New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம்
Permalink  
 


சிலம்பு காட்டும் தமிழகத்தில் வேதமதம் – ஒரு சிறு அலசல்

திருமதி. மேகலா அவர்களின் உரையில் (http://www.vallamai.com/?p=38420&cpage=1#comment-8775) அவர் சொன்ன வரி அடியேன் கவனத்தை ஈர்த்தது.

//ஒரு சாதாரணப் புலவர் அரசனையே கண்டிக்கின்றார் என்றால்….//

சொல்லாமல் இருக்க முடியவில்லை. சிலம்பில் இதற்கு ஒரு மிக அழகிய உவமையை இளங்கோ சொல்வார்.

ஆட்சிக்கு வந்து ஐம்பது ஆண்டுகள் ஆகிய பின்னும் செங்குட்டுவன் மறக்கள வேள்விகள் (போர்) செய்வதை விட்டு விட்டு அறக்கள வேள்விகளைச் செய்ய வேண்டும் என மாடல மறையோன் அறிவுரை சொல்கிறான்.

அதனை 
“மறையோன் மறைநா உழுது வான்பொருள்
இறையோன் செவிசெறு வாக வித்தலின்
வித்திய பெரும்பதம் விளைந்துபத மிகுத்துத்
துய்த்தல் வேட்கையிற் சூழ்கழல் வேந்தன்
நான்மறை மரபின் நயம்தெரி நாவின்
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின்
வேள்விச் சாந்தியின் விழாக்கொள ஏவி”

என்கிறார். அதாவது: “மாடல மறையோன் விதைத்த விதையாகிய பெரும்பொருள் விளைவாகிய உணவினை மிகுதியாகத் தந்தது. அதன் பயனை நுகர விரும்பினான் வீரக் கழல் அணிந்த சேர வேந்தன். நான்கு வேதங்களையும் குறைவற ஓதி, பொருள் உணர்ந்த,  உச்சரிப்புப் பிழை அறவே நீங்கிய நாவினை உடைய அந்தணர்களை, மாடல மறையோன் கூறிய வண்ணம் வேள்வியினைச் செய்ய ஏவினான்” என்று பொருள்.
ilango 1
இதில் இருந்து சில விஷயங்கள் தெரிகின்றன.

  1. புலவர்கள், அந்தணர்கள், சான்றோர் வாக்குக்கு மரியாதை தந்தார்கள் அரசர்கள்.
  2. இன்றைக்கு தென் மாவட்டங்களில் ஒரே குடும்பத்தில் கிறிஸ்தவரும் ஹிந்துக்களும் இருப்பது போல, அந்நாளிலும் ஒரே குடும்பத்தில் சமணரும் வேத மதத்தைப் பின்பற்றுபவரும் இருந்தனர். (சேரனின் உடன்பிறந்தவர் இளங்கோ, அவர் சமணர், துறவி).
  3. அந்த காலத்தில் தமிழகத்தில் ஐயத்திற்கு இடமின்றி வேத பாராயணம் இருந்தது. நான்கு மறைகளை ஓதிய அந்தணர் என்கிறார். நயம் தெரி நா – வேதத்துக்கு முக்கியம் உச்சரிப்பு. அந்த நயம் அறிந்து பிழை அற்ற உச்சரிப்பை உடைய நா முக்கியம்.

சமணரான இளங்கோவே இப்படிச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? சமணர்கள் சத்திய வாக்குடைய விரதம் பூண்டவர்கள். சொன்ன சொல் காப்பவர்கள். அந்த வாய்மையை தலையாயதாகக் கொண்டே, தனது மதத்துக்கு நேர் விரோதமான வேத மதத்தையும், அதன் வரவளையும் வழக்குகளையும் மூடி மறைக்காமல் உள்ளது உள்ள படி, இருந்த விதத்தை சொல்கிறார் இளங்கோ.

இங்கே மட்டுமல்ல, பல கட்டங்களில் இது வரும். மதுரைக் காண்டத்தில் “அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்” மற்றும் “நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும், மாதவர் ஓதி மலிந்த ஓதையும்” எனும் வரிகள், காலையில் மதுரை மக்களை வேத கோஷம் எழுப்பியது என்று காட்டுகிறது. ஆகுதி என்றால் வேள்வியில் சொரியும் ஹவிஸ் – நெய். இது வேத வழக்கம்.

அது மட்டுமல்ல.

மகுரைக் காண்டத்தில், கட்டுரைக் காதையில் சோழதேசத்தில் வாழ்ந்த பராசரன் என்னும் வேதப் பிராம்மணன் கதையும் வருகிறது.

“பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன்
தாங்கா விளையுள் நன்னா டதனுள்
வலவைப் பார்ப்பான் பராசர னென்போன்
குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு
வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த
திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக்
காடும் நாடும் ஊரும் போகி
நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு
ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்
அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க
நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற
நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன்
செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர்
தங்கா லென்ப தூரே அவ்வூர்ப்
பாசிலை பொதுளிய போதி மன்றத்துத்
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை
விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி
கடற்கடம் பெறிந்த காவலன் வாழி
விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி
பூந்தண் பொருநைப் பொறையன் வாழி
மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக்
குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த்
தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி
விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக்
குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென்
பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச்
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன்
ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்

பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த்
தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது
உளமலி உவகையோ டொப்ப வோதத்
தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து
முத்தப் பூணூல் அத்தகு புனைகலம்
கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத்
தன்பதிப் பெயர்ந்தனன்”

Puhar-ILango

அறநெறியிலே செல்லும் செங்கோலையும் வீர நெறியிலே செல்லும் வாளையும் உடையவனாக, அடைக்கலம் என வந்த புறாவின் பொருட்டு துலாக் கோலிலே புகுந்தவனான சிபியும், ஒரு பசுவுக்காகத் தனது அருந்தவப் புதல்வனையே தெரிந்து வலிய காலிலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் ஆண்ட, நீர்வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த புகார் நகரத்தை உடைய சோழ நாட்டில், அறிவில் வல்ல பராசரன் என்னும் ஒரு அந்தணன் இருந்தான்.

அவன், பாரதப் போரில் இருதிறத்துப் படைகளுக்கும் ஒருசேர மிகுதியாகச் சோறு வழங்கிய உதியன் சேரலாதனின் வள்ளன்மையை கேள்வியுற்று அவன் சபையில் நடந்த சதஸிலே கலந்து கொண்டான்.

அங்கு,
“ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர்
முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி
ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பும்
அறுதொழி லந்தணர்”

என அந்தணர்களுக்கு வகுக்கப்பட்டபடி, வாதத்தில், அத்வைதத்தில் ஊறிய கொள்கையை உடைய பிற அந்தணர்களை வென்று பார்ப்பன வாகை சூடி, அரசனளித்த பரிசுகளாகிய நன்கலங் கொண்டு தனது ஊருக்குத் திரும்பினான். கஹோளர் மகன் அஷ்டாவக்கிரன் vs வந்தி (வருணகுமாரன்) சரித்திரம் மகாபாரதத்தில் காண்க.

செங்கோற் தென்னன் ஆட்சிக்குட்பட்ட  திருந்து தொழில்மறையவர் வாழும் திருத்தங்கலூர்என்னும் ஊரில், ஊர்ப்பொதுவில் இருந்த அரசமரத்து மேடையில் களைப்பாறி யிருந்தான். தன்னுடைய,

“தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்,
பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு
களைந்து”

மூவேந்தர்களையும் வாழ்த்தி இருந்தனன். அந்தணர்களுக்கு எந்த நாடும் அவர் நாடே. இது பாரத தர்மம். அப்பொழுது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அந்தணச் சிறார்கள் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர். அக்குழந்தைகளைக் கண்டு மகிழ்ந்த பராசரன், என்னோடு சேர்ந்து உச்சரிப்பு மாறாது வேதம் ஓதினால், இப்பரிசுப் பொருள்கள் அனைத்தையும் பெரிவீர்கள்” எனஅன்புடன் அழைத்தான்.

அப்பொழுது, வார்த்திகன் எனும் அந்தணனின் புதல்வன், ‘ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன்’ (ஆலமர்செல்வன் பெயர் – தக்ஷிணாமூர்த்தி) மழலை மாறாத குழந்தையாயினும் பராசரன் சொன்ன மறைகளைச் சந்தம் பிழையாது கூறினான் மறைவிளி வழாஅ) அதனால் மகிழ்ந்த பராசரன் அவனை  மிகவும் பாராட்டித் தன்னிடம் இருந்த பரிசுப்பொருள்களை ஈந்து தன் வழி சென்றான்.

பராசரன் என்னும் பெயர் இன்றும் தமிழ்ப் பார்ப்பனர்களிடையே வழங்கி வருகின்றது. அந்தணர்களின் கோத்திரப் பெயர்களில் ஒன்றாகவும் வழங்கி வருகின்றது. மறையவர்கள் அத்வைதம் என்னும் கொள்கையராகையால், ‘ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்’ என்றார். ஆஹவனீயம், கார்ஹபத்யம், தக்ஷிணாக்னி எனும் முத்தீயோம்பும்அந்தணரை முத்தீ அந்தணர் எனபது வழக்கு. ஐந்து வேள்விகளை செய்பவர் ஐந்தி ஒம்புபவர்.

அரசனிடம் தானம் வாங்கியதும் பிராமணன் சத்பாத்ரங்களுக்கு அதை தானமாக கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் தான் பரிக்ரஹ தோஷம் (ஆசைப்பட்டு தானம் வாங்கிய தோஷம்) நீங்கும். அதை பராசரன் செய்தான்.

இது வேத வழக்கம்.

அறுதொழிலோர்: வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானம் வாங்குதல், தானம் கொடுத்தல் ஆகிய ஆறு தொழில்களைச் செய்தது வேத அந்தணர்கள்.

ஒரு சமணத் துறவியே, வேத வழக்கம் தமிழகத்தில் வேரூன்றி இருந்ததை நடுவு நிலையோடு சொல்கிறார். அவர் பிராம்மணன் ஆனால் கூட ஏதோ இட்டுக் கட்டி சொல்கிறான் பார்ப்பான் என்று வையலாம். தனக்கு ஆகாத மதமான வேத மதத்தை இவர் ஏன் இருந்ததாகச் சொல்ல வேண்டும்?  தமிழ் நாகரிகத்தில் வேதத்துக்கு இடமில்லாததாக சொல்லும் மக்கள் இதை எல்லாம் கவனிப்பார்களா?

படங்களுக்கு நன்றி:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 


    தக்கிணன்-தன்னை (1)
தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து - மது 23/95


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சிலப்பதிகாரத்தை அடுத்த படியாக நோக்குவோம்.

கோவலன், கண்ணகியையும் கவுந்தி அடிகளையும் புறஞ்சேரியில் வைத்துவிட்டுத் தான்மட்டும் மதுரை நகர் வீதிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்து திரும்புவதைக் கூறும் ஊர்காண் காதையில், மதுரை வீதிகளில் விற்கப்படும் ஒன்பது வகை மணிகளைப் பற்றிக் கூறும் பகுதியில் இளங்கோவடிகள் ஒன்பது வகை மணிகளில் ஒன்றான வைரத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிள்றார்.

“ காக பாதமும் களங்கமும் விந்துவும்

  ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா

  நூலவர் நொடிந்த நுழை நுண்கொடி

  நுால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ”

இதற்கு உரை எழுத வந்த உரையாசிரியர்கள் எல்லாம் நால்வகை வருணத்து ஒளியினைக் குறிக்க

“ அந்தணன் வெள்ளை அரசன் சிவப்பு

  வந்த வைசியன் பச்சை சூத்திரன்

  அந்தமில் கருமை என்றறைந்தனர் புலவர் ”

எனவரும் பரஞ்சோதி முனவரின் திருவிளையாடற்புராணத்துத் திருவாலவாய்ப் படலத்தின் (25) செய்யுளை எடுத்துக் காட்டியுள்ளனர்.

இத்துடன் மட்டும் விட்டர்களா? இல்லை. அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற இந்நான்கு வருணத்தாரும் தத்தமது வருணத்திற்கு உரிய மணிகளையே அணிய வேண்டும்; அப்படி அணிந்தால்தான் பலவித நன்மைகள் உண்டாகும் என்றும் கூறியுள்ளனர்.

அந்தணர்க்கு ஒப்பான வெள்ளை நிறம் உள்ள வைரத்தை அணிவோர் ஏழ் பிறப்பும் அந்தணராகவே பிறப்பார்களாம்.

“ மறையோர் அணியின் மறையோராகிப்

    பிறப்பேழும் பிறந்து வாழகுவரே ” என்றும்

மன்னர்க்கு ஒப்பாகக் கூறப்படும் சிவப்புநிற வைரத்தை அணிந்தால் அரசர்களுக்கெல்லாம் பேரரசனாக ஏழு பிறப்பும் பிறப்பான்.

“ மன்னவ ரணியின் மன்னவர் சூழ

    இந் நில வேந்தவராவர் எழு பிறப்பும் ”  என்றும்

வணிகர்க்கு ஒப்பாகக் கூறப்படும் பச்சை நிற வைரத்தை அணிந்தவர் சிறந்த செல்வராக உலகினில் வாழ்வர்.

 “ வணிகர் அணியின் மனிப்பொன் மலிந்து

   தணி வற வடைந்து தரணியில் வாழ்வர் ”  என்றும்

சூத்திரர்க்கு ஒப்பாகக் கூறப்படும் கறுப்புநிற வைரத்தை அணிந்தால் சிறந்த மனைவி,பொன், நெல், நல்வாழ்வு முதலியன பெற்று இவ்வுலகின்கண் நீடு வாழ்வர்.

“ சூத்திரர் அணியின் தோகையர் கனக நெல்

    வாய்ப்ப மன்றி மகிழந்து வாழ்கு வரே ”

என்றும் மேற்கோள்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

மேலும் சிலப்பதிகாரம் அழற்பட்டு காதையில் மதுரை மாநகரில் அந்தணர், சாதிப்பூதம், அரசர் சாதிப் பூதம், வணிகர் சாதிப்பூதம், வேளாளர் சாதிப்பூதம், என்பதாக நான்கு பூதங்கள் இருந்தனவாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

அந்தணப் பூதமாவது: பசுமையான முத்துவடம் அணிந்த நிலவு போல் விளங்கும். மிக்க ஒளியினை யுடைய நான்குமுகன் யாகத்திற்கென உரைத்த வகுப்புகளோடே முத்தீ வாழ்க்கையின் இயல்பினின்றும் பிழையாத தலைமை அமைந்த ஆதிப் பூதமாகிய அந்தணக் கடவுளும்,

                “ நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளி

                முத்தீ வாழக்கை முறைமையின் வழா அ

                வேத முதல்வன் வேள்விக் கருவியோடு

                ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் ”  என்றும்

அரச பூதத்தை: செவ்விய ஒளியினையுடைய பவளம் போலத் திகழ்கின்ற ஒளியினைப் பொருந்திய மேனியை உடையனாய், ஆழந்த கடல்சூழ்ந்த இவ்வுலகினை ஆளும் மன்னனைப் போல, முரசமும், வெண் கொற்றக் குடையும், கவரியும், கொடியும், புகழமைந்த தோட்டியும், வடித்த வேலும், வடிகயிறும் எனப்படும் இயைபினனாய் அளிவிடற்கரிய சிறப்புக்களையுடைய அரசர்களைப் போரின்கண் தோல்வியுறச் செய்து இந்நிலத்தை தனதாக்கிக்கொண்டு செங்கோலோச்சிக் கொடிய செயல்களை நீக்கி நீதியினை மேற்கொண்டு தன்பெயரை நிறுத்துதற்குரிய புகழினை மிகுந்து உலகின்கண் காக்கின்ற உரை அமைந்த சிறப்பினையுடைய நெடியோன் எனும் பாண்டியனை ஒத்த அதிக வரியினையுடைய அரச பூதமாகிய கடவுளும்

“ பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன்

ஆழக்கடல் ஞாலமாள் வோன் தன்னின்

முரைசோடு வெண்குடை கவரி நெடுங்கொடி

உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு

என இவைபிடித்த கையினன் ஆகி

எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி

மண்ணகம் கொண்டு செங்கோ லோச்சிக்

கொடுந் தொழில் கடிந்து கொற்றங் கொண்டு

நெடும் புகழ் வளர்த்து நானிலம் புரக்கும்

உரைசால் சிறப்பின் நெடி யோன் அன்ன

அரச பூதத்து அருந்திறற் கடவுளும்  ”             என்றும்

 

வணிக பூதத்தை: சிவந்த நிறமுடைய பொன்னை ஒத்த மேனியையுடையனாய் நிலை பொருந்திய சிறப்பினையும் மறம் பொந்திய வேலினையுமுடைய அரசர்க்குரிய தலைமையமைந்த முடிதவிர மற்றையன பூண்ட கலன்களையுடையனாய், வாணிகம் செய்யும் முறையானே பெரிய உலகினை காத்துக் கலப்பையையும் துலாக்கோலையும் ஏந்திய கையினையுடையனாய் உழவுத் தொழிலானே உலகுக் குதவும் குற்றமற்ற வாழக்கைக்குரியோன் எனப்படுவோனாகிய விளங்கும் ஒளியினையுடைய தலை மீது குழவித்திங்களையணிந்த இறைவனது திருவடி போலும் ஒளிமிளிரும் மிகப்பெரிய  வணிக பூதமாகிய கடவுளும்,

“ செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன்

மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர்

அரைசுமுடி யொழிய அமதந்த பூணினன்

வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி

நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன்

உழவுத் தொழிலுதவும் பழுதில் வாழக்கைக்

கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியன்

இளம்பிறை சூடிய இறைவன் வடிவினோர்

விளங் கொளிப் பூத வியன்பெருங் கடவுளும்” எனவும்

 

வேளாள பூதத்தை: கழுவப்பட்ட நீலமணி போன்ற மேனியனாய் ஒள்ளிய கருநிறஞ் சேர்ந்ந உடையினனாய் , உலகினை ஆளுதற்கேற்ற உழுபடை முதலியவற்றுடன் பொருந்திப் புலவர் பாடுதற் கேற்ற ஈகைத்துறை பலவற்றிலும் முடியச் சென்ற ஆரவாரம் மிக்க கூடற்கண்ணே (மதுரையின் கண்) பலியினைப் பெறும் பூத்த தலைவனென்னும் வேளாண் பூதமும்,

“ மண்ணுற திருமேணி புரையும் மேனியன்

ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன்

ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப்

பாடற் கமைந்த பலதுறை போகிப்

கலிகெழு கூடற் பலிபெறு பூதத்

தலை னென்போன் தானுந் தோன்றி ”

என்றும் கூறியுள்ளார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 சீவக சிந்தாமணியின் நான்கு வருணப் பாம்புகள்:

கி.பி 9ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட சிந்தாமணியில் பாம்புகளில் கூட நால்வகை வருணங்கள் உண்டென்று கூறப்பட்டுள்ளது. இந்நூலில் சூத்திரர் என்ற சொல்லே வெளிப்படையாக எடுத்தாளப்பட்டிருக்கின்றது.

“ அந்தணண் நாறும் ஆண்பா

லவியினை அலர்ந்த காலை

நந்தியா வட்டம் நாறும்

நகைமுடி அரசனாயின்

தந்துயா முரைப்பிற் றாழைத்

தடமலர் வணிகன் நாறும்

பந்தியாப் பழுப்பு நாறின்

சூத்திரன் பால தென்றான் ”

(பதுமையார் அலம்பகம் 1294-ம் செய்யுள்)

இதன் பொருள்: பாம்பு கடித்த இடத்தில் பசுவின் பாலின் ஆவியின் வாடை நாறினால் அது பார்ப்பனச்சாதிப் பாம்பாகும். நந்தியா வட்டச் செடி மலர்ந்த காலத்தில் நாறும் மணத்தினை வீசுமாயின் அது அரசசாதிப் பாம்பாகும். தாழைமலர் மணம் நாறுமாயின் அது வணிக சாதிப் பாம்பாகும். மற்றொன்றும் கூறாத அரிதாரம் நாறுமானால் அது சூத்திரச் சாதிப் பாம்பாகும் என்று கூறியுள்ளது.

வச்சணந்தி மாலை (வெண்பா பாட்டியல்) கூறும் வர்ணாசிரமம் 

உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும், வல்லெழுத்துக்கள் ஆறும் பார்ப்பன வருணம் என்றும்; த, ந, ய, ர, ப, ம இவ்வாறு மெய்யும் அரச வருணம் என்றும்;  ல, வ, ற, ன இந்நான்கும் வணிக வருணம் என்றும்; தமிழுக்கே சிறப்பெழுத்துக்கள் எனப்பெருமையாகக் கூறப்படும் ழ, ள இவ்விரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நான் முன்பு திருவிளையாடற் புராணத்தில் பார்ப்பான் நிறம் வெண்மை, அரசன் – செம்மை, வணிகன் – பச்சை, சூத்திரன் -கறுப்பு என்று கூறியிருப்பதாகக் கூறினோம். அதுபோலவே இந்நூலிலும் பாக்களுக்கு கூட நிறம் கூறப்பட்டுள்ளது.

வெண்பா – வெண்மை,  ஆசிரியப்பா – செம்மை,  கலிப்பா- பொன்மை, வஞ்சிப்பா – கருமை

என்று கூறுகின்றது. மேலும் வெண்பா – பிராமண குலமென்றும், ஆசிரியப்பா – சத்திரிய குலமென்றும், கலிப்பா – வைசிய குலமென்றும், வஞ்சிப்பா – சூத்திர குலமென்றும் குலப் பொருத்தங்கள் கூறுகின்றது. அத்துடன் விட்டதா? இல்லை. வெண்பாவால் அந்தணனைப் பாடவேண்டுமாம். ஆசிரியப் பாவால் அரசனைப் பாடவேண்டுமாம். கலிப்பாவால் வைசியனைப் பாடவேண்டுமாம். வஞ்சிப்பாவால் சூத்திரனைப் பாடவேண்டுமாம்.

கலம்பகம் பாடவும் நிபந்தனை:

ஒருவன் கலம்பகம் என்ற நூல் செய்ய விரும்பினால் தேவருக்கு நூறு பாட்டும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்து  பாட்டும்,  அரசர்களுக்குத் தொண்ணூறு பாட்டும், அமைச்சருக்கு எழுபது பாட்டும், வணிகருக்கு ஐம்பதும், சூத்திரனுக்கு முப்பதுமாக பாட வேண்டுமாம். என்னே இக்கால வர்ணா சிரமத்தின் கொடுமை !

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்களில் பார்ப்பனரும்வேத வேள்விகளும்

சங்க இலக்கியங்கள் எனப்படும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களில் பார்ப்பனர்களைப் பற்றிய செய்திகள் வந்துள்ளனவற்றைக் காண்போம்.

சங்ககாலம் எனப்படுவது இன்றைக்கு சற்றேறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். .இந்தக் காலப்பகுதிகளில் எழுந்த இலக்கியங்களில் எல்லாம் ஆரியர்களின் வடமொழி வேத வேள்விகள், வைதீகநெறிகள், பண்பாடுகள் இன்ன பிறவும் காணப்படுகின்றன.

வேத வேள்விகள்

வடநூல்களில் கூறப்பட்ட வேதமுறைப்படியே தமிழக மன்னர்கள் வேள்விகள் இயற்றியிருக் கின்றனர்.ஒரு பாண்டிய மன்னன் வடநூல் முறைப்படிப் பலயாகங்கள் இயற்றியமையின் காரணமாக பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனப் பெயர் பெற்றான்.  மற்றும் ஒரு சோழமன்னன் இராஜசூய யாகம் செய்து அதன் காரணமாக இராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்று பெயர் பெற்றுள்ளான்.

பண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியானவன் வேதநெறிப்படி யாகங்கள் பல நடத்தியவன். பொரி, சமித்து முதலியவற்றில் நெய்யைச் சொரிந்து வேள்விகள் இயற்றிய யூபஸ்தம்பம் ( யாக ஸ்தம்பம்) பல நட்டுள்ளான். இவனை நெட்டிமையார் என்னும் புலவர் பாடிய 15-ம் புறநானூற்றுப் பாடலில் இச்செயதி தெளிவாக குறிக்கப்படுகின்றது.

“ நற்பனுவ னால் வேதத்

தருஞ்சீர்த்திப் பெருங் கண்ணுறை

நெய்ம்மலி ஆவுதி பொங்கப்பன்மாண்

வீயாச் சிறப்பின் வேள்விமுற்றி

யூபம் நட்டவியன்களம் பலகொல் ”

 

இந்த யூபஸ்தம்பம் நடும் வழக்கம் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழகத்தில் புகுந்துவிட்டது. தொல்காப்பியர் சூத்திரத்திலேயே “ யூபம் நட்டவியன் வேள்வி ” என்று வருகின்றது.

யாக சாலையின் அமைப்பானது வட்ட வடிவு உடையதாகவும் பல மதில்களை உடையதாகவும் இருத்தல் வேண்டும். அதன் நடுவில் பருந்து விழுங்குவது போன்று செய்யப்பட்ட இடத்தில் யூப ஸ்தம்பம் நட வேண்டும்.

இப்படிப் பருந்து வடிவமாகச் செய்யப்படுவதற்குக் கருட சயனம் என்று கூறுவர் வடநூலார். கரிகாற்பெருவளத்தான் இறந்துபடவே கையறு நிலையால் கருங்குழல் ஆதனார் என்னும் புலவர் பாடிய 224-ம் புறப்பாட்டில் இச்செய்தி காணப்படுகிறது.

“ பருதி யுருவில் பல்படைப் புரிசை

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்

வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம் ”

பா: 224: 7 – 9.

 

இப்படி யூபஸ்தம்பம் நட்டு வேள்வி செய்யும் செய்தி சோழன் நலங்கிள்ளியைப் போற்றி கோவூர்க்கிழார் பாடிய 400-ம் புறப்பபாட்டில் வந்துள்ளது.

“ வேள்வி தலிந்த வேள்வித் தூணத்

திருங்கழி யிழிதரும் ஆர்கலி வங்கம் ”

பா: 400: 19, 20.

 

சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலில் “பாப்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் ஆறங்கள் களாலும் உணரப்பட்ட வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோர்களாகிய புறச்சமயத் தார் (புத்தர், சமணர்) களின் மிகுதியை வீழ்த்தவேண்டியும், அவர்களது கருத்துக்களை மக்கள் ஏற்காமல் இருக்கவும் செய்ய இருபத்தொரு வேள்வித்துறைகளையும் குறைவின்றிச் செய்து முடித்தவர்களின் மரபில் வந்தவன் என்று கூறப்படுகின்றான்.

“ ஆறுணர்ந்த ஒருமுது நூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீ இ

மூவேழ் துறையும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக ”

புறம் 166, 4. 9

 

இதில் கூறப்படும் ஆறங்கங்கள் வியாகரணம், சோதிடம், நிருத்தம், சந்தம், சிட்சை, கற்பக மென்னும் வடமொழி ஆறங்கங்களேயாகும். 21 வேள்விகள் என்ன என்றால், இந்த யாக நூல்கள் உணர்த்தும் சோம யக்ஞம் ஏழு, ஹவிர் யக்ஞம் ஏழு, பாக யக்ஞம் ஏழு ஆக இருபத்து ஒன்றாகும். (யக்ஞம் என்றால் யாகம் ஆகும்)

“ புலப்புல்வாய்க் கலைப்பச்சை

சுவற்பூண்ஞான் மிசைப் பொலிய

மருங்கடித்த அருங்கற்பின்

அறம் புகழ்நத வலை சூடிச்

சிறு நுதற்பே ரகலல் குற்

சில சொல்லிற் பல கூந்தனின்

நிலைக் கொத்தநின்  றுணைத் துணைவியர்

தமக்கமைந்த தொழில்  ”

புறம் 166, 11, 18

 

மற்றும் பார்ப்பனர்கள் வடநூல்கள் கூறும் ஆகவனியம், காருகபத்தியம், தென்றிசையங்கி என்னும் முத்தீக்களை வளர்த்த வேள்விகள்.  அந்திக் காலங்களில் செய்யப்படும் கடன்கள் செய்தல் ஆகிய செய்திகள் சங்க நூல்களில் பல இடங்களில் காணக்கிடக்கின்றன.

அந்தி அந்தணரருங்கடனிறுக்கும் முத்தீ – புறம் 2; 22 – 23

ஒன்று புரிந் தடங்கிய இருபிறப்பாளர்

முத்தீப் புரைய – புறம் 367: 12-13

 

மூன்று வகைக் குறித்த முத்தீச்செல்வத் திருபிறப்பாளர் – திருமுருகாற்றுப்படை  181-182

 

அறம்புரி அருமறை நவின்ற நாவின்

திறம்புரி கொள்கை அந்தணர் – அய்ங்குநூறு 387

 

கேள்வி அந்தணர் கடவும்

வேள்வி ஆவயின் உயிர்க்கும் என்நெஞ்செ – கலி 36

அந்தி அந்தணர் எதிர்கொள் – கலி 119

ஒதுடை அந்தணன் எரிவலம் செய்வான் போல – கலி 69

விரிநூல் அந்தணன் விழவு தொடங்கிய

புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப – பரிபாடல் 11

இருபிறப்பு, இருபெயர் ஈரநெஞ்சத்து

ஒருபெயர் அந்தணர் – பரி : 14

ஒருமுகம்

மந்திரவிதியின் மரபுளிவழாஅ

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே   – திருமுறுகாற்றுப்படை 94 -96

பார்ப்பனர்களுக்கு பொன் பொருள் தாரை வார்த்து அளித்தல்

தாரைவார்த்தல், தாராமுகூர்த்தம் என்பனவல்லாம் வடநூல் முறைமைகளேயாகும். ஆனால் பண்டைக் காலத்து மன்னர்கள் பார்ப்பனர்களுக்குப் பொன்னும் பொருளும் வடநூல் முறைமைப்படித் தாரை வார்த்து அளித்திருக்கின்றனர்.

“ ஏற்ற பார்ப்பார்க் கீர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து”

புறம் 367 : 4-5

 

“ கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு

அருங்கலம் நீரொடு சிதறி ”

புறம் 361 : 4-5

 

எனக் கூறப்பட்டுள்ளன. மற்றும் அரசன் பார்ப்பனனுக்கு நிலமும் பசுவும் அளித்தல் பதிற்றுப் பத்து (பா 6: 45) போன்ற நூல்களிலும் காணப்படுகின்றது.

இப்படிப் பார்ப்பனர்கள் மன்னர்களைத் தம்வயப்படுத்திக் கொண்டு அவர்கள் மனங்குளிரும் படிப் புகழ்ந்து பொன்னும் பொருளும் பெற்றதோடு மேல்நிலையும் அடைந்து வாழ்ந்திருக்கின்றனர்.

மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு வருத்தம் தரும்படியான செயலைச் செய்ய அஞ்சியிருக்கின்றனர்.

‘ ஆர்புனை தெரியல் நின்முன்னோ ரெல்லாம்

பார்ப்பார் நோவன செய்யலர் ’

புறம் 43: 13-14

 

 ‘ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருத் சிதைத்தோருக்கும்

பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கும்

வழுவாய் மருங்கின் கழுவாயும் உள ’

புறம் கா 34

 

இப்புறப்பாடலில் ஆண்முலை அறுத்தல், மகளிர் கருச்சித்ைதல் போன்றே பாப்பனர்க்குத் துன்பம் விளைவிப்பதும் கொடிய குற்றம் என்ற எண்ணத்தை சங்க காலத்தில் வேரூன்றச் செய்து விட்டனர்.

மன்னன் வேற்று நாட்டுமீது படை எடுத்துச் செல்லுங்கால் முதலாவதாக பசு, பார்ப்பனர், பெண்கள், நோயாளிகள், பிள்ளை இல்லாதவர்கள் ஆகியவர்களை போருக்கு முன் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றுவிடும்படி எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் இவர்களுக்குத் தீங்கு இழைத்தல் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளன. இங்கும் பார்ப்பனர்களுக்கு நோவன செய்யலாகாது என்ற கருத்தை அரணாக அமைத்துக் கொண்டனர்.

ஆவும் ஆன் இயல் பார்ப்பன

மாக்களும்

பெண்டிரும் பிணி

யுடையீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு

அரும் கடன் இறுக்கும்

பொன் போல் புதல்வர்ப

பெறா அதீரும்

எம் அம்பு கஎவிடுதும் நும்

அரண்சேர்மின்

புறம்: பா. 9

 

இப்பாடல் வடநூல்படி யாகம் பல செய்தவனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டியமையார் என்னும் புலவர் பாடியதாகும்.

பண்டைக்காலத்திலேயே பாப்பனர்கள் மக்களோடு கலந்து பழகாமல் தனித்து இருந்து ஆச்சார அனுஷ்டானங்களைக் கையாண்டு ஒழுகி வந்திருக்கின்றனர். இச்செய்தி பரிபாடல் பாட்டு ஒன்றால் உணரக் கிடக்கின்றது.

வைகையாற்றில் தண்ணீருடன் ஈக்கள் மொய்க்கும்படியான மது கலந்து வருகின்றது என்றும் ஆற்றில் ஆடவர்களும் பெண்டிர்களும் நீராடுங்கால் அவர்கள் மீது பூசியுள்ள மணப் பொடிகள் எல்லாம் ஆற்றில் அடித்து வரப்படுகின்றன என்றும் எண்ணி, பார்ப்பனர்கள் வைகையாற்றில் குளிப்பதை யொழித்தனர். மேலும் வைகையாற்றுத் தண்ணீரில் தேன் கலந்து வருவதாகவும் அது வழுவழுப்புற்றது என்றும் எண்ணிப் பார்ப்பனர்கள் அதில் வாய்கூடக் கழுவுவதில்லையாம்.

“ ஈப்பாயக் அடுநறாக் கொண்டது இவ்யாறு எனப்

 பார்ப்பார் ஒழிந்தார் படிவு

மைந்தர் மகளிர் மணவிரை தூவிற்று என்று

அந்தணர் தோயலர் ஆறு

வையை தேம்வேவ வழுப்புற்றென

அய்யர் வாய்பூசுறார் ஆறு.

பரிபாடல் திரட்டு 2 : 58,63

 

இச்செய்திகள் ஒருக்கால் கற்பனையாகவும் இருக்கக்கூடும் என்றாலும் அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் வைதீக ஆசாரம் உடைய மனப்பான்மையினராக வாழ்ந்திருந்தனர் என்பதை இவ்வடிகள் காட்டுகின்றன அல்லவா?

பார்ப்பனர்கள் தங்கள் சாதி உயர்வைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்றே அணிந்து கொள்ளும் சாதிக்குறியாகிய பூணூலைச் சங்ககாலத்தில் கூட அணிந்துகொண்டு பெருமை பாராட்டி இருந்திருக் கின்றனர். பார்ப்பனர்கள் உபநயனத்துக்கு முன் அதாவது பூணூல் தரித்துக் கொள்வதற்கு முன் ஒரு பிறப்பும் உபநயனத்திற்குப் பிறகு ஒரு பிறப்புமாக இருபிறப்பினை உடையவர்கள் என்று வடநூல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் தங்களை இருபிறப்பாளர்கள் என்று இன்றும் பெருமை யாகக் கூறிக்கொள்வதைக் காண்கிறோம். உபநயனுத்துக்கு முன் பார்ப்பான் பார்ப்பனத்தன்மை உடையவன் ஆகமாட்டான் என்றும், உபநயனத்துக்குப் பின்பே அவன் பார்ப்பனத்தன்மை அடைகிறான் என்றும் இப்படி உபநயனக் காலத்திற்குப் பின்புதான் அவன் வேதமந்திரங்கள் ஜபிக்கவும் ஆச்சார அனுஷ்டானங்களுக்கு உரியவனாகவும் ஆகின்றான் என்றும் கூறப்பட்டிருக்கின்றன. இந்தக் கொள்கைள் சங்க காலத்திலேயே நன்கு வேரூன்றிவிட்டன என்று சொல்லாம்.

“ ஒன்று புரிந்தடங்கிய இருபிறப்பாளர் ”

புறம் 367 : 12

 

இருபிறப்பு, இருபெயர் ஈரநெஞ்சத்து

ஒரு பெயர் அந்தணர்

பரிபாடல் 14

 

இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல

திருமுருகு 182

 

என்று பார்ப்பனர்களின் இருபிறப்புகள் கூறப்பட்டுள்ளன.

மற்றும் பார்ப்பனர்கள்  சாதிக் குறியாகிய பூணூலைத் தோளில் அணிந்திருந்தார்கள் என்றும் அந்தப் பூணூல் ஒன்பது நூல்களால் மூன்று புரிகளாக ஆக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளன.

‘ ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் ’

திருமுருகு : 183

 

‘ புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப ’

                பரிபாடல் 11

 இதுவரை மேலே எடுத்துக் காட்டிய செய்திகளால் சங்க காலத்திலேயே தமிழர்களுக்குப் புறம்பான பார்ப்பனரும் அவர்தம் வேத வேள்விகளும் மற்ற பண்பாடுகளும் புகுந்துவிட்டன என்பதை ஓரளவுக்குக் கண்டோம். அடுத்த கட்டுரையில் சங்க இலக்கியங்களில் புராணக்கதைகள் என்ற தலைப்பில் ஓர் பகுதி காண்போம். இந்தக் கட்டுரைகளின் கருத்தே பார்ப்பனர் வேறு, நாம் வேறு, நம் பண்பாடு வேறு என்பவற்றை தெளிவுபடுத்தவது என்பதே ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

  • வச்சணந்தி மாலை உரை

பாட்டியலைக் கூறுவது வச்சணந்தி மாலை (கி.பி. 1220). இதன் ஆசிரியர் குணவீர பண்டிதர். அவருடைய ஆசிரியரான வச்சணந்தி முனிவருடைய பெயர் இந்நூலுக்குச் சூட்டப் பெற்றது. இந்நூலுக்கு உரை செய்தவரின் பெயரோ வரலாறோ கிடைக்கவில்லை. பல மேற்கோள் பாடல்கள் இதன் உரையுள் உள்ளன.

இவ்வுரை சுருக்கமான பழைய உரையாகும். வடமொழி நூல்கள் பலவற்றை இவர் குறிப்பிடுகின்றார். சங்க நூல்கள் சிலவற்றையும் எடுத்துக் கூறுகிறார். நூலின் இறுதிப் பகுதியில் விரிவாக உரை எழுதவில்லை.

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

 

முதன் மொழியியல்

0. வெண்பா
தொகுத்துரைத்த மங்கலஞ் சொல்லெழுத்துத் தானம்
வகுத்தபா லுண்டி வருணம் - பகுத்தநாள்
தப்பாக் கதிகணமென் றீரைந்தின் தன்மையினைச்
செப்புவதா மும்மொழியின் சீர்.

1. மங்கலப் பொருத்தம்
சீரெழுத்துப் பொன்பூ திருமணிநீர் திங்கள்சொற்
கார்பரிதி யானை கடலுலகம் - தேர்மலைமா
கங்கை நிலம்பிறவுங் காண்டகைய முன்மொழிக்கு
மங்கலமாஞ் சொல்லின் வகை.

2. சொற் பொருத்தம்
வகையுளி சேர்தல் வனப்பின்றாய் நிற்றல்
தொகையார் பொருள்பலவாத் தோன்றல் - தகையில்
பொருளின்மை யீறு திரிதலே போல்வ
தருமுதற்சீர்ச் சொற்காகுந் தப்பு.

3. எழுத்துப் பொருத்தம்
தப்பாத மூன்றைந்தே ழொன்பான் தவறிலவென்
றொப்பா முதற்சீர்க் குரைசெய்வர் - செப்புங்கால்
தண்டாத நான்காறெட் டாகா தவிர்கென்று
கொண்டா ரெழுத்தின் குறி.

4. தானப் பொருத்தம்
குறிலைந்துந் தந்நெடில் கொண்டிஉஐ ஒளசேர்ந்
தறிபால னாதியா வைந்து - மிறைவன்பேர்
முன்னெழுத்துப் பாலனில்வைத் தெண்ணிமூப் பேமரணம்
என்னுமிவை தீதென்றே யெண்.

5. பாற் பொருத்தம்
எண்ணுங் குறிலா ணியைந்த நெடிலெல்லாம்
பெண்ணாகு மொற்றாய்தம் பேடாகும் - பெண்ணினோ
டாண் புணர்ச்சிக் கவ்வவ் வெழுத்தே மயங்கினுமா 
மாண்பில்பே டென்றார் மதித்து.

6. உணாப் பொருத்தம்
மதித்த கசதநப மவ்வோடு வவ்வும்
உதித்தமைந்த நாற்குற் றுயிரும் - துதித்தமுதென்
றாதி மொழிக்குந் தசாங்கத் தயலுக்குந்
தீதிலவே யென்றார் தெரிந்து.

7.
தெரிந்த யரலமேற் சேர்ந்தவா வோவும்
புரிந்தவற் றொற்றாய்தப் புள்ளி - விரிந்த
அளவொடுகான் மாத்திரையு மாமென் றறிந்தோர்
உளவென்றார் நஞ்சென் றொழி.

8. வருணப் பொருத்தம்
ஒழியா வுயிரனைத்து மொற்றுமுத லாறும்
அழியா மறையோர்கா மென்பர் - மொழியும்
அடைவேயோ ராறு மரசர்க்கா மென்பர்
படையாத சாதிகளின் பண்பு.

9.
பண்பார் வணிகர்க்காம் பாங்கி லவறனக்கள்
மண்பாவுஞ் சூத்திரர்க்கா மற்றையவை - நண்பால்
அரனரிசேய் மால்கதிர்கூற் றாய்மழைபொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு.

10. நாட்பொருத்தம்
பேசு முயிரடைவே நான்காரல் பின்னைந்து
மாசிலாப் பூராட மற்றொருமூன் - றாசிலாப்
பேருத்தி ராடமா மென்று பெரிதுணர்ந்தோர்
பாரித்தார் நாளின் பரிசு.

11.
பரிசுடைய கவ்வரியி னான்கிரண்டு மூன்றுந்
தெரிவுடைய மூன்றடைவே செப்பிற் - பிரிவுடைய
ஓணமே யாதிரையே யொண்புநர்பூ சம்பூசம்
பேணி யுரைத்தார் பிரித்து.

12.
பிறிந்த சகரத்து நான்கைந்து பின்மூன்
றறிந்த கலமுதன்மூன் றாகுஞ் - செறிந்த
ஞகரத் தொருமூன்று நன்குணர்ந்தோ ராய்ந்த
புகர்தீ ரவிட்டமாம் போற்று.

13.
போற்றுந் தகரமிரண் டேழ்மூன்றும் பொய்தீர்ந்தோர்
சாற்றுவர் சோதி முறஞ்சதயம் - வேற்றனுடங்
கேட்டைபூ ரட்டாதி கேணகரத் தோராறும்
வாட்டமிலா மும்மூன்றும் வந்து.

14. 
வந்த பகரத்து நான்கிரண்டா றுத்திரந்தொட்
டந்தமிலா மூன்றாகு மவ்வடைவே - வந்ததற்பி
னாறுமக மூன்றுடன்மூன் றாயிலியம் பூரமா
மாறின் மகரத்தின் மாட்டு.

15.
மாட்டும் யகரத்துள் யாவுத் திரட்டாதி
ஈட்டியயூ காரயோ காரங்கள் - காட்டிய 
மூலம் வகரத் தொருநான்கு ரோகணிமான்
தோலாத நான்கெனவே சொல்.

16. 
சொல்லியநாண் மூவொன்ப தாகத் துணிந்தொன்று
புல்லியமூன் றைந்தேழ் பொருந்தாவா - மல்லனவற்
றட்டம ராசி வயினா சியமிவையும்
விட்டொழித்தல் நன்றெனவே வேண்டு.

17.கதிப் பொருத்தம்
வேண்டுங் குறில்வன்மை யீறொழிந்தால் விண்ணோர்க்காம்
ஆண்ட நெடின்முதனான் கந்தமொழித் - தீண்டிய
மென்மையா மக்கட் கிவையிரண்டு மெய்க்கதிக்கு
நன்மையா முன்மொழிக்கு நாட்டு.

18.
நாட்டிய ஒஓ யரலழ நல்வன்மைக்
கீட்டிய வந்த மிவைவிலங்காங் - காட்டா
தொழித்த நரகர்க்கென் றோதினா ரின்ன
வெழுத்தாகா வாதி யிடை.

19. கணப் பொருத்தம்
ஆதி யிடையிறுதி முற்றுநே ராநிரையென் 
றோதுவர்நீர் தீமாக மொண்சுவர்க்கந் - தீதிலோர்
சொற்றார் மதிபரிதி கானிலமா நீர்மதியு
முற்றாகி யாமுன் மொழிக்கு.

20.
முன்மொழி யாகலான் மூவசைச்சீ ரல்லன
நன்மைசால் தெய்வ நவிலாமை - முன்மொழிக்
கீட்டிய தொன்மை யிலக்கணங்க ளிவ்வகையே
காட்டு மகலக் கவிக்கு.

21. வெண்பா
திருமங்கை நின்றகலாள் தெவ்வுநோய் நீங்கும்
தருமங்கள் நீங்கலாச் சார்வார் - இருநிலத்து
மன்னருள்ளார் தாழுந்தாள் வச்சணந்தி மாமுனிவன்
இன்னருளால் நோக்கு மிடம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்தப் பாட்டியலும்

மூன்றாவது பொதுவியல்.

1. நாற்பாச் சாதி இடம் நிறம்
வேறுமறை யோராதி நாற்சாதி வெள்ளைமுதல்
கூறுநிலை முல்லை குறிஞ்சியே - மாறா 
மருதநிலம் நெய்தல்நிறம் வான்மையே செம்மை
கருதரிய பொன்மையே கார்.

2. நாற்பா நாள் இராசி
கார்த்திகை மாசிபனை குன்றாதி காட்டுகநாள்
மூத்த விராசிநான் மூன்றினையும் - நீர்த்தசீர்
மேதினிமே லாசிரியம் வஞ்சிகலி வெள்ளையென
ஓதியமே டாதியா லோட்டு.

3. நாற்பாத் தேவதையாதி
ஒட்டுமதி பொன்வெள்ளை யொண்கதிரோன் சேயகவல்
காட்டியமால் காரி கலிக்காகும் - ஈட்டும்
புகர்பாம்பு வஞ்சிக்காம் பூவிரையோ டாடை
பகர்நிறத்தாற் கொள்கவணி பாட்டு.

4. பாடும் விதம்
பாட்டுடையோ னூர்ப்பே ரியற்பேர் படவெதுகை
நாட்டிடினு மப்பேர் நவிலடியின் - காட்டுமுதற்
சேர்ந்த வனுவாகச் சீர்முன் னியற்றிடினும்
வாய்சிறப் பென்கை வழக்கு.

5. உறுப்புச் செய்யுள்
வழக்குள் மரபியலுள் நேர்ந்து வழுவா
திழுக்கி வடவெழுத்தை யின்பம் - வழுக்காது
முன்னையோர் பாட்டிற் பயின்ற மொழியன்றோ
சொன்ன வுறுப்பின் துணிபு.

6. 
துணிதற் கரிது பொருளென்றுஞ் சோர்வு
பணிவுற்ற சொன்மேற் பகுத்தும் - அணிபொருட்டால்
மற்றுமுண் டென்று முரைப்போர் வழுச்சொல்லின்
இற்றன்றோ பாவி னிழுக்கு.

7. அகலக்கவி புகல்வோர்
இழுக்கிலா நாற்குலத்தோ ரெப்பொருளுந் தேர்ந்தோர்
ஒழுக்கறந் தெய்வ முடையோர் - விழுக்கவிகள்
ஈரிரண்டு முத்தமிழும் வல்லோரே யெஞ்ஞான்றும்
சீரார் கவியுரைப்போர் சென்று.

8.
சென்றவிரு பான்தொடங்கிச் சேருமெழு பானளவும்
நின்றபரு வத்துறுப்பு நீங்காதோர் - ஒன்றில்
அகலாப் பிணியில்லோ ரன்றோபாக் கொண்டு
புகலப் பெறுவார் புகழ்ந்து.

9. நல்லவை
புகழுந் தருமநெறி நின்றோர்பொய் காமம்
இகழுஞ் சினஞ்செற்ற மில்லோர் - நிகழ்கலைகள்
எல்லா முணர்ந்தோ ரிருந்த விடமன்றோ 
நல்லா யவைக்கு நலம்.

10. நிறையவை
நலனடக்கஞ் செம்மை நடுவுநிலை ஞானம்
குலனென் றிவையுடையோர் கோதில் - புலனில்லோர்
சென்று மொழிந்தனவுங் கேட்போர் செறிந்தவிடம்
அன்றோ நிறைந்த அவை.

11. தீய அவை
அவையின் திறமறியா ராய்ந்தமர்ந்து சொல்லார்
நவையின்றித் தாமுரையார் நாணார் - சுவையுணரார்
ஆய கலைதெரியா ரஞ்சா ரவரன்றோ
தீய அவையோர் செருக்கு.

12. அந்தணரியல்பு
குன்றாநூ லங்கைமறை கோவணங்கோன் முத்தீயும்
நன்றாய வேள்வி நளினமும் - அன்றிக்
குடைசமிதை குண்டிகைபுற் கோத்திரமென் றின்ன 
உடையாரை யந்தணரென் றுன்னு.

13.
உன்னல ரன்கழலை யோங்கியசீ ரங்கியயன்
என்னவுவ மித்த லிவரென்றே - நன்மறைகள் 
ஓதலே யோதுவித்தல் வேட்டலே வேட்பித்தல்
ஈத லிரத்தலென் றேத்து.

14. மன்னரியல்பு
ஏத்திய பூவைநிலை யெல்லோன் கழல்வாழ்த்தல்
காத்தன்முடி சூட்டல் களம்வேட்டல் - தீத்தொழில்கள்
வெண்குடைசெங் கோல்கவரி வெற்றியரி யாசனமும்
மண்குலவு மன்னர் வளம்.

15. 
வளர்த்தல் குடிகமையஞ் சாதுரங்கம் வாய்மை
விளைத்தல் பொருணெறியா மெய்ந்நூல் - அளத்தலே
உம்ப ருவமை யுரைகோ ளிவையுடையார்
இம்ப ருலகுக் கிறை.

16. பூவைசியரியல்பு
இறையஞ்சா தேருழல் வித்தீதல் புரிந்து
மறைகொண் டழல்வளர்த்து வாய்மை - பொறையுடைமை
என்றிவையுங் காத்து நிரையோம்ப லென்பவே
குன்றா வணிகர் குணம்.

17. தனவைசியரியல்பு
குணங்கோடாக் காத்தல் கொழுநிதிக்கோன் தன்னை
வணங்க லவன்புகழே வாழ்த்தல் - அணங்கார்
இடத்தேகி வாணிகத்தா லீட்டலெரி வேட்டல்
படைத்தோர் வணிகரென் பார்.

18. சூத்திரரியல்பு
பார்திகழு மூவர் பணித்த பணியொழுகல்
ஏருழுத லீதல் பிழையாமை - பார்புகழக்
கோட்ட மிலாமை யொருமைக் குணம்பிறவும்
காட்டினார் சூத்திரர்தம் கண்.

19. சிறப்புப்பாயிர இலக்கணம்
கண்ணாய தெய்வ மிறைஞ்சிக் கருதுநூல்
பண்ண அதிகாரம் பாரித்தல் - எண்ணும்
மதியோர் சிறப்பென்பர் வானவரை வாழ்த்தா
அதிகார முஞ்சிறப்பென் றாக்கு.

20. 
ஆக்கியோன் பேர்வழி யேயெல்லை யாப்பந்நூற்
போக்கிடஞ்சொல் வோர்நுதலிற் றாயபயன் - தாக்கியவிவ்
எட்டினொடுங் காலங் களங்கள ரணமியம்பப்
பட்டாலு மப்பெயரே பன்னு.

21. 
பன்னிய நூற்பேர் பகர்ந்தோன்பேர் காரணமும்
துன்னும் பயனறவுஞ் சொல்லினும் - முன்னைச்
சிறப்பா மவற்றுட் சிலவேறி னாலும்
பெறப்படுமா முன்னைப் பெயர்.

22. பொதுப்பாயிரத்திலக்கணம்
பெயரார்நூ லீவோ னியல்பீயும் பெற்றி
அயராது கொள்வோ னளவும் - அயர்வின்றிக்
கோடன்மர பீரிரண்டுங் கூறல்பொதுப் பாயிரமாம்
பாடல்சால் நூலின் பயன்.

23. 
பயனான்காய் மூவகைத்தாய்ப் பன்மூன் றுரைத்தாய்
இயலுடைத்தாய் மூவாம லேழு - செயன்மதத்தாய்ப்
பத்தாய்க் குணங்குற்றம் பத்தொழிந் தெண்ணான்காம்
உத்தியது நூலென் றுரை.

24. 
உரைத்தநதி சீயமோ டொண்பருந்து தேரை
நிரைத்ததொழிற் சூத்திரத்தி னின்று - விரைக்குழலாய்
செம்பொருள் ஞாபகமாஞ் செய்தி நியதியாம்
கம்பமிலா நூலின் கருத்து.

25. 
கருத்தெச்ச நுட்பம் பொழிப்பகலங் காட்டி
உரைத்த வுதாரணமு முண்டேல் - விருத்தியாம்
பூண்ட கருத்தும் பொழிப்பு முதாரணமும்
காண்டிகையென் றோதல் கடன்.

26. அகலக்கவி கேட்பிக்கும் முகூர்த்தம்
கடனா மகரவா காரங் கதிரோன்
உடனா யெழுங்கடிகை யோராறு - இடனாகி
ஏனை யுயிர்ககூறு மிவ்வகையால் வந்துதித்தால்
ஆனமுதன் மூன்று மழகு.

27. 
அழகாக முன்மொழிக்க ணாராய்ந் தனவும்
அழகாகச் சொல்லினவு மன்றி - அழகாகச்
செய்யுட் குரைத்தனவு மெல்லாஞ் செயிர்தீரச்
செய்யினன் றன்றாயிற் றீது.

28. 
தீதிலா நூலுரைத்த தீதிலாச் செய்யுளைத்
தீதிலோர் நல்லவையிற் சேர்த்ததற்பின் - ஆதிசொல்
பாவிற் கியைய வுரைக்கிற் பலபொருளும்
தாவில் பொருளோடுஞ் சார்ந்து.

29. 
சாந்தின் மெழுகித் தரளத் திரள்பரப்பிக்
காந்தி மணிகனகங் கண்ணுறீஇ - வாய்ந்தலர்ந்த
தாமமு நாற்றி விளக்கிட்டுச் சாறவிசில்
நாமகளை யேற்றுவித்த னன்கு.

30. நன்குணர்ந்தோ ராய்ந்த தமிழ்நூலின் நன்னெறியை
முன்புணர்ந்து பாட்டியனூன் முற்றுணர்ந்து - பின்புணரும்
நல்லார்முன் னல்லாய் நலமார் கவியுரைக்க
வல்லாத லன்றோ மதி.

அவையடக்கம்
என்களங்கம் யாவையும் நீக்கி யினிதருளி
நன்களந்தை நூலோடு நாட்டுவரால் - தென்களந்தை
மன்பெயரான் வண்புகழான் வச்சணந்தி மாமுனிவன் 
தன்பெயரால் நாட்டுந் தமிழ்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இரண்டாவது செய்யுளியல்

1.
கவிகமகன் வாதியே வாக்கியெனக் காசில்
புவியின்மேல் நால்வர் புலவர் - கவிகடாம்
ஆசு மதுரமே சித்திரம்வித் தாரமெனப்
பேசுவோர் நால்வர்க்கும் பேர்.

2. ஆசுகவி
பேரெழுத்திற் சொல்லிப் பொருளிற் பெருங்கவியிற்
சீரலங்கா ரத்திற் றெரிந்தொருவன் - நேர்கொடுத்த
உள்ளுரைக் கப்போ துரைப்பதனை யாசென்றார்
எள்ளாத நூலோ ரெடுத்து.

3. மதுரகவி
எடுத்த பொருளினோ டோசை யினிதாய்
அடுத்தவைசெஞ் சொல்லா யணியுந் - தொடுத்த
தொடையும் விளங்க வவைதுதிப்பச் சொல்லின்
இடமுடைய மாமதுர யாப்பு.

4. சித்திரகவி
யாப்புடைய மாலைமாற் றாதியா வேனையவும்
வாய்ப்புடைய சொல்லின் வகுத்தமைத்து - நீப்பிலா
வண்ணமுந் தொன்னூன் மரபு வழுவாமற்
பன்னுவது சித்திரத்தின் பா.

5. வித்தாரகவி
பாங்கார் தொடர்நிலைப்பாப் பல்பாதஞ் சேர்தனிப்பா
ஈங்கலப் பாக்க ளிரண்டாகும் - ஆங்குத்
தொடர்நிலைப்பா வின்விகற்பஞ் சூழ்வளையாய் சொல்லிற்
கடையிலவே யென்றுரைத்தார் கண்டு.

6. பிள்ளைக்கவி
கண்டுரைக்கிற் பிள்ளைக் கவிதெங்வங் காக்கவெனக்
கொண்டுரைக்குந் தேவர் கொலையகற்றி - ஒண்டொடியாய்
சுற்றத் தளவா வகுப்பொடு தொல்விருத்தம்
முற்றுவித்தல் நூலின் முறை.

7.
முறைதருமூன் றாதிமூ வேழீறாந் திங்கள்
அறைகநிலம் பத்துமாண் டைந்தேழ் - இறைவளையார்க்
கந்தஞ் சிறுபறையே யாரதியா மூன்றொழித்துத்
தந்தநில மோரேழுஞ் சாற்று.

8. 
சாற்றரிய காப்புத்தால் செங்கீரை சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை - போற்றரிய
அம்புலியே யாய்ந்த சிறுபறையே சிற்றிலே
பம்புசிறு தேரோடும் பத்து.

9. பல்சந்தமாலை, அந்தாதி
பத்தாதி நூறந்தம் பல்சந்த மாலையாம்
ஒத்தாய வெண்பா வொருநூறா - ஒத்தசீர்
அந்தாதி யாகுங் கலித்துறையு மவ்வகையே
வந்தா லதன்பே ரவை.

10. கலம்பகம்
வைக்கும் புயந்தவம்வண் டம்மனை பாண்மதங்கு
கைக்கிளைசித் தூசல் களிமடக்கூர் - மிக்கமறம்
காலந் தழையிரங்கல் சம்பிரதங் கார்தூது
கோலுங் கலம்பகத்தின் கூறு.

11. 
கூறு மொருபோகு வெண்பாக் கலித்துறைகள்
மாறின் முதலுறுப்பா மன்விருத்தம் - வேறகவல்
வஞ்சித் துறைவிருத்தம் வான்றுறைவெண் பாமருட்பா
எஞ்சாக் கலியினங்கொண் டீட்டு.

12. 
ஈசர்க்கு நூறிழிபைந் தையர்க் கிகலரசர்க்
காசற்ற தொண்ணூ றமைச்சருக்காம் - ஏசா
எழுபானைம் பான்வணிகர்க் கேனையோர்க் காறைந்
திழிபிற் கலம்பகப்பாட் டீண்டு.

13. ஒலியந்தாதி, மும்மணிக்கோவை
ஈண்டிய முப்பதா யீரெண் கலைவண்ணம்
மூண்டதொலி யந்தாதி முப்பதாம் - ஆண்டகவல்
முன்முறையே வெண்பா கலித்துறைய வந்தாதி
மும்மணிக்கோ வைக்கு முதல்.

14. ஊர் நேரிசை வெண்பா, ஊர் இன்னிசை வெண்பா
முதல்வனூ ரின்பேரான் மொழிவன வெண்பா
அதனைத்தொண் ணூறெழுபா னைம்பான் - மதர்விழியாய்
இன்னிசைவெண் பாவிற்கு மொக்கு மியற்பெயர்
அன்னவற்றாற் கட்டுரைத்தா ராய்ந்து.

15. கோவை, கைக்கிளை
ஆய்ந்த கலித்துறைதான் நானூறா கப்பொருண்மேல்
வாய்ந்தநற் கோவையா மற்றுரைப்பின் - ஏய்ந்த
ஒருதலைக் காம முரைப்பவையை யைந்தாய்
வருவிருத்தங் கைக்கிளையா மன்.

16. மும்மணிமாலை, நான்மணிமாலை
மன்னிய வெண்பா கலித்துறை மன்னர்பா
முன்னியமுப் பான்மும் மணிமாலை - மன்விருத்தம்
நாட்டிய நாற்பது நான்மணி மாலையாம்
ஈட்டியவந் தாதியா யேய்ந்து.

17. இருபாவிருபஃது, இரட்டைமணிமாலை, இணைமணிமாலை
ஏய்ந்த விருபா விருபதுவெண் பாவகவல்
ஆய்ந்த விரட்ரட மணியிருபான் - ஏய்ந்தசீர்
வெண்பா கலித்துறையா மேவிய நான்கானூ
றொண்பா விணைமணியா மோர்.

18. ஒருபாவொருபஃது, பன்மணிமாலை
ஓர்ந்தகவல் வெண்பா கலித்துறையென் றொன்றினால்
ஆர்ந்தவொரு பாவெருப தம்மானை - கூர்ந்தொருபோகு
ஊச லொழித்தாற் கலம்பகப்பா வெண்மாலை
பேசிய பன்மணியாம் பின்பு.

19. தசாங்கம்
புல்லு மலையாறு நாடூர் புனைதார்மா
கொல்லுங் களிறு கொடிமுரசம் - வல்லகோல்
என்றிவை நஞ்செழுத்தோ டேலா வகையுரைப்ப
நின்ற தசாங்கமென நேர்.

20. சின்னப்பூ, தசாங்கப்பத்து
நேருந் தசாங்கத்தை நேரிசை வெண்பாவால்
ஈரைம் பதுதொண்ணூ றீண்டெழுபான் - ஓரைம்பான்
தேர்ந்துரைக்கிற் சின்னப்பூ வீரைந்தாற் செப்பினார்
நேர்ந்த தசாங்க நிலை.

21. விருத்த வகை
நிலையார் குடைசெங்கோ லூர்நாடு நீள்வேல்
கொலையார் களிறு குதிரை - சிலைவாள்
இவற்றின்மேன் மன்விருத்த மீரைந்தாய் வந்தால்
அவற்றின்பேர் நாட்ட லறிவு.

22. ஊர் வெண்பா, அலங்கார பஞ்சகம்
அறிந்திடி லூர்வெண்பா வையிரண்டாம் வெள்ளை
செறிந்த கலித்துறைசீர் மன்பா - அறைந்த
கலங்காத மன்விருத்தங் காண்டகைய வண்ணம்
அலங்கார பஞ்சகமென் றார்.

23. ஊசல், நாழிகை வெண்பா
ஆங்கவிருத் தத்தா லறைந்தகலித் தாழிசையால்
ஓங்கியசுற் றத்தளவா யூசலாம் - போங்கடிகை
தேவர்க்குங் காவலர்க்குந் தேர்ந்துரைக்க வெண்பாவை
மேவியநா லெட்டாக வேய்ந்து.

24. அட்டமங்கலம், நவமணிமாலை, தசப்பிராதுற்பவம்
வேய்ந்த விருத்தங்க ளெட்டட்ட மங்கலமாம்
வாய்ந்தன வொன்பான் மணிமாலை - ஆய்ந்தங்
கிசைத்திடுவர் மால்பிறப்பா லீரைந்து வாழ்த்துத்
தசப்பிரா துற்பவமாந் தந்து.

25. நயனப்பத்து, பயோதரப்பத்து
தந்துரைத்த மன்விருத்தஞ் சார்ந்த கலித்துறைதான்
அந்தமுறுங் கண்முலைமே லையிரண்டாய் - வந்தால்
நயன பயோதரப்பத் தாமென்று நன்னூற்
பயனுணர்ந்தார் முன்பு பகர்.

26. பெண்கள் பருவம்
பகருங்கா லைந்தேழ் பதினொன்று பன்மூன்
றகலாத பத்தொன்பா னையைந் - திகலாத
முப்பத்தொன் றீரிருபான் பேதைமுத லோர்க்குச்
செப்புவராண் டெல்லைத் திறம்.

27. உலா, குழமகன்
திறந்தெரிந்த பேதை முதலெழுவர் செய்கை
மறந்தயர வந்தான் மறுகென் - றறைந்தகலி
வெண்பா வுலாவாங் குழமகன்மேன் மேவிலவ்
வொண்பாக் குழமகனா முற்று.

28. வளமடல்
உற்ற அறம்பொருள்வீ டெள்ளி யுயர்த்தின்பம்
பொற்றொடி காதற் பொருட்டாகப் - பெற்றி
உரைத்தகலி வெண்பா மடலிறைவ னொண்பேர்
நிரைத்த வெதுகை நிறுத்து.

29. அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம்
நிறுத்த வெளிவிருத்த நீடுறுப்பில் வந்தால்
குறித்தங்க மாலையாக் கொள்க - உறுப்பமைந்த 
பாதாதி கேசமுங் கேசாதி பாதமுமா
ஓதுங் கலிவெண்பா வொன்று.

30. ஆற்றுப்படை
ஒன்றா மகவலா லொண்புலவர் யாழ்ப்பாணர்
குன்றாத சீர்பொருநர் கூத்தரே - என்றிவரை
ஆங்கொருவ னாற்றுப் படுத்த பரிசறைந்தால்
பாங்காய ஆற்றுப் படை.

31. தானைமாலை, வஞ்சிமாலை, வாகைமாலை
படைத்திறஞ் சொல்லின் பகர்தானை வஞ்சி
எடுத்துமேற் சேறல் இயம்பின் - அடுத்தமைந்த
வெற்றியுரை வாகையாம் வேந்தன்பா வொன்றினால்
உற்றுரைத்து மாலைப்பே ரோது.

32. தாரகைமாலை, மங்கலவள்ளை
ஓதுசந்தத் தாலுரைத்தல் ஒண்தா ரகைமாலை
கோதிலாக் கற்பிற் குலமகளை - நீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பானென் றிசை.

33. யானைவஞ்சி
இசைந்த நிலங்குலம் ஒத்த வெழிலோ
டசைந்த பிராயத் தளவும் - இசைந்தமதம்
துன்னவஞ்சி வீடுயிர்கோன் மன்னன் தொடர்ந்தணைத்தல்
சொன்னவஞ்சி யானைத் தொழில்.

34. மெய்க்கீர்த்தி, கையறமோதாப்பா
தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீ ரடியால்
எழிலரசர் செய்தி யிசைப்பார் - மொழியுங்கால்
கையற மோதார் கலிவஞ்சி யென்றிவற்றால்
பொய்தீர்ந்த நூலோர் புரிந்து.

35. புகழ்ச்சிமாலை, நாமமாலை
புரிந்த மயக்கவடி வஞ்சியால் பொய்தீர்
திருந்திழையார் சீர்பேர் சிறக்கத் - தெரிந்துரைத்தான்
மன்னும் புகழ்ச்சிநன் மாலையா மைந்தர்க்காம்
பின்னாம மாலைப்பேர் பெற்று.

36. இரட்டைமணிமாலை, வருக்கமாலை
பெற்றசீர் மன்விருத்தம் வெண்பாப் பெயர்ந்திருபான்
மற்றை யிரட்டைமணி மாலையாம் - பொற்றொடியாய்
மன்னகவ லெட்டாய் வருக்கவெழுத் தான்வருமேல்
முன்வருக்க மாலை மொழி.

37. செருக்கள வஞ்சி, வரலாற்று வஞ்சி முதலியன
மொய்யின் திறம்வஞ்சிப் பாவின் முடித்துரைத்தல்
செய்யின் செருக்கள வஞ்சியாம் - தையால்
வழியுரைத்தல் வஞ்சி வரலாறாம் மற்று
மொழியுரைத்தல் தன்பெயரா மூண்டு.

38. பரணி
மூண்ட அமர்க்களத்து மூரிக் களிறட்ட
ஆணடகை யைப்பரணி யாய்ந்துரைக்க - ஈண்டிய 
நேரடியே யாதியா நீண்டகலித் தாழிசை
ஈரடிகொண் டாதியுட னீறு.

39. 
ஈறில் வணக்கங் கடைநிலம்பேய் என்பனவும்
வீறுசா லையைக்கு மெய்ப்பேய்கள் - கூறித்
திறப்படச் சொல்லினவுஞ் செப்பின் பிறவும்
புறப்பொருள்நூல் கொண்டு புகல்.

40. பெருங்காப்பியம்
புகரில் வணக்கம் பொருப்பறமே யாதி
பகர்தல் கடல்கோள் பருவம் - நிகரில்
தலைவனைக் கூறல் தபனனிந்து தோற்றம்
சிலைமணந்தோர் போரின் செயல்.

41. 
செயலார் முடிசூடல் சீர்ப்புதல்வர்ப் பேறோ
டயலார் பொழில்புனல்புக் காடல் - இயலுமூண்
மந்திரத்தூ தாடல் வருமிகல் விக்கிரமம்
சந்துசெல வும்பிறவுஞ் சார்ந்து.

42. 
சார்சுவையே பாவம் விளக்கி யினத்தொடுபாக்
கூருரையே பாடையே கொண்டிலம்பம் - நேர்சருக்கம்
நீப்பில் பரிச்சேதம் நேர்ந்துவரு மேற்பெருங்
காப்பியமா மென்று கருது.

43. காப்பியம், புராணம்
கருதுசில குன்றினுமக் காப்பியமா மென்பர்
பெரிதறமே யாதி பிழைத்து - வருவதுதான்
காப்பிய மாகுங் குலவரவு காரிகை
யாப்பிற் புராணமே யாம்.

44. அகலக்கவிகளில் சிலவற்றிற்குச் சிறப்பு
ஆய வகப்பொருண்மே லாசிரியப் பாவினுள்
மேயசீர் வஞ்சியடி மேவாது - தூய
அகப்பொருண்மே லன்றி யருங்கலிகள் வாரா
தொகப்பெறா வஞ்சி தொடர்ந்து.

45. அகலக்கவியின் பெயர்கள்
தொடர்ந்த பெயர்கள் தொழிலளவு காலம்
இடம்பொருள் பாவுறுப்போ டெல்லை - நுடங்கிடையாய்
பாடினான் பாடுவித்தான் பாடப் படுபொருளான்
நீடும் பிறவு நிறைந்து.

46. கமகன், வாதி
நிறைமதியால் கல்வியால் நீள்கலைகள் கல்லா
தறையு மவன்கமக னாகும் - முறைமேற்கோள்
புல்லு மெடுத்துக்காட் டேது புகலுமவன்
நல்வாதி யென்றே நவில்.

47. வாக்கி
நவிலு மறமுதல் நான்குமயங் காமல்
புவியதனிற் கேட்டோர் புகழக் - கவிப்பனுவல்
குன்றாத சொல்லால் தெளிவுபெறக் கூறுவோன்
நன்றாய வாக்கியென் றார்.

48. புன்கவிஞர்
ஆரொருவன் பாக்களை யாங்கொருவ னுக்களிப்போன்
சோரகவி சார்த்தொலியிற் சொல்லுமவன் - சீரிலாப்
பிள்ளைக் கவிசிறந்த பின்மொழிக்காம் புன்மொழிக்காம்
வெள்ளைக் கவியவனின் வேறு.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 வரையறுத்த பாட்டியல் ( சம்பந்தப் பாட்டியல் )

1. கட்டளைக் கலித்துறை
பார்கொண்ட சோதியன் சம்பந்த மாமுனி பாதமலர்
நேர்கொண் டிறைஞ்சி நிகழ்த்துகின் றேனெடு நூல்சுருக்கி
ஏர்கொண்ட சொற்புல வோர்செய்த பாட்டியல் கற்கமிக்க
சீர்கொண்ட மாமதி யில்லா தவர்க்குத் தெரிவுறவே.

2.
தெரியாது வந்த வழியடை யாளுஞ் சிலர்தமக்கு
மரியாதை யின்றென் மதியன்மை யாற்சொன் மழலைப்புன்சொல்
பெரியார் பொறுப்பர்தம் பேரறி வாண்மையும் பேதைமைபோய்
விரியாத வென்னறி வின்மையும் பாரில் விளங்குதற்கே.

3. 
விளக்கிய மங்கல மேமுத லாக விரித்தபத்தும்
துளக்கற நாடும் பொருத்தமன் றேயில்லை சொல்லறியா
உளக்கவி வாண ரெனைப்போல நாடொறு முண்பொருட்டால்
வளக்கவி பாடிப் பிழைப்பதிந் நூலின் வரும்பயனே.

4. சீர், எழுத்து
வருகின்ற மங்கலச் சொல்லினுட் சீர்கொள்க வாய்ந்தகக்கா
அருகொன்று கிக்கீசொச் சோக்கள்நந் நாவொ டடுத்தநிந்நீ
தருகின்ற யாவொடு வவ்வாவிவ் வீப்பெயர் தங்களுக்கு
முருகொன் றெழுத்துநுந் நூயூப் பெயர்க்கு மொழியநன்றே.

5. பொன், பூ
மொழிபொன்குக் கூவுஞ்செள காரந்துத் தூவு முரணிதெத்தே
அழிவில்நெந் நேயோடு புப்பூமெம் மேயோ டகன்றமொம்மோ
வழுவின்வெள காரப் பெயர்க்குரை பூக்கொண் டிசைக்ககெளசை
வழிகொண்மம் மாமிம்மீ மும்மூவை காரவெள காரங்கட்கே.

6. திரு, திங்கள், மணி, நீர்
வெளவுந் திருத்திங்க ளென்சொற்கள் கொக்கோ வரும்பெயர்க்காம்
செவ்வுண் மணிச்சொற்கெக் கேப்பெயர்க் காஞ்செழு நீர்ச்சொற்கையோ
டிவ்வுண்சிச் சீயொடு தித்தீத்தை நெந்நோ வுடனிசையக் 
கெளவும்பை காரப் பெயர்க்குநன் றாம்படி கட்டுரையே.

7. சொல், கங்கை, வாரணம்
கட்டுரை சொற்கொளெள காரஞ்சுச் சூக்கள்செச் சேக்கள்தெளநெள
ஒட்டுரை பேர்க்கினி தாங்கங்கை அஆஒ ஓக்கள்தத்தா
விட்டுரை தொத்தோ விழயோப் பெயர்க்குயர் யானையின்பேர்ப்
பட்டுரை வாரணங் கொண்டுஞெஞ் ஞொப்பெயர் பாடுகவே.

8. குஞ்சரம், உலகு, பார்
பாடுயர் குஞ்சரம் இஈயு ஞாவும் பகர்பெயர்க்காம்
நீடுல கங்கொடு பப்பாப் பெயர்க்கு நிரந்துரைக்க
பீடுறு பார்கொடு சச்சாப் பெப்பேயொ டொளிர்ந்தபொப்போ
நாடுவெவ் வேமுதல் நண்ணியபேர்க்கு நயந்துரையே.

9. தேர்
உரைதரு தேர்கொடு உஊஎஏஐ யுவந்தநைமை
விரைதரு பேர்கட்கு நேரே விளம்புக மேவுதண்ணீர்த்
திரைதரு வேலை யுடனேசெஞ் சேலையுஞ் சேரவென்று
வரைதரு மஞ்சனந் தோய்ந்தரி சிந்திய வாள்விழியே.

10. 
வாளா வுரைப்பிற்றொன் னூலோர் வகுத்த வருணமுண்டி
கேளார்ந்த நல்ல கதிகண மாய்ந்துரை கேழ்கிளரத்
தாளார் கமலமு நீலமும் போன்று தருக்கி முட்டி
நீளா மதர்த்தரி சிந்திய வாட்க ணிரைவளையே.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard