என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எத்தனையோ திருப்புமுனைகளைக் கடந்து வந்த 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இப்போது கனிமொழி அத்தியாயத்தில் நிற்கிறது. இனி, வெளிநாட்டு நிறுவனங்களின் தொடர்புகள் குறித்து அமலாக்கப் பிரிவு தகவல்களை வெளிக்கொண்டு வர வேண்டியதுதான் பாக்கி.
2008-ன் நடுவிலேயே பத்திரிகைகளும், எதிர்க் கட்சிகளும், போட்டித் தனியார் நிறுவனங்களும், '2-ஜி விவகாரத்தில் அரசுக்கு என்னென்ன நஷ்டம்? ஆ.ராசா என்னென்ன தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்..? அவரும் தி.மு.க. குடும்பமும் என்ன பலன் அடைந்தனர்...? அரசு இந்த ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வேண்டாமா..?’ என்று கண்டனங்களும் கேள்விகளும் எழுப்பின.
இத்தனை எதிர்ப்புகள் இருந்த நேரத்தில்தான், அதாவது 2008 டிசம்பர் முதல் 2009 ஆகஸ்ட்வரை 2-ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து கலைஞர் டி.வி. 200 கோடியைப் பெற்று உள்ளது. இதைத்தான் ஆதாரபூர்வமாகக் கண்டறிந்து, கடந்த 25-ம் தேதி கூடுதல் குற்றப் பத்திரிகையில் வெளியிட்டது சி.பி.ஐ.!
இந்தக் குற்றப் பத்திரிகைகளில் இடம் பெற்றுள்ள குற்றச்சாட்டுகள், ஏற்கெனவே வெளியான தகவல்கள்தான் என்றாலும், சி.பி.ஐ. இப்போதுதான் ஆதாரப்பூர்வமான சாட்சியங்களோடு உறுதி செய்துள்ளது.
'கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் நடைபெற்றது. அதனால், கனிமொழியைப் பற்றியும் கலைஞர் டி.வி-யைப் பற்றியும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றால், தேர்தல் பிரசாரத்தில் வீணான சர்ச்சைகள் கிளம்பும் என்று தி.மு.க-வினர் காங்கிரஸிடம் மன்றாடினர். அவர்கள் கோரிக்கைக்கு, மத்தியில் உள்ளவர்களும் அப்போது செவிசாய்த்தார்கள். அதனால்தான், குற்றப் பத்திரிகையை இரண்டு கட்டங்களாகப் பிரித்து தாக்கல் செய்ய வேண்டிய சூழலுக்கு சி.பி.ஐ. ஆளானது’ என்கிறார்கள்.
முதல் குற்றப் பத்திரிகையில், தனியார் கம்பெனிகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில், ஆ.ராசா மேற்கொண்ட தில்லுமுல்லுகளை சி.பி.ஐ. வெளியே கொண்டுவந்தது. ஆனால், இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையில் 2-ஜி ஊழலின் முக்கியக் கருவை எடுத்து வைத்திருக்கிறது. இதில்தான் கனிமொழியை சி.பி.ஐ. இறக்கியுள்ளது.
இதில், ஆ.ராசா, ஸ்வான் டெலிகாம் ஷாகித் பால்வா மற்றும் வினோத் கோயங்கா, ஷாகித் பால்வாவின் சகோதரரும் குஸேகான் ஃபுரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் ரியாலிட்டி நிறுவனத்தின் இயக்குநருமான ஆசிப் பால்வா, இதே நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் ராஜீவ் பி.அகர்வால், சினியுக் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவன இயக்குநர் கரீம் முரானி, கலைஞர் டி.வி. இயக்குநர் சரத்குமார் ஆகியோரோடு கனிமொழியும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில், கனிமொழி, சரத்குமார், கரீம் முரானி ஆகியோர்தான் இன்னும் கைது செய்யப்படவில்லை. மற்றவர்கள் கைதாகி சிறையில் உள்ளனர்.
சம்மன் அனுப்பப்பட்ட மேற்கண்ட மூவரும் வரும் மே 6-ம் தேதி டெல்லியில் ஆஜராகும்போது, சிறைக்கு அனுப்பப்படலாம். இதில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் முடிவே இறுதியானது. மற்ற நிறுவனங்களின் இயக்குநர்கள் எல்லாம் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கனிமொழிக்கும் இதே நிலை வரலாம்.
2007-ல் சன் டி.வி. நிறுவனத்துக்கும், தி.மு.க-வுக்கும், பிரச்னை ஏற்படவே, கலைஞர் டி.வி. தொடங்கும் ஆயத்தப் பணிகளில் மற்றவர்களுடன் சேர்ந்து கனிமொழி தீவிரமாக இருந்ததாகச் சொல்லும் சி.பி.ஐ., 'இந்த விவகாரங்களில் ஆ.ராசாவை அவ்வப்போது தொடர்பு கொண்டு தொலைக்காட்சிக்கான அனுமதி பெற முயற்சி செய்தார்’ என்கிறது.
''ஆ.ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆவதற்குக் காரணமாக இருந்ததே கனிமொழிதான். ஆ.ராசாவுக்காக தி.மு.க-வின் தலைமையகத்தில் இவரே பேசினார்'' என்றும் குற்றம் சாட்டி, 2-ஜி ஊழல் வழக்கில் 17-வது குற்றவாளியாக கனிமொழியை சேர்த்துள்ளது.
கனிமொழி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களாக இருப்பவை, இரண்டு சாட்சியங்கள். ஒன்று, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ஆச்சாரி கொடுத்துள்ள வாக்குமூலம். இது குறித்து ஜூனியர் விகடன் 20.4.11 இதழில் விரிவாக வெளியிட்டு இருக்கிறோம். மற்றொருவர், நீரா ராடியா.
'ஒரிஜினலாக, ஸ்வான் நிறுவனத்தைத் தொடங்கியது ரிலையன்ஸ் நிறுவனம். மறைமுகமாக இந்த நிறுவனத்தின் மூலம் ஜி.எஸ்.எம். மொபைல் உரிமங்களைப் பெற ரிலையன்ஸ் முயற்சி செய்தது. பின்னர் இரட்டை உரிமத்தின் அடிப்படையில் ரிலையன்ஸுக்கு நேரடியாகவே முறைப்படி ஜி.எஸ்.எம் உரிமங்கள் கிடைத்தன. இப்படிக் கிடைத்தும், ஸ்வான் நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை ரிலையன்ஸ் வாபஸ் வாங்கவில்லை.
ஸ்வான் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய டிபி ரியாலிட்டி குரூப் நிறுவனத்தினர் ஷாகித் உஸ்மான் பால்வாவும் வினோத் கோயங்காவும் திட்டமிட்டு சதியில் ஈடுபட்டுள்ளனர்’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'ஸ்வானுக்கும் யுனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கும் ஸ்பெக்ட்ரம் உரிமம் பெறும் தகுதி இல்லை. 2005-ம் ஆண்டு ஒருங்கிணைந்த அணுகுமுறை சேவைகளுக்கான உரிம வழிகாட்டி விதிமுறைகளின்படி ஸ்வான் மற்றும் யுனிடெக் விண்ணப்பங்களைத் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.
தகுதி இல்லாத சான்றிதழ்களை வைத்துக் கொண்டு உரிமங்களைப் பெற முயற்சித்த இவர்களிடம், ஊழல் பணத்தைப் பெற்றுக் கொண்டு தொலைத் தொடர்புத் துறை உரிமங்களைக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. சொல்கிறது. இதன்படி, வந்த ஊழல் பணம் கறுப்புப் பணமாக இருக்க... இதை வெள்ளையாக மாற்றம் செய்ய மேற்கொண்ட முயற்சிகளையும் இரண்டாவது குற்றப் பத்திரிகை வெளிப்படுத்துகிறது.
'இதன் முதல் சுற்று, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது. 2004-ல் சுற்றுச்சூழல் அமைச்சரானவுடன் ஆ.ராசா தொடங்கிய பினாமி நிறுவனம் இது. சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சாதிக் பட்சாவின் தலைமையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில், ஆ.ராசாவின் சகோதரர் கலியபெருமாள் மற்றும் சாதிக் பாட்சாவின் மனைவி போன்ற வேறு சிலரை இயக்குநர்களாக ஆக்கினார். இந்த நிறுவனத்தில் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி இயக்குநராக ஆரம்பத்தில் இருந்து, பின்னர் விலகினார்.
2-ஜி கறுப்புப் பணத்தை இந்த நிறுவனத்தின் மூலம் கொண்டுவரும் முயற்சியில் ஆரம்பத்தில் ஈடுபட்டு, பின்னர் அது கைவிடப்பட்டது’ என்றும் சி.பி.ஐ. கூறுகிறது. 'ஆனால், இந்த நிறுவனத்துக்கு சில கோடிகள் பணம் வந்துள்ளது. ரியல் எஸ்டேட்டுக்கு நிலங்களை வாங்க டிபி ரியாலிட்டி சில கோடிகளை க்ரீன் ஹவுஸுக்கு கொடுத்துள்ளது. பின்னர் இதே பணத்தை க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்தது...’ என்று சொல்லும் சி.பி.ஐ., 'க்ரீன் ஹவுஸ் நிறுவனத்துக்குப் பணம் எப்படி வந்தது? ஏன் வந்தது? எப்படி எல்லாம் பணம் புழங்கியது..?’ என்பதற்கு சில ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சொல்கிறது.
'ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிய ஸ்வான் டெலிகாம் சம்பந்தப்பட்ட டி.பி. ரியாலிட்டி, க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மூலம் தமிழ்நாட்டில் பெரும் அளவில் நிலங்களை வாங்கிக் குவிக்கத் திட்டமிட்டது. ஆனால், அது வெற்றிகரமாக நடக்கவில்லை. இதனால் கொடுக்கப்பட்ட பணத்தையும் க்ரீன் ஹவுஸ் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும், 'இதற்குக் காரணம் க்ரீன் ஹவுஸ் விவகாரங்கள் பத்திரிகைகளில் வெளியானதுதான்’ என்று, சி.பி.ஐ. கருதுகிறது.
ஆனால், 2-ஜி கறுப்புப் பணத்தை கலைஞர் டி.வி. மூலமாக வெள்ளையாக்கும் முயற்சிகள் பின்னர் நடந்துள்ளன. சுமார் 200 கோடி ஸ்வான் டெலிகாம் பணம், கலைஞர் டி.வி-க்கு வந்துள்ளது. அதிலும், இந்த ஊழல் விவகாரம் உச்சக்கட்டமாக வெடித்துக்கொண்டு இருந்த சமயத்தில்தான், பணப் பரிவர்த்தனைகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி நடந்துள்ளது. இதில்தான் கருணாநிதி குடும்பத்தினரின் மனோதைரியம் குறித்து ஆச்சர்யத்தோடுதான் பேசிக் கொள்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள்!
லாபம் 1.36 கோடி... கடன் 214 கோடி... எப்படி?!
ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஆ.ராசாவுடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்ததாக கனிமொழி பெயர் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டதும், முதல்வர் கருணாநிதி ஆலிவர் சாலையில் ஆலோசனை நடத்தினார்.
கலைஞர் டி.வி-யின் 20 சதவிகிதப் பங்குகள் கனிமொழிக்கும், 20 சதவிகிதப் பங்குகள் சரத் குமார் ரெட்டிக்கும், 60 சதவிகிதப் பங்குகள் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும் உள்ளது. 'டிபி ரியாலிட்டி மூலம் ஊழல் பணம் 214.8 கோடி கை மாறியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் இருந்து, தயாளு அம்மாளை விடுவிக்க வேண்டும்’ என்று 27.7.07-ல் கலைஞர் டி.வி. போர்டு மீட்டிங் நடந்ததுபோல மினிட்ஸ் ரெடியானது என்கிறது சி.பி.ஐ. தரப்பு.
கலைஞர் டி.வி. ஒப்படைத்த வரவு - செலவுக் கணக்கில், 'டிபி ரியாலிட்டியின் இணை நிறுவனம் மூலம் பெறப்பட்ட 214.8 கோடி, எந்த ஆவணமும் இல்லாமல் பெறப்பட்ட கடன்’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தகவல்படி, கலைஞர் டி.வி-யின் ஆண்டு வரவு 63.12 கோடி. செலவு 61.47 கோடி.
நிகர லாபம் வரி செலுத்தும் முன்பு 1.65 கோடி. வரி செலுத்திய பின் லாபம் 1.36 கோடி மட்டும்தான். ஆனால், இப்படி இருக்கும் நிறுவனத்துக்கு ஆவணம் இல்லாமல், 214.8 கோடியை எப்படிக் கடனாகக் கொடுக்க முன் வந்தது டி.பி. ரியாலிட்டி நிறுவனம்?
கடன் கொடுத்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். பிறகு அந்த நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வட்டியுடன் ஏழு மாதங்களில் திருப்பிக் கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ-யிடம் கூறப்பட்டு உள்ளது. ஏழு மாதங்களில் 214.8 கோடியை வட்டியுடன் கொடுக்க, கலைஞர் டி.வி-க்கு பணம் எப்படி வந்தது? மீண்டும் யார் கடன் கொடுத்தார்கள்?
மேலும், கலைஞர் டி.வி-யின் வரவு - செலவுக் கணக்கில், 'கண்ணுக்குப் புலப்படாத சொத்துக் கணக்கில் 2008-09-ல் 123.25 கோடி என்றும் அது 2009-10-ல் 159.16 கோடி’ என்றும் காட்டப்பட்டு உள்ளது. ''கண்ணுக்குத் தெரியாத சொத்தின் மதிப்பு மட்டும் எப்படி ஆண்டுக்கு ஆண்டு உயரும்? அதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?'' என்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், கலைஞர் டி.வி-யின் சரத்குமார் ரெட்டியிடம் கேட்டு வருகிறார்கள்.
என்ன பதில் சொல்லப் போகிறார் சார்..?
நன்றி : ஜூனியர்விகடன்-04-05-2011