New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதங்கள் -இந்து சமயம் செம்பரிதி


Guru

Status: Offline
Posts: 24601
Date:
வேதங்கள் -இந்து சமயம் செம்பரிதி
Permalink  
 


வேதங்கள்  செம்பரிதி

veda-school

துவரை நாம் இந்திய சமயங்களும் இந்தியாவுக்குரிய சமய மரபுகளும் ‘மனிதன்’ என்பானை மையப்படுத்தும் சிந்தனை முறைமைகளாய் இருப்பதைப் பார்த்தோம்; நடைமுறையில் இந்த சமயங்கள் பல்வேறு சமூக, கலாசார அமைப்புகளுடன் அமைதியான வகையில் இணங்கியிருந்ததையும், இவை தத்தம் வளர்ச்சிக்கு உதவிக் கொண்டதையும் பார்த்தோம்.

இந்த கட்டுரையின் முந்தைய பகுதி ஒன்றில், பிற சமயங்களைப் போல் இந்து சமயத்தில் ஒற்றைப் பெருநூல் என்று எதுவும் அனைத்தைக் காட்டிலும் உயர்ந்த மறைநூலாய் கருதப்படுவதில்லை என்பதை அதன் தனித்துவம் என்று எழுதியிருந்தேன். ஆனால், மனிதனையோ சமூகத்தையோ சமயத்தையோ பேசும் அனைத்து மரபார்ந்த பார்வைகளும் வேதத்தைத் தம் ஆதாரமாய் சுட்டுவதையும் நாம் பார்க்கிறோம்.

அப்படியானால் ‘வேதங்கள்’ என்பவை யாவை?  அது ஓர் தனி நூலா அல்லது எண்ணற்ற பிற மறைநூல்களின் தொகுப்பா? இந்து சமயத்தில் பல்வேறு புனித மறைகள் இருக்கின்றன என்று கூறினால், சமய வாழ்வில் அவற்றின் பங்களிப்பு என்ன, அவற்றின் முன்னிலையில் வேதங்களின் இருப்புக்கு என்ன பொருள்?

இந்தியாவின் கலாசார விழுமியங்கள் அனைத்தும் வேதங்களில் உள்ளன என்று சொல்லும் மரபுகளும் மக்கள் குழுக்களும் உண்டு. இவர்களில் சிலர், உலகில் உள்ள அனைத்து கலாசார விழுமியங்களும் வேதத்தின் பாற்பட்டவை என்றும் சொல்கின்றனர். இவர்கள் போக இன்னும் சிலர், வேதங்களை ஏற்றுக்கொள்ளாத எண்ணற்ற மரபுகளும் இந்தியாவில் உண்டு என்று கூறுகின்றன.

வேதங்கள் குறித்த பார்வைகள் யாவை, வேதங்கள் யாவை, அவை எவற்றிற்கு ஆதாரமாகின்றன என்ற கேள்விகளுக்கு பக்கச்சார்பின்றி சுருக்கமான விடையளிக்க கட்டுரையின் இந்தப் பகுதியில் முயற்சிக்கிறேன்.

வேதங்கள் யாவை?

இந்துக்களின் சமயப் புனித நூல்களிலேயே பிரதானமானவை என்று கூறப்படக்கூடிய மறைநூல் தொகுப்புகளே வேதங்கள்.

உலகச் சமய இலக்கியங்கள் அனைத்திடமிருந்தும் தனித்து நிற்பவை வேதங்கள். வேதங்கள் மனிதராலோ, கடவுளாலோ எழுதப்படாதவை என்று இந்து மரபுகள் சொல்கின்றன. வேதங்கள் உலகளாவிய பொதுத்தன்மை கொண்ட விதிகள். அவை, அண்டப் பெருவெளிக்கும் பொருந்துவன, என்றென்றுக்குமான விதிகள். அவற்றுக்கு துவக்கமோ முடிவோ கிடையாது. அவற்றில் மிக அதிக அளவில் மீபொருண்மை பேசப்படுகிறது, பல்வேறு தளங்கள் விவரிக்கப்படுகின்றன, மேலும் அவை இவ்வுலகல்லாத வேற்றுலகுகளைப் பற்றியவை. எனவே அவை, வேறு எந்த சமய நூல்களைப் போலவும் வாசிக்கப்பட முடியாதவை. இவற்றின் தனிப்பெருமை இந்த இயல்புகளால் மட்டும் கிட்டுவதல்ல- இந்து சமயங்களில் உள்ள ஏராளமான புனித நூல்களினிடையே, இவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தாலும் கிட்டுவது அது.

ஆனால், அனைத்து மறைநூல்களையும் போலவே வேதங்கள் குறித்த புரிதலும் மாறுபடுகின்றன. பிற சமயங்களின் மறைநூல்களோடு ஒப்பிட்டால் வேதங்கள் குறித்த புரிதலில் இருக்கும் இரு கூறுத் தன்மை மிகப் பரந்ததாக உள்ளது.

ஒருபுறம், வேதங்கள் புனிதமான ஞான நூல் என்று பெருமைப்படுத்தப்படுகின்றன- மிகப் பெரும் படைப்பூக்க நிலையில் இயற்றப்பட்ட கவிதைகள் என்றும் எண்ணற்ற ரிஷிகளின் வாக்கு என்றும் போற்றப்படுகின்றன.  இந்த ரிஷிகள் ஞானத்தால் பிரகாசம் பெற்ற தம் மதியில், அனைத்து தெய்வீக சிருஷ்டிக்கும் ஆதாரம் என்றும், பிரபஞ்ச ரகசியத்தை வெளிப்படுத்துபவை என்றும் போற்றப்படும் மந்திர உருவம் தரித்த வேத நாதங்களை அடைந்து, அவற்றை உலகுக்கு அளித்தவர்கள் என்று போற்றப்படுகின்றனர்.

இதற்கு மாறுபட்ட புரிதலில் வேதங்கள் இன்னும் பண்பாட்டை அடைந்திராத புராதன காலத்தவர்களின் மூடநம்பிக்கைகளும் கற்பனைகளும் மட்டுமே- மிக மேலோட்டமான லாபங்கள், போகங்களில் நாட்டம் கொண்டவை, அறம் சார்ந்த மிகவும் துவக்கநிலைப் புரிதல்களும் சமய வேட்கைகளும் கொண்டவை. இவர்களைப் பொறுத்தவரை, மிகவும் கொண்டாடப்படும் பேரண்ட விவரணைகளும் நுண்மைகளற்ற அரிச்சுவடி நிலைப் பிதற்றல்கள் மட்டுமே.

மேலும், வேதங்களை ஞான நூல்கள் என்று நம்புபவர்களிலும்கூட சிலர், இவற்றில் உள்ளவற்றில் பெரும்பாலான பாடல்கள் லௌகிக சடங்குகளை பேசுபவையே என்கின்றனர்- கர்ம காண்டத்தில் உள்ள சொர்க்கமே வேதங்களின் நோக்கம் என்றும் நுட்பமான ஒழுக்கங்கள் உபநிடதங்களில் மட்டுமே பேசத் துவங்கப்படுகின்றன என்றும் சொல்கின்றனர்.

இது தவிர, 19ஆம் நூற்றாண்டு, 20ம் நூற்றாண்டுகளில் இந்தியா குறித்து ஆய்வுகள் செய்த ஐரோப்பிய சிந்தனையாளர்கள் இந்தியாவின் மூல குடிகளான திராவிடர்களிடமிருந்து வந்தேறி ஆரியர்கள் திருடிக்கொண்ட அறிவுப் பெட்டகமே வேதங்கள் என்ற கருத்தை முன்னிறுத்துகின்றனர்.

அப்படியானால் இந்த மறை நூலின் அடிப்படை கொள்கைகள், அறிவுறுத்தல்கள் என்ன? இது போன்ற புரிதல்களில் எவ்வளவு உண்மை எவ்வளவு பொய் இருக்கிறது?

வேதங்கள்- மனிதனால் எழுதப்படவில்லை

வேதங்கள் “அபௌருஷேயம்”, மனிதனால் தோன்றியவையல்ல, என்பது மரபார்ந்த நம்பிக்கை. “பௌருஷேயம்” என்றால், மனிதனாலானது. வேதங்களை யாரும் எழுதவில்லை என்று நம்பப்படுவதால் அவை “அபௌருஷேயம்” என்றாகும்.

வேதங்கள் சூக்தங்களாக எந்த ரிஷிகளால் வெளிப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறதோ அந்த ரிஷிகளே அவற்றை எழுதியவர்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதற்கான காரணம், ஒவ்வொரு வேத மந்திரத்தின் முன்னும் ஒரு ரிஷியின் பெயர் சொல்லப்படுகிறது என்பதுதான் – இதைக் கொண்டு குறிப்பிட்ட சூக்தங்களை எழுதியவர்கள் அந்தந்த ரிஷிகள் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கின்றனர்.

இந்த நம்பிக்கையில் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்து சம்பிரதாயங்களில் எங்குமே இந்த ரிஷிகள் சூக்தங்களை எழுதியவர்கள் என்று சொல்லப்படவில்லை- மாறாய், இவர்கள் வேத மந்திரங்களைக் கண்டறிந்தவர்களாகவே நம்பப்படுகின்றனர். எனவேதான் அவர்கள் மந்திர கர்த்தாக்கள் அல்லது உருவாக்கியவர்கள் என்று குறிப்பிடப்படாமல் மந்திர திருஷ்டர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

வேதங்கள்- அண்டத்தின் புற விதிகள்

ஹிந்து தொன்மங்களில் பல புதுமையான தனித்தன்மை கொண்ட கருத்துருவாக்கங்கள் இருக்கின்றன, அவற்றில் இதுவும் ஒன்று: வேதங்கள் அழிவற்ற படைப்பு விதிகளின் தொகுப்பு, ரிஷிகள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் மட்டுமே. அடிப்படையில் வேதங்கள் ஒலி வடிவங்கள். அனைத்து மறைநூல்களைப் போலவே வேதங்களும் வெளிப்படுத்தப்பட்டவை என்று சொல்லப்பட்டாலும், ரிஷிகள் இந்த வேத வாக்கியங்களைப் பெற தபஸ் மூலம் தங்களுக்குத் தகுதி ஏற்படுத்திக் கொண்டனர்.

வேத ஒலிகள் நித்தியமானவை என்பதால் அவை வேறெந்த இயற்கை ஒலியைப் போலவும் எப்போதும் இருக்கின்றன. நியூட்டன் தன் தர்க்க அறிவைக் கொண்டு புவி ஈர்ப்பு விசையைக் கண்டறிந்து விவரித்ததுபோல், இந்த ஒலிகளைப் பெறத்தக்க வகையில் தங்கள் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டனர். நியூட்டனுக்கு முன்னரே புவி ஈர்ப்பு விசை இருந்ததுபோல், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்னரே அந்த நிலப்பரப்பு இருந்ததுபோல், வேதங்களும் ரிஷிகள் அவற்றை கண்டறிவதற்கு முன்னரே இருந்திருக்கின்றன. இந்த ஒலிகள் அவர்களுக்குப் புலப்பட்டு, அவற்றை வாய்மொழியாய் அடுத்து வரும் தலைமுறையினருக்குக் கொடுத்தார்கள்.

படைப்புத்தொழிலுக்கான இவ்விதிகளைக் கொண்டே பிரம்மன் உலகு படைத்தான் என்று இந்து தொன்மங்கள் கூறுகின்றன. எனவே, இப்பொருளிலும் வேதங்கள் அநாதி, அதாவது, அழிவற்றவை என்று அழைக்கப்படுகின்றன.

வேதங்கள் – ஆதியந்தமற்றவை

பொதுவாக சமய இலக்கியங்களில், கடவுளே ஆதியும் அந்தமும் இல்லாதவனாகச் சொல்லப்படுவது வழக்கம். ஆனால் இந்து சாஸ்திரங்கள் வேதங்கள் துவக்கமும் முடிவுமற்றவை என்று சொல்கின்றன.

இது உண்மையாக இருந்தால் கடவுளோ பரமாத்மாவோ வேதங்களைப் படைத்ததாகச் சொல்ல முடியாது. உண்மையில் இரண்டுமே அநாதி என்பதால் இரண்டுமே எக்காலமும் இருந்தாக வேண்டும்.

அப்படியானால் வேதங்கள் என்பன என்ன, அவை எப்படி தோன்றின? வேதங்களின் நான்கு பகுதிகளும் ஒன்றாய்ச் சேரும்போது அது பரமாத்மனின் சுவாசமாகிறது (நிஹ்ஸ்வாஸிதம்) என்று வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது. யாரும் தம் மூச்சை தாமே உற்பத்தி செய்வதில்லை என்பதால், பர்மாத்மனும் தன் நிஹ்சுவாஸிதத்துக்கு உயிரளித்ததாகச் சொல்ல முடியாது. பிரம்மம் ஜடப்பொருள் என்றும் வேதங்களே பிரம்மத்துக்குச் சக்தியளிக்கின்றன என்றும் இந்தியாவில் ஒரு பொதுவழக்கு உண்டு.

இது உண்மையாக இருந்தால் இந்த அண்டத்தைத் தோற்றுவிக்க உதவும் ஒலியும் அதிர்வுகளும் விதிகளும் நம்மால் அளவிட முடியாத அளவு மிகுதியாக இருக்க வேண்டும். வேதங்கள் முடிவற்றவை- அனந்த வை வேத: ரிஷிகளுக்கு வெளிப்பட்டு அவர்களால் பெற்றுத் தரப்பட்டவை ஒரு வரம்புக்குட்பட்டவையாகவே இருந்தாக வேண்டும். எனவே, வேதங்களை முழுமையாக அறிவது சாத்தியமல்ல.

இந்து சமயங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் துவக்க நிலை மாணவர்கள் இந்து தொன்மங்களில் சொல்லப்படும் வேதம் குறித்த இந்தத் தகவலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

வேதங்களின உலகப்பொதுமையும் ஆற்றலும்

வேதங்கள் என்றுமுள்ள உலகளாவிய விதிகள் எனபதால் அவை உயிருள்ளவை, உயிரற்றவை என்று உலகில் உள்ள அனைத்துக்கும் பொருத்தமானவை. தேசம், நிறம், நம்பிக்கை போன்ற வரையறைகளுக்கும் சமூக அடுக்குத் தொகுப்புகளும் வேதங்களுக்குப் பொருந்தாதவை, எனவே வேதங்கள் மானுடம் அனைத்துக்கும் உரியவை. ஏன், மனிதன், மிருகம், செடி, கற்கள், சூரியன், நட்சத்திரங்கள் என்று இயற்கையில் உள்ளவை அனைத்துக்கும் உரியவை.

வேத மந்திரங்கள் அவற்றை பிரயோகிப்பவர்களுக்கு மட்டும் உதவாமல், சுற்றிலும் உள்ள சூழலில் தாக்கம் ஏற்படுத்தி, காலப்போக்கில் விண்வெளியை ஊடுருவி நிலையான முன்னேற்றம் அளிக்கின்றன என்று இந்து பாரம்பரியங்கள் நம்புகின்றன. மனிதனின் நோய்களைப் போக்கி, விலங்குகள் மற்றும் மரம் செடிகளுக்குச் செறிவூட்டி, சுற்றுச்சூழலில் உள்ள விரும்பத்தகாத, நச்சுத்தன்மை கொண்ட அச்சுறுத்தல்களைப் போக்குகின்றன.

இந்த மந்திரங்களில் கூறப்பட்டுள்ள தர்மத்துக்கு ஏற்ற வாழ்வு வாழ்ந்து, வேதங்களைக் கற்று முறைப்படி பிரயோகித்தால், அது மானுடம் அனைத்துக்கும் மட்டுமின்றி உலகனைத்துக்கும் நன்மை பயக்கும் என்பது இந்து சம்பிரதாயங்களில் நீண்ட காலமாக நிலவிவரும் நம்பிக்கை.

வேதங்கள் – இந்துக்களின் முதன்மை நூல்

உலகெங்குமுள்ள சமயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சியில் ஒரு பொதுத்தன்மையை அடைந்திருக்கின்றன. அவை அனைத்துக்கும் ஒரே ஒரு புனித நூல் அல்லது மறைநூல்தான் உள்ளது என்பது இந்த ஒற்றுமை. சீக்கியத்தில் புனித நூலையே வழிபடவும் செய்கின்றனர்.

சில சமயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட புனித நூல்கள் இருக்கலாம். அவற்றின் தொகுப்பு அந்த சமயத்தின் அதிகார பூர்வமான அல்லது உண்மையான அல்லது புனிதமான நூலாகக் கருதப்படலாம்.

இந்து சமயத்தில் எண்ணற்ற நூல்கள் புனித நூல்களாக நம்பப்படுகின்றன. அவை அனைத்தையும் தொகுத்து ஒரே புனித நூலாக அமைப்பதும் இயலாத காரியம்.

எனவே வேதங்கள்தான் இந்துக்களின் மிக மெய்யானதும், முதன்மையானதுமான நூலாக இருக்கின்றன. எண்ணற்ற புனித நூல்கள் இருப்பினும், எவரும் தமக்குரிய நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றாலும், வேதங்களே இந்து தர்ம-த்தின் மையத்தைக் கட்டமைக்கின்றன.

உதாரணத்துக்கு, ஒருவர் பகவத் கீதையையோ ராமாயணத்தையோ அல்லது ஒரு ரிஷியோ ஞானியோ எழுதிய ஒரு நூலை மிக உயர்ந்ததாகக் கருதி அதன் வழிநடக்கலாம். ஆனால் வேதங்களே அறுதியான நூலாக இருக்கின்றன.

இந்து சமயத்தின் பிற புனித, மறை நூல்களுக்கு ஆதாரமாக அமையும் கட்டமைப்பை வேதங்களே அளிக்கின்றன. மிகவும் எளிய இந்து மரபின்படி, வேதங்களைப் புரிந்து கொள்ளவும், அவற்றில் ஏற்படும் ஐயங்களுக்கு விளக்கம் காணவும் உதவும் துணை நூல்களாகவே பிற புனித நூல்கள் தோற்றம் பெற்றிருக்கின்றன.

ஆனால் சில மரபுகள் குலவழக்கப்படி இயங்குபவை, அவற்றுக்கு வேதங்களுடன் தொடர்பில்லை.

இந்து சிந்தனையின்படி வேதங்களை ஆதார நம்பிக்கை நூல்களாக ஏற்றுக்கொள்ளும் மரபுகள் ஆஸ்திக சம்பிரதாயங்கள் என்றும், வேதங்களின் அறுதித்தன்மையை நிராகரிப்பவை நாத்திக சம்பிரதாயங்கள் என்றும் கூறப்படுகின்றன. இன்று இறை நம்பிக்கை ஆத்திகம் என்றும் இறை மறுப்பு நாத்திகம் என்றும் புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் நாத்திக சிந்தனைகள் பலவும் ஆத்திக சம்பிரதாயங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன, அவற்றைப் பின்னர் வரவிருக்கும் அத்தியாயங்களில் காண்போம்.

நான்மறை நூல்கள்

மஹரிஷி வேத வ்யாஸர், பலகோடி மக்களின் நன்மையை உத்தேசித்தும், வேதங்களைக் காத்து இரட்சிக்கவும், அவற்றை நான்கு பகுதிகளாகத் தொகுத்து முறைப்படுத்தினார்- கிளை என்று பொருள்படும் சாகை என்ற பிரயோக முறைக்கேற்ப இந்தத் தொகுப்பு அமைக்கப்பட்டது.

நான்மறை நூல்கள் என்று அழைக்கப்படுபவை இவை-

  1. ரிக் வேதம்,
  2. யஜூர் வேதம்,
  3. சாம வேதம்,
  4. அதர்வ வேதம்.

ஒவ்வொரு வேதமும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன-

  1. சம்ஹிதை,
  2. பிராஹ்மணம்,
  3. ஆரண்யகம்.

சம்ஹிதையில் மந்திரங்களும் துதிகளும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. சம்ஹிதை என்றால் தொகுத்து அடுக்கப்பட்டவை என்று பொருள்படும். வேதங்களின் பிரதானப் பகுதி சம்ஹிதையில் உள்ளது. பிராஹ்மணங்கள் வைதீக சடங்குகளை விவரிக்கின்றன, ஆரண்யகம் மந்திரங்களின் உட்பொருளை விளக்குகின்றன. இவை தவிர, ஆரண்யகங்களின் முடிவில் உபநிடதங்கள் உள்ளன.

சம்ஹிதை மரம் என்றால், பிராஹ்மணங்கள் மலர்கள் என்றும் ,ஆரண்யகம் காய்கள் என்றும், உபநிடதங்கள் பழுத்த கனிகள் என்றும் கூறுவதுண்டு.

ரிக் என்றால் துதி. யஜூர் என்றால் வழிபாடு. சாமம் என்றால் அமைதி. அதர்வம் என்றால் ஆளுமையின் சமநிலை.

வேதங்களின் எப்பகுதியை எடுத்து யார் வேண்டுமானாலும் பிற புனித நூல்களை வாசிப்பதுபோல் வாசிக்கலாம் என்றாலும், அறிவகங்கள் என்று கூறப்படும் வித்யாஸ்தானங்கள் அனைத்தையும் முறைப்படி வாசிக்காமல் வேதங்களை வாசிப்பது முழுமையான புரிதலை அளிக்காது.

வேத மந்திரங்களின் ஞானம் அனைத்தையும் கொண்டுள்ள வித்யாஸ்தானங்கள் இவை- நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள் (வேதங்களின் துணை நூல்கள்), மீமாம்சங்கள் (வேதத்தின் தாத்பர்யத்தைச் சரியாக புரிந்து கொள்வதற்கான முறைகள்), நியாயம் (தர்க்கம்), புராணங்கள் (புராணங்கள் பல விஷயங்களுடன் அண்டசராசரங்களின் ஒழுங்குகளையும் பற்றிக் கூடப் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள்(நன்னெறியுடன் வாழ்வதற்கான வழி முறைகள்) , உப வேதங்கள் – வேதாங்கங்களின் துணை நூல்கள்- ஆயுர் வேதம் (ஆரோக்கிய வாழ்வுக்கான அறிவியல்) , அர்த்த சாஸ்திரம் (அரசியல் அறிவியல்), தனுர் வேதம் (ஆயுத அறிவியல்), கந்தர்வ வேதம் (கலையறிவு) முதலியவை. வேதங்களைப் புரிந்து கொள்ள இந்த அறிவியல் சார்ந்த துணை நூல்கள் செழுமைக்கு உதவி, முழுமையான வேதக்கல்வி அளிக்கின்றன.

வேதங்கள் – தர்மங்களின் ஆதாரம்

வேதங்கள் தர்மங்களின் ஆதாரம் என்று பலரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கின்றனர். ஆனால் அதற்குரிய கவனமோ மதிப்போ மிகக் குறைவாகவே அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம், வேதங்கள் நீதி நூல்களல்ல என்ற நம்பிக்கை. மற்றொரு காரணம் அன்றாட தர்மத்துக்கு உரிய நெறிகள் வேதங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என்பதும் அவற்றைக் கோர்வையாகப் புரிந்து கொள்வது கடினமாக உள்ளதென்பதும்தான்.

அன்றாட நீதிகள் வேதங்களில எங்கும் விரவிக்கிடக்கின்றன என்பது உண்மையே எனினும் தர்மம் குறித்த போதனைகள் அதில் இல்லை என்பது தவறு. மிக முக்கியமான சூத்ரகாரர்களும் அதன்பின் வந்த நீதிநூல்கள் எழுதியவர்களும் வேதங்களையே ஆதாரம் காட்டுகின்றனர், தங்கள் நீதி சூத்திரங்களுக்கு வேத மந்திரங்களையே மேற்கோள் காட்டுகின்றனர்.

இடைக்கால மற்றும் நவீன சடங்குகளும் பழக்க வழக்கங்களும் வேதங்களில் சுட்டப்படுகின்றன. இன்றும் உள்ள திருமண முறை, மரணச் சடங்குகள், வேள்வி மற்றும் பல சமூக நடைமுறைகளின் ஆதாரம் வேதமே. லௌகீகச் சடங்குகளிலும் வேத மந்திரங்கள் ஒலிக்கின்றன.

தர்ம சாஸ்திரங்களின் மைய நூலான கல்பம் ஆறு வேதாங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்பதே தர்மத்தின் அடி ஆதாரமாக வேதங்கள் இருப்பதைக் காட்டுகிறது..

வேதங்கள் முதிரா சமூகத்து வழிபாடா?

வேதங்களை மேலாகப் பார்த்தாலும், அவற்றின் அரைகுறை மொழிபெயர்ப்புகளை வாசித்தாலும்கூட அவை தெய்வீக உந்துதல் கொண்டவை என்பதையும், உன்னதச் சிந்தனைகளையும், ஆழமான கருத்துகளையும், மேன்மையைக் கொணரும் நீதிகளையும், நுட்பமானதும் விரிவானதுமான உளவியல் உண்மைகளையும் கொண்டவை என்பதையும், மற்றும் பேரதிசயத்தைமான, மகோன்னதமான பேரண்டப் பார்வையை விரிப்பன என்பதையும் உணர்வோம்.

வேதங்களில் சிறு பகுதியிலும் நாம் மனிதத்தின் சக்திக்கு மீறிய உண்மைகளைப் பேசும் கவிதைகளைக் காணலாம். வேதங்கள் எங்கும் அவை நிறைந்திருக்கின்றன- அவற்றுக்கு இடையே சற்றே ஒழுங்காக தொகுக்கப்பட்ட புறவழிபாட்டு முறைகள் இயற்கையையும் தெய்வங்களையும் போற்றிப் பாடப்பட்டிருக்கின்றன.

வேறு பலரைப் போலவே ஐரோப்பியர்கள் வேதங்களை லௌகீக சடங்கு விவரணைகள் என்று தவறாகப் புரிந்து கொண்டனர் என்பதை வேதங்களை கவனமாக வாசிக்கும் எவரும் உணர்ந்து கொள்ளலாம்.. வேதங்கள் ஆன்மிக உண்மைகளை குறியீட்டு மொழியில் கூறுகின்றன, அவை ஒன்று போல் மற்றொன்றில்லை.

புலப்படும் யதார்த்த உண்மைகளுக்கு அப்பால் உள்ளதை ஒவ்வொரு குறியீடும் பேசுகிறது என்பது மட்டுமல்லாமல் சாதகருள் உள்ள உண்மையை அறியும் பாதை குறித்த குறிப்புகளும் தருகிறது. தனியாகப் பார்த்தால் இந்தக் குறியீடுகள் மற்றும் குறிப்புகளை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது. எனினும் இவை பல புரிதல்களுக்கு காரணமாயிருந்திருக்கின்றன. இந்த உண்மைகள் மறைபொருள் சுட்டலாக பாடப்பட்டிருக்கின்றன. தகுதியும் சிரத்தையும் உள்ள சாதகர்கள் மட்டுமே இவற்றின் பொருளுணரும் வண்ணம் இவை பாதுகாப்பாக எதிர்கால சந்ததியினருக்கு கைமாற்றி அளிக்கப்பட்டு வருகின்றன.

இதே போல், வேதங்களில் ஆன்மீக உண்மைகள் ஞான காண்டம் என்று சொல்லப்படும் உபநிடதங்களில் மட்டுமே பேசப்படுகின்றன என்பதும் தவறு. வேதமெங்கும் ஞானம்தான்.

பின்னர் வரும் உபநிடதத்தில் உள்ள உண்மைகளும் ஞான தரிசனங்களும் முன்னரே கர்ம காண்டத்தில் சுருக்கமான சூத்ரங்களாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. வெற்றிடத்தில் இருந்து எதுவும் தோன்றாது- உபநிடதங்களின் அற்புதமான ஞான வாக்கியங்கள் அனைத்தும் கர்ம காண்டத்திலிருந்தே தோன்றுகின்றன..

பல முக்கியமான உபநிடதங்களும் கர்ம காண்டத்தின் மையத்தில் உள்ளன என்பதே இவ்விரண்டும் வேறல்ல என்பதையும் கர்ம காண்டத்தில் ஞான காண்டமும் அடக்கம் என்பதையும் உணர்த்துகிறது.

அபகரிக்கப்பட்ட நூலா?

இந்திய மண்ணுக்குரிய திராவிடர்களைப் படையெடுத்த ஆரியர்கள் வேதங்களை அபகரித்தனர் என்ற குற்றச்சாட்டு வெறும் கற்பனையே. இதற்கான ஆதாரம் இலக்கியத்திலோ அகழ்வாராய்ச்சியிலோ அல்லது வேறெந்த வகையிலோ இதுவரை கிடைக்கவில்லை. இது உண்மையெனில் வெற்றி பெற்ற ஆரியர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடி பல பாடல்கள் பாடியிருப்பார், அல்லது தோல்வியுற்ற திராவிடர்கள் கசப்பாகவோ கோபமாகவோ அதை எங்கேனும் பதிவு செய்திருப்பர். இது விஷயத்தில் பிழைபுரிதலில் பிறந்த உளறலைத் தவிர வேறில்லை

ஆதார நூல்கள்

  • Sarvepalli Radhakrishnan and Charles A. Moore (Eds.). A Sourcebook in Indian Philosophy, 1957, Princeton University Press.
  • A.B. Keith. The Religion and Philosophy of the Veda and Upanishads, 1925, Cambridge, Mass.: Harvard Oriental Series.
  • What is Hinduism?, 2007, Honolulu: Himalaya Academy
  • P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.
  • Sri Chandrasekharendra Saraswati. Hindu Dharma: The Universal Way of Life, 2008, Mumbai: Bharatiya Vidya Bhavan


-- Edited by Admin on Sunday 15th of July 2018 02:24:59 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: வேதங்கள்
Permalink  
 


வேதாங்கங்களும் உபவேதங்களும்

சென்ற அத்தியாயத்தில் வேதங்களின் இயல்பையும் நோக்கத்தையும் கண்டோம். வேதங்கள் எங்கும் பொருந்தக்கூடிய பொதுவிதிகள் என்றும் எல்லா இடங்களுக்கும் எக்காலத்துக்கும் உரிய ஒலிகள் என்றும் சொல்வதை நாம் ஏற்றுக் கொண்டோமானால், மனிதனின் அன்றாட வாழ்வில் அவற்றுக்கு அப்படி என்ன முக்கியமான இடம் இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. இவை யாருக்குரியவை? அனைவரும் தம் விருப்பப்படி இந்த ஒலிகளைப் பயன்படுத்தி தங்கள் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள முடியுமா? அல்லது இந்த மந்திரங்கள் வெறும் ஓசைகள்தானா? இவற்றால் மனிதர்களுக்கு பயனில்லை என்றால் வேத மந்திரங்களால் ஆவதென்ன? இந்தக் கேள்விகளுக்கு இப்படி ஒரு சுருக்கமான பதில் சொல்லலாம்- வேத மந்திரங்கள் அனவைருக்கும் உரியவை. ஆனால் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை வேதாங்கங்களும் உபவேதங்களும் வகுத்திருக்கின்றன. வேதங்களைப் பயன்படுத்தி மேன்மையடைவதற்கான வழிகாட்டிகளாகவும் கருவிகளாகவும் இவ்விரண்டும்  இயங்குகின்றன.

வேதாங்கங்கள்

வேதாங்கங்கள் – வேத அங்கங்கள்- வேதங்களின் உறுப்புகள் என்று சொல்லப்படுகின்றன. வேத ஒலிகளையும் அக்ஷரங்களையும் புரிந்து கொண்டு சரியான முறையில் பயன்படுத்த வேதாங்கங்கள் மிக முக்கியமாய் இருக்கின்றன. எனவேதான் வேதங்களைக் கற்பிப்பதில் வேதாங்கங்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்படுகிறது.

வேதாங்கங்கள் எண்ணிக்கையில் அறுவகைப்படும்

அவை,

 சீக்ஷா – உச்சரிப்பு

வியாகரணம் – இலக்கணம்

சந்தஸ் – செய்யுள் இலக்கணம்

நிருக்தம்- சொல் இலக்கணம் 

ஜோதிடம் – வானசாஸ்திரம்

கல்பம் – செயல்முறை

இவை ஒவ்வொன்றும் ஒரு உறுப்பாக, வேதங்களின் ஒரு அங்கமாகக் கருதப்படுவதால் இவையனைத்தும் வேதாங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வேதாங்கங்களின் முதல் உறுப்பான சீக்ஷா, ஓசை நயம் மற்றும் உச்சரிப்பு முறையை நெறிப்படுத்துகிறது. சீக்ஷா வேதங்களின் நாசியாகக் கருதப்படுகிறது. நாம் சுவாசிக்கவும் நம் பிராணனைக் காத்துக் கொள்ளவும் நம் நாசி உதவுவதுபோல் சீக்ஷா வேத மந்திரங்களின் ஜீவ சக்தியைக் கட்டிக் காக்கிறது. வேத மந்திரங்களின் பலனை முழுமையாய்ப் பெற அவற்றை முறைப்படி சரியாக உச்சரித்தாக வேண்டும். அசைகளின் ஓசை மற்றும் ஒலிப்பைத் தூய முறையில் காத்துக் கொள்வதற்கான vedangaவிதிமுறைகளை வரையறை செய்வதால் சீக்ஷா முக்கியத்துவம் பெறுகிறது. உச்சரிப்பில் எழும் எந்த ஒரு சிறு பிழையும் விரும்பத்தகாத, அல்லது எதிர்மறை பலன் கொடுக்கக்கூடும். எனவே வேத புருஷனின் ஆறு உறுப்புகளில் வேதாங்கமே பிரதானமாக மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு அக்ஷரமும் எவ்வளவு உயர்ந்து அல்லது தாழ்ந்து ஒலிக்கப்பட வேண்டும், அதன் கால அளவை என்ன என்பன போன்ற விஷயங்களை சீக்ஷாவே நெறிப்படுத்துகிறது. இந்த விதிமுறைகள் மாற்றப்படக்கூடாதவை என்பதில் ஒருமித்த கருத்துண்டு. எனினும் வெவ்வேறு சாகைகளுக்கு இடையே மந்திரங்களை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதைப் பார்க்கிறோம். இங்குதான் சீக்ஷா மிக முக்கியமான பணியாற்றுகிறது- வெவ்வேறு பகுதிகளுக்குரிய சாகைகளுக்கு ஏற்ற வகையில் விதிமுறைகளை வகுத்து மந்திர பிரயோகத்தில் பிழை ஏற்படாத வகையில் சீக்ஷை பார்த்துக் கொள்கிறது.

வேதாங்கங்களின் இரண்டாம் உறுப்பான வியாகரணம் இலக்கண விதிகள் வகுத்தளிக்கிறது. வியாகரணம் வேதத்தின் வாய் என்று கருதப்படுகிறது. பரம்பொருள் சொரூபங்களில் மிக முக்கியமானது ஒலி வடிவே. சீக்ஷையும் வியாகரணமும் ஒலி வடிவை மேம்பட்ட, தெளிவான வகையில் உணர உதவி நமக்கு நன்மை பயக்கின்றன. பிற இலக்கண விதிகள் போலல்லாது வியாகரணம் மிக விரிவான பார்வை கொண்டிருக்கிறது. வியாகரணம் வகுத்துக் கொடுக்கும் மோட்ச சாதனங்களில் ஒன்று சப்த பிரம்ம வாதம் –  ஒலியும் பரம்பொருளும் அடிப்படையில் ஒன்றே என்பது இதன் தாத்பர்யம். இதிலிருந்து கிளைத்த பல்வகை சாதனைகளில் ஒன்றான நாத பிரம்ம உபாசனையின் அடிப்படை தத்துவத்தை நாம் இங்கு காணலாம்- நாதமே பரம்பொருளுக்கு இட்டுச் செல்கிறது. வியாகரணங்களில் பாணினியின் வியாகரணமே மிகப் பரவலாய் அறியப்பட்டுள்ளது.

சந்தஸ் அல்லது யாப்பு, வேதாங்கங்களின் மூன்றாவது உறுப்பாகும். இது வேதத்தின் பாதமாக கருதப்படுகிறது. யாப்பிலக்கணம் என்று சந்தஸ் குறித்து சொல்லலாம். சீக்ஷை சரியான உச்சரிப்புக்கான விதிமுறைகளைத் தொகுக்கிறது, வியாகரணம் அக்ஷரங்களின் பொருத்தத்தைத் தீர்மானிக்கிறது, சந்தஸ் மந்திரப் பிரயோகத்தின் ஒட்டுமொத்த ஒலி வடிவம் குலைவற்ற ஒழுங்கு கொண்டிருக்க உதவுகிறது. இவ்வகையில் வேத ஒலிகள் மற்றும் மந்திரங்களை சந்தஸ் காப்பாற்றிக் கொடுப்பதாகச் சொல்லலாம். வேத மந்திரங்களைத் தவறாக உச்சரிப்பது விரும்பத்தகாத, எதிர்மறை விளைவுகளை அளிப்பது போலவே அக்ஷரங்களைக் கூட்டுவதும் குறைப்பதும் பிழைபலன் தருவதாக அமையும். எனவே, வேதக்கல்வியில் சந்தஸ் மிக முக்கியமான இடம் கொண்டதாய் இருக்கிறது. சந்தஸ் குறித்த நூல்களில் பிங்களரின் சந்தஸ் சாஸ்திரமே மிகவும் புகழ் பெற்றதாகும்.

நிருக்தம் அல்லது சொல் இலக்கணம் நான்காம் வேதாங்கமாகும். அது வேதத்தின் செவியாகக் கருதப்படுகிறது. நிருக்தம் வேதத்தின் வேர்ச்சொல்லகராதி. வேறெந்த வேர்ச்சொல் அகராதியையும் போலவே நிருக்தம் ஒவ்வொரு சொல்லின் வேரையும் கண்டெடுத்துக் கொடுக்கிறது. ஆனால் பிற மொழிகள் போல் அல்லாமல் வேத மொழியில் பல அசாதாரணமான, கடினமான சொற்கள் உள்ளன. நிருக்தம் அவற்றின் மூலம் மற்றும் பொருள் தருவதோடல்லாமல், அன்றாட பயன்பாட்டில் உள்ள சொற்களையும் அசை பிரித்து அவற்றின் மூலப்பதங்களை விளக்கி, ஏன் குறிப்பிட்ட பொருளில் ஒவ்வொரு சொல்லும் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது. மந்திரங்களின் ஆழ்பொருளை அறிய நிருக்தங்கள் மாணவர்களுக்கு உதவுகின்றன, வெகு சில சொற்கள் அல்லது மிகச் சிறிய வாக்கியத்தின் மீபொருண்ம உள்ளடக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளவும் நிருக்தம் பயன்படுகிறது.

ஜோதிடம் அல்லது வான சாஸ்திரம் ஐந்தாம் வேதாங்கம். அது வேதங்களின் கண்ணாகக் கருதப்படுகிறது. ஜோதிடத்தை நயனம் என்று அழைப்பதுண்டுஅதற்கும் கண் என்றுதான் பொருள். குறிப்பிட்ட சில கோள்கள் எப்போது எந்த அமைப்பில் இருக்கும் என்பதை கணிக்கவும் எப்போது வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டும் என்பதற்கும் எண்ணற்ற நெறிமுறைகள் இருக்கின்றன. எனவே வேதங்களைக் கற்பதில் ஜோதிடம் ஒரு பயனுள்ள துறையாய் இருக்கிறது. மிகத் தொலைவில் உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் நிலையைக் கணிப்பது என்பது சிக்கலான நடைமுறை கொண்டிருப்பதால்கணிதம் ஜோதிட சாஸ்திரத்தின் தவிர்க்க இயலாத அங்கமாக இருக்கிறது. கணித அடிப்படையில் ஜோதிடம் மூன்று பிரிவுகள் அல்லது ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது- சித்தாந்த ஸ்கந்தம்சம்ஹித ஸ்கந்தம்ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ராட்ரிகோணமெட்ரிஜியோமெட்ரிகூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம்வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.

கல்பம் அல்லது நடைமுறைவேதாங்கங்களின் ஆறாம் அங்கம். இது வேதங்களின் கரமாகக் கருதப்படுகிறது. வைதீக கர்மாக்களில் பங்கேற்பதற்கான துவக்கம் என்று கல்பம் அறியப்பட்டாலும் நாம்  மேன்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழவும்வாழ்வின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளவர்கள் சமூக அமைப்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும்ஒருவன் தன் இல்லத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்வைதீக கர்மாக்களில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் என்றும் பல நெறிமுறைகள் உள்ளன. இது மிகப் பெரிய பேசுபொருள் என்பதால் ரிஷிகள் கல்பம் சார்ந்த சாஸ்திரங்களை மூன்று வகைகளாக தொகுத்துள்ளனர்- அவைதர்ம சாஸ்திரம்க்ருஹ்ய சாஸ்திரம்ஸ்ரௌத சாஸ்திரம்  என்று அறியப்படுகின்றன.

உபவேதங்கள்

உபவேதம் என்ற பதத்தின் பொருள் செயல்முறை அறிவு என்று சொல்லலாம். வெவ்வேறு துறைசார்ந்த தொழில்நுட்ப தகவல்கள் உபவேதங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறை தலைமுறையாக வேத ரிஷிகள் காலம் முதல் கைமாற்றி அளிக்கப்படும் பல்வேறு துறை சார்ந்த பயனுள்ள தகவல்களே உப வேதங்களாக அறியப்படுகின்றன.

வித்யாஸ்தானங்கள் அல்லது அறிவகங்களின் ஒரு பகுதியே உபவேதங்கள். இந்து தத்துவங்களில் பதினெட்டு வித்யாஸ்தானங்கள் குறிப்பிடப்படுகின்றன.

நான்கு வேதங்கள், ஆறு வேதாங்கங்கள், மீமாம்சை, நியாயம், புராணங்கள் (புராணங்கள் அண்டவியல் குறித்தும் பேசுகின்றன), தர்ம சாஸ்திரங்கள் மற்றும் நான்கு உப வேதங்கள்- இவையே பதினெட்டு வித்யாஸ்தானங்கள்.

வேதாங்கங்களின் பின்னிணைப்பாக உபவேதங்கள் கருதப்படுகின்றன.

இவையே நான்கு உபவேதங்கள்-

ஆயுர் வேதம் – வாழ்வு குறித்த அறிவியல்

அர்த்த சாஸ்திரம்– அரசியல், ஆட்சி, பொருளாதாரம் குறித்த அறிவியல்

தனுர்வேதம்– போர்க்கலைகள் மாற்றும் ஆயுதங்கள் குறித்த அறிவியல்

காந்தர்வ வேதம்– நுண்கலைகள்

அர்த்தசாஸ்திரம்

அர்த்தம் என்றால் செல்வம் என்று பொருள்படும். எனவே, அர்த்த சாஸ்திரம் என்பது செல்வம் அல்லது பொருளாதார அறிவியல்.arthasasthra

நவீன காலத்தில் அர்த்த சாஸ்திரம் என்றால் ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்கு முன் சாணக்யன் அல்லது கௌடில்யன் என்ற பண்டிதரால் ஆட்சி முறை மற்றும் அரசனின் கடமைகளையும் உரிமைகளையும் குறித்து எழுதப்பட்ட புகழ்பெற்ற நூலே நினைவுக்கு வருகிறது.

சம்ஸ்கிருத இலக்கியத்தில் அர்த்த சாஸ்திரம், ராஜ சாஸ்திரம், தண்ட நீதி, நீதி சாஸ்திரம் என்ற சொற்கள் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகின்றன.  எனினும் சரியாக பொருள் கொள்வதானால், அர்த்த சாஸ்திரம் என்ற பதத்தின் பொருள் விரிவானது- அது அரசியல், ஆட்சிமுறை, பொருளாதாரம், சட்டம், நீதிமுறை என்று பல துறைகளையும் பேசுகிறது. காமசூத்திரமும் பிற நூல்களும் தர்மத்தையே உயர்ந்த இலட்சியமாகப் பேசுவதுபோல் அர்த்த சாஸ்திரம் தர்மத்துக்கே உயர்ந்த மதிப்பளிக்கிறது.

இவ்வாறு பரவலான விஷயங்களைப் பேசுவதால் அர்த்த சாஸ்திரம் தர்ம சாஸ்திரங்களில் பேசப்பட்டுள்ளவற்றையும் விவாதிக்கின்றது. ஆனால் தர்ம சாஸ்திரங்களுக்கு உரிய விரிவான களம் அர்த்த சாஸ்திரத்துக்கு உரியதல்ல. எனவே, தர்ம சாஸ்திரத்துக்கும் அர்த்த சாஸ்திரத்துக்கும் எந்த ஒரு விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டாலும், அங்கு தர்ம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதே கணக்கில் கொள்ளப்படும், அதன் விதிகளே நடைமுறைப்படுத்தப்படும். சிலர் அர்த்த சாஸ்திரம் என்பது அதர்வ வேதத்தின் உபவேதம் என்று கூறுவதுண்டு.

மானுட வாழ்விலும் சமூக உறவுகளிலும் செல்வத்தின் முக்கியத்துவம் குறித்து பண்டைய இந்துக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கான சான்றுகள் ஏராளம் உள்ளன. செல்வ வளமிக்க சமூகங்களும் தேசங்களும் எதிர்கொள்ளக்கூடிய அச்சுறுத்தல்கள் மற்றும் செல்வத்தால் கிட்டக்கூடிய சாதக நிலைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவே செய்தனர். சமூக அமைப்புகள், சமூகச் சூழலில் தனிமனித செயல்பாடு, செல்வம் ஈட்டி அவற்றைக் காக்கும் வழிகள், நல்லாட்சி, அரசியல், சட்டம் மற்றும் நிர்வாகம் குறித்து உலக அளவில் முதற்சிந்தனைகள் வெளிப்படக் அர்த்த சாஸ்திரம் குறித்த சிந்தனையே காரணமாயிற்று. இவற்றில் அரசனின் உரிமைகள் மற்றும் கடமைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதற்கு காரணம், செல்வ வளமிக்க ஒரு தேசத்தை வலுவான, நேர்மையான அரசன் ஆண்டு நிர்வாகம் செய்யாவிடில், அத்தகையச் சமூகம் சிதறிவிடும் என்பதே.

ஆனால் அர்த்த சாஸ்திரம் செல்வத்துக்கு மிகையான முக்கியத்துவம் அளித்த காரணத்தால் செல்வ வளம் ஓயாது ஈட்டப்பட வேண்டிய வாழ்வுமுறை உருவானது. இது தர்ம சாஸ்திரங்களின் நெறிமுறைகளுக்கும், சமூக நீதிக்கும் முரணான நிலை உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது. மேலும், பிற்கால சாஸ்திரக்காரர்கள் மோதல்களைத் தவிர்க்க விலக்குகள் அளிக்கவும், பல்வேறு தரப்பினரை சமநிலையில் இருத்தும் நிலை உருவாகவும் பல்வேறு விதிமுறைகள் வகுக்க  வேண்டியதாயிற்று.

மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய இரு பெருங்காப்பியங்களில் அர்த்த சாஸ்திரத்தில் பேசப்படும் விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. புராணங்கள், தர்ம சூத்திரங்கள், ஸ்மிருதிகள், ஆங்கிரசின் மகனான பிருகஸ்பதியின் அர்த்தசாஸ்திர உரை, பிருகு மகனான சுக்கிரனின் ராஜ சாஸ்திரம், உசனஸின் நீதி நூல் மற்றும் பலநூறு சிறு நூல்கள் கிறித்தவ சகாப்தத்துக்கு முன்னரே இங்கு இருந்திருக்கின்றன.

அர்த்தசாஸ்திர நூல்களில் மிகவும் நெறிப்படுத்தப்பட்ட, சீர்மையான நூல் என்று கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் சொல்லப்பட முடியும் எனினும் அது பலராலும் விமரிசிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவற்றில், பாணரின் காதம்பரி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. மிகவும் தீய அறிவுரைகள் பல இருப்பதால் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் மிகவும் குரூரமான நூல் என்று காதம்பரியில் குறிப்பிடப்படுகிறது. இன்னும் பலரும் கௌடில்யரின் நூல்களை நிராகரித்துள்ளனர்- நாம் விரும்பும் முடிவுகளை அடைய உதவும் எதுவும் அதற்கான வழிமுறைகளை நியாயப்படுத்தும் என்ற கோட்பாடு இதற்கு முக்கியமான காரணம் எனலாம்.

ஆயுர் வேதம்

ayurvedaஆயுர் வேதம் என்ற பதத்தின் நேரடி பொருள், உயிர் அறிவியல் என்று சொல்லலாம். இந்தியாவின் புராதன, இந்தியாவுக்குரிய மருத்துவ முறையான ஆயுர் வேதம் இன்று உலகெங்கும் பயிலப்படுகிறது. இதன் துவக்க காலம் எப்போது என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது இன்று மிகக் கடினம். ஆனால் நம்மிடமுள்ள இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு, உலகின் மிகத் தொன்மையான மருத்துவ முறை இதுவே என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

ஆயுஷ், ஆரோக்கியம், ஔஷதி போன்ற பதங்கள் வேதங்கள் துவங்கி ஏறத்தாழ அனைத்து நூல்களிலும் இருப்பதைக் காண்கிறோம். ஆயுர் வேதம் என்பது முழுமையான ஒரு மருத்துவ முறையாகும். மகாவிஷ்ணுவின் அவதாரமாக நம்பப்படும் தன்வந்திரி மருந்துகளுக்கும், தேகம் மற்றும் மனநலத்துக்கும் இறைவனாவான். ருத்ரன் தெய்வங்களின் மருத்துவனாகப் பேசப்படுகிறான். தேக ஆரோக்கியத்தையும் உயிரோட்டத்தின் ஒழுங்கையும் காப்பதில் அஸ்வினிகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது.

சாங்கிய தத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகளையொட்டியே ஆயுர் வேத மருத்துவ முறை இயங்குகிறது. சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கும் ஆயுர் வேதத்தில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் இணையாகக் கூறப்படுகின்றன. வாதம்  ஆரோக்கியத்தை சமன்படுத்துகிறது என்பது மட்டுமல்லாமல் ஏனைய இரண்டின் உந்துவிசையாகவும் இருக்கிறது. பித்தம் என்பது வெம்மையுடன் தொடர்புடையது, பித்தமே உடலுக்கு வெம்மையளித்து இயக்குகிறது. கபம் ஜடத்தன்மை கொண்டது.

செயல்வடிவமுள்ள இந்த மூன்று தத்துவங்களுடன் கூடுதலாக ஆயுர்வேதம் சப்த தாதுக்கள் என்ற கருத்துருவாக்கமும் கொண்டுள்ளது. எலும்பின் மஜ்ஜை, கொழுப்பு, இரத்தம் முதலான ஏழு அடிப்படை வஸ்துக்களின் கூட்டு வடிவமாக உடல் இருக்கிறது. இவையன்றி ஐந்து பிராணன்கள், ஐந்து உப பிராணன்கள் என்ற தத்துவமும் ஆயுர்வேதத்தில் உண்டு (பிராணனே மனிதன் எந்த ஒரு செயலிலும் ஈடுபடும் ஆற்றல் அளித்து அவனைச் செலுத்தும் ஜீவசக்தியாக இருக்கிறது).

ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, சமநிலை கொண்ட மன அமைப்பு ஆரோக்கியத்தைக் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. வியாதி என்ற பதத்தின் பொருளே அமைதியற்ற மனம் என்பதுதான், இதுவே உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் ஒழுங்கின்மை ஏற்படக் காரணமாகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் நோய் நீக்குவது என்பது நச்சுக்களாக உடலில் தங்கிவிட்ட தடைகளை நீக்குவதுதான். இதைச் செய்ய இரண்டாயிரம் ஆண்டுகால நடைமுறையில் பல்வேறு உத்திகள் கண்டறியப்பட்டுள்ளன.

பண்டைய இந்திய மருத்துவமுறை மனிதனின் நோய்களை நீக்குவதில் மட்டும் அக்கறை கொண்டுள்ள ஒன்றல்ல. விலங்குகள், பறவைகள், மரங்கள் என்று அனைத்துக்கும் மருத்துவ சிகிச்சை செய்ய ஆயுர்வேதத்தில் இடமுண்டு.

பொதுவாகச் சொன்னால் ஆயுர்வேதத்தின் அங்கங்கள் ஏழு-

  1. சல்யம்- அறுவை சிகிச்சை, மகப்பேறு
  2. சாலக்யம்- கண், காது, மூக்கு என்று தலையில் உள்ள உறுப்புகளுக்கு சிகிச்சையளித்தல்
  3. காய சிகிச்சை- உடல் உபாதைகளை மருந்துகள் கொண்டு குணப்படுத்துதல்
  4. பூதவித்யை- மன நலம் பேணுதல்
  5. குமார ப்ரியா- குழந்தை வளர்ப்பு
  6. அக்தம் – முறிமருந்துகள் அளித்தல்
  7. ரசாயன தந்திரம் – ஆயுள் நீட்டிப்புகான மருந்துகளைப் பயன்படுத்துதல்
  8. வாஜீகரணம்- புத்துயிர்ப்பு மருத்துவம்

சரகர், சுஸ்ருதர், வாக்பட்டர், வ்ரத ஜீவகர், பதஞ்சலி, நாகார்ஜுனர் முதலியானோர் ஆயுர்வேத மருத்துவமுறையின் தலையாய ஆசான்களாவர்.

தனுர் வேதம்

dhanur1

தனுர் வேதம் என்ற பதம் இரு சொற்களைக் கொண்டது- தனுஷ் என்றால் வில் என்றும் வேதம் என்றால் ஞானம் என்றும் பொருள்படும். நேரடி பொருளில், இந்தப் பதம் வில்வித்தையையே குறிக்கிறது. புராணங்களில் முழுக்க முழுக்க இப்பொருளில்தான் தனுர்வேதம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னரே ஆச்சரியப்படத்தக்க வகையில் தனுர் வேதம் என்ற பதம் அனைத்து போர்க்கலைகளையும் பேச பயன்படுத்தப்பட்டது.

தனுர் வேதம் தவிர சஸ்திர வித்யா என்றும் உண்டு- சஸ்திரம் என்றால் கத்தி, அல்லது ஆயுதம், வித்யா என்பது வித்தை. எனவே, சஸ்திர வித்யா என்பதன் நேரடிப் பொருள் வாள்வித்தை என்றாகும். தனுர் வேதம், சஸ்திர வித்தை ஆகிய இவ்விரண்டும் பண்டைய இந்திய போர்க்கலை மற்றும் ஆயுதப் பயன்பட்டு முறைமைகளை விளக்கும் அறிவுத் துறைகளாகும்.

வேதங்கள் அனைத்தும் அமைதியையும் மேன்மையான விஷயங்களையும் பேசும்போது உபவேதங்கள் தனுர் வேதத்தை வித்யாஸ்தானத்தின் உறுப்பாகக் கொண்டிருப்பது நவீன மனதுக்கு வியப்பாய் இருக்கலாம். ஆனால் போர்க்கலையும் ஆயுதங்களும் பயில்வது வேற்று தேசங்களின்மீது போர் தொடுக்கும் நோக்கத்தில் மட்டுமல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். எதிரிகள் மற்றும் பகை தேசங்களிடமிருந்து தன்னையும் தன் மக்களையும் பாதுகாப்பது அரசனின் கடமையாகிறது. போர்க்கலையும் ஆயுதப்பயிற்சியும் தொடர்ந்த பயிற்சி கோருவன. மேலும், பண்டைக்காலம் முதல் இந்தியாவில் வில், வாள் மற்றும் பல ஆயுதங்கள் எப்போதும் பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன- ஆயுதப்பயிற்சி ஒரு மனிதனின் கல்வியில் இடம்பெறுவது தவிர்க்க முடியாத தேவையாக இருந்து வந்திருக்கிறது.

கிறித்துவ சகாப்தம் துவங்குவதற்கு முன்னரே பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அவற்றைக் கையாளும் முறை குறித்து விவரிக்கும் ஏராளமான  நூல்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரம் நம்மிடம் எஞ்சியிருக்கும் நூல்களைக் கொண்டே தெளிவாகிறது. ஆனால், மூல நூல்கள் எதுவும் நம்மிடையே இல்லை.

போர்க்கலைகள் இருவகைப்படும்- ஆயுதங்கள் கொண்டது ஒன்று, ஆயுதங்களற்ற போர் முறை மற்றொன்று. இந்தியாவில் எண்ணற்ற போர்முறைகள் இருக்கின்றன, அவற்றை வட இந்திய முறைகள் என்றும் தென்னிந்திய முறைகள் என்றும் பகுக்கலாம். இவற்றைத் தவிர இந்தியாவெங்கும் மல்யுத்த பாரம்பர்யம் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

தனுர்வேதம் ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி தவிர, ஆயுதங்கள் செய்யும் முறையும் கற்றுத் தருகிறது. அது தவிர, போருக்குரிய மனநிலையை உருவாக்கிக் கொள்வதற்கான தியான முறைகள் மற்றும் ஆன்ம வித்தையும் தனுர்வேதத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. சஞ்சலமற்ற, அமைதியான மனமே ஆயுதங்களை அமைதிக்கான பணியில் பயன்படுத்த உதவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் வீரர்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அமைதியான மனநிலையில் உள்ள அதிகாரிகளுக்கே வயப்படுகிறது.

கந்தர்வ வேதம்

கந்தர்வ வேதம் என்ற  கருத்துருவாக்கம் எப்போது எங்கு தோன்றிற்று என்பது குறித்த தெளிவான விபரங்கள் நம்மிடமில்லை.

இந்து தொன்மங்களில் சில தேவகணங்கள் கந்தர்வர்கள், அப்சரஸ்கள், வித்யாதரர்கள், கிண்ணரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கந்தர்வர்கள் இசையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும் வித்யாதரர்கள் வித்தையில் முதன்மையானவர்கள் என்றும் நம்பப்படுகிறது.;

கந்தர்வ வேதத்தின் துவக்கம் இத்தகைய நம்பிக்கையாய் இருக்கலாம். இந்திய நாட்டிய முறைகள் குறித்து நாட்டிய சாஸ்திரம் எழுதிய பரத ரிஷியை கந்தர்வ வேதம் எழுதியவராய் சிலர் நம்புகின்றனர். முதலில் அது இசையின் அறிவியலாகத் துவங்கியிருக்கலாம். அப்போது அதில் இசை, நடனம், நாடகம் என்ற மூன்றும் இருந்தன- இவை ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருப்பதால் இவற்றை இணைத்தே பேச முடியும்.

பிற்காலத்த்ல் இந்த மூன்று இயல்களும் பிற அறிவுத்துறைகளில் தாக்கம் செலுத்தத் துவங்கியபோது, இசை மற்றும் நடனத்தின் சில கூறுகள் ஆயுர் வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டன. அதே போல் இங்கொன்றும் அங்கொன்றுமாய் வெவ்வேறு துறைகளில் சில போர்க்கலைகளும், கவிதை அல்லது காவியம், காம சாஸ்திரம் போன்றவையும் இடம்பெறத் துவங்கியபோது கந்தர்வ வேதம் என்ற தனித்துறை பிறந்திருக்கலாம். அல்லது வேறெந்த சிறு வடிவிலாவது துவக்க காலம் முதல் தொடர்ந்திருக்கலாம்.

இன்றுள்ள கந்தர்வ வேதத்தின் கூறுகளாக சங்கீதம், நாட்டியம், நாடகம், காவியம் (கவிதை) மற்றும் காம சாஸ்திரம் ஆகியவை உள்ளன.

 

ஆதார நூல்கள்:

1.Kutumbian. Ancient Indian Medicine. 2005, Orient Longman

R.P. Kangle. Arthashastra, 3 vols. 1965, Bombay: University of Bombay.

Swami Prajnanananda. Cultural heritage of Indian fine arts: a comparative study of music, sculpture, painting, and architecture: a new approach, Calcutta: Nababharat Publishers, 1985.

Arthur A. Macdonell. History of Sanskrit Literature, 2006, New Delhi: Motilal Banarsidas.

T.K. Ramachandra Iyer. A Short History of Sanskrit Literature, 2006, Kalpathy: R.S. Vadhyar and Sons.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வர்ணமும் ஆஸ்ரமமும்

அறிமுகம்

பண்டைய இந்துக்களால் கடைப்பிடிக்கப்பட்ட நான்கு அடுக்குகளைக் கொண்ட இரு வகைச் சமூகப் பகுப்பமைப்பு என்று வர்ணாசிரம தர்மத்தைக் கூறலாம் இங்கு வர்ணம் என்பது வர்க்கத்தையும், ஆஸ்ரமம் என்பது தனிமனித வாழ்வுநிலையையும் குறிக்கின்றன. இந்த இரட்டைக் கோட்பாடு நடைமுறை இந்து சமயத்தின் தூண்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

நான்கு வர்ணங்கள் இவை-

  1. பிராமண
  2. க்ஷத்திரிய
  3. வைஸ்ய
  4. சூத்திர

நான்கு ஆஸ்ரமங்கள் இவை

  1. பிரம்மச்சரியம்
  2. கிருஹஸ்தம்
  3. வனபிரஸ்தம்
  4. சந்நியாசம்

ஆஸ்ரம அமைப்பு மனிதன் வாழக்கூடிய நியாயமான நால்வகை வெவ்வேறு வாழ்நிலைகளை வரையறை செய்கிறது. வர்ண தர்மத்தோடு ஒப்பிடுகையில் ஆஸ்ரம அமைப்பு மிகக் குறைவான கவனமே பெற்றிருக்கிறது என்றும் அவ்வளவாக விவாதிக்கப்படவில்லை என்றும் கூற வேண்டும். எனினும், கடந்த இருபது ஆண்டுகளில் மிக அதிக அளவில் இதுகாறும் புறக்கணிக்கப்பட்டு வந்த இந்தக் கருத்துருவாக்கம் சமூக, தத்துவார்த்த, சமய விவாதங்களில் சொல்லத்தக்க அளவில் வேகம் பிடிப்பதைக் காண முடிகிறது.

வர்ணம் என்னும் வர்க்க அமைப்பு சமுதாயத்தை நான்கு பெரும் வர்க்கங்களாகப் பிரித்தமைக்கிறது. ஏதேனும் ஒரு கருத்துவாக்கம் அல்லது கோட்பாட்டின் பரவலான அறிதல், முக்கியத்துவம், பொருட்தாக்கம் ஆகியவற்றை அளவிட அது குறித்த முரண்நிலைகள், விவாதங்கள், கட்டுரைகள், நூல்கள் மற்றும் பல்வகை கருத்துகளின் தொகைப்பட்டியல் தீர்மானிக்குமெனில் அந்த அளவுப்படி, வர்ண தர்மம் மிக முக்கியமானவற்றுள் ஒன்றாக விளங்கும்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக உலகிலுள்ள பலரின் கவனத்தைக் கைப்பற்றி கற்பனையைத் தூண்டியிருக்கும் வர்ணக் கோட்பாடு, குறிப்பாக கடந்த நூற்றைம்பது ஆண்டுகளாக ஆக்கிரமித்திருக்கும் இலக்கிய வெளி மிகப் பிரசித்தம்.

வர்ணக் கோட்பாடு மிகையான கவனத்தைப் பெறுவதற்கான காரணங்கள் பலவகைப்பட்டவை. இதைப் பேசும் படைப்புகளில் பலவும் சமநிலைத்தன்மை கொண்டவையல்ல, முறையான பகுப்பாய்வு அணுகுமுறையை மேற்கொள்பவை அல்ல. மிகவும் தீவிர நிலைப்பாடுகளிலிருந்தே இந்தக் கோட்பாட்டை அணுகுகின்றன. ஒன்று, வர்ணமும் சாதிய அமைப்பும் வானளாவ புகழப்படுகின்றன, அல்லது ஒட்டுமொத்தமாக கண்டனம் செய்யப்படுகின்றன- முறையான ஆய்வையும் விவாதத்தையும் காண்பது மிகவும் அரிதாக இருக்கிறது.

  • பல்வகைப்பட்ட இக்கருத்துகளை பொதுமைப்படுத்தி இவ்வாறு சுருக்கிச் சொல்லலாம்-
  • வர்ண அமைப்பும் ஆஸ்ரமமும் இறுக்கமான, மாற்றங்களுக்கு இடம் கொடுக்காத அமைப்புகள்- நடைமுறைச் சுதந்திரம் பல்வகை கட்டுப்பாடுகளால் முடக்கபப்ட்டிருக்கிறது
  • வர்ண கோட்பாடும் சாதிய அமைப்பும் இந்தியாவுக்கு மட்டுமே உரிய தனித்தன்மை கொண்டவை, வேறேந்த தேசத்திலும் காணக் கிடைக்காதவை
  • இன்றுள்ள சாதிய அமைப்பு என்பது வர்ண அமைப்பின் உறைந்து, இறுகிய வடிவம்
  • இந்தியா மீது படையெடுத்த ஆரியர்கள் வைதிக மதத்தின் பல்வேறு கூறுகளுடன் இந்த இரு கோட்பாடுகளையும் நிறுவினர்
  • வர்ண அமைப்பு தீண்டாமையை ஊக்குவித்தது
  • வர்ண தர்மம் என்பது பிளவுபடுத்தும் கருத்துருவாக்கம்
  • வர்ண தர்மம் என்பது குறைபட்ட மானுட கண்டுபிடிப்பு

Ancient5

வர்ண தர்மத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

முதலில் சொல்லப்பட வேண்டியது இது. பிறப்பு, தொழில் போன்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வர்க்க அமைப்பு பண்டைய இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் இருந்த ஒன்றல்ல. பல தேசங்களிலும் இதுபோன்ற வர்க்கப் பிளவு இருந்தாலும், பண்டைய பாரசீகம், ரோம், ஏன், ஜப்பானிலும்கூட குறிப்பிடத்தக்க வகையில் வர்க்க அமைப்பு இருக்கவே செய்தது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
எனவே இந்தப் பகுப்பு முறை இந்துக்களிடமும், இந்தியாவில் மட்டுமே உள்ள அடுக்கு முறை என்பது சரியல்ல.

இந்து சமய இலக்கியங்களின் துவக்க நூல்களில் ‘வர்ண’ என்ற சொல், வண்ணம் அல்லது ஒளி என்ற பொருளைக் குறித்தது. ரிக் வேதத்தில் இதைக் காணலாம். ஆரியர்கள், தஸ்யூக்கள் என்ற இருவேறு குழுவினரை அவர்களின் தோல் நிறத்தையொட்டி பிரித்துக்காட்ட வர்ணம் பயன்பட்டது. பண்பாட்டுத் தளங்களில் காணப்படும், புரிந்துகொள்ளத்தக்க வேறுபாடுகளின் அடிப்படையில் அமைந்த இயல்புகளையொட்டி மக்கட்குழுக்களை பாகுபடுத்தவும் வேறு சில நூல்களில் வர்ணம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் சூத்திரர்கள் என்று நான்கு வர்க்கங்களாய் பகுக்கும் வர்ணதர்மத்தை துவக்க நூல்களில் காண முடிவதில்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம். ரிக் வேதத்தில் உள்ள புருஷ சூக்தத்தின் இந்த நால்வரும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இதுதான் உண்மை. புருஷ சூக்தம் எப்போதும் ரிக் வேதத்தில் ஒரு பகுதியாக இருந்ததா அல்லது பின்னொரு காலம் அதில் இணைக்கப்பட்டதா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இல்லை. துவக்கம் முதலே ரிக் வேதத்தின் அங்கமாக புருஷ சூக்தம் இருந்தது என்பதைப் பல ஆய்வாளர்களும் மரபார்ந்த பண்டிதர்களும் ஐயத்துடனே அணுகுகின்றனர்.

மேலும், பிராமணர்கள் என்றும் க்ஷத்திரியர்கள் என்றும் குறிக்கும் சொற்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கின்றன. பிரம்மா என்ற சொல்லின் மூலப்பொருள் துதித்தல் என்று இருந்தது பின்னர், துதித்துப் பாடியவர்களையும் துதிகள் இயற்றுபவர்களையும் குறிக்க இந்தச் சொல் பயன்பட்டது. அதேபோல், க்ஷத்திரிய என்ற சொல் முதலில் வீரம் என்று பொருள்பட்டது. பின்னரே, அரசர்களையும் வீரர்களையும் குறிப்பிட இச்சொல் பயன்பட்டது. சம்ஹிதைகளில் துவங்கி பிராஹ்மணங்களுக்குச் செல்கையில், ஒரே சொற்கள் குறிப்பிட்ட ஒரு மக்களைச் சுட்டப் பயன்படுவதை தெளிவாகக் காண முடிகிறது.

சொற்களும் அவற்றின் பொருளும் காலப்போக்கில் மாறிக் கொண்டே இருப்பதுபோல் நடைமுறையிலும் அவை இறுக்கமான பகுப்புகளாக இயங்கவில்லை. ரிக் வேதத்தில் நாம் தேவாபி, சந்தனு கதையைக் காண்கிறோம். இவர்களில் இளையவன் அரசனாகிறான், மூத்தவனான தேவாபி புரோகிதனாகிறான்.

இது இரு விஷயங்களைத் தெளிவாக்குகிறது: வர்ண தர்மம் என்பது வெறும் கோட்பாடல்ல, அது மாற்றங்களற்று நிலைத்திருக்கவும் இல்லை. அதே போல், விஸ் என்ற சொல் முதலில் மக்கள், அல்லது குழு என்ற பொருளில், ஜன என்ற சொல் போல் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பின்னர் அந்தச் சொல்லின் பொருள் மாற்றமடைந்து, வைசிய என்ற சொல் வணிகர்களைக் குறிப்பதாக ஆனது.

துவக்ககால இந்து நூல்களைக் காணும்போது இந்த மூன்று விஷயங்களும் தெளிவாகத் தெரிகின்றன-

  1. வர்ணம் என்ற சொல் சமூகத்தைப் பாகுபடுத்தும் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படவில்லை.
  2. பிராமணர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர்.
  3. வர்ண தர்மம், துவக்க காலத்தில், பிறப்பையொட்டி மட்டுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வேத காலத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட நூல்களில்தான் வைதீக யாகங்கள் செய்வது போன்ற ‘கௌரவமான’ பணிகள், பிராமணர்கள், க்ஷத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்று இருபிறப்பாளர்களுக்கு மட்டும் நிர்ணயிக்கப்படுவதைக் காண்கிறோம்.

ஆசார்ய பாதரி அனைவரும் வைதிக யாகங்கள் செய்யலாம் என்று கூறுவதாக புகழ்பெற்ற ஆய்வாளர் பாண்டுரங்க வாமன் கானே மேற்கோள் காட்டுகிறார். வர்ணதர்மம் என்பது கர்மம் அல்லது தொழில் அடிப்படையில் அல்லாமல், குணங்கள், அல்லது இயல்புகளை ஒட்டியே இருந்தது என்றும் பண்டிதர்கள் பலர் கூறுகின்றனர்.

ஒரு வர்ணத்தைச் சேர்ந்த மக்கள் பிற வர்ணத்தாரின் பணிகளை மேற்கொண்டனர் என்பதற்கு ஆதாரமான பல பகுதிகள் வேதங்களில் இடம் பெற்றிருக்கின்றன. குணம், அல்லது மானுட இயல்பின் அடிப்படையில்தான் வர்ணக் கோட்பாடு இயங்கிற்று என்று சொன்னால், தெய்வங்களும் தேவர்களும்கூட வர்ண அடிப்படையில் பகுக்கப்படுகின்றனர்- பிருகஸ்பதி ஒரு பிராமணர், இந்திரன் ஒரு க்ஷத்திரியன், ருத்திரர்கள் வைசியர்கள், பூசன் ஒரு சூத்திரன் என்று பலவும் உண்டு.

முதலில் இளகலாக ஒரு மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது, பிற்கால வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் என்று வளரும்போது, தெளிவாக வரையறை செய்யப்பட்ட சமூக குழுக்களைக் குறிப்பிடும் பகுப்பமைப்பாகி விட்டது. இந்த நூல்களில் பல்வேறு தொழில் புரிவோரின் எண்ணற்ற பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன, இவை பிறகாக சாதி அமைப்பிலும் காணப்படுகின்றன. எனினும் இவற்றில் பெரும்பாலானவை சாதிகளாக மாறவில்லை. தர்மசாஸ்திரங்களிலும் சுருதி ஸ்மிருதிகளிலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஆன உரிமைகள், கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மிகத் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன.

துவக்கத்தில் சரும நிறம், பண்பாட்டு நிலை என்ற இரண்டையும் ஒட்டி, இரு வர்ணங்கள் அல்லது வர்க்கங்கள்தான் இருந்தன. வர்க்க பாகுபாடு என்று சொல்வதைவிட பண்பாட்டு வேறுபாடு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். பின்னர் பல தொழில்களும் செழிக்கத் துவங்கின- யார் யார் எப்பிறப்பாய் இருப்பினும் செய்யும் தொழிலை வைத்து அக்குழுவுக்கு உரியவராய் கருதப்படலாயினர். இந்த நான்கு வர்ணங்களுக்கு வெளியே தொழில் அடிப்படையில் வேறுவகை குழுக்களும் உருவாகின – தேரோட்டிகள் இதற்கொரு உதாரணம். ஆனால், இந்த நால்வர்ண அமைப்பில் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் வெவ்வேறு தனித்தனி குழுக்களாகப் பிரிந்து, பிறப்பு அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டதை பிராஹ்மணங்களும் உபநிடதங்களும் உணர்த்துகின்றன.

சாதி

இந்தியாவில் நீண்டகாலமாக நிலவிவரும் சமூகத் தொகுப்பு அமைப்பாக சாதி அமைப்பு இயங்கி வருகிறது. வர்ண தர்மம் சாதி அமைப்பாக உருவாகியிருக்கலாம். இது காவிய காலத்துக்கு முன்பே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால், நவீன சாதி அமைப்பு வர்ணதர்மத்தின் உறைநிலை என்று முடிவு செய்யும் வகையில் தரவுகள் இல்லை.

பண்டைக்காலத்தைய பல்வேறு தொழில்கள் தனித்தன்மை கொண்ட பல்வேறு அமைப்புகள் தோன்றக் காரணமானது, இவை சாதி அமைப்புக்கு வழிகோலின. வேதங்கள் போன்ற முற்கால இந்து இலக்கியத்தில் சாதி என்ற சொல்லே இல்லை. நிருக்த என்ற பண்டைய நூலில், கிருஷ்ணஜாதிய என்ற சொல் சமூகப்படிநிலையில் மதிப்பு குறைந்த வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணைச் சுட்ட குறிப்பிடப்படுகிறது.

வர்ண அமைப்போடு ஒப்பிடுகையில் சாதி அமைப்பில் பிறப்பே வகுப்பைத் தீர்மானிக்கிறது என்பதுதான் மிகப்பெரிய வேறுபாடாகத் தெரிகிறது. வர்ணதர்மத்தின் நான்வகைப் பாகுபாடு ஒரு மனிதனின் இயல்புகள் மற்றும் அறிவுப் பயன்பாட்டையொட்டி இருந்தது. ஆனால் சாதியமைப்பு பிறப்பால் கிட்டும் உரிமைகள் மற்றும் அதிகாரங்களை அடிப்படையாய் கொண்டது.

வர்ணதர்மத்தைக் கொண்டு சாதி அமைப்பின் துவக்கத்தை அடையும் முயற்சிகள் சென்ற சில நூற்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் அவையனைத்தும் மிகத் தொலைவிலுள்ள காலத்தின்பால் தற்கால சாதிய அடையாளங்களை நிறுவும் முயற்சிகளாகவே முடிந்திருக்கின்றன. அது மட்டுமல்ல, வர்ணதர்மத்தில் நால்வகுப்பினர் மற்றும் சில சிறு குழுவினருக்குதான் இடமிருந்தது, ஆனால் சாதிய அமைப்பில் பிரதேச வேறுபாடு, தேச வேறுபாடு, குடி வேறுபாடுகளையொட்டி பல சாதிகளும் தோற்றம் பெற்றன.

சாதி, தொழில், தேசம் (மகதம் போன்றவை), குடி (கிராதம் போன்றவை), அந்நிய குடிகள் (யவனர் முதலானவர்கள்) என்று பல அடிப்படைகளைக் கொண்டு அமைந்த சாதியமைப்பு மிகச் சிக்கலான ஒன்று.

பிறப்பால் அமைந்த சாதி அமைப்பின் மிகப்பெரும் குறைகளில் ஒன்று, தம் சாதிக்குரிய சமூக கடமைகளை முழுமையாய் கடைப்பிடிக்காமல், தம் சாதிக்குரிய சலுகைகளைத் துய்க்கவே மக்கள் விரும்புகின்றனர் என்பதுதான். இதனால் சாதிகளுக்கிடையே மோதலும் வெறுப்பும் ஏற்பட்டது, எந்த அடிப்படையுமில்லாமல் பிறரைக் காட்டிலும் தம் சாதி உயர்ந்தது என்ற பெருமித உணர்வுக்கும் சாதியமைப்பே காரணமாகிறது. சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத பல அடாவடிப் பழக்கங்களைச் சாதியின் பெயரில் நடைமுறைப்படுத்தவும் சாதியமைப்பே காரணமாகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

தீண்டாமை

தீண்டாமையைப் பற்றி பேசாமல் வர்ணதர்மம் மற்றும் சாதியமைப்பு குறித்த உரையாடல் முழுமை பெறாது. நவீன சாதியமைப்பின் மிக முக்கியமான இயல்பு, சில சாதிகள் தீண்டத்தகாதவராக நடததப்படுகின்றனர் என்பதுதான். தீண்டாமைக்கான காரணங்களை ஊகிப்பது கடினமல்ல எனினும், இப்பழக்கம் நடைமுறைக்கு வந்தது எப்போது எனதைத் துல்லியமாய் தீர்மானிப்பது கடினமாக இருக்கிறது.

தீண்டத்தகாத சாதியினர் என்று கருதும் பழக்கம் எப்போது உருவானது, அதற்கான காரணங்கள் என்ன என்றெல்லாம் பேசப்போகுமுன் இந்து சமய அமைப்பில் தீண்டாமை உயர்சாதியினரிடையேயும் பல்வேறு வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதைச் சற்றே கவனிக்கலாம்.

முதலில் கொடுங்குற்றங்களைச் செய்தவர்கள் அந்நாளையே நீதி அமைப்பால் தண்டிக்கப்பட்டபின் சமூக அமைப்பிலிருந்து நீக்கப்பட்டு அவர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது (Manu IX. 235-239)

அடுத்து, உயர்சாதியினர் சிலரும் தீண்டத்தகாதவர்களாக மாற முடியும். மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணத்துக்காக விக்கிரக வழிபாடு செய்யும் பிராமணன் தீண்டத்தகாதவன் ஆகிறான்; அதேபோல், ஒரு மக்கள் குழு, கிராமம், அல்லது நகரத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பொதுவாய் பூசனைகள் செய்பவன் தீண்டத்தகாதவன் ஆகிறான்.(Apararka 922 and Mitakshara III.30)

மூன்றாவதாக, சில குறிப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒருவன் தீண்டத்தகாதவனாகக் கருதப்படுகிறான். எடுத்துக்காட்டுக்கு, உறவினர் மறைவுக்கு துக்கம் அனுஷ்டிப்பவர்கள் (பத்து நாட்கள்), பிரேதத்தை இடுகாட்டுக்குக் கொண்டு சென்றவர்கள் ஆகியோர் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்படுகின்றனர் (Manu V. 85)

நான்காவதாக, மத்திய இடைக்காலத்தில் நிலவிய மத வெறுப்பும் தீவிர மதப்பற்றும் பிற சமயங்களைச் சார்ந்தவர்களுடன் பழகுவதும் அவர்களைத் தொடுவதும் சுத்தமற்றது என்றும் அவ்வாறு செய்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்றும் கருதப்படக் காரணமாயிற்று . (Apararka 923 and Smrti Chandrika I. 118)

ஐந்தாவதாக, கணவன், மனைவி, மகன், மகள் என்று எவராயிருந்தாலும் உணவு உண்ணுகையில் அவரைத் தீண்டுதலாகாது (P. V. Kane II. I. 170)

மேற்கண்ட பட்டியல் இறுதியானது என்று முடிவு செய்ய வேண்டாம், இந்து சமய மரபில் சாதி மேலாதிக்கம் காரணமாக பிறிதொரு சாதியை ஒடுக்க மட்டுமே தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்ற பிழையான கருத்துக்கு எதிரான ஆதாரங்களில் சிலவே இவை.
மேற்கண்ட தகவல்கள் இந்து சமய மரபுகளில் உள்ள சில தனித்துவம் கொண்ட கூறுகளை விளக்கவே அளிக்கப்படுகின்றன; தீண்டத்தகாத சாதிகள் என்று சொல்லப்படுவனவற்றைக் குறித்த புரிதலோ பகுப்பாய்வோ இங்கு முயற்சிக்கப்படவில்லை.
துவக்ககால வேத நூல்களில் தாழ்ந்தவையாகக் கருதப்பட்ட பல தொழில்களின் பெயர்களும் அளிக்கப்படுகின்றன, ஆனால், அந்தத் தொழில்களைச் செய்பவர்கள் தீண்டத்தகாதவர்களாய் கருதப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்ததாக குறிப்புகள் இல்லை.

இரு உபநிடத மேற்கோள்களைச் கட்டி தாழ்த்தப்பட்ட சாதியினர் சிலர் தீண்டப்படக் கூடாது என்று வேதங்கள் கூறுவதாக சாதியமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் கூறுவதுண்டு (சாந்தோக்யம் V. 10. 7, பிருஹதாரண்யகம் I. 3. 10)

சுட்டப்பட்டுள்ள சாந்தோக்ய உபநிடத வாக்கியம், புண்ணியம் செய்தவர்களுக்கும் தீவினைகள் ம் செய்தவர்களுக்கும் என்ன நேரும் என்பதைச் சொல்கிறது. அப்போது, தீவினைகள் செய்தவர்கள் நாய்களாகவும் சண்டாளர்களாகவும் பிறப்பார்கள் என்று குறிப்படப்படுகிறது. பிரஹதாரண்யகத்தில் பாபம் எவ்வாறு ஊருக்கு வெளியே விலக்கப்படுகிறது என்பது சொல்லப்படுகிறது.

இந்த் இரு உபநிடத வாக்கியங்களிலும் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியையும் தீண்டத்தகாதது என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை. உண்மையில், வேத நூல்கள் அனைத்திலும் எந்த ஒரு சாதியையும் தீண்டத்தகாத சாதியாக அடையாளப்படுத்தும் குறிப்பைக் காண முடிவதில்லை.

எனவே, துவக்க காலத்தில் தீண்டாமை நிலவவில்லை என்றுதான் ஊகிக்க வேண்டியுள்ளது. தீண்டாமை என்று பொருள்பட, அஸ்பர்ஸ்ய என்ற சொல், மிகப்பின்னர் வந்த விஷ்ணு தர்மசாஸ்திரத்தில்தான் முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது.

தர்மசாஸ்திரங்கள் எழுதப்பட்ட காலத்தில் குறிப்பிட்ட சில தொழில்கள் மேற்கொண்ட குழுவினர் தனித்து இயங்கக்கூடிய வளம் பெற்றதால் தம்மைத் தனியாய் காட்டிக்கொள்ளக்கூடிய செல்வாக்கு பெற்றிருக்க வேண்டும். இந்துப் புனித நூல்கள் வாசிக்கும் எவருக்கும் தனிமனித, குழுவினரின் தூய்மைக்கு அவற்றில் அளிக்கப்படும் முக்கியத்துவம் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். அந்த அளவுக்கு இது குறித்து பேச இடமும் நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. சிறிதாயினும் சரி, பெரிதாயினும் சரி, வீட்டிலாயினும் போதுவெளியிலாயினும், எந்தச் சடங்கைச் செய்வதாக இருந்தாலும் மனமும் உடலும் சுத்தமாக இருப்பது அவசியமாகிறது. சில குழுக்கள் இதை மிகைப்படுத்தி, தூய்மையின்மை குறித்த அச்சத்தை அதன் உச்சத்துக்குக் கொண்டு சென்று சிலரைத் தீண்டத்தகாதவர்கள் என்று வரையறை செய்திருக்கலாம்.

இவ்வாறாகச் சில தொழில்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகி அவர்களுக்கு தனித்தியங்கும் ஆற்றல் கிடைக்கக் கிடைக்க தீண்டத்தகாதவர்கள் என்று வரையறை செய்யப்பட்ட சாதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கலாம். இதுபோன்ற குறுகிய மனப்பான்மை ஆதிக்கம் செலுத்தத் துவங்கியதும், சாதியமைப்பின் பெருங்குணங்கள் சாதிவெறியும் சகிப்பின்மையும் என்றாயின- ஏறத்தாழ அனைத்து சாதியினரும் தீண்டாமை என்ற கருதுகோளை மிகையாகப் பயன்படுத்தி, அதை வெறுக்கத்தக்க நிலைக்குக் கொண்டு சென்றனர்.

நடைமுறை பயன்பாட்டில் இருந்த அடாவடித்தனமான, சகிக்க முடியாத பழக்கவழக்கங்களுக்கு சாஸ்திர அடிப்படையோ அங்கீகாரமோ கிடையாது.

தீண்டாமை குறித்த சில மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்கள் மற்றும் பழக்க வழக்கங்களும் அவை குறித்த சாஸ்திர நிலையும் இங்கு அளிக்கப்படுகின்றன-

தாழ்த்தப்பட்ட சில வகுப்பினரைத் தொடுபவர் எவராயிலும் குளித்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளக்கம்:

கீழ்பிறப்பினன், குளிக்காதவன், பன்றிகளோடும் நாய்களோடும் குப்பையில் வாழ்பவன், மயானத்தில் வசிப்பவன், கொடுஞ்செயல்களைச் செய்பவன் என்று சொல்லப்படும் சண்டாளனைத் தொடுபவர்கள்தான் குளியல் எடுத்துக் கொள்ளச் சொல்லப்படுகின்றனர். அப்பொதும்கூட, அத்தகைய சண்டாளன், ஆலய வழிபாடு செய்ய வந்திருந்தால், அவனைத் தொட்டபின் குளிக்க வேண்டியதில்லை. நித்யாசாரபத்ததி (130), கோவிலின் அருகில் எவரைத் தொட்டாலும் குளிக்க வேண்டியதில்லை என்று தெளிவாகவே சொல்கிறது.

தாழ்த்தப்பட்ட சாதியினரின் நிழல்படுவதும்கூட தீட்டாகிவிடும் என்பதால்தான் பொதுச் சாலைகளை தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தக்கூடது என்ற தீண்டாமை இந்தியாவின் சில பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டது.

விளக்கம்:

இந்து சாஸ்திரங்களில் இப்படி ஒரு கட்டுப்பாடு இல்லை என்பது மட்டுமல்ல, இது சாஸ்திர விரோதமானதும்கூட. மனு (V.133) மற்றும் யக்ஞவல்கிய ஸ்மிருதிகள் (I. 193) மீதான உரை, எச்சாதியினராக இருந்தாலும் நிழல் எவரையும் மாசுபடுத்தாது என்று குறிப்பிடுகிறது. இதில் எந்த ஐயத்துக்கும் இடமில்லாமல் தெளிவாகவே அபராரிகை யில், “சண்டாளனாயினும் பதிதனாயினும் நிழல் எவர் மீது விழுந்தாலும் தீட்டுப்படுவதில்லை” என்று கூறுகிறது.

நவீன காலங்களிலும்கூட தாழ்த்தப்பட்ட சாதியினர் பொதுக்கிணறுகளைப் பயன்படுத்தக்கூடாது என்று தடுக்கப்பட்டனர், குறிப்பாக தென்னிந்தியாவில் இப்பழக்கம் இருந்தது.

விளக்கம்:

பிற்காலத்தைய நூலான பாராசர மாதவியம் (II. I. 115) என்ற நூலும்கூட மிகத் தெளிவாகவே எவ்வளவு தாழ்ந்தவராக இருந்தாலும் உயர்சாதியினர் பயன்படுத்தும் நீர்நிலைகளை எவரும் பயன்படுத்தலாம் என்று கூறுகிறது.

கடந்த சில நூறாண்டுகளாக தாழ்த்தப்பட்ட சில சாதியினர் ஆலயங்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. எப்படி இப்பழக்கம் துவங்கிற்று என்பது தெளிவாய் தெரியவில்லை.

ஸ்மிருதி அர்த்தசாஸ்திரம் என்ற நூல் அனைத்து சாதியினரும் ஆலயம் செல்வதைப் பேசுகிறது.

பாகவத மகாபுராணம் (X. 70. 43) அனைவரும் இறைநாமம் ஜபிக்கலாம் என்றும் அனைவரும் விக்கிரகத்தைக் கண்டு, தொட்டுத் தொழலாம் என்றும் கூறுகிறது.

மிதாக்ஷரம் (III. 262) என்ற நூல், தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட அனைவரும் விரதமிருக்கலாம் என்று கூறுகிறது.

நிர்ணயசிந்து என்ற நூலில், எவ்வளவு தாழ்த்தப்பட்டவராய் இருப்பினும் எவரும் பைரவருக்கு ஆலயம் நிர்மாணிக்கலாம் என்று பொருள்படும் மேற்கோள் ஒன்று சுட்டப்படுகிறது.

ஆசிரம அமைப்பு

ஆசிரமம் என்ற சொல் சமய சாதனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் நான்வகைக் கட்டங்களைக் குறிக்கிறது. ஆசிரமம் என்ற சொல்லுக்கு, துறவியின் உறைவிடம் என்பதோடு, சமய சாதனைக்கான இடம் என்றும் ஒரு பொருளுண்டு.

வர்ண தர்மத்தைப் போலன்றி ஆசிரம தர்மம் ஏன் உருவாயிற்று என்பதற்கான காரணங்களை எளிதில் புரிந்துகொள்ள இயலும். போதாயனர் தன் தர்ம சூத்திரங்களில் (II. 6. 17), கபிலன் என்ற ராட்சதன் வாழ்வின் நான்வகை கட்டங்களை உருவாக்கினான் என்று எழுதுகிறார்.

பிரகலாதனின் மகனான கபிலன், தேவர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தபோது, அவர்களைத் தோற்கடிக்க இந்த நான்வகைப் பகுப்பை உருவாக்கினான். இவையே அவை- 1. மாணவ பருவமான பிரமச்சர்யம் 2. இல்வாழ்வினனின் பருவமான கிருஹஸ்தம் 3. வனத்தில் வாழும் பருவமான வனபிரஸ்தம் 4. துறவு பூண்டு தேச சஞ்சாரம் செய்யும் சன்யாச பருவம்

இந்த அமைப்பில், பின்னிரு நிலைகளிலும் உள்ளவர்கள் தெய்வங்களுக்கான ஹோமங்கள் செய்யக்கூடாது. இது தெய்வசக்தியைக் குறைக்கும் என்பதால், அவர்களை எளிதில் தோற்கடித்துவிடலாம் என்று நினைத்தான் கபிலன். போதாயனர் கூறும் இந்தக் கதைக்கு எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கலாம் என்று தெரியவில்லை.

இதைக் காட்டிலும் நம்பக்கூடிய, தர்க்கத்துக்கு உட்பட்ட வேறொரு காரணம் கூறப்படுகிறது. இந்து வாழ்வுக்குரிய புருஷார்த்தங்களின் நடைமுறைப் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டதே ஆசிரம அமைப்பு என்று இவர்கள் சொல்கிறார்கள். தர்மம் (அறம்), அர்த்தம் (செல்வம்), காமம் (ஆசை), மோட்சம் (வீடுபேறு) என்பனவே இந்த நான்கு புருஷார்த்தங்கள்.

பொதுவாக இந்து சமயமும், குறிப்பாக புருஷார்த்தங்களும், பிறவி மரணச் சுழலிலிருந்து விடுபடுவதே வாழ்வின் லட்சியம் என்று கூறுகின்றன. இதற்கான ஊக்கம் அளிக்கப்படுகிறது. ஆசைப்படக்கூடாது என்றல்ல, ஆசையையும் பிற இன்பங்களையும் உயரிய வேறொரு லட்சியத்தை நோக்கி திசைதிருப்பச் சொல்லப்படுகிறது. அனைவரும் இன்பங்களை அனுபவிக்கலாம், ஆனால் தர்மம் வழுவாதிருக்க வேண்டும். அனைவருக்கும் புலன் நாட்டத்தைத் துய்ப்பதில் விருப்பமிருப்பது இயல்பு, இது நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள பொதுத்தன்மை. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை, மாறாய், இவற்றின் கீழ்மையை உணர்ந்து இவற்றின் பொருளைப் புரிந்து கொண்டு, தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடித்து உயர்ந்த லட்சியங்களை நோக்கி புலன்களின் ஆற்றலைத் திருப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறாகவே ஒருவன் மாணவப் பருவமாகிய பிரமச்சரிய பருவத்திலேயே பல்வேறு துறை சார்ந்த அறிவைப் பயிலும்போதே தர்மத்தையும் பிற ஒழுக்கங்களையும் கற்றுக் கொள்கிறான். பின்னர் செல்வம் ஈட்டும்போது, தான் கற்ற கல்வியை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துகிறான், வாழ்வின் இன்பங்களை அனுபவிக்கத் தவறாமல் கிருஹஸ்த பருவத்தில் சமூகத்தின் உறுப்பினனான தன் கடமைகளைச் செய்து முடிக்கிறான்.

வயதானபின் இன்பங்களின் ஈர்ப்பு குறைகிறது, அதனைக் காட்டிலும் உயர்ந்த விஷயங்களின் மதிப்பு புரிகிறது. இப்போது அவன் வனம் அல்லது வேறொரு தனிமை நிறைந்த பகுதிக்குச் சென்று வனபிரஸ்த பருவத்தில் உயர்ந்த இலட்சியங்கள் குறித்து சிந்திக்கிறான்.

இறுதியில் அனைத்தையும் துறந்து, தன் மனதை அனைத்துக்கும் ஆதாரமாய் உள்ள சக்தியில் நிலைநிறுத்தியவனாக, சந்நியாச பருவத்தில் சுற்றித் திரிந்து இறுதியில் மோட்சம் அடைகிறான். உலகிலுள்ள அனைவர்க்கும் வனபிரஸ்தம் பொருந்தும். இறுதி ஆசிரமமான சன்னியாசம் யாருக்கு உரியது என்பது குறித்து மட்டும் சில விவாதங்களும் கேள்விகளும் உள்ளன.

ஆசிரமம் என்ற சொல் துவக்க வேத நூல்களான சம்ஹிதைகளிலும் பிராஹ்மணங்களிலும் காணப்படுவதில்லை. என்றாலும் இதை வைத்து ஆசிரமம் பிற்காலத்தில் தோன்றியது என்று சொல்ல முடியாது.

பிரம்மச்சாரி, பிரம்மச்சர்யம் என்ற சொற்கள் பல சம்ஹிதைகளிலும் பிராஹ்மணங்களிலும் காணப்படுகின்றன. கிருஹபதி, கிருஹபத்யம் ஆகிய சொற்கள் ரிக் வேதத்தில் வருகின்றன. முனி, யதி போன்ற சொற்கள் வேதங்களின் துவக்கப் பகுதிகளில் உள்ளன- ஆனால் பொருள் வேறுபாடு ஒரு சிறிய அளவில் காணப்படுகிறது.

எது எப்படியானாலும், வனபிரஸ்தம் என்ற சொல் துவக்க இந்து இலக்கியங்களில் இல்லை. ஆனால் வைகானசம் என்ற சொல் வேதத்தில் உண்டு, இதன் பொருள், பிற்கால சூத்ரங்களில் வனபிரஸ்தம் என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே வனபிரஸ்தம் என்பதே வைகானசம் என்று சொல்லப்பட்டிருக்கலாம்.

உபநிடதங்களில் மூவாசிரமங்கள் பேசப்படுகின்றன (சாந்தோக்யம் (II.23.1]. பிரக்தாரண்யக உபநிடதத்தில் [IV. 5. 2]) யக்ஞவல்க்ய ரிஷி தன மனைவியிடம் தான் இல்வாழ்வு துறந்து பரிவ்ரஜ்யம் மேற்கொள்ளப் போவதாகச் சொல்கிறார். ஜாபாலோபநிடதத்தில் நான்கு ஆசிரமங்களும் குறிப்பிடப்படுகின்றன, அவற்றுள் நுழைவது குறித்த விவரங்கள் அளிக்கப்படுகின்றன. ஸ்வேதாஸ்வர உபநிடதத்தில் [VI. 21] அத்யாஸ்ரமிப்ய என்ற சொல் குறிப்பிடப்படுகிறது- நான்கு ஆசிரமங்களுக்கும் அப்பாற்பட்ட ஞானியரைக் குறிக்கும் சொல் இது.

ஆசிரம அமைப்பு குறித்து மூன்று வெவ்வேறு பார்வைகள் உண்டு. முதலாமது சமுச்சயம் என்று சொல்லப்படுகிறது; இரண்டாவது, விகல்பம் என்றும் மூன்றாவது பாதம் என்றும் சொல்லப்படுகிறது.

சமுச்சய பார்வையில், ஒவ்வொரு ஆசிரமமாக கிரமப்படி வாழ்ந்து கடக்கப்பட வேண்டும். மனு சமுச்சய பார்வையை ஆதரிக்கிறார்.

பிரமச்சரிய பருவத்துக்குப்பின் மாணவன் முன் தேர்வுகள் உண்டு என்று விகல்ப பார்வை சொல்கிறது. அவன் விரும்பினால் இல்வாழ்வைத் தெரிந்தெடுக்கலாம், அல்லது, உலகு துறந்து துறவியாகலாம். வசிஷ்டர், ஆபஸ்தம்பர், யக்ஞவல்க்யர் முதலானோர் இப்பார்வைக்கு ஆதரவாக உள்ளனர்.

கிருஹஸ்தம் மட்டுமே மெய்யான ஆசிரமம் என்றும் பிறவனைத்தும் அதனைக் காட்டிலும் தாழ்ந்தவை என்றும் பாத பார்வை கூறுகிறது. கௌதமரும் போதாயனரும் இதையே பரிந்துரைக்கின்றனர்.

முடிவு

வர்ண, ஆசிரம அமைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு உரியவை, அக்காலத்துக்குத் தக்க தேவைகளை நிறைவு செய்யத் தோன்றியவை. அவற்றை உருவாக்கியவர்கள் நினைத்ததைக் காட்டிலும் நீண்ட காலம் இந்த அமைப்புகள் நீடித்திருக்கின்றன. அவர்கள் விருப்பத்துக்கு மாறான சீர்குலைவை அடைந்திருக்கின்றன. ஏன் இதுநாள் வரை நீடித்துள்ளது என்பதற்கு அவற்றின் பயன் முதல் குழுக்களின் சுயநலம், சமூக தேவை என்று நிறைய காரணிகள் சொல்லலாம்.

ஆனால் இந்நாளைய சமூக சீர்திருத்தத்துக்கான நியாயம் கோருவதானாலும் சரி, வெகு நீண்ட காலத்துக்கு முற்பட்ட நடைமுறையின் காரணமாக ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைக் கண்டனம் செய்வதனாலும் சரி, அவற்றுக்கான காரணங்களை இந்த அமைப்புகளில் தேடுவதென்பது அனைத்து வகையிலும் ஆதாரமற்ற கற்பனையே.

வர்ணமும் ஆசிரம தர்மமும் இறைவனால் படைக்கப்பட்டவை என்று சொல்பவர்கள் ரிக்வேதத்தில் உள்ள புருஷசூக்தம், பகவத் கீதை போன்ற சாத்திர நூல்களை ஆதாரம் காட்டுகின்றனர்.

தெய்வத்தாயினும் சரி, அல்லாமலும் சரி, மனிதர்கள் வாழ்வின் அடிப்படை கோட்பாடுகளை மறந்து, தன்னலமும் பேராசையும் உள்ளவர்களாகி விட்டனர். இதனால்தான் சாதியின் பெயரால் அக்கிரமமான பழக்க வழக்கங்கள் இன்றுவரை தொடர்ந்திருக்கின்றன.

சந்நியாசிகள் துறவிகளுக்கான விதிமுறைகளை மதிப்பதில்லை. இல்வாழ்வில் உள்ளவர்கள் தம் கடமைகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. மாணவர்களோ, செல்வம் சேர்க்கத் தேவைப்படும் சில தகுதிகளை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும் என்றிருக்கின்றனர்.

சகிப்புத்தன்மை, ஏற்றுக் கொள்ளுதல், நேசம், கருணை, அகிம்சை, தன்னலமின்மை, உற்சாகம், புலனடக்கம்- இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இவை கடைபிடிக்கப்பட்டாலன்றி, எப்படிப்பட்ட சமூக அமைப்பாக இருப்பினும் அவை அனைத்தும் எவ்விதத்திலும் பயனற்றுப் போகும்.

ஆதார நூல்கள்

Patrick Olivelle. The Ashrama System, 1993, New Delhi: MunshiramManoharlal.

P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.

G.H. Mees. Dharma and Society: A Comparative study of the Theory and the Ideal of Varna, 1935, London: Luzac.

A. Sharma. The Purusharthas: A Study in Hindu Axiology, 1982, East Lansing: Asian Studies Centre, Michigan State University.

G. S. Ghurye. Caste, Class and Occupation, 1961, Bombay: Popular Book Depot

Vijnaneshwara. Mitakshara (Commentary of YajnavalkyaSmrti), Nirnayasagara Press, 1926.

Apararka. YajnavalkyaSmrti, Pune: Anandashrama Press

Sri ChandrasekharendraSaraswati. Hindu Dharma: The Universal Way of Life, 2008, Mumbai: BharatiyaVidyaBhavan.

Patrick Olivelle. Manu’s Code of Law: A Critical Edition and Translation of the Mānava-Dharmaśāstra, 2005, New York: Oxford University Press.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்து திருவிழாக்கள், கொண்டாட்டங்கள்

karthikai deepam

எல்லாவற்றின் மையத்திலும் மனிதரை இருத்தி, தனிமனித மேம்பாட்டையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் இந்து சமயங்களிலும் சம்பிரதாயங்களிலும் உள்ள பல்வேறு தத்துவங்களையும் நம்பிக்கைகளையும் இதுவரை பேசி இருக்கிறோம். இதைத் தொடர்ந்து  ‘இந்து திருவிழாக்களை’ இந்தப் பகுதியில் எடுத்துப் பேசுவோம்.  திருவிழாக்களைப் பற்றிப் பேசுவது அவசியம்தானா என்று சிலர் நினைக்கலாம். நாம் அனேகமாக திருவிழாக்கள் கொண்டாடப்படுவதை வழக்கமாக எடுத்துக் கொள்கிறோம், அவற்றின் மீது போதிய கவனம் கொள்வதில்லை.

திருவிழாக்கள் என்னும்போது, ஏதோ ஒரு விஷயத்தைக் கடைப்பிடிக்கவோ, கொண்டாடவோ குறிப்பிட்ட ஒரு மக்கள் குழுவோ, சமூகமோ பங்கேற்கும் பெரும் நிகழ்வுகளையே குறிக்கிறேன்.

திருவிழாக்களைக் கொண்டாடும் அல்லது கடைப்பிடிக்கும் மக்களின் குறிப்பிட்ட தத்துவ நம்பிக்கைகளை வெளிப்படுத்துவதாகவோ பிரதிபலிப்பதாகவோ திருவிழாக்கள் இருக்கின்றன. எனவேதான் சமயம் சார்ந்த திருவிழாக்கள், சமூக- பண்பாட்டு நிகழ்வுகள், விவசாய திருவிழாக்கள், கலைத் திருவிழாக்கள் என்று பலவகைப்பட்ட திருவிழாக்கள் இருக்கின்றன.

இங்கும் இந்து கலாச்சாரமும் சமூகமும் பிற சமூகங்களைவிட மிகவும் வேறுபட்டிருப்பதைப் பார்க்க முடியும்- மற்ற கலாச்சாரங்களில் உள்ளதை விட இந்து திருவிழாக்களில் சமய உணர்வின் உள்ளீடு கூடுதலாக இருக்கிறது, கூடுதலாகவும் வெளிப்படுகிறது. இது தொடர்பாக சுவாமி விவேகானந்தர் கூறியது மிகப் பிரபலமான ஒன்று- “.. இந்து என்பவன் வித்தியாசமான ஒரு மனிதன். அவன் அனைத்தையும் சமய உணர்வுடன் செய்கிறான். அவன் சாப்பிடுவதில் சமய நம்பிக்கை இருக்கிறது; அவன் தூங்குவதில் ஒரு சமய உணர்வு இருக்கிறது; காலையில் எழும்போதே சமய உணர்வுடன்தான் எழுந்திருக்கிறான். அவன் செய்யும் நற்காரியங்களில் ஒரு சமய நம்பிக்கை வெளிப்படுகிறது;அவன் செய்யும் கெட்ட காரியங்களிலும் சமய நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கிறான்,” என்றார் அவர். பின், இந்துக்களின் எல்லாத் திருவிழாக்களிலும் சமய இயல்பு காணப்படுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? பிறப்பு, இறப்பு, திருமணம், கலவி, பணி- என ஒவ்வொரு செயலும் இந்துக்களின் வாழ்வில் சமய நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது.

பிற பண்பாட்டில் உள்ள திருவிழாக்களோடு ஒப்பிடும்போது இந்துக்களின் திருவிழாக்கள் எந்த வகையில் தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன என்று பார்த்தால் ஒன்று சொல்லலாம் – இந்து திருவிழாக்களில் நோன்பைத் தவிர்க்க முடியாது, பிற பண்பாடுகளில் விருந்துதான் பிரதானமாக இருக்கிறது.

நோன்பிருப்பது என்பது விரதத்தின் அங்கம்- இந்து திருவிழாக்களின் இரு முக்கியமான உறுப்புகளில் ஒன்று இது. மற்றொன்று எது என்றால், உற்சவம், அல்லது ஆனந்தக் கொண்டாட்டம் என்றாகும். இந்த இரண்டும் இந்து திருவிழாக்களுக்கு எளிய நளினத்தை, ஆழத்தை, ஆடம்பரமற்ற அலங்காரத்தை அளிக்கின்றன

தத்துவ நோக்கில் பார்க்கும்போது இந்து திருவிழாக்கள் அடிப்படையில் நான்கு புருஷார்த்தங்களின் வெளிப்பாடாக இருக்கின்றன என்பதைக் காணலாம். சாதாரண பூதவுடல் தரித்த பௌதிக இருப்பிலிருந்து மனிதரைக் காப்பாற்றி அனைத்து உழற்சிக்கும் அப்பாற்பட்ட ஆன்மீகத் தளங்களுக்கு அவரைக் கொண்டு செல்லும் சாதனங்களாக திருவிழாக்கள் செயல்படுகின்றன. அவரது இயல்பான புலன் உந்துதல்கள், செல்வங்களில் திளைக்கும் நாட்டம் போன்றவற்றை நிறைவு செய்தவண்ணமே, இறுதியில் அனைத்தையும் மோட்சம் என்ற லட்சியத்தில் கரைத்து, மனிதரை உயர்த்துகின்றன.

அத்தனை திருவிழாக்களும் சமயம் சார்ந்த ஒரு சங்கல்பத்துடன் துவங்கி, உற்சவத்தில் முடிகின்றன.  பிற சமயங்கள் சிலவற்றில் உள்ளது போல் தவம், விரதம் போன்றவை இந்து திருவிழாக்களில் தன்னை வருத்திக் கொள்ளும் வாதைகளல்ல.

எந்த ஒரு திருவிழா அல்லது கொண்டாட்டத்தையும் கடைப்பிடிப்பதிலும் மேற்கொள்வதிலும் உள்ள மிக முக்கியமான விஷயம், அதை முன்னின்று கொண்டாடும், கடைப்பிடிக்கும் கர்த்தா அமைதியாகவும் சஞ்சலமற்ற மனதோடும் இருக்க வேண்டும் என்பதுதான். ஆணோ, பெண்ணோ, முதலில் ஸங்கல்பம் எடுத்துக் கொண்டாக வேண்டும். ஸங்கல்ப மந்திரங்கள் திருவிழாக்களுக்கும் விரதங்களுக்கும் ஏற்ப மாறுபடும். அமைதியான மனதுடன் ஸங்கல்பம் எடுத்துக் கொண்டு செய்யப்படும் எந்த ஒரு சடங்கும் அதன் கர்த்தாவுக்கு மட்டுமல்லாமல் அவரைச் சுற்றிலும் உள்ள அனைவர்க்கும், ஏன், அவர் இருக்கும் சூழல் முழுமைக்கும் நன்மை விளைவிக்கும் என்பது நம்பிக்கை.

இந்து சமுதாயத்தில் நூற்றுக்கணக்கான திருவிழாக்கள், நிகழ்வுகள், மேளா அல்லது சந்தை விழாக்கள்  கொண்டாடப்படுகின்றன. எழுநூற்றுக்கும் மேற்பட்ட விரதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் ஒருவர் கடைப்பிடித்தாக வேண்டும் என்ற விதியோ அல்லது கட்டாயமோ கிடையாது. ஒருவரால் என்ன முடியுமோ, அவரது நாட்டம் எப்படி உள்ளதோ, அதற்கு ஏற்றவாறு தனக்குத் தகுந்த விரதங்களை அவர் மேற்கொள்ளலாம். ஆனால் இதிலும் முக்கியமானது சமுதாயத்தில் உள்ள அனைவரின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும், அண்டத்தில் உள்ள அனைத்தும் வளமாய் வாழ வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதுதான்.

ஆனால் நவீன இந்தியாவில் இது எல்லாம் மறக்கப்பட்டுவிட்டது. திருவிழாக்கள், மேளாக்கள் என்ற பெயரில் அவலட்சணம் மிகுந்த ஒரு காட்டுமிராண்டித்தனம் அரங்கேற்றப்படுவதைதான் நாம் இந்நாட்களில் காண்கிறோம். ஒருவர் தனி முயற்சியில் அந்தரங்கமாகச் செய்ய வேண்டியவை , மாபெரும் ஊர்வலங்களாக நடத்தப்படுகின்றன. பெருந்திரளாக மக்கள் கூடும் திருவிழாக்கள், உதாரணத்துக்கு நீராட்டு விழாக்கள், தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்களுக்காக மட்டும்தான் நிகழ்த்தப்பட்டன-  அங்குள்ள ஏழைகளும் முதியோர்களும் இத்தகைய சடங்கில் பங்கேற்க முடியாது என்பதால்தான் இந்த ஏற்பாடு. தேவையற்ற இதுபோன்ற கூட்டங்கள் போதாது என்று, எங்கே பயபக்தியுடன் வழிபாடு செய்யப்பட வேண்டுமோ, அங்கு மிக மலினமான வக்கிர நடனங்களும் கேளிக்கைகளும் நடக்கின்றன. தொலைநோக்குப் பார்வையில், இத்தகைய போக்குகளில் தனி மனிதனுக்கும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகளே அதிகம்.

முக்கியமான சில இந்து திருவிழாக்களின் தாத்பர்யம் சுருக்கமான வடிவில் இனி அளிக்கப்படுகிறது:

அக்ஷய திருதியை

எந்த ஒரு துவக்கத்துக்கும் தகுந்த மிகச் சிறந்த சுபதினங்களில் அக்ஷய திருதியையும் ஒன்று.

சந்திர சூரியர்கள் மிகப் பிரகாசமாக இருக்கும் விசாக மாதத்தின் மூன்றாம் நாளன்று அக்ஷய திருதியை கொண்டாடப்படுகிறது, மேஷ ராசியுள் சூரியன் பிரவேசிக்கும் காலமும் இதுவே.

மகா விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் நிகழ்ந்துள்ள திரேதா யுகத்தின் துவக்கம் அக்ஷய திருதியை. இந்த நாளன்றுதான் பரசுராமர் பிறந்தார். வியாசர் மஹாபாரதத்தை எழுதத் துவங்கிய நாளும்  இன்றே.

அக்ஷய திருதியையன்று வேத மந்திரங்களை ஜபித்தபடி புனித நதிகளில் நீராடுவதும் ஹோமம் வளர்த்து வழிபடுவதும் வழக்கம்.

அக்ஷய என்றால் முடிவற்றது என்று பொருள். இதைத் தவறாகப் புரிந்து கொண்டு இக்காலத்தவர் பேராசையுடன் தங்கம் வாங்கிக் குவிக்கின்றனர். இந்த நாளின் பிற சிறப்புகளை மறந்து விட்டனர்.

சுபகாரியங்களைத் துவங்க ஏற்ற நாள் இது. இன்று துவங்கிய செயல்கள் சாகும்வரை தொடரும் என்பது நம்பிக்கை.

ஒருவர் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு பொருளுதவி செய்யவும் தகுந்த நாள் இது- இன்றுள்ளது போல் சொத்து சேர்ப்பதில் மட்டும் குறியாக இருப்பதற்கான நாள் அல்ல. முன்போல் இப்போது தகுதியுள்ள பிராமணர்களுக்கும் பிற வகுப்பினருக்கும் பொருள் வழங்கிக் கொண்டாடுபவர்கள் மிகச் சிலரே உள்ளனர்.

யுகாதி அல்லது குடி பாட்வா

யுகாதி, அல்லது ஒரு சகாப்தத்தின் துவக்கம் ஆந்திர, கர்நாடக, மகராஷ்திர மக்களால் ஆண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மகராஷ்டிராவில் மட்டும் இது குடி பாட்வா என்று அழைக்கப்படுகிறது. (மராத்தியில் இது  गुढी पाडवा என்று எழுதப்படுகிறது.) ஒவ்வொரு மாதமும் சித்திரை (மார்ச்/ ஏப்ரல்) மாதப் பிறப்பன்று யுகாதி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளன்றுதான் பிரம்மன் இந்த உலகைப் படைத்தான் என்ற நம்பிக்கையில் யுகாதி கொண்டாடப்படுகிறது. இன்றுதான் மகாவிஷ்ணுவும் மச்சாவதாரம் எடுத்தார் என்பதும் நம்பிக்கை.

யுகாதியன்று மக்கள் தம் இல்லங்களை அலங்கரித்து, எண்ணெய்க் குளியல் எடுத்துக் கொண்டபின், பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு, தர்ம காரியங்களைச் செய்து முடித்தபின் விருந்து உண்கின்றனர். இந்த விருந்தில், கசப்பு- புளிப்பு- இனிப்பு ஆகிய மூன்று சுவைகளும் கொண்டதாக, வேப்பிலை, மாங்காய், வெல்லம் கலந்து உண்கின்றனர். வாழ்க்கையில் கசப்பும் இனிப்பும் உண்டு, இரண்டையும் சமநிலையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

புதிய ஆண்டின் விசேஷ தினங்கள், திருவிழாக்கள் மற்றும் பல முக்கியமான நிகழ்வுகளை அறிந்து கொள்ள இந்த நாளன்று பஞ்சாங்கம் வாசிக்கும் பழக்கமும் உண்டு.

மராத்தியர்கள், பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கம்பத்தின் உயரத்தில் ஒரு பானையை ஏற்றி குடி பாட்வாவைக் கொண்டாடுகின்றனர். மராத்திய வீரன் போரில் வெற்றி பெற்று வீடு திரும்புதலை இது குறிக்கிறது.

ஹோலி

holi

ஹோலி, அல்லது ஹோலிகா, இந்தியாவில், அதிலும் குறிப்பாக இந்தியாவின் வடபகுதிகளில் பரவலாகக் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான சிலவற்றில் ஒன்று.

இது, இந்தியாவில் மிகத் தொன்மையான திருவிழாக்களில் ஒன்றும்கூட. கிட்டும் இலக்கிய நூல்களை ஆதாரமாய் கொண்டு, குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாவது முற்பட்ட திருவிழா இது என்று தீர்மானிக்க முடிகிறது. கருட புராணம், ஹர்ஷதேவனின் ரத்னாவளி, ஜைமினியின் பூர்வ மீமாம்ச சூத்திரங்கள், காதக க்ருஹ்ய சூத்திரங்கள் முதலிய பல நூல்களில் ஹோலி குறிப்பிடப்படுகிறது.

இந்து திருவிழாக்களில் மிகவும் கொண்டாட்டமான திருவிழாக்களில் ஒன்று ஹோலி. மிக அதிக அளவில் ஆனந்தமும் அலங்காரமும் தீபாவளிக்கு அடுத்தபடி ஹோலியில்தான் நாம் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். ஹோலி வண்ணங்களின் திருவிழா, வசந்தத்தின் வருகையைக் குறிக்கும் திருவிழா. நிறைவான அறுவடையைக் கொண்டாடும் திருவிழாவாய் பழங்காலத்தில் இருந்திருக்கக்கூடும், அல்லது பெண்களுக்கான திருவிழாவாகவும் இருந்திருக்கலாம். பங்குனி மாதம் பௌர்ணமி தினத்தன்று ஹோலி கொண்டாடப்படுகிறது.

ஹோலி ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து எண்ணற்ற கதைகளும் பெருங்கதைகளும் உண்டு. இவற்றில் ஒரு பெருங்கதை, சிவன் தன் மூன்றாம் கண்ணைத் திறந்து காமதேவனைச் சாம்பலாய் சுட்டெரித்த  நாள் இது என்பதால்தான் ஹோலி கொண்டாடப்படுகிறது என்று சொல்கிறது.வேறொரு கதை, இந்த நாளன்றுதான், ராட்சதன் ஹிரண்யகசிபுவின் சகோதரி  ஹோலிகா, பிரகலாதனைச் சுட்டெரிக்க முயன்று, தான் சாம்பலானாள் என்று சொல்கிறது. கிருஷ்ணனையும் ராதையையும் தொடர்புபடுத்திப் பல கதைகள் உண்டு, அதே போல், துண்டி என்ற அரக்கியைக் குறிப்பிடும் கதைகளும் உண்டு.

ஹோலி இந்தியாவின் மிகத் தொன்மையான திருவிழா என்றாலும், பிற திருவிழாக்களைப் போல் ஹோலியன்று சமயச் சடங்குகள் எதுவும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. மாறாக, தடையற்ற கொண்டாட்டமாய், பல வண்ணங்களை ஒருவருக்கொருவர் பூசிக் கொண்டு, மதுபானங்களைப் பருகிக் கொண்டாடும் திருவிழாவாய் இருக்கிறது. வங்காளத்தில் அமைதியாகவும், நளினமாகவும், ஊஞ்சல் திருவிழா என்று பொருள்படும் டோலயாத்ரா என்றும்,  சைதன்ய மகாபிரபு ஜெயந்தியாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

மஹா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நிலவில் வாரம் பதின்மூன்றாம் நாள் இரவும், பதினான்காம் நாள் பகலும் சிவராத்திரி என்று அழைக்கப்படுகின்றன.

விக்கிரம வருடக் கணக்குப்படி, பங்குனி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்து வருடாந்தரக் கணக்குப்படி,  மிகப் புனித தினங்களில் ஒன்றாகவும், மிக மங்கலமான நாட்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது.

பிற மாதங்களில் வரும் சிவராத்திரி, மாச சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இவை அனைத்துமே மங்கலமாகவும் புனிதமாகவும் கருதப்பட்டாலும், மஹா சிவராத்திரியே மிகச் சிறந்தது. ஏனெனில், இன்றுதான் உலகு அனைத்தையும் அழித்திருக்கக்கூடிய (ஆலகால) விஷத்தை சிவன் அருந்திய தினம் என்று ஒரு பெருங்கதை உண்டு. உலகு காப்பாற்றப்பட்டதைக் குறிக்க மஹா சிவராத்திரி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

இந்துக்களின் மிக முக்கியமான திருவிழாக்களில் மஹா சிவராத்திரியே மிக அமைதியுடன், தீவிர பக்தியுடன் கொண்டாடப்படும் திருவிழாவாகும். உண்ணாமை, பிரார்த்தனை என்று விரதம் கடைப்பிடிக்கவே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, கொண்டாட்டங்களோ, கேளிக்கைகளோ  கிடையாது.

சிவராத்திரி இரவன்று சிவபக்தர்கள் கண்விழித்து, பஜனை செய்வது, சிவநாமத்தை ஜெபிப்பது, பூஜைகள் செய்வது என்று பலவகைகளில் வழிபாடு செய்கின்றனர். அதிகாலையில் இறுதி பூஜை செய்து முடித்ததும், சிவபூஜையில் படைக்கப்பட்ட பிரசாதம் அல்லது நைவேத்யம் உண்டு தங்கள் உண்ணா நோன்பை முடித்துக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு பிரதேசத்துக்கும் ஒவ்வொரு கதை என்று பல்வேறு கதைகள் சிவராத்திரி குறித்து வழங்கப்படுகின்றன. 12 அல்லது 14 அல்லது 24 ஆண்டுகள் மஹா சிவராத்திரி பூஜை செய்வதாய் சங்கல்பம் எடுத்துக் கொள்ளும் பக்தர்கள் பலர் உண்டு.

வாராணசி, ராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணாமலை, ஸ்ரீ காளஹஸ்தி, ஸோம்நாத் முதலான பல்வேறு தலங்களில் உள்ள சிவாலயங்கள் அனைத்திலும் மிகச் சிறப்பாக மஹா சிவராத்திரி நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

ஸ்ரீ ராம நவமி

விஷ்ணுவின் இருபெரும் அவதாரங்களில் ஒன்றான ராமாவதார தினமான ஸ்ரீ ராம நவமி, சித்திரை (சைத்ர)  மாதம் வளர்பிறையின் ஒன்பதாம் நாள், நவமியன்று, (மார்ச்/ ஏப்ரலில்) கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ ராம நவமியன்று ஒன்றரை நாள் உண்ணா நோன்பிருக்கும் வழக்கம் சில பகுதிகளில் உண்டு. ஸ்ரீ ராமர் விக்கிரகத்தை ஆவாஹனம் செய்து, அதை மலர்களால் அலங்கரித்து, பூஜை, ஹோமம் முதலானவை செய்து, காலை முதல் மாலை வரை ஸ்ரீ ராம நாமம் ஜெபித்து தகுதியுள்ளோருக்கும் தேவையுள்ளோருக்கும் பொருளுதவி செய்து ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது.

சிலர் மாலை வேளையில் பெரும் எண்ணிக்கையில் மக்களை அழைத்து ஏராளமான அளவில் உணவளித்து கூட்டு விருந்து வைப்பதும் உண்டு. விஷ்ணு ஆலயங்களும் ராமர் கோவில்களும்  இந்தியாவில் ஏராளமான இடங்களில் உள்ளன. மக்கள் பெருந்திரள் எண்ணிக்கையில் இங்கு சென்று ஸ்ரீ ராம நவமியை ஆனந்தமாய், ஆனால் அமைதியாய் கொண்டாடுவது வழக்கம். ஸ்ரீ ராம நவமியன்று மக்கள் மிக அதிக அளவில் கூடும் இடங்கள் அயோத்யாவும் ராமேஸ்வரமும் – இவ்விரண்டு தலங்களும் ஶ்ரீ ராமர் வாழ்வில் மிக முக்கியமான தொடர்புடையவை.

தற்காலத்தில் இந்த நாளில் மக்கள் ஆலய வழிபாடு செய்யும் வழக்கம் தொடர்ந்தாலும், ராம நவமியன்று உணவு உண்ணாதிருத்தல், சிலை நிறுவி வழிபாடு செய்தல் போன்ற பழக்கங்கள் மிக அபூர்வமாகி விட்டன.

ஹனுமத் ஜெயந்தி

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான ராமாவதாரத்தில், ராமனின் மிக முக்கியமான பக்தனாய் இருந்த ஹனுமான் இந்து மதத்தின் மிகப் பிரபலமான, உற்சாகமான கடவுளர்களில் ஒருவர்.

அஞ்சனா தேவியின் மகன் என்று பொருள்பட, ஆஞ்சநேயன் என்றும் அனுமனை அழைப்பது உண்டு. காற்றின் கடவுளாகிய வாயுவின் அனுக்கிரகத்தால் அனுமன் பிறந்ததாகவும் சொல்வதுண்டு.

எப்போதும் ராம நாமம் ஜெபித்துக் கொண்டிருக்கும் அனுமன், எங்கு ராம நாமம் ஜெபிக்கப்படுகிறதோ, அங்கு பிரசன்னமாவதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு.

அனுமன் அவதரித்த தினமாக சித்திரை மாதம் பௌர்ணமியன்று அனுமத் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

நாள் முழுதும் உண்ணா நோன்பிருந்து, காலை முதல் மாலை வரை ராம நாமம் ஜபிக்கும் மக்கள்,  தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, அனுமன் விக்கிரகத்தை மலர்கள் கொண்டு அலங்கரித்து, நைவேத்யம் செய்து அனுமத் ஜெயந்தி கொண்டாடுவது வழக்கம்.

இந்து கோவில்களில், மூலவர்கள் எவராய் இருப்பினும், ஏறத்தாழ அனைத்திலும் சன்னதி உள்ள மிகச் சில கடவுளர்களில் அனுமனும் ஒருவர்.

ராஜஸ்தானில் ஸாலாஸர் (सालासर ) என்ற ஊரில் உள்ள பாலாஜி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுமத் ஜெயந்தியை முன்னிட்டு, கூடி அனுமனை வழிபடுவது வழக்கம். எண்ணற்ற மக்கள் தம் துன்பங்கள் அகலவும், அறிவு விரிவடையவும், இறையருள் கிட்டவும் துளசிதாசர் பாடிய ஹனுமான் சாலீஸாவை ஜெபிப்பதும் வழக்கமாய் இருக்கிறது.

குரு பூர்ணிமா

குரு, அல்லது ஆசிரியருக்கு, வழிபாடு செய்யும் நாள் குரு பூர்ணிமா.

இந்து மதத்தில் உள்ள குருபரம்பரையில் அனைவர்க்கும் முன்னோடியாய் வியாசர் கருதப்படுவதால், இது வியாச பௌர்ணமி என்றும் அழைக்கப்படுவது உண்டு. வேதங்களைப் பகுத்தவரும், மகாபாரதம் இயற்றியவரும், பதினெட்டு மகாபுராணங்களைத் தொகுத்தவரும் வியாசரே என்று சொல்வதுண்டு. வேதங்களில் அநாதி உண்மைகளை வெவ்வேறு வடிவில், வெவ்வேறு தளங்களில் வெளிப்படுத்தியவர் வியாசர். வெவ்வேறு மனப்பாங்கு கொண்ட பல்வகைப்பட்ட மக்களையும் இந்த உண்மைகள் சென்று சேர இவ்வாறு பலவடிவங்களை உருவாக்கியவர் அவர்.

ஜூன்- ஜூலையில் வரும் ஆஷாட மாதத்தில் பௌர்ணமியன்று குரு பூர்ணிமா கொண்டாடப்படுகின்றது. இந்து சமயத்தில் குருவுக்கு உள்ள முக்கியத்துவத்தையும் அவர் மீது உள்ள மதிப்பையும் வெளிப்படுத்தும் நாள் இது.

இந்து மடாலயங்கள், ஆசிரமங்கள் அனைத்திலும் குரு பௌர்ணமி கொண்டாடப்படுகின்றது. ஹோமம் வளர்த்து, ஆன்மீக வளர்ச்சி நாடி, குருவின் அனுக்கிரஹத்துக்காக பஜனைகள் செய்வது வழக்கம்.

இந்த நாளன்றே சந்நியாசிகளின் நான்கு மாத ஓய்வுப் பருவமான சாதுர்மாஸ்யம் துவங்குகிறது. மழைக்காலத்தின் துவக்கம் என்று உழவர்களும் இந்த நாளைக் கொண்டாடுவது வழக்கத்தில் உள்ளது.

நவராத்திரி அல்லது நவராத்ரா

golu2

நவராத்திரி, அம்பிகையை அவளது பல்வேறு வடிவங்களில் ஒன்பது இரவுகள் வழிபடும் திருவிழா.

பண்டைய இந்து நூல்களில் இருவேறு நவராத்திரிகள் குறிப்பிடப்படுகின்றன- சைத்ர நவராத்ரா, ஷாரதிய நவராத்ரா. (शारदीय नवरात्र -இதுவே மஹா நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.) இரு நவராத்திரிகளும் அம்பிகையை அவளது பல்வேறு உருவங்களில் வழிபட்டாலும், சைத்ர நவராத்திரியின் ஒன்பதாம் நாளன்று ஸ்ரீ ராமர் பிறந்த தினமான ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுவது விசேஷம்.

மற்றபடி இரு நவராத்திரிகளிலும், தீய சக்திகளை தேவ சக்திகள் வெற்றி கொண்டதை பத்தாம் நாளன்று தசரா கொண்டாட்டங்கள் நிறைவு செய்கின்றன. இதிலும் பல்வேறு வடிவங்கள் உள்ளன.

தேசத்தின் சில பகுதிகளில் அம்பிகை அவளது ஒன்பது வடிவங்களில் வழிபடப்படுகிறாள்- துர்கா, உமா, கெளரி, பார்வதி, ஜகதாம்பா, காளி, சண்டி, பைரவி, அம்பிகை. இந்த ஒன்பது நாட்களில் உண்ணா நோன்பிருந்து இரவுகளில் அம்பாளின் நாமத்தை ஜெபித்தபடி  கண் விழித்திருப்பது வழக்கம். இறுதி நாளன்று சிறுமிகள் இல்லங்களுக்கு அழைக்கப்பட்டு அவர்களை அம்பாளாய் கருதி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பெருமைப்படுத்துவது வழக்கம்.

இந்தியாவின் வட பகுதிகளில் நவராத்திரியில், ராவணன் மீது ராமன் வெற்றி கண்டதைக் கொண்டாடும் திருவிழாவாக ராமலீலாவும் கொண்டாடப்படுகிறது. மக்கள் உண்ணாநோன்பிருந்து ராமாயணம் வாசிப்பது வழக்கம். விஜய தசமி (विजयदशमी), அல்லது தசரா (दशहरा) என்று அழைக்கப்படும் பத்தாம் நாளன்று ராவணன், கும்பகர்ணன் மற்றும் பலரின் கொடும்பாவிகளைக் கொளுத்துவது ராமலீலா கொண்டாட்டங்களின் தனித்துவம்.

தென்னிந்தியாவில் முதல் மூன்று நாட்களும் லட்சுமியும் அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியும், இறுதி மூன்று நாட்கள் துர்க்கையும் வழிபடப்படுகின்றனர். பத்தாம் நாளான விஜய தசமி இந்தியாவெங்கும் கொண்டாடப்படுவது போலவே தெய்வ சக்திகளின் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.

விஜயதசமியன்று அம்பாளின் அருள் நாடி, புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலருக்கும் விஜயதசமியே தங்கள் குழந்தைகள் கல்வி பயிலும் முதல் நாளாக இருக்கிறது.

வேறொரு சிறு மரபில், தென்னிந்தியாவில் சில இடங்களில், கடைசி மூன்று நாட்களில் துர்க்கையைக் கொண்டாடுவதற்குப் பதிலாக சரஸ்வதி தேவியைக் கொண்டாடுகிறார்கள்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

நாக பஞ்சமி

தொல்நாகரிகங்கள் பலவற்றைப் போல் இந்தியாவிலும் பல்வேறு வடிவங்களில் இயற்கை  வழிபாடு உண்டு. சிரவண மாதத்தின் வளர்பிறையில் ஐந்தாம் நாள் நாகங்களை வழிபடும் வகையில் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. (ஜூலை/ ஆகஸ்டு]

துவக்க இலக்கியங்களில் நாகம் போன்ற ஒரு உயிரினம் குறிப்பிடப்படுகிறது, அதன் பின் வரும் இலக்கியங்களில் பல்வேறு கதைகள் இருக்கின்றன, என்றாலும் நாக வழிபாடு எவ்வாறு தோற்றம் பெற்றது, வளர்ச்சி கண்டது என்பன குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. இதனால், கடந்த மூவாயிரம் ஆண்டுகளாகவே பல்வேறு ஊகங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அக்ஷய திருதியை, மகர சங்கராந்தி போலவே இந்த நாளும் சுபதினமாகக் கருதப்படுகிறது. இதுவும் ஏன் என்று தெரியவில்லை.

நாக பஞ்சமியன்று நாகர் விக்கிரகங்களை நீராட்டி, பாம்புகள் வாழும் புற்றுகளில் பாலூற்றி வழிபடுவது உண்டு. சில பகுதிகளில் ராஜநாகங்களுக்கு நேரடியாக வழிபாடு செய்வதும் உண்டு.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் பாம்புகளுக்கு ஆலயங்கள் இருக்கின்றன. ஆனால், மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ் நாடு ஆகிய பகுதிகளில்தான் நாக வழிபாடு பிற மாநிலங்களைவிட அதிகமாய் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி/ கோகுலாஷ்டமி

ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி, அல்லது கோகுலாஷ்டமி, அல்லது மிக எளிமையாகச் சொன்னால் ஜன்மாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினம். இந்து சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் எட்டாம் அவதாரம் இது.

இந்தியாவெங்கும், ஏன், உலகெங்கும் வாழும் இந்தியர்களால், சிரவண மாதத்தின் தேய்பிறை நிலவில் எட்டாம் நாள் கிருஷ்ண ஜன்மாஷ்டமி கொண்டாடப்படுகிறது.

பிற விசேஷ தினங்களைப் போலவே ஜன்மாஷ்டமியன்றும் மக்கள் உண்ணா நோன்பிருக்கின்றனர். கிருஷ்ண நாம பாராயணம் செய்து கிருஷ்ண விக்கிரகத்தை வழிபட்டு கிருஷ்ணனின் பிள்ளைப் பிராய விளையாட்டுகளை விவரிக்கும் பாகவதக் கதைகள் கேட்கின்றனர். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்த காரணத்தால் நள்ளிரவில் அவருக்குப் பூஜைகள் செய்யப்படுகின்றன. பூஜை முடிந்ததும் நாமஜெபம், பஜனைகள் செய்து முடித்து பாரணம் என்று அழைக்கப்படும் விரதம் முடித்துக் கொள்ளும் நிகழ்வு நடக்கிறது.

மகராஷ்டிர மக்கள் பானைகளில் தயிர், மோர், நெய் முதலியவற்றை நிரப்பி மிக உயர்ந்த இடத்தில் தொங்க விடுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணரைப் பின்பற்றி இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று, அவற்றை உடைக்க முயற்சிக்கின்றனர்.

மதுராவிலும் விருந்தாவனிலும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒரு மாதம் நடைபெறுகின்றன, அங்குள்ள அனைத்து வீடுகளும் கோயில்களும் வண்ணங்களால் அலங்கரிக்கபடுகின்றன. ஸ்ரீ கிருஷ்ணரின் விக்கிரகத்தை ஓர் ஊர்வலத்தில் எடுத்துச் செல்வது இங்கு வழக்கம்.

தென்னிந்தியாவில் பிறந்த தினத்தை நட்சத்திர அடிப்படையில் கொண்டாடுவது வழக்கம். எனவே, சிலர் சிரவண மாத தேய்பிறை  எட்டாம் நாளன்று  ஜன்மாஷ்டமி கொண்டாடுவதற்கு பதில் ரோகிணி நட்சத்திர தினமன்று கொண்டாடுகின்றனர். எப்படியாயினும் அவர்களும் தம் இல்லங்களைச் சுத்தப்படுத்தி, தரையில் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைப் பாதம் நடந்து சென்றது போல் அரிசி மாவைக் கரைத்துக் கோலமிட்டு, கிருஷ்ணருக்கு விருப்பமான தின்பண்டங்களை நைவேத்தியம் செய்து, பூஜை, பஜன், பாரணம் என்று வழிபாடு செய்கின்றனர்.

ரக்ஷா பந்தன் / உபாகர்மம்

பௌர்ணமி தினங்கள் அனைத்திலும், சிரவண மாதப் பௌர்ணமியே மிகவும் முக்கியமானது. உபாகர்மம், ரக்ஷா பந்தன் என்ற இரு முக்கியமான திருவிழாக்கள் அன்று நடைபெறுகின்றன. இந்தியாவெங்கும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

உபாகர்மம் என்ற நிகழ்வில் இந்து சமூகத்தில் பிராமண வகுப்பைச் சேர்ந்த ஆண்கள் யக்ஞோபவீதம் என்று அழைக்கப்படும் தங்கள் பூணூலை புதிதாக மாற்றிக் கொள்கின்றனர்.

இந்தச் சடங்கு மிக எளிமையானது, சில மந்திரங்கள் மட்டுமே சொல்லப்படுகின்றன. (இந்தச் சடங்கில் பங்கேற்போர், 108, 1080 என்பது போன்ற பல்வேறு எண்ணிக்கைகளில் காயத்ரி மந்திரம் ஜபிப்பதும் உண்டு.)

இந்தியாவில் சில பகுதிகளில் பௌர்ணமியன்று யக்ஞோபவீத தாரணம், அல்லது பூணூல் மாற்றிக் கொள்ளும்போது ஹோமம் வளர்ப்பது உண்டு, அடுத்த நாள் காயத்ரி மந்திர ஜபம் நடைபெறுகிறது.

அவரவர் பயன்படுத்தும் பஞ்சாங்கத்துக்கு ஏற்பவும், அவரவருக்கு உரிய வேத சூக்தங்களின் காரணமாகவும் சில பிரிவினரின் உபாகர்ம தினம் மாறுபடலாம்.

ரக்ஷா பந்தன் தோற்றம் குறித்து பல கதைகள் உள்ளன.

அப்படிப்பட்ட ஒரு கதையில் தேவராஜன் இந்திரன், அசுரர்களுடன் போரில் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறான். அவனது மனைவி சசிதேவி குறிப்பிட்ட சில விரதங்கள் கடைபிடித்து சடங்குகள் செய்தபின் அவன் கையில் ஒரு ரட்சை கட்டுகிறாள், அதை அணிந்து கொண்டு போருக்குச் செல்லும் இந்திரன் வெற்றி பெற்றுத் திரும்புகிறான்.

இந்நாட்களில், ரக்ஷா அல்லது ராக்கி, ஆண்களின் வலது மணிக்கட்டில் அவர்களது சகோதரிகளால் அணிவிக்கப்படுகிறது. தாம் சகோதரனாய் கருதும் ஆண்களுக்கும் பெண்கள் இதை அணிவிப்பதுண்டு. பெண்கள் ராக்கி கட்டி, தம் சகோதரர்களின் ஆசி பெறுகின்றனர். ஆண்கள் தமக்கு ராக்கி அணிவிக்கும் எல்லாருக்கும் பரிசுப் பொருட்கள் கொடுக்கின்றனர்.

ரக்ஷா அல்லது ராக்கி கட்டும்போது சொல்வதற்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது. அதை மக்கள் முழுமையாகவே மறந்து விட்டனர், இது குறித்து அலட்சியம் நிலவுகிறது.

இதுதான் அந்த மந்திரம்-

யேன பத்தோ பலி ராஜா தானவேந்த்ரோ மகாபலாஹ்
தேன த்வம் ப்ரதிபத்நாமி ரக்ஷே மாசல் மாசல்.

(தானவர்களின் அரசன் பலியைக் கட்டிய இந்தக் காப்புக் கயிறை நான் உனக்குக் கட்டுகிறேன். உன்னைக் காக்கும் இந்த ரக்ஷை இது விழாமல் இருக்கட்டும், விழாமல் இருக்கட்டும்.)

மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் இந்த நாளை நாரியல், அல்லது, தேங்காய் பௌர்ணமி என்று கொண்டாடுகின்றனர். தேங்காய்களுக்கு மலர் சூடி, கடற்பயணம் சென்றவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டிக் கொள்கின்றனர்.

குஜராத்தில் உள்ள சிவபக்தர்கள் இந்த நாளை பவித்ராபனா என்ற திருவிழாவாய் கொண்டாடுகின்றனர். கடவுள்களுக்கு தண்ணீர் நைவேத்யம் செய்து தம் தவறுகளை மன்னிக்க பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.

மத்திய பிரதேசம், சத்திஸ்கர் பகுதியில் உள்ளவர்கள் கஜரி பூர்ணிமா என்று கொண்டடுகின்றனர். வரும் விவசாயப் பருவத்துக்கான உழவுப் பணிகளைத் தாய்மார்கள் துவக்கி வைக்கின்றனர்.

ஓணம்

ஓணம் கேரளாவின் அறுவடைத் திருவிழா. ஆகஸ்ட்/ செப்டம்பர் மாதங்களில் நான்கு முதல் பத்து நாட்கள் இந்த திருவிழா கொண்டாடப்படுகின்றது.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான வாமனனால் அசுர அரசன் மஹாபலி பாதாள லோகத்துக்கு அழுத்தப்பட்டபோது, தான் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை தன் அரசுக்கு வர அனுமதி கேட்டு அவர் விண்ணப்பித்தார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த நாளே ஓணத் திருநாளாய் கொண்டாடப்படுகிறது.

ஓணம் அன்று மக்கள் தம் வீட்டை பத்து நாட்கள் முன்னதாகவே மலர்களால் அலங்கரித்து, வீட்டு வாசலில் மலர்களால் செய்யப்பட்ட மிதியடிகளை வைக்கின்றனர். ஆலய வழிபாடும் செய்கின்றனர். ஓணத் திருநாளன்று மாபலியின் களிமண் பிரதிமைகளும், மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய வாமனனின் பிரதிமைகளும் வழிபடப்படுகின்றன. சாதி மத வேறுபாடின்றி கேரள மக்கள் அனைவரும் ஓணம் கொண்டாடுகின்றனர்.

கணேஷ் சதுர்த்தி

தேவப் படைகளின் அரசனான கணேசர் சாதி, சமூக வேறுபாடின்றி இந்துக்கள் அனைவராலும் வழிபடப்படுகிறார்.

எந்த ஒரு செயலையும், புனித சங்கல்பத்தையும், விரதத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர்  கணேஷ், அல்லது கணபதி, அல்லது விநாயகர் வழிபடப்படுகிறார். தடைகளை நீக்கி வெற்றியை அருள்பவர் என்று கொண்டாடப்படுகிறார். சிவனுக்கு பார்வதிக்கும் பிறந்ததால் இவர் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

பாத்ரபாட மாதத்தின் (ஆகஸ்ட்/ செப்டம்பர்) வளர்பிறையில் நான்காம் நாள்  விநாயகரின் பிறந்த நாளன்று விநாயக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. மிகப் பெரும் கொண்டாட்டத்தை இந்தத் திருவிழாவில் இந்திய தேசமெங்கும் பார்க்கலாம். தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விருப்பத்தில் இந்த விழாவில் மக்கள் பங்கேற்கின்றனர்.

விநாயகரின் உருவம் விநோதமாக இருக்கலாம்- யானைத் தலை ஞானத்தைக் குறிக்கிறது, அவரது வாகனமான மூஞ்சூறு, பக்தர்களின் அகங்காரத்தை அவர் கவர்ந்து கொள்ளக்கூடியவர் என்பதைக் குறிக்கிறது.

பிள்ளையாரின் களிமண் விக்கிரகத்தை வீட்டில்  வைத்து மலர் மாலையும் அருகம் புல்லும் கொண்டு அலங்கரித்து மோதகம் நைவேத்தியம் செய்து மக்கள் வழிபாடு செய்கின்றனர். கணேச மந்திரங்கள் சொல்வதும் பஜனைகள் செய்வதும் வழிபாட்டை நிறைவு செய்கிறது.

திருவிழா முடிந்ததும் களிமண் விக்கிரகங்கள் மூன்றாம் நாள் அல்லது ஐந்து, ஏழு, அல்லது பத்தாம் நாள் தண்ணீரில் கரைக்கப்படுகின்றன. மாபெரும் ஊர்வலங்களுடன் வெகு விமரிசையாக இந்த முழுக்கு நடைபெறுகிறது.

மகாலயபக்ஷம்/ பித்ருபக்ஷம்

எந்த பஞ்சாங்கம் பின்பற்றப்படுகிறது என்பதைப் பொருத்து, பாத்ரபத அல்லது அஷ்வினி மாதத்தில் (இங்கிலிஷ் மாதத்தில் செப்டம்பர்/ அக்டோபரில்) தேய்பிறைக் காலம் பதினான்கு நாட்களும்  மகாலயபக்ஷம் அல்லது பித்ருபக்ஷம் என்று அழைக்கப்படுகிறது.

இறந்த மூதாதையர்களை, பித்ருக்களை  வழிபட உகந்த தினங்களாக இவை கருதப்படுகின்றனர், எனவேதான் பித்ருபக்ஷம் என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை, மஹாலய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

இந்து சமயங்களில் மூத்தார் சடங்குகளுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இறந்த ஆன்மாவுக்கு நாம் நம் கடனை நிறைவேற்ற முடிகிறது என்பது ஒன்று. மற்றொன்று, இறந்த ஆன்மா பித்ருலோகம் செல்ல இந்தச் சடங்குகள் உதவுகின்றன. இந்த மூதாதையர் உலகம் சென்றபின்தான் மீண்டும் பிறக்க முடியும் என்பது நம்பிக்கை.

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கதாதரர் அருள் வேண்டி மக்கள் ஸ்ரார்த்தங்கள் செய்கின்றனர், அரிசி, நீர் எள் கொடுத்து தர்ப்பணம் செய்து பூஜை செய்கின்றனர். இந்த நாட்களில் வீட்டிலும் கயை, வாராணசி, அலகாபாத் போன்ற புனித தலங்களிலும் மக்கள் இந்தச் சடங்குகள் செய்கின்றனர். இந்தச் சடங்குகளை மேற்கொள்பவர்கள் விரதம் இருக்கின்றனர், பிராமணர்களுக்கு இனிப்பு வழங்குகின்றனர், பசுக்கள், காகங்கள் மற்றும் நாய்களுக்கு உணவு அளிக்கின்றனர்.

தன்தேரஸ்

தன்தேராஸ் என்றால் அதிர்ஷ்டம் என்று பொருள்படும். தன் என்ற சொல்லின் பொருள் தனம், செல்வம்.

விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான தன்வந்த்ரி, என்ற தேவ மருத்துவரோடும் இந்தத் திருவிழா தொடர்புடையது.

அஷ்வினி மாதத்தின் பதின்மூன்றாம் நாள் இது துவங்குகிறது. ஐந்து நாட்கள் தொடரும் தீபாவளி கொண்டாட்டங்களின் துவக்கத் திருவிழா இது.

பாம்பு உருவில் வந்து தன் கணவன் உயிரைக் கொண்டு செல்ல வந்த யமனிடமிருந்து கணவனைக் காப்பாற்ற, அவர் தூங்கிக் கொண்டிருந்த அறை வாசலில் தன் நகைகள் மற்றும் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் ஒரு பெண் குவித்து வைத்தாள் என்று ஒரு கதை உண்டு. செல்வத்தின் வசீகரத்தில் யமனால் மயக்கம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. யமனைத் துதித்து அந்தப் பெண் பாடவும், மனமிரங்கிய யமன், அவளது கணவன் உயிரைக் கவராமல் விட்டுச் சென்றான். எனவே இவ்விழா யமதீபன் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளை நினைவுகூரும் வகையில் மக்கள் தம் வீட்டில் விளக்கேற்றி வைக்கின்றனர்.

தன்தேரஸ் அன்று லட்சுமியை வழிபடுவதும் உண்டு. இந்தியாவில் சில பகுதிகளில் இந்நாளன்று பொன் வாங்குவதும், புதுத் தொழில் துவங்குவதும் உண்டு.

தீபாவளி/  திவாளி

உலகெங்கும் வெவ்வேறு வடிவில் வெவ்வேறு பெயரில் கொண்டாடப்படும் விளக்குத் திருவிழாவே தீபாவளி. இருள் நீங்குவதையும் ஒளி, அல்லது ஞானம் உதிப்பதையும் இந்தத் திருவிழா குறிக்கிறது.

அஷ்வினி மாதத்தில் அமாவாசையன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது.

தர்மத்தின் அவதாரமான ராமன் தீமையின் உருவமான ராவணனை வதம் செய்து வெற்றி பெற்று அயோத்தி\ திரும்பியதன் கொண்டாட்டமே தீபாவளி என்று ஒரு நம்பிக்கை உண்டு. அயோத்தி மக்கள் அனைவரும் ஊரெங்கும் விளக்கு ஏற்றி அந்த வெற்றியைக் கொண்டாடினர், இன்றும் அந்தக் கொண்டாட்டம் தொடர்கிறது.

பூமித் தாயின் விண்ணப்பத்துக்கு செவி சாய்த்து கிருஷ்ணரின் மனைவியான சத்யபாமா, நரகாசுரனை வதம் செய்தபோது, அந்த அசுரன்  கேட்டுக் கொண்ட வேண்டுதலுக்கு செவி சாய்த்தே தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நரகாசுரன் வதம் செய்யப்பட்ட நாள் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது.

தென்னிந்திய மக்கள் இந்த நம்பிக்கையில்தான் தீபாவளி கொண்டாடுகின்றனர். ஆனால், வட இந்தியாவில் ராமன் அயோத்தி திரும்பிய தினம் என்ற நம்பிக்கையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகவே ஒரே திருவிழாவை தென்னிந்திய மக்களும் வட இந்திய மக்களும் வெவ்வேறு தினங்களில் கொண்டாடுகின்றனர்.

தீபாவளியன்று அதிகாலை எண்ணெய்க் குளியல் செய்தபின், பட்டாசுகள் வெடித்து, வாழ்த்துகள் பரிமாறிக் கொண்டு, பூஜை செய்தபின், விருந்துண்டு கொண்டாடுகின்றனர்.இந்தியாவின் வேறு சில பகுதிகளில் தீபாவளியன்று புதிய நிதி ஆண்டுக்கான கணக்கு துவங்குகின்றனர்.

கார்த்திகை தீபம்

தென்னிந்தியாவில் மிகவும் தொன்மையான திருவிழா இது. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. (நவம்பர்/ டிசம்பர்)

கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தன்றுதான் சிவபெருமான் அருணாசல மலையாக உருக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இதுவே திருவண்ணாமலை என்றும் அருணகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலை, தென்னிந்தியாவில் சென்னையிலிருந்து 200 கிமீ தொலைவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கிறது.

தீபத்திருநாள் அன்று மாலை ஒரு மாபெரும் தீபம் மலையுச்சியில் ஏற்றப்படுகிறது. பத்து நாட்களாகத் தொடரும் திருவிழாக் கொண்டாட்டங்கள் தீபத்திருநாளன்று நிறைவு பெறுகிறது. தமிழக மக்கள் அனைவரும், அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் உள்ளவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் காத்திகை மாதம் முழுதும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வழிபடுவது உண்டு. தீபத்திருநாள் அன்றும் பௌர்ணமி தினம் அன்றும் பல பத்தாயிரம் பேர் மலையைச் சுற்றியுள்ள பதினான்கரை கிலோமீட்டர் நீளமுள்ள கிரிவலப்பாதையில் நடந்து வலம் வருவது வழக்கம். பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வாழ்வில் வளம் சேர்க்கும் என்பது நம்பிக்கை.

மலையுச்சியில் ஏற்றப்பட்ட தீபம் பல நாட்கள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும், சில ஆண்டுகள் பத்து நாட்கள் வரையும்கூட எரிந்து கொண்டிருப்பதுண்டு. தீபத்திருநாள் அன்று விரதம் இருந்து, தீபம் ஏற்றப்பட்ட பின்னரே உண்ணும் வழக்கமும் உண்டு. தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ளவர்கள் அனைவரும் திருவண்ணாமலை வந்து தீபத்திருநாளில் பங்கேற்கின்றனர்.

கும்ப மேளா

பண்டைக் காலம் முதல் பௌர்ணமி நாட்களும் அமாவாசை நாட்களும் புனிதமான தினங்களாக இந்துக்களால் கருதப்பட்டு வருகின்றன. அன்று பல சமயச் சடங்குகள் நடைபெறுகின்றன. பல திருவிழாக்களும் மரபார்ந்த சடங்குகளும் இந்த இரண்டில் ஒரு நாளன்று நிகழ்வது வழக்கம்.

அப்படிப்பட்ட ஒரு தினமே, மக மாத அமாவாசை. அது மௌனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. நூறாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் அலகாபாத் என்று அழைக்கப்படும் பிரயாகையில் குழுமி, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் திரிவேணி சங்கமத்தில் நீராடுகின்றனர். இங்கு நடக்கும் சமயச் சந்தை, மாக மேளா என்று அழைக்கப்படுகிறது.

இதுபோன்ற ஒரு மேளா இன்னும் பெரிய அளவில் நடைபெறும்போது கும்ப மேளா என்று அழைக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சமயச் சந்தை இது. புனித நதிகள் உள்ள ஓரிடத்தில் கும்ப மேளா நடத்தப்படும். அலகபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி சந்திக்கும் இடத்தில் நடத்தப்படுகிறது; நாசிக்கில், கோதாவரி நதிக்கரையில் நடக்கிறது; உஜ்ஜையினில் சிப்ரா நதிக்கரை, ஹரித்வாரில் கங்கைக்கரையில் மேளாக்கள் நடைபெறுகின்றன. கும்ப மேளா பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நான்கு இடங்களில் ஒன்றில், முறைப்படி வரிசைக்கிரமமாக நிகழ்த்தப்படுகிறது.

பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தத்தை எடுத்துக் கொண்டு தேவர்கள் செல்கையில் அசுரர்கள் அவர்களை விரட்டிச் சென்றனர், அப்போது, அலகாபாத், நாசிக், ஹரித்வார், உஜ்ஜயின் ஆகிய நான்கு இடங்களில் அந்த அமிர்தம் சிந்தியதாக ஐதீகம். பன்னிரண்டு நாட்கள் இருவருக்குமிடையே இந்த இழுபறி நிலைமை நீடித்தது. பன்னிரண்டு மானுட ஆண்டுகள் பன்னிரண்டு தேவ நாட்களுக்கு இணை என்பதால் பன்னிரண்டு நாட்கள் நடந்த தேவர்களின் போராட்டத்தைக் குறிக்கும் விதமாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா நிகழ்த்தப்படுகிறது.

வியாழனும் சூரியனும் கூடுவதையொட்டி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா நிகழ்த்தப்படுகிறது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு.

மாக மேளா சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நதிக்கரைகளில் தான தவமியற்றி வசிக்கின்றனர். மேளா முடிவுக்கு வரும்போது தங்கள் சக்திக்கு ஏற்றபடி பிறருக்கு தர்மம் செய்வது வழக்கம்.

ஆண், பெண், சாதி பேதமின்றி அனைவரும் கும்ப மேளாவில் பங்கேற்கிறார்கள் என்றாலும் இந்த ஆற்றோரத் திருவிழா மிகப்பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கும் பல்வேறு சம்பிரதாயங்களைச் சார்ந்த சாதுக்கள், சாமியார்கள், மற்றும் சமயத் துறவிகள் காரணமாகவே பிரபலம் பெற்றிருக்கிறது. ஒவொரு கும்ப மேளாவிலும் பல சமய ஊர்வலங்கள், கதா காலட்சேபங்கள், பஜன்கள் தினந்தோறும் நடந்தவாறு இருக்கும்.

மகர சங்கராந்தி / பொங்கல்

சூரியன் ஒரு ராசியைவிட்டு இன்னொரு ராசிக்குச் செல்வதே சங்கராந்தி.

எனவே மொத்தம் பன்னிரண்டு சங்கராந்திகள் இருக்கின்றன, இவற்றில் மகர சங்கராந்தியே மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சூரியன் வடதிசை நோக்கி நகரத் துவங்குவதை மகர சங்க்ராந்தி குறிக்கிறது- இது உத்தராயண புண்யகாலம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரு ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு சூரியன் இடம் பெயரும்போது மக்கள் புனித நதிகளில் நீராடுகின்றனர், விரதம் இருக்கின்றனர், பூஜைகள் செய்கின்றனர், ஹோமம் செய்கின்றனர், தான தர்ம காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

உண்மையில் கொடை அளிக்க உத்தராயண புண்யகாலமே மிகவும் சிறந்தது. இதை அறுவடைத் திருவிழாவாகவும் கொண்டாடுவது உண்டு.

தமிழகத்தில் மகர சங்கராந்தி பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் இந்த அறுவடைத் திருவிழா கொண்டாட்டங்கள் தொடர்கின்றன. போகி என்று அழைக்கப்படும் முதல் நாளன்று இல்லங்களில் பழையன கழிந்து புதியன புகுகின்றன. பொங்கல் என்று அழைக்கப்படும் இரண்டாம் நாளன்று, பொங்கல் செய்து சூரியனுக்கு படைக்கப்படுகிறது. மூன்றாம் நாளான மாட்டுப் பொங்கலன்று  மாடுகள் குளிப்பாட்டப்பட்டு அவற்றுக்கு புத்தாடைகள் அணிவிக்கப்படுகின்றன. சில இடங்களில் ஜல்லிக்கட்டு என்று சொல்லப்படும் காளைச் சண்டையும் நடைபெறுவது உண்டு.

முக்கியமான வேறு திருவிழாக்கள் சில-

● ஆடிப்பெருக்கு
● அனந்த சதுர்த்தி
● பைசாகி
● பாய் தூஜ்
● பிரம்மோத்சவம்
● புத்த பூர்ணிமா
● துர்கா பூஜா
● கங்கா தசரா
● கங்கா மஹோத்ஸவா
● கோவர்த்தன் பூஜை
● குருவாயூர் திருவிழா
● கரவா சௌத்
● காளி பூஜை
● காளஹஸ்தி கோவில் திருவிழா
● குருக்ஷேத்ரா திருவிழா
● லட்சுமி பூஜை
● திருச்சூர் பூரத் திருவிழா
● பூரி ரத யாத்திரை
● ராஸ்லீலா
● சபரிமலை கோவில் திருவிழா
● தமிழ் புத்தாண்டு
● தைப்பூசம்
● வைகுண்ட ஏகாதசி
● விஷு

உசாத்துணை நூல்கள்

  1. Prem P. Balla. Hindu Rites, Rituals, Customs and Traditions, 2009, New Delhi: Hindology Books.

  2. P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

இந்து சம்ஸ்காரங்கள்


annaprasnam

சம்ஸ்காரத்தின் பொருள்

சம்ஸ்காரம் என்ற சொல்லுக்கு பல பொருள் உண்டு. அவற்றில், “நினைவுச் சுவடு”, “சுத்திகரிப்பு”, “ஏதோ ஒரு நன்மை செய்வது” என்ற அர்த்தத்தில் சம்ஸ்காரங்கள் அதிகம் பேசப்படுகின்றன.

தத்துவம் பேசும்போது, இந்தச் சொல் சமூக, சமய சடங்குகளைக் குறிக்கிறது. வாழ்வின் ஒரு பருவத்திலிருந்து வேறொரு பருவத்துள் நுழையும்போது செய்யப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் இவை. உடல், உள்ளம், புத்தி முதலானவற்றை சுத்திகரித்து புனிதமாக்கும் நோக்கம் கொண்ட பழக்க வழக்கங்களே சம்ஸ்காரங்கள். இவை தவிர, சம்ஸ்காரம் என்ற சொல், ஒரு கலாசார பாரம்பரியத்தின் ஒட்டுமொத்த தொகுப்பையும், தனி மனித வளர்ப்பையும் பேசப் பயன்படுகிறது.

ஒரு மனிதனின் வாழவினூடாக அவனை ஒரு உயர் வாழ்வுக்குத் தகுதி கொண்டவனாகச்\ செய்து, ஆதர்ச இலக்குக்கு இட்டுச் செல்லும் புனிதச் சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்க வழக்களின் தொடரே சம்ஸ்காரங்கள்.  வாழ்வின் ஒவ்வொரு கட்டத்துக்கும் உரிய குறிப்பிட்ட ஒரு சம்ஸ்காரம் அல்லது ஒருசில சம்ஸ்காரங்கள் உண்டு.

சாதி, சமய நம்பிக்கை, சமூக நிலை எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு இந்துவும் ஒருசில சம்ஸ்காரங்களைத் தன் வாழ்நாளில் செய்தாக வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. நூற்றாண்டுகளாய்தொடரும் மாற்றத்தில், இன்று இந்து சமூகத்தில் ஒரு சிலருக்கே உரியவை என்று இந்த சம்ஸ்காரங்கள் கருதப்படுகின்றன; ஆனால் உண்மையில், தாமறியமாலே நம்மில் ஏராளமானவர்கள் இந்த சம்ஸ்காரங்களை இப்போதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்.

சம்ஸ்காரங்களின் நோக்கம்

வெளியிலிருந்து பார்க்கும்போது, சமூக-சமயச் சடங்குகள் போல் தெரிந்தஆம், சம்ஸ்காரங்கள் அடிப்படையில் ஆன்மிக சாதனையின் நடைமுறைத் தொகுப்பாக இருக்கிறது. ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு வழிகாட்டுவதாகவும் இருக்கின்றன.

சமஸ்காரங்க்ளின் நடைமுறைப் பயன்பாடு என்ன என்று பார்ஹ்டால், ஒரு மனிதனின் வளர்ச்சிப் பாதையில் மிகப் பெரிய தாக்கத்தையும் பாதிப்பையும் இவை ஏற்படுத்துகின்றன. தனி மனித அளவில் ஆன்மீக நெறிப்படுத்துதலை அளித்து, ஒரு சமூகத்தின் முதிர்ச்சியடைந்த கலாச்சாரத்தின் உறுப்பினன் ஆகும் தகுதியை அவனுக்குக் கொடுக்கிறது. சூல் கொண்ட நாள் முதல் துவங்கும் இந்த சம்ஸ்காரங்கள் ஒரு மனிதனின் உடலிலும் உள்ளத்திலும் தொடர்ந்து தேவைக்குத் தகுந்த நற்பண்புகளைத் தோற்றுவித்து, வாழ்நாள் முழுமையும் தொடர்ந்து அவனது ஆளுமை வளர்ச்சியடையத் துணை செய்கின்றன.

நவீன உலகில் சடங்குகளும் சம்பிரதாயங்களும் தீவிர மதநம்பிக்கை மற்றும் மூட நம்பிக்கைகளின் தொகுப்பு என்று இழிவு செய்யப்பட்டாலும் அவற்றுக்கு ஆழமான, மிக உயர்ந்த அர்த்தம் உள்ளது. அது, வெளிப்பார்வைக்கு எளிதில் புலப்படாது.

கடந்த சில நூற்றாண்டுகளில் தோன்றியவற்றைத் தவிர பிற அனைத்து இந்து சமயச் சடங்குகளுக்கும் சமூக, பண்பாட்டு, ஆன்மீக, மறைஞான முக்கியத்துவம் உள்ளது- மனிதனின் மன வளர்ச்சியின் தேவைகளையும் இவை பெரும்பாலான சமயம் நிறைவு செய்கின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக, தெய்வங்களைப் ப்ரீதி செய்யவும் பரிகாரம்  செய்யவுமே சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன என்ற ஒரு நம்பிக்கை தற்காலத்தில் இருக்கிறது. சம்ஸ்காரங்களும் இப்படிதான் பார்க்கப்படுகின்றன. இதனால், மிகச் சிலரே சம்ஸ்காரங்களை முறையான வகையில் கடைபிடிக்கின்றனர்.

எந்த ஒரு கடவுளையோ அல்லது குறிப்பிட்ட சில கடவுளரையோ திருப்தி செய்வதற்காக சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. இன்னும் மேலான ஒரு வாழ்வை நோக்கிச் செல்லும் தகுதி பெரும் வகையில் மனிதனின் உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்து புனிதப்படுத்தும் நோக்கத்தில் செய்யப்படும் சடங்குகள் இவை. உடலின் இயக்கத்தைக் கொண்டு உடலிலும் உள்ளத்திலும் தாக்கம் ஏற்படுத்தி, மனிதனுள் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தி, சமூகத்தில் அவனுக்குரிய இடத்தை அவன் வெற்றிகரமாக அடையச் செய்து, அவனுக்குச் சாத்தியப்படும் ஆன்மீக வளர்ச்சியையும் சம்ஸ்காரங்கள் அளிக்கின்றன. எனவே, குறிப்பிட்ட சில அடிப்படை நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளின் தொகையே சம்ஸ்காரங்கள் என்று சொல்லலாம். இவை ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு துணை நிற்கின்றன, மனிதன் கற்றுத்தேரும் வாழ்வனுபவங்களுக்குச் செறிவு செய்து, அவனுக்கு ஊட்டம் அளிக்கின்றன.

உபநயனம் அல்லது பூணூல் அணிவித்தல் போன்ற சம்ஸ்காரங்கள் ஆன்மீக தேவைகளையும் பண்பாட்டு தேவைகளையும் நிறைவு செய்கின்றன. நாமகரணம், அல்லது பெயர் சூட்டுதல், அன்னபிரச்னம் அல்லது குழந்தைக்கு முதல் முறை திட உணவு ஊட்டுதல், போன்ற சில சம்ஸ்காரங்கள் அன்பு, நேசம், நல்லிணக்கம் முதலான உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவிகளாகச்  செயல்படுகின்றன. கர்ப்பதானம் போன்ற சம்ஸ்காரங்கள் ஆழமான மறைஞான, ஆன்மீக அர்த்தம் பொதிந்தவை. விவாகம், அல்லது, திருமணம் இரு உடல்களும் ஆளுமைகளும் இணைவதைச் சமயச் சடங்காக அங்கீகரிக்கின்றன, இது சமூக அமைப்பின் இடையறாத தொடர்ச்சியையும் உறுதி செய்ய உதவுகிறது.

சம்ஸ்காரங்களின் துவக்கமும் தொடர்ச்சியும்

முற்கால சம்ஸ்கிருத பனுவல்களில் உள்ள தகவல்களை இங்கு விவரிக்கிறேன். ஆனால், சம்ஸ்கிருத மொழியில் துவங்கி, அதனால் முறைமைப்படுத்தப்படுபவை என்று சம்ஸ்காரங்கள் குறித்து கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இந்தியாவெங்கும் உள்ள பிராந்திய மொழி நூல்கள் ஏராளமானவற்றில் சம்ஸ்காரங்கள் விரிவாக விளக்கபப்ட்டுள்ளன, வெவ்வேறு வடிவங்களில் அவை கடைபிடிக்கப்படுகின்றன. இங்கு சொல்லப்படுவது சம்ஸ்கிருத நூல்களை மட்டும் கொண்டு அடையப்பட்ட பார்வையில்ல, பரவலான வழக்கத்தில் இருக்கும் சடங்குகளின் அடிப்படை நம்பிக்கைகள் இவை. வேறெந்த பொருளும் இங்கு கற்பிக்கப்பட வேண்டியதில்லை.

சடங்குகளும் சமயச் சம்பிர்தாயங்களுமாக தொகுத்துப் பார்த்தால் சம்ஸ்காரங்கள் தொன்மையானவை. உலகின் மிகப் புராதான சடங்குகளாகக்கூட இவை இருக்கலாம். ஏனெனில், காலத்தில் மிக முற்பட்ட ரிக் வேத சம்ஹிதையில் இவை பேசப்படுகின்றன. சந்தேகத்துக்கிடமின்றி இவை மிகப் பெரும் மாற்றங்களை எதிர்கொண்டிருக்கின்றன, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களைக் காட்டிலும் இன்று இன்னும் பல சமூகக் குழுவினருக்கு உரியதாய் வளர்ந்தும் உள்ளது.  முதல் நூல்களிலேயே இவை ஓரளவு விரிவாக விளக்கப்படுகின்றன என்பதைப் பார்க்கும்போது, இந்த நூல்கள் எழுதப்படுவதற்கும் முன்னதாகவே இவை நடைமுறையில் இருந்தன என்று தெரிகிறது.

அனைத்து பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் போலவே சம்ஸ்காரங்கள் எழுத்தில் விதிக்கப்பட்ட சட்டதிட்டங்களின் அதிகாரத்தைக் காட்டிலும் முன்னோர்களின் வழிவந்த, பழக்கத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவில்தான் கடைபிடிக்கப்படுகின்றன.

துவக்க கால நூல்கள் பலருக்கும் பழக்கப்பட்ட பல்வேறு சடங்குகளை மட்டுமே விவரிக்கின்றன. இப்படிச் செய்ய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ அவற்றில் இல்லை. ஆனால், இதற்கு மாறாக, அதர்வ வேதத்தில் சமூகச் சடங்குகளும் நடைமுறை சமயமும் மிக விரிவாக விவரிக்கப்படுகின்றன.

வேதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்ட நூல்களில், கிருஹ்ய சூத்திரங்களும் புராணங்களும் சம்ஸ்காரங்கள் குறித்து நேரடியாகவும் விரிவாகவும் பேசுகின்றன. இல்லறத்துடன் தொடர்புடைய சடங்குகளைப் பேசுவதால், சம்ஸ்காரங்கள் குறித்த முதன்மை நூலாக  கிருஹ்ய சூத்திரங்களே கருதப்படுகின்றன.

எனினும் பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான மத்திய காலகட்டத்தில்தான், வாழ்வின் ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்புடைய சடங்குகளை நெறிப்படுத்தும் விதிமுறைகளின் தொகுப்பாக சம்ஸ்காரங்கள் முழுமையான உருவம் பெற்றன. நடைமுறை தர்மத்தை விவரிக்கும் தொகுப்பான நிபந்தன கிரந்தம், சடங்குகளையும் பழக்கவழக்கங்களையும் தொகுத்து அளிக்கும் மிக விரிவான, பல பகுதிகள் கொண்ட மிகப்பெரும் தொகை நூல். அதில் அனைத்து வகைப்பட்ட சடங்குகளும் அவற்றுக்குரிய வெவ்வேறு தலைப்புகளில் குறிப்பிடப்படுகின்றன.

ஆனால் அக்காலத்துக்கும் இக்காலத்துக்கும் மிகப்பெரிய கால வேறுபாடு உள்ளது. அதுதவிர, பிராந்திய வேற்றுமைகளும் உள்ளன. எனவே, அந்த அந்த பகுதியின் தேவைக்கு ஏற்ற வகையில் வெவ்வேறு தலைப்புகளும் விதிமுறைகளும் அவ்வப்போது ஒவ்வொரு கிரந்தத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கலாம்.ஆனால் ,அவையே, சடங்குகளின் தொகுப்பாக சம்ஸ்காரங்கள் எவ்வாறு வடிவம் பெற்றன என்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.

சடங்குகளை விவரிக்கும் இந்த உரைகளின் மிக முக்கியமான சிறப்பு, தற்போது நடைமுறையில் உள்ள பல பழக்க வழக்கங்கள்  மற்றும் அவற்றின் மூலம் குறித்து இவற்றில்  தகவல்கள் கிடைக்கின்றன என்பதுதான். அதிலும் குறிப்பாக, சமூகத்தின் தாழ்த்தப்பட்ட அடுக்குகளில் உள்ளவர்களின் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்கப்படும் பழக்கவழக்கங்கள் இந்த கிரந்தங்களில் சம்ஸ்காரங்களாய் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு ஒன்று சொல்லலாம். இந்தியாவெங்கும் உள்ள பல்வேறு சமூகங்கள் சிலவற்றில், சகோதரன் இல்லாத பெண்ணை யாரும் மணம் முடிப்பதில்லை. இந்தப் பழக்கம் இன்றும் உள்ளது. நிபந்தன கிரந்தங்களைக் கொண்டு நாம் இந்த பழக்கத்தின் மூலத்தை மகாபாரதத்தில் காண முடியும். அதற்கும் அப்பால், மூடநம்பிக்கை என்று நாம் கருதும் இந்தப் பழக்கத்தின் வேர்களை மகாபாரதத்துக்கு முந்தைய வேதங்களிலும் காரணம் கண்டு விளக்க முடியும். இந்தப் பழக்கவழக்கங்கள் நல்லவையா அல்லவையா என்ற கேள்வியை இப்போது பேசவில்லை. உள்ளபடியே இன்றுள்ள ஒரு பழக்கத்தைச் சுட்டி, அதன் நம்பிக்கையின் ஆதாரம் எங்கிருந்து வந்திருக்கக்கூடும் எனபதைச் சுட்டிக் காட்ட மட்டுமே செய்கிறேன்.

சம்ஸ்காரங்களின் எண்ணிக்கை

இர்ண்டாயிரம் ஆண்டுகாலமாக, எந்த எந்த சடங்குகள் சம்ஸ்காரங்களாக மதிக்கப்பட வேண்டும், எவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. கௌதமர் தன் தர்ம சூத்திரங்களில் நாற்பது சம்ஸ்காரங்களைப் பட்டியலிடுகிறார். அந்த நாற்பதோடு எட்டு ஆன்ம குணங்களையும் தன் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறார். பிற எழுத்தாளர்களும் நூல்களும் பன்னிரெண்டு முதல் நாற்பத்து இரண்டு சம்ஸ்காரங்களைக் குறிப்பிடுகின்றன. சில நூல்கள் எண்ணிக்கை கணக்கு சொல்லாமல், கௌதம தர்ம சூத்திரங்களில் உள்ள சம்ஸ்காரங்களில் பெரும்பாலானவற்றைக் குறிப்பிடுகின்றன.

இன்றைய சூழலில் கடைபிடிக்கப்படும் பதினாறு சம்ஸ்காரங்களின் பட்டியல் இது. சோடஷ சம்ஸ்காரங்கள் என்று இவை அழைக்கப்படுகின்றன. இதுவே முடிவான பட்டியல் என்று சொல்ல முடியாது. இந்தப் பட்டியலில் உள்ளவையும் சடங்கு, வழக்கம் என்ற அளவில் கடந்த இரு samskara2நூற்றாண்டுகளாக நசிந்து வருகின்றன. அதிலும் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்தப் பதினாறையும் கடைபிடிப்பவர்களின் எண்ணிக்கையும் வெகு வேகமாக குறைந்து வருவதைக் காண முடிகிறது. சொடஷ சம்ஸ்காரங்களைக் கைவிடுபவர்க்ளில் பலர் பிராமண வகுப்பைச் சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர். எனவே, இந்தப் பதினாறும் இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று யாராலும் உறுதியாகச் சொல்ல முடியாது, இவை வேறு வடிவில் கடைபிடிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. சாதி வேறுபாடின்றி அனைவர்க்கும் பொதுவான இந்த சம்ஸ்காரங்கள் இந்து சமூகத்தின் படிநிலையில் எங்கு இருப்பினும், அனைவருக்கும் பொதுவானவை.

பதினாறு சம்ஸ்காரங்கள் அல்லது சோடஷ சம்ஸ்காரங்கள்

கர்ப்பதானம்– கருவுறுதலுக்கு சமய அங்கீகாரம் அளிக்கும் சடங்கு இது. இந்தச் சடங்கு குறித்து வேறுபட்ட பல கருத்துகள் உண்டு. புதிதாய் மணமான தம்பதியர் முதல்முறை ஒருவரையொருவர் கூடுவதற்கு முன் சொல்ல வேண்டிய மந்திரங்களின் தொகுப்பு இவை என்று சிலர் கருதுகின்றனர், வேறு சிலர், இந்த மந்திரங்களைக் முதல் சம்போகத்தின்போது சொல்ல வேண்டும் என்று கூறுகின்றனர். இன்னும் சிலர், ஓவ்வொரு முறை கலவியில் ஈடுபடும்போதும் கணவன் இந்த மந்திரங்களை ஜபிக்க வேண்டும் என்று கருதுகின்றனர். ஹோமம் வளர்த்து ஆகுதி அளித்து இந்த மந்திரங்கள் பிரயோகிக்கப்படுவது வழக்கம் என்று சொல்பவர்களும் உண்டு. எது எப்படியானாலும், பாலுறவு அனுபவத்தை ஒரு புனிதச் செயலாக இந்தச் சடங்கு துவக்கி வைக்கிறது.

பும்சவனம் – கருவில் உள்ள குழந்தையை இவ்வுலகில் பிணைத்து, அதற்கு ஊட்டம் அளிக்கும் நோக்கத்தில், கர்ப்பம் தரித்த மூன்றாம் மாதத்தில் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. இந்தச் சடங்கில் கருத்தரித்த அன்னை, வேத மந்திரங்களைக் கேட்டபடியே ஒரு மணி பார்லியையும், இரு மணி கருப்பு எள்ளையும் சிறிது தயிரையும் உட்கொள்கிறாள். அரச மர வேரைக் குழைத்தும் அதிலிருந்து எடுக்கப்பட்ட சிறிது பாலையும்  வலது நாசிக்குள் பூசுவதும் உண்டு.

சீமந்தம்– கர்ப்ப காலத்தின் முக முக்கிய கட்டத்தில் தாயையும் கருவையும் பாதுகாக்கச் செய்யப்படும் சடங்கு இது. வழக்கமாக, கர்ப்ப காலத்தின் நான்காம் மாதத்தில் வளர்பிறை நாட்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சந்திரன் பிரவேசிக்கும்போது இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது. ஓம் என்ற பிரணவ மந்திரம், அல்லது பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் ஒலிக்க, ஒன்றாய்க் கட்டப்பட்ட மூன்று தர்ப்பை புற்களைக் கொண்டு அன்னையின் உச்சியில் வகிடெடுத்தல் இந்தச் சடங்கு.

ஜாடகர்மம்– குழந்தை பிறந்தபின் ஒன்றை நாட்களுக்குள் நிகழ்த்தப்படும் சடங்கு இது. பூஹ், புவஹ், ஸ்வஹ் என்ற வியாகரங்கள் பிறந்த குழந்தையின் நாவில், சிறிது பொன், நெய், மற்றும் தேன் கலந்த கலவையைத் தந்தை தடவுவது உண்டு.

நாமகரணம்– இது குழந்தைக்கு பெயர் சூட்டும் சடங்கு. பஞ்சாங்கத்தின் துணையோடு குழந்தைக்குப் பொருத்தமான பெயர் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதன்பின், அந்தப் பெயரை, தாயின் வலது செவியில், தந்தை மும்முறை கூறுகிறார். தாய், குழந்தையை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் பெயரை மும்முறை கூறுகிறார். குழந்தை பிறந்த நாள், அல்லது அது பிறந்த பத்தாம் அல்லது பன்னிரண்டாம் நாள் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம்.

நிஷ்க்ரமணம்– குழந்தை முதல் முறை வீட்டைவிட்டு வெளியே எடுத்துச் செல்லப்படும்போது செய்யப்படும் சடங்கு. இதை நான்காம் மாதம் செய்வது வழக்கம்.

அன்னப்பிரசனம்– குழந்தைக்கு ஆறு மாதம் ஆனபின் செய்யப்படும் சடங்கு இது. சமைக்கப்பட்ட உணவு, முதல் முறையாகக் குழந்தைக்கு ஊட்டப்படுகிறது. வேக வாய்த்த அரிசியை நெய்யிலும் தேனிலும் பிசைந்து தந்தை குழந்தைக்கு ஊட்டுக்கிறார்,  அதன்பின் தாயும் அதை உட்கொள்வார். தற்காலத்தில், குழந்தை ஒரு கோவிலுக்கோ திருத்தலத்துக்கோ அழைத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள அர்ச்சகர்களின் முன்னிலையில் இந்தச் சடங்கு நிறைவேற்றப்படுகிறது.

சூடாகரணம்– குழந்தையின் தலைமுடியை முதல்முறையாக மழிக்கும் சடங்கு இது. இதை, சௌலம் அல்லது முண்டனம் என்றும் சொல்வதுண்டு. குழந்தைக்கு ஒன்று, அல்லது மூன்று அல்லது ஐந்து வயது ஆனபின் இந்தச் சடங்கு செய்யப்படுகிறது. புனர்வசு நட்சத்திரத்தில் இந்தச் சடங்கு நடைபெறுவது வழக்கம். அதைவிட முக்கியமாக, இந்தச் சடங்கு நவமி, அல்லது அமாவாசையை அடுத்த ஒன்பதாம் நாளில் நடைபெறுகிறது.

கர்ணவேதனம்– காது குத்தும் சடங்கு. ஆண் குழந்தைகளின் வலது காதிலும், பெண் குழந்தைகளுக்கு இடது காதிலும் முதலில் துளை இடப்படுகிறது. தந்தை தன் மடிவில் குழந்தையை வைத்துக் கொண்டு காது குத்துவது வழக்கம். ஆனால், தற்போது, ஆசாரி ஒருவரைக் கொண்டு இது செய்யப்படுகிறது.

வித்யாரம்பம்– குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதானதும், அதன் கல்வியைத் துவக்கும் சடங்கு இது. குழந்தைக்கு அகரமுதலியின் முதல் சில எழுத்துக்கள் கற்றுத் தரப்படுகின்றன. உலோகத்தாலான ஒரு பாத்திரத்தில் அரிசி குவிக்கப்பட்டு, அதில் இந்த எழுத்துக்களையும் சில மந்திரங்களையும் உரக்கச் சொல்லிக்கொண்டே, குழந்தை எழுதுகிறது.

உபநயனம்–  யக்ஞோபவீதம் என்று அழைக்கப்படும் பூணூல் அணிவிக்கப்படும் சடங்கு இது. ஐந்து வயது அடைவதற்குமுன் ஆண் குழந்தைக்கு உபநயனம் செய்யப்படுகிறது. முடியிடப்பட்ட முப்புரி நூலொன்று இடம் வலமாக தோளில் அணிவிக்கப்படுகிறது. பிரம்மோபதேசம் என்று சொல்லப்படும் காயத்ரி மந்திரோபதேசமும் அளிக்கப்படுகிறது. உபநயனம் என்ற சொல்லின் வேரசைகள், உப என்பதன் பொருள் அருகில், நயனம்- கொணர்தல், என்ற பொருள் உள்ளவை. எனவே உபநயனம் என்றால் குழந்தையை குரு அல்லது ஆசிரியரிடம் அழைத்துச் சென்று முறையான கல்வி புகட்டுதல் என்று பொருள்படும். பிரம்மோபதேசம் முடிந்தபின் உபநயனம் அளிக்கப்படுகிறது. இது அவனுக்கு இன்னொரு கண் கொடுத்து, புதிய பிறவி அளிப்பதாக நம்பப்படுகிறது.

ப்ரைஸார்த்தம்– வேதக்கல்வியின் துவக்கம். இந்தச் சடங்குக்குப்பின் குழந்தைக்கு வேதங்களும் உபநிடதங்களும் கற்பிக்கப்படுகின்றன. குருகுலவாசமும் இனி துவங்குகிறது.

ருதுசுத்தி– பெண்ணின் முதல் மாதவிடாயின்போது நடத்தப்படும் சடங்கு. இது தொடர்பாக எண்ணற்ற சடங்குகளும் பழக்க வழக்கங்களும் உண்டு.

சமாவர்த்தனம்– பிரம்மச்சரிய ஆசிரமம் என்று சொல்லப்படும் மாணவ பருவம் நிறைவடைவதைக் குறிக்கும் சடங்கு இது.

விவாகம்– திருமணச் சடங்கு. ஆணும் பெண்ணும் மனதளவிலும் உடலளவிலும் கூடுவதற்கு சமய அந்தஸ்து கொடுக்கும் புனிதச் சடங்கு இது. வாழ்வில் வளர்ச்சி காண இது ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறது. திருமணம், புலன் இன்பங்களைத் துய்ப்பதற்கு மட்டமான ஏற்பாடு அல்ல. காம விழைவுக்கு நிறைவு காணும்போதே, இல்லற வாழ்வின் பொறுப்புகளையும் கடமைகளையும் சமபங்கு பகிர்ந்து கொள்ளவும் அறிவுருத்தப்படுகிறது. மிருக இச்சைகளைக் கட்டுப்படுத்தி உயர்வான நோக்கங்களையும் அனுபவ யதார்த்தங்களையும் நோக்கித் திருப்பி, நான்கு புருஷார்த்தங்கள், அல்லது இந்து சமூகத்தின் நான்கு இலட்சியங்களை அடைய விவாகமே முதல் படி. . சமூக ஒழுங்கு நலனைக் காக்கவும் திருமண அமைப்பு உதவுகிறது.

அந்த்யேஷ்டி– நீத்தார்களுக்காகச் செய்யப்படும் சடங்கு. மரணதின சடங்குகள் மட்டுமல்ல, இறந்தவர்களுக்கும் பிற தேவதைகளுக்கும் அளிக்கப்பட வேண்டிய ஸ்ராத்த்ங்கள் என்னென்ன என்று வெவ்வேறு சாஸ்திரங்களில் இந்த சம்ஸ்காரம் குறித்து விளக்கமாக விவரிக்கப்படுகின்றன.

ஆதார நூல்கள்

  • P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.
  • Rajbali Pandey. Hindu Samskaras, 2002, New Delhi: Motilal Banarsidass.
  • Prem P. Balla. Hindu Rites, Rituals, Customs and Traditions, 2009, New Delhi: Hindology Books.
  • H. W. Bodewitz. The Daily Evening and Morning Offering (Agnihotra) according to the Brahmanas, 1976, Leiden: E.J. Brill.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

முக்கடன்கள், ஐவகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள்

இந்து சமயங்கள் தனிமனிதனை முன்னிருத்துகின்றன என்பதையும், தனிமனித வளர்ச்சி மற்றும் சுதந்திரத்துக்கு அவை மிக அதிக முக்கியத்துவம் தருகின்றன என்பதையும் சென்ற மூன்று பகுதிகளில் எழுதியிருந்தேன்.

இந்தப் பகுதியிலும் இதே பொருளைத் தொடர்ந்து பேசப்போகிறோம்- ஆனால், இதில் இந்து சமயங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் உரிய மூன்று அடிப்படை கோட்பாடுகளைப் பார்க்கப் போகிறோம். ஒவ்வொரு மனிதனும் செலுத்த வேண்டிய முக்கடன்கள், நிறைவேற்ற வேண்டிய ஐந்து யாகங்கள், மேற்கொள்ள வேண்டிய தீர்த்த யாத்திரைகள்- கடன்கள், யாகங்கள், யாத்திரைகள்- இவையே அந்த மூன்று அடிப்படைக் கோட்பாடுகள்.

பல மதங்களிலும் யாத்திரை செல்லும் வழக்கம் உண்டு. ஆனால் எவற்றைப் புனிதமான இடங்களாகக் கருதி யாத்திரை செல்கிறார்கள் என்பதுதான் இந்து சமயங்களில் மேற்கொள்ளப்படும் யாத்திரையில் உள்ள தனித்தன்மை. பொதுவாக, பல மதங்களிலும் அந்த மதத்தைத் தோற்றுவித்தவரோடு தொடர்புடைய இடங்கள், அல்லது அந்த மதத்தில் பிரதான முக்கியத்துவம் கொண்ட வழிபாட்டுத் தலங்கள்தான் யாத்திரை செல்லும் இடங்களாக இருக்கும். ஆனால் இந்து சம்பிரதாயங்களில் பல்வகைப்பட்ட ஏராளமான இடங்கள் புனிதமாக கருதப்படுகின்றன. அது மட்டுமல்ல, நதிகள், மலைகள், விலங்குகள் என்று இயற்கையில் உள்ளவையும் புனிதமாக வழிபடப்படுகின்றன.

குறிப்பிட்ட சில புனித நதிகளில் நீராடுவது, தொலைவில் உள்ள மலைக்குச் சென்று கிரிவலம் வருவது போன்ற விஷயங்களும் இந்து மரபில் திருத்தல யாத்திரைகளாகக் கருதப்படுகின்றன என்பது விஷயம் தெரியாதவர்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமாக இருக்கும்.

Hinduism_Sculptures_Art_Temples_Worship

ருண த்ரயம்

ஒவ்வொரு மனிதனும் ரிஷிகளுக்கு, கடவுளர்களுக்கு, மூதாதையர்களுக்கு என்று மூன்று கடன்களைச் செலுத்தவேண்டிய கடமையோடு பிறக்கிறான் என்பது இந்து கலாசாரத்தின் பண்டைய நம்பிக்கைகளில் ஒன்று. வேதங்களின் அங்கமான தைத்திரிய சம்ஹிதை இப்படிச் சொல்கிறது-

“எது பிறக்கிறதோ, அது பிறக்கும்போது மூன்று கடன்களைக் கொண்டதாய் பிறக்கிறது, ரிஷிகளுக்கு பிரமச்சரியத்தையும், தெய்வங்களுக்கு யாகங்களையும் பித்ருக்களுக்கு வம்சத்தையும் அளித்தாக வேண்டும்”

(தைத்திரிய சம்ஹிதை, VI. 3. 10. 5). பண்பாட்டுக் கல்வி பெறுதல், யாகங்கள் செய்தல், குழந்தை பெற்றுக் கொள்ளுதல் முதலானவை ஆன்மீக கடமைகளாகக் கருதப்படுகின்றன.

இந்த நம்பிக்கை பரவலாக முக்கடன்கள் அல்லது ருண த்ரயங்கள் என்று அறியப்பட்டாலும், மகாபாரதம் நான்காம் கடன் என்று இன்னொன்றும் சொல்கிறது. அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து, அன்புடன் இருந்துதான் நாம் அவற்றுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் தீர்க்க முடியும் (மகாபாரதம், ஆதி பர்வம், 120. 17-20). மகாபாரதத்தின் அனுசாசன பர்வம்அதிதிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய கடன் என்று ஐந்தாவதாக ஒன்றும் சேர்க்கிறது (37.17)

இரண்டாம் கடனும் மூன்றாம் கடனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கல்வி பயின்று முடித்து குறிப்பிட்ட ஒரு வயதுக்கு வரும் மாணவன் யாகங்கள் செய்தாக வேண்டும், இந்த யாகங்களில் சிலவற்றில் அவனது மனைவியும் உடன் நிற்க வேண்டும். ரிஷிகளுக்கு பிரமச்சரியத்தை அளித்து, தெய்வங்களுக்கு யாகங்களை அளிக்கும் பருவத்தை எட்டும் மாணவன் திருமணம் செய்து கொள்வது அவசியமாகிறது. அதன்பின்னரே, மூன்றாம் கடனான, “பித்ருக்களுக்கு வம்சத்தையும் அளிப்பதை” அவன் நிறைவேற்ற முடியும். இந்து சம்பிரதாயங்களில் மூத்தோருக்கு மரியாதை அளிப்பது, முன்னோர்களுக்கு பிண்டம் அளிப்பது போன்றவையும் அவசியமாகக் கருதப்படுகின்றன. எனவே இவற்றைச் செய்பவனுக்கு நேரடி வாரிசு இருக்க வேண்டும்.

மேலும், இந்தக் மூன்று கடன்களுக்கு சமய நோக்கமற்ற வேறொரு காரணமும் இருக்கக்கூடும் – குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பைத் தன் தந்தையிடமிருந்து மகனோ மகளோ ஏற்றுக்கொள்ளும் வகையில், அவனது மகன் மற்றும் மகளுக்குப் பயிற்சி அளித்து உதவுவதற்காகவும் இந்த சம்பிரதாயங்கள் நடைமுறையில் இருக்கலாம்.

இரண்டாம் கடனும் மூன்றாம் கடனும் பொதுவாகச் சில விமரிசனங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆசிரம அமைப்பில் முதல் நிலையான மாணவ பருவத்திலிருந்து நான்காம் நிலையான சந்நியாச பருவத்துக்கு நேரடியாகச் செல்லும் சுதந்திரத்தை வலியுறுத்துபவர்களே இந்த விமரிசகர்கள். ஆசாரிய சங்கரரது நிலைப்பாடும் இதுவே. ஆனால், இதை மறுப்பவர்கள், முன்னோர்களுக்கும் தெய்வங்களுக்கும் உரிய கடனைச் செலுத்தாதவர்கள் மோட்சத்தைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்கின்றனர். எனவே மிக இளம் வயதில் துறவு மேற்கொள்ளும் பாலசந்நியாசம் சாஸ்திர விரோதமானது என்பது இவர்களது நிலைப்பாடு.

பஞ்சமகா யக்ஞங்கள்

இந்து சமய பண்பாட்டின்படி தொல்காலம் தொட்டே தினமும் கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லப்படும் ஐந்து கடமைகளும் பஞ்சமகா யக்ஞங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் யாகங்கள் என்று சொல்ல முடியாது, இவை அனைத்தும் அக்னி வளர்த்து ஆகுதி அளிப்பவை அல்ல. ஆனாலும் அவை யக்ஞங்கள் என்று அழைக்கப்பட காரணம், இந்து மதத்தைச் சார்ந்தவனின் வாழ்வில் அவற்றுக்கு அவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதுதான்.

இவை முறையே

  1. பிரம்ம யக்ஞம் – பிரம்மத்துக்கு அளிக்கப்படும் யாகம்
  2. தேவ யக்ஞம் – தெய்வங்களுக்கு அளிக்கப்படும் யாகம்
  3. பூத யக்ஞம் – அனைத்து உயிர்களுக்கும் அளிக்கப்படும் யாகம்,
  4. பித்ரு யக்ஞம் – மூதாதையர்களுக்கு அளிக்கப்படும் யாகம்,
  5. மானுஷ்ய யக்ஞம் – மனிதர்களுக்கு அளிக்கப்படும் யாகம்

என்று ஐவகைப்படும்.

வேதங்கள் முதல் நவீன சாஸ்திரங்கள் வரை பஞ்சமகா யக்ஞங்கள் பேசப்படுகின்றன. ஒவ்வொரு இந்துவும் கட்டாயம் செய்ய வேண்டிய நாற்பது சம்ஸ்காரங்களில் கௌதம ரிஷியும் மனுவும் இவற்றையும் சேர்த்துக் கொண்டிருப்பது பஞ்ச மகா யக்ஞங்களின் தாக்கத்தை உணர்த்துகிறது.

பிற யாகங்களிலிருந்து தினமும் செய்யப்பட வேண்டிய இந்த பஞ்ச மகாயாகங்கள் எப்படி வேறுபடுகின்றன என்றால், இந்த ஐந்தையும் செய்வதில் எந்த பலனும் இல்லை, மிகவும் துவக்க நிலையில் உள்ள உயிர் முதல் சக மனிதர்கள், மூதாதையர்கள், தெய்வங்கள், பரப்பிரம்மம் என்று உலகில் உள்ள அனைத்தையும் நேசிப்பதன் வெளிப்பாடாகவே இவை அமைந்திருக்கின்றன என்பதுதான்.

பிரம்ம யக்ஞம் என்பது, சமய நூல்களைக் கற்பது, பிறருக்குக் கற்றுத் தருவது, புனித மந்திரங்களைச் சொல்வது போன்ற சமயச் சடங்குகள். தர்ப்பணமும் ஒரு பிரம்ம யக்ஞம் என்று சிலர் சொல்கின்றனர்.

தேவ யக்ஞம் என்பது பிரம்மத்தை பல்வேறு தெய்வ வடிவில் வழிபடுவதும், ஹோமம் வளர்த்து வழிபடுவதும் என்று சொல்லப்படுகிறது.

பூத யக்ஞம் என்பது நாய்கள், காகங்கள், எறும்புகள், பூச்சிகள் முதலானவற்றோடு உணவைப் பகிர்ந்து கொள்ளுதல்.

பித்ரு யக்ஞம் என்பது மறைந்தவர்களுக்கு ஆகுதி அளித்தல். தர்ப்பணம், பிண்ட தானம், ஸ்ரார்த்தம் முதலானவை பித்ரு யக்ஞங்கள்.

மனுஷ்ய யக்ஞம் என்பது அதிதிகளை வரவேற்றல். வீட்டைவிட்டு வெளியே சென்று அதிதிகளை வரவேற்று, அவர்களுக்கு அன்னம், தண்ணீர். ஆசனம் முதலியவை அளித்து கௌரவித்து, ஓய்வெடுக்கவும் உறங்கவும் தக்க இடம் கொடுத்து, அவர்களை அருகில் நின்று உபசரித்து, அவர்களோடு சற்று தொலைவு வரை சென்று வழியனுப்புவது என்று மனுஷ்ய யக்ஞம் விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்து சமயத்தில் தீர்த்த யாத்திரைகள்

பக்தியும் சிரத்தையும் உள்ள ஒருவன் தன் சமயத்தில் விதிக்கப்பட்டுள்ள புனித தலமொன்றுக்கு மேற்கொள்ளும் பயணம் யாத்திரை என்று சொல்லப்படுகிறது. உலகில் அனைத்து சமயங்களிலும் உள்ளவர்கள் புனிதம் என்று கருதப்படும் இடங்களுக்கு தங்கள் வாழ்நாளில் பல யாத்திரைகள் மேற்கொள்கின்றனர். கிருத்தவர்கள் ஜெருசலேமுக்கும் பௌத்தர்கள் கயைக்கும் செல்ல வேண்டும் என்று பல நியதிகளும் உண்டு. இதில் இந்து சமயமும் விலக்கல்ல. ஆனால் இங்கு என்ன விசேஷம் என்றால் இந்து சமயங்களில் ஓர் இந்து சென்று வர வேண்டிய திருத்தலங்கள் அல்லது யாத்திரைத் தளங்கள் ஏராளம் உண்டு. இவற்றில் பல எந்த ஒரு தெய்வம் அல்லது புனிதருடனும் தொடர்பு கொண்டதாக இல்லாமல் இருக்கலாம். ஒவ்வொரு தலத்துக்கும் தனக்கே உரிய தெய்வங்கள், தொல்கதைகள் இருப்பதே வழக்கு. இத்தகைய யாத்திரைகள் தீர்த்த யாத்திரைகள் என்று அழைக்கப்படுகின்றன. தீர்த்தம் என்பது திருத்தலம் என்றும் பொருட்படும்.

தீர்த்த யாத்திரையின் வரலாறும் பொருளும்

சன்னிதிகள், கோவில்கள், இறைஞானிகளின் அவதார தலங்கள் போன்றவற்றைத் தவிர மலைகள், வனங்கள், நதிகளும் இந்து சமயத்தில் புனிதமாகக் கருதப்படுகின்றன. எனவே அவையும் திருத்தலங்களாக வழிபடப்படுகின்றன.

மிகவும் பழமை வாய்ந்த வேதங்கள் தொட்டு பல்வேறு புனித தலங்கள், நதிகள், வனங்கள் மற்றும் மலைகள் இந்து சமய நூல்களில் விவரிக்கப்படுகின்றன. தீர்த்தம் என்று சொன்னால், புனிதமான ஒரு நதி அல்லது கடல் அல்லது குளம் என்று நீர்நிலையை ஒட்டிய திருத்தலம் என்று பொருள்படும். க்ஷேத்ரம் வேறு தீர்த்தம் வேறு. க்ஷேத்ராடனம் என்பது நீர்நிலையை ஒட்டியதாக இல்லாத வேறொரு திருத்தலத்துக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரை. தீர்த்தங்களும் க்ஷேத்ரங்களும் வேத காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான தர்ம சாஸ்திரங்களில் விவரிக்கப்படுகின்றன.

ரிக் வேதத்தில் புனித நதிகள் குறிப்பிடப்படுகின்றன. உடலின் நோய்கள் மட்டுமல்லாமல் பாபங்களையும் அவை சுத்திகரிப்பதாய் போற்றப்படுகின்றன. சரஸ்வதி, சரயு, சிந்து என்ற மூன்று நதிகளும் தெய்வீகத் தன்மை கொண்ட தாய்கள் என்று வேதங்களில் வழிபடப்படுகின்றன.

தெய்வங்கள் அனைத்தும் நீர்நிலைகளில் இருப்பதாக தைத்திரிய சம்ஹிதை குறிப்பிடுகிறது. புண்ணியங்களை மட்டுமல்லாமல் மகிழ்ச்சியையும் நதிகள் அளிக்கின்றன என்று அதர்வ வேதம் சொல்கிறது.

நேரடியாக தீர்த்தங்களையும் க்ஷேத்ரங்களையும் பேசாத போதும், தர்ம சாஸ்திரங்கள் மலைகள், வனங்கள், நதிகளைப் புனிதம் என்று போற்றுகின்றன. கௌதம, பௌதாயன, வசிஷ்ட தர்ம சாஸ்திரங்கள் எல்லா மலைகள், நதிகள், குளங்கள், ஆசிரமங்கள், கோசாலைகள், கோயில்களும் பாபத்தைப் போக்கும் என்று சொல்கின்றன. ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், பிரம்மாண்ட புராணம் இவ்விரண்டும் புனித மலைகள் என்று நீண்ட ஒரு பட்டியலிடுகின்றன. வேதங்களும் புராணங்களும் புனித வனங்களைக் குறிப்பிடுகின்றன. இவை தவிர, தீர்த்தங்களையும் க்ஷேத்ரங்களையும் பேசும் புராண இலக்கியமும் அதன் பின்வந்த இலக்கியங்களும் திவ்யதேசங்கள், கோவில்கள் என்று யாத்திரை மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தலங்கள் எவை, அந்த அளவு பொருட்படுத்தப்பட வேண்டாதவை எவை என்று விரிவாக விவாதிக்கின்றன.

மேற்கண்ட விஷயங்களைப் பார்க்கும்போது, பண்டைக்காலம் தொட்டே இந்துக்கள் தீர்த்த யாத்திரைகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர் என்பது தெளிவாகிறது. வாழ்நாளில் எவ்வளவு தீர்த்த யாத்திரை மேற்கொள்ள இயலுமோ அவ்வளவு தலங்களைத் தேர்ந்தெடுத்து பயணிக்கும்படி ஒவ்வொரு இந்துவுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. சாதி, தேசம் வர்ண வேறுபாடு கடந்து அனைவரும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ள முடியும்.

பல சாஸ்திரங்கள் தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை விவரிக்கின்றன. தனியாகவோ அல்லது குடும்பத்தாருடனோ அல்லது நண்பர்களுடனோ யாத்திரை மேற்கொள்பவர்கள், பயணம் கிளம்புவதற்கு முந்தைய தினம் உண்ணா நோன்பிருந்து, புலன் நாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் நீண்ட நேரம் கவனம் செலுத்தி மனதை நெறிபடுத்த வேண்டும். இவையெல்லாம் யாத்திரையின் அனைத்து பயன்களையும் பெற விரும்புபவர்களுக்குச் சொல்லப்படுபவை. புதிய ஒரு அந்நிய இடத்தில் எதிர்கொள்ள வேண்டிய பல்வகைப்பட்ட சூழ்நிலைகளை சமநிலை குலையாமல் அணுக உதவுவதை இந்த வழிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருக்கக்கூடும்.

யாத்திரைத் தலத்தை அடைந்ததும் பின்வரும் செயல்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது- ஸ்நானம் அல்லது குளியல், ஜபம் அல்லது நாமசங்கீர்த்தனம் – உபதேசம் பெற்ற மந்திரத்தையோ இஷ்டதெய்வத்தின் பெயரையோ ஜெபித்தல், ஹோமம் அல்லது அக்னிக்கு ஆகுதியளித்தல், முண்டனம் அல்லது மொட்டை போடுதல், ஸ்ராத்தம் அல்லது மறைந்த மூதாதையர் மற்றும் நண்பர்களுக்கு வழிபாடு செலுத்தல், தானம் அல்லது ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவி செய்தல்.

இவற்றுள் மொட்டை போட்டுக் கொள்வதையும் மூதாதையர் வழிபாட்டையும் தன்விருப்பத்துக்கு விட்டுவிடலாம் என்று சில சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன. சில சாஸ்திரங்கள் ஹோமம் பற்றி பேசுவதேயில்லை. நவீன யாத்திரிகர்கள், மரணத்தைத் தவிர பிற சமயங்களில் இந்த மூன்றையும் தவிர்த்து விடுகின்றனர்.

யாத்திரை முடிந்து வீடு திரும்பும்வரை ஒருவன் தன் எண்ணம், செயல், வாக்கு முதலானவற்றில் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஜெபங்களை முறை தவறாமல் தொடர வேண்டும். கோவில்களில் வழிபட்ட அத்தனை சாதுக்களையும் தெய்வங்களையும் அங்கு அறிந்துகொண்ட தலபுராணங்களையும் இறை உரைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

தீர்த்த யாத்திரையின் நோக்கம்

பாபங்களும் தீவினைகளும் நீங்கும் என்பதும், புண்ணியம் சேரும் என்பதுமே தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கான மிகப்பெரும் காரணமாக இருக்கிறது. உடலையும் உள்ளத்தையும் சுத்திகரித்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியடைவது தீர்த்த யாத்திரை மேற்கொள்வதற்கான அடுத்த காரணமாக இருக்கிறது.

பண்டைக்காலங்களில் மிகவும் மோசமாகப் பிளவுபட்டிருந்த அரசுகளாக இருந்த தேசத்தை ஒன்றுபட்ட தேசமாகக் காண உதவிய பல காரணங்களில் தீர்த்தயாத்திரைகளும் ஒன்றாக இருந்திருக்கலாம். நவீன காலத்திலும்கூட வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போன்ற பிழைபுரிதல்களைக் களைய உதவும் கிரியா ஊக்கிகளாக இவைச் செயல்படுகின்றன.

இயல்பாகவே நாம் தீர்த்த யாத்திரையில் பல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். தங்களையே மையமாகக் கொண்ட குறுகிய வட்டத்துக்கு வெளியே செல்ல, குறுங்குழு மனப்பான்மையைக் கடந்து நோக்க உதவும் தூண்டுதலை தீர்த்த யாத்திரைகள் அளிக்கின்றன. தங்களுக்குத் தெரிந்ததைக் காட்டிலும் பல உண்மைகள் உலகில் இருக்கின்றன என்ற விரிவான பார்வை கிட்டுகிறது. நடைமுறை அனுபவத்தையொட்டி தம் குழந்தைகளுக்கு அற மதிப்பீடுகளையும் ஆன்மீக விழுமியங்களையும் கற்றுக் கொடுக்க பெற்றோர்களுக்கும் தீர்த்த யாத்திரைகள் உதவுகின்றன.

புண்ணியம் பெற மட்டுமல்ல, பிராயசித்தமாகவும் தீர்த்த யாத்திரைகளை சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. பழைய காலத்தில், பாரத் பரிகிரமா என்ற பெயரில் இந்தியாவெங்கும் விரவியுள்ள எண்ணற்ற புண்ணிய தலங்களுக்கு பாதயாத்திரை செல்வது பொதுவான வழக்கமாக இருந்திருக்கிறது. சரியான உணர்வோடும் பக்தியுணர்வோடும் தீர்த்த யாத்திரை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எப்போதும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. மந்திரங்கள், தீர்த்தங்கள், குரு, தெய்வம், ஜோதிடன் மருத்துவன் ஆகிய விஷயங்களை ஒருவன் எந்த மனநிலையில் அணுகுகிறானோ அதுவே வெற்றியைத் தீர்மானிக்கிறது என்று ஒரு பழமொழியும் இந்தியாவில் உண்டு.

  1. .


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற திருத்தலங்களில் பொதுப் பட்டியல் இது

திருத்தலம்மூலவர்இடம்
சோம்நாத்சோம்நாத் மகாதேவ்குஜராத்
ஸ்ரீசைலம்மல்லிகார்ஜுனர்ஆந்திர பிரதேசம்
உஜ்ஜையின்மகாகாலேஷ்வர்மத்திய பிரதேசம்
ஓம்காரேஷ்வர்ஓம்காரேஷ்வர்மத்திய பிரதேசம்
கேதர்நாத்கேதாரேஷ்வர்உத்தர்கண்ட்
பிரஹ்ம்பூர்பீமேஷவ்ர்குஜராத்
வாரணாசிவிஸ்வநாதர்உத்தர பிரதேசம்
நாசிக்த்ரயம்பகேஸ்வரர்மகாராஷ்டிரா
பார்லிஸ்ரீவைத்யநாதர்ஆந்திர பிரதேசம்
துவாரகாஸ்ரீகிருஷ்ணர்குஜராத்
துவாரகாஸ்ரீநாகேசவரர்குஜராத்
ராமேஸ்வரம்இராமநாதர்தமிழ் நாடு
எல்லோராகுஷ்மேஷ்வர்மகாராஷ்டிரா
சிதம்பரம்நடராஜர்தமிழ் நாடு
திருச்சிராப்பள்ளிஜம்புலிங்கேஸ்வரர்தமிழ் நாடு
திருவண்ணாமலைஅருணாசலேஸ்வரர்தமிழ் நாடு
ஸ்ரீ காலஹஸ்திகாளத்தீஸ்வரர்ஆந்திர பிரதேசம்
காஞ்சிபுரம்ஏகாம்பரேஸ்வரர்தமிழ் நாடு
அயோத்யாஸ்ரீராமர்உத்தர பிரதேசம்
ஹரித்வார்ஸ்ரீகங்கா மாஉத்தரகண்ட்
மதுராஸ்ரீகிருஷ்ணர்உத்தர பிரதேசம்
அமர்நாத்அமரேஸ்வரர்காஷ்மீர்
புவனேஸ்வர்லிங்கராஜர்ஒரிசா
தஞ்சாவூர்பிருஹதேச்வரர்தமிழ் நாடு
கும்பகோணம்கும்பேஸ்வரர்தமிழ் நாடு
சென்னைஸ்ரீ பார்த்தசாரதிதமிழ் நாடு
சென்னைகபாலீஸ்வரர்தமிழ் நாடு
திருநெல்வேலிநெல்லையப்பர்தமிழ் நாடு
பிள்ளையார்பட்டிபிள்ளையார்தமிழ் நாடு
திருச்சிஉச்சிப்பிள்ளையார், தாயுமானவர்தமிழ் நாடு
திருவையாறுபஞ்சநதீஸ்வரர்தமிழ் நாடு
திருவாரூர்தியாகராஜர்தமிழ் நாடு
காஞ்சிபுரம்காமாஷி அம்மன்தமிழ் நாடு
திருநாராயணபுரம் (மேலக்கோட்டை)திருநாராயணர்தமிழ் நாடு
சோளிங்கர்யோக நரசிம்மசுவாமிதமிழ் நாடு
கன்னியாகுமரிபகவதி அம்மன்தமிழ் நாடு
விஜயவாடாகனகதுர்காஆந்திர பிரதேசம்
கிர்னார்தத்தாத்ரேயர்குஜராத்
கிர்னார்கோரக்நாதர்குஜராத்
கிர்னார்அம்பா தேவிகுஜராத்
கோலாப்பூர்மகாலட்சுமிமகாராஷ்டிரா
நைமிசாரணியம்லலிதா தேவிஉத்தர பிரதேசம்
அமர்கண்டக்நர்மதா தேவிசத்தீஸ்கர்
விஜயநகர்விருபாகஷர்கர்நாடகா
சித்திரகூடம்ஸ்ரீராமர்மத்திய பிரதேசம்
பிருந்தாவனம்ஸ்ரீகிருஷ்ணர்உத்தர பிரதேசம்
குருக்ஷேத்ரம்ஸ்தானேஷ்வர் மகாதேவ்ஹரியானா
அலகாபாத்/ பிரயாகைபேணி மாதவ்உத்தர பிரதேசம்
கயைகதாதரர்பீகார்
பூரிஸ்ரீ ஜகன்னாதர்ஒரிசா
மதுரைமீனாட்சியம்மன்தமிழ்நாடு
பந்தர்பூர்ஸ்ரீ விட்டலர்மகாராஷ்டிரா
சிருங்கேரிசாரதா தேவிகர்நாடகா
ஸ்ரீரங்கம்ஸ்ரீ ரங்கநாதர்தமிழ் நாடு
பத்ரிநாத்பத்ரிநாராயணர்உத்தராகண்ட்
புஷ்கர்ஸ்ரீ பிரம்மர்ராஜஸ்தான்
பத்ராசலம்ஸ்ரீராமர்ஆந்திரபிரதேசம்
திருப்பதிஸ்ரீ வேங்கடேஸ்வரர்ஆந்திரபிரதேசம்
குவஹாத்திகாமாக்ஷிஅசாம்
திருவனந்தபுரம்அனந்தபத்மநாபன்கேரளம்
கொல்கத்தாமகாகாளிமேற்கு வங்கம்
நாத் த்வாராஸ்ரீநாதர்ராஜஸ்தான்
மவுண்ட் அபுகாளிகா தேவிராஜஸ்தான்
மிதிலாசீதா தேவிபீகார்
ஆலந்திஞானேஸ்வர்மகாராஷ்டிரா
குருவாயூர்ஸ்ரீகிருஷ்ணர்கேரளம்
உடுப்பிஸ்ரீகிருஷ்ணர்கேரளம்
பழனிமுருகன்தமிழ் நாடு
சுவாமிமலைசுவாமிநாதன்தமிழ் நாடு
மன்னார்குடிராஜகோபால சுவாமிதமிழ் நாடு
சுசீந்திரம்ஆஞ்சநேயர்தமிழ் நாடு
சபரிமலைஐயப்பன்கேரளம்
மும்பைமும்பா தேவிமகாராஷ்டிரா
மும்பைசித்தி விநாயகர்மகாராஷ்டிரா
திருச்சூர்வடக்கநாதர்கேரளம்
கோட்டயம்ஏட்டுமானூர்கேரளம்
எர்ணாகுளம்பூர்ணத்ரயிஷர்கேரளம்
வேளூர்மகாதேவர்கேரளம்
கொல்லூர்மூகாம்பிகைகர்நாடகா
பங்களூருகவி கங்காதேச்வர்கர்நாடகா
அகோபிலம்ஸ்ரீ நரசிம்மர்ஆந்திர பிரதேசம்
அன்னவரம்சத்யநாராயனர்ஆந்திர பிரதேசம்
அனகபள்ளிகோடிலிங்கேஸ்வரர்ஆந்திர பிரதேசம்
விசாகபட்டினம்வராகலட்சுமி நரசிம்மச்வாமிஆந்திர பிரதேசம்
கொலாபாபல்லால விநாயகர்மகாராஷ்டிரம்
புனேபீமஷங்கர்மகாராஷ்டிரம்
ராம்டெக், நாக்பூர்ஸ்ரீ ராமர்மகாராஷ்டிரம்
ஜெய்பூர்கோவிந்த தேவ்ஜிராஜஸ்தான்
உதய்பூர்ஏகலிங்நாத்ராஜஸ்தான்
அம்ரிட்ஸர்லட்சுமிநாராயணர்பஞ்சாப்
பாட்டியாலாகாளி தேவிபஞ்சாப்
ஜம்முவைஷ்ணோதேவிஜம்மு காஷ்மீர்
ஜம்முரகுநாத்ஜிஜம்மு காஷ்மீர்
காங்க்ராஜ்வாலாமுகிஜம்மு காஷ்மீர்
ருத்ரபிரயாகைதிரியுக்நாராயண்உத்தரகண்ட் 

பாரத புனித நதிகள்

நதிமூலம்
கங்கைகங்கோத்ரிi
யமுனையமுனோத்ரி
சரஸ்வதிஷிவாலிக் மலைத்தொடர்கள், இமாலயம்
சிந்துகைலாஷ், இமாலயம்
கோதாவரிபிரம்மகிரி, திரயம்பகேச்வரர்
நர்மதைஅமர்கண்டக்
காவிரிதலைக்காவிரி, குடகு
தாமிரபரணி / பொருணைஅகஸ்தியர் கூடம், தமிழ்நாடு
தபதிசதாபூர் மலைத்தொடர்கள், விந்திய மலைகள்
கிருஷ்ணாசாகிய மலைகள், மகாபலேஷ்வர்
மகாநதி,சிகாவா, ராய்பூர், மத்திய பிரதேசம்
சரயுகுமான் மலைகள்
பிரம்மபுத்ராமானசரோவர், திபெத்

 

 

முக்கடன்கள், ஐவ்வகை வேள்விகள் மற்றும் தீர்த்த யாத்திரைகள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட நூல்களைப் படித்துத் பயன் பெறலாம்-

  1. P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.
  2. Kashinatha Shastri Agase (Ed.) Taittirya Samhita, 9 vols, 1914, Pune: Anandasrama Sanskrit Series.
  3. S. Sukthankar, et.al. (Eds.) Mahabharata, 1959, Pune: Bhandarkar Oriental Research Institute


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்து சமயங்களில் பாப புண்ணியங்கள்

இந்து சமயம் ஓர் அறிமுகம்- பாகம் 3

ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய லட்சிய குணங்கள் குறித்து இந்து சமயங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றி சென்ற கட்டுரையில் எழுதியிருந்தேன்.

இந்து சமயங்கள் நடைமுறை யதார்த்தத்தைக் கணக்கில் கொள்கின்றன. எல்லாருமே எப்போதுமே இந்த ஆன்ம குணங்கள் அத்தனையும் உள்ளவர்களாக இருக்க முடியாது என்பதை இந்த சமயங்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றன. புருஷார்த்தங்கள் பற்றி பின்னர் பேசும்போதுதான் இது அத்தனையையும் விரிவாக விவரிக்கும் வரைபடம் ஒன்றை நாம் பார்க்கப் போகிறோம்.

அனைவரும் துன்பமின்றி வாழவும், எல்லாரும் வீடுபேறு பெறவும் வழிகாட்டுவதுதான் இவற்றின் அடிப்படை நோக்கம். எனவே, அனைவருக்கும் அவசியமான ஆன்ம குணங்கள் என்று சொன்னாலும் இந்த லட்சிய குணங்கள் இல்லாதவர்களை இந்து சமயங்கள் பாபிகள் என்று கருதுவதில்லை. அதற்காக இந்து சமயங்களில் பாபம் என்ற விஷயமே இல்லை என்று அர்த்தமா? இந்து சமயங்களும் பிற சமயங்களும் பாபத்தை எப்படி எடுத்துக் கொள்கின்றன என்பதில் நிறைய ஒற்றுமை வேற்றுமைகள் இருக்கின்றன. முதல் பகுதியில் எழுதியது போல், இந்து சமயங்களின் மையத்தில் மனிதன்தான் இருக்கிறான். அதனால்தான் பாப புண்ணியங்கள் மனித வாழ்வைச் சரியான பாதையில் கொண்டு செல்லவும் அவனுக்கு வழி காட்டவும் தகுந்த வகையில் பேசப்படுகின்றன. இறைநெறி தவறுவதோ அல்லது ஏதோ ஒரு தத்துவக் கோட்பாட்டுக்கு எதிராக நடந்து கொள்வதோ பாபம் என்று நினைப்பதில்லை.

பாப புண்ணியங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்தே இருக்கின்றன, ஆனால் ஒன்றுடனொன்று முரண்பட்டும் நிற்கின்றன. இந்து சமயங்கள் இதை எப்படி புரிந்து கொள்கின்றன என்று பார்ப்பதற்கு முன் கன்மம், மறுபிறவி என்ற இரண்டு நம்பிக்கைகளைப் பற்றியும் கொஞ்சமாவது தெரிந்து வைத்துக் கொள்வது உதவியாக இருக்கும். பின்னால் வேறொரு பகுதியில் இந்த இரண்டைப் பற்றியும் இன்னும் விவரமாகப் பார்க்கலாம், இங்கே ஒரு சிறிய அறிமுகம் மட்டும் தருகிறேன்.

கர்மா என்றால் செயல். ஒவ்வொரு செயலுக்கு ஏதோ சில விளைவுகள் இருக்கும். எவனொருவன் செய்கிறானோ, அவன் தன் ஒவ்வொரு செயலின் விளைவுகளுக்கும் உரியவன் ஆகிறான். அந்த விளைவு நன்மை செய்யலாம் தீமை செய்யலாம்; மகிழ்ச்சி அளிக்கலாம், துன்பம் அளிக்கலாம், அல்லது அவனுக்கு நல்லதாக இருக்கலாம், கெட்டதாக இருக்கலாம்.

இனி மறுபிறவி- ஆன்மாவுக்கு அழிவில்லை என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அது ஓர் உடலை விட்டு இன்னோர் உடலுக்குப் போவதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இந்த இரண்டும் எப்படி நடக்கின்றன என்பது பற்றி பொதுவாக பலரும் நினைத்துக் கொண்டிருப்பது சரியல்ல. நான் ஒரு பசுவுக்கு நல்லது செய்தால், அந்தப் பசு அடுத்த ஜென்மத்தில் என்னோடு பிறந்து எனக்கு பதிலுதவி செய்யும் என்று அர்த்தமல்ல. அல்லது, ஒரு புலியை முகத்தில் அடித்தால், அதே புலி வேறெதற்கு உண்டோ இல்லையோ, இதற்காகவே இன்னொரு ஜென்மம் எடுத்து வந்து என்னை முகத்தில் அறையும் என்பது போன்ற நம்பிக்கைகள் பரவலாக இருக்கின்றன. இவை அனைத்தும் தவறு.

நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது இதுதான் – அந்த அந்த சமயத்தில் கர்மவினையாக முன்வந்து நிற்பது நம் செயல்களால் பாதிப்படைந்த அல்லது நன்மை பெற்ற தனி நபர்கள் அல்ல. நாம் யாருக்கு என்ன செய்தோம், நமக்கு யார் என்ன செய்தார்கள் என்பதில் உள்ள ஆட்களை மறந்து விடலாம். உண்மையில் நாம் செய்த வினைகளின் பலன்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாகக் குவிந்து கிடக்கின்றன, அவை அவ்வப்போது தத்தம் வேலையைக் காட்டுகின்றன.

05guru6எந்த ஒரு கர்மா செய்தாலும் பிறருக்கோ அல்லது பொதுவில் பலருக்கும் உரிய ஒன்றுக்கோ எதிரான அத்துமீறலாகி, அச்செயலின் விளைவுகள் அவர்களை பாதிக்கும்போது, அந்த வேலையைச் செய்தவனுக்கு மோசமான எதிர்விளைவுகள் ஏற்படுகின்றன. இவற்றை இந்து சமயங்கள் பாபம் என்று அழைக்கின்றன. எப்படிப்பட்ட செயல்கள் இவை என்று பல நூற்றாண்டுகளாக கவனித்து, சாஸ்திரங்கள் அவற்றைத் தொகுத்து வந்திருக்கின்றன.

ஆனால் இந்திய துணைக்கண்டம் மிகப் பெரியது, இங்கு பல பிரதேசங்களும் அவற்றுக்கு உரிய தனித்தனி பழக்க வழக்கங்களும் இருக்கின்றன என்பதால் இது போன்ற சாஸ்திர வகைமைப்பாடுகள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. அது அத்தனையையும் பேச தனியாக ஒரு புத்தகமே எழுத வேண்டும். இங்கே இருப்பது ஒரு சிறிய அறிமுகம்தான். இவ்வளவுதான் விஷயம் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அத்தனை விஷயங்களையும் தொடவுமில்லை, அவ்வளவு விரிவாக பேசவுமில்லை.

புண்ணியம்

புண்ணியம் என்ற சொல்லுக்கு, “புனிதமானது, மங்களமானது, நல்லது, ஒழுக்கமானது,” என்று பல அர்த்தம் உண்டு. எண்ணம், சொல், செயல் என்று பலவகைகளில் செய்யப்பட்ட நல்வினைகளையும் புண்ணியம் என்று சொல்வார்கள். செயலை மட்டுமல்லாமல் அவற்றின் விளைவுகள் அனைத்தையும் புண்ணியம் என்றும் கொள்வதுண்டு. லௌகீக வாழ்க்கையிலிருந்து நம்மை உயர்த்தி நமக்கு நன்மை செய்யும் செயல்கள் அத்தனையும் புண்ணியம்தான். தான தருமம், பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என்று உயர்வாய் நினைப்பது, பிறருக்கு ஆறுதலாய் நாலு வார்த்தை பேசுவது, இது போன்ற செயல்களின் விளைவுகள் புண்ணியம் என்று சொல்லப்படுகின்றன. அதே போல் பிரார்த்தனை செய்வது, தீர்த்த யாத்திரை செல்வது, ஏன், தியானம் செய்வதும்கூட் புண்ணிய காரியம்தான். இது ஒவ்வொன்றுமே புண்ணியம்தான்.

நம் எண்ணம், பேச்சு, செயல் எல்லாம் புண்ணியம் பெற்றுத்தருவதாக இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை இந்து சமயங்கள் அளிக்கின்றன. இதனால் நல்ல இணக்கமான ஒரு சூழல் உருவாகிறது என்பது மட்டுமல்ல. இந்த நல்வினைகளின் பயனாய் நிறைய புண்ணியம் சேர்த்துக் கொண்டு இப்பிறவியின் பின்னாட்களிலோ அல்லது மறுபிறப்பிலோ அவற்றுக்கான நற்பயன்களை அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கைக்கும் இடம் கொடுக்கின்றன. புண்ணிய எண்ணங்களும் செயல்களும் லௌகீக வாழ்விலிருந்து உயர்த்தி நம்மை மோட்சத்துக்கு இட்டுச் செல்வது மட்டுமல்லாமல், உலக உயிர்கள் எல்லாமே நலமாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பவும் உதவுகின்றன.

பிற சமயங்கள் நம்புவது போல், புண்ணியச் செயல்களின் பலன் இறப்புக்குப்பின் சொர்க்கத்தில் போய்ச் சேர்ப்பது மட்டும்தான் என்று இந்து மரபுகள் பிரச்சாரம் செய்வதில்லை. இந்து சாஸ்திரங்களில் சொர்க்கத்தைப் பற்றி பேசப்படுகிறது என்பது உண்மைதான், ஆனால் புண்ணியச் செயல்களின் பல நன்மைகளுள் ஒன்று மட்டும்தான் சொர்க்கம் சென்று சேர்வது. சொர்க்கம் மட்டும்தான் எல்லாம் என்று சொல்வதில்லை.

புண்ணியம் பற்றி பேசும்போது அங்கு சமய உணர்வுகள் வெளிப்படுவது உண்மைதான் ஆனால் மனிதனின் ஒட்டுமொத்த அற, ஆன்மிக வளர்ச்சிதான் இந்து சமயங்களின் மைய நோக்கம். இதன் நீட்சியாய் சமூகம் முழுமையும் நலமாய் வாழ் வேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது.

பாபம்

கடவுளின் சட்டங்களை வேண்டுமென்றே மீறுவது அல்லது கடவுளுக்கு எதிராக புரட்சி செய்வது பாபம் என்பதுதான் உலகம் தழுவிய பல சமய மரபுகளின் சித்தாந்தம். உதாரணத்துக்கு, கிறித்தவத்தில் ஒரிஜினல் சின் என்று ஒன்று இருக்கிறது. முதல் பாபம் செய்த ஆதாமுக்குப்பின் வந்த அத்தனை பேரும் அந்தப் பாபத்தால் பீடிக்கப்பட்டிருப்பதாக கிறித்தவம் சொல்கிறது. இது போல் எது பாபம், யார் பாபிகள், எது பாப விமோசனம் என்பது பற்றி உலகத்தில் உள்ள ஏறத்தாழ அத்தனை சமயங்களும் தங்களுக்கு என்று ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்து சமயத்தில் பாபம் அல்லது பாதகம் என்ற சொல் பாபத்தை விவரிக்கிறது. ஒரு மனிதனுக்கு எப்படி மோட்சம் கிட்டும், அதற்கு தடைகள் என்ன, அந்தத் தடைகளைக் கடந்து செல்வது எப்படி என்பது போன்ற விஷயங்களை இந்தத் தத்துவம் சொல்கிறது. இருந்தாலும், பாதகம் என்பது மிகவும் தீவிர சமயத்தன்மை கொண்ட சிந்தனை, இறைச் சித்தத்துக்கு எதிராகச் செய்யப்படும் விஷயங்களை அது சொல்கிறது. எனவே பாபம் குறித்து இந்து சமயங்கள் சொல்வது எல்லாம் அற-ஆன்மிக விஷயங்கள்தான். சமயம் அல்லது ஒழுக்கங்களை மட்டும் அவை தனியாகப் பேசுகின்றன என்று சொல்ல முடியாது. பொதுவாகச் சொன்னால் இந்து சமயங்களில் சமயமும் ஒழுக்கமும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத தனித்தனி விஷயங்கள் அல்ல.

ஆனால் எந்த ஒரு செயலையுமே ஏன் பாபம் என்று சொல்ல வேண்டும்? அப்படியே பார்த்தாலும், சில செயல்களை பாபச்செயல்கள் என்று சொல்ல முடியுமானால், ஆண்களும் பெண்களும் ஏன் பாபம் செய்கிறோம்? எதெல்லாம் பாபச் செயல்கள், ஏன் அப்படிச் சொல்லப்படுகின்றன? ஒருவன் பாபம் செய்தால், பாப விமோசனம் பெற என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

இந்து சமயங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று குணங்கள் அல்லது சுபாவங்கள் உண்டு. அவற்றை சத்வம், ரஜஸ், தமஸ் என்று அழைக்கிறோம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையில் இந்த மூன்று குணங்களும் கலந்து இருக்கின்றன. இந்தக் கலவைகளில், ரஜோ குணம் மேலோங்கி இருந்தால் அவர்கள் சில கெட்ட காரியங்கள் செய்யக்கூடும். கீதையில் கிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார், “காமம், கோபம், பேராசை” மனிதர்களை அழிக்கின்றன, எனவே மனிதன் அவற்றைத் தவிர்க்க வேண்டும் (பகவத் கீதை, 15, 21). அதே போல், “காமமும் கோபமும் ரஜோ குணத்தில் தோன்றுகின்றன… இந்த உலகத்தில் அவை மனிதனுக்கு விரோதிகள்” என்றும் சொல்கிறார் (பகவத் கீதை, 3, 37)

ஏதோ ஒரு எண்ணம், சொல், செயல், தொடர்பு, அல்லது சம்பவம் ஒரு மனிதனைச் சீரழிக்கிறது அல்லது அவனது அமைதியைக் குலைக்கிறது என்றால், அது மன அளவில் இருந்தாலும் சரி, உடல் அளவில் இருந்தாலும் சரி, பாபம் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இது போல் ஒழுக்கம் கெட்டுப் போவது முடிவில் மோட்சம் அடைவதற்குத் தடையாக இருக்கும். இதை இன்னும் கொஞ்சம் விரிவாக யோசித்தால், இது போன்ற ஒரு சீரழிவு அந்த மனிதன் வாழும் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கும். இந்த அர்த்தத்தில் பார்க்கும்போது, ஒரு மனிதனுக்கு கெடுதல் செய்வது எதுவாக இருந்தாலும் சரி, சமூகத்தில் அமைதியைக் குலைப்பது எதுவாக இருந்தாலும் சரி, இறைவனை நோக்கிச் செல்லும் பாதையிலிருந்து மனிதனையோ அல்லது ஒரு குழுவையோ திசைதிருப்புவதும் சரி, எல்லாமே பாபம் என்றுதான் சொல்லப்படுகிறது.

பாதகங்கள் எத்தனை, அவை என்னென்ன என்ற கேள்விகளுக்கு பதில் மிகப் பழமையான இந்து சாஸ்திரங்களிலேயே இருக்கிறது. காலத்துக்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கையும் பெயர்களும் மாறி வந்திருக்கின்றன. ஆனால் இவற்றில் ஐந்து பாபங்களை மாபாதகங்கள் என்று சொல்கிறார்கள், அவற்றின் பெயர் மட்டும் வெவ்வேறு சாஸ்திரங்களில் மாறுபடுகின்றன.

பொதுவாக அனைவரும் இவற்றை பஞ்ச மாபாதகங்களாக ஒப்புக் கொள்கின்றனர்-

களவு

மது அருந்துதல்

கொலை

குரு பத்தினியுடன் உறவு கொள்ளுதல்

மேற்கண்ட நான்கு பாபங்களைச் செயதவர்களோடு நட்பாக இருப்பது

(சாந்தோக்ய உபநிடதம், 5.10.9)

இதில் பலரும் நான்காவது பாபம் ப்ருணஹத்தி அல்லது கருச்சிதைவு என்று சொல்கிறார்கள். வேறு சிலர், கோவதை அல்லது பசுவதை என்று சொல்கிறார்கள்.

பாபங்கள் வெவ்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து விடுபட என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் தொகுக்கப்பட்டு இந்து சமய பனுவல்களில் பலவிதங்களில் பட்டியல்கள் இடப்பட்டிருக்கின்றன. பொதுவாக இவற்றில் இரு வகைகள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும்- மாபாதகங்கள், உபபாதகங்கள். மாபாதகங்கள் கொலைக்குற்றம் போன்றவை, உபபாதகங்கள் அவற்றைவிட கொஞ்சம் சாதாரணமான பாபங்கள்.

சில முக்கியமான மாபாதகங்களும், உபபாதகங்களும் அவற்றுக்கான பிராயச்சித்தங்களும் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியல் முடிவற்றது என்பதால் எல்லாவறையும் பேச முடியாது. ஆனால் குறிப்பிட்ட பாபங்களுக்கு என்ன பிராயச்சித்தம் என்று அறிய விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக பாதகங்களையும் பிராயச்சித்தங்களையும் விவரிக்கும் வகையில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன, அவற்றைப் படிக்கலாம்.

மாபாதகங்கள்

ஹத்யம் அல்லது வதம்

ஹத்யம் அல்லது வதம் என்றால் சக மனிதனைக் கொலை செய்தல். மகாபாபங்களில் மிகக் கொடிய பாபமாக இதுவே இந்து சாஸ்திரங்களில் கருதப்படுகிறது. மனிதனை விடுங்கள், எந்த ஒரு பிற உயிரையும் கொல்லும் உரிமை மனிதனுக்குக் கிடையாது என்றுதான் இந்து மரபுகள் சொல்கின்றன. இன்னொருவனை நேரடியாகக் கொன்றாலும் சரி, ஆள் வைத்துக் கொன்றாலும் சரி, கொலைக்கு உடந்தையாக இருந்தாலும் சரி, கொலைகாரர்களுக்கு பாதுகாப்போ புகலிடமோ அளித்தாலும் சரி, கொலை நடக்கும்போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி, பிற மனிதனைக் கொன்ற பாபம் சேரும்.

இந்து சாஸ்திரங்களில் சில முக்கியமான கொலைக் குற்றங்கள் பேசப்படுகின்றன. அவற்றில் சில –

ப்ருணஹத்யா

கருச்சிதைவு மகாபாபம் என்று கருதப்படுகிறது. இன்னும் பிறக்கவில்லை என்றாலும், கருவில் இருக்கும் குழந்தைக்கு உயிர் இருப்பதாகவே கருதப்படுகிறது. வளர்ந்துவிட்ட சிசுவைச் சிதைப்பதைக் கொலைக்குச் சமமாக ஹிந்து சமயங்கள் கருதுகின்றன. அதற்காக, ஹிந்து சமயங்கள் கருத்தடைக்கு எதிர்மறையானவை என்று அர்த்தம் கொள்ளக்கூடாது. கருத்தடை, கருத்தடைச் சாதனங்கள் குறித்து அநேக ஹிந்து சாத்திரங்கள் உண்டு. கருத்’தடை’ என்பது கருச்சிதைவுக்கு ஒருகாலும் இணையாகாது.

சிசுஹத்யா

இந்து பண்பாட்டிலும் சமயங்களிலும் பன்னிரெண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள் எந்த தவறு செய்தாலும் தண்டிக்க அனுமதி கிடையாது. தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி, குழந்தைகள் தவறு செய்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கள்ளமற்ற குழந்தைகளை எக்காரணம் கொண்டும் தண்டிப்பது இந்து சமூகத்தில் கண்டிக்கப்படுகிறது. தண்டிப்பதே தவறு என்று விதிப்பதால், இச்சமயங்கள் குழந்தைகளைக் கொலை செய்வது மாபாதகம் என்றும் விதிக்கின்றன.

கோஹத்யா

பசுக்களின் உடல்களில் சகல இறைவர்களும் உறைவதாக அநேக மரபுகளும், சம்பிரதாயங்களும் நம்பிக்கை கொண்டிருப்பதால், ஹிந்து சமயங்கள் பசுவதை என்பது மாபாதகம் எனக் கொள்கின்றன.

பானம்

மதுபானங்களும் பிற போதைப் பொருட்களும் இந்து சமயங்களில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. மலர்கள், கனிகள் என்று மூலப்பொருள் எதுவாக இருந்தாலும் உடலுக்கும் மனதுக்கும் கேடு செய்வதால் போதை அளிக்கக்கூடிய எந்த மதுபானத்தையும் உட்கொள்ள அனுமதி கிடையாது. மனதின் சமநிலையைக் குலைத்து பல தீய பழக்க வழக்கங்களுக்கு மனிதனைத் தயார் செய்து, அவனையும் அவன் வாழும் சமூகத்தையும் மதுபானங்கள் நாசம் செய்கின்றன. பொதுவாகவே மதுபானம் மனிதனின் நுண்புலன்களை மழுங்கடித்து விடுவதால் அவனது ஆன்மிக வளர்ச்சியும் தடைபடுகிறது. எனவே மதுபானம் உட்கொள்வது இந்து சாஸ்திரங்களில் மிகப்பெரும் பாபங்க்ளில் ஒன்றாகிறது.

களவு

சிறிய அளவிலானாலும் சரி, நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது ரகசியமாகவோ பிறர் பொருளை அபகரித்தல் மிகக் கொடிய பாபம் என்று இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன. ஏறத்தாழ எல்லா சாஸ்திரங்களும் ஏழைகள் மற்றும் இறையடியார்களிடமிருந்து அபகரிப்பது பெரும் பாபம் என்று கண்டிக்கின்றன.

பிறழ்காமம்

பின்வரும் காமங்கள் பாபமாகச் சொல்லப்படுகின்றன-

குருவங்கன காமம்– ஒருவன் தனது குரு அல்லது ஆசானின் மனைவியுடன் உடலுறவு மேற்கொள்வது பாபச்செயல்.

அதே போல், தந்தை, அன்னை, சகோதரன், சகோதரி என்று குடும்ப உறுப்பினர்களுடன் உடலுறவு கொள்வது பாபச் செயல். சில சாஸ்திரங்கள் தந்தை அல்லது தாயின் உடன்பிறந்தோர் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் உறவு கொள்வதையும் தடை செய்கின்றன, ஆனால் இது பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபடுகிறது.

சக மனிதனைத் தவிர வேறு பிற விலங்கினங்களுடன் உறவு கொள்வதும் பாபம்தான்.

சங்கம் அல்லது சகவாசம் – மகாபாதக சம்சங்கம்

மாபாதகங்கள் செய்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்வதே பெருங்குற்றமாகவும் மாபாதகமாகவும் சொல்லப்படுகிறது. இவை ஒருவனின் மனதைச் சீரழிக்கும், நாட்பட நாட்பட ஒருவரின் தீய குணங்கள் பிறரைப் பாதிக்கும் என்பதால், காலப்போக்கில் கூடாஒழுக்கம் கேடில் முடியும்.

உபபாதகங்களும் பிராயச்சித்தங்களும்

சில சாஸ்திரங்கள் சூதாட்டம், பொய் சொல்லுதல், சாஸ்திரங்களைப் பழித்தல், பிறருக்கும் பொதுமக்களுக்கும் உரியதை அழித்தல் போன்றவற்றை உபபாதகங்கள் என்று நீண்ட பட்டியலிடுகின்றன. இதில் ஆர்வமுள்ளவர்கள், பிராயச்சித்த விவேகம், யக்ஞவல்க்ய ஸ்ம்ருதி, போன்ற பனுவல்களைப் படிக்கலாம்.

பிராயச்சித்தம் அல்லது பாபத்தைப் போக்கிக் கொள்ளும் வழிகள்

பிராயச்சித்தம் என்றால் பாபத்தைச் சுத்திகரித்துக் கொள்ளுதல். பாபச் செயலால் பாபியின் மனதில் ஏற்பட்ட தடங்களைப் பிராயச்சித்த கர்மம் சுத்தப்படுத்துகிறது. கடந்த காலத்தில் செய்த பிழையைத் திருத்திக் கொள்ளும் செயல் இது.

பாபங்களைப் போக்கும் கருவியாக பிராயச்சித்தம் இருக்க முடியுமா என்பது பற்றி பல்வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. தெரிந்தே செய்த பாபங்களிலிருந்து தப்பிக்க முடியாது, ஒருவன் தன் செயல்களுக்கான பின்விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். அறியாமையாலோ, அசிரத்தையாலோ, அறியாமலோ செய்த பாபங்களுக்கு மட்டுமே சாஸ்திரங்களில் பிராயச்சித்தம் உண்டு என்கின்றனர் அவர்கள். ஆனால் வேறு சிலர், எப்பேற்பட்ட பாபங்களைச் செய்திருந்தாலும் சரி, அனைவருக்கும் இந்து தர்மம் நம்பிக்கை அளிக்கிறது என்று சொல்கிறார்கள்.

மாபாதகங்கள் செய்தவர்களுக்கும் மனம் வருந்தி திருந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சில உயிர்கள் நிரந்தரமாக நரகத்துக்கு அனுப்பப்படும் என்பதை இந்து சமயங்கள் அப்படியே நம்புவதில்லை- ஆனால் துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், சில பக்தி சம்பிரதாயங்கள் அப்படிச் சொல்கின்றன. ஆனால் அந்த நம்பிக்கை பரவலாக இல்லை. எனவே எல்லா பாபங்களில் இருந்தும் சுத்திகரித்துக் கொள்ள முடியும் என்பதால் அதிக அளவில் பிராயச்சித்தங்கள் இந்து மதநூல்களில் சொல்லப்படுகின்றன. பாபச்செயல்களின் விளைவுகளைக் குறைத்துக் கொள்ள பல வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றில் சில –

பாவமன்னிப்பு

இந்து சமயச் சடங்குகளில், பாபத்தை ஒப்புக்கொண்டு பாப மன்னிப்பு பெறும் வழக்கம் கிடையாது என்ற ஒரு தவறான பொதுநம்பிக்கை இருக்கிறது. கடந்த காலத்தில் செய்த குற்றங்களிலிருந்து விடுபட இறைவனிடம் பிரார்த்தனை செய்வது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் செயல் என்று சொன்னால் அப்படிப்பட்ட பல பிரார்த்தனைகள் இருக்கின்றன. ரிக் வேதத்தில் மன்னிப்பு கேட்கும் பாடல்கள் எண்ணற்ற அளவில் இருக்கின்றன. தர்ம சாஸ்திரங்களில் எங்கே எப்போது எப்படி இது போன்ற பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிற சமயங்களுக்கும் இந்து சமயங்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய வேறுபாடு உண்டு- பாபம் செய்தது குறித்த குற்றவுணர்வைப் போக்குவதற்காக என்றே குற்றத்தை ஒப்புக் கொள்வது கிடையாது; மாறாக, பாபத்தின் விளைவுகளை நீக்குவதற்கும் குறைப்பதற்கும் சில செயல்களைத் துவக்கவும் இப்படிச் செய்யப்படுகிறது.

வருந்துதல்

மீட்சிக்கு முக்கியமான செயல்களில் அனுதாபம் என்று அழைக்கப்படும் வருத்தச் செயல் ஒன்று. தான் செய்த தவறுக்காகவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் பாபம் செய்தவர் மனம் வருந்த வேண்டும். இவை இரண்டும் அடுத்தடுத்த செயல்கள் அல்ல, ஆனால் மனம் வருந்துதல்தான் பாபம் செய்தவருக்கு பிராயச்சித்தம் செய்யும் தகுதியை அளிக்கிறது.

பிராணாயாமம்

புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்த பிராணனைத் தன்னுள்ளும் தன் சூழலிலும் இருத்தி வைத்திருத்தல் காலங்காலமாக நடைமுறையில் உள்ள பழக்கம். இந்து சமய பழக்க வழக்கங்களின் ஆரம்ப நிலைகளில் இது ஒன்று. எனவே, இதுவும் பிராயச்சித்தமும் வெவ்வேறு அல்ல. பிராணாயாமம் பல்வகைப்படும், அவற்றின் எண்ணிக்கையும் பல்வேறு. இதன் நுட்பங்களை அறிய விரும்புபவர்கள் யோகா புத்தகங்களை வாசிக்கலாம்.

தபஸ்

இந்து சமயங்களில் உள்ள சுத்திகள் அனைத்தின் மையத்திலும் தபஸ் அல்லது விரதம்தான் இருக்கிறது. எதெல்லாம் விரதம் என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. பிரம்மச்சரியம், உண்மை பேசுதல், உண்ணாமை, வெறும் தரையில் உறங்குதல், ஒவ்வொரு நாளும் மந்திரம் ஜபித்தல், மும்முறை குளித்தல் முதலானவற்றை விரதங்கள் என்கிறார் கௌதமர் ( கௌதம தர்ம சூத்திரங்கள், 19.15). பாபத்துக்கு ஏற்றபடி எத்தனை நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பதும் எவ்வளவு வேளை சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதும் மாறுகின்றன. சில சாஸ்திரங்களில் உண்ணா நோன்புக்குதான் மைய இடம் இருக்கின்றது, அவை சந்திரனைக் கொண்டு ஆண்டுகளைக் கணக்கிடுகின்றன- சில குற்றங்களுக்கு ஒரு வருடம்கூட உண்ணாமல் இருக்க வேண்டியதாகலாம்.

ஜபம்

குறிப்பிட்ட ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சொல்வதுதான் ஜபம். ஒருவனுக்கு அவனது குருவால் உபதேசிக்கப்பட்ட மந்திரமாகவும் அது இருக்கலாம், அல்லது இறைநாமமாக இருக்கலாம், அல்லது பிராயசித்த மந்திரமாக இருக்கலாம். உண்மையில் ஜபம் செய்வது ஒருவனது அன்றாட கடமைகளில் ஒன்றாக இருக்கிறது. மிகக் கொடிய பாபங்களுக்கும்கூட இறைநாமத்தை ஜெபிப்பது பிராயசித்தமாக இருக்கும் என்று பல புராண ஸ்தோத்ரங்கள் சொல்கின்றன.

தானம்

தானதர்மம் செய்வது இன்றும் பரவலாக நடைமுறையில் உள்ள பழக்கம். நல்ல நாட்களிலும் சில முக்கியமான சமயங்களிலும் ஒருவனது பிராயச்சித்தத்தின் ஒரு பகுதியாகவோ அல்லது அன்றாட கடமைகளில் ஒன்றாகவோ, இந்துக்கள் ஏழைகளுக்கும் இல்லாத நிலையில் இருப்பவர்களுக்கும் தர்மம் செய்கிறார்கள். பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்வதைப் பேசும்போது தானம் தனி மற்றவை வேறல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். பாபசுத்திக்கு பல கர்மாக்களை அடுத்தடுத்து செய்யும்போது அவற்றில் ஒரு பகுதியாக இதுவும் வருகிறது.

உபவாசம்

உண்ணா நோன்பிருத்தல் இந்து மக்களின் வாழ்வில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. திங்கட்கிழமை, ஏகாதசி என்று குறிப்பிட்ட விசேஷ நாட்களில் சிலர் விரதம் இருக்கின்றனர். புண்ணியம் கிடைக்கும் என்றோ ஒரு சடங்கின் பகுதியாகவோ பிராயச்சித்தம் செய்வதற்கான தகுதி ஏற்படுத்திக் கொள்ளவோ நோன்பிருப்பதுண்டு.

தீர்த்தயாத்திரை

தீர்த்தயாத்திரை அனைத்து வகை பாபங்களையும் போக்கிவிடும் என்று போற்றப்படுகிறது. ஆனால் நடந்து செல்வது, உண்ணா நோன்பிருப்பது, திருத்தலங்களில் நீராடுவது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்பவே ஒருவன் தீரத்தயாத்திரையை மேற்கொண்டு பயணப்பட வேண்டும்.

முடிவு

அடிப்படையில் சமயம் சார்ந்தவையாக இருந்தாலும், இந்துக்கள் தங்களைச் சுத்திகரித்துக் கொள்ளவும், ஆன்மிக சாதனைக்குரிய தகுதிகளை வளர்த்துக் கொள்ளவும் உதவ பாப புண்ணியக் கோட்பாடுகள் மேற்கண்டவாறு வடிவமைக்கப்பட்டு பயன்படுவதை நாம் பார்க்க முடிகிறது. அதற்கெல்லாம் எது தடையோ அதெல்லாம் தீயவை, ஒருவன் தனக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் இவற்றின் மையக்கருத்து.

❀❀❀❀
ஹிந்துமதங்களில் கூறப்படும் பாவ, புண்ணியங்களைக் குறித்து மேலும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட நூல்களைப் படித்துத் பயன் பெறலாம்-
P.V. Kane. History of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.
Chitralekha Singh and Premnath.Hinduism, 2002, New Delhi: Crest Publishing House
A. Sharma. The Purusharthas: A Study in Hindu Axiology, 1982, East Lansing: Asian Studies Centre, Michigan State University.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

18 puranas

புராணங்கள் வேதக்கல்வியின் முக்கியமான பகுதியாய் இருக்கும் நூல்கள். கடந்த காலத்தில் மெய்யாகவே நிகழ்ந்தவை என்று நம்பப்படும் விஷயங்களை விவரிப்பதாலும், மிகப்பெரும் எண்ணிக்கையிலான கதைகளையும் சம்பவங்களையும் உயர்ந்த தத்துவ மெய்ப்பாடுகளுடன் இணைத்து அளிப்பதாலும் அவை நவீன காலகட்டத்தில் கதைகள், தொன்மங்கள், உவமைக்கதைகள் என்று பலவாறாக கருதப்படுகின்றன.

புராணம் என்ற சொல், கடந்த காலம் என்று பொருள்படும். கடந்தகாலத்துக்குரிய பல்வேறு நிகழ்வுகளைப் பேசுவதாலேயே இப்பெயர். பண்டைய மற்றும் இடைக்கால இந்து சமய வழக்கங்கள், தொன்மங்கள், வரலாறு, புவியியல், அரசவம்சங்கள், அண்டவியல் மற்றும் இலக்கியம் குறித்து அறிஞர்களுக்கும் பாமரர்களுக்கும் விரிவான தகவல்கள் கொண்ட கலைக்களஞ்சியங்களே புராணங்கள்.

புராணங்களின் நோக்கம் மற்றும் நிகழ்காலத் தேவை குறித்து இருவகை பார்வைகள் உள்ளன. வேதங்களில் உள்ள உயர்ந்த தத்துவங்களை கதைகளைக் கொண்டும் சம்பவங்களைக் கொண்டும் விளக்குவதுதான் புராணங்களின் ஒரே நோக்கம் என்று சொல்பவர்கள் உண்டு. புராணங்கள் பாமரர்களுக்கே உரியன என்று இவர்கள் கருதுகின்றனர்.

இப்பார்வைக்கு மாறாய், பண்டிதர்கள் மற்றும் பாமரர்கள் என்று அனைவருக்கும் உரிய தனி நூல்களே புராணங்கள் என்று சொல்பவர்கள் உண்டு. அண்டத்தில் உள்ள வெவ்வேறு உலகங்கள் பற்றிய நுண்விவரங்கள் கொண்ட விளக்கங்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தில் உள்ள செடியினங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்த தகவல்கள், பல நூறாண்டுகளாய் தொடரும் பல்வேறு அரசவம்சங்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் என்று பலவும் புராணங்களில் உண்டு. இந்திய அறிவுத்துறை ஆய்வாளர்கள், தொல்லியலாளர்கள், தாவரவியலாளர்கள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் பலருக்கு புராணங்களில் உள்ள தகவல்கள் மிக முக்கியமான வழிகாட்டிகளாக இருக்கின்றன.

புராணங்கள், கடந்தகால சரித்திர நிகழ்வுகளை உள்ளபடியே விவரிக்கும் ஆவணங்கள் என்று நம்புபவர்களும் உள்ளனர்- கடந்தகால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதாக மத்ஸ்ய புராணத்தில் ஒரு ஸ்லோகம் இருந்தாலும்கூட இந்த நம்பிக்கை ஆதாரபூர்வமானது என்பதை நிறுவுவது மிகக் கடினம்.

மகாபுராணங்கள், உபபுராணங்கள் என்று இருவகையில் புராணங்கள் பகுக்கப்படுகின்றன. பதினெட்டு மகாபுராணங்களும் பதினெட்டு உபபுராணங்களும் உண்டு. ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு தெய்வத்தைப் பிரதானப்படுத்துகிறது. பதினெட்டு மகாபுராணங்களையும் தொகுத்தால் மொத்தம் 4,00,000 கிரந்தங்கள் அல்லது செய்யுள்கள் இருக்கும்.

இந்த எண்ணிக்கை குறித்து சுவையான ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. பதினெட்டு புராணங்களும் வேத வியாசரால் தனியாய் எழுதப்படவில்லை. முதலில் ஒரு கோடி கிரந்தங்கள் கொண்ட ஒரே ஒரு புராணம்தான் இருந்தது. துவாபர யுக மக்கள் அது அத்தனையையும் அறிந்துகொள்ள சிரமப்படுவதைப் பார்த்த இறைவன் வேத வியாசரிடம் அவற்றை பதினெட்டு பகுதிகளாக நான்கு லட்சம் கிரந்தங்களில் சுருக்கச் சொன்னார். இந்த பதினெட்டு பகுதிகளும் பதினெட்டு புராணங்களாக அறியப்படுகின்றன..

இது தவிர பிற்காலத்தில் வேறொரு தனி பகுப்பும் செய்யப்பட்டது. அதன்படி பதினெட்டு மகாபுராணங்களும் ஆறு புராணங்களைக் கொண்ட மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டன. இயற்கையில் உள்ள சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களுக்கு ஏற்ப இந்த மூன்று தொகுதிகளும் அமைக்கப்பட்டன.

நான்கு புருஷார்த்தங்களான தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றை வலியுறுத்தினாலும் புராணங்கள் ஐந்து விஷயங்களை முதன்மையாய் பேசுகின்றன.

  1. சர்க்கம் அல்லது ஆதார சிருஷ்டி
  2. பிரதி- சர்க்கம் – இரண்டாம் நிலை சிருஷ்டியும் பிரளயமும்
  3. வம்சம் – தெய்வங்கள் மற்றும் அரசர்களின் வம்சாவளி
  4. மன்வந்தரம் – மனுவின் ஆட்சிக் காலங்கள்
  5. வம்சானுசரிதம் – அரச குடும்பங்களின் வரலாறு

வேதங்களில் மிகச் சுருக்கமாகவும் மறையீடாகவும் கூறப்பட்டுள்ள தத்துவங்களை விரிவாக எடுத்துரைப்பதுதான் புராணங்களின் மிக முக்கியமான நோக்கம். வேதம் பயில்பவர்கள் உயர்ந்த உண்மைகளை எளிதில் புரிந்து கொண்டு வாழ்நாள் முழுதும் நினைவில் கொள்ள புராணங்கள் உதவுகின்றன.

வேதங்களிலும் உபநிடதங்களிலும் உள்ள தத்துவங்களின் உண்மையான உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதபோது புராணங்கள் அவற்றின் விளக்கமாய் இருக்கின்றன- வரலாற்று நிகழ்ச்சிகள் மற்றும் கதைகளைக் கொண்டு தத்துவ விளக்கத்தை புராணங்கள் அளிக்கின்றன. உதாரணத்துக்கு, ‘சத்யம் வத’, உண்மையே பேசு என்கிறது வேதம். புராணங்களும் இதிகாசங்களும் அரிச்சந்திரன் கதை போன்றவற்றைக் கொண்டு ரத்தினச் சுருக்கமாய் உள்ள இந்த வேதவாக்கின் உட்பொருளை முழுமையாய் உணர்த்துகின்றன.

பதினெட்டு மகாபுராணங்கள் மற்றும் பதினெட்டு உபபுராணங்கள் தவிர, ஸ்தல புராணங்களும் உண்டு- ஒரு குறிப்பிட்ட தலத்தின் பெருமையை விவரிக்கும் வரலாறுகள் இவை. பல்வேறு தெய்வபக்தர்களின் கதையை விவரிக்கும் சிறு புராணங்களும் உண்டு. இவற்றில் சில நம்மிடையே பரவலாக அறியப்பட்டுள்ள ஸ்லோகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களில் பயிலப்படுகின்றன. இந்த ஸ்லோகங்களும் ஸ்தோத்திரங்களும் மகாபுராணங்கள் மற்றும் உபபுராணங்களில் உள்ளன, இவை தவிர வேறு சில தனிநூல்களாகவும் உண்டு.

பதினெட்டு மகாபுராணங்கள் இவை-

1) பிரம்ம புராணம்

2) விஷ்ணு புராணம்

3) பத்ம புராணம்

4) சிவ புராணம்

5) ஸ்ரீமத் பாகவத மகாபுராணம்

6) நாரத புராணம்

7) மார்க்கண்டேய புராணம்

8) அக்னி புராணம்

9) பவிஷ்ய புராணம்

10) பிரம்ம வைவர்த்த புராணம்

11) லிங்க புராணம்

12) வராக புராணம்

13) ஸ்கந்த மகாபுராணம்

14) விமான புராணம்

15) கூர்ம புராணம்

16) மத்ஸ்ய புராணம்

17) கருட புராணம்

18) பிரம்மாண்ட புராணம்

பதினெட்டு உபபுராணங்கள் இவை. ஆனால் வெவ்வேறு நூல்களில், வெவ்வேறு பிராந்தியங்களில் இவை மாறுபடலாம்

  • 1) சனத்குமார புராணம்
  • 2) நரசிம்ம புராணம்
  • 3) நாரதீய புராணம்
  • 4) சிவதர்ம புராணம்
  • 5) துர்வாச புராணம்
  • 6) கபில புராணம்
  • 7) மானவ புராணம்
  • 8) உஷானஸ புராணம்
  • 9) வருண புராணம்
  • 10) காளிக புராணம்
  • 11) சாம்ப புராணம்
  • 12) சௌர புராணம்
  • 13) ஆதித்ய புராணம்
  • 14) மகேச்வர புராணம்
  • 15) தேவி பாகவதம்
  • 16) வசிஷ்ட புராணம்
  • 17) விஷ்ணு தர்மோத்தாரண புராணம்
  • 18) நிலாமத புராணம்


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 1

ganapathy

இந்து சமயம் ஒற்றைப் பெருமதம் என்று பலரும் நினைக்கிறார்கள். அது ஒரு சிந்தனை முறைமை. ஏராளமான மதங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டு மரபுகள், மொழி மரபுகளை தன்னுள்ளடக்கியதாய், வட்டாரம் சார்ந்து பல்வகைப்பட்ட நியமங்களும் ஆதார நம்பிக்கைகளும் கொண்டதாய், மானுட சமுதாயங்கள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய உலகளாவிய அடிப்படை விழுமியங்களை முன்னிருத்துவதாய் உள்ள சிந்தனை முறைமை. இது போக இந்து சமயங்கள் குறித்து இன்னும் சொல்ல இருக்கிறது.

சிந்து என்ற சொல், நதி, அகண்ட நீர்பரப்பு, கடல் என்றும் பொருள்படும். இந்தியாவின்மீது படை தொடுத்துக் கொண்டிருந்த பாரசீகர்கள், சிந்து என்ற சொல்லை உச்சரிக்க இயலாமல் இந்து என்று அழைத்தனர். இதுவே பின்னர் இந்தியா என்று மறுவிற்று.

எனவே, பரவலான ஒரு பார்வையில் இந்து சமயத்தை மகத்தான ஒரு நியமத்தொகையாகக் கொள்ளலாம், அது மிகப்பெரிய ஒரு சிந்தனை முறைமை- இந்திய துணைக்கண்டத்திலும் அதையொட்டிய பகுதிகளிலும் தோன்றிய அத்தனை மதங்களும் சம்பிரதாயங்களும், விதிமுறைகளும், பழக்க வழக்கங்களும், பண்பாட்டு, மொழி மரபுகளும் இந்து சமயத்தின் உள்ளடக்கம். எனவேதான் வேதங்களை ஆதாரமாகக் கொண்ட, வேத மரபின் விதிமுறைகளைப் பின்பற்றும் மதங்கள் பல [वेदसम्मत – Vedasammata] இந்து சமயத்தில் குவிந்திருப்பதைப் பார்க்கும்போதே வேதங்களை உயர்வாய்க் கொள்ளாத நடைமுறைகளும் இந்து சமயத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். அதே போல், இந்து சமயத்தில் உள்ள சில மதங்களும் சம்பிரதாயங்களும் அக்னி வழிபாட்டையும் அது சார்ந்த சடங்குகளையும் முக்கியமாய் கருதுகின்றன என்றால், அக்னி வழிபாடு செய்யாத மரபுகளும் அதனுள் இருக்கின்றன. பரவலாக வழிபடப்படும் இந்திய கடவுளரைவிட, தத்தம் தெய்வங்களையே சில வழிபாட்டு மரபுகள் உயர்வாய்க் கருதுகின்றன என்றால், வேறு சில வழிபாட்டு மரபுகள் நதிகள், மலைகள், மரங்கள், மிருகங்கள் என்று இயற்கை வழிபாட்டை வலியுறுத்துகின்றன. எனவே, இந்திய மதங்களையும் நம்பிக்கைகளையும் எளிமைப்படுத்த மேற்கொள்ளப்படும் அத்தனை முயற்சிகளும் முட்டாள்தனமானவை – நம் கண் முன் உள்ள உண்மைகளுக்கும் ஆதாரங்களுக்கும் முரணானவை.

இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய அத்தனை சிந்தனை முறைமைகளுக்கும் பொதுவாய், தனித்தன்மை கொண்ட சில பண்பாட்டுக் கூறுகள் இருக்கின்றன. இவற்றுள் சில பிற பண்பாடுகளிலும் சமயங்களிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டன. வேறு சில பண்பாட்டுக் கூறுகள், இந்திய துணைக்கண்டத்துக்கு வெளியே இருந்த கலாசாரக் குழுக்களுக்கு உரியவை என்று சில வரலாற்றாய்வாளர்கள் சொல்லவும் செய்கிறார்கள்.

முதலில் இந்து சமயங்களின் மைய நோக்கு எது என்ற விஷயம். இந்த மதங்களின் பனிமூட்டம் போன்ற, கனவுத்தன்மை கொண்ட, உலகுக்கு உதவாத, நடைமுறைப்படுத்த முடியாத இயல்பு பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டு விட்டன. ஆனால் இப்படிப்பட்ட முடிவைவிட உண்மைக்குப் புறம்பானது எதுவும் இருக்க முடியாது. உண்மையில், இந்து மதங்கள் மிகப் பெரிய அளவில் மனிதனைத் தம் மையத்தில் கொண்டிருக்கின்றன. காஷ்மீரின் மதங்களானாலும் சரி, தமிழக மதங்களானாலும் சரி, இந்து பெருமதங்களுக்கு முதலான பெருமதங்களின் எதிர்வினையாய்த் தோன்றிய சமணம், பௌத்தம் முதலான வேறு பல மதங்களானாலும் சரி, இந்தியாவில் உள்ள அத்தனை மதங்களையும் தத்துவச் சம்பிரதாயங்களையும் ஒருங்கிணைக்கும் விஷயம் ஒன்றுண்டு- அது சங்கிலித் தொடராய்த் தொடரும் ஜனன மரணச் சுழற்சியிலிருந்து உயிரை விடுவிப்பதுதான்.

நிர்வாணம், மோட்சம், முக்தி என்று எப்பெயரிட்டு அழைத்தாலும் இந்து மதச்சம்பிரதாயங்களின் நோக்கம் ஒன்றுதான் – புட்டியில் சிக்கிக் கொண்ட விட்டிலுக்கு வெளியேற வழி காட்டுவது எப்படி? (அடிக்குறிப்பு: தன் தத்துவத்தின் நோக்கம், “Der Fliege den Ausweg aus dem Fliegenglas zeigen”—to show the fly the way out of the fly bottle, என்றார் விட்கென்ஷ்டைன்). சிலர் இதைத் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். சொர்க்கம் என்று ஒன்று உண்டு என்றும் வைகுண்டம், கைலாயம் போன்ற தெய்வ உலகங்கள் உண்டு என்றும் இந்து மதங்கள் சொல்வதையும் அவற்றின் தொன்மங்களை நியாயப்படுத்தவுமே இந்து மதங்களில் ‘விடுதலை’ வேட்கை, வலியுறுத்தப்படுகிறது என்கின்றனர் இவர்கள். இது உண்மையாய் இருக்குமென்றால், தெய்வத்தை விடுங்கள், ஆன்மா என்ற ஒன்று இருப்பதையே ஏற்றுக் கொள்ளாத பௌத்தம் போன்ற சமயங்கள் ஏன் சம்சாரத்துக்கு முடிவு கட்டுவதைத் தம் லட்சியமாகக் கொள்ள வேண்டும்? வேதங்கள், உபநிடதங்கள் தொடங்கி பின்னர் வந்த சம்ஸ்கிருத நீதி நூல்கள், தமிழகம் மற்றும் காஷ்மீர சைவ சித்தாந்தங்கள், இந்தியாவெங்கும் பரவலாய் உள்ள வைணவ சம்பிரதாயங்கள், இந்து சமயத்தின் ஷண்மதங்கள், ஏன் சமணம் உட்பட, அனைத்துமே மானுட பிறப்பின் துயர அனுபவத்தினின்று விடுபடுவதையே ஏன் தம் சமய உலகின் மையமாக கொள்ள வேண்டும்? இந்த ‘மாறுபட்ட புரிதல்’ என்பது பிழைபட்ட அறிவாக இருக்க வேண்டியதில்லை. உண்மையைச் சொன்னால், புராணங்களும் அவற்றின் துணைக்குறிப்புகளாக அளிக்கப்படும் மறைநூல்களும் அபரிதமான அளவில் கடவுளர்களின் உலகங்களைக் கொண்டிருக்கின்றன. இது பற்றி பிறகு எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால், மனிதனை மையத்தில் நிறுத்திய முதல் ‘எக்ஸிஸ்டென்ஷலிஸ்ட்’ பிலாசபி எது என்று கேட்டால், அது இந்து மதம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

அடுத்து பேசப்பட வேண்டியது காலமும் மனித அனுபவத்துக்கு உட்பட்ட வஸ்துக்களின் பருண்மத் தன்மையும். இந்து சமயங்களைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த இரண்டையும் புரிந்து கொள்வது அவசியம். விதிவிலக்குகள் என்று ஒன்றுகூட இல்லாமல், இந்து சமயங்கள் அனைத்தும் காலம் சுழற்சித்தன்மை கொண்டது என்றே சொல்கின்றன. இந்து அண்டவியலில், ஒரு கணம் முதல் ஒரு யுகம் வரை கால இடைவெளிகள் துல்லியமாக வரையறை செய்யப்பட்டு பகுக்கப்பட்டிருக்கின்றன. படைக்கப்பட்ட பூமியின் காலம் மட்டுமல்ல, தெய்வ உலகங்களின் காலமும் வரையறுக்கப்பட்டிருக்கிறது. தெய்வங்களின் உலகுக்கும் காலம் உண்டா? இருப்பது எதுவானாலும் அனுபவத்துகோ அறிவுக்கோ சிந்தனைக்கோ உட்பட்டது எனில், அது பௌதிகத் தன்மை கொண்டதே. இந்து சமயங்கள் பௌதிக இருப்பை இருவகையில் பிரிக்கின்றன- தூலமாய்ப் புலப்படுபவை, சூக்குமமாய் விளங்குபவை. இந்தப் புரிதலில், மனம், எண்ணங்கள், ஜீவன் (மனித ஆன்மா), உலகம், கர்மா, இறைவர்கள், இறைவியர், படைப்புத் தொழிலை நிகழ்த்தும் பிரமன் என்று மானுட அனுபவத்துக்கு உட்பட்ட அனைத்துமே பௌதிக உலகைச் சார்ந்தவையே.

பௌதிகத் தன்மை கொண்டிருத்தலால், இவை படைப்பு, இருப்பு, அழிவு என்ற இயற்கை விதிகளுக்குக் கட்டுப்படுகின்றன. இந்து சமயங்களில் வெவ்வேறு உயிர்களுக்கும் உலகங்களுக்கும் வெவ்வேறு வகையில் முடிவு காலம் நிர்ணயிக்கபடுகிறது. பிரளயம் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கப் போகிறோம். ஆனால் இந்து சமயங்களில் வெவ்வேறு கல்பங்களுக்கு வெவ்வேறு பிரமன்களும், ரிஷிகளும் உலகங்களும் இருப்பதற்கான காரணம் இதுதான்- அனைத்தும் இயற்கை விதிகளுக்குக் கட்டுப்பட்டவை. இதில் கர்மவினை பௌதிகத்தன்மை கொண்டது என்பதைக் கண்டறிந்தது சமணம்தான் என்று சொல்ல வேண்டும்

இந்து சமயங்கள் வழிபாடுகளையும் சடங்குகளையும் காட்டிலும் தனி மனித வளர்ச்சி, பரிணாம மாற்றம், வீடுபேறு ஆகியவற்றுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. சடங்குகள் முக்கியம்தான், ஆனால் தனிமனித வளர்ச்சியை நோக்கி சிரத்தையுடன் சாதனை செய்வது அவசியம் என்று கருதப்படுகிறது. தனி மனித பரிணாம மாற்றத்துக்கு எட்டு ஆன்ம குணங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்று இந்த சமயங்கள் நம்புகின்றன. சமயத்தையும் சம்பத்தையும்விட இந்த எட்டு குணங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. அடுத்தவன் பொருளில் ஒரு கையும், ஆண்டவன் உலகில் ஒரு காலும் வைத்திருக்க முடியாது என்பதுதான் விஷயம்.

ஒவ்வொரு மனிதனும் பிறரைக் காட்டிலும் வேறுபடுகிறான். ஒவ்வொருவனையும் உருவாக்கிய பௌதிகக் கூறுகளும் பண்பாட்டுப் பயிற்சிகளும் பல்வகைப்படவை என்பதைப் பார்க்கும்போது, மானுட உலகில் எண்ணற்ற வகைகளில் மாறுபடும் ஈடுபாடுகள், இயல்புகள், நடத்தைகள் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ ஒரு விஷயத்தில் ஆர்வம் இருக்கிறது என்பதால் அது பிறருக்கும் முக்கியமாக இருக்க வேண்டியதில்லை. இந்த அடிப்படை உண்மையை ஆன்மிக தளத்தில் நடைமுறைப்படுத்தும் வகையில் இந்து சமயங்கள் எண்ணற்ற தெய்வங்கள், தேவியர்கள், இயற்கை அம்சங்களை வழிபாட்டுக்குரியனவாய் முன்னிறுத்தி, தன் விருப்பத்துக்குரிய வழிபாட்டுப் பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் அளிக்கிறன. சிலர் தங்கள் உடலை பல்வகைப்பட்ட ஆடை அணிகலன்கள் கொண்டு அலங்கரித்துக் கொள்கின்றனர். சிலர், பிறருக்கு அருவெறுப்பாக இருக்கக்கூடியவற்றை வழிபடுகின்றனர். இந்த விஷயத்திலும் இந்து சமயங்கள் நம்மையே தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொல்கின்றன- வேண்டுமானால் அவர்கள் உருவமற்ற வழிபாட்டைப் பின்பற்றலாம். சிலர் எல்லாருடனும் கலகலப்பாகப் பழகுகின்றனர், சிலர் தனித்து ஒதுங்கி இருக்கின்றனர். எப்போதும் எதையாவது செய்து கொண்டு மக்களோடு மக்களாய் கூடியிருக்க விரும்புபவர்களுக்கு இந்து சமயங்கள் கோயில்கள், தல யாத்திரைகள், சடங்குகள் என்று இன்னும் பல வழிகளைத் திறந்து கொடுக்கிறன. எப்போதும் எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற உத்வேகம் இல்லாதவர்கள் அமைதியான, தம் சுபாவத்துக்கு ஏற்ற வழிமுறைகளைப் பின்பற்றி வீடுபேற்றைப் பெறலாம்.

உலகெங்கும் மரபு சார்ந்த சமூகங்களில் நாத்திகர்கள் தீயவர்களாகவும், கேடு செய்பவர்களாகவும், எதிர்மறைச் சிந்தனையாளர்களாகவும் கருதப்படுகின்றனர். ஆனால் இந்திய தத்துவ நெறிமுறைக் கோட்பாடுகளில், தெய்வங்களைப் பொருட்படுத்தாமல் இருப்பதோ, தெய்வங்களை நிராகரிப்பதோ, கண்ணுக்குப் புலப்படும் உலகுக்கு அப்பால் எதுவும் இல்லை என்று மறுக்கும் தூய பௌதிகச் சிந்தனையோ, எதுவானாலும் அதற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எந்த ஒரு சமூகத்துக்கும் சமநிலை மிக அவசியமாகிறது. சமய அமைப்பில், நாத்திகமே சமநிலையைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்திய தத்துவ நெறிமுறைக் கோட்பாடுகள் நாத்திகத்தை ஏற்றுக் கொள்கின்றன, உண்மையில் சமயத்தின் பெயராலும் தெய்வத்தின் பெயராலும் தொடர்ந்து அநீதிகள் இழைக்கப்படுவதைத் தடுத்து நிற்கும் மனச்சாட்சியாய் நாத்திகம் இயங்குகிறது என்பதை இந்திய தத்துவ நெறிமுறைக் கோட்பாடுகள் ஏற்றுக் கொள்கின்றன, அவற்றின் சிந்தனை மரபை அங்கீகரிக்கவும் செய்கின்றன. சார்வாகம் மற்றும் பிற தத்துவச் சம்பிரதாயங்களைப் பற்றி இன்னும் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

மானுடர்க்கு மறுபிறவி உண்டு என்பதும், தெய்வங்கள் அவதரிக்கின்றன என்பன இந்து சமயங்களுக்கே உரிய மற்றொரு முக்கியமான, தனித்தன்மை கொண்ட நம்பிக்கைகள். பிற சமயங்கள் போலன்றி, இந்து சமயங்கள் பல நூல்களைப் புனித நூல்களாய் ஏற்றுக் கொள்கின்றன. தொன்மங்கள் துவங்கி மீமெய்யியல் நூல்கள், வட்டாரம் சார்ந்த தொல்கதைகள், நதிகள், நகரங்கள், கோவில்களின் தலபுராணங்கள் என்று இந்து சமயங்களின் புனித நூல்கள் விரிவாக நீள்கின்றன. இந்து சமயங்களுக்கே உரிய மற்றொரு தனித்தன்மை குரு சம்பிரதாயம். குரு என்பவர் ஆச்சாரியர், வழிகாட்டி, ஆசிரியர் என்பதற்கெல்லாம் மேலே- தன்னை அணுகுபவர்கள் உள்ளத்தை சூழ்ந்திருக்கும் இருளைப் போக்க வல்லவர் என்றே அவர் அறியப்படுகிறார். எதையும் கற்றுத் தருவதோ, சீடர்களைச் சேர்த்துக் கொள்வதோ, நிறுவனங்களை உருவாக்குவதோ குருவின் கடமையல்ல- தன்னை அணுகுபவர்கள் அனைவரையும் மேம்படுத்துவதுதான் அவரது பணி.

இவற்றையும் இன்னும் பலவற்றையும் இந்தத் தொடரில் இன்னும் விரிவாக எழுத இருக்கிறேன். ஒரு சிலர் இதை வாசித்துப் பயன் பெறுவார்கள் என்றும் நம்புகிறேன். மானுட வரலாற்றில் ஈடு இணையற்ற உயர்வு கொண்ட சிந்தனைகள் பலவற்றை இந்து சமயங்கள் தம்முள் தேக்கி வைத்திருக்கின்றன. மிக உயர்ந்த தத்துவங்களைப் பேசுவதால் கீழினும் கீழானவனாய், எளியேனிலும் எளியவனாய், கடையனுக்கும் கடையனாய் உள்ளவர்களைக் கண்டு கொள்ளக்கூடாது என்றோ அவர்களுக்கு அன்பு செலுத்தக்கூடாது என்றோ இந்து சமயங்கள் சொல்வதில்லை. கண்டிக்கத்தக்க அத்தகைய நம்பிக்கைகள் காலவழு. ஆனால் இங்கு பேசப்படுவதோ, இந்து மதத்தையும் அதைச் சார்ந்த சமயங்களையும் சரியான வகையில் புரிந்து கொள்ள உதவக்கூடிய ஓர் அறிமுகம். அதன் அடிப்படை தத்துவங்களையும் மீமெய்யியல் உண்மைகளையும் சரியானபடி அறிமுகப்படுத்திக் கொள்வது இந்து சமயங்கள் குறித்த பிழைபுரிதல்களையும் அதையொட்டி எழக்கூடிய கீழ்மை உணர்வுகளையும் மிகைப் பெருமிதங்களையும் தவிர்க்க இன்று அவசியமாகிறது.

(அடுத்து- எட்டு ஆன்ம குணங்கள்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இந்து சமயம் – ஓர் அறிமுகம் – 2

இந்து மதங்கள் கூறும் எட்டு ஆன்ம குணங்கள்

உலகெங்கும் உள்ள மற்ற தத்துவ, சமய அமைப்புகளோடு ஒப்பிட்டால், மனிதனை மையப்படுத்தும் அமைப்புகளில் இந்திய தத்துவ சம்பிரதாயங்கள் அல்லது இந்து சமய முறைமைகளை மட்டுமே முதன்மையாகச் சொல்ல முடியும் என்று சென்ற பகுதியில் எழுதியிருந்தேன்.

ஆனால் அதுதான் ஏன்? ஆணோ, பெண்ணோ, மனிதன் தன் வாழ்வில் சாதிக்கக்கூடியது என்ன, வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? மனிதனின் கவலை இதுவாகத்தானே இருக்கின்றது?

இது போன்ற கேள்விகளைவிட அடிப்படை ஆளுமைக்கே இந்து தத்துவங்களிலும் சமயங்களிலும், அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது ஏன்? அதிலும் குறிப்பாக, துவக்ககால முறைமைகளுக்கு இது மிகவும் பொருந்துகின்றது.

இந்திய தத்துவ சம்பிரதாயங்களும் சமய அமைப்புகளும் ஆன்மீகம், பக்தி இவற்றை விட மனிதன் தன் வாழ்வு மேன்மையடைய கடைபிடிக்க வேண்டிய தர்மத்துக்கே முதன்மை இடம் அளிக்கின்றன.  இதைக் கேட்டால், உலகின் பிற பகுதிகளில் உள்ள அடிப்படைவாத மரபுகளைச் சேர்ந்த பலர் அதிர்ச்சியடையக்கூடும்.

ஒருவன் அடிப்படையில் நேர்மையாகவும் சரியாகவும் இருந்தால், அவன் அதைக் கொண்டு தன் திறமைகளைச் செம்மையாக வளர்த்துக் கொள்வான், சாவதற்குள் தன் லட்சியத்தை அடைந்து விடுவான் என்ற எண்ணமே தர்மத்தை வலியுறுத்த ஒரு காரணமாக இருக்கலாம்.

oOo

மேலும், இந்திய தத்துவ சம்பிரதாயங்கள்/ இந்து சமயங்களின் நெகிழ்வுத்தன்மை பற்றி சில விஷயங்கள் குறிப்பிட்டிருந்தேன். முதலில் கவனிக்க வேண்டியது, இந்த நெகிழ்வுத்தன்மையின் காரணம்- பல வகைகளில் மாறுபடும் மக்கள் குழுக்களை நெறிப்படுத்தவும், வெவ்வேறு திசைகளில் விரியும் அவர்களின் ரசனையைத் திருப்தி செய்யவும் இவை தோன்றின என்று எழுதியிருந்தேன்.

நெகிழ்வுத்தன்மையின் இரண்டாம் காரணம், எல்லாவற்றையும்விட உயர்ந்த மறைநூல் என்று எதுவும் இந்து சமயங்களில் கிடையாது. புத்தகத்தில் எழுதப்பட்ட ஒரே காரணத்தால் அதிலுள்ளவை எல்லாமே உயர்வு என்று இந்து சம்பிரதாயங்களும் சமய முறைமைகளும் கருதுவதில்லை.

மூன்றாம் காரணம்  பாகவத புராணத்தின் முடிவில் வேத வியாசர் சொல்வது – எது தர்மம், எது அதர்மம் என்பது காலத்துக்கு காலம், இடத்துக்கு இடம், சமூகத்துக்குச் சமூகம், சூழலுக்குச் சூழல் வேறுபடும் என்றும், புத்தகங்களில் உள்ளவை வழிகாட்டு நெறிகள் மட்டுமே, என்றும் எழுதியிருந்தேன்.

சம்ஸ்கிருத சமய நூல்களில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து சம்பிரதாயங்களும் சமய முறைமைகளும் தர்மம் அதன் சூழலைச் சார்ந்து மாறுபடும் தன்மை கொண்டது என்ற புரிதலை அளிக்கின்றன.

oOo

budhaஒழுக்கம் சூழல் சார்ந்தது என்பதால், அனைவருக்கும் பொருந்தக்கூடிய பொது ஒழுக்கம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று இந்து சமயங்கள் சொல்வதில்லை. மாறாக, மனிதன் தன் ஆளுமையைக் கொண்டு சூழலைக் கடப்பதற்குத் தேவையான ஒழுக்கங்களை வலியுறுத்தவே செய்கின்றன.

இந்தியாவில் உள்ள சம்பிரதாயங்கள் மற்றும் சமய முறைமைகளில் பலவும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டிய குறிப்பிட்ட சில அடிப்படை குணங்கள் எவை என்பதைக் கடந்த 2000 ஆண்டுகளாகச் சிந்தித்து வந்திருக்கின்றன. இந்தச் சிந்தனையைச் சிறந்த வகையில் வளர்த்தெடுத்ததன் பயனாக, சில இந்து சம்பிரதாயங்களும் மரபுகளும், மனிதன் தரமான வாழ்வு வாழ குறிப்பிட்ட சில ஒழுக்கங்கள் அவசியம் என்றும்கூட பிரகடனம் செய்கின்றன.

மனிதனிடம் இருக்க வேண்டிய நற்குணங்கள் எவை என்பது குறித்த விவாதங்கள் வரலாறு நெடுக பல சிந்தனை முறைமைகளில், ஏன் கதைகளிலும்கூட, காணப்படுகின்றன. இவற்றில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது கௌதமர் தன் தர்ம சூத்திரங்களில் மிக அவசிய நற்குணங்கள் என்று கூறும் எட்டு ஆன்மகுணங்கள்.  பலரும் ஏற்றுக்கொள்ளத் தகுந்தவையாக இருப்பதால்தான் இந்த எட்டும் நடைமுறையில் உள்ளன.  மற்றபடி “எட்டு” என்பதில் எந்தப் புனிதமும் இல்லை.

கௌதமருக்கு முன்னும் பின்னும் அடிப்படை குணங்கள் குறித்து நம்பிக்கைகள் இருந்தன, ஆனால் எட்டு ஆன்ம குணங்கள் என்ற விஷயம் கௌதமர் பெயரோடு மட்டும் எப்படியோ சேர்ந்து விட்டது.

பஞ்சசீலம் பற்றி பரிக்ஷீத்து என்கிற அரசன் பேசுவதை நாம் பார்க்க முடிகிறது என்றாலும், அந்தச் சொல் அவருக்குப் பின்னர் வந்த புத்தரோடு மட்டுமே தொடர்புபடுத்தப்படுகிறது என்பது போன்றதுதான் இது. கௌதமருக்கு முன்னரும் பின்னரும் விரும்பத்தக்க நற்குணங்கள் அல்லது லட்சிய தர்மங்கள் இருந்தன. வேத காலத்திலும்கூட ரிதம், சத்யம் முதலிய நற்குணங்கள், சூக்குமமான பல தத்துவங்களைக் காட்டிலும் உயர்வாகக் கருதப்பட்டதைப் பார்க்கிறோம்.

oOo

பிற அற மரபுகளிலும் முறைமைகளிலும் உள்ளதுபோல், சிற்றின்பங்களைத் துறக்க வேண்டும் என்ற அழைப்பையோ மைய மார்க்கம் ஒன்றைத் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்ற கோட்பாட்டையோ இந்து சமயங்களிலும் மரபுகளிலும் நாம் பார்க்க முடியாது. பிறர் வாழ்வில் குறுக்கிடாமல் நமக்கு விருப்பப்பட்ட வகையில் நிறைவான வாழ்வு வாழ அனைவரும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

மனிதன், தன் ஆசைகளைக் குறுக்கிக் கொள்ள வேண்டியதில்லை, ஆனால் அது பேராசையாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பசி, தாகம், கலவி போன்ற இயற்கை நாட்டங்களை நிறைவு செய்து கொள்ளும் விருப்பம் இயல்பானது. இதை உணர்ந்திருப்பதால், புலன் இன்பங்களைக் கட்டுப்படுத்த மிதமிஞ்சிய விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.

எது ஹிதம், அதாவது, நன்மை பயப்பது என்றும் எது ஹிதாதமம், மிகுந்த நன்மை பயப்பது என்ற பகுப்பையும் உபநிடதங்களில் பார்க்க முடிகிறது. பிறரையும் நம் ஆன்மாவாகவே நினைக்க வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தப்படுகிறார்கள். தனக்கும் தன் குடும்பத்துக்கும் நன்மையளிப்பதைச் செய்யும்படி ஒவ்வொரு மனிதனும் அறிவுறுத்தப்படுகிறான். ஆனால் இயல்புக்கு மாறானதாகவோ, சமூகத்துக்கு எதிரானதாகவோ இருக்கும்போது, அது கண்டிக்கப்படுகிறது.

நல்லது, கெட்டது என்ற பாகுபாட்டை உணர்ந்தால்தான் தர்மத்தைக் கடைபிடிக்க முடியும். எனவேதான், உலக விஷயங்களின் நிரந்தரமற்ற தன்மையை உணர்த்தி, எது விடுதலை பெற உதவியாக இருக்கும் என்பதைப் புரிய வைக்கவே இந்து சமய முறைமைகள் முயற்சி செய்கின்றன.

இந்த அடிப்படையில்தான் பக்தி சம்பிரதாயங்களில் “கீழ்மையான உணர்வுகளை அவற்றைவிட மேம்பட்ட லட்சியங்களில் கரைக்க வேண்டும்” என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

oOo

பிறப்பு முதல் மரணம் வரை ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய குறிப்பிட்ட சில சடங்குகளைப் பற்றிய நம்பிக்கை baudhayanaஇந்து மரபுகளில் உண்டு. இவை பதினாறு அல்லது நாற்பது என்ற எண்ணிக்கை கொண்டு, சம்ஸ்காரங்கள் என்று அறியப்படுகின்றன.

ஆனால், முக்கியமான இந்த நாற்பது சம்ஸ்காரங்கள் அத்தனையும் கடைபிடித்தாலும்கூட, எட்டு ஆன்ம குணங்கள் இல்லாதவனுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்று இதே மரபுகள் சொல்லவும் செய்கின்றன. கௌதமர் பட்டியலிடும் எட்டு ஆன்ம குணங்களும் கொண்டவன் எந்த சம்ஸ்காரமும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நாற்பது சம்ஸ்காரங்கள் செய்தவனைவிடவும், பண்டிதனைவிடவும், அவனே மதிக்கத்தக்கவன் என்றும் இதே மரபுகள் சொல்கின்றன.

அப்படியானால், எந்த தேசம், சாதி, சம்பிரதாயம், சமயத்துக்கு உரியவனாக இருந்தாலும் சில அடிப்படைக் குணங்கள் இருந்தால் அவனே பிற எவரைக் காட்டிலும் மேன்மையானவன் என்று போற்றும் இந்து சமயங்கள் வலியுறுத்தும் ஆன்ம குணங்கள் எவை?

இவையே அஷ்ட ஆன்ம குணங்கள்-

  1. தயை – அனைத்து உயிர்களிடத்தும் கருணை
  2. க்ஷாந்தி – பொறுமை மற்றும் எதையும் சகித்துக் கொள்ளும் மன உறுதி
  3. அனஸூயை – பொறாமைப்படாமல் இருத்தல்
  4. சௌச்சம் – உடல், மனம், செயலில் தூய்மை
  5. அனாயாசம் – தன்முனைப்பின் காரணமாகவும் பேராசை காரணமாகவும் எழக்கூடிய வலிமிகுந்த உழைப்பு
  6. மங்களம் – கலகலப்பாக இருத்தல், இறுக்கமற்று இருத்தல், நன்மையளித்தல் போன்ற நற்குணங்கள்
  7. அகார்ப்பணியம் – தாராள மனம் கொண்டிருத்தல், நன்னடத்தை, தன்னைக் கீழ்மைப்படுத்திக் கொள்ளாதிருத்தல்
  8. அஸ்ப்ருஹம் – வேண்டத்தகாதவற்றை விரும்பாதிருத்தல்

தயை

தயை என்றால் அனைத்து உயிர்களிடத்தும் அன்பும் கருணையும் கொண்டிருத்தல் என்று அர்த்தம். உலக உயிர்கள் அனைத்திடமும் கருணையோடு இருப்பவன்,  எண்ணத்தாலும் பிறருக்கு தீங்கு இழைக்க மாட்டான். இத்தகைய மனமே, அனைவரையும் மிகவும் நேசிப்பதாக வளரும். இதனால் அவன் அமைதியான, திருப்தியான, நிறைவான வாழ்வு வாழ முடியும்.

தயை என்பதற்கு பதிலாக அகிம்சையை அவசியமான ஆன்ம குணமாக வைத்துக் கொள்ளலாமா என்பது குறித்து நிறைய சர்ச்சைகள் உண்டு. ஆனால் அனைவரிடமும் அன்பும் கருணையும் உள்ள ஒருவன், பிறருக்குத் தீங்கு இழைப்பதை நினைத்தே பார்க்க மாட்டான் என்றால், அப்போது அகிம்சை இயல்பாகவே அவனது செயல்பாட்டில் வெளிப்படும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, தயை அகிம்சையைக் காட்டிலும் அடிப்படையானது, அகிம்சையைத் தன்னுள் கொண்டது.

பிற அனைத்து நற்குணங்களுக்கும் தோற்றுவாயான ஆதார குணம் என்பதால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய நற்குணங்களின் முதன்மை இடம் தயைக்கு அளிக்கப்படுகிறது.

க்ஷாந்தி

க்ஷாந்தி என்றால் சகிப்புத்தன்மை, பொறுமை.

விரயங்கள், வியாதி, ஏழ்மை போன்ற அத்தனை துன்பங்களையும் பொறுமையாகச் சகித்துக்கொள்ள வேண்டும் என்று தவறாக இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. அனைவரையும் நேசித்தல் என்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தீங்கு செய்பவர்களையும் மன்னித்து நேசிக்க வேண்டும். அப்படி அவர்களைப் புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு, அவர்களோடு நட்பு பாராட்டும்போது வரும் தொல்லைகளையும் பிரச்சினைகளையும் கண்டுகொள்ளாமல் தாண்டிச் செல்ல வேண்டும் என்றுதான் இந்த நற்குணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்பைக் கொண்டு பொறுமையை நிறைப்பதால் தயையே ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டிய முக்கியமான ஆன்ம குணம் ஆகிறது.

அனஸூயை

அனஸூயை என்றால், அஸூயையின்மை, பொறாமைப்படாமல் இருப்பது.

நாம் கருணை நிறைந்தவர்களாக அனைவரிமும் அன்பு செலுத்த வேண்டும். பிறரிடம் உள்ள செல்வம், புகழ், அழகு, திறமை என்று எதைப் பார்த்தும் நாம் பொறாமையை வளர்த்துக் கொள்ளக் கூடாது. பொறாமை வயிற்றெரிச்சலுக்கே இட்டுச் செல்கிறது, அதனால் உடல் நலம் கெடுகிறது, மன அமைதி குலைகிறது.

உடலும் ஆரோக்கியமாக இல்லை, மனதிலும் அமைதி இல்லை என்ற நிலையில் மனிதன் இயல்பாகவே வெறுப்புக்கும், அதன் உச்ச நிலையில் வன்முறைக்கும் இடம் கொடுப்பான்.  பொறாமைப்படாத ஒருவனது மனமும் உடலும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக இருக்கும். அதனால் அவன் எதிலும் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியும். பொறாமைப்படுபவனைவிட, அமைதியான மனதும் ஆரோக்கியமான உடலும் உள்ள ஒருவன் நன்றாக வேலை செய்ய முடியும்.

சௌச்சம்

சௌச்சம் என்றால் சுத்தம், அல்லது தூய்மை. புறத்தூய்மை மட்டுமல்ல, அகத்தூய்மையும் கடைபிடிக்கப்பட வேண்டும். நம் செயல்களை நம் எண்ணங்களே தீர்மானிக்கின்றன என்பதால், நாம் தெளிவான, தூய்மையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வாயால் சாப்பிடுவது மட்டுமல்ல, நம் புலன் உறுப்புகள் வழி உட்செல்வது அனைத்துமே ஆகாரம் என்று பொருள்கொள்ள வேண்டும் என்றார் ஆதி சங்கரர். எனவே ஆகாரசுத்தி என்பது, தூய உணவு மட்டுமல்ல, புலன் அனுபவங்கள் அனைத்திலும் தூய்மை கொண்டிருத்தல்.

குளித்தல், தூய ஆடை அணிந்திருத்தல், தன் புலன்களைக் கொண்டு தூய விஷயங்களை மட்டுமே அறிதல் என்று தூய அனுபவங்களைத் துய்க்கும் ஒருவனது எண்ணம், சொல், செயல் என்று அனைத்தும் ஒருமைப்பாடு கொண்டதாக இருக்கும்.

அனாயாசம்

ஆயாசம் என்றால் களைப்பு, உழைப்பு. துல்லியமாகச் சொன்னால், ஆயாசம் என்பதன் எதிர்ப்பதம், அல்லது, ஆயாசமின்மை என்பதுதான் அனாயாசம். இது தவிர, இந்தச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.

சுமுகமாக இருப்பது, எதையும் சாந்தமுடன் எடுத்துக் கொள்வது, மன அழுத்தமில்லாமல் இருப்பது, துன்பத்தில் கொண்டு போய் சேர்க்கும் பிரயாசைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது, என்று நிறைய சொல்லலாம். சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, நவீன உளவியலில் flow என்ற ஒரு தத்துவம் உண்டு, இது அதற்கு இணையான ஒன்று.

பொதுவாக சமகாலத்தில் தன்முனைப்பு மிக அதிகமாக இருக்கிறது, பல விஷயங்களை அடையும் பொருட்டு நாம் கடுமையாக உழைக்கிறோம். நவீன உலகின் நற்குணங்களுள் ஒன்று என்று இந்த இயல்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. ஆனாலும்கூட இதனால் ஏற்படும் கடும் உளைச்சல் உடலுக்கும் உள்ளத்துக்கும் எல்லையற்ற தீங்கு செய்கிறது. இதனால் நாம் இறுக்கமானவர்கள் ஆகிறோம். கோபம், பொறாமை, ஆத்திரம் போன்ற குணங்களை வெளிப்படுத்துகிறோம்.

உலகெங்கும் உள்ள சமூகங்களில் நாளுக்கு நாள் வன்முறையும் சகிப்புத்தன்மையின்மையும் அதிகரித்து வருவது ஏன் என்று பார்த்தால் இந்த நற்குணங்கள் வேகமாக மறைந்து வருகின்றன எனபதைதான் காண்கிறோம்.

மங்களம்

மங்களம் என்பது எப்போதும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருப்பதைக் குறிக்கிறது. அப்படி இருப்பவனைச் சுற்றி எப்போதும் சுபமான சூழல் இருக்கும். மனிதன் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்போது அவனைச் சுற்றிலும் அந்த உணர்வுகள் பரவுகின்றன. எனவே, மங்களம் என்பது லகுவாகவும் உற்சாகமாகவும் நாமும் இருந்து கொண்டு நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதேயாகும்.

அன்பும் கருணையும் நிறைந்த ஒருவன் தூய்மையாகவும் பொறாமையற்றவனாகவும் இருந்து, எப்போதும் உற்சாகமாக (இதுவரைச் சொல்லப்பட்ட ஆன்மகுணங்கள்)  செய்யும் வேலைகள் அத்தனையும் அனாயசமாக இருக்கும் (இதற்கு முந்தைய ஆன்மகுணம்).

 

அகார்ப்பணியம்

கருமித்தனத்தின் எதிர்குணம்தான் அகார்ப்பணியம், அதாவது தயாள சிந்தை. தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல், கௌரவமாக நடந்து கொள்வது என்ற பொருளும் இச்சொல்லுக்கு உண்டு. தீரமும் தயாள குணமும் இருக்கும் ஒருவன் எந்த சூழ்நிலையிலும் உற்சாகமாக, அமைதியாக, தூய மனதுடன், உறுதியாக, கருணை உள்ளத்துடன் இருக்கும் நிலைதான் அகார்ப்பணிய குணம். ஒருவன் எவ்வளவு மோசம் போனாலும், தன் கௌரவத்தைக் கெடுத்துக் கொள்வதைக் காட்டிலும் உலகில் வேறு எதுவும் அவனைக் கீழ்மை செய்வதாக இருக்காது.

 

அஸ்ப்ருஹம்

ஸ்ப்ருஹம் என்பது அத்தனைக்கும் ஆசைப்படச் சொல்லும் பேராசை. அஸ்ப்ருஹம் என்பது இந்த குணமற்ற இயல்பு. தர்மத்துக்குப் புறம்பாக இல்லாத இன்பங்கள் அனுபவிப்பதை இந்து சாஸ்திரங்கள் அனுமதிக்கின்றன என்றாலும், அனைத்து மோகங்களும் வலுவற்றவை என்பதையும் பயனற்றவை என்பதையும் நாம் உணர வேண்டும் என்று அவை கூறுகின்றன.

“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்” என்பது திருமூலர் வாக்கு.

இதுவே மிக உயர்ந்த நிலை, சாஸ்திரங்களில் கூறப்பட்ட தர்ம வாழ்வை அனைவரும் வாழ்ந்து மோகமற்ற பெருவாழ்வு வாழ வேண்டும்.

ஆன்ம குணங்கள் எட்டும்
உலகோர் அனைவருக்கும் கிட்டட்டும்!
உயிர்கள் அனைத்தும்
இணக்கமும் அமைதியுமாய் வாழட்டும்!
அனைவருக்கும் ஆரோக்கியமும்
ஆனந்தமும் செல்வமும் சேரட்டும்!

 

இந்த எட்டு ஆன்ம குணங்களையும் இன்னும் விரிவாக அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவர்கள், இவ்விரண்டு நூல்களையும் வாசிக்கலாம்:

 

  1. Patrick OlivelleThe Dharmasutras of Apastamba, Gautama, Baudhayana and Vasishta, (Sanskrit and annotated translations), In Sources of Indian Law, 2000, Delhi: Motilal Banarsidass.
  2. P.V. KaneHistory of Dharma Shastras, 5 vols, 1962-1975, Pune: Bhandarkar Oriental Research Institute.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard