டது.
இதுவரை ஆணவக்காரர்கள் எப்படி அவதிப்பட்டார்களோ, அப்படிப்பட்ட அவதிக்கே அவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.
மனிதன் உடம்பு மிகவும் பலவீனமானது.
அதில் ஒரு நரம்பைத் தட்டினால் பல நரம்புகளிலும் சங்கீதம் கேட்கிறது.
ஒரு வெற்றி கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், வரப்போவதெல்லாம் வெற்றியே என்ற திமிர் வருகிறது.
அந்தத் திமிர், யாரையும் அலட்சியப்படுத்தச் சொல்கிறது.
அடி பலமாக விழுந்ததும், திமிர் தானாக அடங்கிப் பணிவு எங்கிருந்தோ வந்துவிடுகிறது.
ஒரு சபைக்கு நான் போயிருந்தேன்.
பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள்.
அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைத்து, ஓர் அரை குறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.
அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருத்தவில்லை.
ஒவ்வொரு வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.
நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன்.
“தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன்.
சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத் திருக்கிறது.
இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.
என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.
நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்கமாட்டேன்.
காரணம், கிருபானந்தவாரியார் சொன்ன ஒரு கதை.
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்ததாம்.
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.
யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டதாம்.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்துவிட்டாயா?” என்று கேட்டதாம்.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.
“நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சமாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”
இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.
முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.
ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.
தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;
தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;
தான் சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காகத் தினமும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;
இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய்விடுகின்றார்கள்.
`எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்திதான் காரணம்’ என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.
`மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை.
ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு.
அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.
உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது.
உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே.
ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது.
பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது.
ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது?
நீ கருப்பையில் இருக்கும் போது, நீ போகப் போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன.
நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும், அது இறைவன் விதித்ததே.
மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம்; ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது.
`ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்’
என்றார் வள்ளுவர்.
`ஊழ்’ என்பது பூர்வ ஜென்மத்தையும், விதியையும் குறிக்கும்.
பூர்வ ஜென்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜென்மத்தின் விதி நிர்ணயிக்கப் பெறுகிறது.
அதனை `ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்றான் இளங்கோ.
போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரம் இந்த ஜென்மத்தில் எழுதப்படுகிறது.
ஆகவே விதியின் கோடுகள்தாம் உன்னை ஆட்சி செய்கின்றன என்பது, இந்துக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
நீ எண்ணியது நடந்தாலும் நடக்கா விட்டாலும், எண்ணாதது நடந்தாலும், யாவும் உன் விதிரேகைகளின் விளைவே.
முயற்சி கால் பங்கு; விதியின் ஒத்துழைப்பு முக்கால் பங்கு.
“எல்லாவற்றுக்கும் காலநேரம் வர வேண்டும்”என்கிறார்களே இந்துக்கள், அதற்கு என்ன காரணம்?
இன்ன காரியங்கள், உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது; அவ்வளவுதான்.
நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது.
இரண்டாவது உலக யுத்தத்தின் போது, ஹிட்லருக்கு இருந்த வசதியும், ஆயுதப் பெருக்கமும் வேறு எந்த நாட்டிற்கும் இல்லை.
ஒரே நாளில் போலந்தைப் பிடித்தான்.
வெறும் மிரட்டலிலேயே செக்கோஸ்லாவாகியாவைப் பிடித்தான்.
குண்டு போடாமலேயே பிரான்ஸைப் பிடித்தான்.
அவன் விரும்பியிருந்தால் ஐரோப்பாவையும், ஆறு நாட்களில் பிடித்திருக்கலாம்.
வெறும் வாய் வேட்டுக்களையே விட்டுக்கொண்டிருந்த சர்ச்சிலை, அவன் கனடாவுக்குத் துரத்தியடித்திருக்கலாம்.
(சர்ச்சில் தென் அமெரிக்காவுக்கு ஓடத் திட்டமிட்டிருந்தார்.)
அகில ஐரோப்பாவையும் பிடித்து விட்டால், உலகத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குக் காலனிகளாக இருந்த சுமார் எண்பது ஆசிய ஆப்பிரிக்க, அரேபிய நாடுகள் குண்டுகள் போடாமலேயே அவன் கைக்கு இயற்கையாகவே வந்திருக்கும்.
இது சுலபமாக நடந்திருக்கக் கூடியதே.
ஆனால், விதி ஹிட்லரின் ஆணவத்தை ஆட்சி புரிந்தது.
பிரிட்டனைக் `கோழிக் குஞ்சு’ என்று அவன் கேலி செய்துவிட்டு, `யானையைச் சாப்பிட்டால்தான் என் பசி அடங்கும்’ என்று, சோவியத் யூனியனுக்குள் நுழைந்தான்.
`அவனது சவக்குழி அங்கேதான் தோண்டப்படுகிறது’ என்று விதி சிரித்தது.
சோவியத் யூனியனின் பருவகாலத்தில் அவன் சிக்கிச் சிக்கி இழுபட; அமெரிக்காவும், பிரிட்டனும் தங்களைத் தயார் செய்து கொண்டுவிட்டன.
எச்சரிக்கையாக இருந்திராததால், உலகத்தையே ஆண்டிருக்கக் கூடிய ஹிட்லர், தன் பிணத்தைக்கூடப் பிறர் பார்க்க முடியாதபடி இறந்து போனான்.
எந்த மனிதனின் பாதையையும் திசை திருப்பிவிடும் விதி, ஹிட்லரின் ஆணவத்தையும் அழிவை நோக்கித் திருப்பி விட்டது.
உலக வரலாறுகளைக் கூர்ந்து நோக்குங்கள்.
நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்?
நினைப்பவன்தான் நீ; முடிப்பவன் அவன்.
இந்துக்களின் தத்துவத்தில் இது முக்கியமானது.
நம்முடைய லகான் இறைவன் கையிலே உள்ளது என்பதை, இந்துமதம்தான் வலியுறுத்துகிறது.
பிச்சைக்காரி ராணியான கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் `அதிர்ஷ்டம்’ என்ற பெயரிலோ, `துரதிர்ஷ்டம்’ என்ற பெயரிலோ விதியின் பரிசளிப்பு.
“ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே, இப்படி ஆகிவிட்டதே” என்று நீ பிரலாபித்துப் பயனில்லை.
“அப்படித்தான் ஆகும்” என்று நீ ஜனிக்கும் போது எழுதப்பட்டிருக்கிறது.
ராமனையும் விதி ஆண்டது, சீதையையும் விதி ஆண்டது.
காமனையும் விதி ஆண்டது, ரதியையும் விதி ஆண்டது.
சோழநாட்டுக் கோவலனின் விதி, மாதவியின் மயக்கத்திலே இருந்தது.
கண்ணகியின் விதி, மதுரையிலே இருந்தது.
பாண்டியன் நெடுஞ்செழியன் விதி, ஒரு காற்சிலம்பில் அடங்கியிருந்தது.
அலெக்சாண்டரின் விதி, பாபிலோனியாவில் முடிந்தது.
ஜூலியஸ் சீஸரின் விதி, சொந்த நண்பனின் கையிலே அடங்கியிருந்தது.
நெப்போலியனின் விதி, அவனது பேராசையிலே அடங்கியிருந்தது.
காந்திஜியின் விதி, கோட்ஸேயின் கைத்துப்பாக்கியில் அடங்கி இருந்தது.
அடிமைகள் கிளர்ந்து எழுந்ததும், ஆதிக்க வெறியர்கள் விழுந்து துடித்ததும், காலமறிந்து கடவுள் விதித்த விதி.
கடவுளே இல்லை என்று வாதிடுவோரும் நீண்ட காலம் வாழவேண்டும் என்று இறைவன் ஏன் விதிக்கிறான்?
தங்கள் கொள்கைகள், தங்கள் கண் முன்னாலேயே தோல்வி அடைவதைக் கண்டு சாகவேண்டும் என்றுதான்!
உண்மையான பக்தி உள்ள சிலருக்கு ஆண்டவன் ஏன் நீண்ட ஆயுளைத் தருகிறான்?
`தாங்கள் பக்தி செலுத்தியது நியாயமே’ என்று அவர்களும், அவர்களைப் பார்த்துப் பிறரும் உணர்வதற்காகத்தான்.
இறைவன் விதியை ஒரு வேடிக்கைக் கருவியாக வைத்திருக்கிறான்.
சக்தியும் சிவனும் பூமியில் பல வேடங்களில் பிறந்ததாக இந்துக் கதைகள் கூறுவது, இறைவன், தானும் விதிக்கு ஆட்பட்டு, அதன் சுவையை அனுபவிக்கிறான் என்பதைக் காட்டுவதற்காகத்தான்.
அந்தக் கதைகளை வெறும் கதைகளாக நோக்காமல், இறைவனின் தத்துவங்களாக நோக்கினால், மானிடத் தத்துவத்தை எப்படி இறைவன் வகுத்திருக்கிறான் என்பதை அறிய முடியும்.
விதி-மதி ஆராய்ச்சியில், மதியையே விதிதான் ஆட்சி செய்கிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
அதை ஒரு கதையாக மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதினேன்.
பிரவாகம்
ஞானி பிரகதீஸ்வரர், திருக்கோவிலுக்கு விஜயம் செய்தார்.
அவர் பெரிய மகான். உண்மையிலேயே ஞானி. சிறு வயதிலேயே துறவு பூண்டவர்.
கல்மண்டபத்தின் வடக்கில், அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.
எதிரே ஆண்களும் பெண்களும் கணக்கிலடங்காது கூடியிருந்தனர்.
வேதங்கள் பற்றியும், புராணங்களைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வந்த ஞானியார், `யாரும் கேள்விகள் கேட்கலாம். பதில் சொல்லப்படும்’ என்று தெரிவித்தார்.
யார் என்ன கேள்வி கேட்கப் போகிறார்கள் என்பதையே ஒவ்வொருவரும் ஆவலாக எதிர்பார்த்தார்கள்.
மண்டபத்தின் மேற்கு மூலையிலிருந்து ஓர் உருவம் மெதுவாக எழுந்து நின்றது.
நடுத்தர வயது; தீட்சண்யமான கண்கள்; பந்தபாசங்களில் அடிபட்டுத் தேறி வந்தது போன்ற ஒரு தெளிவு.
சபையில் இருந்த எல்லோரும் அவரையே திரும்பிப் பார்த்தார்கள்.
“தாங்கள் என்ன கேட்க விரும்புகிறீர்கள்?” என்று ஞானியார் கேட்டார்.
அவர் சொன்னார்:
“சுவாமி!
விதியையும் மதியையும் பற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு சர்ச்சைகள் தோன்றி முடிவுக்கு வராமல் முடிந்திருக்கின்றன.
“விதியை மதியால் வெல்லலாம் என்றும், மதியை விதி வென்று விடும்” என்றும், இரண்டு கருத்துகள் இன்னும் இருந்து கொண்டிருக்கின்றன.
மண்டபத்தில் இருந்த எல்லோரையும் பார்த்து, “எல்லோரும் எழுந்து வெளியே செல்லுங்கள்; நான் கூப்பிட்ட பிறகு வாருங்கள்” என்றார்.
மண்டபம் காலியாயிற்று.
இரண்டு நிமிஷங்கள் கழித்து, “எல்லோரும் வாருங்கள்” என்றழைத்தார்.
திபுதிபுவென்று எல்லோரும் ஓடிவந்து அமர்ந்தார்கள்.
ஞானியார் கேட்டார்:
“குழந்தைகளே, இந்த மண்டபத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் வெளியே போய் மீண்டும் உள்ளே வந்திருக்கிறீர்கள். உங்களில் போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் எத்தனை பேர்?”
எல்லோரும் விழித்தார்கள்.
நாலைந்து பேர் மட்டும் பழைய இடத்தில் அமர்ந்திருந்தார்கள்.
மற்ற எல்லோரும் இடம் மாறி இருந்தார்கள்.
கேள்வி கேட்டவரைப் பார்த்து, ஞானியார் சொன்னார்:
“பாருங்கள், இந்தச் சின்ன விஷயத்தில்கூட இவர்கள் மதி வேலை செய்யவில்லை.
கொஞ்சம் நிதானமாக யோசித்தால், இவர்கள் மெதுவாக வந்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருப்பார்கள்!
இவர்கள் மதியை மூடிய மேகம் எது?”
கேள்வியாளர் கேட்டார்:
“இது அவர்கள் அறியாமையைக் குறிக்கும்; இதை விதி என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”
ஞானியார் சொன்னார்:
“அறியாமையே விதியின் கைப்பாவை.
அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால், விதியும் இல்லை, விதித்தவனும் இல்லை.”
கேள்வியார் கேட்டார்:
“மனிதனின் அறியாமையே விதி என்றால், விதிக்குத் தனி நியமங்கள் இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கின்றன!
இந்த உருவத்தில், இந்த இடத்தில் பிறக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கவில்லை.
உங்களைப் பிறக்க வைத்தது விதியின் பிரவாகம்.
இப்படித்தான் வாழவேண்டும் என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள்; அப்படி வாழவிடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
இந்தப் பெண்தான் எனக்குத் தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்; அவளைக் கிடைக்க விடாமல் செய்வது விதியின் பிரவாகம்.
எப்போது நீங்கள் நினைத்தது நடக்கவில்லையோ, அப்போது உங்கள் நினைவுக்கு மேல் இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்.
அதற்கு நம் மூதாதையர் சூட்டிய பெயரே விதி.”
கேள்வியாளர் கேட்டார்:
“அந்த விதி எப்போது நிர்ணயிக்கப்படுகிறது? எங்கிருந்து தொடங்குகிறது?”
ஞானியார் சொன்னார்:
“சூன்யத்தில் நிர்ணயிக்கப்படுகிறது; ஜனனத்தில் தொடங்குகிறது.
தான் நினைத்தபடியெல்லாம் வாழ்க்கையை நடத்தி முடித்தவர்கள் எத்தனை பேர்?
வீரன் வெற்றி பெற்றால், அது வீரத்தால் வந்தது.
கோழை தோல்வியுற்றால், அது கோழைத்தனத்தால் கிடைத்தது.
ஆனால் வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ, அவை விதியால் நிர்ணயிக்கப்பட்டவை!
வரலாற்று நதியைத் தனிமனிதனின் சாகசங்கள் இழுத்துச் செல்வதில்லை.
விதியே அழைத்துச் சென்றிருக்கிறது.
கோவலனை மதுரைக்கு அழைத்ததும், பொற்கொல்லனைச் சந்திக்க வைத்ததும் விதி.
மாதர்களாலேயே ஆரம்பமான பிரெஞ்சு சாம்ராஜ்யம், மாதர்களாலேயே அழிவுற்றதற்குக் காரணம் விதி!
ஒன்று நடைபெற்ற பின்னால், `கொஞ்சம் அப்படிச் செய்திருந்தால் நடந்திருக்காதே’ என்று மதி சிந்திக்கிறது!
மதி ஏன் தாமதமாகச் சிந்திக்கிறது?
விதி முந்திக்கொண்டு விட்டது!”
கேள்வியாளர் கேட்டார்:
“அப்படியானால் மனிதனின் மதியால் ஆகக்கூடியது ஒன்றுமே இல்லையா?”
ஞானியார் சொன்னார்:
“இருக்கிறது!
பள்ளம் என்று தெரியும்போது, அதில் விழாதே என்று எச்சரிப்பது மதி.
அதைப் பள்ளம் என்று தெரியவைத்தது விதி.
விதி வாசலைத் திறந்து கொடுத்தால், மதி மாளிகைக்குள்ளே நுழைகிறது.
விதி வாசலை மூடிவிட்டால், மதி அதிலே மோதிக் கொண்டு வேதனை அடைகிறது.
விதியென்னும் மூலத்திலிருந்து முளைத்த கிளையே மதி.
தந்தையைக் கொன்று சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய இளவரசர்களைப்போல் மதி சிலநேரம் விதியை வென்றிருக்கலாம்.
ஆனால் விதி அந்த மதியின் குழந்தையாக மறுபடியும் பிறந்து தந்தையைக் கொன்றுவிடுகிறது.
நியமிக்கப்பட்ட தர்மங்கள் சலனமடைவதும், நியமிக்கப்படாதவை உறுதிபெறுவதும், நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியினாலே.
அதை என்ன பெயர் வைத்து அழைத்தாலும், அதுதான் நம்மை அழைத்துச் செல்கிறது.
சாமியாக இருந்தவன் யோகியாக மாறுவது அனுபவத்தால் வந்த மதி.
யோகி சாமியாக மாறுவது ஆசையின் மூலம் வந்த விதி.
தொடக்கம் பலவீனமானால், முடிவு பலமாகிறது.
தொடக்கம் பலமானால், முடிவு பலவீனமாகிறது.
தொடக்கமும் முடிவும் ஒரே மாதிரி இருந்தால் விதி வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.
அப்படி யாராவது இருக்கிறார்களா?”
ஞானியாரின் கேள்வி, கேள்வியாளரைச் சிந்திக்க வைத்தது.
கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் யோசித்தார்.
மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஞானியார் அமைதியாகக் கேட்டார்:
“உங்கள் மதி வேலை செய்யவில்லையா?”
கேள்வியாளர் அமர்ந்தார்.
ஞானியார் சொன்னார்:
“ஜனனத்துக்கு முன்பும் மரணத்திற்குப் பின்பும், நாம் எங்கிருந்தோம், எங்கு போகிறோம் என்று தெரியும்வரை நமக்கு அப்பாற்பட்டது ஒன்று இருக்கிறது.
இடைப்பட்ட வாழ்க்கையை அது நடத்துகிறது.
நான் துறவியானதும் நீங்கள் சம்சாரிகளானதும் நமது விருப்பத்தால் மட்டும் விளைந்தவை அன்று.
காலை வெயிலில், நமது நிழல் நம் உயரத்தைவிடப் பன்மடங்கு உயரமாக இருக்கிறது.
மதியத்தில் நம்மைவிட அது கூனிக்குறுகிக் காலடிக்குள் ஒண்டிக் கொள்கிறது.
மாலையில் அது மீண்டும் உயரமாகி விடுகிறது.
ஆனால், நம் உருவம் என்னமோ ஒரே மாதிரி இருக்கிறது.
நம் உருவமே விதி; நம் நிழலே மதி!”
மண்டபமே அதிரும்படி கையொலி கேட்டது.
சபை கலைந்தது.
கேள்வியாளர் மட்டும் வெளியே நின்றுகொண்டிருந்தார்.
“உங்கள் கேள்வியும் என் பதிலும் விதியல்ல; மதியே!
மதியால் விதியை ஆராய்ச்சி செய்யலாம். ஆட்சி செய்ய முடியாது” என்றபடி ஞானியார் நடந்தார்.
ஆனால், செய்த வினையும் செய்கின்ற தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும்.
கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக் கூட வரமாட்டான்.இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.
என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான பணம் கணக்குக் காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தரவேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.
வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.
அவர் ஏற்கெனவே ஒரு பணக்காரச் செட்டியாரையும், ஆச்சாள்புரத்துக்காரர் ஒருவரையும் ஏமாற்றியவர்.
அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.
ஏமாற்றி என்ன பயன்?
அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய் அன்றாடச் சோற்றுக்கே இன்று அலைமோதுகிறார்.
அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.
உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக் கொண்டு, அந்தப் `பாபாத்மா’ தினமும் கோவிலுக்கு வருகிறது.
நெற்றியில் கட்டுக்கட்டாக விபூதி; இரண்டு காதிலும் கதம்பப் பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.
அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.
முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.
ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான், கந்தன்.
ராஜாங்கம் கட்டி ஆண்டவனும்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.
இறைவனின் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.
குளத்திலே ஒரு ரூபாயைத் தவறிப் போட்டுவிட்டால், குளம் வற்றியதும் அது உன் கைக்கே கிடைக்கிறது, அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.
ஒரு நடைபாதையில் நீ கண்ணாடித் துண்டைப் போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.
குளிக்கும் அறையில் நான் எச்சிலைத் துப்பிவிட்டேன்.
ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளேபோனபோது, அது என் காலையே வழுக்கி விட்டது.
விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.
ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்காரர், ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!
பக்தி செய்யும் எல்லோருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.
அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.
`உண்மையே தெய்வம்,’ `அன்பே தெய்வம்’ என்று இந்துமதம் சொன்னது அதனால்தான்.
`நம்பினோர் கெடுவதில்லை’. இது நான்கு மறைத் தீர்ப்பு என்பது உண்மை தான்.
ஆனால் `கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.
அதுவும் உண்மைதான்.
காலங்களை நிர்ணயிக்கின்றவனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
மதத்துறையை `ஆத்மார்த்தத் துறை’ என்பது அதனால்தான்.
நதியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.
ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாவங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!
அவற்றுக்கு உடனே மன்னிப்பு உண்டு.
அறிந்து செய்யும் தவறு, தவறல்ல; அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!
நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாவக்கணக்கில் சேர்க்காதே.
சிறுவயதில் கடன்தொல்லை தாங்காமல் நான் `திருடியிருக்கிறேன்’, என் தாயின் பணத்தைத்தான்.
ஆனால் திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன்.
கடவுளை வேண்டியிருக்கிறேன் “இறைவா மன்னி” என்று.
அந்தத் தவற்றைக் கடவுள் மன்னிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?
என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர்கள் குறைவு.
உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.
என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.
ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.
எழுத்தின் மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.
பூமிக்குள்ளிருந்த தேரைக் குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.
தேரைக் குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.
ராமபிரான் கண்கள் கலங்கிவிட்டன.
“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே, ஏன் கத்தவில்லை?” என்றார்.
அதற்குத் தேரை சொன்னது:
“பெருமானே! யாராவது எனக்குத் துன்பம் செய்யும் போதெல்லாம் நான் `ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”
ராமபிரான் கண்ணீரோடு சொன்னார்:
“தேரையே, என்னை மன்னித்துவிடு. இது நான் அறியாமல் செய்த பிழை.”
தேரை சொன்னது,
“பெருமானே! `அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”
இந்து மதத்தைப் பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது.
இந்து மதத்தைப் பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஷயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை.
ஆனால், அவர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை நடக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை.
“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது” என்பது அவர்கள் வாதம்.
அப்படி விவாதித்தபோது கண்ணெதிரே நடந்த சாட்சியங்களை அவர்கள் காட்டவில்லை. தத்துவார்த்த விளக்கமே கூறினார்கள்.
அந்தத் தத்துவார்த்தம் என்னைப் போன்றவர்களுக்கு.
அந்தத் தத்துவப்படி நடந்த சம்பவங்களை நான் எழுதுவது உன்னைப் போன்றவர்களுக்கு.
பாவம் புண்ணியம் என்பதையெல்லாம், வெறும் தத்துவமாகவே கேட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினால் விளங்கும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.
வாழ்க்கை ஒழுக்கத்தை, சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறுத்துவது இந்து மதம்தான்.
அதன் பண்பாடுகள் உன்னதமானவை; அதன் சடங்குகள் அர்த்தமுள்ளவை.
மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது இந்துக்களிடம்தான். சில சின்னங்களை மங்கலமாகவும், சிலவற்றை அமங்கலமாகவும் அவர்கள் காட்டினார்கள்.
மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில், அமங்கல வார்த்தைகூடக் கேட்கக் கூடாது என்றார்கள்.
பெண்ணுக்கு மங்கலம் என்பது தாலி.
திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை மரணத்தின் போது தான் கழற்ற வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போதுகூடக் கழற்றக் கூடாது. அவ்வளவு புனிதமானது அது.
ஒரு உத்தமியின் கழுத்திலுள்ள தாலியை யார் அபகரித்தாலும், அந்தத் தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது, இந்துக்கள் நம்பிக்கை.
எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னால் நான் படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத்திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக்க விரும்பினேன்.
நன்கு பாடக்கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன்.
ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர் நான் ஒப்பந்தம் செய்தபோது வறுமையிலிருந்தார். அவருடைய மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை. அரக்கு மஞ்சளை மஞ்சள் நூலில் கோர்த்து அணிந்திருந்தார்.
தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதாக நடிகர் கூறினார். உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவரைக் கூட்டிக்கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டிற்குப் போனேன்.
நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான் அடகு வைக்கப்பட்டிருந்தன. தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன்.
அவர் பணத்தையும் வாங்கிக்கொண்டு, “ஏராளமான வட்டி பாக்கிஇருக்கிறது, இதை வட்டிக்கு வரவு வைத்துக் கொள்கிறேன்; தாலியைத் தரமுடியாது” என்று சொல்லிவிட்டார்.
பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை.
பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து அவர் புதிய தாலியையே வாங்கி, தன் மனைவியின் கழுத்தில் கட்டினார்.
என் படம் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த நடிகர் `இன்சால்வென்ட்’ ஆனார்.
ஆனால், மூன்றாவது மாதமே படம் வெளிவந்ததும் பத்துப் படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணமும் வந்தது. `இன்சால்வென்சி’யும் ரத்தாயிற்று. அவருடைய சொத்துக்கள் அவருக்கே திரும்பி வந்தன. இன்று அவர் சுகமாக நாடகங்களிலும் படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய மனைவி உத்தமி. புராண காலத்து சீதை, வரலாற்றுக் காலத்துக் கண்ணகிக்கு நிகரான சத்தியவதி.
அந்தச் சத்தியவதியின் தாலியை வைத்திருந்தாரே அவரது குடும்பம் பட்டபாடும், அதில் ஏற்பட்ட குழப்பமும், அவர் நோயில் இழுத்துக் கிடந்து மாண்டதும் விவரிக்க முடியாத பெருங்கதை.
அந்தத் `தாலி’ அவரது குடும்பத்தின் நிம்மதியையே அழித்து விட்டது. இந்துக்களின் மங்கல சூத்திரம் தன் சக்தியைக் காட்டிவிட்டது.
பாவத்தின் விலை, அவரது வாழ்நாளிலேயே கிடைத்து விட்டது. நிற்க.
“அன்னையும் பிதாவும் முதல் தெய்வம்” என்பது இந்துக்கள் சம்பிரதாயம்.
“தாயைப் பணிந்தவன் கோவிலுக்குப் போக வேண்டாம்” என்பார்கள்.
தாய் தந்தையைச் சுற்றி வந்த கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.
தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒரு பக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிக்கவில்லை என்றும், இறைவன் ஆத்திரமுற்றபோது `தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாகக் கூறினான் என்றும், இறைவனே மனமயங்கி, அவன் பாதத்தில் விழுந்தான் என்றும் நாம் படிக்கிறோம்.
அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும் எவனுக்கும் எதிர்காலம் உண்டு.
நான் கண்ணெதிரிலேயே பார்க்கிறேன், பலரை.
ஆனால், தாயின் குரலைக் கேளாத ஒருவருடைய கதையை உனக்குச் சொல்ல வேண்டும்.
அவர் என்னுடைய சமூகத்தைச் சேர்ந்தவர்; ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர்.
அவரது விதவைத் தாய் தன் வயிற்றைக் கட்டிவைத்து மகனுக்குச் சோறூட்டுவாள்.
எங்கள் பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத பணக்காரர்கள் `சுவிகாரம்’ எடுக்கும் பழக்கம் பரவலாக உண்டு.
அந்தச் சுவிகாரத்தில் பிள்ளையைப் பெற்ற தாய்க்கு விலையாக ஒரு தொகையையும் தருவார்கள்.
அந்தத் தொகைக்காகவும், தன் பிள்ளையாவது நல்ல இடத்தில் வாழட்டுமே என்று சுவிகாரம் விட்டு விட்டாள், அந்தத் தாயார்.
ஏழை மகன் லட்சாதிபதியானான். பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். வசதியான வாழ்க்கையில், பெற்ற `தாயையே’ மறந்துவிட்டான்.
அவனால் மறக்கமுடிந்தது; தாயினால் அது முடியவில்லை.
ஒருநாள் நான் அந்த மனிதனைப் பார்க்கப் போனேன். காய்கிற வெயிலில், அந்த வீட்டின் வெளித்திண்ணையில் அந்த அம்மையார் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைப் பார்த்ததும் “ஐயா, நீ யார்?” என்று கேட்டார்கள்.
“என்ன ஆச்சி? என்ன வேண்டும்?” என்று நான் கேட்டேன்.
உடனே அந்த மூதாட்டி, “தம்பி, உள்ளே இருப்பது என் பிள்ளைதான். சுவிகாரம் விட்டு விட்டேன். அவனைப் பாக்குறதுக்காகக் காலையில் இருந்து திண்ணையிலேயே உட்கார்ந்திருக்கேன். ஒருத்தரும் விடமாட்டேங்கிறாங்க. நீயாவது எம் மகங்கிட்ட கொஞ்சம் சொல்லேன்” என்றார்கள்.
என் கண்கள் கலங்கிவிட்டன.
ஆசையாக, ஒரு கூடையில் பணியாரமும் உளுந்துவடையும் கொண்டு வந்து, துணியால் அதை மூடி வைத்திருக்கிறார்கள், தன் மகனுக்குத் தன் கையாலேயே ஊட்டி விடுவதற்காக.
நான் வேகமாக உள்ளே போய், அந்தப் பையனைப் பார்த்து, “உன்னைப் பெற்ற தாயார் வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உள்ளே கூப்பிட்டு உட்கார வையப்பா” என்றேன்.
அவர் கோபமாக, “அவுங்களுக்கு எப்பவும் இதே வேலையாய்ப் போச்சு. வராதே வராதேன்னா எதுக்காக வர்ராக?” என்று கூறிவிட்டு, கணக்குப் பிள்ளையை அழைத்து, “இந்தா, ஆத்தா வந்திருக்காளாம், ஒரு இருநூறு ரூபாய் கொடுத்து, இனிமே இந்தப் பக்கம் வரவேண்டாம் என்று சொல்லு” என்றார்.
“அதை நீயே கூப்பிட்டுச் சொல்லேன்” என்றேன் நான்.
அவர் மறுத்துவிட்டார், மனைவிக்குப் பயந்து.
கணக்குப்பிள்ளை அந்தப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்ததும் அந்த அம்மையார்.
“அப்பச்சி! தம்பி! ஐயா! ஒருதரமாவது பார்த்துட்டுப் போயிடுறேன்!” என்று சத்தம் போட்டார்கள்.
அந்தக் குரல் அந்தப் பாவியின் காதில் விழவில்லை. விளைவு என்ன தெரியுமா?
தாயின் குரலைக் கேட்காத அந்தக் காதுகள், வேறு எந்தக் குரலையும் கேட்க முடியாதபடி, `டமாரச்’ செவிடாகி விட்டன.
மனைவி மயக்கத்தில் மாதாவை மறந்தவன் கதி என்ன என்பதைப் புராணங்களைப் படித்து நீ நம்பவில்லையானால், உன் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பார். இப்படியொரு சம்பவம் அங்கேயும் நடந்திருக்கும்.
தாய் தகப்பனுக்குச் செய்யும் பாவம் உன் தலையைச் சுற்றி அடிக்கும்.
ஆயிரம் மனைவிமார்களை விலைக்கு வாங்கலாம்; அன்னையும் பிதாவும் மறுபடி வரமுடியாது.
இந்துக்கள் சொன்ன தத்துவம் வேடிக்கைக் கதையல்ல.
`யாருக்கு நீ பாவம் செய்தாலும் அதற்குத் தண்டனை உண்டு’ என்பது அழிக்க முடியாத உண்மை.
இத்தகைய நிகழ்ச்சிகளை நான் விவரித்துக் கொண்டே போகலாம்.
எவ்வளவோ பாவிகள் தங்கள் வாழ்நாளிலே தண்டிக்கப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.
`பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனை’ என்பது, எவ்வளவு உண்மை!
இறைவன் தீர்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை இந்துக்கள் சொன்னது போல் வேறு யார் சொன்னார்கள்?
இறைவா, இந்து சமூகம் உன்னையும் உன் ராஜாங்கத்தையும் சரியாக அளந்து வைத்திருப்பதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன்.
சொந்த நிகழ்ச்சிகளில் இந்த அனுபவத்தைக் காணாதவரை, ஞானமார்க்க உபதேசிகளை நான் கேலி செய்ததுண்டு.
ஒவ்வொரு படிக்கட்டிலும், ஒவ்வொரு உண்மையைக் காணக் காண, நமது ஞானிகள் `அறிவுலகத்தின் சுடரொளிகள்’ என்றுதான் நான் நம்புகிறேன்.
இசையின் சுவையைப் பாடல் அதிகப்படுத்துவது போல், தத்துவத்தின் உண்மையைச் சம்பவங்களே உறுதி செய்கின்றன.
`இந்து மகாசமுத்திரம்’ என்ற பெயர், இந்துமதத்துக்கே பொருந்தும்.
`பாவமும் குற்றமும் செய்துவிட்டுத் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?’
இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள்.
பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம் என்ற வார்த்தைகளைக் கேட்கின்ற இளைஞனுக்கு, அவை கேலியாகத் தெரிகின்றன.
`நரம்பு தளர்ந்துபோன கிழவர்கள், மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை’ என்று அவன் நினைக்கிறான்.
நல்லதையே செய்தால் சொர்க்கத்துக்குப் போவாய் என்றும், அங்கே வகைவகையாக விருந்துகள் உனக்குக் காத்திருக்கும் என்றும், தீங்கு செய்தால் நரகத்துக்குச் செல்வாய் என்றும், அங்கே உன்னை எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுத்தெடுப்பார்கள் என்றும் சொல்லப்படும் கதைகள் நாகரிக இளைஞனுக்கு நகைச்சுவையாகத் தோன்றுவதில் வியப்பில்லை.
ஆனால் இந்தக் கதைகள், அவனை பயமுறுத்தி, அவன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதற்காகவே தோன்றிய கதைகள்.
அவனுடைய பற்றாக்குறை அறிவைப் பயமுறுத்தித்தான் திருத்த வேண்டும் என்று நம்பிய நம் மூதாதையர் அந்தக் கதைகளைச் சொல்லி
வைத்தார்கள்.இந்தக் கதைகள் நூற்றுக்கு ஐம்பது பேரையாவது திருத்தியும் இருக்கின்றன என்பதை அறிந்தால், நம் மூதாதையர் நம்பியுரைத்த கற்பனைகள்கூட, எவ்வளவு பலனை அளிக்கின்றன என்பதை அவன் அறிவான்.
பாவம் புண்ணியம் பற்றிய கதைகளை விடு; பரலோகத்துக்கு உன் ஆவி போகிறதோ இல்லையோ, இதை நீ நம்ப வேண்டாம்.
ஆனால், நீ செய்யும் நன்மை தீமைகள், அதே அளவில் அதே நிலையில், உன் ஆயுட்காலத்திலேயே உன்னிடம் திரும்பிவிடுகின்றன.
அந்த அளவு கூடுவதுமில்லை, குறைவதுமில்லை.
ஒருவனை எந்த வார்த்தை சொல்லி நீ திட்டுகிறாயோ, அதே வார்த்தையில், எப்போதாவது ஒரு முறை நீ திட்டப்படுகிறாய்.
“எப்படித் தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள்” என்று கிறிஸ்தவ வேதம் கூறுகிறது.
“செய்த வினை, அதே வடிவத்தில் திரும்ப வரும்” என்று முதன் முதலில் போதித்தது இந்துமதம் தான்.
“பாவம் என்பது நீ செய்யும் தீமை.”
“புண்ணியம் என்பது நீ செய்யும் நன்மை.”
“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.”
“அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.”
“விநாச காலே விபரீத புத்தி.”
இவையெல்லாம் இந்துக்களின் பழமொழிகள்.
ஊரைக் கொள்ளையடித்து, உலையிலே போட்டு, அதை உயில் எழுதி வைத்துவிட்டு மாண்டவன் எவனாவது உண்டா?
பிறர் சொத்தைத் திருடிக்கொண்டு, அதை நிம்மதியாக அனுபவித்து, அமைதியாகச் செத்தவன் எவனாவது உண்டா?
அப்படி ஒருவன் இருந்தாலும், அவன் எழுதி வைத்த உயிலின்படி அவன் சொத்துக்கள் போய்ச் சேர்ந்ததுண்டா?
எனக்குத் தெரிந்தவரை அப்படிப்பட்ட சொத்துக்களை நீதி மன்றத்தால் நியமிக்கப்படும் `ரிஸீவர்’கள்தான் சாப்பிட்டிருக்கிறார்கள். இறந்தவனுடைய சந்ததி சாப்பிட்டதில்லை.
கொலை செய்துவிட்டுத் தலைமறைவாகி, தண்டனையில்லாமல் நிம்மதியாக வாழ்ந்து, வலி இல்லாமல் செத்தவன் உண்டா?
எனக்குத் தெரிந்தவரை இல்லை.
ஒருவன் செய்த எந்த பாவமும் அவன் தலையைச் சுற்றி ஆயுட்காலத்திலேயே அவனைத் தண்டித்து விட்டுத்தான் விலகியிருக்கிறது.
“பாவத்தின் சம்பளம் மரணம்” என்கிறது கிறிஸ்துவ வேதம்.
இல்லை, பாவத்தின் சம்பளம் வயதான காலத்தில்
திரும்பவரும் சிறு சேமிப்பு நிதி; சரியான நேரத்தில்
அவனுக்குக் கிடைக்கும் போனஸ்!
சாவுக்குப் பின் நடப்பது இரண்டாவது விசாரணை!
முதல் தீர்ப்பு அவன் ஆயுட்காலத்திலேயே அளிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு விடுகிறது.
எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது 1953ஆம் ஆண்டு டால்மியாபுரம் போராட்டத்தில் பதினெட்டு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, நானும், நண்பர் அன்பில் தர்மலிங்கமும், மற்றும் இருபது பேரும் திருச்சி மத்திய சிறையில் இருந்தோம். அங்கே தூக்குத் தண்டனை பெற்ற கைதிகள் சிலரும் இருந்தார்கள்.
அவர்களைத் தனித்தனியாகச் சில அறைகளில் பூட்டி வைத்திருந்தார்கள்.
அவர்களிலே, `மாயவரம் கொலை வழக்கு’ என்று பிரபலமான வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஏழு பேர்.
செஷன்ஸ் கோர்ட் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர் திரு. சோமசுந்தரம்.
பெரும்பாலான கொலை வழக்குகளில் அவர் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவது வழக்கம்.
காரணம், பன்னிரண்டு வருடங்கள் கழித்துத் திரும்பப் போகும் குற்றவாளி நல்லவனாகத் திரும்பி வந்து அமைதியான வாழ்க்கை வாழ்வான் என்ற நம்பிக்கையே!
அவர் சட்டத்தோடு தர்மத்தையும் கலந்தே யோசிப்பார்.
செஷன்ஸ் கோர்ட்டின் தூக்குத் தண்டனையொன்றை அவர் ஊர்ஜிதம் செய்கிறார் என்றால், அதை ஆண்டவனே ஊர்ஜிதம் செய்ததாக அர்த்தம்.
மாயவரம் கொலை வழக்கில் ஏழு கைதிகளின் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
அவரைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டும், அதை ஊர்ஜிதம் செய்தது.
ஜனாதிபதிக்கு கருணை மனு போயிற்று. அவரும் தூக்குத் தண்டனையை ஊர்ஜிதம் செய்தார்.
காரணம், நடந்த நிகழ்ச்சி அவ்வளவு பயங்கரமானது.
மாயவரத்தில் நாற்பது வயதான ஒரு அம்மையார், விதவை. அந்த வயதிலும் அழகாக இருப்பார்.
சுமார் அறுபதினாயிரம் ரூபாய் பெறக்கூடிய நகைகளை அவர் வைத்திருந்தார்.
சொந்த வீட்டில் ஒரு வேலைக்காரப் பெண்ணை மட்டுமே துணையாகக் கொண்டு வாழ்ந்திருந்தார்.
அவரை மோப்பமிட்ட சிலர், ஒருநாள் இரவு அவர் வீட்டுக்குள் புகுந்தார்கள்.
ஐந்து பேர் அவரைக் கற்பழித்தார்கள். அந்த அம்மையார் மூச்சுத் திணறி இறந்து போனார்.
சிறைச்சாலையில் அந்த ஏழு பேரில் ஆறு பேர் “நாளை தூக்குக்குப் போகப் போகிறோமே!” என்று துடித்துக் கொண்டிருந்தார்கள். “முருகா முருகா” என்று ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால், ஒருவன் மட்டும் சலனம் இல்லாமல் அமைதியாக இருந்தான்.
சிறைச்சாலையில் தூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை மற்ற கைதிகள் அணுகிப் பேச முடியாது.
நானும் நண்பர் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, அவர்களை அணுகினோம்.
சலனமே இல்லாமலிருந்தானே அந்த மனிதன், அவனிடம் மட்டுமே பேச்சுக் கொடுத்தோம்.
உடம்பிலே துணிகூட இல்லாமல் சிறைச்சாலை விதிகளின்படி நிறுத்தப்பட்டிருந்த அந்த மனிதன், அமைதியாகவே பேசினான்.
நாளை சாகப்போகிறோம் என்ற கவலை அவனுக்கில்லை. அவன் சொன்னான்:
“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதது மாதிரி `அலிபி’ தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்துவிட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்று பேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”
அவன் சொல்லி முடித்தபோது, `அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’ என்ற பழமொழியே என் நினைவுக்கு வந்தது.
அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம்.
வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.
இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அழிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை.
முதற்கட்டம் வரவு என்றால், அடுத்த கட்டம் செலவு.
முதற்கட்டம் வறுமை என்றால், அடுத்த கட்டம் செல்வம்.
முதற்கட்டம் இன்பமென்றால், அடுத்த கட்டம் துன்பம்.
முதற்கட்டமே துன்பமென்றால், அடுத்த கட்டம் இன்பம். இறைவனது தராசில் இரண்டு தட்டுகளும் ஏறி ஏறி இறங்குகின்றன.
`இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில்’ என்றான் வள்ளுவன்.
எல்லாச் செல்வங்களையும் நிரந்தரமாக எவனுக்கும் இறைவன் வழங்கியதில்லை.
அந்த நாளில் எனக்கு நல்ல பசியெடுத்தது; உணவு கிடைக்கவில்லை.
பின் பசியுமிருந்தது; உணவும் கிடைத்தது.
இப்போது உணவு கிடைக்கிறது; பசியில்லை.
அடுக்கடுக்காகப் பணம் சேர்த்து, ஆயிரம் வேலிக்கு மிராசுதாரர் ஆனார் ஒருவர். ஆன மறுநாளே, அவரை `அரிசி சாப்பிடக் கூடாது; சர்க்கரை வியாதி’ என்று சொல்லிவிட்டார் டாக்டர்.
சீனாவில் மாசேதுங் புரட்சி நடந்தபோது பல ஆண்டுகள் காடுமேடுகளில் ஏறி இறங்கினார். மனைவியைத் தோளில் தூக்கிக் கொண்டு அலையக்கூட வல்லமை பெற்றிருந்தார்.
புரட்சி முடிந்து, பதவிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் நோயில் படுத்தார்.
ரஷ்யாவில் லெனின் கதையும் அதுதான். புரட்சி நடக்கும்வரை லெனின் ஆரோக்கியமாகவே இருந்தார். பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே படுக்கையில் விழுந்தார்; சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார்.
எனது தி.மு.க. நண்பர்கள் ஒவ்வொருவரும் கடுமையான உழைப்பாளிகள். ரயிலிலும் கட்டை வண்டிகளிலும், கால்நடையாகவும் சென்று கூட்டத்தில் பேசுவார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைச் சாலைக்குப் போவார்கள்.
அப்பொழுதெல்லாம் அவர்கள் உடல்நிலை நன்றாகவே இருந்தது.
அவர்கள் பதவிக்கு வந்து நிம்மதியாக இருக்க வேண்டிய நேரத்தில் அவர்களில் பலருடைய ஆரோக்கியம் கெட்டுவிட்டது.
எனது நண்பர் ஒருவர் படமெடுத்தார். முதற்படமே அபார வெற்றி. அளவு கடந்த லாபம்.
அடுத்த படத்திலிருந்து விழத் தொடங்கியது அடி. இன்னும் அவர் எழ முடியவில்லை.
இன்னொரு பட அதிபர்…
ஊமைப்படக் காலத்திலிருந்து தொழிலில் இருக்கிறார். ஆரம்பக் கட்டத்தில் பல படங்கள் அவருக்குக் கை கொடுக்கவில்லை. மிகுந்த சிரமப்பட்டு சென்னைக்கு வந்து ஒரு படம் எடுத்தார்.
அவரது `வாழ்க்கை’யையே அந்தப் படம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள்.
அந்தப் படம் அமோகமாக ஓடியது.
ஒரு புது நடிகையை நட்சத்திர நடிகையாக்கிற்று.
அது தெலுங்கிலும் வெற்றி; இந்தியிலும் வெற்றி. அது முதல் அவர் தொட்டதெல்லாம் வெற்றி.
பிறப்பிலிருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர்கள் எத்தனை பேர்? கண்களை மூடிக்கொண்டு எண்ணிப் பாருங்கள்.
ஒரு கட்டம் அப்படி என்றால், மறு கட்டம் இப்படி!
ஏற்றம் என்பது இறைவன் வழங்கும் பரிசு.
இறக்கம் என்பது அவன் செய்யும் சோதனை.
நீ நினைப்பது எல்லாமே நடந்துவிட்டால், தெய்வத்தை நம்ப வேண்டாம்.
எப்போது நீ போடும் திட்டம் தோல்வியுறுகிறதோ அப்போது உனக்கு மேலானவன் அதை நடத்துகிறான் என்று பொருள்.
எப்போது உன் திட்டங்கள் வெற்றி பெறுகின்றனவோ, அப்போது இறைவன் உனக்கும் அனுமதியளித்து விட்டான் என்று பொருள்.
`ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட்டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்
ஒன்றை
நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்’
என்பது முன்னோர் பழமொழி.
`கற்பகத்தைச் சேர்ந்தார்க்குக்
காஞ்சிரங்காய் ஈந்தேன்
முற்பவத்தில் செய்தவினை’
இதுவும் அவர்கள் சொன்னதே.
உனது வாழ்க்கை பூஜ்ஜியத்திலே ஆரம்பமாகிறது. அதற்கு முன்பக்கம் நம்பர் விழுந்தால் இறைவனின் பரிசு; பின்பக்கம் விழுந்தால் அவனது சோதனை.
மேடும் பள்ளமுமாக வாழ்க்கை மாறி மாறி வந்தால் உனக்குப் பெரிய வீழ்ச்சியில்லை. ஒரேயடியாக உச்சிக்கு நீ போய்விட்டால் அடுத்து பயங்கரமான சரிவு காத்திருக்கிறது.
என் வாழ்க்கை மேடும் பள்ளமுமாகவே போவதால், என் எழுத்து வண்டி இருபத்தைந் தாண்டு காலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆம், இறைவனின் சோதனை எவனையும் விடாது என்பதற்கு, இந்தக் கதைகளை நமது இந்துமத ஞானிகள் எழுதி வைத்தார்கள்.
துன்பங்கள் வந்தே தீருமென்றும், அவை இறைவனின் சோதனைகள் என்றும், அவற்றுக்காகக் கலங்குவதும் கண்ணீர் சிந்துவதும் முட்டாள்தனமென்றும் உன்னை உணர வைத்து, துன்பத்திலும் ஒரு நிம்மதியைக் கொடுக்கவே அவர்கள் இதை எழுதி வைத்தார்கள்.
இந்தக் கதைகளை `முட்டாள் தனமானவை’ என்று சொல்லும் அறிவாளிகள் உண்டு.
ஆனால், முட்டாள்தனமான இந்தக் கதைகளின் தத்துவங்கள் அந்த அறிவாளிகளின் வாழ்க்கையையும் விட்டதில்லை.
நான் சொல்ல வருவது, `இந்து மதத்தின் சாரமே உனது லவுகிக வாழ்க்கையை நிம்மதியாக்கித் தருவது’ என்பதையே.
துன்பத்தைச் சோதனை என்று ஏற்றுக்கொண்டுவிட்டால், உனக்கேன் வேதனை வரப்போகிறது?
அந்தச் சோதனையிலிருந்து உன்னை விடுவிக்கும்படி நீ இறைவனை வேண்டிக்கொள்; காலம் கடந்தாவது அது நடந்துவிடும்.
தர்மம் என்றும், சத்தியம் என்றும், நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்களல்ல.
வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.
`வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. `போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.
ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.
ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.
சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.
என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.
சிறு வயதில் வேலையின்றி அலைந்தபோது “மாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா?” என்று ஏங்கினேன்.
கொஞ்ச நாளில் கிடைத்தது.
மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
“மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது, வேறொரு பத்திரிகையில்.
பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.
அதுவும் கிடைத்தது.
மனது ஐநூறுக்குத் தாவிற்று.
அது ஆயிரமாக வளர்ந்தது.
ஈராயிரமாகப் பெருகிற்று.
யாவும் கிடைத்தன.
இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
`இவ்வளவு போதும்’ என்று எண்ணுகிற நெஞ்சு, `அவ்வளவு’ கிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.
குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன.
அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது.
ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.
ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.
ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.
பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!
“இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்” என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.
அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றவாளிகளே.
மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.
சிறைச்சாலையில் இருந்துகொண்டு, அவன் “முருகா, முருகா!” என்று கதறுகிறான்.
ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான் “பரம்பொருள் மீது பற்று வை; நிலையற்ற பொருள்
களின் மீது ஆசை வராது” என்கிறது இந்துமதம்.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” என்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் `தாமரை இலைத் தண்ணீர் போல்’ என்று போதித்தது இந்து மதம்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு, பாபமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்துமதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.
அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கே அல்லா மல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.
உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம், இந்து மதம்.
உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது `திருநீறு’ பூசச் சொல்லுகிறது.
உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே, `குங்குமம்’ வைக்கச் சொல்கிறது.
`இவள் திருமணமானவள்’ என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது `மாங்கல்யம்’ சூட்டுகிறது.
தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக் கூடாது என்பதற்காவே, அவளைத் `தலை குனிந்து’ நடக்கச் சொல்கிறது.
யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மூடிக் கொள்கிறார்களே, ஏன்?
ஏற்கெனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்?
எந்தவொரு `கவர்ச்சி’யும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டி விடக்கூடாது என்பதால்.
கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.
அதை மீட்க முடியாத பலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.
“பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சு” என்பது இந்துக்கள் பழமொழி.
கூடுமானவரை மனிதனைக் குற்றங்களில் இருந்து மீட்பதற்கு தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.
அந்தக் குற்றங்களில் இருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.
அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப் போன பின்புதான், அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.
ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்துமதம் என்பது வெறும் `சாமியார் மடம்’ என்ற எண்ணம் விலகிவிடும்.
நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள, உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.
ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?
“ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்” என்கிறார்.
“அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.”
“அதுபோல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.”
“விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகிவிடுகிறது” என்றார்.
அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்.
நீ சுத்த வைராக்கியனாக இரு. ஆசை வளராது. உன்னைக் குற்றவாளியாக்காது, உன் நிம்மதியைக் கெடுக்காது.
`மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்.
காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது.
தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள்.
தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.
அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத் தருமங்களாயின.
கணவன் மனைவி உறவு, தாய் தந்தை பிள்ளைகள் உறவு, தாயாதிகள் பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.
தந்தைவழித் தோன்றல்களெல்லாம் `பங்காளி’களாகவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் `சம்பந்தி’களாகவும், தாய்வழித் தோன்றல்கள் `தாயாதி’களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.
வார்த்தைகளைக் கவனியுங்கள்.
தந்தைவழி பங்குடையவன் என்பதாலே `பங்காளி’யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் `தாயாதி’ என்றும் கூறப்பட்டது.
`சகோதரன்’ என்ற வார்த்தையே `சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.
சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகி விட்டன.
இந்த உறவுகளுக்குள்ளும், பொதுவாகச் சமு கத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அவையும் சட்டங்களாகி விட்டன.
இந்தச் சட்டங்களே நமது சமுகத்தின் கவுரவங்கள்; இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.
இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும், நிம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?
இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.
“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை” என்பது இந்துமதத் தத்துவம்.
பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.
பெற்ற தந்தையைப் பிச்சைக்கு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டினி போடும் கணவன் இருக்கிறான்.
தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கிடக்கும் பிள்ளை இருக்கிறான்.
கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.
ச முக மரபுகள் இவற்றை ஒழுக்கக் கேடாகக் கருதவில்லை.
முதலில் நமது சமு கங்களுக்கு, `இவையும் ஒழுக்கக் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.
கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளிப் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்க முடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.
அந்த உறவு அந்த இரவுக்கு மட்டுமே!
அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையிலிருந்து விலகியதும், வேலை பார்த்த இடத்தை மறந்து விடுகிறோம். அந்தப் பிணைப்பு கூலிக்காகவே!
ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்குவது போல் சில உறவுகள், சொந்த வீட்டில் வாழ்வது போல் சில உறவுகள்.
ஆயிரம் வாசல் இதயம்! யாரோ வருகிறார்கள். யாரோ போகிறார்கள்!
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள்; வறண்டால் ஒதுங்குகிறார்கள்; செத்த பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.
இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர் ஆத்மா தாக்கப்படும் போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.
எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது.
கண்ணீரைத் துடைக்கின்ற கைகள், காயத்துக்குக் கட்டுப் போடும் கைகள், வறுமையில் பங்கு கொள்ளும் உள்ளம், சோதனையில் கூடவே வரும் நட்பு உறவு பூர்த்தியாகி விடுகிறது.
“அற்ற குளத்தி னறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் அக்குளத்திற்
கொட்டியு மாம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவா ருறவு!” என்றார் அவ்வையார்
இதற்குப் புராணத்திலிருந்து ஒரு பகுதியை உதாரணம் காட்டி விரிவுரை தருகிறார், திருமுருக கிருபானந்த வாரியார். அதை அவருடைய வாசகத்திலேயே தருகிறேன்.
`இடர் வந்த காலத்தில்தான் சிநேகிதர், பந்துக்கள் முதலியவர்களுடைய அன்பைத் திட்டமாக அளந்தறியலாம். நமக்கு வரும் இடர்தான், சிநேகிதரையும் உறவின் முறையினரையும் அளக்கும் அளவுகோல். ஆதலால் அக்கேட்டிலும் ஒரு பயன் உளது’ என்றார் பொய்யில் புலவர்.
கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
இது சம்பந்தமாக, தருமபுத்திரர் வினவ, பீஷ்மர் கூறிய வியாக்கியானத்தை எடுத்துக் காட்டுவோம்.
காசிராஜனுடைய தேசத்தில் ஒரு வேடன், விடமுள்ள பாணத்தை எடுத்துக்கொண்டு, சேரியிலிருந்து புறப்பட்டு மானைத் தேடிப் போனான். அங்கு ஒரு பெரிய வனத்தில் மான்கள் அருகிலிருக்கக் கண்டு, மாமிசத்தில் இச்சையுடைய அந்த வேடன், ஒரு மானையடிக்கக் குறிவைத்துக் கூரிய பாணத்தை விடுத்தான். தடுக்க முடியாத அந்தப் பாணம் குறி தவறியதால், அக்கானகத்திலுள்ள ஒரு பெரிய தழைத்த மரத்தின் மீது பாய்ந்தது. கொடிய விடந்தடவிய கணையினால் மிக்க வேகத்துடன் குத்தப்பட்ட அம்மரம், காய்களும் இலைகளும் உதிர்ந்து உலர்ந்து போயிற்று. வானளாவி வளர்ந்தோங்கியிருந்த அத்தருவானது அவ்வாறு உலர்ந்தபோது, அதன் பொந்துகளில் வெகுநாள்களாக வசித்திருந்த ஒரு கிளி, அம்மரத்தின் மேலுள்ள பற்றினால் தன்னிருப்பிடத்தை விடவில்லை. நன்றியறிவுள்ளதும் தருமத்தில் மனமுள்ளதுமாகிய அந்தக் கிளி வெளியிற் சஞ்சரியாமலும், இரையெடாமலும், களைப்புற்றும், குரல் தழுதழுத்தும், மரத்துடன் கூடவே உலர்ந்தது. மரஞ்செழிப்புற்றிருந்த போது அதனிடஞ் சுகித்திருந்தது போல், அது உலர்ந்து துன்புறும்போதும் அதனை விட்டுப் பிரியாமல் தானுந்துன்புற்றிருந்தது. அந்தக் கிளியின் உயர்ந்த குணத்தை நன்கு நோக்குங்கள்.
சிறந்த குணமுள்ளதும், மேலான சுபாவமுள்ளதும் மனிதர்க்கு மேற்பட்ட நல்லொழுக்கமுடையதுமான அக்கிளி, அம்மரத்தைப் போலவே சுகத்தையும் துக்கத்தையும் அனுபவித்துக் கொண்டிருப்பதைக் கண்ட தேவேந்திரன் திகைப்படைந்தான். `திரியக் ஜாதிகளுக்கு இல்லாத கருணையை இந்தப் பட்சி அடைந்திருப்பது எவ்வகை?’ என்று நினைத்தான்; பிறகு, `இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எல்லாப் பிராணிகளிலும் குணம், குற்றம் எல்லாம் காணப்படுகின்றன’ என்ற எண்ணமும் இந்திரனுக்கு உண்டாயிற்று.
இங்ஙனமெண்ணிய இந்திரன், மானிட உருவெடுத்து ஓர் அந்தணன் வடிவமாகப் பூமியில் இறங்கி, அந்தப் பட்சியைப் பார்த்து, “ஓ பட்சிகளிற் சிறந்த கிளியே! உன் தாயாகிய தா யி உன்னால் நல்ல சந்ததியுள்ளவளாக ஆகிறாள். கிளியாகிய உன்னை நான் கேட்கிறேன். உலர்ந்துபோன இந்த மரத்தை ஏன் விடாமலிருக்கிறாய்?” என்று கேட்டான்.
இமையவர் தலைவனாம் இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட கிளியானது அவனுக்குத் தலைவணங்கி நமஸ்காரம் புரிந்து, “தேவராஜாவே, உனக்கு நல்வரவு, நான் தவத்தினால் உன்னைத் தெரிந்து கொண்டேன்” என்று சொல்லிற்று. தேவேந்திரன் “நன்று! நன்று” என்று கூறி `என்ன அறிவு’ என்று மனத்திற்குள் கொண்டாடினான்.
இவ்வாறு சிறந்த செய்கையுள்ளதும், தருமத்தையே முக்கியமாகக் கொண்டதுமாகிய அந்தக் கிளியைப் பார்த்து இந்திரன், தான் கேட்பது பாபமென்று தெரிந்திருந்தும் கேட்கத் தொடங்கினான்.
“அறிவிற் சிறந்த பறவையே! இலைகளும் காய்களும் இன்றி உலர்ந்து, பறவைகளுக்கு ஆதரவற்ற இம்மரத்தை ஏன் காக்கிறாய்? இது பெரிய வனமாயிருக்கிறதே! இலைகளினால் முடப்பட்ட பொந்துகளும் சஞ்சரிக்கப் போதுமான இடமுள்ள இன்னும் அழகான மரங்களும் அநேகம் இப்பெரிய வனத்திலிருக்கையில் முதிர்ச்சி யடைந்து, சக்தியற்று, இரசம் வற்றி ஒளிகுன்றிக் கெட்டுப் போன இந்நிலையற்ற மரத்தைப் புத்தியினால் ஆராய்ந்து பார்த்து விட்டு விடு.”
அமேரேசனுடைய இந்த வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவான அந்தக்கிளி, மிகவும் நீண்ட பெருமுச்செறிந்து துயரத்துடன் பின்வருமாறு சொல்லத் தொடங்கிற்று:
“மகாபதியே! இந்திராணியின் கணவனே! யாவராலும் வெல்ல முடியாத தேவர்களிருக்கும் பொன்னுலகத்தில் வசிக்கும் நீ, நான் கூறுவதைத் தெரிந்து கொள். அநேக நற்குணங்கள் பொருந்திய இம்மரத்தில் நான் பிறந்தேன். இளமைப் பருவத்தில் நன்றாகப் பாதுகாக்கப்பட்டேன். பகைவர்களாலும் பீடிக்கப்படாமல் இருந்தேன். மழை, காற்று, பனி, வெயில் முதலிய துன்பங்களால் வருந்தாது, இத்தருவில் சுகித்திருந்தேன்.
வலாரியே! தயையும் பக்தியுமுள்ளவனாக வேறு இடம் செல்லாமலிருக்கும் என் விடயத்தில் அனுக்கிரகம் வைத்து என் பிறவியை ஏன் பயன்படாமற் செய்கின்றாய்? நான், அன்பும் பக்தியுமுள்ளவன். பாவத்தைப் புரியேன். உபகாரிகள் விடயத்தில் தயை செய்வதுதானே தருமத்திற்கு முக்கியமான இலக்கணம். தயை செய்வதே நல்லோர்களுக்கு எப்போதும் மனத்திருப்தியை உண்டாக்குகிறது. எல்லாத் தேவர்களும் தருமத்திலுள்ள சந்தேகங்களை உன்னிடத்திலேயே கேட்கின்றனர். அதனாலேயே, நீ தேவசிரேட்டர்களுக்கு அதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறாய். இந்திரனே! வெகுகாலமாக இருந்த மரத்தை நான் விடும்படி நீ சொல்வது தகாது. நல்ல நிலைமையிலிருந்ததை அடுத்துப் பிழைத்தவன், கெட்ட நிலைமைக்கு வந்தவுடன், அதை எப்படி விடலாம்?”
எக்காலமு மிப்பாதப மெனதாமென வைகி
முக்காலே முதிருங்கனி முசியாது கர்ந்தேன்
இக்காலமி தற்கிவ்வண மிடைறு கலந்தாற்
சுக்காதகல் வதுவோவுணர் வுடையோர்மதி தூய்மையே!
- மகாபாரதம்
இவ்வாறு கூறிய, பொருளடங்கியதும், அழகுடையதுமாகிய கிளியினது வசனங்களால் மகிழ்வுற்ற இந்திரன், அதன் நன்றியறிவையும் தயையையும் எண்ணித் திருப்தியுற்று, தருமம் தெரிந்த அக்கிளியைப் பார்த்து, “ஒரு வரம் கேள்!” என்று சொன்னான்.
அன்பர்காள்! அக்கிளியானது தன் நன்மையைக் குறித்து வரம் கேட்கவில்லை. அதனுடைய பெருங்குணத்தை உற்று நோக்குங்கள்!
எப்போதும், பிறர் நோவாமையைப் பெரிதாகக் கருதிய அந்தக் கிளி, “ஏ தேவர் கோமானே! இம்மரமானது நன்றாகச் செழித்துத் தழைத்து ஓங்க வேண்டும்!” என்றது.
அப் பறவையினுடைய உறுதியான பக்தியையும் நிரம்பின நல்லொழுக்கத்தையும் அறிந்து களிப்புற்ற இந்திரன் உடனே அம்மரத்தின் மீது அமிர்தம் பொழிந்தான். அதனால் அத்தரு, கனிகளும், இலைகளும், கிளைகளும் உண்டாகித் தழைத்தது.
கிளியினுடைய உறுதியான பக்தியால் அம்மரம் முன்னைக் காட்டிலும் மிகவும் நன்றாகச் செழித்தது.
நன்றியறிவு, தயை இந்தக் குணங்களின் பயனாகிய அச்செய்கையினால் கிளியும் அத்தருவில் இனிது மகிழ்ந்திருந்தது. தன் ஆயுள் முடிந்த பிறகு இந்திரலோகத்தை அடைந்தது.
-- Edited by devapriyaji on Wednesday 30th of November 2011 07:33:27 AM