Thursday, June 23, 2011
துபாயில் இருந்து கொழும்பு வழியாக விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து தலைமை கூடுதல் இயக்குனர் ராஜன் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இதை அறிந்த கடத்தல்காரர்கள் திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்தனர். தங்கத்துக்கு வெள்ளி முலாம் பூசி அங்கிருந்து கொண்டு வந்தனர். திருவனந்தபுரத்தில் இருந்து அவர்கள் ரெயில் மூலம் சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் மத்திய வருவாய் புலனாய்வை சேர்ந்த கண்காணிப்பு குழுவினர் தாம்பரம் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். இது கடத்தல்காரர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் செங்கல்பட்டில் இறங்கி அங்கிருந்து கார் மூலம் வந்து கொண்டு இருந்தனர்.
கண்காணிப்பு குழுவினருக்கு இந்த தகவல் தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் சென்னை விமான நிலைய ரோட்டில் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான காரில் வந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக இலங்கையை சேர்ந்த பைசல் முகமது (25), முகமது ரிஸ்வான் (36), அக்பர் (37), பாசில் (40) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க பிஸ்கட்டுகள், நகைகள் கைப்பற்றப்பட்டன. மொத்தம் ரூ.45 லட்சம் மதிப்பு 1 கிலோ 860 கிராம் தங்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.