கொலை வழக்கில் வீரபாண்டியாரின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ் கைதானதை அடுத்து... ‘எனக்கு எதிராக கட்சியில் சதி நடக்கிறது’ என வெளிப்படையாக பேசினார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இதற்கு தி.மு.க. தலைமையிடமிருந்து பெரிதாக எந்த ரியாக்ஷனும் வராத நிலையில்...
‘வீரபாண்டியாரும் தலைமையைப் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டார்’ என்ற குரல்கள் சேலத்தில் பலமாக ஒலிக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு சாட்சி சொல்லும் வகையில் சில காட்சிகளும் நடந்துவிட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 13&ம் தேதி இரவு சேலம் வழியாக ஈரோடு சென்றார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது, சேலம் மாவட்ட எல்லையில் ஸ்டாலினுக்கு தடபுடல் வரவேற்பு அளித்தார் பனமரத்துபட்டி எம்.எல்.ஏ. ராஜேந்திரன். (இவரைத்தான் தலைமை தனக்கு எதிராக தயார்படுத்துவதாக மறைமுகமாக குற்றம் சாட்டியிருந்தார் வீரபாண்டியார்.)
எப்போதுமே ஸ்டாலினுக்கு சேலத்து எல்லையில் வரவேற்பு என்றால் தனது மகன் வீரபாண்டி ராஜா எம்.எல்.ஏ. மூலமாக ஜாம், ஜாம் என்று ஏற்பாடுகள் செய்வார் வீரபாண்டியார். இந்த தடவை வரவேற்பு ‘மிஸ்ஸிங்’ ஆனதால் ஸ்டாலின் மீது இருக்கும் கோபத்தால்தான் வரவேற்க போகவில்லை என்ற ரீதியில் சேலம் மாவட்ட தி.மு.க.வில் சர்ச்சைகள் கச்சை கட்டி நிற்கின்றன.
இது பற்றி வீரபாண்டியாருக்கு நெருக்கமாக உள்ள தி.மு.க. புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
‘‘தனது தம்பி மகன் கைது செய்யப்பட்ட போதுகூட அமைச்சர் கொஞ்சம் அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ. உட்பட, தனக்கு நெருக்கமாக இருக்கும் கட்சி ஆட்கள் பக்கம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் பார்வையை திருப்பியதும் ரொம்பவே கோபமாகிவிட்டார்.
தனக்கு நெருக்கமானவர்களையே இந்த வழக்கில் சிக்க வைக்க யார் திட்டமிடுகிறார்கள் என்பதுதான் வீரபாண்டியாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது. தன் கட்சியில், தன் மாவட்டத்திலேயே இருப்பவர்கள்தான் இப்படி செய்கிறார்கள், அவர்களுக்கு ஸ்டாலின் ஆதரவு ரொம்பவே இருக்கிறது என்று தெரிந்ததும்தான் கோபமாக பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார்.
தன் பேட்டியைப் படித்துவிட்டாவது கலைஞர் தன்னிடம் பேசுவார் என்று எதிர்பார்த்த வீர-பாண்டியாரிடம் கலைஞர், ஸ்டாலின் யாரும் பேசவில்லை. இதனால் கோபம் அதிகமாகிப் போன வீரபாண்டியார், தன் துறை நிகழ்ச்சியான ஈரோடு மஞ்சள் வணிக வளாக அடிக்கல் நாட்டு விழாவையும் புறக்கணித்துவிட்டார். தனது அடுத்த வியூகம் பற்றியும் நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசித்து வருகிறார்’’ என்றார்கள் வருத்தமாக.
ராஜா ஆதரவாளர்களோ, ‘‘சட்டமன்றம் 12&ம் தேதி முடிந்து வீரபாண்டியாரும் ராஜாவும் மறுநாள் சேலத்துக்கு வர தாமதமானதால்தான் துணை முதல்வரை வரவேற்க செல்லவில்லை. மேலும் சத்தியமங்கலத்தில் துணைமுதல்வர் கலந்துகொண்ட பொதுக் கூட்டத்துக்கு ராஜா போனார். தன் அப்பாவின் வருத்-தங்களை ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்’’ என்கிறார்கள்.
இதற்கிடையில்... பாரப்பட்டி சுரேஷ் கைதான கொலை வழக்கில் ஆஜராகி வரும் அரசு வக்கீல் தம்பி-துரைக்கும், சேலம் பி.ஜே.பி. வழக்-கறிஞரான மணிகண்டனுக்கும் கடிதம், போன் மூலம் கொலை மிரட்டல்கள் வந்திருக்கின்றன. இதனால், விவகாரம் மேலும் சூடாகிக் கொண்டே செல்கிறது.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன், பாரப்பட்டி சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, அவரை ஜெயிலுக்குள் சென்று அமைச்சர் வீரபாண்டியார் பார்த்து சர்ச்சையை உண்டாக்கியிருப்பது... என்று சேலம் அரசியலே சூடாகித்தான் கிடக்கிறது.
இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஆளும் தரப்பைச் சேர்ந்த சேலம் புள்ளிகள், வரும் சட்ட-மன்றத் தேர்தலை மனதில் வைத்து பரபரப்பாக தொகுதி தேட ஆரம்பித்து விட்டார்கள்.
சேலம் மேயராக இருக்கும் தி.மு.க.வின் ரேகா பிரியதர்ஷினியும் தொகுதி தேடும் மும்முரத்தில் இருக்கிறார் என்பதுதான் சேலம் அரசியல் வட்டாரங்களில் அலையடிக்கும் பிரதான செய்தி.
‘‘மறுசீரமைப்புக்குப் பிறகு புதிதாக உருவாக்கப்-பட்டிருக்கும் கெங்கவல்லி தொகுதியில்தான் ரேகா பிரியதர்ஷினி போட்டியிட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்...’’ என்று சொல்லும் சேலம் தி.மு.க. உடன்பிறப்புகள், அதற்கான காரண காரியங்களையும் விளக்கிச் சொன்னார்கள்.
‘‘தலைவாசல் தொகுதியா இருந்ததுதான் இப்போ கெங்கவல்லி தொகுதி-யாக்கப்-பட்டிருக்கு. ரிசர்வ் தொகுதியாகவும் அறிவிக்கப்பட்டிருக்கு. சின்ன தொகுதிதான். அதனால எப்படியும் அங்க போட்டியிட்டு ஜெயிச்சிடலாம்ங்கறது ரேகாவோட கணக்கு.
சேலம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் அமைச்சர் வீரபாண்டியார் ஆதரவு இருந்தாதான் தேர்தல்ல நிக்கவே சீட் கிடைக்கும். கடந்த முறை தலைவாசல் தொகுதில நின்னு ஜெயிச்ச, சின்னதுரைக்கு இப்ப அமைச்சரோட இணக்கம் இல்லாம இருக்கு. அதனால, அவருக்கு தொகுதி கிடைக்க வாய்ப்பில்லை.
மத்திய அமைச்சரா இருந்த ஆ.ராசாவுக்கு ரொம்பவும் நெருக்கமா இருக்கும் சின்னதுரை, ஏற்கனவே தலைவாசல் தொகுதியில ஜெயிச்சவுடனேயே, மாவட்டத்துல முக்கியப் பொறுப்பு ஏதாவது வாங்கணும்னு தளபதி ஸ்டாலின் மூலமா முயற்சி செஞ்சாரு. இதுதான், அமைச்சர்கிட்டேயிருந்து அவரை விலக்கி வெச்சுடுச்சு. அதனால நிச்சயம் இம்முறை அவருக்கு அமைச்சர் சீட்டுக்காக சிபாரிசு செய்ய மாட்டாரு. இப்ப இருக்குற நிலைமையில ஆ.ராசாவும் தலைமைக்கிட்ட சிபாரிசு செய்வாரான்னும் தெரியலை.
கெங்கவல்லி தொகுதியைப் பொறுத்த வரையில் தாழ்த்தப்பட்டோர், மலையாளிகள் கொஞ்சம் அதிகமா இருக்கிறாங்க. தம்மம்பட்டி பகுதியில கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அதிகமா இருக்குற தொகுதி. இதனால கெங்கவல்லி தொகுதி நிச்சயம் தி.மு.க.வுக்கு சாதகமாகத்தான் இருக்கும்.
இதெல்லாத்தையும் மனசுல தேக்கித்தான், கெங்கவல்லித் தொகுதியை தனக்கு வாங்கித் தரச் சொல்லி அமைச்சர் வீரபாண்டியார்கிட்ட மேயர் ரேகா கேட்டிருக்காங்க. அவரும் உறுதி சொல்லியிருக்காராம். சமீபத்தில் நடந்த ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில கூட மேயர் ரேகா கலந்துக்-கிட்டதுக்கு முக்கியக் காரணம், தொகுதியை மனசுல வெச்சுத்தான்...’’ என்றார்கள்.
இதுபற்றி சின்னதுரை ஆதரவாளர்களிடம் கேட்டபோது, ‘‘தலைமை என்ன விரும்புதோ அதுதான் நடக்கும். மற்றபடி, இப்பவே யாரும் தொகுதிக்காக துண்டு போட வேண்டியதில்லை...’’ என்றார்கள்.
ரேகா பிரியதர்ஷினியிடம் கேட்டால், ‘‘தலைமை முடிவெடுக்கும் விஷயத்தில் நான் கருத்து சொல்ல முடியாது... சீட் கிடைத்தால் போட்டியிடுவேன்’’ என்றார்.
கல்லூரிக்கு மனைவி பெயரா? ராமதாஸை எதிர்க்கும் வன்னிய தலைவர்கள்! பதிலடி தரும் பா.ம.க.
வன்னியர்களிடமெல்லாம் வசூலித்து உருவாக்கிய அறக்கட்டளையின் பெயரால் நடத்தப்படும் கல்லூரிக்கு மனைவியின் பெயரைச் சூட்டலாமா?’ - என்று ராமதாஸுக்கு எதிராக கிளம்பியிருக்கிறார்கள், வன்னியர் இனத்துப் பிரமுகர்கள் பலரும். டாக்டர் ராமதாஸ், சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘வன்னியர் கல்வி அறக்கட்டளை’ ஒன்றைத் தொடங்கினார். இதன் அறங்காவலர்களாக ஜி.கே.மணி, காடுவெட்டி குரு, எம்.எல்.ஏ.க்கள் சுந்தரராஜன், கோபால், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி ஆகியோரை நியமித்தார்.
இந்த அறக்கட்டளைக்காக திண்டிவனத்திலிருந்து சென்னை செல்லும் சாலையில் கோனேரிக்குப்பம் என்ற இடத்தில் 250 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.
முதல்கட்டமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்தது.
கலைஞரை அழைத்து வந்து கல்லூரிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடத்தப்பட்டது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, அறக்கட்டளை சார்பில் கல்லூரி திறக்கப்பட்டது. அந்த கல்லூரிக்கு சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போதே, இதற்கு கடுமை-யான எதிர்ப்பு தெரிவித்தார்கள் வன்னிய இனப் பிரமுகர்கள்.
அடுத்தகட்டமாக, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆரம்பிக்கும் முயற்சியில் இறங்கினார். அதற்கான அனுமதி அரசிடமிருந்து சமீபத்தில் கிடைத்துவிட, புதிய கல்லூரியை கடந்த அக். 20&ம் தேதி கவர்னர் பர்னாலாவை வைத்து ஆரம்பித்து விட்டார் டாக்டர் ராமதாஸ்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் மனைவி சரஸ்வதி பெயரையே சூட்ட... ராமதாஸுக்கு எதிராக கொதித்து கிளம்பியிருக்கிறார்கள், முன்பே எதிர்ப்பு காட்டியவர்கள். ராமதாஸுக்கு எதிராக கொந்தளித்துக் கொண்டிருக்கும் திண்டிவனம் பகுதி வன்னியர் சங்க நிர்வாகிகள் சிலர் நம்மிடம், “1980-ம் ஆண்டு 28 சங்கங்களை ஒன்றிணைத்து தொடங்கப்பட்டதுதான் வன்னியர் சங்கம். தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கான அடித்-தள-மாக இதைத்தான் வைத்துக் கொண்டார் ராமதாஸ். ஆனால், அரசியல் மூலம் அதிகாரத்தைக் கையில் எடுத்ததும், சங்கத்தை சுத்தமாக மறந்தார்.
இப்பவும் அப்படித்தான் செய்கிறார். அரசியல் ரீதியாக பலவீனமாக இருக்கிறோம் என்றதும், வன்னியர் கல்வி அறக்கட்டளை ஒன்றை ஆரம்-பித்திருக்கிறார். அதன் துவக்க விழாவுக்கே வன்னியர்-களுக்காக பாடுபட்டு வரும் தலைவர்கள் யாரையும் அழைக்க-வில்லை.
வன்னியர் அறக்கட்டளை என்ற பெயரில் வன்னியர்களிடம் வசூல் நடத்தி நிதி சேகரித்த ராமதாஸ், அறக்கட்டளை பெயரில் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு மனைவி பெயரைச் சூட்டியது தவறான செயல்’’ என்று ஆதங்கத்தைக் கொட்டினார்கள். வன்னியர் சங்கம் வளர பணியாற்றியவர்களில் முக்கியமானவரான தீரன் நம்மிடம் பேசும்போது,
“சிதம்பரத்தில் உள்ள வன்னியர் வளர்ச்சிக் கழகத்திற்குச் சொந்தமான இடத்தை அறக்-கட்டளை என்ற பெயரில் தனது மகன் பெயருக்கு மாற்றிக் கொண்டுவிட்டார் ராமதாஸ். வன்னியர் குல சத்ரிய மகாசங்கத்திற்குச் சொந்தமான சென்னை, புரசைவாக்கம் குட்டித் தெருவில் உள்ள இடத்தையும் அபகரித்து விட்டார்கள். தர்மபுரியிலும் ஒரு இடத்தையும் தங்களுடையதாக்கி விட்டார்கள். அறக்கட்டளை சார்-பாக அமைக்கப்பட்டிருக்கும் கல்வி நிறுவனத்துக்கு மனைவி பெயரை ஏன் சூட்டியிருக்கிறார் ராமதாஸ்? வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்தை அமைத்துவிட்டால், அறக்கட்டளை நிர்வாகிகளையே மாற்றலாம். அதற்-காகத்தான் முயன்று வருகிறேன்...’’ என்றார்.
வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகி சி.என்.ராமமூர்த்தி, “வன்னியர் சங்கத்தை எதிர்த்த-வர்கள் தான் இந்த சரஸ்வதி அம்மையாரும், அன்புமணியும். 21 வன்னியர்கள் உயிரைக் கொடுத்து வன்னியர் சங்கத்தை உருவாக்கினார்கள். அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று எண்ணியிருந்தால், அறக்கட்டளை சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் கல்லூரிக்கு, ‘சமூகநீதி போராட்ட தியாகிகள் நினைவுக் கல்லூரி’ என்று பெயர் வைத்திருக்கலாமே?’’ என்றார்.
அடுத்து வன்னியர் சங்கத் தலைவர் ஏ.கே. நடராஜன் பேசும்போது, ‘‘ஆளவந்தான் அறக்-கட்டளை என்று ஒன்று உள்ளது. ஆயிரம் வேலி நிலங்களை வன்னியர்களுக்காக ஆளவந்தான் என்பவர் அறக்கட்டளைக்கு கொடுத்தார். ‘என் ஆயுட்காலம் வரை இந்த நிலங்களை ஒரு வாட்ச்மேனாக இருந்து காவல் காக்க நினைக்கிறேன்’ என்று கூறினார். அவர் எங்கே? அறக்கட்டளை கல்வி நிறுவனத்துக்கு தனது மனைவி பெயரை வைக்கும் ராமதாஸ் எங்கே?” என்றார்.
பாட்டாளி முன்னேற்றக்கழக தலைவர் பு.தா.இளங்கோவனிடம் பேசுகையில்,
“பணத்துக்காகவே எதையும் செய்யும் ராமதாஸ் குடும்பம், வன்னிய இனத்துக்காக எதையும் செய்ததில்லை. இந்த அறக்கட்டளையும் அப்படித்தான்...’’ என்றார்.
பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் எம்.பி.யும், அறக்கட்டளையின் உறுப்பினருமான தன்ராஜிடம் இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து கேட்டபோது, ‘‘அறக்கட்டளைக்கான இடங்கள் அனைத்தையும் வாங்கியதில் பெரும்பங்கு சரஸ்வதி அம்மையாருக்கு உண்டு. முதலில், ‘கல்விக் கோயில்’ என்றுதான் பெயரிடப்பட்டது. கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்பதாலும், இதை நிறுவதற்காகப் பாடுபட்ட அம்மையாரையும் சேர்த்து குறிக்கும் வகையில்தான் சரஸ்வதி என்று கல்லூரிகளுக்கு பெயரிடப்பட்டது. மற்றபடி, இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை.
டாக்டர் ஐயாவின் குடும்பத்தினரோ, பா.ம.க.-வினரோ வன்னியர் சங்கத்துக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. வன்னியர்கள் சொத்துக்களை வளைக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை மனசாட்சியுள்ள எந்த வன்னியரும் ஏற்க மாட்டார்கள். கல்விக் கோயில் சிறப்பாக செயல்பட, இப்படி குற்றம்சாட்டுபவர்களும் பங்கெடுத்துக் கொள்ளலாம். தடை-யில்லை’’ என்றார்.
அழகிரி பெயரில் அடாவடி: வளைக்கப்படும் உடன்பிறப்புகள்!
நாகேஷ் பாணியில் சொன்னால், ‘‘பிரிக்க முடியாதது... மதுரை தி.மு.க. உடன்பிறப்புகள் சிலரும் அவர்கள் செய்யும் அடாவடியும்’’ என்று சொல்லும் அளவுக்கு சீரியஸாகிக் கொண்டிருக்கிறது மதுரை ஏரியா.
‘‘அண்ணன் அழகிரியின் ஆட்கள் நாங்கள்...’’ என்று சொல்லியே அவர்கள் அடாவடியில் ஈடுபட, அழகிரிக்கு எதிராக மதுரை மக்கள் அவ்வப்போது கொதித்து அடங்குகிறார்கள். இதனை நன்கு உணர்ந்துதான், ‘‘என் பெயரைத் தவறாக பயன்படுத்தி யார் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டாலும், பணம் கேட்டு மிரட்டல் விடுத்தாலும் என்னுடைய முகவரிக்கோ காவல்துறைக்கோ புகார் கொடுக்கலாம்...’’ என்று சமீபத்தில் அறிக்கைவிட்டு, அடாவடிப் பேர்வழிகளுக்கு எச்சரிக்கை விடுத்-திருந்தார் தி.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி.
இந்த அறிக்கைக்குப் பின்னால் வாலாட்டத்தை கொஞ்சம் அடக்கி, அமைதியாக இருந்த அடாவடிப் பேர்வழிகள் மீண்டும் கிளம்பியிருப்பதாக புகார்கள் வர, போலீஸ் உஷாராகி இருக்கிறது.
‘‘அழகிரி பெயரைச் சொல்லி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறார் ஹார்விபட்டி பேரூ-ராட்சி தி.மு.க. செயலாளர் தங்கம் பவுன்ராஜ்...’’ என்று, மதுரையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருக்கும் ஜனார்த்தனன் கடந்த நவ. 5&ம் தேதி புகார் கொடுக்கவே, போலீஸார் நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள். புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கென்றே தனிப்-படை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
தனிப்படை போலீஸாரிடம் இதுகுறித்து விசாரித்தோம்.
‘‘மதுரை உச்சபரம்பு மெயின்ரோடு ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் ஆரம்பத்தில் பிரின்டிங் தொழில்தான் நடத்தி வந்திருக்கிறார். பிற்பாடு, ரியல் எஸ்டேட் தொழிலிலும் இறங்கி இருக்கிறார். கீழமாசி வீதியில் மளிகைக் கடை ஒன்றும் உண்டு. காலப்போக்கில் ரியல் எஸ்டேட் தொழில் பிக்-அப் ஆனது. தென் மாவட்டம் முழுவதும் சொத்துக்கள் வாங்க, விற்க என்று நிறைய சம்பாதித்திருக்கிறார்.
இந்தத் தகவல் தி.மு.க.வின் மாணவரணியைச் சேர்ந்த ஆனந்தன், தங்கம் பவுன்ராஜ் இருவருக்கும் தெரிய வந்திருக்கிறது. ‘வெயிட் பார்ட்டி. பணம் தேவைன்னா இவரை பயன்படுத்திக்கலாம்...’ என முடிவெடுத்து எப்போதெல்லாம் பணம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் கட்சியின் பெயரைச் சொல்லி ஜனார்த்தனனிடம் இருந்து நிதி வசூல் செய்திருக்கிறார்கள்.
ஆனந்தன், தங்கம் பவுன்ராஜ் இருவருக்குமே இதுதான் வேலையே. ஜனார்த்தனனிடம் இருந்து கொஞ்சமாக பணம் பறித்து வந்த அவர்கள் உசிலை சிவா, பாலகுரு, சதீஸ், அழகர் ஆகியோரையும் கூட்டணியாக சேர்ந்து கொண்டு, பெரிய அளவில் பணம் பறிக்கத் திட்டம் போட்டுத்தான் அழகிரி பெயரைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இதை அழகிரியின் கவனத்துக்குக் கொண்டு போயிட்டாரு ஜனார்த்தனன். ‘போலீஸ்ல புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்க’ன்னு அழகிரி தரப்பிடமிருந்து தகவல் வந்துவிட்டது. போலீஸ் தீவிர நடவடிக்கையில் இறங்கி விட்டது. தங்கம் பவுன்ராஜ், உசிலை சிவா, ஆனந்தன் ஆகியோர் முதல்கட்டமாக கைது செய்யப்பட்டனர். அடுத்து அழகரும், பாலகுருவும் சிக்கிவிட்டார்கள். இன்னும் சதீஸ் மட்டும் சிக்கவில்லை. அவனையும் விரைவில் வளைப்போம்’’ என்றனர் போலீஸார். அழகிரியின் ஆதரவாளர்கள் என்று சொல்லி, மதுரையில் சமீபத்தில் நடத்திய கண்டனப் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா சிலருடைய பெயரை வாசித்தார். அதில் ஒருவன்தான் பாலகுரு. முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன்.
ஜனார்த்தனனின் நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். ‘‘ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழிலில் ஜனார்த்தனனுக்கு பிரச்னைகள் இருந்தது. அதற்காக ரவுடிகளைப் பயன்படுத்தி வந்தார். அதுவே ஜனார்த்தனனையே மிரட்டும் அளவுக்குச் சென்றுவிட்டது’’ என்கிறார்கள்.
தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், ‘‘புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்’’ என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார்.
இதற்கிடையில், மதுரை-யைச் சேர்ந்த மிசா செந்தில் என்ற தி.மு.க.-காரரும் கத்திக்குத்து விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருப்பது கூடுதல் பரபரப்புக்கு வித்-திட்டிருக்கிறது. இவரும் அழகிரி பெயரை பலமாக உச்சரித்து அடா-வடிகளில் ஈடு-பட்டுவந்தார் என்று சொல்லி திகில் கிளப்பு-கிறார்கள் போலீஸார்.
மிசா செந்தில் சிக்கியது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, ‘‘மிசா செந்தில் அ.தி.மு.க.வில் இருந்தவர். சில வருடங்களுக்கு முன்பாக தி.மு.க. பக்கம் வந்தார். இந்நிலையில், தீபாவளிக்காக எஸ்.பி. நத்தத்தில் இருக்கும் மனைவி நாகேஸ்வரி வீட்டுக்குப் போயிருக்கிறார். அப்போது நடுக்கரையான் என்பவர் தன்னுடைய இடத்தில் வேலி போட்டிருக்-கிறார். ‘எங்க இடத்தையும் சேர்த்து வேலி போடுறியே’ன்னு நாகேஸ்வரி தரப்பினர் வம்புக்குப் போயிருக்கிறார்கள். பிரச்னை வலுத்தது. இதில் நடுக்கரையான் ஆதரவாளரான பால்பாண்டிக்கு கத்திக்குத்து விழுந்தது.
கிராம மக்கள், மிசா செந்தில், அவருடைய டிரைவர் ஆறுமுகம் உள்ளிட்ட பலரையும் விரட்டிப் பிடிக்க முயற்சித்திருக்கிறார்கள். அப்போது கைத்துப்பாக்கியைக் காட்டி எஸ்கேப் ஆனார் மிசா செந்தில். தி.மு.க.வுக்கு வந்த பின்னால், அழகிரி பெயரைத் தாராளமாக பயன்படுத்தி பல்வேறு அடாவடிகளில் ஈடுபட்டிருக்கிறார் செந்தில். இப்போது செந்திலையும் பிடிக்க க்ரீன் சிக்னல் கிடைத்து விட்டதால், அவரை விரைவில் வளைப்போம்’’ என்றார்கள்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தீவிரமாக இருந்தாலும், அ.தி.மு.க. தரப்பு இதில் அரசியல் பார்வையோடு கவனத்தைச் செலுத்தி வருகிறது.
‘‘ ‘தன் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது...’ என்று அறிக்கைவிடுவார் அழகிரி. சிலரை கட்சியை விட்டும் நீக்குவார். ஆனால், ஒருசில வாரங்-களிலேயே சேர்த்துக் கொள்வார். இப்படித்தான் கரிமேடு தொண்டரணி சரவணன், முன்னாள் கவுன்சிலர் செல்வராஜ், மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிறகு என்ன நடந்தது? அதேதான் தற்போது பிரச்னையில் சிக்கியிருப்பவர்கள் விவகாரத்திலும் நடக்கப் போகிறது...’’ என்கிறார்கள் அவர்கள்.
‘‘காமராஜர் சிலை அனுமதிக்கு லஞ்சம் கேட்ட காங்கிரஸ் மாநகராட்சி!’’ திருச்சி அவலம்
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம்’’ என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் காங்கிரஸ்காரர்கள் மீதே... ‘‘காமராஜர் சிலையை திறக்க தடையாக இருக்கிறார்கள்’’ என ‘திடுக்’ புகார் கிளம்பியிருக்கிறது திருச்சியில்.
அதுவும், காங்கிரஸ் வசம் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் காமராஜர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்ட விஷயம், காமராஜர் விசுவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
காமராஜர் சிலை வைக்க அனுமதி கேட்டு மறுக்கப்பட்டவரான ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் வையாபுரியிடம் பேசினோம்.
‘‘திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் உள்ள பாலக்கரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பெருந்தலைவரின் 6 அடி உயர முழு உருவ வெண்கல சிலை வைக்க அனுமதி கேட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநகராட்சி ஆணையர் மற்றும் கலெக்டருக்கு விண்ணப்பித்தோம். எங்கள் விண்ணப்பத்தை ஏற்று, காமராஜர் பிறந்த தினத்தன்றே சிலை திறக்க ஏதுவாக, உடனடியாக அனுமதி வழங்கும்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே மாநகராட்சிக்கு உத்தரவிட்டார் கலெக்டர். ஆனால், மாநகராட்சியின் அரியமங்கலம் கோட்ட செயற்-பொறியாளர் ஜெயக்குமாரோ, காமராஜர் சிலைக்கு அனுமதி தரும் தீர்மானத்தை மாமன்றக் கூட்டத்தில் வைக்கவே இல்லை. இதைவிடக் கொடுமையாக அந்த தீர்மானத்தை மாமன்றத்தில் வைப்பதற்கு 10ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டார். இந்த பிரச்னையை மாநகராட்சி ஆணையர், மேயர் என பலரிடமும் எடுத்துச் சென்றும் யாரும் செவி கொடுக்கவே இல்லை.
இதே நேரம், அரியமங்கலம் கோட்ட தலைவரான மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், ‘காமராஜர் சிலை வைக்க காங்கிரஸ்காரர்களை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை’ என்று மாமன்றத்தில் பேசுகிறார். காமராஜர் இறக்கும்போது காங்கிரஸ் கட்சியிலேயே இல்லை என்ற உண்மையெல்லாம் அவருக்குத் தெரியாது.
காங்கிரஸ் ஆளும் திருச்சி மாநகராட்சியில் இந்த நிலை காமராஜருக்கு மட்டுமல்ல... ஜவஹர்லால் நேரு சிலை வைப்பதற்காக 2008&-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுமதி பெற்ற காங்கிரஸ்-காரர் ஒருவர் இன்னமும் சிலை அமைக்க-வில்லை. நாங்கள் யாரிடமும் எந்த வசூலும் செய்யாமல் காமராஜர் சிலை வைக்க விரும்புகிறோம். ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநகராட்சியில் காமராஜர் சிலை வைக்கவே பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார்கள். இவர்கள் எல்லாம் காமராஜர் ஆட்சி அமைத்துவிட்டால் என்ன ஆகுமோ?’’ என்று வேதனையில் வெடித்தார்.
இது குறித்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் அரிய-மங்கலம் கோட்ட தலைவருமான ஜெரோம் ஆரோக்கியராஜிடம் பேசினோம்.
‘‘காமராஜருக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. அதற்கு குந்தகம் ஏற்படும் அளவில் சிறிய சிலைகள் வைக்க அனுமதிக்க மாட்டோம். மேலும் காமராஜர் சிலை வைக்க காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது” என்றார் விநோதமாக.
சிலை அமைக்க அனுமதி தர லஞ்சம் கேட்டதாக குற்றம் சாட்டப்படும் அரியமங்கலம் கோட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமாரிடம் பேசினோம்.
‘‘போலீஸ் அனுமதி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்றுத் தரவில்லை. அதனால் அனுமதி கொடுக்கவில்லை. இதில் வேறு எதுவும் நடக்கவில்லை’’ என்றார்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ‘‘மாநக-ராட்சியின் அனுமதிக்குப் பிறகுதான் போலீஸ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற முடியும்’’ என்கிறார்கள் சம்பந்தப்பட்ட அரசுத்துறை வட்டாரங்களில்.
இந்த சர்ச்சை குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி மாநகராட்சியின் மேயர் சுஜாதா-விடம் கேட்ட போது, ‘‘இந்த பிரச்னைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கமிஷனரிடம் கேட்டுக்-கொள்ளுங்கள்” என்று நழுவிக் கொண்டார்.
மாநகராட்சி கமிஷனர் பால்சாமியிடம் பேசினோம்.
‘‘அந்த இடம் குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள் போக்கு-வரத்துக்கு இடையூறான இடம் என்று கூறினார்கள். இதையடுத்தே அந்த இடத்தில் சிலை வைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளோம்” என்றார்.
சிலை வைக்க விண்ணப்பித்த வையாபுரியை மீண்டும் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘பாலக்கரை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாத ஒரு மூலைப் பகுதியில் பெருந்தலைவரின் சிலை வைக்கவே விண்ணப்பித்தோம். ஆனால் கமிஷனர் பொய் சொல்கிறார். இந்த நிமிடம் வரை அனுமதி மறுக்கப்பட்டதாக எனக்கு எந்தக் கடிதமும் வரவில்லை’’ என்றார்.
காமராஜர் சிலை வைக்கும் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் மேயர், கோட்டத் தலைவர், உதவி செயற்பொறியாளர், கமிஷனர் என ஆளாளுக்கு ஒன்று கூறுவதில் இருந்தே , இதில் ஏதோ உள் குத்து இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. ராதாபுரத்தில் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயர் வைக்கக் கோரி காங்கிரசார் உண்ணாவிரதம் இருந்து சாதித்தனர். திருச்சியிலோ காமராஜர் சிலை வைக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினரே உண்ணாவிரதம் இருப்பார்கள் போலிருக்கிறது
பிளவுபட்ட சங்கம்: அ.தி.மு.க.வை நோக்கி நகரும் வல்லம்பர்கள்?
தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் எங்கெல்லாம் பிரச்னைகள் வெடிக்குமோ? தமிழ்நாடு வல்லம்பர் சங்கத்திலும் அரசியல் புகுந்து புறப்பட, சங்கம் ரெண்டுபட்டுக் கிடக்கிறது.
கரூர் கே.சி.பழனிச்சாமி, கோயம்புத்தூர் ஆறுமுகச்சாமி போல தென் மாவட்டத்தில் மணல் தொழிலில் பிரபலமாக இருப்பவர் காரைக்குடி பள்ளத்-தூரைச் சேர்ந்த பி.எல். படிக்காசு. இவர்தான் தமிழ்நாடு வல்லம்பர் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
கடந்த வாரம் அரசியல் சூறாவளி இச்சங்கத்துக்குள்ளும் சுழன்றடிக்க, படிக்காசுவைத் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, செல்லப்பன் அம்பலம் என்பவரை புதிய தலைவராக நியமித்திருக்கிறார்கள்.
இதுதான் சமூகத்துக்குள் பெரிய பூகம்பத்தைக் கிளப்பி இருக்கிறது. படிக்காசு, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மாநில அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோருக்கு வேண்டப்-பட்டவராக இருக்க, புதிய தலைவர் செல்லப்பன் அம்பலத்துக்கு ஆதரவாக கரம் நீட்டியிருக்கிறது அ.தி.மு.க.
‘இதனால் வல்லம்பர் ஓட்டுக்களை வரும் தேர்தலில் முழுமையாக தங்கள் கட்சிக்குப் பெற முடியும்...’ என்று நம்பியே அ.தி.மு.க. தரப்பு இந்த விவகாரத்துக்குள் புகுந்திருக்கிறது.
‘எப்படியிருந்தாலும் அந்தப் பதவியை மீண்டும் பிடித்தே தீருவேன்...’ என்று படிக்காசு சபதமெடுத்து காய் நகர்த்திக் கொண்டிருக்க, ‘அதையும் பார்த்துடலாமே...’ என்று பதில் சவால் விட்டுக் கொண்டிருக்கிறார் செல்லப்பன் அம்பலம். இதனால், காரைக்குடி ஏரியாவில் சமூகத்துக்குள்ளேயே பிரச்னைகள் பெரிய அளவில் வெடிக்கலாம் என்கிற சூழ்நிலை நிலவுகிறது.
‘‘1993-ம் ஆண்டு புதுக்கோட்டையில் ஒன்று திரண்ட எங்க வல்லம்பர் சமுதாயத்-தினர் ஒரத்தநாடு, பாலையநாடு, ஜெயங்-கொண்டான், ஏழூர், பத்தூர் நாடு, அமராவதி நாடு மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் நாட்டைச் சேர்ந்த 6 நாட்டு அம்பலங்களும் ஒருசேர முடிவு எடுத்துத்தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த அய்யாக்கண்ணுவை சமுதாயத்துக்குத் தலைவராக நியமிச்சோம். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
அதன்பிறகு 6 நாட்டு முக்கியஸ்-தர்கள் ஒன்று கூடி ரேஷன் அரிசி வியாபாரம் செய்துகிட்டு இருந்த படிக்காசுவை தமிழ்நாடு வல்லம்பர் மகா-சபைக்குத் தலைவராக நியமித்தார்கள்.
தலைவர் பதவி 3 வருஷத்துக்கு ஒருமுறை சுழற்சி முறையில் 6 நாட்டுக்கும் மாத்திக் கொடுக்கணும் எனத் தீர்மானம் போடப்பட்டது. ஆனாலும் 17 வருஷமாக தலைவர் பதவியில் இருக்கும் படிக்காசு, வல்லம்பர் சமுதாயத்துக்கு ஒரு நன்மைகூட செய்யவில்லை.
தலைவர் பதவியைத் தன்னுடைய செல்வாக்காகக் காட்டி ப.சிதம்பரம், பெரியகருப்பன் போன்றவர்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு-விட்டார் படிக்காசு. மணல் பிசினஸ், பேப்பர் மில், சால்வென்ட் தொழிற்-சாலை, த்ரீ ஸ்டார் ஹோட்டல் என வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டுவிட்டார். தலைவர் பொறுப்பை வைத்துக் கொண்டு சமூகத்துக்கும் அவர் கட்டளையிட, அதன்படியே மக்கள் தொடர்ந்து காங்கிரஸுக்கும் தி.மு.க.வுக்கும் வாக்களித்து வந்தார்கள். அதனாலேயே ப.சிதம்பரம், பெரிய கருப்பன் போன்றவர்களெல்லாம் ஜெயிக்க முடிந்தது.
இப்படி படிக்காசு தன்னுடைய சுயலாபத்துக்காக மட்டும் சமூகத்தை பயன்படுத்துகிறார் என்பதை அறிந்து, அவரை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு சமீபத்தில் சொன்னோம். அவர் மறுத்துவிட்டார். ஆனால், ஒரத்தநாட்டைச் சேர்ந்த 84 ஊர்களை மட்டும் சேர்த்து தனிக்கூட்டம் நடத்தி, தன்னையே மீண்டும் வல்லம்பர் சமுதாயத் தலை-வராக தனக்கு தானே முடிசூட்டிக் கொண்டார்.
இந்த சூழ்நிலையில்தான், கடந்த 21.10.2010-&ல் 6 நாட்டு அம்பலங்களும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வல்லம்பர் சமுதாயத்தினரும் ஒன்று கூடினார்கள். படிக்காசுவைத் தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, பிரபல தொழிலதிபரான செல்லப்பன் அம்பலத்தை மாநிலத் தலைவராக நியமித்தார்கள்.
இதைப் பொறுக்க முடியாத படிக்காசு ஆதரவாளர்கள், வாகனங்-களில் திரும்பிக் கொண்டிருந்த சமூகத்தினரை ரவுடிகளை விட்டு தாக்கினார். செல்லப்பன் அம்பலத்தைக் கொலை செய்யவும் முயற்சி செய்தார்கள்.
இருந்தும், எங்கள் தரப்பினர் மீதே போலீஸார் வழக்குப் போட்டிருக்கிறார்கள். இதற்கும் பின்னணியாக இருப்பது படிக்-காசுதான். இதற்கெல்லாம் பெரியகருப்பனிடமும் ப.சிதம்-பரத்திடமும் இருக்கும் நெருக்-கத்தைப் பயன்படுத்துகிறார்.
அதனால், அவர்கள் படிக்-காசுவை உடனே அடக்கி வைக்க வேண்டும். இல்லையென்றால், வரும் தேர்தலில் தி.மு.க. மற்றும் காங்கிரஸுக்கு எதிராக எங்கள் சமூகம் திரளும். தேவையானால், வெளிப்படையாகவே அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்...’’ என்றார்.
இதுபற்றியெல்லாம் படிக்காசு-விடம் கேட்டபோது, ‘‘5 நாட்டு அம்பலங்களும் நானே தலைவராக நீடிப்பதாக பத்திரிகைகளில் விளம்பரமே கொடுத்துள்ளார்கள். எதிர்தரப்பினர் புதிதாக 6&வது நாடு என்று ஒன்றை உருவாக்கி, அதற்கு புதுத் தலைவரை நியமித்திருக்கிறார்களோ?
நான் தான் வல்லம்பர் சமுதாயத் தலைவர். மற்றபடி இதில் அரசியலை நுழைத்தால், அதற்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்...’’ என்றார்.
இந்தப் பிரச்னைகளைத் தொடர்ந்து காரைக்குடி பகுதி வல்லம்பர்கள் மத்தியில் அலையடிக்கும் செய்தி அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கிறது.
‘‘வல்லம்பர் சமுதாயத்துக்குள் வெடித்திருக்கும் மோதலை அறிந்து மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் உடனடியாக வல்லம்பர் சமுதாயத்தைச் சேர்ந்த சுந்தரம் எம்.எல்.ஏ.வை அழைத்துப் பேசினார்கள். புதிய தலைவர் செல்லப்பன் தரப்பினரிடம் பேசி சமாதானத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஆனால், இதை செல்லப்பன் தரப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி, அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருக்கும் சோழன் சித.பழனிச்சாமியை தொடர்பு கொண்டு பேசி விட்டார்கள். படிக்காசுவால் ஏதேனும் பிரச்னை என்றால், செல்லப்பனுக்கு ஆதரவாக அ.தி.மு.க. தரப்பு களமிறங்கும்’’ என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
இதையெல்லாம் பயன்படுத்தி மொத்தமாக வல்லம்பர் ஓட்டுக்களை அறுவடை செய்ய அ.தி.மு.க. தரப்பு பலமாக காய்நகர்த்துகிறது. இதில் வெற்றி கிட்டுமா என்பது படிக்காசு, செல்லப்பன் ஆகியோரின் அடுத்தடுத்த செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும்.
திண்ணை ஒன்று மட்டும் இருக்க... அண்ணன்களோ இரண்டு பேர். பாவம் என்ன செய்யும் ஈரோடு தி.மு.க.?
சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து மிகப்பெரும் படையோடு தி.மு.க.வுக்கு வந்த முத்துசாமி, ஈரோடு மாவட்டச் செயலாளர் பதவி தனக்குக் கிடைக்கும் என நினைத்தார். ஆனால், சர்ச்சைகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர் ராஜாவையே இப்போது மீண்டும் மாவட்டச் செயலாளர் ஆக்கிவிட்டது அறிவாலயம்.
முத்துசாமி ஆதரவாளர்கள் மூடு அவுட் ஆகிவிடக் கூடாது என்பதற்காக... அவருக்கு கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் என்ற பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி முத்துசாமி தரப்பினரிடம் பேசினோம்.
‘‘நில மோசடி, அடிதடி எனப் பல வழக்குகளில் சிக்கி சிறை சென்று ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க.வின் பெயரை கெடுத்து வைத்திருந்தார் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா. அந்தநிலையில்தான்... அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரால் மதிக்கப்பட்ட முத்துசாமி ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு தி.மு.க.வில் இணைந்தார். ராஜாவால் இழந்த கட்சியின் பெருமையை மீட்கும் வகையில் முத்துசாமிக்கு கட்சியில் மாநில அளவிலான பதவி, அல்லது மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம்.
ஆனால், எங்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது போல முத்துசாமி தி.மு.க.வில் இணையும் தருணத்தில் அதுவரை டம்மியாக இருந்த ராஜா மீண்டும் கட்சியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக கடந்த நவ.2&ம் தேதி ராஜாவுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகே முத்துசாமிக்கு கட்சியில் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி முத்துசாமிக்கு செக் வைக்கும் விதத்தில் ராஜாவை முன்னிலைப்படுத்தி வருகிறார்கள்’’ என்று வெடிக்கிறார்கள்.
இந்நிலையில்... மாவட்டச் செயலாளராகி ஈரோடு வந்த என்.கே.கே.பி.ராஜாவுக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்த அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம்.
‘‘தலைவரும், தளபதியும் கட்சிக்காக உழைப்-பவர்களை மறந்தது கிடையாது. ராஜா மீது நம்பிக்கை இருப்பதால்தான் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முத்துசாமி தனிப்பட்ட முறையில் மரியாதைமிக்க மனிதர். ஆனால், அவர் எங்க கட்சிக்கு புதியவர். அ.தி.மு.க.வில் வேண்டுமானால் அவர் சீனியராக இருந்திருக்கலாம். இங்கு சாதாரண தொண்டன் கூட அவரை விட சீனியர்தான். இதனால் அவரை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அர்த்தம் இல்லை’’ என்றனர். எந்த கோஷ்டியும் சாராத மூத்த தி.மு.க.வினர் சிலர் நம்மிடம்...
‘‘அறிவாலயத்தில் கலைஞர் தலைமையில் மாவட்ட வாரியாக நடைபெற்று வரும் கலந்தாய்வுக் கூட்டத்துக்குப் பிறகு இந்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால்... நிர்வாகிகளின் ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், திடுமென ராஜாவுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்-த-தால் கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பெருந்துறை நில பிரச்னையைத் தொடர்ந்து அதில் முகாந்தரம் இருப்பதால் ராஜா பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கலைஞரே தெரிவித்திருந்தார். அது தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதற்குள் ஏன் பதவி கொடுக்க வேண்டும்? தேர்தல் நெருங்கும் நிலையில்... இன்றுவரை ராஜா மீது மக்கள் வெறுப்புடன்தான் உள்ளனர்’’ என்றவர்கள்,
‘‘ராஜாவை முன்னிலைப்படுத்து-வதற்காக முத்துசாமி ஓரங்கட்டப்-படவில்லை. இவ்வளவு ஏன் ராஜா-வுக்குப் பதவி கிடைக்க முத்துசாமியின் பரிந்துரையும் ஒரு காரணம். ஆனால் ராஜாவை எதிர்த்து அரசியல் செய்ய நினைத்தவர்கள் முத்து-சாமியுடன் கைகோக்க நினைத்து அது நிறைவேறாததால் ஏதாவது பிரச்னையை கிளப்புகின்றனர்’’ என்றனர் ஆதங்கத்தோடு.
இந்த சலசலப்புகள் பற்றி என்.கே.கே.பி.ராஜாவிடம் பேசினோம்.
‘‘ பெருந்துறை சம்பவம் எனது வாழ்வில் நிகழ்ந்த ஒரு கசப்பான அனுபவம். ஆனால், அது தொடர்பான சில வழக்குகளில் இருந்து எனக்கு விடுதலை வழங்கப்பட்டது. இதையடுத்து, என் மீது எந்தக் களங்கமும் இல்லை என்பதை அறிந்த பிறகுதான் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், ‘ஈரோடு மாவட்டம் எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது’ என கலைஞர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த முறை அவருக்கு ஈரோடு மாவட்ட வெற்றி இரட்டிப்பு சந்தோசத்தைக் கொடுக்கும். முத்துசாமியுடன் எனக்கு எப்போதும் கருத்து வேறுபாடு இருந்தது கிடையாது. கோஷ்டி என்பது இல்லாமல் அனைவருடனும் இணைந்து பணியாற்றி வரும் காலங்களில் ஈரோடு மாவட்டத்தைச் சிறப்பான மாவட்டமாக நிச்சயம் மாற்றுவேன்’’ என்றார் ராஜா.
முத்துசாமியிடம் நாம் பேசிய-போது, ‘‘என்றைக்கும், கட்சிக்கும் தலைவர் மற்றும் தளபதிக்கும் நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன். எனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்வேன்’’ எனப் பட்டும் படாமல் முடித்துக் கொண்டார். எதுவுமே ராஜாவின் செகண்ட் இன்னிங்ஸைப் பொறுத்துதான் இருக்கிறது!
‘வாழ்த்துவதும் தான் வாழ’ என்றொரு வாக்கு உண்டு. இறைவனையும் சரி, இன்ன பிறரையும் சரி, நாம் வரிந்து கொண்டு வாழ்த்துவது நாம் நன்றாக வாழ வேண்டும் என்ற நோக்கும் சேர்த்துதான். நாட்டில் முக்கியமான பண்டிகை நாட்களிலும் சரி, சுதந்திர தினம், குடியரசு நாள் ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நாட்களிலும் சரி நாட்டின் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பது என்பது ஒரு மரபு.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எதில் எல்லாம் அரசியல் புகவேண்டாமோ அங்கெல்லாம் அரசியல் அனாவசியமாக நுழைவது வாடிக்கையாகிவிட்டது. தீபாவளித் திருநாள் இந்திய தேசம் முழுவதும் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகை. தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் இந்துமதத்துடன் தொடர்புபட்டிருந்தாலும், பொதுவாக மற்ற மதத்தினரும்கூட தீபாவளியை ஒரு கொண்டாட்டமாகவே கருதுகிறார்கள். தமிழ்நாட்டில் பொங்கலைவிட, தீபாவளி மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுவதை யாரும் மறுத்துவிட முடியாது. பொங்கலுக்குப் புதுத்துணி எடுக்க முடியாதவர்கள் கூட தீபாவளிக்கு எப்படியாவது புதுத்துணி எடுக்கிறார்கள். பட்டாசு வெடிக்கிறார்கள். இனிப்பு செய்து உண்டு, கொடுத்து மகிழ்கிறார்கள். தமிழ்நாட்டின் சர்வ கட்சித் தலைவர்களும் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்கிறார்கள். இப்போதைய முதலமைச்சர் தவிர.
ரம்ஜானுக்கும் கிறிஸ்துமசுக்கும் வாழ்த்து சொல்லும் கலைஞர், தீபாவளிக்கு வாழ்த்து சொல்-வதில்லை. இதற்கு காரணம், கடவுள் மறுப்புக் கொள்கை என்றால் அவரைப் பொறுத்தவரை இந்துமதக் கடவுள்களை மட்டுமே மறுப்பதாக இருக்கிறது. ரம்ஜானுக்கும் கிறிஸ்துமசுக்கும் வாழ்த்துச் சொன்னால் அது மற்ற மதங்களில் கடவுள் இருப்பதாக அவர் ஒத்துக் கொள்வதாகத்தானே அர்த்தமாகும்? ஒருவருக்குத் தான் பிறந்த மதத்தில் நம்பிக்கையோ பற்றோ குறைந்தால், வேறு ஒரு மதத்திற்கு மாறுவதில் தவறில்லை. அது தனிமனித உரிமை எனலாம். ஆனால் ஒரு மதத்தில் இருந்து கொண்டு அந்த மதக் கோட்பாடுகளை மதிக்காமல் வேறு மதத்தைப் போற்றுவதாக பாவனை செய்வது அந்த மதத்தினரைக் கவர்ந்து கிளுகிளுப்பூட்டி ஓட்டுக்களைப் பெறுவதற்காக மட்டுமே எனும்போது, அந்த நபர் பிறந்த மதத்தையும் மதிக்கவில்லை-மற்ற மதத்தினரையும் உண்மையாக மதிக்கும் எண்ணம் இல்லை என்றுதான் நினைக்க வேண்டி இருக்கிறது.
‘தீபாவளி ஆரியர் பண்டிகை; பொங்கல்தான் திராவிடப் பண்டிகை’ என்று வாதிட்டால் - இதுவும் ஒரு திராவிட மாயை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. வடகிழக்கு மிசோரம் மாநிலம் உட்பட பல வட மாநிலங்களில் அறுவடைநாள் கொண்டாடப்படுகிறது. கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் கூட விவசாயிகள் அறுவடை நாளைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் எல்லோரும் திராவிடர்களா? உழைப்பிற்கு மரியாதை தரும்நாள் என்பதற்காக பொங்கல் வாழ்த்து என்றால், தீபாவளியின்போது அரசு ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது ஏன்? முதலமைச்சருடைய டி.வி.யில் தீபஒளி சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் பட்டிமன்றம், குத்தாட்டம் இதெல்லாம் ஒளிப்பரப்பிக் காசு பார்க்கலாமாம்; டாஸ்மாக் கடைகளில் தீபாவளி சிறப்பு மகசூல் செய்ய அரசே கூடுதல் ஸ்டாக் வைத்து விற்கலாமாம்; ஆனால் தீபாவளியை மனமுவந்து கொண்டாடும் தமிழர்-களுக்கு மரியாதைக்காகவாவது வாழ்த்து சொல்லக் கூடாதாம் & இது என்ன கொள்கை?
மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்கு முரசு கொட்டுபவர்கள் முற்றத்தில்தான், மங்கலகரமான தொழில் பெயர்களும் பகுத்தறிவைப் பறை-சாற்றுகின்றன. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு தனிமனித சுதந்திரம் என்பது நமக்கும் புரியும். ஆனால், இத்தகைய விநோத நாத்திகர்களுக்கு, ஆன்மிகர்களையும், ஆத்திகர்களையும் கிண்டல் செய்யும் உரிமை இல்லை. விடுமுறை சிறப்பு நிகழ்ச்சியில் எதையோ காட்டி காசு பார்க்க மட்டும் விநாயகர் வேண்டுமாம்!
கடவுள் நம்பிக்கையுள்ள பெரும்பான்மைத் தமிழர்களின் மனங்களைப் புண்படுத்துவதுதான் நாத்திகமா? வேறு மாநிலத்தையும் மதத்தையும் சேர்ந்த தமிழக ஆளுநர் கூட, தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கிறார். வேறு மதத்திலும், வேறு நாட்டிலும் பிறந்த சோனியா காந்தி கூட தீபாவளி வாழ்த்து தெரிவிக்கிறார். தனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் பல கோடித் தமிழர்கள் கொண்டாடும் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டியது ஒரு மாநில முதல்வரின் தார்மிக கடமையல்லவா? தொடர்ந்து கலைஞர் தெரிந்தோ தெரியாமலோ இந்தத் தவற்றைச் செய்வது, தமிழக மக்களை-குறிப்பாகப் பெரும்பான்மையான இந்துக்களை அவமதிக்கிற செயலாகத்தான் தெரிகிறது.
பிற மதப் பண்டிகைகளின்போது அவர்-களுடன் இப்தார் விருந்திலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்-டத்திலும் கலைஞர் கலந்து கொள்வது தவறில்லை. அது பாராட்டப்பட வேண்டியது. அதேசமயம் மக்கள் தொகையிலும் ஓட்டு வங்கியிலும் பெரும்பான்மை வகிக்கும் இந்துப் பண்டிகை தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது குற்றமல்ல என்றாலும் குறைதான். பெரியார், அண்ணா கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் தி.மு.க.தான் ஆட்சியில் மீண்டும் அமரவேண்டும் என்றும், அதற்காக மட்டுமே ஆட்சியை விரும்புவதாகவும் சொல்லிக் கொள்ளும் கலைஞர், வருடாந்திர தீபாவளி போனஸை உழைப்பாளிகள் தினமான மே 1-ம் தேதிக்கு மாற்றி தேர்தலுக்கு முன் அரசாணை பிறப்பிப்பாரா?
இந்தியாவின் பெருகும் பொருளாதார வலிமையைக் கண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தீபாவளிக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவிக்கிறாரே - அப்படியென்றால் இது மக்களுக்கு அளிக்கும் மரியாதை (சிஷீuக்ஷீtமீsஹ்) என்பது மாநில முதல்வராகவும் மூத்த அரசியல் தலைவராகவும் இருப்பவருக்குப் புரியாமல் எப்படிப் போகும்? முதல்வர்தான் வாழ்த்து தெரிவிக்கவில்லை -இந்து அறநிலையத்துறை என்றொரு அமைச்சகம் இருக்கும் தமிழ்நாட்டில் தீபாவளித் திருநாளில் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும் சூழ்நிலையில், அறநிலையத்துறை அமைச்சராவது, முதலமைச்சர் சார்பில் வாழ்த்து தெரிவித்திருந்தால் அது ஆறுதலாக இருந்திருக்கும். அப்படியும் நடக்கவில்லை என்னும்போது அறநிலையத்துறையையும் இன்னொரு வருவாய்த்துறையாகத்தான் நினைத்திருக்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
நோட்டுக்களால் ஓட்டுக்களைப் பெற முடியும் காலமிது. உண்மைதான். ஆனால், அதற்காக மக்களின் உணர்ச்சிகளை ஒரேயடியாக உதாசீனப்படுத்த நினைப்பது அரசியல்வாதிகளுக்கு - அதுவும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு நல்லதல்ல. மக்கள் எதையும் எப்போதும் பொறுத்துக் கொண்டுவிடுவார்கள் என்று எதிர்பார்த்து அரசியல்வாதிகள் ஏமாந்துவிடக் கூடாது. அரசியல்வாதிகளைவிட, மக்களுக்கு அரசியல் நன்றாகவே புரியும்!
சிவகங்கை : தமிழ், ஆங்கில மொழிகளை அழுத்தம் திருத்தமாக, வார்த்தை நயத்தோடு பேசுவதில் வல்லவர். உள்நாட்டு மாவோயிஸ்ட், அயல்நாட்டு பயங்கரவாதிகள் என நாலாபுறமும் உலவும் அச்சுறுத்தலுக்கு, இவர் தான் அணை போட வேண்டும்.
நாட்டு மக்களின் பாதுகாப்பு மொத்தமும் இவர் கைகளில் தான். காஷ்மீரில் நடந்த சமீபத்திய வன்முறைகளுக்கு மருந்து போட, இவர் தலைமையில் தான் அமைதிக்குழு சென்றது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் அடையாளம், சிவகங்கை தொகுதி. "செட்டிநாட்டு சின்னவர்' என்று, இவரது கூட்டணி தலைவர் கூட அடைமொழியிட்டு அழைத்தார். "அடையாளம் காட்டிய தொகுதிக்கு இவர் என்ன செய்தார்?' என்ற ஆதங்கம், காலம்காலமாய் நீடிக்கிறது.அதற்கு சமீபத்திய உதாரணம், சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்ட மழைச்சேதம். இங்கு 49 வீடுகள் முழுவதும், 240 வீடுகள் பகுதியும் சேதம்; இரு சிறுவர்கள் உட்பட மூவர் பலி; 5,508 எக்டேர் பயிர் சேதம்; 815 கி.மீ.,க்கு நகர ரோடுகள், 208 இடங்களில் கிராம ரோடுகள், 52 பாலம், 179 கண்மாய்கள் சேதம்; நேற்று முன்தினம் வரை, மழையால் 38.75 கோடி ரூபாய் இழப்பு என, சேதங்களை பட்டியல் இடுகிறது மாவட்ட நிர்வாகம்.இவ்வளவு சேதம் ஏற்பட்டும், மக்கள் பிரதிநிதியான இவர், ஒற்றை வரியில் ஆறுதல் கூட சொல்லவில்லை என்ற அதிருப்தி அலைகள் கேட்கின்றன. கடந்த 4, 5ம் தேதிகளில் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார் அமைச்சர்.
அரசு திட்டங்கள் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்று வெளியே வந்த அவரிடம், மறவமங்கலம் அருகே தளிர்தழை கிராமத்தினர், மழையால் அழுகிய நெற்பயிர்களை கையில் வைத்து முறையிட்டனர்; கிராமத்தில் ஆய்வு நடத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அமைச்சர். பின், கட்சியினர் இல்ல நிகழ்ச்சி, வாக்காளருக்கு நன்றி அறிவிப்பு என, அவரது பயண திட்டம் முடிவுற்றது.கிராமத்தினர் தேடி வந்து முறையிட்டதால், மழைச்சேதங்களை அமைச்சர் பார்வையிடுவார் என அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அதுபோன்ற "தொந்தரவுகளை' அதிகாரிகளுக்கு அவர் கொடுக்கவில்லை. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கிராமங்களுக்கு சென்ற போதும், மழைச்சேதங்களை அவர் பார்க்கவில்லை என்பது, ஆதங்கத்தை அதிகரித்துள்ளது."என்ன செய்தார் சிதம்பரம் என்ற முழக்கத்தோடு, 1998 லோக்சபா தேர்தலில், இவரை எதிர்த்து களம் இறங்கினார் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து. அந்த முழக்கம் இன்றும் எதிரொலிக்கிறது. இது, மழைச்சேதத்தின் போது கூட ஓயவில்லை. நாட்டுக்கு பட்ஜெட் போட்டவர், மாவட்டத்தில் ஏற்பட்ட 38 கோடி ரூபாய் சேதத்திற்கு என்ன செய்யப்போகிறார்' என்கின்றனர் எதிர்க்கட்சியினர்.
‘‘தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும்!’’ கோவையில் கொந்தளித்த சரத்
இதுவரை தி.மு.க.வையும் பகைக்காமல், அ.தி.மு.க.வையும் பகைக்காமல் மதில் மேல் கட்சி நடத்தி வந்த சரத்குமார்... முதன் முறையாக தனது கூட்டணி நிலைப்பாட்டை போட்டு உடைத்திருக்கிறார்.
கோவை சிவானந்தா காலனி பகுதியில் சமத்துவ மக்கள் கட்சியின் கொங்கு மண்டல பொதுக்கூட்டம், நவம்பர் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அன்று மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும், மழைக்கு அஞ்சாமல் திரண்ட பெரும் கூட்டத்தில் பேசினார் சரத்குமார்.
‘‘தமிழ்நாட்டு அரசியலில் மாற்றம் வர வேண்டிய காலம் வந்துவிட்டது. இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக பழக்கிவிட்டார்கள் இன்று ஆட்சி செய்பவர்கள். இலவசங்களைக் கொடுப்பதைவிட, அதனை உழைத்து சம்பாதிக்க வழி செய்து கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இன்று தமிழகத்தில் சாதாரண ஏழை மாணவனால் ஒரு மருத்துவ கல்லூரியிலோ, பொறியியல் கல்லூரியிலோ சேர முடியவில்லை. இலவச டி.வி. கொடுக்கும் தமிழக அரசு உயர் கல்வியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக இடம் கொடுக்கலாமே? அதன்மூலம் படித்து, நல்ல வேலை கிடைத்த பின்னர், அவர்கள் தேவைகளை அவர்களே பூர்த்தி செய்துகொள்வார்களே? இந்த அரசு உயர் கல்வியில் இலவசங்களைக் கொண்டு வந்தால், அதனை வரவேற்போம்.
மத்திய அரசின் திட்டமான 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டம் பாராட்டுக்குரியது. ஆனால், மத்திய அரசின் திட்டத்தைத் தங்களது திட்டமெனத் தமிழக அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது. இதனைத் தடுக்க தமிழக காங்கிரஸ் கட்சியினர், மக்கள் மத்தியில் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று தி.மு.க.வை வெளிப்படையாக சாடிய சரத்குமார்... ஸ்பெக்ட்ரம் சர்ச்சையையும் விட்டு வைக்கவில்லை.
‘‘தற்போது உலகையே உலுக்கியிருப்பது ஸ்பெக்ட்ரம் ஊழல். உலகில் இதுவரை, இப்படியொரு மாபெரும் ஊழல் நடந்ததாக வரலாறு இல்லை. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கு காரணமானவர்கள், இதன்மூலம் பயன் அடைந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது என்பதற்கு இதுவே உதாரணம். அரசின் நல்ல திட்டங்களைப் பாராட்டுவோம். ஆனால், இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்கு பங்கு இல்லை, அல்லது ஊழலே நடைபெறவில்லை என்பதை நிரூபிப்பதை விட்டுவிட்டு ஆரியன், திராவிடன் என ஜாதி அடையாளத்தைக் காட்டி கலைஞர் தப்பிக்க முயலக்கூடாது. செய்த தவறை மறைக்க முதல்வராக இருக்கும் ஒருவர் ஜாதியை பயன்படுத்தக்கூடாது.
அதேபோல், முதல்வர் குடும்பத்தினர் அனைத்து துறைகளிலும் கால் பதிக்க ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக சினிமா துறையில் அவர்களது ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் திறமையான படைப்பாளிகளின் படைப்புகள் எளிதில் வெளியில் வரமுடியவில்லை. தங்களுக்குக் கட்டுப்படாதவர்கள் மற்றும் ஒத்துழைக்காதவர்கள் பழி வாங்கப்படுகிறார்கள். சினிமா துறை முழுவதும் தற்போது முதல்வர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. வடக்கில் உள்ள பிரபல நடிகர் ராஜ்கபூர் சினிமா துறையில் ஜொலித்தவர். அவருக்கு பின் அவரது வாரிசுகளும் சினிமாவில் பிரகாசித்தனர். ஆனால், அவர்கள் அரசியலுக்குள் நுழையவில்லை. அதேபோல் முதல்வர் குடும்பத்தினரும் அரசியலில் மட்டுமே இருந்தால், மற்ற படைப்பாளிகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும்’’ என்று கலைஞருக்கு விமர்சன வடிவில் வேண்டுகோள் விடுத்தார் சரத்குமார்.
மழைக்கு போட்டியாக தன் அனல் மழையைத் தொடர்ந்தவர், ‘‘இன்று நாட்டின் மிகப் பெரிய பிரச்னை விலைவாசி உயர்வு. இதுவரை மத்திய அரசோ, மாநில அரசோ விலைவாசியைக் கட்டுப்படுத்தவில்லை. உழைப்பாளிகள் கடுமையாக உழைத்தாலும், ஒரு வேளை சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். ஆனால், ஒரு சாதாரண கவுன்சிலர் பென்ஸ் காரில் செல்கிறார். உழைப்பாளிகள் முன்னேற வேண்டும். அதற்கு தமிழகத்தில் அரசியல் மாற்றம் வர வேண்டும்.
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சர்வாதிகார ஆட்சியாகத்தான் இருக்கும். ‘இன்று, நேற்று கட்சி துவங்கியவர்கள் எல்லாம் முதல்வராக ஆசைப்படுகிறார்கள்’ என்று துணை முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஏன் அவருக்கு முதல்வராகும் ஆசை இல்லையா? ஆசை இல்லாமலா துணை முதல்வர் பதவி கொண்டுவரப்பட்டது. ஆசை யாருக்கும் வரலாம், அதில் தவறில்லை. ஆனால், யார் முதல்வராக வேண்டும் என்று மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
1962&ல் நடந்த தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக்கு ஐந்து ரூபாய் கொடுத்தனர். அப்போது, ‘ஓட்டுக்காக காங்கிரஸ் கட்சியினர் கொடுக்கும் ஐந்து ரூபாயை வாங்கும்போது கைகள் கூச வேண்டும்’ என்று கூறினார் அண்ணா. ஆனால், அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று கூறும் இன்றைய ஆளும் தரப்பினர், வரும் தேர்தலிலும் ஓட்டுக்குப் பணம் கொடுக்க பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விஜயகாந்த், மக்களோடுதான் கூட்டணி என்று கூறுகிறார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நல்லவர்கள், புதியவர்கள் கூட்டணி சேர வேண்டும். வரும் தேர்தலில் தி.மு.க. அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால், நாம் அனைவரும் கூட்டணி சேர வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்’’ என்று தி.மு.க.வுக்கு எதிரான திட்டவட்ட நிலைப்பாட்டோடு பேசி முடித்தார் சரத்.
தி.மு.க.வுக்கு எதிரான மெகா கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்திருப்பதன் மூலம், சரத்குமார் அ.தி.மு.க. அணியில் இணைவாரா, மூன்றாவது அணி காண்பாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. அதேநேரம் சரத்தின் பேச்சால் அ.தி.மு.க. வட்டாரமும் குஷியடைந்திருக்கிறது.
நவம்பர் 25.... மதுரையிலிருந்து பெரியகுளம் சென்ற தனியார் பஸ் மீது வடுகபட்டி அருகே ஜெயலட்சுமி என்ற லாரி (டி.என். 58 வி 1614) மோத, தகவல் அறிந்து அங்கே வந்தனர் வாடிப்பட்டி போலீஸார்.
லாரி டிரைவரான அழகரிடம் விசாரணை நடத்தியபோது, லாரியில் பாமாயில் இருக்கு எனச் சொல்லியிருக்கிறார் டிரைவர். ஆனாலும், சந்தேகப்பட்ட போலீஸார் தார்ப் பாயைத் தூக்கிப் பார்க்க... வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன போலி மது பாட்டில்கள்.
போலீஸார் டிரைவரைக் ‘கவனித்த’ போது... திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் தொழிற்பேட்டையிலிருந்துதான் சரக்கு ஏற்றப்பட்டது என்பதை அறிந்து, அங்கே சென்றனர் போலீஸார். அங்கே சுமார் இருபதாயிரம் மதுபாட்டில்கள் லோடு ஏற்ற தயாராக இருக்க... அதிர்ந்தபடி எஸ்.பி., மனோகரனுக்கு தகவல் கொடுத்தனர். ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த போலி சரக்குகளை கைப்பற்றி, திருமங்கலம் கோர்ட்டில் ஒப்படைத்தனர் போலீஸார்.
இந்த மெகா போலி மது கும்பல் பற்றி துப்பு துலக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தனிப்படையினர் சிலரிடம் இதுபற்றி நாம் பேச...
‘‘போலி மது பாட்டில்கள் அனைத்திலும் பாண்டிச்சேரி லேபிள் ஒட்டப்பட்டிருக்கிறதே தவிர, சரக்குகள் எல்லாம் லோக்கல்தான். கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் மது விலக்கு எஸ்.பி., தினகரன் போலி மதுபானத் தொழிற்சாலையைப் பிடித்தார். அப்போது லாரி சப்ளை செய்த திருநெல்வேலி ராஜேந்திரன்தான் இப்போதும் லாரி சப்ளை செய்திருக்கிறார். குடோனில் அவருடைய கே.ஏ.01& 9754 என்ற எண் கொண்ட லாரிதான் உள்ளே நின்றது’’ என்றவர்கள்...
‘‘இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பும் இருக்கிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ., தனது நண்பரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஒரு பஞ்சாயத்துத் தலைவருக்கு போன் செய்து கப்பலூர் தொழிற்பேட்டையில் ஒரு குடோன் ஏற்பாடு செய்ய சொல்லியிருக்கிறார். அதன்படி அந்தப் பஞ்சாயத்துத் தலைவர் குடோன் உரிமையாளரான ராமசாமி ரெட்டியாரிடம் டைல்ஸ் வைக்க என்று சொல்லி மாத வாடகை பதினோராயிரம், அட்வான்ஸ் ஒரு லட்சம் எனப் பேசி மூன்று மாதங்களுக்கு முன்பு குடோனை பிடித்துக் கொடுத்திருக்கிறார்.
ஆனால் டைல்ஸ் என்ற பெயரில் அங்கே போலி மது பிசினஸ் நடத்தியுள்ளனர், எம்.எல்.ஏ.வின் மகன் உள்ளிட்ட சிலர். இவர்களுக்கு உதவியாக மதுரையில் உள்ள, ரூபாய்களில் புரளும் ஒரு லாட்ஜ் உரிமையாளரும் இருக்கிறார். எம்.எல்.ஏ. தயாரிக்கும் இந்த போலி மதுதான் மதுரையில் ஆரம்பித்து தஞ்சாவூர் தாண்டியும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பரவலாக விற்கப்படுகிறது. இதற்காக... டாஸ்மாக் சூப்பர்-வைசர்கள், மேனேஜர்கள், மண்டல அதிகாரிகள் என சகலரும் கவனிக்கப்பட்டிருக்கிறார்கள். டாஸ்மாக் அதிகாரிகள் போலவே... மதுவிலக்கு போலீஸாருக்கும் மாதம் ஒரு லட்ச ரூபாய் வரை செம கவனிப்பு நடந்திருக்கிறது.
மதுரை புறநகர் எஸ்.பி., மனோகரனிடம் பேசினோம். ‘‘போலி மதுபானக் கடத்தல் கும்பலைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படைகள் கேரளா, பாண்டிச்சேரி என விரைந்திருக்கின்றன. இந்த நெட்வொர்க்கின் மூளையான கேரளாவைச் சேர்ந்த சுனில்குமார் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் விரைவில் பிடிப்போம்’’ என்றார்.
ஹெலிபேட் பங்களா சர்ச்சை! சிவசாமியின் பதவிபறிப்பு பின்னணி
தி.மு.க.வுடன் உறவு கொண்டவர்கள் என்ற அடிப்படையில் இதுவரை பல அ.தி.மு.க.வினர் கட்டம் கட்டப்பட்டதுண்டு. சமீபத்தில் இதே காரணத்துக்காக வடசென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபுவின் மாவட்ட செயலாளர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா.
அந்த வரிசையில் இப்போது திருப்பூர் எம்.பி. சிவசாமியிடமிருந்து மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
எட்டு வருடம் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர், எட்டு வருடம் மாவட்டச் செயலாளர் என்று பதினாறு வருடங்கள் அ.தி.மு.க.வில் ‘ரெக்கார்டு’ வைத்திருந்த சிவசாமி எம்.பி.யை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு... மாவட்ட அவைத் தலைவரான முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலுவை புதிய மாவட்டச் செயலாளராக நியமித்திருக்கிறார் ஜெயலலிதா.
சிவசாமி பதவி நீக்கத்துக்குப் பின்னணிதான் என்ன? ரகசிய குரலில் பேசினார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
‘‘அ.தி.மு.க.வுக்கென சொந்த அலுவலகம் கட்ட, திருப்பூரில் பழைய பேருந்து நிலையத்துக்கு எதிரில் கட்சி அலுவலகம் செயல்பட்டு வந்த ஏழரை சென்ட் இடத்தை 63 லட்சம் ரூபாய்க்கு பேசி முடித்தார். ஆனால், அந்த இடத்தைக் கட்சி பெயரில் பதிவு செய்யாமல், தன் பெயரில் அக்ரிமென்ட் போட்டுவிட்டார். பின்னாளில் அந்த இடத்தை, தன் மனைவி பெயருக்கு மாற்றி எழுதிவிட்டார். இதை அம்மாவின் கவனத்துக்கு, அப்போதே கொண்டு சென்றோம். இதையடுத்து சிவசாமியை அழைத்து அம்மா எச்சரிக்கை செய்தார்.
ஆனால், அதையும் மீறி கட்சிக்காரர்கள், திருப்பூரிலுள்ள தொழிலதிபர்கள் எனப் பலரிடமும் கட்சிக்கு புது இடம் வாங்கவேண்டும் என்று சொல்லி, கிட்டத்தட்ட எழுபது லட்சம் ரூபாய் வரை வசூலித்துவிட்டார். மேலும் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில், வாகனங்களே செல்ல முடியாத அளவுக்கு இருக்கும், ஒயின்ஷாப் செயல்பட்டு வந்த இடத்தைத் தேர்வு செய்ய, கட்சிக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உடனே, ‘பிடிக்கவில்லை என்றால், வேறு இடத்தை தேர்வு செய்யுங்கள். அதையே வாங்கிவிடலாம். வசூல் செய்த 40 லட்சம் ரூபாய் இருக்கிறது’ என்று பொய் கணக்கு காண்பித்தார்.
இதுமட்டுமல்ல... சிவசாமி நீண்ட நாள் கட்சிப் பதவியில் இருப்பதைப் பயன்படுத்தி கட்சிப் பதவிகளை விற்று வந்திருக்கிறார். மாவட்டப் பொறுப்பில் இருந்த ஒரு பெண்ணை மாற்றிவிட்டு, சமீபத்தில் தனக்கு நெருக்கமான பல்லடம் பகுதியில் கோழிப் பண்ணை வைத்திருக்கும் பெண்ணின் பெயரை தலைமைக்கு பரிந்துரைத்தார். இத்தனைக்கும் அந்தப் பெண் நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்களைத் துளியும் மதிக்காதவர்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், இப்போது அம்மாவின் பெயரைச் சொல்லியே பல லட்சம் மதிப்பில் தனது பழைய வீடு அமைந்துள்ள தாளிபாளையம் பகுதியில், ஒரு பங்களா கட்டியிருக்கிறார் சிவசாமி. ‘தேர்தல் பிரசாரத்தின் போது அம்மா வந்து இங்கேதான் தங்கப்போகிறார்’ என்று சொல்லியே கட்சிக்காரர்களிடமும், தொழிலதிபர்களிடமும் பல லட்சங்களை வசூல் செய்து, வீட்டின் மேல்பகுதியில் ஹெலிபேட் அமைத்து பங்களா கட்டியிருக்கிறார்.
இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், தி.மு.க. அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கட்சி அலுவலகம் கட்ட எந்த பொறியாளரை செலக்ட் செய்தாரோ, அவரை வைத்துதான் இந்த பங்களா-வையும் கட்டியிருக்கிறார் சிவசாமி. எந்த அளவுக்கு தி.மு.கவுடன் நெருக்கம்(?) பாருங்கள்’’ என்றனர்.
அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலரிடம் பேசியபோது,
‘‘திருப்பூர் மாநகராட்சியில் தி.மு.க உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் பத்துதான். கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லிம் லீக் எனப் பலருடைய ஆதரவில்தான் தி.மு.க. மேயர் பதவியைப் பிடித்தது. இப்போது கம்யூனிஸ்ட்கள், தி.மு.க. கூட்டணியில் இல்லாததால், அ.தி.மு.க.வின் 18 உறுப்பினர்களுடன் கம்யூனிஸ்ட் தோழர்களை வைத்து மேயர் பதவியை அ.தி.மு.க. பிடித்துவிட முடியும். இதுபற்றி, பலதடவை சிவசாமியிடம் வற்புறுத்தியும் அவர் கேட்டபாடில்லை. மாறாக, தி.மு.க. மேயர் செல்வராஜுடன் நெருங்கிய நட்பு வைத்துக்கொண்டு, ‘பேசாம இருங்கய்யா... எதாவது குழப்படி பண்ணினா இப்ப வரும் வருமானம் போய்விடும்’ எனச் சொல்லி விட்டார். இத்தனை விஷயங்களும் உரிய ஆதாரங்களுடன் தன் கவனத்திற்கு வந்த பின்பே சாட்டையை கையிலெடுத்திருக்கிறார் அம்மா’’ என்கிறார்கள் அவர்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சிவசாமியிடமே பேசினோம்.
‘‘பதினெட்டு வருடங்களாக அ.தி.மு.க.வில் இருக்கிறேன். பதினாறு வருடங்களாக பேரவை செயலாளர், மாவட்டச் செயலாளராக இருந்தேன். எனக்கு வேண்டாதவர்கள் சிலர் சூழ்ச்சி வலையில் என்னைச் சிக்க வைத்துவிட்டனர். என் மீதான எந்தக் குற்றச்சாட்டும் உண்மையில்லை. அம்மாவுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும். விரைவில் நல்ல செய்திகளை எதிர்பார்க்கிறேன். இப்போது என்னை விமர்சிப்பவர்கள் அப்போது உண்மை நிலையை உணர்வார்கள்’’ என்றார் மிகுந்த நம்பிக்கையோடு!
சிங்கம் தூங்கியதால் சுரண்டிப் பார்த்த சுண்டெலிகள்! -முஸ்லிம் லீக் மாநாட்டில் சாடல்
சுண்டெலிகள், விளம்பரப் பிரியர்கள்... இப்படியெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத், த.மு.மு.க. போன்ற முஸ்லிம் அமைப்புகளை விமர்சித்தது பி.ஜே.பி. மாநாட்டிலோ, இந்து முன்னணி மாநாட்டிலோ அல்ல! டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில்தான்.
இதில் வரவேற்புரையாற்றிய மாநில ஜமாஅத்களின் ஒருங்கிணைப்பு செயலாளர் கமுதி பஷீர், ‘‘இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு சலுகைகளைப் பெற்றுத் தந்த இயக்கம் முஸ்லிம் லீக்கைத் தவிர வேறெதுவுமில்லை. விளம்பரப் பிரியர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்காக இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்’’ என ஆரம்பத்திலேயே காட்டம் காட்டினார்.
தலைமையுரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும், மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், ‘‘ரமலான், பக்ரீத் போன்ற பண்டிகை தினங்களை அரசின் தலைமை ஹாஜியார்தான் அறிவிப்பார். ஆனால், அதற்கு மாறாக பக்ரீத்தின் முன்நாளும், பின்நாளும் பக்ரீத்தாக சிலர் அறிவிக்கிறார்கள். பள்ளிவாசல் அருகே வாடகைக் கட்டடத்தில் போட்டி மசூதி நடத்துகிறார்கள்’’ என்று வருத்தப்பட்டார்.
கருத்தரங்கத்தில் பங்கேற்ற டாக்ட்ர். முஹம்மதலி, ‘‘சிங்கம் தூங்கியதால் சுண்டெலிகள் சுரண்டிப் பார்த்திருக்கின்றன. சிங்கம் சிலிர்த்தெழுந்து இன்றைக்கு தலை நிமிர்ந்து நிற்பதால் சுண்டெலிகள் காணாமல் போய்விட்டன’’ என்று சில முஸ்லிம் அமைப்புகளைச் சுண்டெலிகள் என்று வர்ணித்தார்.
‘‘முஸ்லிம் மத கட்டமைப்புகளைச் சிதைக்கும் வண்ணம் செயல்படுவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜாக் போன்ற அமைப்புகளைத்தான் மறைமுகமாகத் தாக்குகின்றனர்’’ என்று மாநாட்டில் வெளிப்படையாகவே பேசிக்கொண்டனர் முஸ்லிம் பெரியவர்கள்.
மாலையில் நடந்த நிறைவு விழாவில் கலந்து-கொண்ட முதல்வருக்கு ‘நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்’ விருது வழங்கி புகழ் மழையில் நனைத்தனர்.
‘‘40 ஆண்டுகள் கலைஞர்தான் முதல்வராக இருக்கவேண்டும்’’ என்று மாநாட்டுத் தலைவர் காதர் மொய்தீன் பேசியதைத் தனது நிறைவுரையில் குறிப்பிட்ட கலைஞர், ‘‘காதர் மொய்தீன் எனக்கு சாபம் விட்டிருக்கிறார் என்றே கருதுகிறேன். 40 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து நான் இன்னும் கஷ்டப்பட வேண்டும். படாதபாடு பட-வேண்டும் என்று நம்முடைய மாநாட்டுத் தலைவர் விரும்பு-கிறார். இன்னும் என் மீது என்ன கோபம் உங்களுக்கு? நபிகள் நாயகம் மேல் குப்பை கொட்டிய அம்மையார் போல், எத்தனையோ அம்மையார்கள் எங்கள் மீது குப்பை கொட்டத் தயாராக இருக்கிறார்கள். அப்படி கொட்டப்படும் குப்பையெல்லாம் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னீர்க் குளியல்தான்’’ என்று சொல்லி முடித்தார்.
ஸ்டாலினுக்கு அந்த ‘சாமி’... அழகிரிக்கு இந்த ‘சாமி’!‘ கலகலக்கும் கரூர் தி.மு.க.
கடந்த 8&ம் தேதி தன் சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக திருச்சியிலிருந்து கரூர் செல்ல துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஆ.ராசா வீடுகளில் ரெய்டு என்ற தகவல் கிடைத்தது.
தர்மசங்கடத்துடன் பயணத்தைத் தொடர்ந்த அவர், அய்யர்மலை பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில், சீனியாரிட்டிபடி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ 25 ஆயிரம் முதல் ரூ 2 லட்சம் வரை சுழல் நிதி வழங்கினார். அப்போது பலர் தங்களுக்கு வழங்கப்பட்ட கவரை பிரித்து பார்த்தபோது அதில் செக்கிற்கு பதிலாக வங்கி பாஸ் புக் மட்டுமே இருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிலர் அதிகாரிகளிடம் சென்று முறையிட நீங்க தான் ஏற்கனவே கடன் வாங்கி விட்டீர்களே, அதற்கு தான் இப்போது விழா என மழுப்பலான பதில் வந்துள்ளது. இதைக் கேட்டு கப்சிப் ஆனது கேள்வி கேட்ட குரூப்.
அடுத்து கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸில் ஓய்வெடுத்த ஸ்டாலின், சின்னதாராபுரம் அருகில் உள்ள கூடலூரில் சமத்துவபுர திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது, அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் சின்னசாமியை தனது காரில் ஏற்றிக் கொண்டு யாரும் எதிர்பாராத விதமாக கரூர் கோதை நகரில் உள்ள சின்னசாமி வீட்டிற்கு சென்றார். அவரது வீட்டிலேயே மாலை டிபனை முடித்தார்.
‘‘தி.மு.க. மா.செ-.வாக இருந்த வாசுகி முருகேசன் படத் திறப்பு விழாவுக்காக கரூர் வருகை தந்த ஸ்டாலின், அடுத்து வருவது இப்போதுதான். வாசுகி மறைவுக்கு பின்பு ஸ்டாலின் ஆதரவாளர்களாக நன்னியூர் ராஜேந்திரன், எஸ்.பி.கனகராஜ் என சிலர் மட்டுமே உள்ளனர்.
இந்த நிலையில், கரூர் சின்னசாமி மூலம் தனது ஆளுமையைக் கரூரில் நிலைநிறுத்த முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க.வுக்கு புதிதாக வந்த யாருக்கும் இதுவரை வார்டு செயலாளர் பதவி கூட கொடுத்ததில்லை. ஆனால், எடுத்த எடுப்பிலேயே சின்னசாமிக்கு மாநில விவசாய அணி செயலாளர் பதவி வழங்கப்-பட்டுள்ளது. இதில் இருந்து சின்னசாமிக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் உள்ள நெருக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
தி.மு.க.வுக்கு சின்னசாமி வருவதற்கு முன்பே, கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள தனது வீட்டை விற்றுவிட்டு அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட கோதை நகரில் குடியேறிவிட்டார். ஸ்டாலினின் ஆசி இருக்கும் நிலையில் அவர் அரவக்குறிச்சி தொகுதியை குறிவைத்துதான் செயல்படுகிறார்’’ என்கிறார்கள்.
இதற்கிடையில், ஸ்டாலினின் கரூர் பயணத்தை அடுத்து, மு.க.அழகிரியும் கரூருக்கு விஜயம் செய்யவிருக்கிறாராம்.
‘‘ஸ்டாலினுக்கு சின்னசாமி என்றால், அழகிரிக்கு கே.சி.பழனிசாமி இருக்கிறார். சமீபத்தில் நடந்த தனது மகன் திருமணத்துக்கு கே.சி.பி. வீட்டுக்கே வந்து பத்திரிகை வைத்தார் அழகிரி. விரைவில் கரூரில் மு.க.அழகிரியை வைத்து ஒரு பிரமாண்ட விழா நடைபெறலாம். அதில் கே.சி.பி. முக்கிய பங்கு வகிப்பார்’’ என்கிறார்கள் தி.மு.க.வின் ஒரு பிரிவினர்.
பத்து பர்சன்ட் பஞ்சாயத்தால் பாதியில் நிற்கும் பாலம்!
வெள்ளைக்காரர்களால் கட்டப்பட்டு எழுபத்தைந்து ஆண்டுகளாக நிலைத்து நின்றது விழுப்புரம் மாவட்டம் துறிஞ்சலாற்றுப் பாலம். ஆனால் இதற்கு மாற்றாகக் கட்டப்படும் புதிய பாலமோ, கமிஷன் அரசியல்வாதிகளின் பண வெறியால் ஆரம்பகட்ட பணிகளிலேயே நிற்கிறது.
இதுபற்றி, திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சவுரிராஜனிடம் பேசினோம்.
‘‘திருக்கோவிலூரை சுற்றிலும் உள்ள மக்களின் போக்குவரத்துக்கு அத்தியாவசியமான இந்தப் பாலம், மூன்று வருடங்களுக்கு முன்பு விரிசல்பட்டது. பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, சட்டமன்றக் குழு, கலெக்டர் என பார்வையிட்டு பிறகு, இந்த ஆண்டு துவக்கத்தில் இதே போன்ற புதிய பாலத்தைப் பக்கத்தில் கட்டுவதற்கு அனுமதித்தது அரசு. இதற்கான டெண்டர் காசி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
கடந்த ஏப்ரல் மாதம் டெண்டர் எடுத்த அந்நிறுவனம், பழைய பாலத்தின் அருகில் மாற்றுப் பாதை ஏற்படுத்திவிட்டு, புதிய பாலம் கட்ட முதற்கட்ட வேலையை துவக்கியது. ஆனால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு பணிகளைத் திடீரென நிறுத்திவிட்டது அந்த நிறுவனம். காரணம் இந்த மண்ணின் மைந்தர்களான சில மக்கள் பிரதிநிதிகள் கான்ட்ராக்ட்காரர்களிடம் கமிஷன் கேட்டதுதான்.
புதிய பாலம் வரும் என்று ஆசையாய் காத்திருக்க... இருந்த பழைய பாலமும் படுமோசமாகிவிட்டது. இது இடிந்து விழுந்துவிட்டால் திருக்கோவிலூரிலிருந்து சென்னை, விழுப்புரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல 50 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டுதான் போகவேண்டும். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்-கப்படும்’’ என்று ஆதங்கப்பட்டார்.
‘‘யார் உங்களிடம் கமிஷன் கேட்டது?’’ என்று காசி கன்ஸ்ட்ரக்ஷன் நிர்வாக இயக்குநர் விஷ்ணுவரதனிடம் கேட்டோம்.
‘‘பாலம் கட்டும் வேலையின் மொத்த மதிப்பு 2.5 கோடி ரூபாய். ஐந்து லட்ச ரூபாயில் ஆரம்ப கட்ட வேலைகளைச் செய்தேன். அப்போதே அரசியல்வாதிகள் கமிஷன் கேட்டு பல்வேறு வழியில் எனக்கு தொந்தரவு கொடுத்தார்கள். கமிஷன் கொடுத்தால் தரமான பாலத்தைக் கட்ட முடியாது. அதனால் இந்த வேலை எனக்கு வேண்டாம் என்று நிறுத்திவிட்டேன்’’ என்றார்.
பாலத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை மேற்கொண்ட பொறியாளரிடம் பேசினோம். ‘‘ஆறு மாதத்தில் பாலத்தைக் கட்டிமுடிக்கத் திட்டமிட்டோம். ஆனால், ‘ஆளும்கட்சியின் கள்ளக்குறிச்சி மக்கள் பிரதிநிதி ஒருவர்தான் தனக்கும், தனக்கு மேலான புள்ளிக்கும் கமிஷன் கொடுக்காம எப்படி எங்க ஏரியாவுல வேலை செய்யலாம்? உடனடியா 10 சதவிகிதம் கமிஷன் கொடுங்க. இல்லைன்னா நீங்கள் எங்க ஏரியாவுல வேலை செய்ய முடியாது’ன்னு தகராறு செய்தார். அதனால்தான், பாலம் கட்டும் பணிகளை கைவிட்டோம்’’ என்றார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் பேசினோம். ‘‘இந்த பாலத்தை உடனடியாக கட்டி முடித்தால்தான் எங்களுக்கு நிம்மதி. எனவே, புதுசா டெண்டர் விட்டிருக்கிறோம். இந்த டெண்டரை எடுக்கறவங்களாவது முழுசா கட்டி முடிக்கணும்...’’ என்றார்கள்.
யார் அந்த பத்து பர்சன்ட்? என்று விசாரித்தோம். தற்போது அவர், உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் என செய்தி வந்தது.
மழையில் மூழ்கி எழுந்து கொண்டிருக்கிறது கன்னியாகுமரி மாவட்டம். சாதாரணமாகவே சாலை வசதிகளில் பின் தங்கியுள்ள குமரி மாவட்டத்தில்... இந்த மழையை அடுத்து பல சாலைகள் அரித்துச் செல்லப்பட்டுவிட்டன. இந்த நிலையில், குமரி மாவட்டத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்வதற்கு என்று இருந்த நெடுஞ்சாலைத் துறை கோட்டங்கள் தாராபுரத்துக்கும், திருநெல்வேலிக்கும் மாற்றப்-பட்டதால் மேலும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் குமரி மக்கள். ‘‘குமரி மாவட்ட அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கும், நெடுஞ் சாலைத் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும் இடையே நடக்கும் மோதலால்தான் குமரி மாவட்டத்தின் சாலைக் கோட்டங்கள் பறிபோயிருக்கிறது’’ என்றும் பரபரப்பாக பேசுகிறார்கள் விபரமறிந்த புள்ளிகள்.
தமிழகத்திலேயே அதிக மழை பெய்யும் மாவட்டமான குமரியில் சாலை சீரமைப்புக்காகவே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒரு கோட்டமும், நபார்டு கிராம சாலைகள் கோட்டமும்¢ செயல்பட்டு வந்தன. நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம் ஆகிய இடங்களில் நபார்டு கிராம சாலைகளின் உட்கோட்டங்கள் இயங்கி வந்தன. நபார்டு வங்கி முலம் இந்தக் கோட்டங்களுக்கு ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு குமரி மாவட்டத்தில் சாலைப் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் நாகர்கோவிலில் செயல்பட்டு வந்த நெடுஞ்சாலைத் துறை கோட்டம், தாராபுரத்தில் புதியதாக உருவான நெடுஞ்சாலைத் துறை கோட்டத்துக்கு தாரை வார்க்கப்பட்டது. அடுத்தகட்ட அதிர்ச்சியாக குமரி மாவட்டத்தில் இயங்கிய நபார்டு கிராம சாலை கோட்டத்தை, திருநெல்வேலியுடன் இணைத்துவிட்டு தனித்தனி உட்கோட்டங்களாக செயல்பட்டு வந்த தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தை நாகர்கோவில் உட்கோட்டத்துடன் சேர்த்துவிட்டார்கள். இதனால், குமரி மாவட்டத்துக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான சாலை பராமரிப்பு நிதி ஒதுக்கீடு ரத்தானதால், ஏற்கனவே பயனற்றதாக இருக்கும் சாலைகளின் கதி கேள்விக்குறியாகியுள்ளது.
இதுபற்றி, குமரி நெடுஞ்சாலைத் துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.
‘‘குமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறை கோட்டங்களில் பொறுப்புகளில் இருக்கும் பொறியாளர்கள் துறை மேலிடத்துக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். மேலும் துறை மேலிடத்தைக் கவனிப்பதை விட லோக்கல் அமைச்சரை சரிக்கட்டுவதில் குறியாக இருந்தனர். இதனால், குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்படும் தொகை அனைத்தும் இழுத்தடிக்கப்பட்டது. இரண்டு அமைச்சர்களும் வார்த்தைகளால் மோதிக் கொண்டதாகவும் ஒரு தகவல் உண்டு. விளைவு... சாலைகள் போதிய பராமரிப்பின்றி போக்குவரத்திற்கு பயனற்றதாகிவிட்டது’’ என்கிறார்கள்.
சாலைக் கோட்டங்கள் ரத்தானதைக் கண்டித்து குமரி மாவட்டம் முழுவதும் தினமும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருவட்டார் தொகுதி எம்.எல்.ஏ., லீமாரோஸிடம் பேசினோம். ‘‘குமரி மாவட்டச் சாலைகள் தமிழகத்திலேயே மிகவும் மோசமாக உள்ளது. இதனை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை கோட்டங்களும், நிதியும் வேண்டும். நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டத்தை மாற்றக்கூடாது என அரசு விழா மேடை ஒன்றில் கோரிக்கை வைத்தேன். எனக்கு பிறகு பேசிய அமைச்சர் சுரேஷ்ராஜன் கண்டிப்பாக இடம் மாறாது என மேடையில் உறுதி கூறினார். இது நடந்த மறுவாரமே நபார்டு கிராம சாலைகள் கோட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதிலிருந்து நெடுஞ்சாலைத் துறையால் குமரி மாவட்டம் புறக்கணிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது’’ என்றார் கோபமாக.
அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய் சுந்தரத்திடம் இதுபற்றி கேட்டபோது,
‘‘அமைச்சர் சுரேஷ்ராஜனின் சாதனைகளில் இதுவும் ஒன்று. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் நாகர்கோவிலில் செயல்பட்டு வந்த நெடுஞ்சாலைத் துறை கோட்டம் தாராபுரத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள கிராம சாலைகள் உட்கோட்டம் குமரியிலிருந்து மாற்றப்பட்டதற்கான அரசாணை (ஸிuக்ஷீணீறீ ஸிஷீணீபீ கீஷீக்ஷீளீ நி.ளி.) எங்களிடம் உள்ளது. வெள்ளக்கோயில் சாமிநாதன் & சுரேஷ்ராஜன் இடையேயான பனிப்போர் தான் இதற்கெல்லாம் காரணம் என்ற நம்பகமான தகவல் எங்களுக்கு வந்துள்ளது. இவரது துறையான சுற்றுலாத் துறையின் மண்டல அலுவலகம் கூட குமரியிலா உள்ளது, மதுரையில்தானே உள்ளது?’’ என்றார் கேலியாக.
விளவங்கோடு எம்.எல்.ஏ., ஜான் ஜோசப் நம்மிடம்,
‘‘குமரி கிராம சாலைகள் துறை திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மூன்று அலுவலகங்களை மூட நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மூலம் அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, மூடப்பட்ட கோட்ட அலுவலகத்தையும் சேர்த்து குமரி மாவட்டத்திலேயே இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்’’ என்றார் ஆக்ரோஷத்தோடு. குமரியின் கோட்டங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் சுரேஷ்ராஜனிடமே பேசினோம்.
‘‘குமரி மாவட்டத்தில் புதியதாக நெடுஞ்சாலைப் பணிகள் இல்லாததால் தான், நெடுஞ்சாலைத் துறை கோட்டம் தாராபுரத்துக்கு மாற்றப்பட்டது. நபார்டு கிராம சாலைக் கோட்டங்கள் திருநெல்வேலிக்கு இடம் பெயருவதாக இருந்ததை தடுத்து, தற்போது செயல்பட்டுவரும் அலுவலகத்திலேயே செயல்பட வைத்துள்ளேன். இதுதானே தவிர தனிப்பட்ட முறையில் எனக்கும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருக்கும் இடையே எந்தவிதமான மோதல் போக்கும் இல்லை’’என்றார் ஆணித்தரமாக. ஆனால், அமைச்சர் சுரேஷ்ராஜனின் கூற்றை பொய்யாக்கும் வகையில் டிசம்பர் 1&ம் தேதி முதல் தக்கலை மற்றும் மார்த்தாண்டத்தில் உள்ள கிராம சாலைகள் கோட்ட அலுவலகங்களில் பெரிய பூட்டு தொங்குகின்றன.
கூட்டணி தர்மம் (?) காக்க... காற்றில் பறக்கும் கொள்கைகள்!
ஜப்பான் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற விகிதாசார பிரதிநிதித்துவம்(Proportionate representation)முடைய மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. விகிதாசார பிரதிநிதித்துவம், ஒரு கட்சியின் பலத்தை சரியாகவும் துல்லியமாகவும் கணிக்கக்கூடியது. கட்சிக்கும் அதன் ஒட்டுமொத்த கொள்கைக்கும் மக்கள் வாக்களிப்பார்கள். பெற்ற வாக்குகளின் விகிதத்தின்படி கட்சி தன்னுடைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும். இதன்மூலம் கட்சி தாண்டி, நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இன்று பரவலாக முன்வைக்கப்படும் அபத்தமான வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
விகிதாசார பிரதிநிதித்துவம் நடைமுறையில் இல்லாததால், முதல் தேர்தலில் 54 சதவீதம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி, 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களைப் பிடிக்க முடிந்தது. விகிதாசார பிரதிநிதித்துவத்தில் கட்சிகள் தனித்து போட்டியிட முடியும். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்புதான், தனிப்பெரும்பான்மை யாருக்கும் இல்லாத பட்சத்தில் கூட்டணிகள் உருவாகும். தற்போதுள்ள தேர்தல் முறையின்படி, ஒரு பொது எதிரியை வீழ்த்த, ஒரு பொது நோக்கத்திற்காக தேர்தலுக்கு முன்பே கூட்டணிகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இவ்வாறான கூட்டணிகளில் ஒருமித்த கொள்கை தேவையற்றதாகி விடுகிறது. ஒரு பொதுத் திட்டத்தையோ, ஏன், ஒரு பொதுத் தேர்தல் அறிக்கையையோ வெளியிட முடிவதில்லை.
இடதுசாரிகள் தலைமையில் அமைந்த கூட்டணிகள் இதற்கு விதிவிலக்கு. இதற்கு முந்தைய யு.பி.ஏ. -மி அரசை, தேர்தலுக்குப் பின் இடதுசாரிகளின் ஆதரவோடு அமைத்தபோது, ஒரு குறைந்தபட்ச பொதுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், யு.பி.ஏ.-மிமி அரசு தேர்தலுக்கு முந்தைய கூட்டணியால் அமைக்கப்பட்டு, எந்த ஒரு பொதுத் திட்டமும் அதனால் முன்வைக்கப்படாததால், காங்கிரஸ் கட்சியின் கொள்கைதான் கூட்டணி கட்சிகளின் கொள்கையாக பெரும்பாலும் இருந்துவருகிறது. அதிலும் தி.மு.க. மத்திய ஆட்சியில் தன்னுடைய பங்கு குறித்த முரண்பாடு தவிர வேறு எதிலும், (ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தது உட்பட) முரண்பட்டதில்லை.
துவக்கத்தில் பலமான காங்கிரஸை வீழ்த்த பல்வேறு மாநிலங்களில் கூட்டணிகள் உருவாகின. தமிழகத்தில், அறிஞர் அண்ணா முற்றிலும் முரண்பட்ட அனைத்து கட்சிகளையும் இணைத்து கூட்டணி அமைத்து, காங்கிரஸை வீழ்த்திக் காட்டினார். ஆனால், காங்கிரஸ் கட்சி பிளவுபட்டவுடன், கருணாநிதி 1971-ல் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார். இந்திரா காந்தி 1975-ல் அவசர நிலையை அறிவித்தவுடன் நாடு முழுவதிலும் அதற்கு எதிராக எழுந்த ஜனநாயக இயக்கங்களுடன் தி.மு.க. தன்னை இணைத்துக் கொண்டது. அதனாலேயே அதன் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
நெருக்கடி நிலைக்குப்பின் நடந்த தேர்தலில் முரண்பட்ட கொள்கைகளைக் கொண்ட எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து ஜனதா கட்சியை உருவாக்கி, காங்கிரஸை 1977 தேர்தலில் தோற்கடித்தன. கூட்டணி குழப்பத்தில் அவ்வாட்சியால் இரண்டரை ஆண்டுகள்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. 1972-ல் தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அ.தி.மு.க., 1977 தேர்தலில் இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றது.
தஞ்சாவூர் இடைத்தேர்தலில் நிற்க இந்திரா காந்தி முயற்சித்தபோது, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் நிர்பந்தத்திற்கு பணிந்து, அவரை ஆதரிக்க அ.தி.மு.க. தயங்கியதால், இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கசப்பை தி.மு.க. பயன்படுத்திக்கொண்டது. தி.மு.க. தலைவர் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் மீதிருந்த சர்க்காரியா கமிஷன் விசாரணையில் இருந்து தப்பித்துக் கொள்ள, 1980&ல் காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்தது தி.மு.க.
அன்றிலிருந்து இன்றுவரை, தமிழகத்தில் 3-வது பெரிய சக்தியாய் இருந்துவரும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர இரு கழகங்களுக்கும் இடையேயான போட்டி தொடர்கிறது.
“காங்கிரஸ் பெருந்தனக்காரர்களின் கட்சி. மிட்டா மிராசுகளின் கட்சி. அதனுடன் ஒருபோதும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை” என்ற அண்ணாவின் கொள்கையை இரு கழகங்களும் காற்றில் பறக்கவிட்டன.
நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிக இடங்களை காங்கிரஸுக்கு வழங்கும் பார்முலாவிற்கு இரு கழகங்களும் ஒப்புக்கொண்டன. அடிநாதமான மாநில சுயாட்சியைக் கைவிட்டு, கழக ஆட்சிகளைக் கலைக்க, இரு கழகங்களும் கூச்சநாச்சமின்றி காங்கிரஸிடம் மாறி மாறி மன்றாடின. ஒரு கட்டத்தில் காங்கிரஸுக்கு சட்டமன்றத் தேர்தலில் சரிபாதி இடங்களைத் தரவும் தி.மு.க. சம்மதித்து, கூட்டணி அமைத்த கேவலமான வரலாறும் உண்டு.
அதைவிடக் கேவலமானது திருப்பத்தூர் இடைத்-தேர்தலின் போது நடைபெற்றது. “யாருடனும் கூட்டணி இல்லை. எங்கள் வேட்பாளரை விருப்பமுள்ளவர்கள் தங்கள் மேடையில் இருந்து ஆதரிக்கலாம்” என்று கூறி, திருப்பத்தூரில் தன்னுடைய வேட்பாளரை காங்கிரஸ் தன்னிச்சையாக அறிவித்தவுடன், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்காது, தொகுதி முழுவதும் மேடைபோட்டு, காங்கிரஸுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஆகும்.
காங்கிரஸின் இடத்தை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் தே.மு.தி.க. பிடித்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க. 8% வாக்குகள் பெற்ற போது, பலமான தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணியைவிட ஒட்டுமொத்த தமிழகத்தில் 4% வாக்குளைத்தான் அதிகமாகப்பெற முடிந்தது. எனவே, தி.மு.க.விற்கு இந்த ஆட்சியை தட்டில் வைத்துக் கொடுத்தவர் விஜயகாந்த் தான் என்பது தெளிவாயிற்று. தற்போது தே.மு.தி.க.வை தனித்து போட்டியிடச் செய்வதற்கும், அதனுடன் கூட்டணி அமைக்கவும் இரு கழகங்களும் வெவ்வேறு வகையான பேரங்களில் இறங்கியுள்ளன.
பா.ம.க.வின் நிலைதான் பரிதாபமானது. தங்கள் அணியில் பா.ம.க. இருக்கிறது என்று கலைஞர் கூற, முடிவாகவில்லை என்று மருத்துவர் ராமதாஸ் மறுக்க, பா.ம.க.வை சேர்க்கக்கூடாது என்று சோனியா தன்னிடம் கூறிவிட்டதாக கலைஞர் கூற, அதுகுறித்து தகுந்த நேரம் வரும் போது (கூட்டணியில் இடம் இல்லாத போது என்று பொருள் கொள்க) பதில் சொல்லப்படும் என்று மருத்துவர் கூறியுள்ளார்.
தவிர, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தாங்கள் ஆய்வு நடத்தி வருவதாகவும், உரிய நேரம் வரும்போது அதை வெளியிடுவதாகவும் கருத்து சொல்லியுள்ளது பா.ம.க. கூட்டணி முடிவிற்கேற்ப இந்த முடிவும், அது வெளியாகும் நேரமும் அமையும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. விடுதலைச் சிறுத்தைகளின் நிலையும் தர்மசங்கடமானதுதான். ஈழத்தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸுடன், ஒரே கூட்டணியில் இருக்கும் முரண்நகையை ஈழ ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
கடைசிநேரம் வரை காங்கிரஸ் கூட்டணிக்காக ஜெயலலிதா காத்துக் கொண்டிருந்தார். அதற்காக ஸ்பெக்ட்ரம் விவகாரம் மீதான தன்னுடைய விமர்சனத்தில் இருந்து காங்கிரஸை விலக்கி வைத்திருந்தார். தற்போது காங்கிரஸுடன் கூட்டணி வாய்ப்பு இல்லை என்ற நிலையில், காங்கிரஸையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஆரம்பித்துள்ளார்.
இக்கூட்டணிக் கேளிக்கைகளையும், கூத்துக்களையும், அதர்மத்தையும் பார்க்கையில், இவற்றை அடியோடு ஒழிக்க, விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்கு நாம் எப்போது மாறுவோம் என்ற ஏக்கம் அதிகமாகிறது.
March. 17: Going by his own statements after the death of his mother (his father's first wife) Bangaru Ammal a few months ago, Kaanakiliyanallur Narayana Reddy Nehru, popularly known as transport minister K.N. Nehru, had no money to meet the election expenses to run for the post of Pullambadi union chairman. Therefore, he sold a farmland owned by Bangaru Ammal. Minister Nehru, however, bought back the family property recently to fulfil her last wish.
But now the total value of movable and immovable properties owned by Mr Nehru and his family is said to be a few thousand crore rupees.
This includes a palatial house in Thillainagar, Tiruchy, a modern rice mill worth `250 crore near Lalgudi, about 200 acres at Palaviduthy, in Karur, several educational institutions, including CARE, near Tiruchy, and several corporate hospitals in Tiruchy, a few granite quarries and a coal mine in Indonesia.
Mr Nehru, a native of Kaanakiliyanallur village, in Lalgudi taluk, who has studied up to pre-university course, was earlier known as `Mundi' Nehru as he ran an onion mundi (wholesale shop) in Pullambadi.
Mr Nehru who served as minister for food, cooperation and public distribution during the erstwhile DMK regime during 1996-2001, allegedly amassed wealth and the DVAC filed a case in 2002. However, all the accused were discharged from the case in 2008 after the DMK returned to power.