New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும் அருணகிரி |


Guru

Status: Offline
Posts: 24601
Date:
அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும் அருணகிரி |
Permalink  
 


 அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும்

மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்” கட்டுரையை முன்வைத்து நான்குவிதமான கேள்விகள் வந்தன.

ஒன்று: ஜனநாயக புரட்சி என்று தோன்றினாலும் அதன் மூலம் உருவாகும் அரசு அடிப்படைவாத இஸ்லாமிஸ்டுகள் கையில் போய்விடாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படிப்போகும் பட்சத்தில் அது மீண்டும் மத சர்வாதிகாரத்தை நோக்கிய சரிவுதானே? இந்த புரட்சிகளின் தாக்கம் பிற அரபு நாடுகளில் எந்த அளவுக்கு இருக்கப்போகிறது?

இரண்டு: ஜனநாயகம் எல்லா அரபு நாடுகளுக்கும் அவசியமா என்ன? பொருளாதாரம் நன்றாய் இருக்கும் நாடுகளில் ஜனநாயகம் இல்லாவிட்ட ல் என்ன குடிமுழுகி விடப்போகிறது?

மூன்று: இஸ்லாமிய அரசுகளில் ஜனநாயகம் வருவது சாத்தியம்தானா?

நான்கு: ரஷ்யாவும் சீனாவும் இந்தப்புரட்சிகளை எப்படிப்பார்க்கின்றன? அரபு அரசியலில் இந்நாடுகளின் பங்கு எந்த வகையில் இருக்கப்போகிறது?

இந்த நான்கு அம்சங்களையும் முக்கியமான விவாதப்பொருட்களாக இந்தக் கட்டுரை விரித்துப் பேசுகின்றது.

முதல் கேள்வி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பாலிஸி அமைப்புகளிலேயே கடுமையாய் விவாதிக்கப்பட்டு வரும் ஒன்றுதான். ஜனநாயகப்புரட்சிகள் மதவாதிகளால் கடத்தப்பட்டதற்கு மிகச்சமீப கால உதாரணம் அல்ஜீரியா.

அரபு சமூகங்களின் இஸ்லாமிஸ்டுகளின் பங்கு

அல்ஜீரியா வட ஆப்பிரிக்க நாடு. இதன் மேற்கே மொராக்கோவும் கிழக்கே டுனீஷியாவும் லிபியாவும் இருக்கின்றன. இன்றைய எகிப்து போல அன்றைய அல்ஜீரியாவிலும் கணிசமான சதவீதம் இளைஞர் தொகை இருந்தது- வேலை கிடைக்காத, பொருளீட்ட வழியில்லாத, எதிர்காலம் பற்றிய தெளிவோ நம்பிக்கையோ இல்லாத இளைஞர் கூட்டம் அது. ராணுவத்தால் முட்டுக்கொடுக்கப்பட்ட அல்ஜீரியாவின் ஒரு-கட்சி சர்வாதிகாரத்தை எதிர்த்து 1988-இல் மக்கள் புரட்சி வெடித்தது. இதைத்தொடர்ந்து பல கட்சி ஜனநாயகம் அமல்படுத்தப்பட்டது. 1989-இல் இதற்கான அரசியல் சாஸனம் இயற்றப்பட்டது. 60 அரசியல் கட்சிகள் முளைத்தன. ஆனால் 1990-இல் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் மிகப்பெரும்பான்மையான இடங்களை யாருமே எதிர்பார்த்திராத விதத்தில் இஸ்லாமிய ஸால்வேஷன் முன்னணி (ISF) என்கிற இஸ்லாமிஸ்டுகளின் கட்சி வென்றது. 1991-இல் அல்ஜீரியா பொதுத்தேர்தல் நடந்தது. இதன் முதல் கட்ட வாக்குப்பதிவிலும் ISF முன்னணியில் வந்தது. இதனை எதிர்பார்க்காத ராணுவம் உடனே தேர்தல்களை தடை செய்தது. அல்ஜீரியாவின் ஜனநாயக பரிசோதனை மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. இதன் பின் இஸ்லாமிஸ்டுகளுக்கும் ராணுவ அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப்போர் மூண்டு ஏறத்தாழ பத்து ஆண்டுகள் தொடர்ந்தது; பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர்.

algerian_riot

இதனைப் பார்த்துக்கொண்டிருந்த மேற்கு நாடுகளுக்கு அன்று கிடைத்த பாடம்: முஸ்லீம்/அரபு நாடுகளில் கொண்டு வரப்படும் ஜனநாயகம் இஸ்லாமிஸ்டுகள் கையில்தான் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும்; அது ஜனநாயக மரபுகளுக்கே உலை வைப்பதாக முடிந்து விடும் என்பதாக ஆனது. பின்னர் பாலஸ்தீனத்தில் நடந்த ஜனநாயகத் தேர்தலில் பயங்கரவாதக்கட்சியென்று பெயர் பெற்ற ஹமாஸ் வென்ற நிகழ்வு ஐரோப்பிய அமெரிக்க பாலிஸி அமைப்புகளில் இந்த சிந்தனையை மேலும் வலுப்படுத்தியது. (ஹமாஸிற்கு ஈரானின் ஆதரவு இருப்பதும், ஈரான் இஸ்ரேலை ஒழிக்க வேண்டும் என்று கறுவி வருவதும், ஷியா ஈரான் அமெரிக்காவின் சுன்னி அராபிய நட்பு நாடுகளுக்கும்- குறிப்பாக சவுதி அரேபியாவிற்கு- சவால் விடும் இஸ்லாமிய அதிகார மையமாக ஆகக்கூடிய ஆபத்தும், ஹமாஸை அமெரிக்கா ஏற்க முக்கியத்தடைகளாகின்றன.)

இங்கு ஒரு விஷயம் முக்கியமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். அல்ஜீரியாவின் அதிகாரபூர்வ மதம் இஸ்லாம். அல்ஜீரிய ராணுவமும் சரி, அதன் முந்தைய சர்வாதிகாரியும் சரி, அல்லது அதன் ஆதரவு பெற்ற தேசிய விடுதலை முன்னணியும் சரி, எல்லா அதிகார அமைப்புகளும் இஸ்லாமிய மயமாகத்தான் இருந்தன. 99% மக்கள் இஸ்லாமியர்கள். இந்நிலையில் இஸ்லாமிஸ்டுகள் ஆட்சிக்கு வருவதை ராணுவம் எதிர்த்ததற்கு, அல்ஜீரிய ராணுவம் மதச்சார்பற்ற அரசை விரும்பியது என்று காரணம் சொல்ல முடியாது. இதற்கு மிகவும் நேரடியான வேறொரு காரணம் இருந்தது. ராணுவத்தின் அதிகாரிகள் பல வருடங்களாக பல காண்ட்ராக்டுகளில் பெருமளவு பணம் சுருட்டியிருந்தார்கள், ராணுவத்தின் கையில் சட்டம்/நீதித்துறை, உள்துறை மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகள் இருந்தன. ராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பு துறை காண்ட்ராக்டுகளை எதிர்த்து சட்ட ரீதியாக கேஸ் போட்டு வென்றுவிட முடியாது. இந்நிலையில் ISF தன் தேர்தல் அறிக்கையில் சட்டம்/நீதி மற்றும் உள்துறை அமைச்சகங்களை ராணுவத்தின் பிடியில் இருந்து சிவில் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் என்று அறிவித்தது. இது ராணுவத்தின் அதிகார மையத்திற்கு மிகப்பெரும் அச்சத்தை விளைவித்தது. எந்தக்கட்சியும் அறுதிப்பெரும்பான்மை பெறாமல் கூட்டணி ஆட்சி ஏற்படும், அப்படிப்பட்ட அரசை தன் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற ராணுவத்தின் எண்ணத்தில் இஸ்லாமிய ஸால்வேஷன் முன்னணி பெற்ற அறுதிப்பெரும்பான்மை ஆதரவு, மண்ணை அள்ளிப்போட்டது. ஆனால், எந்த ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று ராணுவத்தின் முக்கிய அமைச்சகங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும்.

அரபு சமூகவியல் நிலை

அல்ஜீரிய ஜனநாயக பரிசோதனையின் விளைவு ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை. எண்ணெய் ஆதார இஸ்லாமிய மற்றும் அரபு நாடுகளில் உருவாகும் ஒவ்வொரு கலவரமும் எண்ணெய் விலையையும் அதன் மூலம் உலகப்பொருளாதாரத்தையும் பாதிக்கவல்லதாய் இருந்தன. எனவே அரசியல் ஸ்திரத்தன்மை முதன்மைப்படுத்தப்பட்டு ஜனநாயகப்பரவல் முக்கியமற்றதாய் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டது.

செப் 11-இன் இரட்டைக்கோபுர தகர்ப்பிற்குப்பின் புஷ் அரசு ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பின் மூலம் அந்நாடுகளில் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்தி இஸ்லாமிஸ்டுகளைப் பின்னுக்குத் தள்ளி விட முடியும் எனவும் அதன்மூலம் மத்திய கிழக்கில் ஜனநாயக அலையொன்றைப் பரவச்செய்து விட முடியும் என்றும் கொள்கை ரீதியான முடிவெடுத்தது. (இந்த அணுகுமுறையை புஷ் அரசின் முன்னாள் செய்தித்தொடர்பாளர் ஸ்காட் மெக்லிலான் “கட்டாய ஜனநாயகம்”(!) (coercive democracy) என்றுஒரு பேட்டியில் குறிப்பிட்டார்). ஆனால் இந்த வகை கட்டாய ஜனநாயகத் திணிப்பு, ஜனநாயக அலையை மத்திய கிழக்கில் உருவாக்குவதற்குப்பதிலாக அமெரிக்கா மீதான அவநம்பிக்கை மற்றும் வெறுப்பு அலைகளைத்தான் பெருமளவில் உருவாக்கின. மட்டுமன்றி புஷ் அரசின் இறுதி நாட்களில் உருவான நிதி நிறுவன சரிவுகளும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அமெரிக்க அரசு 700 பில்லியன் டாலர் வரை முடக்க வேண்டிய அவசியமும் சேர்ந்து கொண்டதில் ஒபாமாவின் அரசு ராணுவச்செலவுகளையும் போர்களையும் உடனடியாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அதே சமயம் அரபு நாடுகளில் பெருகிவரும் மக்கள் தொகை, வேலையில்லாத்திண்டாட்டம், ஏழ்மை, வீட்டுவசதி இல்லாத ஒண்டுக்குடித்தன நிலை, ஆகியவை இளைய சமுதாயத்திற்கு எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையையும் ஆளும் மன்னர் குழுக்களை நோக்கிய ஒரு பெரும் எதிர்ப்பு அலையையும் உருவாக்கிக்கொண்டிருந்தன என்று பல ஆய்வு அறிக்கைகளும் பாலிஸி மையங்களும் தொடர்ந்து சுட்டிக்காட்டியபடியே இருந்தன.

தொலைக்காட்சியை அனுமதித்தன் மறைமுக விளைவாக 1975-இல் சவுதி மன்னர் பய்ஸல் கொல்லப்பட்டார். ஆனால் இன்று அரபு நாடுகளில் தொலைக்காட்சி சாதாரணமாக ஆகி விட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாய் இன்று இண்டர்நெட் போன்ற மாற்று ஊடகங்களும் வேகமாய்ப்பரவி வருகின்றன. இவை பிற நாடுகளின் இளைஞர்களுக்குக் கிடைத்து தமக்குக்கிடைக்காமலேயே போய்க்கொண்டிருக்கும் பல விஷயங்களை அவர்களுக்கு வெளிச்சம் போடுகின்றன. சமுதாயம், பொருளாதாரம், அரசியல் ஆகிய மூன்று அதிகார தளங்களிலும் உலகின் பிற வளர்ந்து வரும் நாட்டு மக்களுக்குக் கிடைத்து வரும் புதிய வாய்ப்புகள் தமக்குக்கிட்டாத நிலை அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கின்றது. மதவாதப்பழமையின் கட்டுப்பெட்டித்தனத்துக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்மைக்கும் நவீன வாழ்க்கை வசதிகள் குறித்த கனவுகளுக்கும் இடையே அரபு இளைய சமுதாயம் அலைக்கழிக்கப்படுகின்றது. அரபு நாடுகளில் இருபத்தைந்து வயதுக்குட்பட்டோர் 60 சதவீதம். ஆனால் பல நாடுகளில் மூன்றில் ஒருவருக்கு வேலையில்லை என்கிற அளவுக்குக்கூட வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடும் நிலை.

bp27

இதில் ஒரு முக்கியமான ஆனால் அதிகம் கவனிக்கப்படாத ஒரு பரிமாணம் உண்டு. அது அரபு இளைஞர்கள் வயது மிகவும் தள்ளிப்போய் திருமணம் செய்ய வேண்டிய நிலை. எகிப்து போன்ற பெரும்பான்மையான நாடுகளில் முப்பதை அடையும்வரை திருமணம் என்பதையே நினைத்துப்பார்க்க முடியாத நிலை இளைஞர்களுக்கு இருக்கிறது. எகிப்தில் ஓர் ஆண்டு வருமானத்தை விட நான்கு மடங்கு ஒருவன் திருமணம் செய்ய செலவழிக்க வேண்டி உள்ளது. மொராக்கோ இளைஞனின் சராசரி திருமண வயது 32 என்கிறது நியுஸ்வீக் செய்தி ஒன்று. கடந்த முப்பது வருடங்களில் ஏற்பட்டு விட்ட பண வீக்கத்தால் திருமண செலவு பெருமளவு அதிகரித்திருக்கிறது, குடும்பம் நடத்த ஆகும் செலவும் அதிகரித்திருக்கிறது, ஆனால் வேலைக்கான சம்பளம் மட்டும் முப்பதாண்டுக்கு முன்னிருந்த அதே நிலையில் இருக்கிறது என்கிறது புரூக்கிங்க்ஸ் நிறுவன கொள்கைத்திட்ட ஆய்வு நூல் ஒன்று (பார்க்க: Freedom’s Unsteady March by Tamara Cofmen Wttes).

இஸ்லாமிய ஒழுக்க இறுக்கம், ஷரியா சட்ட திட்டங்கள், பழங்குழு (tribal) கட்டுப்பெட்டித்தனங்கள், குடும்ப மரியாதை (family honour) ஆகியவைகளில் பிணைக்கப்பட்டுக் கிடக்கும் சாதாரண அரபு இளைஞனுக்கு சட்டமும் சமூகமும் ஏற்கும் வகையில் ஒரு பெண்ணின் அணுக்கம் கிடைக்க ஏறக்குறைய 30 வயது வரை காத்திருக்க வேண்டும்.

ஜனநாயகம் என்கிற மாற்று வெளி

ஒருபக்கம் படித்தாலும் வேலையில்லை என்னும் நிலை, மறுபுறம் வேலை கிடைத்தாலும் குடும்ப பாரத்தில் சம்பளம் முழுவதும் செலவாகும் நிலை, பாதிக்கிழவனாகி திருமணம் செய்ய வேண்டிய எரிச்சல் ஆகிய அனைத்தும் சேர்ந்தும் அரபு நாடுகளின் இளைஞர்களை கையாலாகாத கோபத்திற்குள் தள்ளுகிறது. அந்தக் கோபத்திற்கு வடிவம் கொடுக்கும் முயற்சியில் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதத்திற்குள் எளிதாக வந்து சேர்ந்து விடலாம். ஏன்?

ஏனெனில், ஒவ்வொரு சர்வாதிகார அரபு நாட்டிலும் சர்வாதிகார அரசுக்கு எதிராக குரல் எழுப்ப அனுமதிக்கப்படும் ஒரே இடம் மசூதி மட்டுமே. இஸ்லாமிய வெளியில் நின்றுகொண்டு மட்டுமே ஒருவன் அரசாங்கத்தை விமர்சனம் செய்ய முடியும். அரசைக்கேள்வி கேட்பதற்கு முன்னால் இஸ்லாமிய வளையத்திற்குள் இருக்கிறோமா என்று அவன் சரிபார்த்துக்கொண்டு விட வேண்டும். அங்கே நின்றுகொண்டு அரசு அதிகாரத்தை நோக்கி கேள்வி கேட்டால் மட்டுமே அது செவிமடுக்கப்படாவிடினும் தண்டிக்கப்படாமலாவது இருக்கும். ஏனெனில் மற்ற எல்லா எதிர்ப்பு வெளிகளும் அவனுக்கு தீர்மானமாக அடைக்கப்பட்டு விட்டிருக்கின்றன. ஆக, இஸ்லாமிஸ்டாக இல்லாமல் இருக்கும் ஒருவன் கூட இஸ்லாமிஸ்டுகளின் களத்துக்குள் தன்னைப் புகுத்திக் கொண்டு அரசைக் கேள்வி கேட்பதே அவனுக்குப் பாதுகாப்பு என்கிற நிலை இருக்கின்றது. இஸ்லாமிய அடிப்படைவாதம் அந்த அளவுக்கு காணப்படாத எகிப்தில்கூட இதுதான் உண்மை.

ஹார்வர்டின் மெஷ் அமைப்பின் (MESH-Middle East Strategy at Harvard) உறுப்பினர் ஸ்காட் கார்ப்பெண்டர் கெய்ரோவில் தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். தனது நண்பருடனும் அவரது கெய்ரோ நண்பியிடமும் உணவருந்தச் செல்கிறார். கெய்ரோ நண்பி மிகவும் நவீனமானவள். பிரிட்டிஷ்காரனை காதலிப்பவள். வைன் அருந்துபவள். புர்கா கிடையாது; ஜீன்ஸ் உண்டு. மொத்தத்தில் மேற்கத்திய நாகரீகம் சார்ந்த மேல்தட்டு அடுக்கைச் சேர்ந்தவள். அவளுடன் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு அரசியலை நோக்கித் திரும்புகிறது: ”இன்றைய நிலையில் தேர்தல் வந்தால் யாருக்கு உன் ஓட்டு” என்று கேட்கிறார். அவள் ஒரு நிமிடம் கூடத்தயங்காமல் ”முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood)” என்று சொல்லி அவரை அசர வைக்கிறாள். காரணம், ”அரசாங்கம் என்ற பெயரில் நடக்கும் சுரண்டலை அவர்களால்தான் ஒழித்துக்கட்ட முடியும்” என்று சொல்கிறாள். இத்தனைக்கும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கு எகிப்தில் அரசியல் அங்கீகாரம் கிடையாது.

இந்த நிலைக்கு முதற்காரணம் மதம் என்கிற வட்டத்தை விட்டு வெளியே இயல்பாக வளர்ந்திருக்கக்கூடிய பரவலான ஜனநாயக இயக்கங்களுக்கு எகிப்தின் அரசியலில் போதுமான இடம் அளிக்கப்படவில்லை என்பதே. எகிப்திலேயே இந்த நிலை என்றால், மத்திய கிழக்கின் பிற இஸ்லாமிய அடிப்படைவாத அரபு நாடுகளுக்கு இன்னும் அதிகமாகவே இது பொருந்தும்.

அரபு மன்னர்களின் அணுகுமுறை

அரபு நாடுகளின் மன்னர்களுக்கும் இந்த உண்மை புரிந்தே இருக்கிறது. பல அரபு நாடுகள் – குறிப்பாக துபாய் போன்ற எமிரக அரசுகளும், கத்தார் போன்ற நாடுகளும் அரபு நாடுகளில் ஜனநாயகம் குறித்து மேற்கு நாடுகளுடனும் அமெரிக்க பல்கலைகளுடனும் இணைந்து பல கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஒரு காலத்தில் எதிர்க்கப்பட்ட தொலைக்காட்சியை இன்று கத்தார் அரசு வெற்றிகரமாக உபயோகப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. அல்-ஜஸீரா கத்தார் அரசு நிதியுதவியில் தொடங்கி நடத்தப்பட்டு வரும் சேனல் ஆகும்.

இந்த முனைப்புகளின்பின் இருப்பது உண்மையில் தற்காப்பு உணர்ச்சியே என்பதை அடிக்கோடிட வேண்டும். சிறிய போலீஸ் படையை வைத்துக்கொண்டு பெருகி வரும் அதிருப்தி நிறைந்த ஒரு இளைஞர் கூட்டத்தை அடக்கி வைப்பது என்பது உண்மையில் மதவாதிகளின் கரத்தை வலுப்படுத்தி அவர்களை அரசுக்கு இணையான சக்தி வாய்ந்த மாற்று அதிகாரக்குவியமாக ஆக்குகின்றது என்பதை அரபு அரசுகள் உணர்ந்தே இருக்கின்றன. இந்த அதிகார மையத்துக்கு மாற்றாக இன்னொரு அதிகார மையத்தை உருவாக்குவதன் அவசியத்தை அரபு நாட்டு சர்வாதிகார அரசுகள் உணரத்தொடங்கி உள்ளன. ஏனெனில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கொம்பு சீவப்படும் இளைஞர் கூட்டம் ஒரு கட்டத்தில் தன்மீதே பாயலாம் என்பதை மத்திய கிழக்கின் சர்வாதிகார அரசுகள் உணர்ந்தே இருக்கின்றன.

புதிய ஆட்டக்களன்

எகிப்தின் புரட்சி படிப்படியாக அத்தனை சர்வாதிகார அரபு நாடுகளையும் கவிழ்த்து விடும் என்று எதிர்பார்ப்பது யதார்த்தமல்ல. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என்று இஸ்லாமிய/அரேபிய பகுதிகள் சொல்லப்பட்டாலும். வட ஆப்பிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் (அதாவது எகிப்திற்கு கிழக்கே, எகிப்திற்கு மேற்கே எனலாம்) அவற்றின் சமூக, அரசியல் வரலாற்றை ஒட்டி பல வேறுபாடுகள் உள்ளன. எகிப்திற்கு கிழக்கில் மத்திய கிழக்கில் புகுந்து போகப்போக இது போன்ற புரட்சிகள் எளிதாக வெற்றி பெறுவது கஷ்டம். இருந்தாலும் ஜனநாயகம் என்ற காற்று வீசத்தொடங்கி விட்டதை அமெரிக்காவோ ஐரோப்பாவோ –ஏன் அரபு அரசுகளோ கூட- தடுக்க முடியாது, (அல்லது அவ்வாறு தடுப்பதற்கு மிக அதிக விலை கொடுக்கப்பட வேண்டியியிருக்கும். அது அந்த அரசுகளுக்கே பாதகமாய்க்கூட முடியலாம்) ஆனால் இந்த அரசுகள் அந்தக்காற்றை தன் பாய்மர ஓட்டத்திற்கு ஏதுவாக உபயோகப்படுத்திக்கொள்ள முடியும். அந்தக்காற்றில் பரவும் மணம் எதுவாக இருக்க வேண்டும் என்பதைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க சகல முயற்சியும் எடுக்க முடியும்.

அதன் ஒரு பகுதியாகத்தான் USAID என்கிற அமெரிக்க வெளியுறவுத்துறை சார்ந்த அமைப்பின் மூலமும், அமெரிக்க காங்கிரஸால் நிதி உதவி தரப்படும் “ஜனநாயகத்திற்கான தேசிய நிதி அமைப்பு” – National Endowment for Democracy – என்கிற தனியார் அமைப்பின் மூலமாகவும் உலக அளவில் ஜனநாயகப் பரவலுக்கு என்று தனியாக நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகிறது. இரண்டு அமைப்புகளின் கைவசம் ஏறக்குறைய 900 மில்லியன் டாலர்கள் உள்ளன. குடிமைச்சமூகம் – Civil Society- திட்டம் மூலம் அரபு நாடுகளில் ஜனநாயகப்பரவலுக்கு என்று இந்த ஆண்டு பட்ஜெட்டில் 104 மில்லியன் டாலர்கள் ஒதுக்க தற்போதைய கேட்கப்பட்டுள்ளதாக அசோஸியேடட் ப்ரஸ் செய்தி தெரிவிக்கிறது. எகிப்தில் உருவான ஜனநாயகப்புரட்சிக்குப்பின்னால் உள்ள பல இளைஞர்கள் குடிமைச்சமூக திட்டத்தின் மூலம் அமெரிக்காவில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்று இப்போது வெளிப்படையாகவே செய்திகள் வெளியாகத்தொடங்கி விட்டன. (பார்க்க: http://articles.sfgate.com/2011-03-12/world/28685046_1_arab-leaders-arab-street-egypt). அமெரிக்கா மட்டும்தான் என்றில்லை, கனடா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் இது போன்ற அரபு நாடுகளை நோக்கிய ஜனநாயகப்பரவலுக்காக நிதியமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டு வருகின்றன. சமீப காலமாக இந்த அமைப்பின் நிதி ஆதாரத்துக்காக அரபு அரசுகளையும் பணம் போட வைக்க வேண்டும் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இத்தனை நாட்கள் சர்வாதிகார அதிகார மையங்களை ஆதரித்து வளர்த்து விட்ட மேற்குலகு இப்போது ஜனநாயகப்பரவல் என்பதை மையமாக்கி ஒரு புதிய ஆட்டக்களனை உருவாக்க முனைந்திருக்கிறது என்றுதான் இதனைப்புரிந்து கொள்ள வேண்டும். அரபு அரசியலில் மதவாத இஸ்லாமிஸ்டுகளுக்கு என்று இருக்கும் போட்டியில்லா அரசியல் வெளியை மேற்கின் ஜனநாயக முனைப்புகளில் பட்டை தீட்டப்பட்ட ஒரு இளைஞர் அணியைக்கொண்டு எதிர்கொள்வதே இதன் நோக்கம்.

இந்த ஜனநாயக முனைப்புகளின் ஆரம்ப நிலை அரசியல் வெற்றிகள் “மிதவாத” இஸ்லாமிஸ்டுகளைப் போய் சேர்ந்தால் கூட அதுவும் வெற்றியே என்று பார்க்கின்றன மேற்கின் கொள்கைத்திட்ட (பாலிஸி) அமைப்புகள். இதற்கு ஒரு காரணத்தையும் சொல்கின்றன. இஸ்லாமிஸ்டுகள் என்று எல்லா அரசியல் இஸ்லாமிய குழுக்களையும் ஒன்றாக பொதுமைப்படுத்துவது மிதவாத இஸ்லாமிஸ்டுகளையும் (உ-ம். எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவம்), தீவிரவாத இஸ்லாமிஸ்டுகளையும் (உ-ம் பாலஸ்தீனத்தின் ஃபாட்டா கட்சி) , பயங்கரவாத இஸ்லாமிஸ்டுகளையும் (உ-ம் அல்-க்வைதா) ஒரே மாதிரி எடைபோட்டு ஒரே அணியில் வைப்பது பயங்கரவாத இஸ்லாமிஸ்டுகளுக்கு லாபமாகி விடுகிறது; மாறாக ஓட்டு ஜனநாயகத்தில் முதல் இரண்டு தரப்பினரையும் பங்கெடுக்க வைத்தால், அது பயங்கரவாத இஸ்லாமிஸ்டுகளைத் தனிமைப்படுத்துவதோடு, பிற ஜனநாயக குரல்களுக்கும் அரசியல் வெளி ஒன்றை ஏற்படுத்தித்தரும், இது ஆரம்பத்தில் ”மிதவாத” இஸ்லாமிஸ்டுகளுக்கு உதவினாலும் போகப்போக ஜனநாயக அமைப்புகள் வலுப்பெறுவதற்கும், மத இறுக்கங்கள் குறையவும், ஒட்டு மொத்த சமூக இளகலுக்கும் பெரிதும் உதவும் என்பதே இதற்குப்பின்னால் உள்ள தர்க்கமாகும்.

விலை குறைந்த சேஃப்டி வால்வ்

இந்த தர்க்கம் சரியானதா இல்லையா என்பது விவாதத்துக்குரியது. ஏனென்றால் முஸ்லீம் சகோதரத்துவம் எகிப்தில் வேண்டுமானால் மிதவாதத்தைக் கடைப்பிடிக்கலாம், ஆனால் வன்முறையை வெளிப்படையாகவே ஆதரிக்கும் தரப்பு அது; பிற நாடுகளில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டிருக்கின்றது. அதேபோல் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும் பாலஸ்தீனத்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பாகவும் இருக்கிறது – ஆட்சிக்கு வந்தபின்னும் வன்முறையை விட்டுவிடவில்லை. என்றாலும் மேற்கு நாடுகள் இந்த ஜனநாயக முயற்சியில் இறங்கக் காரணம் – அரபு இளைஞனின் அதிருப்தியையும் கட்டுக்குள் வைக்கவும், மன அழுத்தம் வெடிக்காமல் பாதுகாப்பான விதத்தில் வெளியேற்றப்படவும் இதை விட வேறு “விலை குறைந்த” வழி அவைகளுக்கு இன்றைய நிலையில் எதுவுமே இல்லை என்பதுதான்.

“விலை குறைந்த வழி” என்பது இன்றைய தேதியில் அமெரிக்காவிற்கும் சரி, ஐரோப்பிய யூனியனுக்கும் சரி, மிக மிக முக்கியம். ஐரோப்பிய யூனியனின் நிதி ஆதாரமே ஆட்டம் கண்டு இருக்கிறது. போர்ச்சுகல், அயர்லாந்து, இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் என்று பல நாடுகளில் பரவிவரும் அரசுப் பொருளாதார திவால் நிலையானது ஐரோப்பிய மைய வங்கியின் ஆரோக்கியத்தையும் ஐரோப்பிய யூனியன் மற்றும் யுரோவின் எதிர்காலத்தையுமே கேள்விக்குள்ளாக்கி விட்டிருக்கின்றன. ஆனால் அரபு நாடுகளின் அரசியல் என்பது – எண்ணெய் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பிருந்தேகூட- ஐரோப்பாவாலும், பழைய சோவியத் யூனியனாலும், அமெரிக்காவுலும் செதுத்தப்பட்டும் செலுத்தப்பட்டுமே இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
RE: அரபு நாடுகளில் புரட்சி – துவக்கமும், தொடர்ச்சியும் அருணகிரி |
Permalink  
 


அரபு நாடுகளில் புரட்சி – ஜனநாயகம் சாத்தியமா?

ஜனநாயகம் அவசியம்தானா?

bp11

பொருளாதாரம், எண்ணெய் வளம் என்றெல்லாம் பேசினாலும், ஐரோப்பிய அமெரிக்க நாகரீகங்களுக்கும் அரபு நாடுகளுக்குமான உரசல்கள் அனைத்திலும் – சிலுவைப்போர்களில் தொடங்கி இன்றைய இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை வரை – அந்தந்த சமூகங்களையும் கலாசாரங்களையும் வரையறை செய்யும் தத்துவங்களின் அடிநாதம் பல நூற்றாண்டுகளின் கால இரைச்சலைத் தாண்டி இன்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதுதான்“நாகரீகங்களின் மோதல்” என்று சாமுவேல் ஹண்டிங்டனை இதனைக் குறிப்பிட வைத்தது.

இஸ்லாமிஸ்டுகளை ஒரு நிலையில் வலுவிழக்கச் செய்யும் மேற்கு நாகரீகத்தின் இத்தகைய முயற்சிகளை அரபுச்சமூகங்கள் சந்தேகத்துடனேயே பார்க்கும். மட்டுமல்ல, மஃப்டிக்களும், முல்லாக்களும், உலெமா அமைப்புகளும் வலுவிழந்து போகும் ஒரு அரசியல் நிலை ஜனநாயகத்தால் மட்டும் எளிதாய் வந்து விடும் என்று எனக்குத்தோன்றவில்லை. எகிப்து, ஈரான், சவுதி அரேபியா ஆகியவையே அரபு சமூகத்தின் அதிகார மையங்கள். அதில் ஈரான் அரசு மதவாத அயதுல்லாக்கள் பிடியில் இருக்கிறது. சவுதி அரேபிய சமூகம் இஸ்லாமிய அடிப்படைவாத வஹாபியிசத்தின் பிடியிலும், அதனைப் பெரும் செலவு செய்து பரப்பி வரும் முல்லாக்கள் மற்றும் அரச குடும்பம் ஆகியவற்றின் பிடியிலும் இருக்கிறது. ஈரானும் சவுதி அரேபியாவும், வரலாறு (பெர்ஷியன் x அரபு); நாகரீகம் (பாரசீக நாகரீகம் அரபை விடத் தொன்மையானது; இஸ்லாத்துக்கு முந்தைய நாகரீக வெற்றிகள் பலவற்றை உள்ளடக்கியது); மதப்பிரிவு (ஷியா x சுன்னி) ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்ததொரு நிழல் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக சவுதி அரேபியாவின் வஹாபி மன்னர் குடும்பத்துக்கு மெக்கா-மெதினா காப்பாளர்கள் என்பது ஈரான் தலைமைக்குக் கிடைக்காத ஒரு தனிப்பெரும் அந்தஸ்தைத் தந்துள்ளது. அந்த தனிப்பெரும் அந்தஸ்தை முன்வைத்தே சவுதி அரேபியாவின் மன்னர் வம்சம் அரசாளும் தகுதியை பெற்றிருக்கிறது. சவுதி அரேபியாவின் மன்னர் அளவுக்கு அந்நாட்டுத் தலைமை முல்லாவும் பல விஷயங்களில் அதிகாரம் மிகுந்தவராக இருக்கிறார். இஸ்லாமிய சட்டதிட்டங்களை தெளிவுபடுத்திக்கொடுப்பதே இப்படிப்பட்ட முல்லாக்கள்தான் எனும்போது அரசன் அந்தத்திட்டத்தை சரியாக அமுல்படுத்துபவன் மட்டுமே. இந்நிலையில் சவுதி போன்ற அடிப்படைவாத இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகத்தின் குரல் எப்படி எழும்ப முடியும் என்கிற கேள்வி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகம் என்பதே அத்தனை அவசியம்தானா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இந்தக் கேள்விக்கு பதில் என்று சொல்வதென்றால் இப்படிச் சொல்லலாம். ஜனநாயகம் என்பது படகின் துடுப்பு போல. துடுப்பு இல்லாத படகிலும் அலையும் காற்றும் சாதகமாக இருந்தால் தொடர்ந்து பயணித்து தூரத்தில் தெரியும் கரையை அடைந்துவிட முடியலாம்தான். வழியில் சுழல் தெரிகிறது என்றால் துடுப்பு அவசியம். பாறையில் இடிக்காமல் சுற்றிச்செல்ல துடுப்பு அவசியம். எதிரிப்படகு துரத்தினால் துடுப்பு அவசியம்.

ஒவ்வொரு மனிதனும் சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து அதிகார தளங்களிலும் பங்கேற்க ஜனநாயகம் வழி காட்டுகிறது. ஜனநாயகத்தின் நடைமுறைத் தவறுகள் பல இருக்கலாம். ஆனால், அதன் தொடர்ந்த செயல்பாடு தவறுகளைத் திருத்தும் வழியையும் திறந்து வைக்கிறது. அதிகாரத்தைப் பரவலாக்குவதன் மூலம், பெரும்பாலான மக்களுக்கு அரசாங்கத்தில் தனக்கும் பாத்தியதை இருக்கிறது என்கிற உரிமை உணர்வை அளிக்கிறது. அப்படிப்பட்ட உரிமைக்கான குரலை எழுப்ப அனுமதிப்பதன் மூலம், தனது எதிர்காலத்தையும், சமூகவிதியையும் உள்ளிருந்தே வடிவமைத்துக் கொள்ளக்கூடிய சாத்தியம் அந்த சமுதாயத்தின் முன் விரிகிறது.

அது அந்த சமுதாயத்திற்கு எதிர்காலத்தையும், தன் சந்ததிகளின் நல்வாழ்வையும் குறித்த நம்பிக்கையை வளர்க்கிறது. எதிர்காலம் குறித்த அந்த நம்பிக்கை வன்முறை வெடிப்புகளிலிருந்து அந்த சமுதாயத்தை மெதுவாக விலக்குகிறது. மென்மையாக்குகிறது. நாகரீகப்படுத்துகிறது. பேரரசுகளால் நாகரீகத்தை உருவாக்க முடிந்ததற்குக் காரணம் அவை தமது ஸ்திரத்தன்மையின் மூலம் அந்த மக்களுக்கு ஒரு நீண்ட கால பாதுகாப்பு உணர்வையும் எதிர்காலம் குறித்த உத்தரவாதத்தையும் அளித்தன என்பதுதான். ஆனால் பேரரசின் மிகப்பெரிய பலமும் பலவீனமும் மன்னன் என்கிற ஒற்றைப் பேரதிகார மையம்தான் என்பதையும் வரலாறு நமக்குக் காட்டிக்கொண்டே வந்திருக்கிறது.

சர்வாதிகார அமைப்பில் இரக்கம் மிகுந்த சர்வாதிகாரி இருக்கும்வரை படகு நன்றாகச் செல்லலாம். ஆனால் அது எளிதில் கவிழ்க்கப்படக்கூடிய நிலையற்ற ஒரு அமைப்பு. மட்டுமன்றி, பல சர்வாதிகாரிகளுக்கு மக்களின் அதிருப்தி தெரிவிக்கப்படும் ஊடகப் பாதைகள் மூடப்பட்டு விடுகின்றன. எனவே தவறான பாதையில் படகு சென்றாலும் சரியான நேரத்தில் சரியான வழியில் திருத்திச்செலுத்துவது கடினமாகிறது. அவசர நிலைக்குப்பிறகு நடந்த தேர்தலில் இந்திரா தோற்றவுடன், தனது நண்பர் குஷ்வந்த் சிங்கிடம் “இவ்வளவு கொடுமைகளும் துஷ்பிரயோகங்களும் நடக்கின்றன என்று ஏன் என்னிடம் ஒருவருமே சொல்லவில்லை?” என்று கேட்டதற்கு, குஷ்வந்த் சிங் சொன்ன பதில் “சொல்லக்கூடிய அத்தனை வாய்களையும்தான் நீங்கள் அடைத்து விட்டிருந்தீர்களே?”

இஸ்லாமிய அரசுகளில் ஜனநாயகம் சாத்தியமா?

bp9

கடந்த ஆண்டு மறைந்த பிரான்ஸ் நாட்டு அரசியல் தத்துவவாதி க்ளாட் லிஃபோர்ட் (Claude Lefort) ஜனநாயகத்தின் மிகப்பெரும் பலம் ‘அதிகாரத்தின் காலி நாற்காலி’ என்கிற கோட்பாடுதான் என்றார். அதாவது ஜனநாயக அமைப்பில் அதிகாரத்தின் நாற்காலி நிரந்தரமாகக் காலியாகத்தான் இருக்கிறது, அது தொடர்ச்சியாக ஆனால் தற்காலிகமாக அவ்வப்போது வெவ்வேறு மக்கள் பிரதிநிதிகளால் மக்களின் இறையாண்மை மூலம் (sovereignty of people) நிரப்பப்படுகிறது, என்கிறார் லிஃபோர்ட்.

ஆனால் சர்வாதிகார அரசுகளில் – குறிப்பாக இஸ்லாமிய அரசுகளில்- மக்களின் இறையாண்மையால் நிரப்பப்படும் அரசு அதிகாரம் என்பதானது மிகவும் சர்ச்சையைக் கிளப்பும் விஷயமாக இருக்கிறது. இஸ்லாமிய அரசியல் சட்டகத்தில் அதிகாரம் என்பது அல்லாவிடனிடத்திலேயே எப்போதும் இருக்கிறது, அது காலியாகவே இருப்பதில்லை. அந்தப்பீடம் நிரந்தரமாக ஏக இறைவனால் நிரப்பப்பட்ட ஒன்றே. ஆட்சிக்கு வருபவர்கள் (தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்) செய்ய வேண்டியதெல்லாம் ஏக இறைவனின் சட்ட திட்டங்களை கறாராகச் செயல்படுத்துவது மட்டுமே. இது ஜனநாயகம் நோக்கிய இயக்கத்தில் இஸ்லாமிய சமூகங்களுக்கு இருக்கும் கோட்பாடு ரீதியான முக்கியத் தடை எனலாம்.

ஜனநாயகத்தில் மேலும் இரண்டு விஷயங்கள் அடிப்படையானவை:

– ஒன்று கூடி முடிவெடுப்பது- இதனை கலந்தாலோசித்தல் எனலாம், – இரண்டாவது பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் சேர்ந்து சமூக சட்டதிட்டங்களை அரசியல் சாஸனங்களின் மூலம் வரையறை செய்து கொள்வது- இதனை பெரும்பான்மையின் இறையாண்மை (popular sovereignty) எனலாம் (இறையாண்மை என்பதே loaded term என்பது எனக்குப்புரிகிறது, வேறு புது வார்த்தை ஒன்றை இந்த இடத்தில் கண்டுபிடித்துப் புகுத்துவதை விட இறையாண்மை என்றே குறிப்பிடுவதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்)

கூடி முடிவெடுப்பது என்பது இஸ்லாத்தில் ஸுரா அடிப்படையில் ஏற்கனவே இருக்கிறது என்று வாதாடுபவர்கள் உண்டு,. அதன் அடிப்படையில் தேர்தல் என்கிற அம்சத்தை இஸ்லாமிஸ்டுகளும் மதவாதிகளும்கூட ஒப்புக்கொள்ளக்கூடும். ஆனால், இதில் ஒரு முக்கியமான வித்யாசம் உள்ளது. ஜனநாயகத்தின் தேர்தலில் தெரிவு செய்யப்படும் நபருக்கு புதிய சட்டம் இயற்றுவது, பழைய சட்டத்தை மாற்றியமைப்பது ஆகிய அடிப்படை சமூக நிர்ணய அம்சங்களில் பங்கு இருக்கிறது. ஆனால் சுரா கவுன்ஸில் தேர்ந்தெடுக்கும் (இமாம் அல்லது கலீபாவின்) தலைமைக்கு இஸ்லாமிய ஷரியா சட்டத்தை சரியாகப் பொருளுணர்த்த (interpret) மட்டுமே அதிகாரம் இருக்கிறது. ஷரியா சட்டத்திற்கு மாற்றாய் புதிதாய் சட்டம் இயற்றவோ இருக்கும் சட்டத்தை மாற்றவோ அதிகாரமில்லை. இஸ்லாமிய அரசு என்று வரையறுத்து விட்டால் இதுதான் அங்கே நடக்கக்கூடியது.

இஸ்லாமிஸ்ட் கோட்பாடு பெரும்பான்மையின் இறையாண்மை என்பதை ஒப்புக்கொள்வதில்லை. இஸ்லாமிய அரசில் நிலவக்கூடியது அல்லாவின் இறையாண்மை மட்டுமே என்பதால் மக்களின் இறையாண்மை என்ற கருதுகோள் ஒரே இறைவனுக்கு இணைவைக்கும் அபச்செயலாகக் கருதப்படுகிறது. ஒரு தீவிர இஸ்லாமிஸ்ட் சமூகமோ அரசோ ஜனநாயகம் நோக்கி நகர முதற்பெரும்தடையாக ஆவது இதுதான்.

ஆனால் அரபு சமூகங்கள் தீவிர இஸ்லாமிஸ்டுகளால் மட்டும் (அல்லது இஸ்லாமிய மதத்தவரால் மட்டும்) நிரப்பப்பட்டிருக்கவில்லை. அங்குள்ள அரசியல் உரையாடல் தளங்கள் அனைத்தும் இஸ்லாமிஸ்டுகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்பதே உண்மை. அதனை மாற்ற முடியுமா என்கிற பரிசோதனைக்கு மேற்கின் இந்த ஜனநாயக முனைப்புகள் வழிசெய்யுமா என்பதே முக்கியக்கேள்வி. மேற்கின் பல பாலிஸி அமைப்புகள் இறுக்கமான இஸ்லாமிய சமூகங்களில் எடுத்தவுடனேயே சமத்துவத்தையும் சமூகத்தில் தாராள மனப்பான்மையையும் முதன்மைப்படுத்தும் தவறைச்செய்கின்றன. அதாவது பேச்சுரிமை, பெண் சமத்துவம், மதப்பொறுமை ஆகியவை வளராத சமூகத்தில் ஜனநாயகம் நிலைக்காது என்பது அவர்கள் வாதம். இது இரண்டு காரணங்களால் சரியான வாதம் இல்லை:

ஒன்று: எந்த ஐரோப்பிய நாடும் ஜனநாயகத்தொடக்க காலத்தில் தாராள மனதுடனோ இளகிய சமூகக்கட்டமைப்புடனோ இருந்தது கிடையாது. அமெரிக்காவிலும் இதே நிலைதான். பிரான்ஸில் 1945 வரை பெண்கள் ஓட்டுப்போட முடிந்ததில்லை. 1964-இல்தான் அமெரிக்காவில் சமத்துவ சிவில் உருமைச்சட்டம் இயற்றப்பட்டது. இரண்டாம் உலகப்போர் வரை யூதர்களை இனரீதியாக கீழ்மைப்படுத்தும் சட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் இருந்தன.

இரண்டு: ஜனநாயக அமைப்புகள் -இஸ்லாமிய அரசமைப்புக்குள்ளேயே என்றாலும் கூட – படிப்படியாக வலுப்பெறுவது இஸ்லாமிய சமூக இறுக்கம் காலப்போக்கில் தளர உதவும். இதன்மூலம் சமுதாயம், கலாசாரம், நாகரீகம் என்று பலதளங்களில் மாற்றங்கள் நிகழவல்ல பல திறப்புகள் அச்சமுதாயத்திற்குக் கிடைக்கின்றன. அராபிய சர்வாதிகார அரசுகளின் பின்னணியில் 30 வருடங்களுக்கும் மேலாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு அதிகார யந்திரம் இருக்கிறது. அது. எனவே அதன் நிறம், மணம், குணம் எல்லாம் ஒரே நாளின் விடியலில் மாறிவிடும் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால் படிப்படியாக மாற வாய்ப்பு இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஒரு நிலையில் இந்தோனேஷியா போன்ற ஒரு இளகிய இஸ்லாமிய சமூகத்தை அரபு நாடுகளில் உருவாக்கலாம். உத்தரவாதம் தர முடியாது. இவை நடக்காமலும் போகலாம்தான், ஆனால் இந்த முயற்சியைக்கூட மேற்கொள்ளாத நிலையில், மதவாத இஸ்லாமிஸ்டுகள் வலுவான சக்திகளாக காலாகாலத்திற்கும் இருப்பது மட்டுமே உறுதி செய்யப்படும். எனவே இஸ்லாமிய நாடுகளில் ஜனநாயகப்பரிசோதனைக்கு ஒரு முயற்சியை செய்து பார்ப்பது அவசியமாகவும் ஆகின்றது.

சீனாவும் ரஷ்யாவும்

bp24

சவுதி அரேபியா போலவே ரஷ்யாவும் மிகப்பெரும் எரிசக்தி வளத்தைக்கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நடைபெறும் ஒவ்வொரு கலவரமும், புரட்சியும் எண்ணெய் விலையை அதிகரித்து ரஷ்யாவுக்கு மிகப்பெரும் லாபத்தை ஈட்டித்தருகின்றன. ஆனால் அதைத்தாண்டி அரபு நாடுகளின் தொலைதூர அரசியல் பயணத்தை செலுத்தும் வசதியோ விருப்பமோ இன்றைய ரஷ்யாவிற்கு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். எகிப்தின் அன்வர் சதாத் சோவியத் துருப்புகளை தன் நாட்டில் வெளீயேற்றியதில் இருந்தே அரபு நாடுகளில் அதன் தாக்கம் குறையத்தொடங்கி விட்டது. மட்டுமன்றி செச்னியாவின் முஸ்லீம் தீவிரவாதிகளை புடின் அரசு கடுமையாக அடக்கி வருவது இஸ்லாமிய நாடுகளுக்கு ரஷ்யாவின் மேலுள்ள எதிர்ப்புணர்வையே வலுப்படுத்தி இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத்துக்கெதிரான நிழல் போரை அமெரிக்கா நடத்த பெருமளவு நிதியுதவி செய்தது சவுதி அரேபியா என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அரபு புரட்சி நிகழ்வுகளைப் பொறுத்தவரை ரஷ்யா இவற்றை வெளியிலிருந்து கவனிக்கும் ஒரு சக்தியாக மட்டுமே இதுவரை இருந்து வருகிறது. எண்ணெய் வளம் நிறைந்த காக்கஸஸ் பகுதிகளில் இவை கலவர சூழலைக்கிளறி விடுமோ என்கிற அச்சம் அதற்கு இருக்கிறது. நிலையான அரசுகளை சிதறச்செய்து மத்திய ஆசியாவின் சில பகுதிகளில் மத வெறியர்கள் அதிகாரத்தைப்பிடித்து விட இந்தப்புரட்சிகள் வகை செய்து விடலாம் என்று ரஷ்ய அதிபர் மெட்வதெவ் தெரிவித்துள்ளார். ஓரமாய் நின்று வேடிக்கை பார்க்கும் நிலையில் இருக்கும் ரஷ்யாவை இந்தப்புரட்சிகள் மேலும் சிந்திக்க வைக்கும் என்பது மட்டும் நிச்சயம். அமெரிக்கா, ஐரோப்பா போல ரஷ்யாவும் மத்திய கிழக்கிலும், தெற்காசியாவிலும் மீண்டும் தன் அரசியல் கவனத்தை கூர்மைப்படுத்தத்தொடங்கலாம். அதன் தொடர்ச்சியாக சோவியத் யூனியன் கால பழைய தொடர்புகளை ரஷ்யா புதுப்பித்து வலுப்படுத்த தொடங்கலாம். ஆனால் அது முன்புபோல் வலுவானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

சீனாவிற்கோ அரபு நாடுகளை நோக்கிய பலமான பொருளாதாரப் பெருநோக்கங்கள் உள்ளன. மத்திய கிழக்கிலும், வட ஆப்பிரிக்காவிலும் சீன பொருட்களுக்கான சந்தையை விரிவுபடுத்தும் திட்டம் அதற்கு இருக்கிறது. ஆனால் மேற்கு நாடுகளின் ஜனநாயகப்புரட்சி என்கிற கோஷத்தை சீனா மிகவும் சந்தேகத்துடனேயே பார்க்கிறது. எகிப்தின் ஜனநாயகப்புரட்சியை அடுத்து சீனாவில் இண்டர்நெட் கடுமையாக சென்ஸார் செய்ய்ப்பட்டுள்ளது. அரபு நாடுகளின் புரட்சி உய்கூர் முஸ்லீம்களை தூண்டி விடலாம் என்று எண்ணுவதால் வலைத்தளங்களில் தன் கண்காணிப்பை இன்னமும் அதிகமாக்கி உள்ளது. ஆனால் சீனாவில் இதுபோன்ற ஜனநாயகப் புரட்சிகள் வரும் வாய்ப்பு மிகவும் குறைவென்றே நினைக்கிறேன். அரபு நாட்டு ஜனநாயகப்புரட்சிகள் –குறிப்பாக எகிப்தில் நடந்தது- வாய்ப்பு மறுக்கப்படும் நகரங்களின் இளைஞர்களால் முன்னின்று நடத்தப்பட்டது. சீனாவின் நகர்ப்புற இளைஞர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வாய்ப்புக்குப் பஞ்சம் இல்லை. சீனாவின் கிராமப்புறங்களில் நிலைமையே வேறு, ஆனால் அவர்கள் ஒரு திரளாகத்திரண்டு சீன அரசை எதிர்த்து தம் கோரிக்கைகளை முன் வைத்து புரட்சி செய்ய முனைவது என்பது எளிதில் நிகழ முடியாத ஒன்று. சிறு சிறு கலவரங்கள் ஆங்காங்கே தோன்றி மறைவது சீனாவில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அவற்றை பாதுகாப்பு படைகளைக்கொண்டு அங்கங்கே பற்றியெரியும் தீயை அணைப்பதுபோல் சீனா அடக்கிக்கொண்டே வருகிறது என்கிறார் பத்திரிகையாளர் பல்லவி அய்யர் (பார்க்க: ”சீனா- விலகும் திரை”). அரபு நாடுகள் போல சீனாவில் ஜனநாயகப்புரட்சி உருவாவது என்பது மேற்குலகிற்கும் தற்போது தேவையில்லாத தலைவலியையே உருவாக்கும். சர்வாதிகாரிகளாக இருந்தாலும் ஸ்திரத்தன்மை பொருட்டு அத்தகைய அரசுகளை மேற்குலகு ஆதரித்தே வந்திருக்கிறது. சீனாவைப்பொறுத்தவரை இந்த புரட்சிகள் உள்நாட்டில் உள்ள இளைஞர்களை உசுப்பி விடாவண்ணம் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒரு விஷயம். அவ்வளவே.

இறுதியாக

bp19

மத்திய கிழக்கைப் பொருத்தவரை அரேபிய நாடுகளில் மத இறுக்கத்தின் கட்டுப்பெட்டித்தனங்கள் விலகி, நவீன கல்வியின் அம்சங்கள் உள்வாங்கப்பட்டு உருவாக்கப்படும் ஜனநாயகம்தான் நீண்டகால பயனைத்தரும். அந்த மாற்றம் சவுதி அரேபியாவில் நடக்காமல் மத்திய கிழக்கில் பெரிய மாற்றங்கள் எளிதில் வந்து விடாது. ஆனால் கட்டுப்பெட்டித்தனங்கள் விலகும்வரை காத்திருப்பது என்பது இஸ்லாமிஸ்டுகளின் தரப்பை மேலும் வலுப்படுத்தலாம் என்பதால் ஜனநாயகத்திற்கான ஒரு வெளியை உருவாக்குவதில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன. உள்ளூர் இளைஞர்களின் அதிருப்தி உணர்வுகளுடனான உரையாடலைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் இதனை பல அரபு நாடுகளும் ஆதரிக்கத் தொடங்கியுள்ளன.

மத்திய கிழக்கில் மிகப்பெரிய புதியதொரு ஆட்டம் – வலைத் தொழில்நுட்பம், ஜனநாயகம் – ஆகியவற்றை முன்னிறுத்தி தொடங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்வது நல்லது. மத்திய கிழக்கில் நடக்கும் எதுவும் இந்தியாவையும் பாதிக்கும் என்பதால், இந்திய உள்துறை இதனைக் கவனமாக அவதானித்து நாட்டின் ஒருமைப்பாட்டையும் ஜனநாயக அமைப்புகளின் வலுப்படுத்தலையும் கருத்தில் கொண்டு தனக்கென்று ஒரு தொலைநோக்குத் திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பான அரசாங்கம் என்பது உலக அரசியலைப் பின்தொடர்ந்து கவனித்துக்கொண்டே, அதன் மாற்றங்களுக்கேற்றவாறு தம்மை வலிவமைத்துக்கொண்டே இருக்கும் ஒன்றுதான். பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள் –குறிப்பாக அமெரிக்கா- எவ்வாறு உரையாடலின் சட்டகத்தை மட்டுமல்ல, அதனை வடிவமைக்கும் கூறுகளையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கப் பயின்றிருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. இதனைத்தொடர்ந்து செய்ய ஒரு மாபெரும் அறிவுஜீவிக்கூட்டமே – பல்கலைக்கழகங்கள், திட்ட அமைப்புகள், அரசுசாரா நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்து இயங்கும் தொலைநோக்கு ஆராய்ச்சி மையங்கள்- என்று பல்வேறுபட்ட அறிவுத்துறைகளையும் வியாபித்து இயங்குகின்றது. (இவ்வளவு பேர் வேலை செய்தும் பல விஷயங்களில் கோட்டை விடுகிறதுதான்; ஆனாலும் உடனே சுதாரித்து எழவும், course correction செய்யவும், புதிய யதார்த்தத்தை கையகப்படுத்தவும் இப்படிப்பட்ட தொடர்ந்த அறிவுலக செயல்பாடுகள் உதவுகின்றன). பாரதம் ஒருகாலத்தில் இப்படியான கருத்துலக வடிவமைப்பை எந்த வித திணிப்பும் இன்றி இயல்பாகவே செய்து வந்திருக்கிறது. இந்திய ஞான மரபின் கூறுகள் கீழை தேசங்களில் மட்டுமன்றி கிரேக்கம் அலெக்ஸாண்ட்ரியா, பாரசீகம் ஆகிய பகுதிகளுக்கும் பரவியிருந்தது. பிராந்திய சக்தியாக வளரும் பாரதம் தனது பழைய நாட்களை நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு பாழ்பட்டு நின்ற நாட்கள் கழிந்து விட்டன. சிந்தனையில் தன்னம்பிக்கையையும், உலக அரசியல் செயல்பாடுகளில் உறுதியையும், தொலைநோக்குத் திட்டங்களில் சுயச்சார்பையும் வளர்த்துக்கொள்வது இக்காலகட்டத்தின் உடனடி அவசியம் ஆகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 மூடிய அரசுகளைத் திறக்கும் தொழில்நுட்பங்கள்

 

சீட்டுக்கட்டுக் கட்டடத்தின் அடிச்சீட்டை உருவினாற்போல வட ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் சர்வாதிகார அரசுகள் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளன. தரைக்கு அடியில் புதைந்து தூங்கிக்கிடந்த வரலாறு முழித்துக்கொண்டு சோம்பல் முறித்ததில் நைல் நதிப்பிரதேசத்தில் ஓர் அரசியல் பூகம்பமே தொடங்கி விட்டது. ராணுவம், சர்வாதிகாரிகள், அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா ஆகியவை மட்டுமே பங்கேற்கும் ஆடுகளமாக இருக்கும் பல இஸ்லாமிய நாடுகளின் சர்வாதிகார அரசுகளை இன்றைய இளைய தலைமுறை புரட்டிப்போட்டு விட்டதைப்போல் தெரிகிறது.

மாறவே வாய்ப்பிலையோ என்ற நிலையில் இருந்த எகிப்திலும் டுனீஷியாவிலும் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள் அரபு நாடுகளில் கூட ஜனநாயகம் துளிர்க்க வாய்ப்பு இருக்குமோ என்று உலகைத்திரும்பிப் பார்க்க  வைத்திருக்கின்றன. எகிப்தோடு நிற்காமல் லிபியா, ஏமென், ஜோர்டான் என்று தொடர்வது சர்வாதிகார அரபு அரசுகளைக் கலங்கடித்திருக்கிறது. நேற்றுப்பெய்த சமுக வலைத்தொழிநுட்பத்தில் இன்று முளைத்த காளான்கள்கள் போல் இந்த அதிரடி நிகழ்வுகள் தோன்றினாலும் எல்லாப் புரட்சிகளையும் போலவே இந்தப்புரட்சிகளுக்கும் நீண்டகால வரலாறு இருக்கத்தான் செய்கிறது; பல சக்திகளின் பின்னணி இருக்கிறது. அரைநூற்றாண்டின் அதிருப்தி இருக்கிறது.தொழில் நுட்பங்களின் பங்கும் இருக்கிறது.  அவற்றை இந்தக்கட்டுரை ஆராய்கிறது.  இறுதியில் இந்தியாவிற்கு இது தரும் சில பாடங்களையும் விவரிக்கிறது.

குடிமைச்சமூகம் 2.0

 

2009-இல் பதவியேற்ற ஒபாமா அரசில் ஹிலரி கிளிண்டன் வெளியுறவுத்துறை செயலாளராகப் பொறுப்பை  ஏற்றார். அந்த வருட இறுதியில் அவர் ”குடிமைச்சமூகம் 2.0” (Civil Society 2.0) என்ற ஒரு முனைப்பை அறிவித்தார். 2009-இல் பொருளாதார பிரச்சனைகளால் சூழப்பட்டிருந்த உலகத்தில் இந்தச்செய்தி அதிக கவனம் பெறவில்லை.

குடிமைச்சமூகம் 2.0 என்பது என்ன? ஜனநாயகம் பலவீனமாய் இருக்கும் நாடுகளில் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்த அமெரிக்க வெளியுறவுத்துறையால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு இது. ”2.0” என்று குறிப்பதற்குக் காரணம், வலைத்தொழில் நுட்பங்களைக்கொண்டும் புதிய சமூக வலைத் (social network) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதை இது முதன்மைப்படுத்தியது.

கணிணி மற்றும் வலைத்தொழில்நுட்பங்களை உள்நாட்டுப்பிரச்சனைகளை எதிர்த்துக் குரலெழுப்ப எவ்வாறு பயன்படுத்தலாம் என்று பயிற்சியளிப்பதை அதன் நோக்கங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தது.

 

”குடிமைச்சமூகம் 2.0”இல் இன்றைய தேதியில் மிக முக்கியமானதாய் நாம் அடையாளம் கண்டுவிடக்கூடிய அம்சம் ஒன்று  அந்த அறிவிப்பின் கடைசியில் இருந்தது; அது உலகின் ஒரு முக்கியமான பகுதியை நேரடியாய்க் குறிப்பிட்டுப்பேசியது; அந்தப் பகுதியில் உள்ள குடிமைச் சமூக அமைப்புகளை நோக்கி  வலைப்பின்னல், வலை ஊடகம் போன்ற விஷயங்களை வலுப்படுத்த 5 மில்லியன் டாலர்களை ஒதுக்குவதாகக் குறிப்பிட்டிருந்தது.  அந்தப்பகுதி வேறெதுவுமில்லை- இன்று நாளுமொரு ஜனநாயக ஆர்ப்பாட்டத்தைக் கண்டுகொண்டிருக்கிற பிரதேசமான வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பிரதேசம்தான் அது.

உடனே நமக்குள் எழும் கேள்வி, அப்படியென்றால் இன்று காணும் புரட்சியெல்லாம் அமெரிக்க சதியா என்பதாகத்தானே இருக்கும். அதற்கு நேரடியான பதில் இல்லை என்பதுதான். மிகச்சிறிய வாழைப்பழக்குடியரசு (banana republic) என்று சொல்லத்தக்க பொம்மை அரசுகளைத் தவிர பிற எந்த நாட்டின் புரட்சிக்கும் இப்படி எளிய  காரணங்களைக் கூறி விட முடியாது. அதுவும் ஒரு பிரதேசம் எங்கும் தீயாய்ப்பரவும் ஒரு எழுச்சிக்கு, வலைத்தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் கூட மக்களே முன்னின்று ஆயுதப்புரட்சி நடத்தும் லிபியா போன்ற நாடுகளைப் பார்க்கையில், இதன் பின் உள்ள வெகுஜன பங்கேற்பு தெளிவாகவே தெரிகிறது.

அப்படியென்றால் அமெரிக்காவின் பங்கு என்ன? குடிமைச்சமூகம் 2.0 என்ற அமைப்பின் முக்கியத்துவம் என்ன? இவற்றைக் காண்பதற்கு முன்னால் டுனீஷியா,  எகிப்து ஆகியவற்றின் வரலாற்றை தெரிந்து கொள்வது உதவும். தடுக்கி விழுந்தால் சர்வாதிகார நாட்டில்தான் விழ வேண்டும் என்ற நிலையில் உள்ள ஒரு பிரதேசத்தில், ஏன் இந்த நாடுகளில் மட்டும் முதலில் புரட்சி வெடிக்க வேண்டும் என்கிற கேள்வி முக்கியமானது.

 

Geography is Destiny என்று சொல்வது உண்டு. இன்றைய நிலையில் டுனீஷியாவையும், எகிப்தையும் இதற்குக் கச்சிதமான உதாரணங்களாகக் காட்டலாம். அந்நாடுகளின் வரலாறு அவற்றின் புவியியலாலேயே செலுத்தப்பட்டிருக்கிறது.

டுனீஷியா- வடக்கே மத்தியதரைக்கடலுக்கும் இருபுறமும் அல்ஜீரியா, லிபியா ஆகிய நாடுகளாலும் சூழப்பட்டு இருக்கும் பிரதேசம். ஆண்டாண்டு காலமாய் ரோமப்பேரசாலும், பின் இஸ்லாமிய அரேபியா, கிறித்துவ ஐரோப்பா என பல்வேறு நாகரீகங்களாலும் செதுக்கப்பட்ட ஒரு பகுதி. ஆனால் நவீன டுனீசியாவின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகித்தது பிரான்ஸ். 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரான்ஸின் பாதுகாப்பு ஆளுகைக்கு உட்பட்டிருந்த டுனீசியா, 75 ஆண்டுகளுக்குப்பின் 1956-இல் விடுதலை அடைந்தது. பிரான்ஸின் கல்விமுறை டுனீசியாவில் நவீனக் கல்வியையும் தேசியவாத அரசியலையும் அறிமுகப்படுத்தி பரவலாக்கி விட்டிருந்தது.

பிரான்ஸின் தாராளவாத சிந்தனைகளும், மதங்களை விலக்கிய மறுமலர்ச்சிகால அணுகுமுறைகளும் வட ஆப்பிரிக்காவில் ஒரு முக்கிய மாற்று சக்தியாக டுனீசியாவை உருவாக்கின. ஆனாலும் டுனீசிய அரசு சர்வாதிகாரியாலேயே தொடர்ந்து அரசாளப்பட்டு வந்தது. இந்த வருடம் அதிபர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பென் அலி கடந்த 24 வருடங்களாக ஆட்சியிலிருந்தவர். ராணுவத்தைத் தன் கைபில் வைத்துக்கொண்டு அரசின் கான்ட்ராக்டுகளின் மூலம் தன் குடும்பத்துக்கு ஏகப்பட்ட சொத்துகளைக் குவித்தவர். டுனீஷியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்கு கணிசமான அளவுக்கு உண்டு- இதற்குப்பின்புலத்தில் டுனீஷியாவை லிபியாவுக்கு எதிரான சக்தியாக வலுப்பெற வைக்க வேண்டிய திட்டம் இருந்தது.

ஆனால் கொட்டிய பெரும்பணமும் பென் அலியால் சுருட்டப்பட்டது.  புரட்சி தொடங்கியவுடன் சர்வாதிகாரிகள் மற்றும் கொடுங்கோலர்கள் யாராக இருந்தாலும் முஸ்லீம் என்றால் தயாராக அடைக்கலம் கொடுத்து விடும் சவுதி அரேபியாவுக்கு குடும்பத்துடன் ஓடிப்போனார் பென் அலி. (இடி அமீனும் சவுதிக்குத்தான் ஓடிப்போனான்.) போகிற போக்கில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை டன் தங்கக்கட்டியை பென் அலியின் மனைவி கடத்திக்கொண்டு போய்விட்டதாக செய்திகள் வெளியாயின. இரண்டாம் உலகப்போருக்குப்பின் வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் அரசியலானது அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய வல்லரசுகளின் நிழல் யுத்தக் களங்களாக உருவெடுத்தன. எகிப்து, சிரியா, ஏமென் போன்ற நாடுகள் சோவியத் யூனியனின் நட்பு நாடுகளாய் இருந்தன. லிபியாவுக்கும் சோவியத் பல ராணுவ உதவிகளைச்செய்தது. நாஸர் கால எகிப்து அரபு உலகில் சோவியத் யூனியனின் உதாரண சார்பு நாடாக (client state) இருந்தது.   அராபிய மேற்கு என்று சொல்லப்படும் வட ஆப்பிரிக்க மாக்ரெப் பிரதேசம் (அல்ஜிரியா, மொராக்கோ, டுனிஷியா, லிபியா, மௌரிடேனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பகுதி இது) பிற அரபு நாடுகளை விட ஐரோப்பிய நாடுகளுடன் மிக அதிக அளவு சமூக மற்றும் வியாபார உறவுகளைக் கொண்டிருந்தன. இதனால் இந்நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஓரளவுக்கு தணிந்தே இருந்தது. இதற்கு பனிப்போர் சார்ந்த காரணங்களும் உள்ளன.
 
அன்றைய பனிப்போரின் அராபிய அரசியல் சதுரங்கத்தில் எகிப்து ஒரு முக்கிய அதிகார சதுரம். இந்த சதுரத்தில் 1950-களில் சோவியத் ஆதிக்கம் கணிசமாகவே இருந்தது. இதற்கு எதிராக அமெரிக்கா சவுதி அரேபியாவை வளர்த்து வந்தது. எல்லா அரபு நாடுகளையும் இணைக்கும் உணர்ச்சிகர அரசியல் புள்ளியாக பாலஸ்தீனப் பிரச்சினை இருந்தது. பொது எதிரியாக இஸ்ரேல் அடையாளம் காணப்பட்டது. பாலஸ்தீனப்பிரச்சனை  அராபியர் Vs யூதர் என்கிற எளிய சூத்திரத்திற்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அராபிய மக்களின் காவலன் என்ற பதவிக்கு ஒரு நிழல் போர் உருவாக ஆரம்பித்தது.

 

எகிப்தின் நாசர் (அதிபர்- 1956-70) பரந்த அராபிய இனத்தின் பிரதிநிதி என்கிற ஒரு நிலையில் இருந்து பிற அராபிய நாடுகளை நோக்கிப் பேசத்தொடங்கினார். பதவிக்கு வந்தவுடன் 1956-இல் சூயஸ் கால்வாயை தேசியமயமாக்கியதன் மூலம் மேற்கின் வல்லரசுகளை நேரடியாக எதிர்க்கத் துணிந்த அவரது செயல் அராபிய நாடுகளில் பெரும் புகழையும் செல்வாக்கையும் அவருக்கு கொண்டு சேர்த்தது. அராபிய மக்களின் பிரதிநிதியாக நாஸர் கவனம் பெறத் தொடங்கினார்.

அன்றைய சவுதி மன்னர் ஃபய்ஸல்  (மன்னர்: 1964-75) இதற்கு எதிராக இஸ்லாமிய உம்மா என்கிற மதவாத ஆயுதத்தைக் கையிலெடுத்தார். அமெரிக்காவின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு இதற்கு இருந்தது. ”கடவுளற்ற கம்யூனிஸ்டுகளுக்கு” எதிராக இஸ்லாமிஸ்டுகளை வளர்த்தெடுக்க அமெரிக்கா ஊக்கம் தந்தது. இதன் எதிர் விளைவாக சோவியத்தின் சார்பு நாடுகளில் இஸ்லாமிஸ்டுகள் சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டனர்.

முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim Brotherhood) என்கிற இஸ்லாமிஸ்டு அமைப்புக்கு சவுதி மன்னரின் பலத்த ஆதரவு இருந்தது. ஆனால் எகிப்திலும், லிபியாவிலும் சிரியாவிலும் இந்த அமைப்பு கடுமையாக அடக்கப்பட்டது. 1979-இல் ஈரானில் உருவான மதவாத முல்லாக்களின் ஆட்சி, எகிப்து, லிபியா போன்ற சர்வாதிகார அரசுகளுக்கு ஒரு முக்கியமான பாடத்தைத் தந்தது: இஸ்லாமிய மதவாதத்தை வளர விடுவது தமது ஆட்சிக்கே உலை வைத்து விடும் என்பதுதான் அது. சோவியத் ஆதரவு நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. எகிப்தில் நாஸர் அதிபராகும் முன்னரே இது தொடங்கி விட்டது. 1954-இல் நாஸர் நாஸரைக் கொலை செய்ய நடந்த முயற்சி தோல்வியடைந்த பின் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிஸ்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  ”முஸ்லீம் சகோதரத்துவம்” மீதான அடக்குமுறை முடுக்கி விடப்பட்டது.

 

மதவாத இஸ்லாமிஸ்டுகளைப் பின்னுக்குத் தள்ளி இன்று பரவலாக வெடித்துக்கொண்டிருக்கும் ஜனநாயகப் புரட்சிகளுக்கு ஒரு முக்கியமான ஆரம்பப் பாதை இதன்மூலமாகவே போடப்பட்டது என்பதே நாம் இதில் கவனிக்க வேண்டிய செய்தியாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளை முன்னிறுத்தாததாலேயே ஐரோப்பாவும் அமெரிக்காவும் இந்தப்புரட்சிகளை ஒரு கட்டத்தில் ஆதரிக்க வேண்டிய நிலையும் வந்தது. ஆனாலும் இவைகளில் இஸ்லாமிஸ்டுகளின் அமைப்பு ரீதியான ஆதரவு பின்புலத்தில் இருந்து செயல்பட்டு வந்துதான் இருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு இந்த புரட்சிகளைத் தன் திசைக்குக் கடத்திப்போக முடியும் என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது. மட்டுமல்ல, இந்தப்புரட்சிகளின் நீண்ட கால தாக்கமும் ஆராய்ச்சிக்குரியது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 நாஸர் இறப்புக்குப்பின் ஆட்சிக்கு வந்த அன்வர் சதாத் செய்த முக்கிய மாற்றம் சோவியத் சாய்வு என்ற நிலையில் இருந்து அமெரிக்க சாய்வு என்று தன் நாட்டின் அரசியல் நிலையை திசை திருப்பியதுதான். அரேபியக் காவலன் என்ற ஹோதாவில் நாஸர் எகிப்தை ஈடுபடுத்திய போர்களில் தோல்வியும் அவமானமும் பொருளாதாரச்சரிவுமே மிச்சமானது என்பதை அன்வர் சதாத் உணர்ந்து கொண்டார். யாம்-கிப்பூர் போரின் தயாரிப்பில் சோவியத் யூனியன் ராணுவத் தளவாடங்களை அனுப்புவதில் திமிரான பல நிபந்தனைகளை விதித்தது, ஆயுதங்கள் தரவில்லை என்பதைக் காரணம் காட்டி பல்லாயிரக்கணக்கான சோவியத் யூனியனின் துருப்புகளையும் ஆலோசகர்களையும் உடனடியாக எகிப்தைவிட்டுப் போய்விடுமாறு ஆணையிட்டார். (சோவியத் யூனியன் இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியாவுக்கு ஆயுத சப்ளைகளை அனுப்பி விட்டதால் எகிப்துக்கு இல்லை என்று காரணம் சொன்னது. ஆனால் உண்மையான காரணம் வேறு: எகிப்தில் இருந்து வந்த தனது பல்லாயிரக்கணக்கான துருப்புகளை நேரடியான ஒரு போரில் ஈடுபடுத்த சோவியத் அதிபர் பிரஷ்னேவ் விரும்பவில்லை. தனது  துருப்புகள் அங்கிருந்து போனபின், எகிப்திற்கு ஆயுத சப்ளை செய்ய சோவியத் முன்வந்தது). போருக்குப்பின் சோவியத் உதவி இல்லையென்றான நிலையில், பொருளாதாரத்தைச் சீர் செய்ய வேண்டுமென்றால் அமெரிக்க உதவி தேவைப்பட்டது. அமெரிக்காவில் கேம்ப் டேவிடின் அமெரிக்க அதிபரின் முன்னிலையில் இஸ்ரேல் அதிபர் மெனகெம் பெகினுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டார் (1978).

இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் பெரும் நிதி உதவி எகிப்தின் மீது பொழிய ஆரம்பித்தது. சராசரியாக வருடத்திற்கு 2 பில்லியன் டாலர் அளவுக்கு இந்த உதவிகள் அமைந்தன. இதன் பெரும்பாலான பலன் மறைமுகமாக எகிப்தின் ராணுவ அதிகாரிகளைச் சென்றடைந்தது. ஏனெனில் எகிப்தின் முக்கிய பொருளாதாரத்துறைகள் அனைத்துமே அதன் ராணுவத்தால் நடத்தப்பட்டன. ஆனால் இதன் பலன் மேல்தட்டு ராணுவ அதிகாரிகளைச் சென்றடைந்ததே ஒழிய, அடித்தட்டு சிப்பாய்களுக்கு ஒரு பலனும் இல்லை. மட்டுமன்றி ஹோஸ்னி முபாரக்கும் அவரது அரசியல் வாரிசாய்க் கருதப்பட்ட கமால் முபாரக்கும் ராணுவத்திற்கு மாற்றாக தங்களுக்கு வேண்டிய தனியார்த்தொழிலதிபர்கள் சிலரைப் பெருமளவு ஆதரித்து வளர்த்து வந்தனர். இவர்கள் ராணுவத்திற்கு போட்டியான பொருளாதார சக்திகளாக உருவெடுத்து வந்தனர். ராணுவத்தை பொதுவாகவே வலுவற்ற தலைமையை உடையதாக ஆக்க ஹோஸ்னி முபாரக் முயன்று வந்தார்.

 

இதற்கிடையில் இந்த ஜனநாயகப்புரட்சிகளை மேற்கின் அரசுகள் -குறிப்பாக அமெரிக்கா- சில வருடங்களாகவே எதிர்பார்த்து வந்திருக்கின்றன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

2009-இல் எகிப்தின் அமெரிக்க தூதரகம் அனுப்பிய தந்திச்செய்தி ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அதில் எகிப்தின் அதிபரான ஹோஸ்னி முபாரக், அவரது அரசியல் வாரிசாய்க் கருதப்பட்ட கமால் முபாரக் ஆகியோருக்கும் ராணுவத்தலைமைக்கும் இருக்கும் உரசல்கள் நேரடியாகப் பேசப்பட்டிருப்பது தெரிகிறது.  எகிப்தில் ராணுவம் என்பது எல்லைப்பாதுகாப்பை மட்டும் கட்டுப்படுத்தும் அமைப்பல்ல. ராணுவ அதிகாரிகள் கையில்தான் எகிப்தின் முக்கியமான

பொருளாதாரத் தொழில்துறைகள் உள்ளன. ராணுவத்திற்குச்சொந்தமான கம்பெனிகள் ஓய்வுபெற்ற ஜெனரல்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த கம்பெனிகள் நீர்வளம் (நைல்!), ஆலிவ் எண்ணெய், சிமெண்ட், கட்டுமானத்தொழில், ஹோட்டல்கள் (கவனிக்க: எகிப்திற்கு கணிசமான வருமானம் மற்றும் அயல்நாட்டுச்செலாவணி பெற்றுத்தருவது சுற்றுலாத்துறை) மற்றும் எண்ணெய்வளம் ஆகிய துறைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்துகின்றன. பணம் கொழிக்கக்கூடிய நைல் டெல்டாப்பகுதிகளிலும் சிவப்புக்கடல் (Red Sea) கரையோரங்களிலும் பெருமளவு நிலங்களை ராணுவம் தன் கையில் வைத்திருக்கிறது. இந்த இடங்கள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஆனால் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கு அரசு தனக்கு தரும் நன்றிக்கடனாக ராணுவம் இதைக் கருதியது!

விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்திய தந்திச்செய்தி ராணுவத்திற்கும் கமால் முபாரக்கிற்கும் ஆகாது என்பதை நேரடியாகச் சொல்லியிருந்தது. ஆனாலும்  முபாரக்கே பதவி விலகி கமால் முபாரக்கை அதிபராக்கினால், ராணுவம் அதனை எதிர்க்காது என்று குறிப்பிட்டு, ஆனால் அந்த மாதிரி நிகழ வாய்ப்பேதும் இல்லை என்றும் அடிக்கோடிட்டிருந்தது.  இந்நிலையில் திடீரெனப்புறப்பட்ட ஜனநாயகக் குரல்கள் வீதிக்கு வந்து போராடத்துவங்கியபோது ராணுவம் புரட்சிக்காரர்களுக்கு சாதகமான நிலையை எடுத்ததை மேற்சொன்ன நிலையின் பின்னணியில்தான் பார்க்க வேண்டும்.

 

இந்த அரசியல் மாற்றங்கள் எந்த அளவுக்கு உண்மையாகவே ஜனநாயக சக்திகளை நிலை நாட்டப்போகின்றன என்பதும் கேள்விக்குரியது. ஏனெனில் டுனீஷியா, எகிப்து, (இப்போது லிபியா?) என்ற எந்த நாட்டிலும் உச்ச தலைமையும் அதற்கு நெருக்கமான ஒருசிலரும் மாறியிருக்கின்றனரே ஒழிய கால்நூற்றாண்டுக்கும் மேலாக அவர்கள் உருவாக்கிய அரசியல் மற்றும் பொருளாதார சக்திகள் கொண்ட ஊழல் கட்டமைப்பு அப்படியேதான் இருக்கிறது.

மக்கள் தொகை என்று எடுத்துக்கொண்டால் இன்றைய அராபியச்சமூகம் மிகவும் இளமையான ஒன்று. மூன்றில் ஒரு பங்கு ஜனத்தொகை 15-இலிருந்து 29-க்குள் உள்ள இளைஞர் கூட்டம். எகிப்து போன்ற நாடுகளில் இவர்கள் படித்த ஆனால் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள். அராபிய நாடுகளின் ஃபேஸ்புக் பயனாளர்களில் 22% எகிப்தில் உள்ளனர். பிற அராபிய நாடுகள் போல அரசாங்கம் வலைத்தளங்களை கடுமையாய்க் கட்டுப்படுத்துவதும் எகிப்தில் கிடையாது. இந்த சமூக வலைத்தளங்களில் பெரும்பாலும் பங்கெடுப்பது 15-லிருந்து 29-க்குள் இருக்கும் இளைஞர்களே. எகிப்தில் 75 சதவீத ஃபேஸ்புக் பயனாளிகள் 15-29 வயதுக்காரர்கள். 2010-இல் மட்டும் அரேபிய நாடுகளில் ஃபேஸ்புக் பயனாளிகள் ஆண்டுக்கு 78% என்ற வீதத்தில் அதிகரித்திருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

பொருளாதார வளர்ச்சியில் பங்கு கிடைக்காமல், படித்த கல்விக்கு உள்ளூரில் வேலை கிடைக்காமல் பெருகிப் புழுங்கிக்கொண்டிருக்கும் ஓர் அதிருப்தித்திரள் இது. இதற்கு வடிகால் கிடைக்காவிட்டால் வன்முறைக்கு அவர்கள் இடம்பெயரக்கூடும். இவர்களது கோபம் இஸ்லாமிஸ்டுகளால் எளிதாக கைவசப்படுத்தப்பட்டு நாடு முழுவதையுமே பயங்கரவாதத்திற்குள் தள்ளிவிடும் அபாயம் வெகு தெளிவாக உள்ளது. எனவேதான் ஜனநாயக முறையில் இஸ்லாமிஸ்டுகளை முன்னிறுத்தாமல் ஏற்பட்ட இந்த அரசியல் மாறுதல்களைப்பார்த்து- உள்ளூர முழுமையான ஆதரவு இல்லாவிடினும்- நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றன அமெரிக்காவும் ஐரோப்பாவும்.

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பாவில் பிரான்ஸ் தொடங்கி பெல்ஜியம், ஆஸ்ட்ரியா, இத்தாலி ஜெர்மனி என்று பல இடங்களில் ஜனநாயக சக்திகள் திரண்டெழுந்தன; கிளர்ச்சிகள் தொடங்கின, புரட்சியாக உருவெடுத்தன, சில ஆட்சி மாற்றங்களையும் நிகழ்த்தின. ஆனால் அநேகமாக அத்தனை மாற்றங்களுமே சில வருடங்களிலேயே வலுவிழந்தன. ஜனநாயகம் கோரிய புரட்சிகள் தோல்வியடைந்தன. அரசு பழைய மன்னராட்சிக்குத் திரும்பியது. இது குறித்து ”திருப்புமுனையை அடைந்த வரலாறு திரும்பவேயில்லை” என்று சொல்வார் ஏ.ஜே.பி டெய்லர் என்கிற வரலாற்றாசிரியர். வரலாறு திரும்பவில்லை என்றாலும் கூட, அதற்குப்பின் மன்னர் ஆட்சி முன்போல் வலுவுடன் செயல்பட முடியவேயில்லை. மாற்று அதிகாரம், மக்கள் புரட்சி என்று ருசி கண்ட ஜனநாயக சக்திகள் மெதுவாக படிப்படியாக மீண்டும் தம்மைத்திரட்டிக்கொண்டு பலப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தன. முந்தைய ஐரோப்பாவின் அதிகாரப்படி நிலைக்கு அது இனி செல்லவே முடியாது என்பது அரச குடும்பங்களுக்கும் புரிந்து விட்டிருந்தது. 20ஆம் நூற்றாண்டைத் தொடும்போது ”திருப்பு முனையில் திரும்பாத” அத்தனை ஐரோப்பிய நாடுகளிலும் ஜனநாயக ஆட்சி மலர்ந்திருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோல்வியடைந்த மக்கள் புரட்சிகள் வழியாகத்தான் அரை நூற்றாண்டு கழித்து ஜனநாயகத்திற்கு வந்தடைய ஐரோப்பாவிற்கு வழி பிறந்தது.

 

இதுவே அராபிய நாடுகளிலும் நடக்கும் என்றே தோன்றுகிறது. பல ஜனநாயகப்புரட்சிகள் தோல்வியடையலாம் (உதாரணம்: ஈரான்), அல்லது வென்ற இடங்களில் கூட பழைய அதிகாரங்களே அரசைக் கையிலெடுத்துக்கொள்ளலாம் ஆனால் சர்வாதிகாரங்களுக்கு எதிரான நீண்ட காலப்பயணம் ஒன்றை அரேபிய மக்கள் தொடங்கி விட்டதாகவே இதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். சர்வாதிகாரிகளை ஆதரிக்கும் அமெரிக்க அரசுக்குக்கூட இந்த உண்மையின் தவிர்க்க முடியாத தன்மை புலப்பட்டு விட்டிருக்கிறது. ஜனநாயகக்குரல்களை அடக்கி சர்வாதிகார அரசுகளுக்கு முட்டுக்கொடுப்பது மிதவாத ஜனநாயக ஆதரவாளர்களை அடிப்படைவாத இஸ்லாமிஸ்டுகளை நோக்கித்தள்ளுகிறது என்கிற பாடத்தை அமெரிக்கா பெரும் விலை கொடுத்துப் பயின்றிருக்கிறது. அரேபியாவின் பெரும் திரளான இளைஞர் கூட்டத்தை இஸ்லாமிஸ்டுகளிடமிருந்து விலக்கவும் ஜனநாயகத்தை நோக்கி செலுத்தவும் வலைத்தொழில்நுட்பம் ஏதாவதொரு வகையில்  உதவும் என்றால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் அந்த நிலைமையை வரவேற்கும் நிலையிலேயே இன்று உள்ளன.

அதிபர் ஒபாமா வலைத்தொழில்நுட்பத்தின் வீச்சினை நன்றாகப் புரிந்து கொண்டவர். தனது தேர்தல் பிரச்சாரத்துக்கான செலவை வலைத்தொடர்புகள் மூலம் சிறு சிறு துளிகளாக சேர்க்கத் தொடங்கி மெக்கெய்னை விட, பெருவெள்ளமாய் பிரசார நிதியைத்திரட்டியவர் அவர். வலைத்தொழில்நுட்பத்தின் அரசியல் சாத்தியங்களை அவர் கண்கூடாகப் பார்த்தும் இருந்தார். பதவியேற்று சில மாதங்களிலேயே எகிப்தில் ஜனநாயக மாற்றங்கள் கொண்டுவருவது பற்றி கெய்ரோவில் உரையாற்றினார். அதன் பின்னரே ஹிலரி கிளிண்டன் தனது குடிமைச்சமூகம் 2.0 பற்றிப் பேசினார்.  எல்லா நாடுகளிலும் முக்கிய அரசியல் சக்திகளை வளைக்க வல்லரசுகள் எப்போதுமே திட்டமிட்ட வண்ணம் இருக்கின்றன. ட்விட்டரும், ஃபேஸ்புக்கும் தம்மளவில் முக்கிய அரசியல் சக்திகளாக உருவெடுக்க முடியும் என்பதை அமெரிக்கா மிக முன்னதாகவே இனம் கண்டு கொண்டிருக்கிறது.

இந்த சமூக வலைத்தளங்களின் மூலம் செயல்படும் கண்ணுக்குப்புலப்படாத சக்திகளும்கூட முந்தைய காலத்தைய அரசியல் சக்திகள் போலவே அதிகார மாற்றத்தை ஏற்படுத்த உதவக்கூடியவை என்பதையும் அது புரிந்து வைத்திருக்கிறது. ஃபேஸ்புக், யு-ட்யூப், ட்விட்டர், ஆகியவை சாத்தியமாக்கும் பிரம்மாண்ட மாய வலைத்தொடர்புகளின் மூலம் ஜனநாயகம், அதிகாரப்பரவல், உதவாத பழைய அரசியல் சட்டகங்களிலிருந்து விடுபடத்துடிக்கும் இளைய சமூகம் ஆகியவற்றைக்கொண்டு பல சர்வாதிகார அரசுகளை ஆட்டம் காண வைக்க முடியும். ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் சீனாவுக்குள் நுழையவே இல்லை. கூகுளுக்கு நேர்ந்த கதி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகி விட்டிருக்கின்றது. எகிப்தின் புரட்சிக்குப்பின் சீனாவின் வலைத்தளங்கள் இன்னமும் அதிகமாக கண்காணிக்கப்படுகின்றன; சென்ஸாருக்கு உட்படுத்தப்படுகின்றன. ஆனால் இது நீண்ட காலம் நிலைக்கக்கூடியது இல்லை. அமெரிக்க அதிபர் ரேகன் சொன்னது போல் “சிறிய சிலிக்கன் சில்லு என்ற டேவிட் சர்வாதிகார கோலியத்துகளை இறுதியில் வீழ்த்தவே செய்யும்”.

இந்தியாவுக்கான பாடம்

 

வலைத் தொழில்நுட்பங்கள் சமூகங்களை வடிவமைக்கும் ஒரு கட்டத்தில் முக்கிய பிராந்திய சக்தியாக உருவெடுத்துவரும் இந்திய அரசு யந்திரம் இந்த விஷயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது? எனக்கென்ன வந்தது என்று விஸ்ராந்தியாக தானுண்டு தன் ஊழல்கள் உண்டு என்று கூவம் நதி போல்  அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசின் கணிணிகளுக்குள் சீனா புகுந்து முக்கிய தஸ்தாவேஜுகளைத் திருடியது மட்டுமன்றி லோக்கல் பிரதிகளை அழித்து விட்டும் சென்றிருக்கிறது. இந்தியா என்ன செய்தது? இந்தியாவின் மின்சக்தி நிலையங்களைக் குறிவைத்து சீனா சைபர் வெளித் தாக்குதல் நிகழ்த்தினால்  தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இந்திய அரசிடத்தில் திட்டம் ஏதும் உள்ளதா? இந்திய சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிஸ்டுகளும், மாவோயிஸ்டுகள் அடுத்த தாக்குதல் பற்றிப் பேசிக்கொண்டால் அதனை சைபர் வெளியில் பின் தொடரும் தொழில் நுட்ப வல்லமை நமக்கு உள்ளது தெரியும், ஆனால் அரசியல் வல்லமை இருக்கிறதா?

இந்திய ஊடகங்களில் நடுநிலை ராஜாக்களாக முகமூடி போட்டு வந்த பர்க்கா தத், வீர் சாங்வி போன்றவர்களின் அரசியல் பித்தலாட்டம் அம்பலத்துக்கு வந்து விட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்தும் விதத்தில் தமிழ் அரசியல்

பத்திரிகைகள் – குறிப்பாக ஈழப்போரின்போது- பல கட்டுரைகளை வெளியிட்டன. பிரபாகரன் இறந்ததற்குப்பின் அவர் உயிரோடு இருப்பதுபோன்ற பொய் புகைப்படத்தை ஒரு பத்திரிக்கை தன் அட்டைப்படத்தில் வெளியிட்டது.  இதுபோன்ற பத்திரிகைகளும் பத்திரிகையாளர்களும்கூட கணிணியின் ஊடக வெளியில் செயல்படுபவர்கள்தாம். வெளிப்படையாகவே இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சக்திகளுடன் கைகோர்க்கும் ஊடகங்கள் சமூக வலைத் தொழில்நுட்பங்களை முற்றிலும் தவறான முறையில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம். ஊடகப் பித்தலாட்டங்கள் இந்தியாவிற்குப் புதியதல்ல. அதில் சமூக வலைத்தொழில்நுட்பமும் சேரும்போது பொய்யான தகவலை வைத்து குறுகிய காலத்தில் அரசியல் போக்கை திசைமாற்றும் சாத்தியம் அதிகம். ட்விட்டர் அக்கவுண்டே இல்லாத ஐடிக்களிடம் இருந்து ட்விட்டர் செய்திகள் வந்ததுபோல் செய்திகளை வெளியிட்ட ராஜ்தீப் சர் தேஸாயின் சி என் என் – ஐ பி என் பின்பு மாட்டிக்கொண்டவுடன் மன்னிப்புக்கேட்டது.

apology_video

 

இந்தியா ஒரு பிராந்திய பெரும் சக்தி. சுற்றிலும் உள்ள நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கும். எல்லை தாண்டிய  வலைத்தொழில்நுட்பம் இந்தியாவின் ஜனநாயக சக்திகளுக்கு உதவுவதுபோல் இந்திய எதிர்ப்பு சக்திகளுக்கும் உதவும் வாய்ப்பு இருக்கிறது. சைபர் வெளியைக் கண்காணிக்கவும் அமெரிக்கா போல் இல்லாவிட்டாலும் இந்திய அளவிலாவது வலைத்தள குடிமை சமூகத்தை பரவலாக்கவும் இந்திய நலன்களுக்காக அவற்றை வடிவமைக்கவும் வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது. ஏனென்றால் சுதந்திரத்துடன் கூடவே பொறுப்பும் வருகிறது. அது வலைத்தொழில்நுட்ப பயனாளர்களுக்கும் பொருந்தும்.

அனுபவமும் பக்குவமும் முன்யோசனையும் மிகுந்த எந்த ஒரு அரசாங்கமும் புதிய தொழில்நுட்பங்களை தனது நாட்டின் நலனைத்தக்க வைக்கவும் விஸ்தரிக்கவும் உபயோகப்படுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்கும். சமூக வலைப்பின்னல் என்பது மக்களின் உணர்வைக் கண்டுசொல்லும் உளமானியாகப்பலமுறை செயல்படுகிறது. அதனை முன்கூட்டியே அறிய முடிந்தால், சில அரசியல் காய்களை அதற்குத்தகுந்தவாறு நகர்த்த அது மிகவும் உதவும்.  தமக்கு எதிரான காய்நகர்த்தல்களில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் முடியும். அராபிய நாடுகள் பல-குறிப்பாக துபாய்-ஏற்கனவே இது போன்ற முனைப்புகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

”குடிமைச்சமூகம் 2.0”-இன் ஓராண்டு நிறைவு இந்த வருடம் பிப்ரவரியில் நடைபெற்றது. பல நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்குப் பரிச்சயமான பல ஜனநாயக ஆதரவுப் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். குடிமைச்சமூகம் என்பது என். ஜி. ஓ. க்களின் அமைப்பு என்று புரிந்து கொண்டால் அதை வைத்து சைபர் வெளியில் நடக்கப்போகும் அதிகார யுத்தத்திற்கு அமெரிக்கா தன்னைத் தயார் செய்து வருகிறது என்பது புரியும். ஜனநாயகம் என்ற தளத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணந்து செயல்பட வேண்டிய ஒரு இடம் இருக்கிறதுதான், ஆனால் அமெரிக்கா இந்த இடத்தை பெரும்பாலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு தந்து விட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

 

இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை, ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவை மேலும் பரவலாகவும் வலுப்பெறவும் இந்த தொழில்நுட்பங்கள் உதவும்; உதவ வேண்டும். வேறு விதமாகச் சொல்வதென்றால் இந்தியாவின் ஒருமைப்பாடு., இறையாண்மை, ஜனநாயகம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றை பலவீனமாக்கும் சக்திகளுக்கு உதவும் வகையில் இவை உருவெடுக்கக் கூடாது, இந்திய அரசு இந்த விஷயத்தில் சாமர்த்தியமாகச் செயல்பட வேண்டும்.

தொழில்நுட்பம் என்பது காட்டாறு, அணைகட்ட வேண்டியது அரசின் பொறுப்பு, அந்த அணை நாட்டிற்கு ஒட்டுமொத்த நன்மை தருவதாக இருக்க வேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard