New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள் பி. ஏ. கிருஷ்ணன்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள் பி. ஏ. கிருஷ்ணன்
Permalink  
 


காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள் Published : 11 Jul 2017 பி. ஏ. கிருஷ்ணன்

logo%20kashmir

காஷ்மீரின் வரைபடத்தைப் பார்ப்பவர்களுக்கு மிகத் தெளிவாகத் தெரிவது இது: லடாக் பகுதி மேலே இருக்கிறது. ஜம்மு கீழே இருக்கிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கு இரண்டுக்கும் இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள்தொகை சுமார் எழுபது லட்சம். 97 சதவீதத்துக்கும் மேல் முஸ்லிம்கள். ஜம்முவின் மக்கள்தொகை சுமார் 55 லட்சம். லே, கார்கில், லடாக் மூன்றையும் சேர்த்தால் சுமார் ஆறு லட்சம் பேர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 68.31% முஸ்லிம்கள். 28.44 % இந்துக்கள். மற்றைய மதத்தினர் 3.25%. இன்று சுமார் 1.3 கோடிப் பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கிறார்கள். முஸ்லிம்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷியாக்கள். இன்னொரு 11 லட்சம் பழங்குடி மக்கள். ஜம்முவில் இருக்கும் முஸ்லிம்கள் 18 லட்சம் இருக்கலாம். பள்ளத்தாக்கில் இருக்கும் சன்னி முஸ்லிம்கள் சுமார் ஐம்பது லட்சம் பேர் இருப்பார்கள். காஷ்மீர் அரசியல் பிரச்சினைகள் இவர்களைச் சுற்றியே நிகழ்கிறது.

தாரக்ஷான் அன்ட்ராபி 

நான் டெல்லி திரும்பிய அன்று விமான நிலையத்தில் தாரக்ஷான் அன்ட்ராபியைச் சந்தித்தேன். மிகவும் தைரியமானவர். கவிஞர். “நான் சிறுவயதிலிருந்தே தேசியவாதி” என்று சொல்லும் அவர் பாஜக சார்பில் ஒமர் அப்துல்லாவுக்கு எதிராக 2014 தேர்தலில் நின்று 1,100 ஓட்டுகளைப் பெற்றார். அது விழுந்த ஓட்டுகளில் 4% என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் பள்ளத்தாக்கில் இருக்கும் சன்னி முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் இந்திய ஆதரவாளர்களாக இருப்பார்கள் என்று கேட்டேன். 20% இருக்கலாம் என்றார். 20% பாகிஸ்தானை ஆதரிப்பவர்களாகவும் மீதம் 60% விடுதலை வேண்டுவோராக இருப்பார்கள் என்றும் சொன்னார். ஆனால், நான் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பேசியிருப்பேன். அவர்களில் 95% பேர் விடுதலைக்கு ஆதரவாகவே பேசினார்கள். ஒருவர்கூடப் பாகிஸ்தானுக்கு ஆதரவாகப் பேசவில்லை. இதற்குக் காரணம், நான் இந்து, வெளிமாநிலத்திலிருந்து வந்திருக்கிறேன் என்பதனால்கூட இருக்கலாம். என்னிடம் பாகிஸ்தான் ஆதரவை வெளிப்படையாகச் சொல்ல முடியாத கட்டாயம் இருக்கலாம். இந்தியாவை ஆதரிப்பவர்கள்கூட அருகில் மற்றவர்கள் இருப்பதால் சொல்ல முடியாமல் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் பள்ளத்தாக்கில் இருக்கும் 80% சன்னி முஸ்லிம் மக்கள் இந்தியாவை ஆதரிக் வில்லை என்பது தெளிவு. ஆதரிக்காதவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். ஆனால், நிச்சயம் குறைவாக இருக்காது.

நான் விதவிதமான மக்களிடம் பேசினேன். ஒவ்வொருவரும் பிரச்சினையை ஒவ்வொரு விதமாக அணுகினார்கள். ஆனால், அடிநாதம் காஷ்மீரின் விடுதலையாகத்தான் இருந்தது. மிகச் சிலரே வேறு மாதிரியாகப் பேசினார்கள். அவர்களில் குதிரைக்காரர் ஒருவர்.

குதிரைக்காரர் 

நான் பயணித்த குதிரையின் பெயர் பெப்சி. என்னுடைய குதிரைக்காரரின் பெயர் குலாம் ரசூல். அவர் வழி முழுவதும் பேசிக்கொண்டே வந்தார். விடுதலையைப் பற்றி அவரிடம் கேட்டேன். அவர் இப்போது என்னை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள் என்று பதில் சொன்னார். “நாங்கள் உழைக்க வேண்டும். கோடைக்காலம் முழுவதும் உழைத்தால்தான் குளிர்காலத்தில் வீட்டுக்குள் ஒடுங்கலாம். அப்போது குதிரைக்கும் வேலை கிடையாது, எனக்கும் கிடையாது” என்றார்.

“இங்கு தண்ணீருக்குப் பஞ்சம் இல்லை. மின்சாரம் தடையே இல்லாமல் கிடைக்கிறது. முப்பது கிலோ அரிசி 240 ரூபாய்க்கு ரேஷனில் கிடைக்கிறது. விடுதலையைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. பாகிஸ்தானிலிருந்து என் குதிரையில் ஏற யாரும் வருவதில்லை. இந்தியாவிலிருந்துதான் வருகிறார்கள். எனவே, எனக்கு இந்தியாதான் வேண்டும்” என்றார்.

வழியெங்கிலும் பகர்வால்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் இருந்தார்கள். தாங்கள் வளர்க்கும் ஆடுகளுக்கு உணவு தேடி இமாலயம் முழுவதும் செல்பவர்கள். ஒவ்வொரு வருஷமும் பகர்வால்கள் ஜம்மு பகுதியிலிருந்து பள்ளத்தாக்குக்கு வந்தாலும், பள்ளத்தாக்கு மக்களுக்கும் அவர்களுக்கும் அதிகப் பேச்சு வார்த்தை கிடையாது. தங்களைவிட கீழானவர்களாகத்தான் அவர்களைப் பள்ளத்தாக்கு மக்கள் நினைக்கிறார்கள். நான் அவர்களிடம் பேச முயன்றேன். ஆனால், யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.

அழகும் அவமதிப்பும் 

பஹல்காமிலிருந்து மலையேறினால் விவரிக்க முடியாத அழகு காத்திருக்கிறது. இங்கும் பரந்த பச்சைப் புல்வெளி. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் கிளிப்பச்சை. தொலைவில் கரும் பச்சைக் கூம்புகளாகத் தெரியும் ஃபிர் மரங்கள். மரங்களுக்குப் பின்னால் உயர்ந்து வானத்தைத் தொடும் சிகரங்கள். எந்தப் புகைப்படத்திலும் பிடிக்க முடியாத, வார்த்தைகளை எள்ளி நகையாடும் அழகு அது. நான் உலகின் பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால், காஷ்மீரைப் போல மூச்சை நிறுத்தும் இயற்கை அழகு நிறைந்த இடங்கள் மிகக் குறைவு.

“ஜனாப், என்னிடம் வகைவகையான ஷால்கள் இருக்கின்றன. பஷ்மினா ஷால்கள். வெளியே வாங்கினால் ஒன்றுக்கு இரண்டு விலை கொடுக்க வேண்டும்.”

என் மனைவி வேண்டாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல அவர் துரத்தினார். நாங்கள் சென்ற இடத்துக்கெல்லாம் அவரும் வந்தார். வாங்க மாட்டோம் என்று தெரிந்ததும் வேறு விதமாகப் பேசத் தொடங்கினார்.

“அது என்ன வேண்டாம், தேங்க் யூ? இதையெல்லாம் அமெரிக்காவில் வைத்துக்கொள்ளுங்கள். இங்கு ஏன் வருகிறீர்கள்? அமெரிக்கா போக வேண்டியதுதானே?’

“ஏன் போக வேண்டும். இது இந்தியா. நான் இந்தியன். இங்கு வர எனக்கு உரிமை இருக்கிறது.

“இந்தியாவா? யார் சொன்னது? இது காஷ்மீர். எங்களுக்குச் சொந்தமானது.”

பேச்சை மேலே தொடர நாங்கள் விரும்பவில்லை. திரும்பி இறங்கும்போது யோசித்துப் பார்த்தேன். உலகெங்கிலும் பயணிகள் செல்லும் இடங்களிலெல்லாம் விற்பனை செய்பவர்கள் வாங்குகிறவர்களிடம் சர்க்கரையாகப் பேசுகிறார்கள். வாங்காதவர்களைப் புழுக்களைப் போலத்தான் மதிக்கிறார்கள். இவர் சற்று வெளிப்படையாகப் பேசிவிட்டார். அவ்வளவுதான். ஷால்கள் பொதியின் கனம் சிறிதும் குறையாததால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெளிப்பாடு.

பள்ளத்தாக்கின் பண்டிட்கள் 

பள்ளத்தாக்கு முஸ்லிம்கள் இந்தியா தங்களை நெருக்குகிறது என்று நினைப்பதுபோல் பள்ளத்தாக்கில் இருக்கும் மிகச் சில பண்டிட்கள் (பிராமணர்கள்), முஸ்லிம்கள் தங்களை நெருக்குகிறார்கள் என்று நினைக்கிறார்கள். 1990 ஆண்டு வரை பண்டிட்கள் பள்ளத்தாக்கில் பரவலாக இருந்தார்கள். ஆனால், 1990-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களினால் அவர்கள் வெளியேறத் தொடங்கினார்கள். சொல்பவர்களின் அரசியல் நிலைப்பாடைச் சார்ந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திலிருந்து எட்டு லட்சம் வரை மாறுபடும். குறைந்தது இரண்டு லட்சம் மக்கள் வெளியேறினார்கள் அல்லது வெளியேற்றப்பட்டார்கள் என்று சொல்லலாம். இப்போது ஐயாயிரம் பேர்கள் இருந்தால் அதிசயம்.

ஸ்ரீநகரிலிருந்து பஹல்காம் செல்லும் வழியில் மத்தன் என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. கோயிலுக்கு முன்னால் அழகான, மீன்கள் நிறைந்த குளம். இந்த இடத்தில் காஷ்மீரப் பண்டிட் ஒருவரைச் சந்தித்தேன். வயதானவர். அதிகம் பேச விரும்பவில்லை. “எங்களுக்கு இங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. இங்கு கோயிலும் குருத்துவாரமும் இருப்பதால் சுற்றிலும் போலீஸ் இருக்கிறார்கள். அதனால் பாதுகாப்பு. நான் கூட ஜம்முவில்தான் இருக்கிறேன். இப்போது பூஜை செய்வதற்காகச் சில மாதங்கள் வந்திருக்கிறேன்’ என்றார்.

மக்களை மக்களே சந்தேகப்படும்போது எது உண்மை எது பொய் என்பதைப் பிரித்தறிவது மிகவும் கடினம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: காஷ்மீரில் ஒரு வாரம்: விடுதலை விரும்பிகள் பி. ஏ. கிருஷ்ணன்
Permalink  
 


காஷ்மீரில் ஒரு வாரம்: இந்த மண் ரத்தம்கேட்கிறது!

நானும் என் மனைவியும் குல்மார்க் சென்றடைந்தபோது வானம் முழு நீலமாக இருந்தது. மரங்கள் அடர்ந்த மலைப் பாதையின் முடிவில், முடிவே இல்லாத பச்சைப் புல்தரை. உயர்ந்த மலைச் சரிவுகள் சிலவற்றில் பனிக் கீற்றுகள் ஒட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. “மேலே சென்று பார்க்கலாம். 14,000 அடி உயரம். பனிப் பாறைகள் கண்ணைக் கூச வைக்கும்” என்றார் வழிகாட்டி. மேலே போகவா வேண்டாமா என்ற தயக்கம். மலை உச்சியை அடைய கேபிளில் இயங்கும் தொங்கு வண்டிகளில் செல்ல வேண்டும். கூட்டம் அதிகம் இல்லை.

“போன வருடம் இந்த இடம் நிரம்பி வழிந்தது. 1,600 ரூபாய் டிக்கெட்டை 4,000 ரூபாய்க்கு வாங்கத் தயாராக இருந்தார்கள். இப்போது யாரும் இல்லை. அல்லா எங்கள் மீது இரக்கம் காட்ட நேரம் எடுத்துக்கொள்கிறார்.” வழிகாட்டியின் முகத்தில் களைப்பு தெரிந்தது. ரம்ஜான் நோன்பில் இருந்தார். நாங்கள் பயணம் செய்தால் அவருக்கு கமிஷன் கிடைக்கலாம். போகலாம் என்று முடிவுசெய்தோம்.

கணக்கில்லா அதிசயங்கள் 

காஷ்மீரின் கணக்கில்லா இயற்கை அதிசயங்களில் குல்மார்க் ஒன்று. மனிதர்கள் விடாது முயன்றும் அதன் அழகை அதிகம் அழிக்க முடியவில்லை என்பது இன்னொரு அதிசயம். குல்மார்க் 8,500 அடி உயரத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட நமது தொட்டபெட்டா சிகரத்தின் உயரம். எங்கு சென்றாலும் நடந்து செல்ல வேண்டும் அல்லது குதிரையில் செல்லலாம்.

தொங்குவண்டிப் பயணம் சிக்கல் ஏதுமின்றி நிகழ்ந்தது. “1999-லிருந்து தினமும் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு சிறிய விபத்துகூட நிகழவில்லை” என்றார் வழிகாட்டி. உச்சத்தில் இறங்கியபோது மூச்சு விடுவதுகூடக் கடினமாக இருந்தது. சுற்றிலும் மலைகள். பனிப் பாறைகள் மிக அருகே இருந்தன. பயணிகள் ஸ்லெட்ஜ் வண்டிகளில் பாறைகளைக் கடக்க முயன்றுகொண்டிருந்தனர். இத்தனை உயரத்திலும் இயற்கைக்குத் தனது அமைதியைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை இல்லையா? நாம் ஏன் 14,000 அடியில் அதைச் சூழ்ந்து நெருக்க வேண்டும்? “திரும்பச் செல்லலாம்” என்று சொன்னேன். வழிகாட்டிக்குச் சிறிது வருத்தமாக இருந்தது.

உணவு விடுதி மிக அருகில். அங்கேயே மதிய உணவு அருந்திவிட்டு அறைக்குள் வருவதற்குள் மழை பிடித்துக்கொண்டது. தூறலில் தொடங்கியது காற்று, இடி, மின்னலுடன் வலுப்பெற்றது. கூழாங்கற்கள் அளவில் பனிக்கட்டிகள் சடசடவெனத் தரையில் இறங்கின. திடீரென்று பெரும் சத்தம் ஒன்று. ‘என்ன சத்தம்’ என்று என் மனைவி கேட்டதற்குப் பதில்கூடச் சொல்ல முடியாமல் கண்கள் அயர்ந்துகொண்டுவந்தன. அயர்வு தீரச் சிறிது நேரம் எடுத்தது. கண்கள் திறந்தபோது மழை நின்று வானம் பளீரென்று இருந்தது.

நாட்டு நிலவரம் பார்க்கும் எண்ணத்தில் தொலைக்காட்சி ரிமோட்டை அழுத்தினேன். என்டிடிவியின் அடிப்பட்டையில் ‘குல்மார்க் தொங்குவண்டி விபத்தில் ஐவர் மரணம்’ என்ற செய்தி வந்துகொண்டிருந்தது.

மரணத்தையும் மறக்க வைக்கும் அரசியல் 

நாங்கள் உடனே விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்தோம். கூட்டம் அதிகம் இல்லை. தொங்கு வண்டிகளில் அகப்பட்டுத் தவிப்பவர்களை மீட்க வேண்டும் என்ற கவலை எல்லோருக்கும் இருந்தது. வழியில் பார்த்தவர்கள் அனைவரும் “இது கடவுள் செயல். கேபிளை நடத்துபவர்மீது எந்தத் தவறும் இல்லை” என்று சொன்னார்கள். இவர்களுக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத் தோன்றியது.

டெல்லியிலிருந்து வந்திருந்த தம்பதியினர், அவர்களின் இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று வழிகாட்டிகள் பலியாகியிருந்தனர். காற்றில் பைன் மரம் வேரோடு கேபிள் மீது சாய்ந்ததில் தொங்கு வண்டியின் கண்ணாடிக் கதவுகள் உடைந்து, அவற்றிலிருந்தவர்கள் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். நாங்கள்தான் கடைசியாகத் திரும்பிய பயணிகள். மரணத்தை மிக அருகே சில தடவைகள் சந்தித்திருந்தாலும், இந்தத் தடவையும் அது அணைத்துத் தன்னோடு கூட்டிச் செல்லாமல் சென்றது சிறிது ஆறுதலாக இருந்தது.

மலையிலிருந்து வந்த பயணிகள் தங்கள் அனுபவத்தைச் சொல்லத் தொடங்கினார்கள். ஜம்முவிலிருந்து வந்திருந்த ஒருவர் சொன்னார், “நானும் என் மனைவியும் ஆறுமாதக் குழந்தையுடன் தவித்தோம். யாரும் உதவி செய்யவில்லை. ஏடிவியில் (All Terrain Vehicle – எல்லா நிலப் பரப்புகளிலும் இயங்கும் ஊர்தி) மேலே வந்தவர்கள் ஒரு ஆளுக்கு 4,000 ரூபாய் கேட்டார்கள். நமது ராணுவம்தான் உதவி செய்தது” என்றார்.

அருகில் இருந்த காஷ்மீரி என்னிடம் சொன்னார், “இவர் சொல்வது சரியா என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். எத்தனை பேர் மேலே சென்றிருக்கிறார்கள். எத்தனை பேரை அழைத்துவருகிறார்கள் என்பதும் உங்களுக்குக் கண்கூடாகத் தெரியும்”. அவர் சொன்னது உண்மை. மலையிலிருந்து பயணிகளை உள்ளூர் மக்கள் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டு வருவதைப் பார்க்க முடிந்தது. தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வண்டிகள் தயாராக இருந்தன. “அல்லா ஏன் எங்களைச் சோதிக்கிறார்? ஏற்கெனவே பயணிகள் வருவது மிகவும் குறைந்துவிட்டது. குல்மார்கின் வசீகரமே இந்த கேபிள் பயணம்தான். அதுவும் நின்றுவிட்டால் இங்கு யார் வருவார்கள்? நாங்கள் எப்படிப் பிழைப்பது?” என்று இன்னொருவர் சொன்னார். “இந்திய ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. காஷ்மீரில் எல்லோரும் துப்பாக்கிகளைப் பிடித்துக்கொண்டு கண்ணில் தென்பட்டவர்களைக் கொல்வதற்காக அலைகிறார்கள் என்ற எண்ணத்தைப் பார்ப்பவர்களுக்குக் கொடுக்கின்றன. இப்போது மரணத்திலும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் முஸ்லிம்கள் லாபம் பார்க்கிறார்கள் என்று ஊடகங்கள் சொல்லத் தொடங்கிவிடும்.”

“மேலே இருந்தவர்களைக் கீழே கொண்டுவரப் பணம் கேட்டது உண்மைதானே?”

“சிலர் கேட்டிருக்கலாம். நான் டெல்லி வந்திருக்கிறேன். அங்கு ரயில் நிலையத்தில் இருக்கும் எல்லா டாக்சிகளும் பகல் கொள்ளைக்காரர்களால் இயக்கப்படுகின்றன. அதனால், டெல்லியில் இருப்பவர்கள் எல்லோரும் கொள்ளைக்காரர்கள் என்று சொல்ல முடியுமா?’

எனக்கு என் மீதே வெறுப்பு வந்தது. ஏழு பேர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்கள் மரணத்தின் சோகம் என்னை உலுக்கவில்லை. மரணத்தை அரசியல் மறக்கடித்து விட்டது. 

வழியில் மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி ஒருவரைச் சந்தித்தேன். அவர் மீரட்டிலிருந்து வருபவர்.

“உங்களுக்கு ஏதும் உதவி வேண்டுமா?”

“வேண்டாம். நிலைமை எவ்வாறு இருக்கிறது?”

“மீசை முளைக்காத சிறுவர்கள் துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். அவர்களைக் கொல்லாவிட்டால் நாங்கள் சாக வேண்டும். என் மகன் வயதுகூட இருக்காத பையன்களைக் கொல்வதற்கு எனக்கு ஆசையா என்ன? இந்த மண் வெறி பிடித்தது. அது ரத்தம் கேட்கிறது.”

“மண் கேட்கிறதா? மண்ணுக்கேது வெறி? கேட்பது மனிதர்கள்” என்று பதில் சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

காஷ்மீரில் ஒரு வாரம்: மாற்று உண்மைகள்

கறுப்பாக இருப்பவர்கள் தங்களை விடக் கீழானவர்கள் என்று கருதுவது வட இந்தியாவில் காலம் காலமாக இருந்துவருகிறது. காஷ்மீரிலும் இந்த வண்ண வேற்றுமை மிகவும் பரவலாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. நான் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவரே சொன்னார். "நான் நிஜமாகவே காஷ்மீரி. கறுப்பாக இருக்கிறேன் என்பதால் இந்தியன் என்று நினைத்துவிடாதீர்கள்."

இந்தியாவின் ஏழை மக்கள், கறுப்பானவர்கள் - ஜார்கண்ட், ராஜஸ்தானிலிருந்து வந்தவர்கள் - இங்கு கூலி வேலை செய்து பிழைக்கிறார்கள். அவர்கள் 'ஏ ராஜஸ்தானி, ஏ பிஹாரி' என்றே அழைக்கப்படுகிறார்கள். ஒரே ஒரு இடத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரை 'சாசா' (மாமா) என்று அழைப்பதைக் கேட்க காதுக்கு இதமாக இருந்தது.

இங்கு மத்திய ரிசர்வ் போலீஸ், எல்லைப்புறக் காவல்படை, ராணுவம் போன்ற அமைப்புகளில் பணி செய்யும் வீரர்கள் சிவப்பானவர்கள் அல்ல. உயரமானவர்கள் அல்ல. காஷ்மீரப் போலீஸில் வேலை செய்பவர்கள் கறுப்பாக இல்லை. ஆனால் அவர்களில் பலர் நமது போலீஸ்காரர்களைப் போலவே குண்டாக, தொந்தி தள்ளியபடி இருக்கிறார்கள். எல்லோர் கையிலும் ஆயுதம் இருக்கிறது. இதுவே காஷ்மீர இளைஞர்கள் பலருக்கு எரிச்சலை வரவழைக்கிறது. இந்த எரிச்சல் இனம் சார்ந்தது என்று சொல்வதைவிட இயலாமையில் பிறந்தது என்று சொல்வது சரியாக இருக்கும். இந்த இயலாமை பல வடிவுகள் எடுக்கிறது. என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஓட்டல் தொழிலாளி ஒருவர், “எனக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் இத்தனை வருடங்கள் வேலை பார்த்த பிறகு கிடைக்கிறது. ஆனால், இந்திய போர் வீரருக்கு முதல் வருஷமே மாதம் ஒரு லட்ச ரூபாய் கிடைக்கிறது” என்றார். இது உண்மையல்ல என்று நான் விளக்கினாலும் அவரை நம்ப வைத்திருக்க முடியாது.

உண்மையில் நமது வீரர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில் தன்னந்தனியாகக் கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்கில் நிற்க வேண்டிய கட்டாயம். நான் சென்றபோது அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. வழியெங்கும் காவல்பணிபுரிபவர்களின் கூடாரங்கள். ஆங்கிலத்தில் ‘சிட்டிங் டக்’ (உட்கார்ந்து இருக்கும் வாத்து) என்று சொல்வார்கள். அந்தச் சொல்லாக்கம்தான் நினைவுக்கு வந்தது. வேலிக்கு அருகே அமைக்கப்பட்ட கூடாரங்கள். நான் கையை நீட்டிக் கூடாரத்தில் உறங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பிவிட முடியும் என்று தோன்றியது.

“எங்களுக்கும் யாத்திரைக்கு வந்திருப்பவர்களுக்கும் எந்தப் பகையும் இல்லை. நாங்கள் அவர்களுக்கோ, ஏற்பாடுகள் செய்துகொண்டிருப்பவர்களுக்கோ எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டோம்” என்று எனது காரோட்டி சொன்னார். மிகவும் அழகான, கூர்மையான காஷ்மீரிகளுக்கே உரித்தான மூக்கை உடைய, இளைஞர். மலைப்பாதையில் காரை உயிரைப் பணயம் வைத்து (எங்கள் உயிர்களையும் சேர்த்துதான்) ஓட்டினார்.

‘பாகிஸ்தான் ஒரு நாடே அல்ல. நேற்றுகூட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முட்டாள்தனமாக பெட்ரோல் எடுக்கக் கிளம்பி இறந்திருக்கிறார்கள். அங்கு மனித உயிருக்கு மதிப்பே கிடையாது” என்றார் அவர்.

“இங்கு இருக்கிறதா?’ என்று கேட்டேன்.

‘இங்கும் இல்லை. ஆனால், பாகிஸ்தான் அளவுக்கு மோசம் இல்லை. நாங்கள் பாகிஸ்தானோடு இணைய ஒருபோதும் விரும்பவில்லை. எங்களுக்கு வேண்டியது தனிநாடு” என்றார்.

நாங்கள் சந்தன்வாரிக்குச் சென்றுகொண்டிருந்தோம். அமர்நாத் யாத்திரை அங்கிருந்துதான் ஆண்டுதோறும் துவங்குகிறது. வழியில் தடுப்பு ஒன்றில் காஷ்மீர் போலீஸ்காரர் ஒருவர் வண்டியைச் சோதனை செய்ய நிறுத்தினார்.

“அடையாள அட்டையைக் காட்டுங்கள்” என்று கேட்டார்.

“வீட்டில் இருக்கிறது. கொண்டுவர மறந்துவிட்டேன்” என்றார் காரோட்டி.

‘ட்ரைவிங் லைசன்ஸ்?”

காரோட்டி சிறிது இங்கும் அங்கும் துழாவினார். “அதையும் மறந்துவிட்டேன்.’

போலீஸ்காரர் எங்களைப் பார்த்தார். பிறகு காஷ்மீர மொழியில் அவரிடம் மிகுந்த கோபத்தோடு பேசினார். நாங்கள் திரும்பிச் செல்லச் சொல்கிறார் என்று நினைத்தோம். ஆனால், தடுப்பை விலக்கி வண்டியைச் செல்ல விட்டார்.

“என்ன சொன்னார்?”

“ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டிருந்தால் பின்னியெடுத்திருப்பார்கள் என்று சொன்னார். இவர்களுக்காக உன்னை விடுகிறேன் என்று சொன்னார்.”

“அடையாள அட்டை, லைசன்ஸ் இரண்டையும் ஏன் கொண்டுவரவில்லை?”

“கொண்டுவரவில்லை என்று யார் சொன்னது? இரண்டும் இருக்கின்றன. இவரிடம் ஏன் காட்ட வேண்டும்? இது எங்கள் இடம். இங்கு எல்லோருக்கும் என்னைத் தெரியும்.”

“அவருக்குத் தெரியாதே?”

“ஆனால், அவர் இங்கு ஏன் வந்து வழியை அடைக்கிறார்?” சிறிது நேரம் கழித்துச் சொன்னார். “எங்கள் வரிப்பணத்தில்தான் யாத்திரை நடக்கிறது. ஆனால், எங்களுக்கு வழி மறுக்கப்படுகிறது.”

அந்நியப்படுதல் என்பது எவ்வளவு எளிதாக நடந்துவிடுகிறது!

எங்களுடன் பயணம் முழுவதும் கூடவே வந்த இன்னொரு காரோட்டி பர்வேஸ் எல்லா உண்மைகளுக்கும் மாற்று உண்மைகள் வைத்திருந்தார். நான் சென்ற அன்று ஸ்ரீநகர் ஜும்மா மசூதிக்கு முன்னால் துணைக் கண்காணிப்பாளர் ஒருவர் கொடூரமாகக் கூட்டத்தால் அடித்துக் கொல்லப்பட்டார். எல்லாப் பத்திரிகைகளும் – உள்ளூர்ப் பத்திரிகைகள் உட்பட – சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருந்தன. ஆனால், பர்வேஸ் “கொல்லப்பட்டவர் வீடியோ படம் எடுத்துக்கொண்டிருந்தார். அதை மக்கள் கண்டித்ததால் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். கூட்டத்தில் பத்து பேராவது இறந்திருப்பார்கள். வேறு வழியின்றி அவரைத் தாக்க நேர்ந்தது” என்றார்.

“யாரும் அவர் சுட்டுச் செத்ததாகப் பத்திரிகைகளில் வரவில்லையே?”

“அதை மறைத்துவிட்டார்கள். எங்களுக்குத் தெரியும்.” பர்வேஸ் மட்டுமல்ல, எல்லோரும் இது போன்ற பல மாற்று உண்மைகளைச் சொல்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான உண்மைகள். ராணுவம் ரத்த வெறி பிடித்து அலைகிறது என்பதை நிறுவ முயற்சிக்கும் உண்மைகள். நான் ஸ்ரீநகரில் தங்கியிருந்த ஓட்டலின் மேற்பார்வையாளர் – படித்தவர் – சொன்னார்:

“தினமும் எங்கள் பெண்கள் பாலியல் வன்முறைக்குப் பலியாகிறார்கள். எங்கள் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆனால், கையாலாகாத மாநில அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. புர்கான் வானியின் உயிர்த் தியாகம்தான் திருப்புமுனை. அதற்குப் பிறகு இந்தியாவுடன் சேர்ந்து இருப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை.”

மெஹ்பூபா முஃப்தி இன்று தேர்தலில் நின்றால் பத்து ஓட்டுகள்கூட வாங்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. அவருடைய தந்தையின் மீது மக்கள் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஒமர் அப்துல்லா ஆட்சியின் மீது கூட அதிக வெறுப்பு இல்லை. ஆனால், பாஜகவுடன் கூட்டு வைத்துக்கொண்டிருப்பதை மக்கள் சிறிதும் விரும்பவில்லை. மிகுந்த கோபத்துடன் இருக்கிறார்கள். வெறுப்புக்கு மற்றொரு காரணம் ஊழல். என் கண்கூடாகவே சுங்கச் சாவடிகளில் இருபது ரூபாய் வாங்கிக்கொண்டு எந்தச் சோதனையும் இல்லாமல் வண்டிகளை விடுவதைப் பார்த்தேன். பாஜகவின் அன்ட்ராபியிடம் இதைப் பற்றிச் சொன்னேன். அவர் எங்குதான் ஊழல் இல்லை என்று பதிலளித்தார். “காஷ்மீரை மற்ற இடங்களைப் போல எடுத்துக்கொள்ள முடியாது. இங்கு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மேலாகவே அரசு செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது,” என்றேன்.

அன்ட்ராபி பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தார்.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக் கொன்றை’, ‘இந்தியாவும் உலகமும்’ முதலான நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: tigerclaw@gmail.com



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

காஷ்மீரில் ஒரு வாரம்: வேலைகள் எங்கே?

ஸ்ரீ நகரில் ஒருநாள் எங்கள் காரோட்டி பர்வேஸ், வரச் சொன்ன நேரத்தில் வரவில்லை. எங்களுக்குக் கவலையாக இருந்ததால் தொலைபேசியில் தொடர்புகொண்டோம். நடந்ததை வந்து சொல்கிறேன் என்றார். 11 மணியளவில் வந்த அவர் “இப்போதுதான் போலீஸுக்கு 3,000 ரூபாய் கொடுத்துவிட்டு வருகிறேன்” என்றார்.

“என் மாமாவின் டாடா சுமோ வாகனம் நேற்று இரவு காணாமல் போய்விட்டது. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காததால் போலீஸில் புகார் கொடுத்தோம். நான் ஓட்டலுக்கு வரும் வழியில் வண்டி சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்த்தேன். உடனே போலீஸுக்கு ஃபோன் செய்தேன். அவர்கள் நீயே காரைத் திறந்து ஓட்டிக்கொண்டு வா என்று சொன்னார்கள். நான், ‘என்னால் முடியாது. வண்டியைப் போராளிகள் கடத்திச்சென்று பயன்படுத்தியிருக்கலாம். உள்ளே ஆயுதங்களோ வெடிகுண்டுகளோ இருக்கலாம். நீங்கள்தான் வரவேண்டும்’ என்று சொன்னேன்” என்றார்.

போலீஸ் வந்ததும் வண்டியைத் திறக்கச் சொல்லி, அதில் ஆயுதங்களோ வெடிகுண்டுகளோ இல்லை என்பதை உறுதி செய்த பிறகே வண்டியைத் திரும்பப் பெற்றுக்கொண்டிருக்கிறார். வண்டியை நிச்சயம் போராளிகள் பயன்படுத்திவிட்டு வேலை முடிந்ததும் ஓரத்தில் நிறுத்திவிட்டுச் சென்றிருப்பார்கள் என்று பர்வேஸ் சொன்னார்.

முந்தைய நாள்தான் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ்மீது தாக்குதல் நடத்திவிட்டுப் பள்ளிக்கூடம் ஒன்றில் பதுங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானி ஊடுருவிகள் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்வதற்காக வண்டி எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாமோ என்று கேட்டேன். “இல்லை. யாரும் கொல்லப்படவில்லை. போன வருடம் கொல்லப்பட்ட இரண்டு பாகிஸ்தானிகள் படங்களைத்தான் இப்போது காட்டுகிறார்கள்” என்றார்! மாற்று உண்மை!

ஊழலில் ஊறிய மாநிலம் 

போலீஸுக்குப் பணம் கொடுப்பது என்பது இந்தியா முழுவதும் நடக்கிறது. ஆனால், இங்கு அது வேறு பரிணாமம் எடுக்கிறது. ஒவ்வொரு சாதாரண சம்பவமும் பூதாகாரமாக உருவெடுக்கும் சாத்தியம் இருக்கிறது. “எங்கள் வண்டி போராளிகளுடன் பிடிபட்டிருந்தால், நான் என் வாழ்நாள் முழுவதும் சிறையிலிருந்து வெளிவந்திருக்க முடியாது. அல்லது என் வீட்டை விற்று போலீஸுக்குப் பணம் கொடுக்க வேண்டியதாக இருந்திருக்கும்” என்று பர்வேஸ் சொன்னார். “ஒருவேளை இவரே வண்டியைப் போராளி களிடம் கொடுத்துவிட்டு நாடகம் ஆடுகிறாரோ?” என்று நினைத்தேன். உண்மைக்கு நேரெதிரே நின்று பொய் ஒவ்வொரு தருணத்திலும் சவால் விட்டுக்கொண்டிருக்கும் மாநிலம் இது. ஆனால், ஊழல் நடக்கிறது என்ற உண்மைக்கு மட்டும் பொய்யால் சவால் விட முடியாது என்று தோன்றுகிறது. நமது வட்டச் செயலாளர்களைப் போல இங்கும் அரசியல்வாதிகள் பெரிய பங்களாக்களில் இருக்கிறார்கள்.

ஆட்கள் புடை சூழ பவனிவருகிறார்கள். “காஷ்மீர் ஏழை மாநிலமல்ல. இங்கு எல்லோருக்கும் தண்ணீர் இருக்கிறது. வீடு இருக்கிறது. உணவு இருக்கிறது. ஆனால் கூடவே அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை” என்று ஒருவர் சொன்னார். மத்திய அரசு மானியங்களாக மட்டும் காஷ்மீருக்குக் கடந்த 16 வருடங்களில் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேலாகப் பணம் கிடைத்திருக்கிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் 1 சதவீதம் இருக்கும் மாநிலத்துக்கு மத்திய அரசு மாநிலங்களுக்கு அளிக்கும் மானியத்தில் 10% சதவீதம் செல்கிறது.

அங்கு வாழும் ஒவ்வொருவருக்கும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். உத்தர பிரதேசத்தின் மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் அங்கு வாழும் மக்களுக்கு இதே காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கும் மானியம் ரூ. 4,300 மட்டுமே. “மத்திய அரசு அளித்த மானியத்தில் 50 சதவீதமாவது மக்களுக்குச் செலவிட்டிருந்தால் இளைஞர்கள் ஏன் ஆயுதம் எடுக்கப் போகிறார்கள்?” என்று ஜே&கே வங்கியில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் சொன்னார். “மின்சாரத்தை எடுத்துக்கொண்டால் 50 சதவீதத்துக்கும் மேல் திருடப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னால் திருட்டு 70% இருந்தது. இதுவும் குத்துமதிப்புதான். எந்தப் புள்ளிவிவரமும் அரசு வலை தளத்தில் கிடைக்காது. நீங்கள் வேண்டுமானால் அரசு மின்துறையின் வலைதளத்துக்குச் சென்று பாருங்கள்” என்றார். டெல்லி திரும்பியதும் அதை உடனடியாகச் செய்தேன். புள்ளிவிவரங்கள் பக்கம் காலியாக இருந்தது!

இயற்கையின் அழிவு 

உலகின் மிக அழகான இடங்கள் காஷ்மீரில் இருக்கின்றன என்பது உண்மையென்றால் உலகின் மிக அழகான இடங்களில் அதிகக் குப்பைகள் இருப்பதும் காஷ்மீரில்தான் என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் பாலிதீன் குப்பைக் குவியல்களை நம்மால் பார்க்க முடியும். ஸ்ரீநகரின் நடுநாயகமான தல் ஏரியில் மனிதக் கழிவுகள் தினமும் கொட்டப்படுகின்றன. ஏரியின் அளவு நூறு வருடங்களாகக் குறையவில்லை என்று அரசு சொல்கிறது. சொல்வது முழுப் பொய் என்று காஷ்மீர உயர் நீதிமன்றம் சொல்கிறது. ஏரிக்குள் வீடுகளும் கடைகளும் அதிகரித்துவிட்டன என்று காஷ்மீர் மக்கள் சொல்கிறார்கள். மக்களும் ஒத்துழைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. நாற்றம், குப்பைகளைப் பற்றி அவர்கள் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.

வேலைகள் எங்கே? 

இந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரில் ராணுவ ஆளெடுப்பு நடந்தது. 900 காலி இடங்களுக்கு சுமார் 19,000 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதல் களுக்கு உள்ளாகும் சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தாலும் வேறு வழி அவர்களுக்கு இல்லை. இந்தியாவிலேயே வேலையில்லாத இளைஞர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் இதுதான். 19 வயதிலிருந்து 29 வயது வரையில் உள்ள இளைஞர்களில் சுமார் 25% பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். இந்தியாவின் மற்றைய மாநிலங்களைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம். ஸ்ரீநகரின் புகழ்பெற்ற கிருஷ்ணா டாபாவின் முன்னால் சந்தித்த ஒருவர் எதிரே நின்றுகொண்டிருந்த ஆட்டோவைக் காட்டிச் சொன்னார். “எனது மகன். முனைவர் பட்டம் பெற்றவன். ஆட்டோ ஓட்டுவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார். வேலைவாய்ப்புகள் அதிகரித்தால் பயங்கரவாதம் குறையும் சாத்தியம் அதிகம் ஆகும். ஆனால், அரசு வேலைகள் அதிகரிக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம். ஏற்கெனவே சுமார் 5 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்துக்கு ஐந்து பேர் என்று எடுத்துக்கொண்டால் மக்கள்தொகையில் 20% அரசைச் சார்ந்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 12% சதவீதம். எனவே, வேலைகளைத் தனியார் துறையில்தான் உருவாக்க வேண்டும்.

அதிக வேலைகளை உருவாக்கக் கூடியது சுற்றுலாத் துறை மட்டுமே. ஆனால், இந்த வருடம் காஷ்மீரின் ஓட்டல்கள், சுற்றுலாத்தலங்கள், வழிபாட்டுத்தலங்கள் காலியாக இருக்கின்றன. குதிரை வைத்திருப்பவர்களும், கைவினைப் பொருட்களை விற்பவர்களும் என்ன செய்வது என்று அறியாமல் திகைக்கிறார்கள். காரணம் பயங்கரவாதம் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இருந்தாலும் தங்கள் இளைஞர்களை அவர்கள் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை.

“எங்கள் காற்றையும் நீரையும் நிலத்தையும் வானத்தையும் முடிந்த அளவு அனுபவியுங்கள். ஆனால், நீங்கள் திரும்பச் செல்லும்போது எங்களுக்குக் கொஞ்சம் அறிவைக் கடன் கொடுங்கள்” என்று ஒருவர் சொன்னார். காஷ்மீரில் நடப்பவையெல்லாம் சாதாரண அறிவுக்கு அப்பாற்பட்டவை என்பது மக்களுக்குத் தெரிந்திருக் கிறது.

-பி.ஏ. கிருஷ்ணன்,



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காஷ்மீரில் ஒரு வாரம்: என்னதான் செய்யலாம்?

ஈத் பெருநாளன்று நாங்கள் ஸ்ரீநகரில் இருந்தோம். எனது ஓட்டல் புகழ்பெற்ற நிஷாத் தோட்டத்துக்கு அருகே இருப்பதால், நடந்தே செல்ல முடிவெடுத்தோம். சாலை முழுவதும் வண்டிகள். தோட்டத்துக்கு அருகில் நமது ரங்கநாதன் தெருவை மிஞ்சும் கூட்டம். சில காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயன்று படுதோல்வி அடைந்துகொண்டிருந்தார்கள். நான் ஒதுங்கி நின்ற இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

“நிலைமை எப்படி இருக்கிறது?”

“நீங்கள்தான் பார்த்துக்கொண்டிருக் கிறீர்களே.”

“சேனல்களைப் பார்த்தால் காஷ்மீரில் தினமும் ஒவ்வொரு தெருவிலும் குண்டு வெடித்துக்கொண்டிருக்கிறது என்ற பயம் அல்லவா உண்டாகிறது.”

“இங்கிருக்கும் பாகிஸ்தானி பயங்கரவாதிகளைவிட மோசமான கிரிமினல்கள் இந்த சேனல்களை நடத்துகிறவர்கள். எங்களை நாயைவிடக் கீழ்த்தரமாக நிகழ்ச்சிகளில் நடத்துகிறார்கள். காஷ்மீரி என்றாலே தேசத் துரோகி என்ற முன்முடிவோடு”

பேசியவர் முஸ்லிம் அல்லாதவர். பெயர் சர்மா. ஜம்முவைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அவர் சொன்னது முற்றிலும் உண்மை. என் மனைவியும் நானும் பல இடங்களுக்கு, பயணிகள் அதிகம் போகாத இடங்களுக்குக்கூடச் சென்றோம். ஆனால், பொதுவாக எல்லா இடங்களிலும் எங்களுக்குக் கிடைத்தது அன்புதான்.

காஷ்மீரப் பெண்கள் 

இங்கு பர்தா அணியும் பெண்களை அதிகம் பார்க்க முடியவில்லை. மூன்று நான்கு பேர்களாக ஸ்கூட்டரில் செல்கிறார்கள். தலைமுடியைத் துணியால் மறைத்துக்கொள்வதைத் தவிர, உடையில் டெல்லிப் பெண்களுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டு இடங்களில் பெண்களை, முரண்படும் தருணங்களில் பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிளில் ஆண் பின்னால் உட்கார்ந்து சென்ற பெண்ணை வழி மறித்து, இரண்டு மூன்று இளைஞர்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

‘பேவகூஃப் லட்கி,’ (முட்டாள் பெண்ணே) என்று உரத்த குரலில் ஒருவர் திட்டிக்கொண்டிருந்தார். ஆனால், அந்தப் பெண் அவரைப் பார்க்காமல் மௌனமாக எங்கள் காரைப் பார்த்துக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து அமைதியாக அதே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டார்.

இரண்டாவது பெண், போக்குவரத்து நெரிசல் உள்ள தெருவில் சென்றுகொண்டிருந்த காரைச் சிறைபிடித்து உள்ளே இருக்கும் இளைஞர்களைத் திட்டிக்கொண்டிருந்தார். காரணம், ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த அவரையும் அவருடைய தோழியையும் காரில் இருப்பவர்கள் கேலியாகப் பேசியதுதான். கூட்டம் முழுவதும் பெண்களுக்குத்தான் ஆதரவு. அடிதடியில் முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், போனால் போகிறது என்று பெண்கள் காரை விடுதலை செய்தார்கள்.

ஈத் பெருநாள் என்பதால் அருகில் இருக்கும் கிராமங்களிலிருந்து பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள். என் மனைவியின் கறுப்புக் கண்ணாடியை வாங்கி ஒவ்வொருவராக அணிந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். நமது காணும் பொங்கல் திருநாள் போலவே நாங்கள் உணர்ந்தோம்.

ஹஸ்ரத்பால் மசூதி 

தல் ஏரிக்கு மிக அருகில் அதிக நெரிசல் இல்லாமல், விசாலமான இடத்தில் இந்த மசூதி இருக்கிறது. இதில் நபிகள் நாயகத்தின் புனித முடி ஒன்று பேழையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. 1963-ல் அது காணாமல் போய்விட்டதால் காஷ்மீர் முழுவதும் கலவரம் நடந்தது. பலர் உயிரிழந்தனர். அது மீட்கப்பட்ட பிறகே அமைதி திரும்பியது. நான் சென்றபோது மசூதி மிகவும் அமைதியாக இருந்தது. மௌல்வி ஒருவர் எனக்கு மசூதியைச் சுற்றிக் காட்டினார்.

நான் வழக்கமான கேள்வியைக் கேட்டேன். “இது இந்துக்கள் சொல்லும் தேவலோகம். ஆனால், ராட்சதர்கள் இருக்கிறார்கள். நான் இந்திய ராணுவத்தை மட்டும் குறிப்பிடவில்லை. இங்குள்ள அரசியல்வாதிகள், முல்லாக்கள், அரசு ஊழியர்கள், போலீஸ் எல்லோருமே மக்களின் ரத்தத்தைக் குடிக்கும் பேய்கள்.”

இந்திய எதிர்ப்பு 

இந்திய அரசியல் சட்டத்தின் 370-ம் பிரிவை காஷ்மீரிகள் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஓர் இளைஞர் “முன்னூற்று எழுபதை நீக்கினால், நீங்கள் எங்கள் பிணக்குவியல்மீது நடக்க நேரிடும். வரலாறு இந்தியாவை என்றுமே மன்னிக்காது. அல்லாவும் மன்னிக்க மாட்டார்” என்று சொன்னார். இந்திய எதிர்ப்புக்குக் காரணம், பள்ளத்தாக்கில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது. படித்த காஷ்மீரி ஒருவரிடம் “நீங்கள் பிரிந்துபோனால் இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் அதற்கு விலை கொடுக்க நேரிடும். பாகிஸ்தான் பிரிந்துபோனதற்கே இன்று வரை அவர்கள் விலை கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்றேன்.

“அதுதான் வரலாற்றுக் கட்டாயம் என்றால், எங்களால் என்ன செய்ய முடியும்?” என்று பதில் வந்தது. ஆனாலும், விடுதலை என்பது எட்டாக் கனவு என்பதை உள்ளூர மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. கிடைப்பது எதுவாக இருந்தாலும் பெரிதினும் பெரிதைக் கேட்போம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி. பள்ளத்தாக்கு மக்கள் அதில் 0.4% கூட இருக்க மாட்டார்கள். நாமும் நம்மால் முடிந்த பெரிதினும் பெரிதைக் கொடுப்பதுதான் ஒரு முழுமையான ஜனநாயக நாட்டுக்கு அழகு.

என்னதான் செய்யலாம்?

முதலாவதாக, காஷ்மீரைப் பற்றி அவதூறு செய்யும் ஊடகங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காஷ்மீர மக்களில் பெரும்பான்மையினர் அமைதியாக இருக்கிறார்கள். அமைதியை விரும்புகிறார்கள். ஊடகப் பிசாசுகள்தான் வன்முறையை, இந்திய எதிர்ப்பைத் தூண்டிவிடுகிறார்கள்.

இரண்டாவதாக, காஷ்மீரில் நடக்கும் வன்முறை வட இந்தியாவில் நடக்கும் வன்முறைகளைவிட அளவில் சிறியது. கொசுவை அடிக்கக் குண்டாந்தடி தேவையில்லை. கண்களைப் பறித்துக்கொள்ளும் சாதனங்கள் தேவையேயில்லை.

மூன்றாவதாக, எல்லோரிடம் பேசத் தயாராக இருக்க வேண்டும். பாகிஸ்தானுடன் சேர விரும்புபவர்களுடனும் நாம் பேச வேண்டும். மக்களில் கணிசமானவர்கள் அந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், அவர்களுடன் பேச மாட்டோம் என்று புறக்கணிப்பு செய்வது ஒரு ஜனநாயக நாட்டுக்குப் பெருமை சேர்க்காது.

பாகிஸ்தானுடனும் பேச வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கல் வீசும் குழுக்களின் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு முழுவதும் காஷ்மீரப் போலீஸ் கையில் இருக்கும். மத்திய போலீஸ் படைகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படுவார்கள். ஆனால், ஏதாவது சேதம் நிகழ்ந்தால் அரசு கடுமையான அடக்குமுறையைக் கையாள நேரிடும் என்று அவர்களிடம் விளக்க வேண்டும்.

நான்காவதாக, மற்றைய மாநிலங்களிலிருந்து பெருமளவு மக்கள் காஷ்மீரத்துக்குப் பயணிக்க வேண்டும். பயணிகளுக்குப் பள்ளத்தாக்கு மக்கள் என்றும் இடையூறு செய்ய மாட்டார்கள். மாறாக, அதிக மக்கள் இங்கிருந்து அங்கு சென்றால் காஷ்மீரத்தின் பொருளாதாரம் வலுப்பெறும். வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.\

ஆனால், இவை எல்லாம் நடக்கலாம் என்று காஷ்மீர மக்கள் நம்ப வேண்டும் என்றால், அவர்களுக்கு மத்திய அரசின்மீது, அதை நடத்தும் கட்சிமீது, முதலில் நம்பிக்கை வர வேண்டும். ஆனால், எங்கள் தலைவர் இந்திய இண்டியானா ஜோன்ஸ் என்று சொல்லிக்கொண்டு அலைபவர்களிடம் காஷ்மீர மக்கள் நம்பிக்கை வைப்பது கடினம்.

(நிறைவுற்றது)

- பி.ஏ.கிருஷ்ணன், ‘புலிநகக் கொன்றை’, 
‘இந்தியாவும் உலகமும்’ 
முதலான நூல்களின் ஆசிரியர். 
தொடர்புக்கு: tigerclaw@gmail.com



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard