New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1. கடவுள் வாழ்த்து


Guru

Status: Offline
Posts: 24601
Date:
1. கடவுள் வாழ்த்து
Permalink  
 


கடவுள் வாழ்த்து 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.                                      குறள் 1:

கலைஞர் மு.கருணாநிதி உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வரதராசனார் உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

பரிமேலழகர் உரை: அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறுதலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமை ஆகலின் , இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க. 

விளக்கம்: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து. (இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: உலகில் வழங்கிவரும் எழுத்துக்கள் எல்லாம் ஒளிவடிவான 'அகர'மாகிய முதலை உடையன. அதுபோல, உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடையது.

Translation: A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.

Explanation: As all letters have the letter A for their first, so the world has the eternal

 

God for its first.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.                                      குறள் 2:

கலைஞர் மு.கருணாநிதி உரை: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.

மு.வரதராசனார் உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.

பரிமேலழகர் உரை: கற்றதனால் ஆய பயன் என் - எல்லா நூல்களையும் கற்றவர்க்கு அக்கல்வி அறிவான் ஆய பயன் யாது?; வால் அறிவன் நல் தாள் தொழாஅர் எனின் - மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்? (எவன் என்னும் வினாப்பெயர் என் என்று ஆய், ஈண்டு இன்மை குறித்து நின்றது. 'கொல்' என்பது அசைநிலை. பிறவிப் பிணிக்கு மருந்து ஆகலின் 'நற்றாள்' என்றார். ஆகம அறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது இதனான் கூறப்பட்டது.

மணக்குடவர் உரை: மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:

எல்லா நூல்களையும் கற்றவனுக்கு அக்கல்வி அறிவால் உண்டான பயன் என்னவென்றால். தூய அறிவினன் - மெய்யுணர்வினன் - ஆகிய இறைவனுடைய நல்ல அடிகளைத் தொழுதல் ஆகும்.

Translation: No fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise One's'feet adore.

Explanation: What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.                        குறள் 3:

கலைஞர் மு.கருணாநிதி உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

மு.வரதராசனார் உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

பரிமேலழகர் உரை: மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார் - மலரின் கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்; நிலமிசை நீடுவாழ்வார் - எல்லா உலகிற்கும் மேலாய வீட்டு உலகின்கண் அழிவின்றி வாழ்வார். (அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின் 'ஏகினான்' என இறந்த காலத்தால் கூறினார்; என்னை? "வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44) என்பது ஓத்தாகலின். இதனைப் 'பூமேல் நடந்தான்' என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர். சேர்தல் - இடைவிடாது நினைத்தல்).

மணக்குடவர் உரை: மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். 'நிலம்' என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: உள்ளக் கமலத்தில் - மனத்தில் - சென்றிருப்பவனான இறைவனுடைய மாட்சியமைப்பட்ட அடிகளை எப்போதும் நினைப்பவர்கள் , உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.

Translation: His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain.

Explanation: They who are united to the glorious feet of Him who occupies swiftly the flower of the mind, shall flourish in the highest of worlds (heaven).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.                                                                 குறள் 4:

கலைஞர் மு.கருணாநிதி உரை: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மு.வரதராசனார் உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

பரிமேலழகர் உரை:

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; யாண்டும் இடும்பை இல - எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா. (பிறவித் துன்பங்களாவன : தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையான் வரும் துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும் (வேண்டுதலும் வேண்டாமையும்) இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.).

மணக்குடவர் உரை: இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு "வேண்டுதல் வேண்டாமையிலான்" என்று பெயரிட்டார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: விருப்பும் வெறுப்பும் இல்லாவனான இறைவனின் அடிகளை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பமே உண்டாகாது.

Translation: His foot, 'Whom want affects not, irks not grief,' who gain

Shall not, through every time, of any woes complain.

Explanation: To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.                         குறள் 5:

கலைஞர் மு.கருணாநிதி  உரை: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

மு.வரதராசனார் உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

சாலமன் பாப்பையா உரை: கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

பரிமேலழகர் உரை: இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா; இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. (இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்).

மணக்குடவர் உரை: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:  அஞ்ஞானத்தினால் வருவின்ற நல்வினை தீவினையாகிய இரண்டும், இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழினை விரும்பினவர் இடத்தில் ஏற்படுவதில்லை.

Translation: The men, who on the 'King's' true praised delight to dwell, Affects not them the fruit of deeds done ill or well.

Explanation: The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.                                          குறள் 6:

கலைஞர் மு.கருணாநிதி  உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

மு.வரதராசனார் உரை:ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை:மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றர் நெடுங்காலம் வாழ்வார்.

பரிமேலழகர் உரை:பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார், நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார். (புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது).

மணக்குடவர் உரை: மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மெய், வாய், கண், மூக்கு, செவியாகிய ஐந்து பொறிகளின் வழியாக வரும் ஆசைகளை அறுத்தவனுடைய மெய்யான ஒழுக்க வழியில் நின்றவர்கள், எக்காலத்திலும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்.

Translation: Long live they blest, who 've stood in path from falsehood freed; His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.

Explanation:Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.                                              குறள் 7:

கலைஞர் மு.கருணாநிதி உரை:ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

மு.வரதராசனார் உரை:தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா உரை:தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

பரிமேலழகர் உரை: தனக்கு உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் - ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனக்கவலை மாற்றல் அரிது - மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ("உறற்பால தீண்டா விடுதலரிது" (நாலடி.109) என்றாற் போல, ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.).

மணக்குடவர் உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:  தனக்கு ஈதாக எதனையும் ஒப்பிட்டுக் கூற முடியாவனுடைய தாள்களை நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களால் மனத்தில் உண்டாகும் துன்பங்களை நீக்க முடியாது.

Translation: Unless His foot, 'to Whom none can compare,gain, 'This hard for mind to find relief from anxious pain.

Explanation: Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.                                               குறள் 8:

கலைஞர் மு.கருணாநிதி  உரை:  அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

மு.வரதராசனார் உரை: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

பரிமேலழகர் உரை: அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் - அறக்கடல் ஆகிய அந்தணனது தாள் ஆகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது; பிற ஆழி நீந்தல் அரிது. அதனின் பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது. (அறம், பொருள், இன்பம் என உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும், இன்பமும் பிற எனப்பட்டன. பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்கு வடிவமாக உடையான் ஆகலின், 'அறஆழி' அந்தணன் என்றார். 'அறஆழி' என்பதனைத் தரும சக்கரம் ஆக்கி, 'அதனை உடைய அந்தணன்' என்று உரைப்பாரும் உளர். அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தல் அரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்.).

மணக்குடவர் உரை: அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அறக்கடலாகிய இறைவனுடைய அடிகளாகிய தெய்வத்தினைச் சார்ந்தவர்க்கு அல்லாமல், மற்றவர்களுக்குப் பொருள், இன்பம் ஆகிய கடல்களை நீந்திக் கடத்தல் முடியாததாகும்.

Translation: Unless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain, 'Tis hard the further bank of being's changeful sea to attain.

Explanation: None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.                                            குறள் 9:

கலைஞர் மு.கருணாநிதி  உரை: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

மு.வரதராசனார் உரை:கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா உரை:எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

பரிமேலழகர் உரை:கோள் இல் பொறியில் குணம் இல - தத்தமக்கு ஏற்ற புலன்களைக் கொள்கை இல்லாத பொறிகள் போலப் பயன்படுதலுடைய அல்ல; எண் குணத்தான் தாளை வணங்காத் தலை - எண் வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள். (எண்குணங்களாவன: தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினன் ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவு இல் ஆற்றல் உடைமை, வரம்பு இல் இன்பம் உடைமை என இவை.இவ்வாறு சைவாகமத்துக் கூறப்பட்டது. 'அணிமா' வை முதலாக உடையன எனவும், 'கடை இலா அறிவை' முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர். காணாத கண் முதலியன போல வணங்காத தலைகள் பயன் இல எனத்தலைமேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும், இனம்பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயன் இல என்பதூஉம் கொள்க. இவை மூன்று பாட்டானும் அவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை: அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தத்தமக்குரிய புலன்களைக் கொள்ளுதல் இல்லாத மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளைப்  போல அறிந்துணர்வதற்குரிய எளிமையான குணங்களையுடைய இறைவனுடைய தாள்களை வணங்காத் தலைகளும் பயன்படுத்தலுடையான் அல்லவாம்.

Translation: Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head, Who stands, like palsied sense, is to all living functions dead.

Explanation:The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.                                   குறள் 10:

கலைஞர் மு.கருணாநிதி  உரை: வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

மு.வரதராசனார் உரை:இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை:கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

பரிமேலழகர் உரை:இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.

திருக்குறளார் வீ. முனிசாமி உரை:  இறைவன் அடிகள் என்னும் தொப்பத்தைச் சேர்ந்தவர்கள், பிறவியாகிய கடலை நீந்திக் கடப்பர். அவ்வாறு சேராதவர்கள் (நினைத்திருக்காதவர்கள்) நீந்த மாட்டார்கள்; அதனுள் அழுந்துவார்கள்.

Translation: They swim the sea of births, the 'Monarch's' foot who gain; None others reach the shore of being's mighty main.

Explanation: None can swim the great sea of births but those who are united to the feet of God.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

”ஆதிபகவன் முதற்றே உலகு” - உலகுக்குக் காரணப் பொருள் கூறும் வள்ளுவம் வைதிக நூலே , ”ஜந்மாத்யஸ்ய யத:” “உலகம் யாவையும் தாமுளவாக்கலும்......” “ நிகில புவந ஜந்ம ஸ்தேம பங்காதி லீலே.....” இன்னும் நிறைய. [மறைசார் நூல்கள் பலவும் ஜகத்காரண வஸ்துவைச் சொல்வது வழக்கம்]

(திருக்குறளைச் சமண நூல் என்பது முற்றிலும் தவறு; சமணம் ‘முதலா உலகு’ என உலகை வரையறுத்து வைத்துள்ளது. குறளின் முதற்பா இவ்வரையறைக்குப் பொருந்தாது)

”இறைவன் பொருள்சேர் புகழ் புரிதல்” - கடவுளைத் தோத்தரிக்கும் தொல்மரபு.

“மற்றீண்டு வாரா நெறி” - ந ச புநராவர்த்ததே, அநாவ்ருத்தி சப்தாத், ‘மாம் உபேத்ய து புநர்ஜந்ம ந வித்யதே’ [மறைகளும், பிரம்ம சூத்திரமும், கீதையும் சொல்வதுதான்]

”अक्षैर्मा दीव्यः कृषिमित् कृषस्व,वित्ते रमस्व बहु मन्यमानः।”
அக்ஷைர்மா தீவ்ய​: க்ருஷிமித் க்ருஷஸ்வ,வித்தே ரமஸ்வ பஹு மந்யமாந​:| [இருக்கு வேதம்]

மூவாமறை கூறியதை வழிமொழிகிறது வள்ளுவம் - ”இசைபட வாழ வேண்டுமாயின் கழகமேறிச் சூதாடுதல் வேண்டா; உழுதுண்டு பெருமிதத்தோடு வாழ்”

மாந்தரின் நிலைப்பேறுகள் அறம், பொருள், இன்பம், வீடு என நான்காக வகுக்கப்பட்டுள்ளன; இவற்றுள் அறம், பொருள், இன்பம் மூன்றையும் ‘த்ரிவர்கம்’ எனும் ஒரே பகுப்பாகச் சொல்வது மரபு; மஹாபாரதம் ஆதி பர்வத்தில் காணலாம். அநுசாஸந - சாந்தி பர்வங்களில் உள்ளது. வள்ளுவம் த்ரிவர்கத்தைத் தமிழில் விளக்கிச் சொல்ல எழுந்த ஒரு நூல். [மோக்ஷம் அல்லது வீடுபேறு ‘அபவர்கம்’ எனப்படுகிறது; குறள் அதைக் கோடிகாட்டுகின்றதேயன்றி விவரிக்கவில்லை]

ஆச்ரயாச: [ஆச்ரய அச:] என்பது வள்ளுவத்தில் ‘சேர்ந்தாரைக்கொல்லி’ ஆகிறது.
நிலமெனும் நல்லாள், நாண் எனும் நல்லாள் - அஃறிணையை , உணர்ச்சிப்பொருளைப் பெண்பாலாகச் சுட்டுவது வடநூலார் வழக்கு.

மதிநுட்பம் நூலோடுடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற்பவை.
[அதிநுட்பம் - அவ்யவீபாவ ஸமாஸம்; ‘அதி’ என்பது ஒரு சங்கத முன்னொட்டு, உபஸர்கம்]

பல முதுமொழிகள் குறட்பாக்களோடு பொருந்தி நிற்கின்றன.

வள்ளுவத்தைக் கடத்திச் செல்ல எத்தனைதான் முயன்றாலும் நிறைவேற வாய்ப்பில்லை. முயல்வோர் முனைக, தடை இல்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

"தாமரைக் கண்ணான் உலகு” -
தாமரைக் கண்ணான் இந்திரன் என்பர் ஒரு சாரார்.

வைதிகர் அல்லாத சிரமண சமயம் சார்ந்த அமரசிம்மர் செய்த அமர கோசம் மாலவனையே ‘தாமரைக் கண்ணான்’ என்கிறது; இந்திரனைச் சொல்லவில்லை;

காரணப் பெயராகக் கொண்டாலும், இடுகுறிப் பெயராகக் கொண்டாலும் ‘தாமரைக் கண்ணான்’ என்பது மாலவனுக்கே பொருந்த அமைந்துள்ளது.

அமரம் சொல்லும் அச்சுதனுக்கான 39 நாமங்களுள் ஒன்று ‘புண்டரீகாக்ஷ:’ - தாமரைக் கண்ணான்

विष्णुर्नारायणः कृष्णो वैकुण्ठो विष्टरश्रवाः।
दामोदरो हृषीकेशः केशवो माधवः स्वभूः ।।१-१-१८।।
दैत्यारिः "पुण्डरीकाक्षो" गोविन्दो गरुडध्वजः।
पीताम्बरोऽच्युतः शार्ङ्गी विष्वक्सेनो जनार्दनः ।।१-१-१९।।
उपेन्द्र इन्द्रावरजश्चक्रपाणिश्चतुर्भुजः।
पद्मनाभो मधुरिपुर्वासुदेवस्त्रिविक्रमः ।।१-१-२०।।
देवकीनन्दनः शौरिः श्रीपतिः पुरुषोत्तमः।
वनमाली बलिध्वंसी कंसारातिरधोक्षजः ।।१-१-२१।।
विश्वम्भरः कैटभजिद्विधुः श्रीवत्सलाञ्छनः।।१-१-२२।।

அமரம் அமரேந்திரனை ஆயிரம் கண்ணான் - ஸஹஸ்ராக்ஷ: என்கிறது:

इन्द्रो मरुत्वान्मघवा बिडौजाः पाकशासनः।
वृद्धश्रवाः सुनासीरः पुरुहूतः पुरंदर: ।।१-१-४१।।
जिष्णुर्लेखर्षभः शक्रः शतमन्युर्दिवस्पति:।
सुत्रामा गोत्रभिद्वज्री वासवो वृत्रहा वृषा ।।१-१-४२।।
वास्तोष्पतिः सुरपतिर्बलारातिः शचीपति:।
जम्भभेदी हरिहयः स्वाराण्नमुचिसूदनः ।।१-१-४३।।
संक्रन्दनो दुश्च्यवनस्तुराषाण्मेघवाहन:।
आखण्डलः ”सहस्राक्ष” ऋभुक्षा:।।१-१-४४।।



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

திருக்குறள்’ மறைசார் இந்துசமய நூல் என நிறுவுவது இந்துத்துவர் தற்போது புதிதாக மேற்கொள்ளும் முயற்சி அன்று. பரிமேலழகர் தலையாய பழைய உரைகாரர்களும், ‘திருவள்ளுவ மாலை’ எழுதிய புலவர்களும் [50க்கும் மேற்பட்ட பாடல்கள்] ஏற்கெனவே சொல்லிப்போந்த செய்தியே.

மூல நூலான திருக்குறளுக்கு இணையான இலக்கியச் சிறப்பு வாய்ந்த நூல் அதற்கு விளக்கமாக அமைந்த பரிமேலழகர் செய்த உரை -

வள்ளுவர்நூல் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே 
தெள்ளுபரி மேலழகன் செய்தவுரை – ஒள்ளியசீர்த் தொண்டர்புராணம் தொகுசித்தி ஓர்ஆறும் 
தண்டமிழின் மேலாம் தரம்.

அறிஞர் அனைவரும் ஒருமனதாக ஆதரித்து வந்தது பரிமேலழகர்தம் குறள் தலைப்பு வைப்பு முறையையே. 20ம் நூற்றாண்டின் பகுத்தறிவுப் பாசறை சார்ந்த ஆர்வலர் பெரும்பான்மை உரை வரைந்ததும் பரிமேலழகர்தம் உரையை ஒட்டியே. இன்னும் அதற்கு நிகரான பிறிதோர் உரை குறளுக்கு வாய்க்கவில்லை. வள்ளுவர்பிரான் சொல்லும் சமயநெறிசார் ஆன்மிகக் கருத்துகளுக்குத் தெளிவான விளக்கம் கூற இயலாமல் பல்லிளிக்கும் அவலத்தையும் 20ம் நூற்றாண்டின் போலிப் பகுத்தறிவு வியாக்கியானங்களில் காணலாம்.

பரிமேலழகர் உரைக்குமுன் ஒன்பது உரைகள் இருந்தன; அவ்வுரைக்குப் பின்பும் பல உரைகள்; ஆனால் மறைநெறிசார் பரிமேலழகர் உரை அனைத்துக்கும் நடுவில் பரிதிபோல் ஒளிர்கிறது.

சமய இலக்கியங்களில் குறளின் தாக்கம் மிகுதி.
சேரமான் பெருமாள் நாயனாரின் திருக்கயிலாய ஞான உலா நூல் குறட்பாவை அப்படியே கையாண்டுள்ளது. தெய்வப் புலவர் சேக்கிழார் சோழ மன்னனின் வினாக்களுக்கு குறட்பாக்களைக் கூறியே விடை பகன்றார். பழந்தமிழரின் கல்வியில் குறளுக்குக் கட்டாய இடமிருந்தது எனத் தெளியலாம்.

இரங்கேச வெண்பா [அ] நீதி சூடாமணி எனும் நூல் குறட்கருத்தின் அடிப்படைகொண்ட புராண - இதிகாச நிகழ்வுகளைப் பொருத்திப் பகர்கிறது -
http://www.vallamai.com/?p=2649

கம்பன் பாடிய குறள்:
http://www.tamilhindu.com/2011/07/kamban-sings-the-kural/

திருவள்ளுவ மாலை:
http://www.thiruvalluvar.co.in/…/thiruvalluva-malai-1-5-of-…



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 கிரித்தவத் திருட்டு :

நம் கடவுளரை அகற்றினர்; பிசாசுகள் எனப் பழித்தனர். ஆனால் ஹிந்துப் பெயர்களை/ வழிபாட்டு முறை - சடங்குகளைத் தமதாக்கிக் கொண்டனர். கருத்துச் செரிவால் மக்களை ஈர்ப்பதில் தோற்றுவிட்டதால் மதத்துக்கு ஆள்பிடிக்கும் களவாணித்தனத்துக்கு அவர்களாகவே வைத்துக்கொண்ட நாகரிகப் பெயர் ‘inculturation’.

‘ரக்ஷண்ய மநோஹரம்’ ‘ரக்ஷண்ய யாத்ரிகம்’ எனும் கவர்ச்சிகரமான சங்கதத் தலைப்புகள்; உண்மையில் ‘ரக்ஷண்ய’ எனும் சொல் ஸம்ஸ்க்ருதத்தில் கிடையவே கிடையாது. அத்தலைப்புக்களின் பொருளைக் கிரித்தவரே அறிய மாட்டார்கள்.

நம் பழைய வேதாந்த நூல்களை அப்படியே படிசெய்து ஒட்டிய வரிகள் இந்நூல்களில்.

ஹிந்து சமய வழிச் சிந்தனைகள் இல்லாமல் தம் நூல்களுக்குச் செழுமை இல்லை என்பதை நன்குணர்ந்திருந்தனர். கிரித்தவப் பாடல்களில் நம் சமயத்தாக்கம் -

அநாதி நித்தியமாய், அகளங்க விபுவாய், 
மநாதிகட் கெட்டா மௌனநன் னிலையாய்......

சங்கற்ப மாத்திரம் சகமெலாம் சிருட்டித் 
தங்கவை புரக்கும் அருட்குண நிதியாய்.....

சர்வோத் கிருஷ்ட சர்வபரி பூரண 
சர்வா திக்க சச்சிதா னந்தமாய்.....

சர்வ லோக சரணியா போற்றி! 
சர்வ சீவ தயாபரா போற்றி!

[கிருஷ்ண பிள்ளையின் ‘இரட்சணிய மனோஹரம்’]

ஒரு பாடலில் ‘ஸாதந சதுஷ்டய ஸம்பத்’ பற்றியும் சொல்கிறார் மதம் மாறிய ஹென்றி ஆல்ஃப்ரட் கிருஷ்ணபிள்ளை.மதம் மாறிய பின்னரும் ஹிந்துப் பெயர் / சாதிப் பெயர்களை விடாமல் இணைத்தே வைத்துக்கொள்ளும் உத்தி 19ம் நூற்0லிருந்தே இருந்து வருகிறது.

கிரித்தவர் எத்தனை பேர் ஸாதந சதுஷ்டய ஸம்பத்தை அறிவர்?

ஏசுவையே சந்தேகித்த அவர்தம் முதன்மைச் சீடர் தோமாவுக்கு ‘ஸாதந சதுஷ்டய ஸம்பத்’ இருந்ததா?

சிந்தனை வறட்சியைத் திருட்டு வரிகளால் ஈடுகட்டி, அதை எடுத்த இடத்திலேயே விற்பனை செய்வது ஒரு சமயமா?

இதற்கெல்லாம் மூலம் விவிலியத்தில் உள்ளதா?

இதெல்லாம் என்ன உத்திகள்?

கிரித்தவரின் பரமார்த்த குரு கதைகளிலும் திருட்டுச் சரக்கு உண்டு.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உருவமற்ற இறைவனும் உருவ வழிபாடும்!

↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️↔️

 

உருவ வழிபாடு கேவலமானது -

ஹிந்து மத வழிபாட்டு முறை

பிற்போக்கான மூட நம்பிக்கை . 

இது இறைவழிபாடே அல்ல. 

இழிநிலை பக்தி

என்ற பிரச்சாரங்கள் கூட நடக்கின்றன.

 

ஆனால், 

உருவம் இல்லாத இறைவனை அடைய 

உருவ வழிபாடு என்கிற சுலபமான பாதையை ஹிந்து மதம் கண்டறிந்தது என்பதே உண்மை!

 

ஒரு எளிய உதாரணத்துடன் இதை அணுகலாம்.

 

நேற்று குறிப்பிட்ட 

உருவம் இல்லாத ஆன்மாவாகிய நான்

உடல் என்னும் உருவம் கொண்ட நான்!

 

உருவம் இல்லாத பேரொளியாகிய இறைவன்

திருமேனி கொண்ட இறைவன் !

என்ற உதாரணத்தில் இருந்தே வருவோம்!

 

என்னை அறிந்த

என்னைத் தெரிந்த

என்னை உணர்ந்த

உறவுகளும்

நட்புகளும் என்னிடம் அன்பு செலுத்துகின்றன!

 

இவர்கள் ஒரே அடிப்படையில் என்னோடு இணையவில்லை!

எனது பேச்சு முறையால்

எனது பழகு முறையால்

எனது செயல்களின் விளைவாய் என்று பலவித

காரணங்களால் இணைந்தார்கள்!

 

எனது பேச்சு

பழக்க வழக்கம்

செயல்கள்

இன்னும் பிற இயக்கங்களுக்கு

உடலே முதன்மையாக இருந்தது!

 

உடல்மொழியால் என்னோடு இணைந்த

சுற்றங்களும்

நட்புகளும் என்னிடம் அவர்களுக்கு எது பிடித்தமானதாக இருந்ததோ அதை மட்டும் வைத்து என்னுடனான நெருக்கத்தை அந்த அளவில் நிறுத்திக் கொள்கின்றார்கள்!

 

சிலர் எனது பழகும் முறையை விரும்பி அதன் பிறகு

மேலும் நெருங்கி 

எனது மற்ற அம்சங்களையும் அறிந்து 

மேலும் நெருக்கமாகிறார்கள் !

ஒன்றிரண்டு பேர் மட்டுமே உடல் மொழி கடந்து என்னோடு

" ஆத்மார்த்த" நெருக்கம் கொள்ள முடிகிறது!

 

மற்றவைகளோட உறவில் நானும்

உடலின் செயல்கொண்டே உறவாடுகிறேன்!

ஒன்றிரண்டு பேருடன் மட்டுமே எனக்கும்

" ஆத்மார்த்த" நெருக்கம் கொள்ள முடிந்ததிருக்கிறது!

 

ஆக, 

என்னுடன் இணைந்து இருக்கும் ஒரு நூறு பேரில்

 

ஒரு ஐம்பது பேர் 

எனது உடல் வெளிப்படுத்தும் ஒரு செயலைக் கண்டு இணைந்து அதோடு நிற்கிறார்கள்!

 

சிலர் மேலும் சில குணங்களை அறிந்து நெருக்கமாகிறார்கள்!

 

இன்னும் சிலரால் மேலும் அறிய முடிகிறது!

 

ஒன்றிரண்டு பேர் மட்டுமே உடலின் செயல்களை முற்றாக அறிந்து

அதையும் தாண்டி

என் ஆன்மாவை "உணர்கிறார்கள் "

 

பிறருடனான உறவில்

கொஞ்சம் அறிகிறேன்

கூடுதலாக அறிகிறேன்

பெருமளவு அறிகிறேன்

 

ஒன்றிரண்டு பேரை ஆத்மார்த்தமாக " "உணர்கிறேன்"

 

அறிவது

உணர்வது

இரண்டும் வேறு வேறு!

அறிவது சுலபம்

உணர்வது கடினம்!

 

இதேபோல 

இறைவனை அறிதல்

இறைவனை உணர்தல்

இறைவனை அடைதல் என்ற

படிநிலைகள் இருப்பது இயல்புதானே?

 

இறைவனை அறிதல்

மனிதனை அறிதலை விட சிரமமானது!

இறைவனை உணர்வது

மனிதனை உணர்தலோடு ஒப்பிட முடியாதது!

 

இறைவனை உணர்தல்.....

இறைவனை அடைதல்.....

கடினத் தேர்வு முறை தயாரிப்பு போன்றது!

 

இந்த கடினமான தேர்வில் தேர்ச்சி அடைய மேற்கொள்ளும் முதல் பாடமே அறிதல்!

 

அந்த அறிதலுக்கு 

இறைவன் உருவம் கொண்டு புரிந்த அற்புதங்களே

பாடங்களாக இருக்கின்றன!

 

அந்த பாடங்களில்

கனிவு காட்டிய அற்புதங்கள்!

காத்து ரட்ஷித்த பராக்கிரம அற்புதங்கள்!

மீட்டு மோட்சம் அளித்த அற்புதங்கள்!

மகிழ்ந்து வரம் அளித்த அற்புதங்கள்!

என்று பலவகை அற்புதங்கள்!

 

இவற்றில் ஒரு வகை அற்புதத்தில் திளைத்து

இறைவனை அறியும் ஈடுபாடு கொண்டவர்கள்

மேலும் அறிந்து

பாடத்தை விரிவு படுத்திக் கொள்பவர்கள் 

மேலும் அறிந்து ஸ்பெஷலைஸ் செய்பவர்கள் என்று

இறைவனை அறிதல் எனும் தேர்ச்சி விரிகிறது!

 

இதில் லயித்து சுவைக்கும் போது

மனம் தகர்நது போகிறது ; ஆன்மா விரிகிறது!

 

இறைவனை

அறிவதில் உள்ள விருப்பம் முடிந்து

" உணர்தலில் " வேட்கை பிறக்கிறது!

 

ஆக

இந்த " உணர்தல்" வேட்கை பிறக்க

அறிதல் அவசியம் ஆகிறது.

 

அறிதலில் தேர்ச்சி பெற 

உருவம் தாங்கி தோன்றிய இறைவன்

தேவைப் படுகிறான்.

அவனது அற்புதங்கள பாடங்களாகத் தேவைப்படுகின்றன!

 

இந்த வழி இல்லாமல் உருவமற்ற இறைவனை 

உணர்ந்து விடமுடியும் என்பதும்

அடைந்து விட முடியும் என்பதும்

மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளே!

 

அப்படி உணர்ந்தவர்களே இல்லையா?

இருக்கிறார்கள்...

மிகச்சிலர்

மிகமிகச் சிலர்!

 

ஆனால்

அவர்கள் இறைவனை அறிதலில் எத்தனைப்பிறவிகளை செலவிட்டு

இந்த நிலையை அடைந்தார்கள் என்று யாருக்குத் தெரியும்?

 

அப்படி என்றால் 

இறைவனை உணர்ந்த அவர்கள்

இறைவன் உருவமற்றவன்

என்று போதித்தது தவறா?

 

ஒரு வகையில் அது

பெருங்கருணையின் வெளிப்பாடு!

 

ஒரு வகையில் 

தங்களது அஞ்ஞானம் நீங்கியதால் 

பிற ஆன்மாக்களின் அஞ்ஞான இருளின் அளவை

மறந்து செய்த ஞானோபதேசம்!

 

இறைவனை உணர

தங்களது ஆன்மா அடைந்த துன்பங்களை மற்ற ஆன்மாக்கள் படவேண்டாமே என்கிற பெருங்கருணையால் போதனை செய்தார்கள்!

 

ஆனால்

பட்ட மேற்படிப்பை முடித்து 

ஆசிரியர் தகுதிகான பயிற்சியும் பெற்ற ஒருவர்

 

முதல் வகுப்பு குழந்தையிடம் 

பட்ட மேற்படிப்பு தேர்வை எழுதச் சொல்வது போன்றது - இறைவன் உருவமற்றவன் - அவனை அப்படி அறிந்து - உணர்ந்து - அடைந்து விட முடியும் என்று செய்த போதனை!

 

win line, [09.04.18 10:51]

இறைவனை உணர்ந்தலும் 

அடைதலும் 

யாரோ உணவு தானியங்களை விளைவித்து 

யாரோ சமைத்து

யார் வேண்டுமானாலும் 

சுலபமாக

சுகமாக 

சுவைத்து உண்டு மகிழலாம் 

என்பது போன்றது அல்ல!

ஒவ்வொரு ஆன்மாவும்

தானே தேடி 

தானே பெற்று 

தானே சுவை வேண்டிய

தேன் அது!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard