New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காந்தியும் தலித் அரசியலும்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
காந்தியும் தலித் அரசியலும்
Permalink  
 


காந்தியும் தலித் அரசியலும்

திருவாளர் செயமோகன் அவர்களே,

நீங்கள் காந்தியாரைப்பற்றி எழுதிய சப்பைக்கட்டுகளையும் மோடிமஸ்தான் வேலைகளையும் கவனித்து வருகிறேன். காந்தியார் இந்திய தலித்துக்களுக்கு இழைத்த அவமானத்தை வரலாறு குறித்து வைத்திருக்கிறது. இந்த பேராசான்,சட்டமாமேதை அம்பேத்கர் அவர்கள் விரிவாக பதிவுசெய்திருக்கிறார்கள். அதையெல்லாம் எந்த சக்தியாலும் மறைத்துவிட முடியாது.

காந்தியார் தலித்துக்களுக்குச் செய்த கொடுமைகள் என்னென்ன?  அவர் தலித் ஒற்றுமை உருவாகிவந்ததை சீரழித்து தலித்துக்கள் ஒருகுடைக்கீழ் ஒரே சக்தியாகத் திரள்வதை தடுத்தார். அவரது முயற்சி இல்லாவிட்டால் தலித்துக்கள் இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஆகியிருப்பார்கள். தலித் பிரச்சினைகளை அவர் திசை திருப்பினார்.

காந்தியார் தலித்துக்களுக்கு ஹரிஜனங்கள் என்ற கேவலமான பெயரைச் சூட்டினார். ஹரிஜனங்கள் என்றால் அப்பன் பெயர் தெரியாத கூட்டம் என்று பொருள். சாதி இந்துக்களின் கருணையில் தலித்துக்கள் வாழவேண்டும் என்றார் காந்தியார். தலித்துக்களுக்கு உரிமைகளை சாதி இந்துக்கள் கொடுத்தால்தான் உண்டு என்று சொன்னார்.

அம்பேத்கார் அவர்களின் முயற்சியினால் தலித்துக்களுக்கு தனித்தொகுதி முறைகொண்டுவரப்பட்டது. அது தலித்துக்கள் ஒரு பெரிய அரசியல் சக்தியாக மாறி அரசாங்கத்தில் செல்வாக்கு பெறுவதற்கு உதவியிருக்கும். அந்த முறை வந்திருந்தால் இன்று தலித்துக்கள் இருந்திருக்கக் கூடிய முறையே வேறு. அதை தன் உயிரைக்கொடுத்து போராடி காந்தியார் தடுத்தார். காந்தியார்  உண்ணாவிரதம் இருந்து  ஏழை தலித்துக்கள் மேல் வன்முறை உருவாகும் என்று மிரட்டியதனால் போராட்டத்தை கைவிட்டார் அண்ணல் அம்பேத்கார்.

காந்தியார் தலித்துக்களுக்குச் செய்தது எல்லாம் அவர்களை அடிமைகளாக வைத்திருக்க வேண்டிய சதிகளைத்தான். பார்ப்பன பனியா கூட்டுச்சதியின் ஒரு சிரித்த முகம்தான் காந்தியார். சாதிவெறிதான் அவருக்குத்தெரிந்த ஒரே கொள்கை.

இந்திய தலித்துக்கள் அண்ணல் அம்பேத்கார் வழி நின்று காந்தியாருக்கு எதிராகப் போராடினார்கள். நாளையும் போராடுவார்கள்

அன்பழகன் கந்தசாமி

 

*

 

அன்புள்ள ஜெ,

உங்கள் இணையதளத்தை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல்வேறு கருத்துமுரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் கருத்துக்களை முன்வைக்கும் முறை எனக்குப் பிடித்திருக்கிறது. நேர்த்தியான வாதங்கள். நல்ல நடை. உங்கள் கதைகள் எனக்கு பிடிக்கும். உங்களிடம் நான் நேரடியாக விவாதிக்கவே விரும்புகிறேன்.

நான் துபாயில் பணியாற்றுகிறேன். தலித் சாதியைச் சேர்ந்தவன். மிகவும் கடுமையாக போராடி படித்து பொறியியலாளன் ஆகி இப்போது ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன். எங்களுக்கெல்லாம் அம்பேத்கர்தான் தலைவரும் வழிகாட்டியும் ஆக இருக்கிறார். என்னுடைய முழுப்பேரே ராஜேந்திரன் அம்பேத்கர்தான்

அம்பேத்கர் காந்தியை சதிகாரன் என்றும் சூழ்ச்சிக்காரன் என்றும்தான் சொல்லியிருக்கிறார். அம்பேத்கர் சொல்லிய வரலாற்றின்படி காந்தி தலித்துக்களுக்கு கிடைத்திருக்கவேண்டிய ஒரு பெரிய உரிமையை உண்ணாவிரதம் மூலம் போராடி தடுத்தார். பூனா ஒப்பந்தம் தலித்துக்களுக்கு காந்தி இழைத்த துரோகம். இதற்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?

ராஜேந்திரன்
[தமிழாக்கம்]

 

*

அன்புள்ள அன்பழகன், ராஜேந்திரன்,

 

உங்கள் குரல் வழக்கமாக எழும் ஒன்றுதான். இதே கேள்வியுடன் இருபத்தேழு கடிதங்கள் எனக்கு வந்துள்ளன.  எல்லாவற்றுக்குமாக ஒரே பதிலை அனுப்புகிறேன்.

 

கடந்த சில ஆண்டுகளாக இக்குரல் அரசியல் நோக்குடன் வளர்த்தெடுக்கப்படுகிறது. பெரும் பிரச்சார வல்லமை கொண்ட இந்த அரசியல் கருத்துருவத்துடன் தனிக்குரலாக நின்று நான் வாதிட முடியாது. அத்துடன் பொதுவாக அரசியல் நம்பிக்கை என்பது ஒருவகை மத நம்பிக்கைதான். நம்பிக்கைகள் முதலில் முடிவெடுத்தபின் அதற்கான ஆதாரங்களைச் சேர்க்கின்றன. ஆகவே அவற்றை மாற்று ஆதாரங்களைக் கொண்டு தகர்க்க முடியாது. நம்பிக்கைகளுடன் வாதிடுவது வீண்

 

ஆனால் இந்தக்குரலுக்கு பதிலைச் சொல்லத்தெரியாத பொதுவான வாசகர்கள் பலர் உண்டு. ஏனென்றால் காந்திக்காக பேச மிகக் குறைவானவர்களே இன்று உள்ளனர். அவரை அதிகாரத்தின் முத்திரையாக ஆக்கியபின் காங்கிரஸ் கல்லாவில் அமர்ந்திருக்கிறது. உண்மையான காந்தியவாதிகள் சூழலியல் போன்ற சில துறைகளில் தங்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செலுத்துகிறார்கள். வாதிடுவது காந்தியவாதிகளின் வழியும் அல்ல. ஆகவே இந்தச் சிறிய விளக்கம். இதில் பெரும்பகுதி மேலே படிப்பதற்கான குறிப்புகளே

 

இன்று ஒரு பொதுவாசகன் அம்பேத்கார்- காந்தி முரண்பாட்டைப்பற்றி வாசிக்கப்போனால் அவன் வாழ்நாளெல்லாம் வாசிக்கக் கூடிய நூல்கள் குவிந்து கிடப்பதைப் பார்க்கலாம். அவற்றின் பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் பல்லாயிரம் ஆவணங்கள், மேற்கோள்கள் உள்ளன. பலநூறு கோட்பாடுகள். ஒன்றோடொன்று முரண்பட்டு மயிர்பிளக்கும் வாதகதிகள்.

 

ஒருவர் ஏற்கனவே தன் சாதி சார்ந்து, மதம் சார்ந்து ஒரு முடிவை எடுத்துவிட்டு இவற்றுக்குள் புகுந்தார் என்றால் பிரச்சினையில்லை. அவருக்கு உகந்த ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு அதன் தகவல்களை மனப்பாடம்செய்துகொண்டு மேலே பேசிக்கொண்டே செல்லலாம். அந்த தர்க்கங்களை தன் குரலாக சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் உண்மையைத்தேடும் ஒருவனுக்கு இந்நூல்களைக் கடந்துவருவதே சாத்தியமில்லை.

 

ஒரே வழிதான் உள்ளது. அவனுடைய சொந்த மனசாட்சியை நம்புவது. இனம், மதம், சாதிக்கு அப்பால் தன்னை ஒரு மனிதனாக நிறுத்திக்கொண்டு வாசிப்பது.ஆழ்மனம் உண்மையையே நாடும் இயல்புள்ளது, ஆகவே அது எளிதில் உண்மையை அடையாளம் காணும். அப்படி உண்மைபேசும் ஒருசில ஆய்வாளர்களின் வழியாக அச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்வது, அதில் இருந்து தன் சொந்த சிந்தனையால் மேலே சென்று சிந்திப்பது, அதுதான் சாத்தியமான வழி.

 

ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன், உணர்ச்சிவசப்பட்டு ஒரு முடிவை நாம் எடுத்துக்கொண்டுவிட்டோம் என்றால் வரலாற்றை நமக்கான கோணத்தில் சித்தரித்துக்கொள்வது மிக மிக எளிது. தங்களுக்குப் பிடிக்காத வரலாற்று மனிதர்களின் நோக்கங்களை ஐயபப்டுவது, எங்கும் தங்களுக்கு எதிரான சதியை மட்டுமே காண்பது என்பது வரலாற்று ஆய்வின் மிகப்பெரிய படுகுழி. அதில் நாம் விழுந்தோம் என்றால் அந்தக் கோணத்திலேயே நமக்கு அனைத்துமே தெரியும். ஒரு செயலுக்கு ,சொல்லுக்கு உள்நோக்கம் கற்பிப்பது என்பது மிக மிக எளிய ஒரு செயல்.

 

ஆனால் நம் மறுதரப்பும் செய்யும் என்பதை நாம் உணரவேண்டும். அந்நிலையில் எந்த விவாதமும் சாத்தியமில்லாமல் இருபக்கமும் வாசல்களைச் சாத்திக்கொள்கிறோம். விவாதம் வழியாக தெளிந்து வரும் பொதுவரலாறு வெளிவராமலே போகிறது. தரப்புகள் மட்டுமே சூழலில் காணக்கிடைக்கின்றன. அது வரலாறே அல்ல. வழக்கம்போல அன்னியன் வந்து நம் வரலாறை எழுதுவது வரை நாம் காத்திருக்க நேர்கிறது.

 

என்னைப்பொறுத்தவரை நான் செய்தது இதுவே. நான் இந்த நூல்களின் கடலில் சிலவற்றையே வாசித்திருக்கிறேன். எனக்கு அரசியல் ஆவணங்களை நாள்கணக்காக மாதக்கணக்காக கூர்ந்து வாசிக்கும் வழக்கமோ அவற்றைக்கொண்டு நுண்ணிய வாதங்களை உருவாக்கும் ஆர்வமோ இருப்பதில்லை. நான் என் மனசாட்சியை, நீதியுணர்வை, உண்மைநாடும் தன்மையை நம்பியே என் கருத்துக்களை உருவாக்குகிறேன். அதையே பிறரும் செய்ய வலியுறுத்துவேன். ஆகவே அரசியல்வாதிகளிடம் எனக்கு விவாதம் இல்லை, இலக்கிய வாசகர்களிடமே நான் பேசுகிறேன்

 

 

இருபக்கமும் தாழிட்டுக்கொள்ளுதல்

 

 

இந்தத்தளத்தில் பரவலாக முன்வைக்கப்படும் வாதங்களுக்கு உதாரணமாக இரு நூல்களைச் சொல்வேன். இரு நண்பர்கள் உணர்ச்சிகரமான உத்வேகத்துடன் எனக்கு வாங்கி அனுப்பிய நூல்கள் அவை. ஒன்று காஞ்சா இளையா [Kancha Illiah] எழுதிய ‘நான் ஏன் இந்து இல்லை’  [Why I am Not a Hindu ] இன்னொன்று அருண் ஷ¥ரி [Arun Shourie]  எழுதிய ‘பொய்தெய்வங்களை வழிபடுதல்’  [Worshipping False Gods] இருபக்கத்து மட்டையடிகள் அவை.

 

முதல் நூலில் காஞ்சா இளையா காந்தியை தலித்துக்களை சிரித்துக்கொண்டே கழுத்தறுத்த உயர்சாதிச் சதிகாரனாக சித்தரிக்கிறார். அம்பேத்காரை அந்த வில்லனுக்கு எதிராகப் போராடிய தார்மீகப் போராட்டக்காரராக. இந்திய தேசிய காங்கிரஸை ஓர் உயர்சாதிக் கட்சி என்று முத்திரைகுத்தி ஒட்டு மொத்த இந்திய சுதந்திரப்போராட்டத்தையே ஒரு உயர்சாதி எழுச்சியாக சித்தரிக்கிறார். இந்திய தேசிய காங்கிரஸ் ஓர் சாதிவெறிகொண்ட அநீதியான அமைப்பு என்று சொல்லும் இளையா பிரிட்டிஷ் அரசை ஏழை தலித் மக்களை விடுவிக்கவந்த தார்மீக சக்தியாக அடையாளம் காண்கிறார்.

 

காஞ்சா இளையா அவரது நூலில் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் உயர்சாதியினரே என்கிறார். உயர்சாதியினர் ஒருங்கு திரண்டு காங்கிரஸின் எல்லா நடவடிக்கைக¨ளையும் தீர்மானித்ததாகவும் அவர்களின் கைப்பாவையாகவும், வெளியே காட்டப்பட்ட முகமாகவும்தான் காந்தி இருந்தார் என்றும் சொல்கிறார். நவீன சாதியாதிக்க அமைப்பு ஒன்றை உருவாக்குவதே காந்தியின் ஒரே நோக்கம் என்று வாதிடுகிறார். காந்தி ஒரு தந்திரமான பனியா அன்றி வேறெவருமே அல்ல  என்கிறார் காஞ்சா இளையா.

 

இரண்டாம் நூலில் அருண் ஷ¥ரி இந்திய தேசிய எழுச்சியை ஒரு மாபெரும் அரசியல் கலாச்சாரப்புரட்சி என்று வரையறை செய்கிறார். அந்த சக்திக்கு எதிராக ஆங்கில அரசு உருவாக்கிய பிரிவினைச் சதிகளே முஸ்லீம்லீக்கும், அம்பேத்காரின் தலித் இயக்கமும் என்கிறார். அம்பேத்கார் இந்திய எழுச்சிக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவானவராகவும், ரகசியமாக பிரிட்டிஷ் அரசின் கையாளாகவும் பணியாற்றினார் என்கிறார்.அம்பேத்காரை இந்தியாவின் தலித் அமைப்புகளே நம்பியதில்லை பல கட்டுரைகளைக் காட்டி என்று வாதிடுகிறார்.

 

அம்பேத்காரின் ஆளுமையை மிக எதிர்மறையாகச் சித்தரிக்கும் இந்நூலில் அருண் ஷ¥ரி அம்பேத்காருக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த ஏராளமான கடிதப்போக்குவரத்தை ஆதாரமாக பதிப்பித்திருக்கிறார். அம்பேத்கார் 1946 வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆதரித்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக காரணமாக அமைந்த போர்களில் பிரிட்டிஷாருக்கு நேரடியாக உதவிசெய்தவர்கள் தலித்துக்களே என்று சொல்லி, இனிமேலும் இந்தியச் சுதந்திரப்போராட்டத்தை ஒடுக்க தலித்துக்கள் பிரிட்டிஷாருடன் ஒத்துழைப்பார்கள் என்று வாக்குறுதி அளித்து, ஆகவே பிரிட்டிஷார் தலித்துக்களுக்கு ஆதரவாகவே இருக்கவேண்டும் என்று கடிதம் எழுதினார் அம்பேத்கார் என்று அக்கடிதங்களை மேற்கோள் காட்டுகிறார் ஷ¥ரி

 

மேலும் 1946ல் கடைசியாக இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கும் மனநிலையை பிரிட்டிஷார் அடைந்தபோது அவர்கள் தன்னைக் கைவிட்டுவிட்டதாக உணரும் அம்பேத்கார் பிரிட்டிஷார் அதிகாரக் கைமாற்றத்தை செய்யக்கூடாது என்று வாதிட்டார் என்று ஆதாரம் காட்டுகிறார் ஷ¥ரி.  இந்தியச்சுதந்திரப்போராட்டத்தில் பிரிட்டிஷாரின் சட்ட ஆலோசகராகவும், அவர்களின் ஆள்தூக்கிச் சட்டங்களையும் அடக்குமுறையையும் ஆதரிப்பவராகவும்  அம்பேத்கார் இருந்தார் என்கிறார். காந்தியின் போராட்டங்கள் உச்சகட்டத்தை அடைந்தபோது தன் கடுமையான எதிர்பிரச்சாரம் மூலம் அந்த இயக்கத்தை சிறுமைப்படுத்த முயன்றார் என்கிறார்.

 

ஆனால் இந்திய சுதந்திரத்துக்குப் பின் சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்ட வரைவிலும் அமைச்சகத்திலும் சேர எந்த தயக்கமும் இல்லாமல், எந்த விளக்கமும் இல்லாமல், அவர் முடிவெடுக்கிறார். 1946ல் தேர்தலில் பரிதாபகரமாக தோல்வியடைந்த அவரை காங்கிரஸ் அழைத்தபோது அவர் மறுக்கவில்லை. கடைசிவரை அவர் காங்கிரஸ¤டன் தான் இருந்தார். ஆகவே அம்பேத்கார் பதவிப்பசி கொண்ட ஒரு அரசியல்வாதி அல்லாமல் வேறு எவருமே இல்லை என்று வாதிடுகிறார்.

 

அம்பேத்கார் ஒருபோதும் அன்றைய இந்திய தலித்துக்களால் அரசியல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல.  இந்தியா முழுக்க பயணம்செய்தவரோ தலித்துக்களின் நிலைமையை நேரில் அவதானித்தவரோ அல்ல அவர். அவரது அரசியல் செயல்பாடு மகாராஷ்டிரத்துக்கு வெளியே பரவவில்லை. அவர் கடைசியில் ஆரம்பித்த இயக்கம் அவர் இருக்கும்போதும், இறந்தபின்னும், இன்றும் இந்திய தலித்துக்களால் அங்கீகரிக்கப்படவில்லை. அது அவரை ஆதரித்த பிரிட்டிஷார் இருந்த காலகட்டத்திலேயே தலித்துக்கள் நிறைந்த பிராந்திய சபைத்தேர்தல்களில்கூட  வெல்ல முடியவில்லை என்று சொல்கிறார் ஷ¥ரி.

 

இரட்டை உறுப்பினர் திட்டம் என்பது அம்பேத்காரை முன்னிறுத்தி காங்கிரஸின் அரசியல் செல்வாக்கைப்பிளக்க ஆங்கில அரசு முன்வைத்த திட்டம் என்றும், அதை காந்தி எதிர்த்தபோது அம்பேத்கார் கடுமையான பிடிவாதத்துக்குப் பின்னர் அவருக்கு மக்கள் ஆதரவே இல்லை என்று தெரிந்த பின்னர்தான் இறங்கி வந்தார் என்றும் ஷ¥ரி வாதிடுகிறார். அம்பேத்காருக்கு ஆதரவாக எங்கும் மக்கள் எழுச்சி இருக்கவில்லை என்றும் காந்தியையே தலித்துக்கள் தங்கள் தலைவராகக் கண்டார்கள் என்றும் சொல்கிறார்.

 

பூனா ஒப்பந்தம் என்றழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் மூலம் காந்தியுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தபின் தன் அதிகாரக்கனவுகள் முடக்கப்பட்டமையால் கடுப்பான அம்பேத்கார் மிகவும் தரமிறங்கி காந்தியை வசைபாடினார் என்றும் அரசியல் நாகரீகத்தின் எல்லைகளை தாண்டிசென்று காந்தியின் சாதியைச் சொல்லி இழிவுசெய்தார் என்றும் ஷ¥ரி சொல்கிறார்.

 

இதில் ஒரு சில சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. ஷ¥ரியின் நூலை எனக்கு பரிந்துரை செய்து அனுப்பியவர் ஒரு சிரியன் கிறித்தவ நண்பர்.ஷ¥ரியின் பக்கம் பக்கமான ஆவணங்கள் அவரை திருப்தி செய்திருந்தன. ஆனால் ஷ¥ரி கடைசிவரை அம்பேத்காரைப்பற்றி காந்தி என்ன நினைத்தார் என்ற கோணத்தை திறப்பதே இல்லை என்பதை நண்பர் சிந்திக்கவில்லை.

 

உண்மையில் காந்தி அம்பேத்காரை நேர்மையான ஆனால் உணர்ச்சிவசப்படுகிற ஒரு மக்கள் தலைவராகவும் முக்கியமான அரசியல் சமூக சிந்தனையாளராகவுமே எண்ணினார். அவர் தன்னை கடுமையாகத் தாக்கியபோது கூட உயர்சாதியினர் அவர் சாதிக்கு இழைத்த கொடுமைகளுக்காக அப்படி தாக்குவதற்கான தார்மீக அருகதை அவருக்கு உண்டு என்றுதான் சொன்னார். ஒருபோதும் அம்பேத்காரை காந்தி நிராகரிக்கவில்லை. ஆகவேதான் நேருவின் காங்கிரஸ் அவரை அழைத்து முதல் அரசில் பங்கெடுக்க வைத்தது.அதை ஷ¥ரி மறைத்துவிடுகிறார்.

 

காஞ்சா இளையாவின் நூலை அனுப்பியவர் ஒரு கேரள தலித் செயல்வீரர். அவருக்கு காஞ்சா இளையா ஒரு தலித் அல்ல என்ற தகவல் தெரிந்திருக்கவில்லை. வடநாட்டில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் தலித்துக்கள் மேல் செலுத்தும் அன்றாட வன்முறை குறித்து காஞ்சா இளையாவுக்கு சொல்வதற்கேதும் இல்லை என்பதும், எல்லாம் பிராமணச்சதி என்றும் ஆகவே தலித்துக்கள் பிற்படுத்தப்பட்டவர்களுடன் ஒத்துழைத்து அவர்களை அதிகாரத்தில் இருத்த உழைக்கவேண்டும் என்பதும்தான் அவரது நியாயங்கள் என்றும் தெரிந்திருக்கவில்லை.

 

அருண்ஷ¥ரி முன்வைக்கும் ஆவண ஆதாரங்களை அம்பேத்காரின் ஆதரவாளர்கள் ஆவணங்கள் அல்ல என்று மறுக்க முடியாது.  அவர்கள் மறுப்பதற்கான கோணம் ஒன்றே. அம்பேத்கார் பிரிட்டிஷாருடன் சமரசம்செய்யவும் ஒத்துப்போகவும் முற்பட்டது தலித் சமூகத்தினரின் நலனுக்காக மட்டுமே என்றும், அவரது சுயநலத்துக்காக அவர் பதவிகளை நாடவில்லை என்றும், பிரிட்டிஷ் ஆட்சியிலும் பின் காங்கிரஸ் ஆட்சியிலும் அவர் பதவியை நாடியது தன்னுடைய மக்களின் விடுதலைக்காகவே என்றும், உயர்சாதி ஆதரவாளரான அருண் ஷ¥ரி அம்பேத்காரின் நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் அவரை பழிசாற்றுகிறார் என்றும் அவர்கள் வாதாடலாம். அதுவே உண்மையும் கூட.

 

ஆனால் இங்கே அம்பேத்காரை நியாயப்படுத்த அவரது நல்ல நோக்கங்களைத்தான் ஆதாரமாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது ஆளுமையை நம்பினால் ஆதாரங்களை அதற்கேற்ப புரிந்துகொள்ளலாம். ஆனால் தங்கள் தலைவரைப்பற்றிப் பேசும்போது அவரது நல்ல நோக்கங்களை முன்வைத்து வாதாடுபவர்கள் காந்தியின் செயல்களை மதிப்பிடும்போது அந்த நல்ல நோக்கம் அவருக்கும் இருந்திருக்கும் என்று நம்புவதில்லை. அவரது நோக்கம் தீயதே என முன்னரே முடிவுக்கு வந்துவிட்டபின் அந்தக் கோணத்தில் காந்தியின் எல்லா செயல்களையும் மதிப்பிடுகிறார்கள்.

 

ஆக, பிரச்சினை தரவுகளில் இல்லை, உண்மை என்ன என்பதில் இல்லை, நம்பிக்கை வைக்க மறுப்பதில்தான் உள்ளது. அம்பேத்காரை உயர்சாதியினரில் அவரை எதிர்க்கும் சாராரும் காந்தியை தலித்துக்களில் அவரை எதிருக்கு சாராரும் எப்படி நோக்குகிறார்கள் என்பதிலேயே உள்ளது. காழ்ப்பில்தான் அந்த நோக்கின் சாராம்சம் உள்ளது.

 

ஒரு வரலாற்று மாணவன் இந்த அவநம்பிக்கைகளையும் காழ்ப்புகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை. காழ்ப்பையே ஆற்றலாகக் கொண்டு இயங்கும் அரசியல் விமரிசகர்களின் கொள்கைகளை அவன் தன் சாதி ,மத, மொழிச் சார்புநிலை காரணமாக ஏற்றுக்கொண்டால் என்றால் காலப்போக்கில் தன் சொந்த சிந்தனைத்திறனையே மழுங்கடித்துக்கொண்டவன் ஆவான்.

 

அருண்ஷ¥ரியின் நூலை இந்திய இந்துத்துவர்கள் கொண்டாடுகிறார்கள். அதைப்பற்றி இணையதளங்களில் எழுதித்தள்ளுகிறார்கள். காஞ்சா இளையாவை மேலைநாட்டு பல்கலை கழகங்கள் கொண்டாடுகின்றன. கிறிஸ்தவ அமைப்புகளில் அவர் கௌரவிக்கபப்டுகிறார். நிதி பெறுகிறார்.அவர் மதிப்புமிக்க கருத்தரங்களுக்குச் சென்றபடியே இருக்கிறார். பெரும் பரிசுகளும் பட்டங்களும் அவருக்கு வந்துகொண்டே இருக்கின்றன.

 

இந்த இரு நூல்களும் எப்படிப்பட்டவை? இரண்டுமே காழ்ப்பு கொண்ட வரலாற்றுத் திரிபுகள் என்பதுதான் உண்மை.  ஆனால் ஒப்புநோக்க காஞ்சா இளையாவின் நூல் வெறும் காழ்ப்புகளை அப்படியே கொட்டுகையில் அருண் ஷ¥ரி தன் காழ்ப்புகளுக்கும் திரிபுகளுக்கும் விரிவான தகவலாதாரங்களை அளிக்கிறார். ஒரு பொதுவாசகன் ஷ¥ரியின் நூலால் பெரிதும் திருப்தி அடைய வாய்ப்பிருக்கிறது.ஆகவே அது இன்னும் ஆபத்தானது.

முரணியக்கத்தின் பாதை.

காந்தியையும் அம்பேத்காரையும் குறித்த நடுநிலையான, பக்குவமான அணுகுமுறையைக் கொண்ட இருவர் என் கவனத்துக்கு வந்திருக்கிறார்கள். ஒருவர் மறைந்த டாக்டர் டி.ஆர்.நாகராஜ். கன்னட தலித் — பண்டாயா இயக்கத்தின் சிந்தனையாளரும் இலக்கியத் திறனாய்வாளருமான நாகராஜ் காந்திக்கும் அம்பேத்காருக்குமான உறவை மிகவிரிவான தளத்தில் வைத்து ஒரு முரணியக்கமாக ஆராய்ந்திருக்கிறார். இந்திய எழுத்தாளர்களில் அவரே இவ்வகையில் முன்னோடி. நாகராஜின் ‘எரியும் பாதங்கள்– இந்திய தலித் இயக்கம் குறித்த ஓர் ஆய்வு’ [The flaming feet: A study of the dalit movement in India by D.R.Nagaraj ] என்ற நூல் முக்கியமானது.

 

நாகராஜை நான் சந்தித்து விரிவாக உரையாடியிருக்கிறேன். அவரை நான் எடுத்த பேட்டி ஒன்று காலச்சுவடு இதழில் 1995ல் வெளியாகியிருக்கிறது. கேரள நண்பர் ஒருவர் ராமச்சந்திர குகாவின் காந்தி குறித்த கட்டுரைகளை தொகுத்து அனுப்பியிருந்தார்.  பெங்களூரைச் சேர்ந்த அரசியல்-சமூகவியல் ஆய்வாளரான ராமச்சந்திர குகா இன்று  இந்திய அளவில் பெரிதும் கவனிக்கப்படும் சிந்தனையாளர். ஒப்புநோக்க என் கருத்துக்களுடன் மிக நெருக்கமாக வருகிறார் என்று குகாவை எண்ணிக்கொண்டேன். தமிழில் ராமச்சந்திர குகாவின் ‘காந்திக்குப் பின் இந்திய வரலாறு’ என்றநூல் மொழியாக்கம் செய்யபப்ட்டு வந்துள்ளது [கிழக்கு பதிப்பகம்]

 

ராமச்சந்திர குகா

 

குகாவின் இந்த வரிகளை பொன்மொழிபோலவே சொல்ல விரும்புகிறேன். திரைக்கதை எழுத்தாளருக்கும் ஐதீகம் சமைப்பவருக்கும் வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். வரலாற்றாசிரியனுக்கு அத்தகைய கட்டுப்பாடுகளேதும் இல்லை. தலித் சுதந்திரப்போராட்ட வரலாறென்பது இன்னமும் முடிவடையாததும் பெரும்பாலான பகுதிகள் இன்னும் எழுதப்படாததுமான ஒன்றே. ஒன்றுக்கும் மேல் கதாநாயகர்களுக்கு அதில் இடமுள்ளது. அம்பேத்காரும் காந்தியும் மிகச்சிறப்பான தொடக்கமாக அமைவார்கள்” [ Ramachandra Guha : An Anthropologist Among The Marxists And Other Essays]

 

‘கதாநாயகன் X வில்லன்’ என்ற வணிகசினிமா மனநிலையில் நின்று இதை அணுகும் இரு தரப்புக்கும் என்னிடம் சொல்ல ஏதுமில்லை. நான் பேசவிரும்பும் முன்னிலை  என்பது வரலாற்றை பல்வேறு கருத்துக்களின், பல்வேறு சக்திகளின் முரணியக்கமாக அணுகும் நவீன மனங்களிடம் மட்டுமே. அவர்கள் மட்டுமே சிந்திக்கும் தகுதி படைத்தவர்கள். பிறர் என்ன தலையணைகளை எழுதி அடுக்கினாலும் அரசியல் பெருங்கூட்டங்களில் அமர்ந்து கோஷம்போடவே லாயக்கானவர்கள்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

2.காந்தியின் வரலாற்றுப்பாத்திரம்

 

பூனா ஒப்பந்தம் மற்றும் தலித் அரசியலைப்பற்றிபேசுவதற்கு முன்னர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பெரிய வரைவில் அந்த சந்தர்ப்பத்தைப் பொருத்திப் பார்க்கவேண்டும். இந்தியா என்ற பெருநிலத்தின் பற்பல பிரிவுகள் கொண்ட பலகோடி மக்களின் நலன்களுடன் சம்பந்தப்பட்டதாகவும் வல்லமை வாய்ந்த ஒரு பேரரசின் மகத்தான ராஜதந்திர விளையாட்டுக்களுடன் சம்பந்தமுள்ளதாகவும் அச்சித்திரத்தை அணுக வேண்டும்.

 

 

தலைவன் வருகை

 

 

இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றைப் பார்த்தால் சுதந்திரம் குறித்த காங்கிரஸின் கருத்துக்கள் படிப்படியாக மாறிவருவதைப் பார்க்கலாம். 1885 ல் காங்கிரஸ் தொடங்கப்பட்டது இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அல்ல. மாறாக, இந்தியர்களுக்கு பிரிட்டிஷ் அரசில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பிற வணிக வாய்ப்புகளைப் பற்றி உருவாகிவரும் சிறிய அதிருப்திகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்க ஓர் அமைப்பு தேவை என்பதற்காகவே.

 

பின்னர் அந்த இந்தியசுதந்திரம் என்ற கருத்து மெல்ல மெல்ல வலுப்பெறலாயிற்று. இந்தியாவில் இந்தியர்களுக்கு அதிக உரிமைகள் தேவை என்றும் இந்திய மக்களின் அடிப்படைத்தேவைகளை பிரிட்டிஷ் அரசு கவனிக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. திலகர் போன்றவர்களின் தலைமையில் தீவிரவாத அணி ஒன்று தேசவிடுதலை என்ற கோணத்தில் சிந்திக்க, கோகலே போன்றவர்களின் தலைமையில் மிதவாத அணி மேலும் ஆட்சி உரிமைகள் என்ற கோணத்தில் சிந்தித்தது.

 

இக்கால காங்கிரஸ் இவ்விரு தரப்புக்கும் இடையேயான கடும் மோதல்களின் முரணியக்கம் மூலம் கொஞ்சம் கொஞ்ச்மாக கருத்துதளத்தில் முன்னகர்ந்தது என்று சொல்லலாம்.  காங்கிரஸ் பொதுவாக மிதவாதிகளின்  கையிலேயெ இருந்தது. ஆனால் கருத்தியல் ரீதியாக தீவிரவாதிகள் காங்கிரஸை படிப்படியாக மேலே இட்டுச்சென்றார்கள்.

 

 

ஆனால் இக்காலகட்டத்தில் காங்கிரஸ் கிட்டத்தட்ட செயலிழந்தே இருந்தது. அதற்குக் காரணம் மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலே. உருப்படியாக ஒன்றுமே நிகழவில்லை. இந்திய சுதந்திரப்போராட்டத்தின் தயாரிப்புநிலைக் காலம் என்றே இதைச் சொல்ல முடியும்.

 

இந்த மோதலை உருவாக்கி நிலைநாட்டியதில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என இன்று ஏராளமான ஆவணங்கள் வழியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மிதவாதிகளில் பலர் ரகசியமாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் தொடர்புகொண்டிருந்தார்கள். பலர் பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியின் இலாபங்களை பெருமளவில் பெற்றார்கள். பாரதி உள்ளிட்ட தீவிரவாதிகள் இதையே காரணமாக காட்டி ஒட்டுமொத்த மிதவாதிகளையே நடிப்புச் சுதேசிகள் என்று வசைபாடினார்கள்.

 

இச்சூழலில்தான் 1915 ல் காந்தி காங்கிரஸ¤க்குள் வருகிறார். 1918ல் சம்பாரன் சத்யாகிரகம் மூலமே அவரது பங்களிப்பு உருவாகிறது. காந்தியின் வருகை உருவாக்கிய நம்பிக்கையையும் அலையையும் பாரதி முதலிய தீவிரவாதிகள்கூட  காந்தி கவனிக்கப்பட்ட இரண்டு வருடங்களுக்குள் 1920லேயே அவரை வாழ்க நீ எம்மான்‘ என்று வாழ்த்தி வரவேற்றதில் இருந்தே புரிந்துகொள்ள முடியும்.

 

காந்திக்கான இடம் காங்கிரஸில் காலியாக இருந்தது என்றே சொல்லவேண்டும். ஒருபக்கம் பிரிட்டிஷ் அரசின் நல்லெண்ணத்தை இழக்காதவரும் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்பவரும் நிதானமானவருமான கோகலே. ஆனால் அவரால் மக்களை எழுச்சி கொள்ளச்செய்ய முடியாது. மறுபக்கம் தீவிரமான எண்ணங்கள் கொண்டவரும் பூசலிடுபவருமான திலகர். ஆனால் அவரே மக்கள்சக்தி. இவ்விரு ஆற்றல்களையும் இணைக்கும் மையமாக வந்தார் காந்தி

 

காந்தியிடம் அன்று இந்திய காங்கிரஸ் தேடிய அந்த அபூர்வமான இணைப்பு இருந்தது. இந்தியா போன்ற மாபெரும் தேசத்தை பிரதிநிதித்துவம் செய்த காங்கிரஸின் பலநூறு உட்பிரிவுகள்கொண்ட அமைப்பை இடைவெளி இல்லாத சமரசம் மூலம் முன்னெடுத்துச்செல்லும் நிதானமான அணுகுமுறை அவரிடம் இருந்தது. பிரிட்டிஷ் ராஜதந்திரத்துடன் உரையாடவும் அதை கையாளவும்கூடியவராக அவர் இருந்தார். மறுபக்கம் மிதவாதிகளைப்போல பிரிட்டிஷாரிடமிருந்து சில உரிமைகளை வாங்கினால் போதும் என அவர் எண்ணவில்லை.அவருக்கு இந்தியாவின் சுதந்திரம் குறித்த ஒரு கனவு இருந்தது. அதில் சமரசமற்றவராக அவர் இருந்தார்.

 

அதாவது காந்தி தீவிரவாதிகளின் சுதந்திரக் கனவை மிதவாதிகளின் ஜனநாயக வழிமுறைகள் மூலம் வென்றெடுக்க முனைந்தார். அந்த இணைப்பே அவரை தலைமைக்குக் கொண்டுவந்தது. அவர் வந்ததுமே காங்கிரஸ் சட்டென்று அபாரமான ஓர் ஒருங்கிணைவை அடைந்ததை வரலாறு காட்டுகிறது. அதன் வழியாக காங்கிரஸ் சம்பிரதாயமான கருத்தரங்குகளை நடத்தும் அமைப்பு என்ற நிலையில் இருந்து மீறி எழுந்து செயலூக்கம் கொண்ட ஒரு போராட்ட அமைப்பாக மாறியது. அவர் மையப்பொறுப்புக்குவந்த மூன்றுவருடங்களுக்குள், 1921ல்காங்கிரஸ் சுயராஜ்யத்தை தன் அடிப்படை இலக்காக பிரகடனப்படுத்தியது.

 

காந்தி அரசியலுக்கு வந்தது சமநிலையிழந்து செயல்ற்றுக்கிடந்த ஒரு அமைப்புக்கு ஓர் அச்சுஒரு சமநிலைப்புள்ளி தேவையாக இருந்த காலகட்டத்தில். அவர் அந்த மையமாக இருந்தார்கடைசிவரை. 

 

 

 

ஜனநாயகவாதியின் சிலுவை

 

 

அம்பேத்காருடனான உரையாடலில் தன்னம்பிக்கையுடன் காந்தி சொனனர்நான் என் முழுவாழ்க்கையிலும் ஜனநாயகவதியாகவே இருந்து வந்திருக்கிறேன். என் மரணத்துக்குப் பின்பு கங்கையில் என் சாம்பல் கரைந்தபின்பு ஜனநாயகவாதிகளில் தலையாயவன் நான் என்பதை இந்த உலகம் ஏற்றுக்கோள்ளும். நான் இதை பெருமைக்காகச் சொல்லவில்லை. பணிவோடு சொல்கிறேன்….

 

கடைசிவரை காங்கிரஸ¤க்குள் மிதவாதி தீவிரவாதி என்ற பிரிவினை இருந்துகொண்டுதான் இருந்தது. சுபாஷ் சந்திரபோசுக்கும் காந்திக்குமான முரண்பாட்டின் உள்ளுறைகூட அதுதான். ஆனால் அந்த வகையான உள்மோதல்கள் காங்கிரஸை ஸ்தம்பிக்க வைத்த காலம் முடிந்துவிட்டது. காங்கிரஸை காந்தி தன் தலைமையில் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். அந்த அதிகாரம் அவருக்கு இருந்த அபாரமான மக்கள்செல்வாக்கால் உருவானது. அவர் வந்தபின் காங்கிரஸ¤க்குள் அவரன்றி  எவருமே முக்கியமில்லை என்ற நிலையை மக்கள் உருவாக்கினார்கள்.

 

 

ஆனால் காந்தி அந்தச் செல்வாக்கை சர்வாதிகாரத்தனமாக உபயோகித்துக் கொள்ளவில்லை. காங்கிரஸின் அன்றைய வரலாற்றை வாசிக்கும் எவருக்குமே அது தெரியும். காந்தி அன்று காங்கிரஸில் இருந்த அத்தனை தலைவர்களையும் தூக்கி வீசியிருந்தால்கூட காங்கிரஸ¤க்கு ஒரு இழப்பும் ஏற்பட்டிருக்காது என்பதே உண்மை. காந்தியை எதிர்த்து வெளியே சென்ற ஒருவர் கூட பெயரளவுக்குகூட மகக்ளாதரவை திரட்டமுடியவில்லை. அவரது இறப்புவரை காந்தி என்றால் காங்கிரஸ்தான், காங்கிரஸ் என்றால் காந்தி தான். ஆனால் ஒருபோதும் எவரையும் இழக்க காந்தி தயாராக இருக்கவில்லை. எப்போதுமே முடிந்தவரை அணைத்துப்போகவே அவர் முயன்றிருக்கிறார்.

 

ஏன் என்றால் அவர்களின் மக்கள் செல்வாக்குக்காக அல்ல. இந்தியா என்ற மாபெரும் தேசத்தில் பலநூறு சமூகங்கள் பலவகையான கருத்தோட்டங்கள் உள்ளன என்று காந்தி உணர்ந்திருந்தார். அந்த எல்லா தரப்புக்கும் காங்கிரஸ¤க்குள் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என அவர் எண்ணினார். அப்போது மட்டுமே காங்கிரஸ் தேசத்தின் பிரதிநிதியாக நின்று தேசத்துக்காக போராட முடியும் என அவர் நம்பினார்.

 

ஆகவே மதன்மோகன் மாளவியா, புருஷோத்தம்தாஸ் டாண்டன், கோவிந்த வல்லப பந்த், கெ.எம்.முன்ஷி போன்ற மரபுவாதிகள் நேரு, சுபாஷ் சந்திர போஸ் போன்ற நவீனத்துவர்கள், மௌலானா அபுல்கலாம் ஆசாத், கான் அப்துல் கா·பார் கான் போன்ற இஸ்லாமியவாதிகள் ஆகிய அனைவருக்குமே இடமுள்ளதும் அவர்கள் அனைவருடைய அணுகுமுறைகளும் ஒன்றுடன் ஒன்று உரையாடி ஒரு பொதுத்தளத்தைச் சென்றடையக்கூடியதுமான ஒரு ஜனநாயகக் காங்கிரசையே அவர் கனவுகண்டார். எனவே சமரசம் செய்துகொண்டே இருந்தார்

 

காந்தியின் தொகுக்கப்பட்ட எழுத்துக்களை கூர்ந்து வாசிக்கும் ஒருவர் அவர் ஒன்றுடன் ஒன்று முரண்படும் பல்வேறு கருத்துநிலைகளை உரையாடச்செய்யவே தன் வாழ்நாளை முழுக்கச் செலவழித்தார் என்று புரிந்துகொள்வார். ஒருவரை ஒருவர் ஐயப்பட்ட, ஒருவர் நலன்களுடன் இன்னொருவர் நலன் முரண்பட்ட, பல்வேறு தரப்புகள் நடுவே ஒரு சமரச மையமாக அவர் இருந்துகொண்டே இருந்தார். அவர்களை தன் நிதானத்தாலும் மதிவன்மையாலும் கட்டுக்குள் வைத்திருந்தார். தேவையான போது அவர் உண்ணாவிரதம் போன்ற சுயதண்டனை முறைகள் மூலமும் அவர்களை கட்டுப்படுத்தினார்.

 

அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர் மீது மனக்குறைகள் இருந்தன. பாரபட்சங்களை அவர்கள் கண்டடைந்தபடியே இருந்தார்கள். ஒரு அப்பத்தை ஒன்பது பசித்த குழந்தைகளுக்குப் பங்கிட்ட தந்தையாக இருந்தார் அவர். அவரை முழுமனத்துடன் ஏற்க எந்தக்குழுவின் தலைவராலும் இயலவில்லை. உண்மையிலேயே சில பாரபட்சங்கள் நடந்திருக்கலாம். ஏன் என்றால் இத்தகைய ஒரு பீடத்தில் இருப்பவர் ஒருநூறு தட்டுகள் கொண்ட ஒரு தராசின் மையமுள் போன்றவர். அவற்றின் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டிருக்கும் எடைச்சமநிலைகள் நடுவே  ஒரு சமரசப்புள்ளியாகவே அவர் இருக்க முடியும்.

 

காங்கிரஸ் எக்காலத்திலும் உட்பூசல்களின் பெரும் தொகையாகவே இருந்திருக்கிறது. காங்கிரஸ¤க்குள் இருந்த பல்வேறு குழுக்கள் ஒவ்வொன்றும் இந்தியாவில் இருந்த அதிகாரமையங்களை பிரதிநிதித்துவம் செய்தன. வடக்கு தெற்கு பிரிவினை இருந்தது. அவற்றுக்குள் மாநிலவாரி, மொழிவாரி குழுக்கள். அவற்றுக்குள் சாதிவாரிக்குழுக்கள். காந்தி அவற்றுக்கு இடையே சமரசத்தை உருவாக்கிக்கொண்டே இருந்தார்.

 

இந்தச்சமரசத்தில் பிழைகள் இருந்தனவா? பலவகையிலும் அன்றாடப் பிழைகள் நிகழத்தான் செய்யும். பாரபட்சங்கள் நிகழ்ந்தனவா? நிகழாமலிருக்க வழியே இல்லை. வல்லமைகொண்ட ஒரு குழுவின் ஆதிக்கத்தை ஒரு ஜனநாயக அமைப்பு ஒருபோதும் தவிர்க்க முடியாது. குழுக்கள் இணைந்தும் பிரிந்தும் உருவாகும் அதிகாரச் சமவாக்கியங்கள் எந்த மேதையாலும் எந்த சக்ரவர்த்தியாலும் முற்றிலும் தன் கட்டுப்பாட்டுக்குள் நிறுத்தக்கூடியவை அல்ல. இந்தியாவின் மாபெரும் பேரரசுகளின் வரலாற்றிலேயே இதுதான் நிலை.

 

ஆக, ஒருவேளை அன்றைய காங்கிரஸ், அதன் தலைவராக இருந்த காந்தி ஏதேனும் ஒரு குழுவுக்கு அல்லது சாதிக்கு பாரபட்சம் இழைத்திருக்கக் கூடுமா? சாத்தியம் உண்டு. அவ்வாறு பல மனக்குறைகள் நீடிக்கின்றன. இந்திய அரசியலில் வங்கத்தின் மேலாண்மையை காந்தி திட்டமிட்டு ஒழித்தார் என்று இன்றும் பலநூறு வங்க அரசியலெழுத்தாளர்கள் சொல்கிறார்கள். வங்கம் தன்னை என்றுமே இந்தியாவின் தலைமைமாநிலமாக கற்பனை செய்துகொள்வது. எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கையில் ஏமாற்றமும், விளைவாக பாரபட்சம் காட்டப்பட்ட உணர்ச்சியும் எழுகிறது.

 

எந்த ஒரு தரப்பும் இத்தகைய சிக்கலான கூட்டமைப்புக்குள் தனக்கு சாதகமான முறையில் அனைத்தும் நிகழவேண்டும் என எதிர்பார்க்க இயலாது. தன் எதிர்பார்ப்புகள் நூறுவிழுக்காடு நிறைவேறவேண்டும் என சொல்ல முடியாது. சிலசமயம் ஏமாற்றங்கள் கடுமையாக இருக்கலாம். அந்த அதிகாரப்பகிர்வு ஆட்டத்தின் விதிகளை மட்டுமே குற்றம்சாட்ட இயலும். ஜனநாயகம் என்றுமே எண்ணிக்கையின் ஆட்டம். அதில் ஏமாற்றம் கொண்ட ஒரு தரப்பு மொத்த அமைப்புமே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சொல்வதும் சரி, அதன் தலைமையை ஒரு அபப்ட்டமான சதிகாரனாகவோ துரோகியாகவோ சித்தரிப்பதும் சரி வரலாற்றுக்குச் செய்யும் நியாயம் அல்ல.

 

காந்தியின் செயல்பாடுகளில் பிழைகளே நேரவில்லை என்று எவரும் சொல்ல முடியாது. இந்தியாவின் அரசியல் அத்தனைதூரம் சிடுக்கானது. ஆனால் அவரது நோக்கத்தையும் நேர்மையையும் ஐயப்படுவதற்கு வரலாறு ஆதாரம் அளிக்கவில்லை. அவரது தலைமையிலான சுதந்திரபோராட்டத்தில் அதன் பகுதியாக இருந்த அதிகாரப் பகிர்வில் ஏமாற்றம் கொண்ட எந்த தரப்புமே அவரை துரோகி என்று சொல்லலாம். அது அவர்களின் அரசியலே ஒழிய வரலாற்று உண்மை அல்ல.

 

இந்தியா போன்ற ஒரு தேசத்தில் எந்த ஒரு பெரும் மக்கள்அமைப்பை நடத்துவரும் அத்தகைய பழிகளைச் சுமக்க நேரும். ஒருவேளை அம்பேத்கார் இந்திய அளவில் ஒரு தலித் அமைப்பை நிறுவி அதை அனைத்து தலித்துக்களுக்கும் உரிய ஜனநாயக அமைப்பாக முன்னெடுத்திருந்தால் அவருக்கு  எதிராகவும் இதே போன்ற குரல்கள் அதற்குள் இருந்து எழுந்திருக்கும். அந்த யதார்த்தத்திலிருந்தே நாம் சிந்திக்கவேண்டும்.

 

ஆச்சரியம் என்னவென்றால், தன்னை சாதாரணமாக எதிர்த்தவர்களைக்கூட கொன்றழித்த தலைவர்களை நியாயப்படுத்தி அவர்களின் வரலாற்று இடத்தை வலியுறுத்துபவர்கள்தான் காந்தியை சர்வாதிகாரி என்கிறார்கள். அவர் தன் கருத்தை பிறர்மேல் ஏற்றியது மாபெரும் குற்றம் என்கிறார்கள். இந்தியாவில் அரசியல் சிந்தனைகளில் உள்ள வேடிக்கைகளுக்கு அளவே கிடையாது! ஒரு ஜனநாயக அமைப்பில் ஜனநாயகத்தின் எல்லைகளுக்குள் முரண்பாடுகளை கட்டுப்படுத்திக்கொள்ளச்செய்ய அதன் தலைவன் செய்யக்கூடிய ஆகச்சிறந்த வழிமுறை காந்தி முன்வைத்த சுயத்தியாகம் அன்றி வேறல்ல

 

காந்தி தன் அமைப்புக்குள் எல்லா வகையான விவாதங்களையும் அங்கீகரித்தார். எப்போதுமே  காங்கிரஸ¤க்குள் அவருக்கு எதிரான கடுமையான குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அதை அவர் ஊக்குவித்தார் என்றே சொல்லலாம். அவர் அவர்களுடன் சாத்வீகமாக உரையாடுபவராகவே இருந்தார். ஆனால் அவர்கள் எல்லை மீறுவார்கள் என்றால் அவர்களுக்கு ஆணித்தரமாக ஒன்றைச் சொன்னார், காங்கிரஸில் மக்கள் ஆதரவு அவருக்கே. அவர்தான் காங்கிரஸ். ஓர் உண்ணாவிரதம் சட்டென்று அந்தத் தலைவர்களுக்கு அதைச் சுட்டிக்காட்டிவிடும். அவர்கள் தங்கள் எல்லைகளை உணர்வார்கள்.

 

காந்தி ஒருங்கிணைக்கும் தலைவர். சமரசம் செய்யும் தலைவர். பேதங்கள் நடுவே மையக்கோடாக ஒரு இலட்சியத்தை நிலைநிறுத்த முனைந்தவர். அதேசமயம் தன் விழுமியங்களில் ஆழமான பிடிவாதத்துடன் இருந்தவர். அவ்விழழுமியங்களுக்காக எந்நேரமும் உயிர்விடச் சித்தமாக வாழ்ந்தார். உயிர்விட்டவர்.

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உண்ணாவிரதம் , தலைவனின் ஆயுதம்

 

 

காந்தி தன்னுடைய உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்தினார் என்று பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். தன்னால் வழிநடத்தப்பட்ட அமைப்பினை தன்னுடைய தார்மீகமான பிடிக்குள் வைத்திருக்கவே அவர் உண்ணாவிரதத்தை அதிகமும் பயன்படுத்தியிருக்கிறார் என்பதே உண்மை.

 

அவரது முதல் உண்ணாவிரதம் 1918ல் அகம்மதாபாதில் நடந்தது. அவர் அம்பாலால் சாராபாயின் நெசவுஆலையில் தொழிலாளர்களைத் திரட்டி ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார். அப்போது இந்தியாவில் தொழிற்சங்கங்கள் ஏதும் உருவாகியிருக்கவில்லை. வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்கள் அப்போது எவருக்கும் பெரிதாக அறிமுகமும் இல்லை. போராட்டம் ஆரம்பித்த சில நாட்களிலேயே ஊழியர்களில் ஒருசாரார் முதலாளியின் வாக்குறுதிகளை நம்பி வேலைக்குத் திரும்பினர். அந்த ‘கருங்காலி ‘தனத்துக்கு எதிராகவே காந்தி அவரது உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தார்.

 

அதன்பின்னர் காந்தி மேற்கொண்ட முக்கியமான உண்ணாவிரதங்கள் ஐந்து. இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நிலவிய மனக்கசப்புகளைக் களையும்பொருட்டும் காங்கிரஸ¤க்குள் இருந்த உட்பூசல்களைக் களையும்பொருட்டும் காந்தி முகமது அலியின் டெல்லி இல்லத்தில்  1924ல் மூன்றுவார உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.  1932ல் பூனா ஒப்பந்தத்தை எதிர்த்து நடத்திய ஆறுநாள் உண்ணாவிரதம் அடுத்தது.  1933ல் தன்னுடைய ஹரிஜன இயக்கத்தை ஆரம்பிக்கும் முன்னர் தன்னை ‘தூய்மைப்படுத்தி’க் கொள்வதற்காக அவர் நடத்திய 21 நாள் உண்ணாவிரதம். 1947ல் மத ஒற்றுமையை கோரி அவர் நவ்காளியில் மேற்கொண்ட உண்ணாவிரதம். கடைசியாக 1948ல் கஜானாவைப் பங்கிட்டு பாகிஸ்தானுக்குக் கொடுக்கவேண்டிய  550 கோடி ரூபாயைக் கொடுக்கச்சொல்லி நடத்திய கடைசி உண்ணாவிரதம்.

 

இந்த உண்ணாவிரதங்களில் மிக நீளமான மூன்று உண்ணாவிரதங்களும் சொந்தக் கட்சியான காங்கிரசை எதித்து அவர் மேற்கொண்டவை என்பதை கவனிக்கவேண்டும். இந்திய அரசியலில் அவர் நுழைந்தபோதே இங்கே மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் போன்ற ராஜதந்திரங்கள்மூலம் இந்துமுஸ்லீம் காழ்ப்புக்கான ஆழமான விதை ஊன்றப்பட்டிருந்ததை உணர்ந்தார். அவரது முதல் கவலையே அதுவாக தான் இருந்தது.

 

சித்தரஞ்சன்தாஸ் மோதிலால்நேரு போன்றவர்கள் பிரிட்டிஷ் பிரித்தாளும் சதிக்குப் பலியானபோது காங்கிரசுக்கு எதிரான முதல் உண்ணாவிரதத்தை அவர் செய்தார். அதேபோல காங்கிரஸின் உயர்சாதிப்பெரும்பான்மையை தன்னுடைய ஹரிஜனசேவைத்திட்டத்துக்கு கொண்டுவரும்பொருட்டே காந்தி 1933ல் தன் நீண்ட உண்ணாவிரத்தை நடத்தினார் என்பது வெளிப்படை.

 

சாதி, வர்ணம் குறித்த காந்தியின் கருத்துக்களில் வந்த மாற்றம் காங்கிரஸின் பழைமைவாதிகளால் ஒத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. ஆனால் அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. கடும் சாதியவாதிகளான புருஷோத்தம்தாஸ் டான்டன் போன்றவர்கள்கூட காந்தியின் தார்மீக அதிகாரத்துக்கு முன் பணிந்தார்கள்.

 

அதேபோல பாகிஸ்தானுக்குரிய கஜானாப்பங்கைக் கொடுக்க காங்கிரஸ் எளிதில் ஒத்துக்கொள்ளவில்லை. அந்த பணம் பாகிஸ்தானால் இந்தியாவுக்கு எதிரான ராணுவநடவடிக்கைக்கே செலவழிக்கப்படும் என பட்டேல் அஞ்சினார், அது உண்மையும் ஆயிற்று. காஷ்மீர் மீதான படையெடுப்பு அதனால்தான் நிகழ்ந்தது. மௌண்ட் பேட்டனும் ஒப்புக்கொள்ளவில்லை.  நேருவும் அப்படி பணம் கொடுத்தால் அதை இந்துமகாசபையும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்யும் என நினைத்தார்.

 

ஆனால் காந்தி வேறு வகையாகவே நினைத்தார். இந்தியா என்ற புதிய தேசம் ராஜதந்திர மோசடிகளின் மூலம் தன் தொடக்கத்தை நிகழ்த்தக் கூடாது என்று அவர் கருதினார். அழிவை நிகழ்த்தும் பிழையாகவே இருந்தாலும் தேசத்தின் தொடக்கம் அறத்தில் அமையவேண்டும் என விரும்பினார். பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த பல லட்சம் மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்கான பணம் அது என்று அவர் சொன்னார். அவரது தார்மீகமான அதிகாரம் வழக்கம்போல வென்றது. காங்கிரஸ் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ், இந்துமகாசபை இயக்கங்கள் கூட வன்முறைசார்ந்த போராட்டத்தை கைவிடுவதாக அவரிடம் உறுதி அளித்தார்கள்.

 

இதுவே காந்தியின் வழிமுறையாக இருந்தது. இந்த ஆயுதத்தை மிரட்டல் என்று முத்திரை குத்துபவர்கள் அவர் வேறென்ன செய்திருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஒரு தலைவன் தன் அமைப்பின் மீது தன் தார்மீகமான அதிகாரத்தை உணர்ச்சிகரமான செல்வாக்கைச் செலுத்துவதே இயல்பானது, நியாயமானது.  கோடானுகோடி மக்களுக்கு அந்தத் தலைவன் மீதுள்ள பிடிப்பே அவனை தலைவனாக்குகிறது. ஒன்றுடன் ஒன்று முரண்படும் பல்வேறு தரப்புகளினால் ஆன ஓரு பேரமைப்பை  முன்னோக்கி இட்டுச்செல்ல அவனுக்கு வேறு வழியே இல்லை.  

 

 

அகிம்சைப்போராட்டத்தின் விதிமுறைகள்

    

 

காந்தி இந்திய சுதந்திரப்போராட்டத்தை அதுவரை முன்னுதாரணம் இல்லாத ஒரு வழியில் இட்டுச்சென்றார். அகிம்சைப்போராட்டம் என்று அவர் சொன்ன வழியை அவர் சிறு சிறு சோதனைகள் மூலம் படிப்படியாகச் செய்துபார்த்து, நடைமுறையில் உருவாகும் பிழைகளைக் கண்டடைந்து, அவற்றைச் சரிசெய்து முன்னகர்ந்தார். போராட்டமும் சமரசமும் ஒரு செயல்பாட்டின் இரு பக்கங்களாகவே அவர் கண்டார். கிடைத்த லாபங்களைத் தக்கவைத்துக்கொண்டு அந்த லாபங்களைப் பயன்படுத்தும்விதமாக நம்மை மேம்படுத்திக்கொண்டு மேலும் போராடுவதே அவரது வழி. 

 

1918ல் சம்பாரனில் தன் முதல் அகிம்சைப்போராட்டத்தைச் செய்து பார்த்தார் காந்தி. அது ஒரு வெற்றி. பிரிட்டிஷ் ஆட்சி என்பது அதன் மீது மக்கள் கொண்டிருக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்றும், ஆகவே மக்கள் கருத்தை பிரிட்டிஷார் அஞ்சுகிறார்கள் என்றும் கண்டுகொண்டார். ஆகவே மக்களை பெருந்திரளாகத் திரட்டி அவர்களின் பொதுக்கருத்தை ஆயுதமாக பயன்படுத்தி செய்யப்படும் போராட்டவடிவத்தை காந்தி வடித்தெடுத்தார்

 

ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலை வழியாக பிரிட்டிஷ் ஆட்சியின் இன்னொரு முகத்தை காந்தி கண்டார். பிரிட்டிஷ் சிவில் ஆட்சி வேறு பிரிட்டிஷ் ராணுவம் வேறு என்ற ஆழமான புரிதல் அவருக்கு உருவாகியது. அதன்பின் காந்தி இந்தியச் சுதந்திரப்போர் பிரிட்டிஷ் சிவில் சிவில்அரசாங்கத்தின் கையில் இருந்து வெளியே போக விடவேயில்லை. மொத்தப்போராட்டமும் எந்நிலையிலும் ஒரு சிவில்செயல்பாடாகவே இருக்க வேண்டும் என்பதில் அபாரமான கவனம் கொண்டிருந்தார்

 

1922ல் சௌரி சௌராவில் வன்முறை வெடித்தபோது உடனே அவர் அப்போராட்டத்தை வாபஸ் வாங்கிக் கொண்டார். காந்தி யாரெனத் தெரிந்தவர்களுக்கு அதன் காரணம் எளிதில் புரியும். ஒருபோதும் வன்முறையை ஆதரிக்கப்போவதில்லை என்றும் எந்நிலையிலும் போராட்டத்தை வாபஸ் வாங்கத் தயங்கமாட்டேன் என்றும் அவர் அதனூடாக திட்டவட்டமாக் அறிவுறுத்தினார்.

 

காந்தி போராட்டங்கள் வன்முறைநோக்கி அத்து மீறும்போதெல்லாம் வாபஸ் பெற்றதை குறைகூறும் ஒரு தரப்பு இன்றும் உண்டு. அவர்கள் பிரிட்டிஷாருக்குச் சாதகமாக மக்கள் போராட்டத்தை ‘மழுப்பிய’ துரோகியாக காந்தியைச் சித்தரிக்கிறார்கள். அவர் தன்னிச்சையான உருவான மக்கள் எழுச்சியை வெளியே இருந்து வந்து குளிர்விக்கவில்லை. மாறாக குளிர்ந்துகிடந்த தேசத்தில் அந்த மக்கள் போராட்டத்தை அவரேதான் திட்டமிட்டு உருவாக்கினார். ஆகவே அதன் விளைவுகளை கட்டுப்படுத்த அவருக்கே முழு உரிமை உண்டு என்ற எளிய விஷயத்தை அவர்கள் காண்பதில்லை.

 

இப்படிச் சொல்பவர்களின் தரப்பு என்னவென்றால் ஒரு பெரும் அராஜகம் உருவாகி பல லட்சம்பேர் இறந்து நிலைமை கட்டுக்குள் நிற்காமல் சென்றிருந்தால் இந்தியாவைவிட்டு பிரிட்டிஷார் ஓடியிருப்பார்கள் என்பதே. தேசவிடுதலைக்காக ‘கொஞ்சபேர்’ இறந்தால் அதில் தவறில்லை என்று வாதிடுகிறார்கள். கம்யூனிசம் என்ற ஒரு கற்பனையான சமூக அமைப்புக்காக ஒருகோடிப்பேரை பலியிட்டு அதற்கான குற்றவுணர்ச்சியே இல்லாமல் ‘கம்யூனிச அமலாக்கத்தில் ஒரு சிறு தவறு நடந்துவிட்டது’ என்று சாதாரணமாக சொல்பவர்கள் அப்படித்தான் பார்ப்பார்கள்.

 

ஆனால் உலகை வென்ற பிரிட்டிஷ் ராணுவத்தின் வல்லமைக்கு முன் ஏழை இந்திய மக்களை தூண்டிவிட்டு பலிகொடுக்க காந்தி விரும்பவில்லை. இந்தியாவில் எப்போதெல்லாம் சிறிய அளவில் அராஜகம் எழுகிறதோ அப்போதெல்லாம் அது மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கும் கலவரமாகவே மாறும் என அவர் அறிந்திருந்தார். ஆகவே ஒருபோதும் நிலைமை சிவில் பிரசினை என்ற நிலைமையை மீறுவதை அவர் அனுமதித்ததில்லை. தன்னை நம்பிய எளிய மக்கள் மேல் ஒரு தலைவன் கொண்ட அபாரமான கருணையையே நாம் அதில் காண்கிறோம்

 

ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சிக்கு எதிராக காந்தி தொடங்கிய மக்கள் இயக்கம் வன்முறைக்குத் திரும்பியபோது, பிரிட்டிஷ் ராணுவம் அதை கையாள ஆரம்பிப்பதற்கான முகாந்திரம் உருவாகிறதென தெரிந்ததுமே, அவர் அந்தப்போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார். அந்தப்போராட்டத்துக்கு தெருவுக்கு வந்த மக்கள் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாத எளிய மக்கள்கூட்டம். இந்திய மக்கள் அறிந்ததெல்லாம் மன்னராட்சியும் கூட்டம் கூட்டமாகச் சென்று போராடிச் சாகும் களங்களும்தான். நிதானமான சிவில் போராட்டத்தை அவர்களுக்கு அவர் கற்பிக்க வேண்டியிருந்தது. அதற்கான ஆக்கபூர்வ முயற்சிகளில் காந்தி ஈடுபாட்டார்.

 

இரண்டுவருடம் அந்த பயிற்சிப் பணியை தீவிரமாகவே செய்தார்.லட்சக்கணக்கான மக்களை காங்கிரஸ் உறுப்பினர்களாக்கினார். ‘காலணா மெம்பர்’ என அழைக்கப்பட்ட இந்த தொண்டர் படைக்கு பல்வெறு ஆசிரமங்கள் முகாம்கள் வழியாக எளிய வாழ்க்கை, ஒருங்கிணைந்த செயல்பாடு, எந்நிலையிலும் நிதானம் தவறாமல் இருக்கும் தன்மை ஆகியவை கற்பிக்கப்பட்டன. அந்த தொண்டர்படை காந்திக்கு பின்னர் வந்த போராட்டங்களில் பெரும் வல்லமையாக அமைந்தது.

 

காந்தி மக்களை கிளப்பிவிட்டு வரலாற்றழிவுகளை உருவாக்கி அவற்றின்மேல் பயணித்து அதிகாரத்தைக் கனவுகண்ட தலைவர் அல்ல. மாறாக அம்மக்களின் குறைகளைப் பற்றி அவர்களிடமே பேசியவர். அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வதன் மூலமே உரிமைகளை அடைய முடியும் என்று கற்பித்தவர்.

 

காந்தியின் போராட்டம் மக்களை ஜனநாயகத்துக்கு பண்படுத்துவதாகவே இருந்தது. ஜனநாயக போராட்டத்தை, ஜனநாயக அமைப்புகளை கட்டி எழுப்புவதை, ஜனநாயக ஆட்சியை கற்றுக்கொள்வதன் மூலம் மட்டுமே உண்மையான சுதந்திரத்தை நோக்கி நகரமுடியும் என அவர் கற்பித்தார். ஒரேவரியில் சொன்னால், எந்த இயல்புகளால் இந்தியா வெள்ளையருக்கு அடிமையாகியதோ அந்த இயல்புகளை வென்று செல்லுவதையே உண்மையான விடுதலைப்போர் என்றார் அவர். 

 

 

 

பிளவுபடுத்தலுக்கு எதிரான போர்

 

 

1920 முதல் நடந்த காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டமே பிரிட்டிஷ் அரசு கண்ட இந்திய சிவில்சமூகத்தின்  உண்மையான எதிர்ப்பு என்று சொல்லலாம். அதுவரை அவர்கள் உண்மையில் இந்திய தேசியப்போராட்டத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. போராட்டத்தின் நோக்கமாக சுயராஜ்யக் கோரிக்கை முன்வைக்கபப்ட்டது என்பது ஒரு பெரிய திருப்புமுனை. காந்தி கடுமையாக தண்டிக்கப்பட்டார். 

 

அவர் சிறையிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸை வெற்றிகரமாகப் பிளந்தது பிரிட்டிஷ் அரசு. 1922ல்  மாண்டேகு-செம்ஸ்போர்டு குழுவின் சிபாரிசுகளின்படி இந்தியர்களுக்கு மாகாணாசபை தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியது. அது ஒரு மாபெரும் தூண்டில். பதவியாசைமூலம் காங்கிரஸ¤க்கு எதிரான சக்திகளை தங்களுக்குச்சாதகமாக திரட்டினார்கள். காங்கிரஸின் மிதவாதிகளை சபலப்படுத்தினார்கள்.

 

காங்கிரஸில் இருந்த மோதிலால் நேரு போன்ற மூத்த தலைவர்கள் பதவிகளுக்கான ரகசிய ஏக்கத்துடன் இருந்தார்கள். சித்தரன்தாஸ் , மோதிலால் நேரு போன்றவர்கள் தேர்தலில் போட்டியிட விரும்பி காங்கிரஸை உடைத்து ‘சுயராஜ்யா’ என்ற கட்சியை நிறுவினார்கள்.அவர்கள் பிரிந்துசெல்வதை தடுக்க காந்தி நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அவர்கள் இசையவில்லை.

 

இந்தப்பிரிவினையைத் தவிர்க்க காந்தி வருடக்கணக்காக முயன்றார் என்பதை நாம் காணலாம். இக்காலகட்டத்தில்தான் காந்தி  தீவிர அரசியலைவிட்டே ஒதுங்கி அகமதாபாத் அருகே சபர்மதி ஆசிரமத்தில் சென்று தங்கினார். இரு தரப்பினருக்கும் இடையே ஒற்றுமை உருவாக ஓயாமல் முயன்றார். சித்தரஞ்சன்தாஸ¤ம் மோதிலால் நேருவும் ஒன்றும் பெரிய தலைவர்கள் இல்லை. அவர்களை உதறிவிட்டு காந்தியால் எளிதில் கட்சியை கொண்டுசெல்ல முடியும். ஆனால் காந்தி காங்கிரஸ¤க்குள் பிளவை விரும்பவில்லை. இந்தியர்களின் குரல் ஒன்றாகவே ஒலிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அதற்காக காங்கிரஸ் தலைமைப்பொறுப்பைகூட விட்டுக்கொடுக்க தயராகா இருந்தார்.

 

ஏன் என்றால் காந்திக்கு மிக நன்றாகவே பிரிட்டிஷாரை தெரியும். ஆப்ரிக்காவிலும் உலகமெங்கும் அவர்கள் எப்படி தேசங்களைப் பிடித்தார்கள் என்று தெரியும். சொல்லப்போனால் காந்தி தவிர எவருக்குமே அந்த பிரக்ஞை அன்று இருக்கவில்லை. இந்தியா, ஆப்ரிக்கா போன்ற நிலநடுக்கோட்டுப்பகுதிகள் செறிவான மக்கள்தொகை கொண்டவை. நெடுங்கால வரலாறு கொண்டவை. ஆகவே உள்பிரிவுகளும் பேதங்களும் நிரம்பியவை. இந்தபேதங்களே அவற்றை அடிமைகளாக்கிய பலவீனங்கள்.

 

தொழிற்புரட்சியின் விளைவாக தங்களை ஓர் இயந்திரம் போல ஒற்றைப்படையாக தொகுத்துக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் ஆசிய ஆப்ரிக்க நாடுகளின் மக்களுக்குள் இருந்த உட்பிரிவுகள் நடுவே ஐயத்தை ஊட்டி பிளவை உருவாக்கியே அவர்களை வென்றார்கள். பிளவுபடுத்தியே ஆண்டார்கள். முதன்முறையாக இந்தியாவில் ஒரு ஒருங்கிணைந்த எதிர்ப்பைச் சந்தித்த பிரிட்டிஷாரின் ஆகச்சிறந்த ஆயுதம் பிளவுபடுத்தலாகவே இருக்கும் என காந்தி மிக நன்றாகவே அறிந்திருந்தார். ஆகவே அதை எவ்விலை கொடுத்தும் தவிர்க்க முயன்றார்.

 

அதே காலகட்டத்தில்தான் காந்தி முஸ்லீம்களுக்கு இரட்டைவாக்குமுறை மூலம் பிரிட்டிஷார் இந்திய சமூகத்தில் உருவாக்கியிருந்த இந்துமுஸ்லீம் கசப்புக்கு எதிராக ஒருமைப்பாட்டை அடைய கடுமையாக முயன்றார். உண்ணாவிரதம் இருந்தார். கிலாபத் கூட்டங்களில் தேசம் முழுக்கச் சென்று பங்கெடுத்தார்.

 

அதன்பின்னர் காந்தி போராட்டக்களத்துக்கு வருவது 1928 ல் சைமன் கமிஷனின் சிபாரிசுகளுக்கு எதிராக. இக்காலகட்டத்தில் காந்தி காங்கிரஸை மீண்டும் ஒற்றுமைப்படுத்துவதில் வெற்றிபெற்றார். அவ்வருடம் கூடிய கல்கத்தா காங்கிரஸில் காந்தி முழுச்சுதந்திரத்தை உடனடியான இலக்காக முன்வைத்து ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சிக்குக் கீழே டொமினியன் அந்தஸ்து உள்ள ஒரு நாடாக விளங்கவேண்டும் என்று கோரினார் காந்தி.

 

1930ல் எதிர்கால இந்திய தேசத்தின் கொடி அறிவிக்கப்பட்டது. லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஜனவரி 26 இந்தியாவின் சுதந்திரநாளாக அறிவிக்கப்பட்டு வருடம் தோறும் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது. அதேவருடம் காந்தி உப்புசத்யாகிரகத்தை ஆரம்பித்தார். அன்றைய உணர்ச்சிவேகம் காரணமாக அது ஒரு மாபெரும் மக்களியக்கமாக எழுச்சி கொண்டது. காந்தி நடத்திய போராட்டங்களிலேயே மிகப்பெரியது அதுதான்.

 

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி மிகமிக அஞ்சியது பொதுமக்களின் அதிருப்தியையே. ஏன் என்றால் மிகச்சிறுபான்மையினரான வெள்ளையர் இந்நாட்டை இங்குள்ள மக்களின் ஆதரவாலேயே ஆண்டிருந்தார்கள். ஆகவே பிரிட்டிஷ் அரசு இறங்கிவந்தது. 1931ல் காந்தி-இர்வின் ஒப்பந்தம் உருவாகியது. அதைத்தொடர்ந்த பேச்சுவார்த்தைக்காக 1932ல் லண்டனில் நடக்கும் வட்டமேஜை மாநாட்டில் காந்தி  அழைக்கப்பட்டார்.

 

*

 

இந்த வரலாற்றுப் பரிணாமச் சந்தர்ப்பத்தில்தான் இரட்டை வாக்குரிமை பிரச்சினை உருவாகி வருகிறது என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். காந்தி தலித் பிரச்சினையை எந்த வரலாற்றுத்தருணத்தில் வைத்துப் பார்த்தார் என்று உணர இந்த வரலாற்று நோக்கு அவசியம். இதுவரை சொல்லிவந்த பரிணாமகதியின் முக்கியமான கூறுகளை இவ்வகையில் தொகுத்துச் சொல்கிறேன்.

 

 

1. இந்திய தேசிய காங்கிரஸ் காந்திக்கு முன்னர் மிதவாதிகளின் கையில் இருந்தது. அவர்கள் பிரிட்டிஷாரிடம் சில உரிமைகளை கோரி பெற எண்ணியவர்கள் மட்டுமே. இந்தியாவுக்கு முழு விடுதலை கோரிய தீவிரவாதிகள் அவர்களை எதிர்த்தார்கள். இம்மோதலால் கிட்டத்தட்ட செயலிழந்து கிடந்தது காங்கிரஸ்

 

2 காந்தி காங்கிரஸின் இவ்விரு தரப்புகளையும் ஆக்கபூர்வமாக இணைத்தவர். தீவிரவாதிகளின் சுயராஜ்ய கனவை அவர் மிதவாதிகளின் வழியில் அடைய முயன்றார். காங்கிரஸை சட்டென்று செயலூக்கம் கொண்டவராக ஆக்கினார்

 

3. ஒன்றுடன் ஒன்று முரண்படும் பல கூறுகள் கொண்ட இந்திய தேசியத்தின் எல்லா கூறுகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக காங்கிரஸ்  இருக்கவேண்டும் என எண்ணினார் காந்தி. எல்லா உட்கூறுகளையும் தக்கவைத்துக்கொள்ளவும் அவை ஒன்றுடன் ஒன்று உரையாடச்செய்யவும் முயன்றார்

 

4. அதேசமயம் தன்னுடைய தார்மீகமான செல்வாக்கினால் அவற்றின் மோதலை கட்டுக்குள் வைத்திருந்தார். காங்கிரஸை தன்னுடைய இலட்சியம் நோக்கி கொண்டுசென்றார்.

 

5. காந்தி உண்ணாவிரதம் என்ற போராட்ட முறையை எப்போதும் பிளவுகளைத் தவிர்க்கவும், அவர் தவிர்க்கமுடியாதென்றும் உயர்வானதென்றும் கருதிய விழுமியங்களை பிறர் ஏற்கச் செய்யவுமே பயன்படுத்தினார்

 

6. இந்திய சுதந்திரப்போராட்டத்தை காந்தி தான் கொஞ்சம் கொஞ்சமாக சோதனை செய்து புரிந்துகொண்ட புதிய வழியான அகிசைப்போராட்டம் வழியாக நடத்தினார். முதலில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக மக்களைத் திரட்டினார். ஆனால் ஒருபோதும் அப்போராட்டத்தில் பிரிட்டிஷ் ராணுவம் நுழையும்படி நிகழலாகாது என எண்ணினார். ஆகவே வன்முறை உருவாவதை தடுக்க கவனமாக இருந்தார்

 

7. காந்தி உள்ளே வந்ததுமே இந்திய சுதந்திரப்போராட்டம் மக்கள் பங்களிப்புள்ள பெரும் இயக்கமாக மாறியது. பெரும் தொண்டர்படை சேர்க்கப்பட்டது.  1918ல் சுயராஜ்யக் கோரிக்கையை ஒரு கொள்கையாக மட்டும் முன்வைத்த காந்தி படிபப்டியாக அதை மக்கள் மனதிலே நிறுவுவதில் வெற்றி கண்டபின் 1930 ல் அதை ஒரு நடைமுறைபோராட்டமாக வளர்த்தெடுத்தார்.

 

8. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மிக வலிமையான போராட்டமாக ஒத்துழையாமை இயக்கமும் உப்புசத்யாகிரகமும் அமைந்தது. காங்கிரஸின் மக்கள் ஆதரவைக் கண்டு பிரிட்டிஷ் ஆட்சி அஞ்சியது

 

9. காங்கிரஸின் ஆரம்பகாலம் முதலே பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிஷ் அரசு வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தது. மிதவாதிகளில் பலரை அது தனக்காக பயன்படுத்தியது. பின்னர் மாகாண அரசு அமைக்கும் வாக்குறுதியை மூத்த தலைவர்களுக்கு அளித்து காங்கிரஸை பிளந்து சுயராஜ்ய கட்சி உருவாக வழியமைத்தது.

 

10. காந்தி மிக அதிகமாக அஞ்சியதும், எதிர்த்துப் போராடியதும் காங்கிரஸையும் இந்திய தேசியப்போராட்டத்தையும் பிளவுபடுத்தும் முயற்சிகளைத்தான். அதற்காகவே சுயராஜ்யகட்சிக்கு எதிராக 1924ல் அவர் மூன்று வாரம் உண்ணாவிரதம் இருந்தார். கிட்டத்தட்ட ஐந்துவருடம் நடைமுறை அரசியலை விட்டே ஒதுங்கி சமரச முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த சமரசம் நிகழ்ந்தபின்னரே மீண்டும் அரசியலுக்கு வந்தார்.

 

 

ஆக ,காந்தி உத்தேசித்த போராட்ட வடிவம் இது. பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவின் சிவில் சமூகத்தின் ஆதரவின் அடிப்படையிலேயே ஆட்சியில் இருந்தது. இந்திய மக்க¨ளுக்கு வரலாறு வழங்கியுள்ள பேதங்களை கரைத்து அவர்களை ஒரே சிவில் சமூகமாக ஆக்கி பிரிட்டிஷ் ஆட்சிக்கு அவர்கள் வழங்கிய அனுமதியை ரத்துசெய்வதும், அதை பிரிட்டிஷ் ராணுவத்தை பங்கெடுக்க வைக்காமல் செய்து முடிப்பதும் காந்தியின் திட்டம்.

 

ஆகவே கட்சிக்குள் வந்ததுமே காந்தி சுயராஜ்ய கோரிக்கையை ஏற்றாலும் அதை மக்கள் பரவலாக ஏற்கும் வரை பல்வேறு போராட்டங்கள் வழியாக அதை பிரச்சாரம் செய்தார். சத்யாகிரகம் போன்ற வழிமுறைகளை சோதனைசெய்து திருத்திக் கொண்டார். தொண்டர்படையை அமைத்தார். மாபெரும் சிவில் போராட்டங்களை அதன்பின்னரே உருவாக்கினார்.

 

அந்தப்போராட்டங்கள் விளைச்சலைத் தரும் காலகட்டத்தில் இந்திய சமூகத்தின் பேதங்களை முன்னிறுத்தி அவரது இயக்கத்தை உடைக்க முயன்றது ஆங்கில அரசு. அந்த முயற்சிகளை காந்தி தன் உயிரையே பணயமாக வைத்து எதிர்த்தார். இந்திய சமூகத்தின் சாதி,மத, இன பேதங்களை தவிர்ப்பதில் பெருமளவு அவர் வென்றார், மதப்பிரிவினை பேரழிவை உருவாக்கியதை மட்டும் அவரால் தவிர்க்கமுடியவில்லை. தன் வாழ்நாள் தோல்வியாக அதைக் கருதிய காந்தி மனமுடைந்த நிலையில் மரணம் அடைந்தார்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

3 வரலாறு வகுத்த மறுதரப்பு

 

அம்பேத்காரையும் காந்தியையும் குறித்த விவாதங்கள் எல்லாமே அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை ஒட்டியே இருப்பதென்பது கடந்த ஐம்பதாண்டுக்காலமாக உருவாக்கப்பட்ட அரசியல் சொல்லாடலின் விளைவே.  அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒப்புமையும் உறவும் இங்கே கவனிக்கப்பட்டதில்லை. காந்தியை சரிவரக் கவனிக்காதது போலவே அம்பேத்காரையும் சரியாக கவனிக்காமல் குத்துமதிப்பாகவே இந்த வாதகதிகள் முடையப்பட்டன

 

 

வரலாற்று எதிரியைக் கட்டமைத்தல்

 

வரலாறுகள் எல்லாமே முக்கால்நூற்றாண்டைத்தாண்டிவிட்ட இன்று அதற்குப்பின்ற பிறந்த தலைமுறையினரே பெரும்பாலும் வழும் சூழலில் படித்த தலித் மக்களில் கணிசமானவர்கள் காந்தியை தங்களுக்கு எதிரான ஒரு சக்தியாக எண்ணுகிறார்கள். காந்தி அவர்களை ஒடுக்கிய பாரம்பரியம் மற்றும் ஆதிக்க சக்திகளின் பிரதிநிதியாகவே பார்க்கப்படுகிறார்

 

இந்த வகையான கோணத்தை முதலில் இடதுசாரிகள் தொடங்கி வைத்தார்கள். காங்கிரஸின் வலிமையான ஆதரவுப்புலமாக இருந்த தலித் மக்களை தங்கள் குடைக்கீழ் கொண்டுவர அவர்கள் விரும்பினார்கள். ஒடுக்கப்பட்ட மக்களாகிய அவர்கள் இயல்பாகப்பார்த்தால் தங்களுடன் அல்லவா இருக்கவேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள்.

 

அதற்கு தடையாக இருப்பது தேசம் முழுக்க தலித்துக்களில் கணிசமானவர்களுக்கு காந்திமீதிருந்துவரும் மதிப்பே என உணர்ந்தார்கள். ஆகவே தொடர்ச்சியாக காந்தி மீதான வெறுப்பை அம்பேத்காரின் சொற்கள் வழியாக உருவாக்க முயன்றார்கள். இன்று அம்பேத்காரியர்கள் சொல்லும் பெரும்பாலான வரிகள் வங்க இடதுசாரி அரசியல் எழுத்தாளர்களால் உருவாக்கபப்ட்டவை.

 

சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவில் உருவான தேர்தல் அமைப்பில் போட்டியிட்ட எல்லா பிற கட்சிகளுக்கும் முதல் எதிரியாக சர்வ வல்லமையுடன் விளங்கியது காங்கிரஸ். காங்கிரஸின் வல்லமை என்பது அது காந்தியின் கட்சி என்ற படிமம். ஆகவே காந்தியை மக்களிடம் எதிர்மறையாகக் காட்டுவது எல்லா கட்சிகளுக்கும் தேவையாக இருந்தது. எல்லா பிராந்தியக் கட்சிகளும் அதைச் செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளும், வடநாட்டில் இந்துத்துவ கட்சிகளும், கேரளத்தில் இடதுசாரிகளும், பஞ்சாபில் அகாலிகளும்.

 

வடநாட்டில் தலித் இயக்கம் உருவாகி வந்தபோது காந்தியை கடுமையான எதிர்மறைக் கண்ணோட்டத்துடன் அணுகும் போக்கு மேலும் வலிமை பெற்றது. அதற்கேற்ப காந்தி காங்கிரஸின் சின்னமாக மட்டுமல்லாமல் இந்திய அரசின் சின்னமாகவும் மாறிவிட்டிருந்தார். இந்தியாவின் மைய ஆட்சியின், அதிலிருந்த ஆதிக்கத்தின் சுரண்டலின் ஊழலின் படிமமாக அவரை ஐம்பதாண்டுக்கால காங்கிரஸ் மாற்றியது.

 

அத்துடன் இன்னொரு முக்கியமான விஷயமும் உண்டு. கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் சாதி, மத, இன, பிராந்தியப் பிரிவுகளை மட்டுமே பிரதிநிதிகரிக்கும் சின்னஞ்சிறு தலைவர்கள் அனைவருமே பூதாகரமான பிம்பத்துடன் வளர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். காந்தியையோ நேருவையோ அக்கக்காக கிழிக்கும் அறிவுஜீவிகள் சாடையாகக்கூட அவர்களைப்பற்றி பேசமுடியாத நிலை உருவாகியிருக்கிறது.

 

அவர்கள் வளர்க்கப்பட்டபோது காந்தி கீழே இறக்கப்பட்டார். காரணம் அவர்களில் பெரும்பாலானவர்களின் பிம்பம் காந்திக்கு எதிராகவே  உருவாக்கப்பட்டு வந்திருக்கிறது. காந்தி இந்தியசமூகத்தை ஒருங்கிணைத்த ஆளுமை என்றால் இவர்கள் அதை பிளவுபடுத்த முயன்ற ஆளுமைகள். காந்தி இந்திய விடுதலைக்காக போராடினார். இவர்கள் அந்த விடுதலையின் லாபங்களில் தங்கள் தரப்புக்கான பங்கைபெறுவதற்காக முண்டியடித்தார்கள்.

 

இவர்களில் பலர் சுதந்திரப்போராட்டத்தின்போது தங்கள் லாபத்துக்காகவும் தங்கள் வகுப்புகளின் லாபத்துக்காகவும் பிரிட்டிஷாருடன் துணை நின்றவர்கள். காங்கிரஸ் மீதான ஒடுக்குமுறைகளுக்கு ஆதரவளித்தவர்கள். ஆனால் காங்கிரஸின் போராட்டத்தால் சுதந்திரம் கிடைத்தபோது அதன் அதிகாரத்துக்கு முண்டியடித்தார்கள். அரசியல்கட்சிகளாக உருமாறி தேர்தலுக்குள் புகுந்தார்கள். தங்கள் பிராந்திய,வகுப்பு நலன்களை முன்னிறுத்தி பிளவுப்போக்கை முன்னெடுத்து அதிகாரத்தை நோக்கி நகர்ந்தார்கள்.

 

இந்த மனிதர்களை தலைவர்களாக ஆக்கவேண்டுமென்றால் இவர்களை நியாயத்துக்காக போராடியவர்களாக ஆக்க வேண்டியிருக்கிறது. அதற்காக காந்தியையும் காங்கிரஸையும் இவர்கள் முன்வைத்த வகுப்பு, பிராந்திய, சாதி நலன்களுக்கு எதிரான சக்தியாக சித்தரித்தார்கள். தங்களுக்கு காந்தி துரோகம் செய்துவிட்டதாக கூவினார்கள். அதற்கு எதிராக போராடியவர்களாக தங்கள் தலைவர்களை வருணித்தார்கள் இந்தியா முழுக்க இப்படித்தான் காந்திக்கு எதிரான பேச்சுகள் ஆரம்பமாயின.

 

அகாலிகளும் திராவிட இயக்கத்தவருமே அந்தப்போக்கை தொடங்கி வைத்தவர்கள் . இவர்களின் அரசியல் பேச்சுகள் அனைத்துமே காந்தியையும் நேருவையும் கரிபூசுவதில் இருந்தே தொடங்குவதைக் காணலாம். காந்தியையும் நேருவையும் பெரும் அரசியல் சதிகாரர்கள் என்று ஒத்துக்கொண்டால் ஒழிய நம்மால் இவர்களை சாதனையாளர்கள் என்றோ அரசியல் போராளிகள் என்றோ சொல்ல முடியாது.

 

ஆச்சரியம் என்னவென்றால் இந்தியா முழுக்க உள்ள எல்லா வகுப்புவாத, சாதியவாத, பிராந்தியவாத குழுக்களும் காந்தியின் பாரபட்சம் மற்றும் துரோகம் பற்றியே பேசுகின்றன என்பதே. இந்தியாவில் உள்ள அத்தனை பிரிவினருக்கும், வடக்கு- தெற்கு, முற்போக்கு- பிற்போக்கு, இந்து- முஸ்லீம் அனைவருக்கும், ஒரேசமயம் துரோகம்செய்ய ஒரு தனிமனிதரான காந்தியால் எப்படி முடிந்தது என்று என்றாவது தலைமுறைகள் வியக்கக்கூடும்!

  

 

இதற்கப்பால் சென்று காந்தியை காண்பதற்கான கல்வித்திறனும், ஆய்வுத்திறனும் நம் ஆய்வாளர்களிடமும் பெரும்பாலும் இருக்கவில்லை. ஒருபக்கம் ஆதிக்க எதிர்ப்பு என்ற பேரில் காந்தி கடுமையாக நிராகரிக்கப்பட்டார். மறுபக்கம் அவரை புனிதராகவும் தேசியத்தின் அடையாளமாகவும் மட்டுமே முன்னிறுத்தும் சம்பிரதாய காந்தியம் பேசப்பட்டது. அவரை ஒரு அரசியல்சிந்தனையாளராகவும், தத்துவவாதியாகவும் முன்வைக்க ஆளிருக்கவில்லை. இந்த நிலை அரைநூற்றாண்டுக்காலம் நீடித்த சூழலில் இருந்தே நமது பேச்சுகள் எல்லாமே நடந்துகொண்டிருக்கின்றன.

 

 

 

காந்தி மறுவாசிப்பு

 

 

கடந்த இருபதாண்டுக்காலமாக காந்தியைப்பற்றி அமெரிக்க ஐரோப்பிய எழுத்தாளர்கள், பின்நவீனத்துவ சிந்தனையாளர்கள் எழுதிய முக்கியமான பல நூல்கள் வரிசையாக வெளிவந்து நம்மில் சிலரை மட்டும் ஆக்கபூர்வமாக சிந்திக்க வைத்தன. இவை எதுவுமே காந்தியை வெறுமே புகழக்கூடிய நூல்கள் அல்ல. அவரை விரிவான தகவல்களின் அடிப்படையில் புறவயமாக விவாதிக்கக்கூடியவை மட்டுமே.

 

இன்றைய காந்திய விவாதங்களில் மேற்கோள் காட்டப்படும் சில முக்கியமான நூல்கள் உள்ளன. தாமஸ் வெபர், ரொனால்ட் டெஜெக், டேவிட் ஹார்டிமான், பார்ட் க்ருசால்ஸ்கி,  கிளாட் மார்கொவிட்ஸ், ஜீன் ஷார்ப், டென்னிஸ் டால்ட்டன், அந்தோனி பாரெல்,மார்ட்டின் கிரீன் போன்ற குறைந்தது ஐம்பது ஆசிரியர்களை நாம் இன்று பட்டியலிட முடியும்.

 

என்னுடைய எல்லா கட்டுரைகளிலும் மார்ட்டின் கிரீனின் கருத்தியல் பங்களிப்பு இருப்பதை வாசகர்கள் கண்டுகொள்ளலாம். நான் அவரை அடிக்கடி மேற்கோள்காட்டுவதில்லை, ஆனால் அவரது ஆய்வுமுறை எனக்கு மிகவும் நெருக்கமானது. குறிப்பாக ‘காந்தி புதிய கால புரட்சியி குரல்’ [Gandhi: Voice Of A New Age Revolution ] என்ற முக்கியமான நூல். காந்திய இலட்சியவாதம் எப்படி தல்ஸ்தோயில் இருந்து முளைக்கிறது என விரிவாக ஆராய்கிறார் கிரீன். ராஜ்மோகன் காந்தியின் காந்தி குறித்த நூலாகிய ‘காந்தி , மனிதர், அவரது மக்கள், சாம்ராஜ்யம்’ என்ற நூல் பெரிதும் மார்ட்டின் க்ரீனால் பாதிக்கப்பட்டது [Gandhi: the man, his people, and the empire, Rajmohan Gandhi]

 

ராமச்சந்திர குகா, அஷிஷ் நந்தி, டி.ஆர்,நாகராஜ் போன்ற இந்திய சிந்தனையாளர்களின் ஆய்வுகள் மேலைநாட்டு ஆய்வாளர்கள் கடும் உழைபபல் திரட்டிய தகவல்களின் மேல் நிகழ்த்தப்பட்ட மேலதிக ஆய்வுகளாகவே அமைந்தன என்றாலும் அவை முக்கியமானவை. பொதுவாக இந்திய ஆய்வாளர்களில் மிகமிகச்சிலரின் ஆய்வுகள் தவிர எவையுமே உண்மையான கள ஆய்வையோ விரிவான ஆவணவாசிப்பையோ நிகழ்த்தவில்லை என்பதே உண்மை.

 

இன்று நாம் அக்கால வரலாற்றை வீரநாயகர்கள், எதிர்நாயகர்கள், துரோகங்கள் போன்ற உருவகங்கள் இல்லாமல் அரசியல் செயல்பாடுகள் மூலம் விழித்தெழும் ஒரு தேசத்தின் முரணியக்க வரலாறாக அணுக இந்நூல்களே நமக்கு உதவிசெய்கின்றன. பல்வேறு அதிகாரவிசைகள், பல்வேறு சமூக அமைப்புகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி முந்தியும் பிந்தியும் நவீன வெளிக்கு வருவதன் அரசியல் அது. இன்றைய ஆய்வாளனுக்கு அங்கே தெரிவது சமூக ஓட்டங்களின் சாத்தியக்கூறுகளின் ஆட்டம் மட்டுமே. அதில் ஒவ்வொரு மனிதரும் வகித்த பாத்திரம் என்ன என்று மட்டுமே அவன் ஆராய்வான்.

 

                                                                          அஷிஸ் நந்தி

 

காந்தியைப்பற்றிய அஷிஷ் நந்தியின் மிகப்பொருத்தமான ஒரு வரையறையைச் சொல்லி பேச ஆரம்பிப்பது நல்லது. நான்கு காந்திகள் இருக்கிறார்கள் என்கிறார் அஷிஸ் நந்தி. 1. இந்தியதேசியத்தின் அடையாளமாகி நிற்கும் காந்தி 2. மரபான காந்தியவாதிகளின் காந்தி 3. சூழலியர்கள் மற்றும் இயற்கைவாதிகளின் காந்தி 4. காந்தியவழிமுறைகள் வழியாக சென்று நாம் காணும் காந்தி.

 

முதல் காந்தி உயிரற்ற வெற்று பிம்பம் என்கிறார் அஷிஷ் நந்தி. இரண்டாவது காந்தி சில நன்மைகளை அளிப்பவர். நல்லவர். ஆனால் ஓய்வுபெற்றவர்,சலிப்பூட்டுபவர். சமூக இயக்கத்துக்குச் சம்பந்தமில்லாமல் ஆசிரமங்களில் ஒடுங்கியவர். மூன்றாவது காந்தி உலகமெங்கும் பேசப்படுபவர். போராளி. ஆனால் மிகமிக ஆகிருதி குறைக்கப்பட்ட ஒரு காந்தி அவர்.

 

நான்காவது காந்தி காந்தியம் என்று இன்றைய பின்நவீனத்துவ உலகம் அடையாளம் காணக்கூடிய ஒரு கொள்கையில் இருந்து நாம் கண்டடையும் காந்தி. அவரே மார்ட்டின் லூதர் கிங்கின், நெல்சன் மண்டேலாவின், ஆங் சான் சூகியின், பராக் ஒபாமாவின் காந்தி. அவர்களுக்கு காந்தி இந்திய சுதந்திரப்போராட்டத்தில் யார் என்று தெரியாது. அவர் பனியாவாக இருந்தாலும் பார்ப்பனராக இருந்தாலும் அவர்களுக்கு ஒன்றுமில்லை. அவர்கள் முன் இருப்பது காந்தியம் என்ற போராட்டமுறை. அதன் தரிசனம். அது காந்தியை விட மிகப்பெரியது என்கிறார் அஷிஷ் நந்தி. காந்தி இறந்தாலும் அது வாழும்.

 

போலந்தில் ருஷ்யக் கொடுங்கோன்மைக்கு எதிராக லே வலேசா கிளர்ந்தெழுந்த போது ‘வலேசா எங்கள் காந்தி’ என்று தொழிலாளார்கள் கூவினார்கள் என்கிறார் அஷிஷ் நந்தி. சுருட்டுபிடிக்கிற ஸ்காட்ச் அருந்துகிற காந்தி! பெனிட்டோ அகிவினோ பிலிப்பைன்ஸில் கொல்லபப்ட்டபோது அவரது ஆதரவாளார்கள் சாலைகளில் நின்று கதறினார்கள் ‘பெனிட்டோ எங்கள் காந்தி!’ என்று ! ஆங் சான் சூகி சமரசமில்லாத காதியவாதியாக குற்றம்சாட்டப்பட்டபோது அவர் காந்தியை வாசித்திருக்கவேயில்லை. ஆனால் அவரிடம் இருந்தது காந்தியம் என்கிறார் அஷிஷ் நந்தி. 

 

ஏனென்றால் இங்கே காந்தி ஒரு மனிதரல்ல. அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள்  ஒரு பொருட்டே அல்ல.  அந்த நான்காவது காந்தியைத்தான் இன்றைய நவீன சிந்தனையாளர்கள் அவரது பல்லாயிரம் பக்கங்களில் இருந்து எழுதி எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் சுயநல அரசியலின் முட்டிமோதல்களில், சேறுபூசல்களில் காந்தி இன்று நம் கண்ணுக்குத்தெரியாதவராக இருக்கலாம். ஆனால் இன்று அவர் உலக நாகரீகத்தின் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்று. அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிராக எதுவுமே இல்லாத எளிய மக்கள் எங்கெல்லாம் போராட இறங்குகிறார்களோ அங்கெல்லாம் காந்தி முளைத்து வருகிறார்.

 

சர்வாதிகாரிகள் காந்தியை குறைத்து மதிப்பிடுகிறார்கள் ஏனென்றால் அவரிடம் ஆயுதமில்லை. புரட்சியாளர்கள் கிண்டல்செய்கிறார்கள். ஏனெறால் அவர் அகிம்சையைப் பற்றிப் பேசுகிறார். ஆனால் அந்த குறைத்து மதிப்பிடலுக்கு எப்போதுமே அவர்கள் அதிக விலைகொடுக்க நேர்கிறது” என்று அஷிஷ் நந்தி சொல்கிறார் காந்தியை தேர்வு செய்யாமலிருப்பதே லௌகீகமான புத்திசாலித்தனம். அவர் அபாயகரமானவர்!” [Gandhi after Gandhi : Ashis Nandy] இந்த விவாதத்தில் முன்வைக்கப்படும் காந்தி அந்த நான்காவது காந்தி. காந்தியம் வழியாக ஒருவர் சென்றடையக்கூடிய காந்தி.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

 

 

நாவற்றவர்களின் குரல்

 

 

 

இந்த விவாதத்தில் உருவாகி வரக்கூடிய அடிப்படையான ஒரு சிக்கலை முதலிலேயே பேசிவிடவேண்டும். இந்தியச் சுதந்திரத்தின் கனிகளை துய்க்க பாய்ந்து விழுந்து பூசலிட்ட,இட்டுவரும்  பல்வேறு வகுப்புவாத, இனவாத, பிராந்தியவாத பிரிவினைச் சக்திகள் காந்திக்கு எதிராக தங்களை நிறுத்திக்கொள்ளும்போது எளிதாக அம்பேத்காரையும் தங்களைப்போன்ற ஒருவராகச் சேர்த்துக்கொள்கின்றன. அம்பேத்காரை எதிர்மறையாகக் காட்டவிரும்பும் சக்திகளுக்கும் அந்த தோற்றம் மிக வசதியானது. ஆனால் அம்பேத்காரை அவ்வாறு அவர்கள் வரிசையில் நிறுத்துவது போல அவருக்கு செய்யும் அநீதி ஒன்றில்லை.

 

அம்பேத்கார் அவர்களில் ஒருவரல்ல. அவரது ஆளுமையும் சிந்தனைவீச்சும் அவர்களால் எண்ணிப்பார்க்கக்கூட முடியாத ஒன்று.  இந்திய மரபின் மாபெரும் தத்துவவாதிகளில் ஒருவர் அவர். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இன்றுவரையிலும் நீடிக்கும் அதன் ஜனநாயக அடிப்படைக்கும் அவரது பங்களிப்பு மகத்தானது. இன்றைய இந்தியாவின் அத்தனை வகுப்புகளுக்கும் இனங்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு தேசியக் கட்டுமானத்தை உருவாக்க உழைத்த முன்னோடி அவர்

 

இந்திய அரசியலில் அம்பேத்காரின் போராட்டம் சமூக அரசியல் லாபங்களுக்கான போர் அல்ல. மாறாக அடிப்படை உரிமைகளுக்கான சமர். வாழும் உரிமைக்கான போர் அது.  அவருக்கும் பிறருக்குமான அந்த வேறுபாடு எப்போதும் நீடிக்கிறது. நூற்றாண்டுகளாக உரிமை மறுக்கப்பட்ட மக்களின் தலைவராக வரலாற்றின் எந்த ஒரு வாய்ப்பு வழியாக அவர் வந்திருந்தாலும் அதுவே சாத்தியமானது என்றே சொல்ல வேண்டும். தன் மக்களின் உரிமைகளுக்காக அவர் எந்த வகையில் போராடியிருந்தாலும் அதுவே வரலாறு அளித்த வழி என்றே பொருள்படும்

 

இந்தியாவில் பிற மக்கள் மேல் ஒரு வன்முறையை துவங்க எவருக்கேனும் நியாயம் இருந்தது என்றால் அது அம்பேத்காருக்கு மட்டுமே. இந்தியாவில் பிற சமூகம் மீது வெறுப்பைக் கக்கியிருந்தாலும் அதை நியாயப்படுத்தியிருக்க முடியும் என எவரையேனும் சொல்ல முடியும் என்றால் அது அம்பேத்காரையே. ஆனால் கடைசிக்கணம் வரை அகிம்சை வழியில் நம்பிக்கைகொண்ட தலைவராகவே அவர் இருந்தார். உறுதியான ஜனநாயகவாதியாகவே அவர் இருந்தார்.

 

ஆகவேதான் அவரது வகுப்புக்கோ அவர் பரிந்துபேசிய மக்களுக்கோ மட்டுமல்ல மானுட விழுமியங்கள்மேல் மதிப்பு கொண்ட எந்த ஒரு தனிமனிதனுக்கும் ஆதரிச புருஷராக இருக்க தகுதி கொண்டவர் அவர். 

 

அம்பேத்கார் இந்து சமூகத்தின் நூற்றாண்டுக்கால சாதிய ஒடுக்குமுறையின் அனைத்து இழிவுகளையும் அடைந்து வளர்ந்து வந்தவர். அதில் இருந்தே அவரது அனைத்துச் சிந்தனைகளும் ஆரம்பிக்கின்றன. அதேசமயம் அம்பேத்கார் அவர் இந்து சமூகத்திற்குள் எழுந்து வந்த சீர்திருத்த அலையின் சிருஷ்டியும்கூட! இன்றுவரை மொத்த தலித்துக்களும் உத்வேகத்துடன் உச்சரிக்கும் அம்பேத்கார் என்ற பெயர் அம்பேத்காரின் ஆசிரியரும் வழிகாட்டியுமான மகாதேவ் அம்பேத்கார் என்ற தேஸாஸ்த பிராமணரின் குலப்பெயராகும்.  குருவின் பேரில் இருந்து, அவரது வாரிசாக தன்னை நினைத்து, அம்பேத்கார் சூட்டிக்கொண்டது.

 

மகாதேவ் அம்பேத்கார் தியானேஸ்வரின் பக்திமரபில் வந்தவர். சாதி மத ஆசாரங்களுக்கு எதிரானவராக தன்னை அமைத்துக்கோண்டவர். அன்று மகாராஷ்டிராவில் உருவாகி வந்த மதச்சீர்திருத்த இயக்கங்களில் ஈடுபாடுள்ளவர். பீமராவ் அம்பேத்கரின் ஆரம்பகால கல்விக்கும் வளார்ச்சிக்கும் பேருதவி புரிந்திருக்கிறார். அதற்கான தன்னுடைய ஆசாரமான சாதியின் எதிர்ப்பையும் ஒதுக்குதலையும் சந்தித்திருக்கிறார்.

 

மேலும் அம்பேத்கார் மிகச்சிறந்த மாணவருக்கான கல்விக்கொடையை  பரோடாவின்  கெய்க்வாட் மன்னர் அவர்களிடம் இருந்து பெற்று தன் உயர்கல்வியை முடித்தார் என்பது. பரோடா அக்காலத்தில் மோசமான சாதிய ஒதுக்குமுறை கொண்ட பகுதியாகவே இருந்திருக்கும். ஆனால் அந்தக் கல்விக்கொடைக்கு அது தடையாக இருக்கவில்லை. அதாவது ஒருபக்கம் சாதிய ஒடுக்குமுறை இருந்தது. மறுபக்கம் அதற்கு எதிரான சீர்திருத்தக் கருத்துக்கள் உருவாகி வந்தன. அம்பேத்கார் இந்த இரு சக்திகளின் முரணியக்கத்தால் உருவாக்கப்பட்ட ஆளுமை!

 

அம்பேத்கார் இந்திய அரசியலுக்குள் நுழைந்த தருணம் கவனத்திற்குரியது. 1919ல் மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஒரு சட்டம் மூலம் முன்வைத்தது. இது இந்திய அரசுச் சட்டம் [The Government of India Act 1919] எனப்படுகிறது. இந்தியாவில் இரட்டை ஆட்சிமுறையை இது முன்வைத்தது. அதனபடி நேரடியான அதிகாரம் பிரிட்டிஷ் அரசின் கையில் இருக்கும். நிர்வாக அதிகாரம் உள்ள மாகாண அரசுகள் அமைக்கப்படும். அதில் இந்தியர்கள் தேர்தலில் போட்டியிட்டு கலந்துகொள்ள முடியும்.

 

இந்தச் சட்டம் ஏன் முன்வைக்கப்பட்டது என்பதும் முக்கியம். 1918 ல் காந்தியின் பெரும்புகழ்பெற்ற சம்பாரன் சத்யாகிரகப்போராட்டம் வெற்றிகரமாக முடிந்தது. காந்தி இந்தியாவெங்கும் அறியப்படலானார். தேசப்பிதா என்றும் மகாத்மா என்றும் அவரை இந்தியாவில் சொல்ல ஆரம்பித்தார்கள். காங்கிரஸ் மேற்கொண்ட முதல் மக்கள் போராட்டம் இதுவே. மேலும் மேலும் காங்கிரஸில் மக்கள் பங்கேற்பு அதிகரித்து ஒரு கட்டத்தில் அது ஒரு மாபெரும் மக்களியக்கமாக மாறியது. இந்த எழுச்சியே மாண்டேகு- செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களை உருவாக்குவதற்குக் காரணமாக அமைந்தது.

 

இன்று ‘மாற்றுவரலாறு’களை எழுதுபவர்கள் அக்காலத்தில் இந்தியவெங்கும் சிறு சிறு குழுக்களாக, எந்தவிதமான போராட்டத்தையும் நடத்தும் ஆர்வமோ வலிமையோ இல்லாதவர்களாக, இருந்த சிலரின் மனுக்களுக்குச் செவிசாய்த்துத்தான் மாபெரும் ஏகாதிபத்தியம் மக்களுக்கு உரிமைகளைக் கொடுக்கும் சீர்திருத்தங்களுடன் வந்தது என்று எழுதுகிறார்கள். போராட்டமில்லாமல் உரிமை இல்லை என்ற தங்கள் அடிப்படைப்பாடத்தை அப்போது வசதியாக மறந்துவிடுகிறார்கள். எந்த ஒரு உரிமையும் யார் போராடினார்களோ அவர்களுக்கே உரியதென்பதே வரலாற்றின் நியாயம். காங்கிரஸ் அன்றி எவருமே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எந்தப்போராட்டத்தையும் சிறிய அளவில்கூட செய்தவர்கள் அல்ல. பிரிட்டிஷார் அளித்த உரிமைகளைப் பங்குபோட மட்டுமே அவர்கள் வந்தார்கள் என்பதே வரலாறு.

 

காந்தி இந்தச் சீர்திருத்தங்களின் உள்நோக்கத்தை உடனே புரிந்துகொண்டார். பிரிட்டிஷாருக்கு காங்கிரஸை நன்றாகவே தெரியும். அரச பதவிகளுக்காக பிரிட்டிஷார்முன் கைகட்டி நின்றவர்களால் ஆனதே அதன் பெரும்பகுதி. சிறிய சலுகைகளைக் கொடுத்து கால் நூற்றாண்டுக்காலம் மிதவாதிகளை கட்டுக்குள் வைத்திருந்த அனுபவம் வெள்ளையருக்கு உண்டு. அந்த மூத்த மிதவாதிகளின் தலைமுறை காங்கிரஸ¤க்குள் வலுவாகவே இருந்தது. முதன்மையாக அவர்களுக்காக அளிக்கப்பட்ட தூண்டில்தான்  மாகாண அரசுகள். மற்றும் காங்கிரஸ¤க்கு எதிராக பிரிட்டிஷாருக்கு ஆதரவாக இருந்த சக்திகளுக்கு அளிக்கப்பட்ட சலுகையும்கூட. 

 

ஓவ்வொருமுறை அத்தகைய ஆட்சி வாய்ப்பு முன்வைக்கப்படும்போதும் காங்கிரஸ் பிளந்திருக்கிறது. 1908ல் மிண்டோ மார்லி பரிந்துரை சுரேந்திரநாத் பானர்ஜியை காங்கிரஸை பிளக்கும்படிச் செய்தது. 1922 ல் மாண்டேகு-செம்ஸ்போர்டு திட்டம் மோதிலால்நேருவையும் சி.ஆர்.தாஸையும் சுயராஜ்யக் கட்சியை உருவாக்கச்செய்தது.

 

ஆகவேதான் காந்தியின் காங்கிரஸ் மாண்டேகு சேம்ஸ்போர்டு பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்தது. அந்த மண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரைகளை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட சவுத்பரோ கமிட்டி முன் வாக்குமூலம் அளிப்பதற்காக அன்று ஒரு மும்பையில் ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராக செயலாற்றிக்கொண்டிருந்த அம்பேத்கர் அழைக்கப்பட்டார். அதுவே அவரது அரசியல் நுழைவாகும். பெரும்பாலும் பிரிட்டிஷ் ஐ.ஸி.எஸ் அதிகாரிகளால் ஆன இக்கமிட்டி சவுத்பரோ கோமகனின் தலைமையில் அமைந்திருந்தது.

 

இந்தக் கமிட்டியின் நோக்கம் இந்தியாவின் உண்மையான அரசியல் சூழலை அறிவது என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் எந்த ஒரு சரியான ராஜதந்திர அமைப்பும் செய்வதைப்போல காங்கிரஸ் என்ற தன் எதிரியின் வலிமையையும் பலவீனங்களையும் அறிவதுதான் அதன் உண்மையான நோக்கம்.

 

மேலும் காங்கிரஸ் இந்தியாவின் ஒட்டுமொத்த பிரதிநிதிகள் அல்ல, வேறு பலரும் இருக்கிறார்கள் என்று காட்ட அதன்வழியாக பிரிட்டிஷார் முயன்றார்கள். இப்போது அஸ்ஸாம் அல்லது இலங்கைப் போராளிகளுடன் பேசும்போது  இந்தியாவும் இதையே செய்கிறது என நாம் அறிவோம். இது எப்போதுமே அரசுகள் செய்யும் ஒரு வெற்றிகரமான ராஜதந்திரம். எந்தப்போராட்ட அமைப்பையும் உடனடியாக உள்மோதல்களுக்கு இட்டுச்செல்லும் இது.

 

அந்தக்கமிட்டியின் முழு விவரங்களையும் நாம் இப்போது பார்க்கலாம். இந்தியாவில் காங்கிரஸ் உருவாகி அரைநூற்றாண்டாகிவிட்டிருந்தது. படிப்படியாக இந்திய சமூகத்தை காங்கிரஸ் திரட்டி ஓர் அமைப்பாக ஆக்கியது. அதன் ஆகபெரிய மக்கள் இயக்கம் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டிருந்தது. அந்தப் போராட்டத்தின் அழுத்த்தம் காரணமாகவே அக்கமிட்டி உருவாகிறது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அந்த வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாமல் 1908ல் காங்கிரஸால் முழுக்க நிராகரிக்கப்பட்ட மிண்டோ-மார்லி  சீர்திருத்தங்களை தாழ்த்தப்பட்டோரையும்  இன்னும் பத்துக்கும் மேற்பட்ட ‘சிறுபான்மையின’ரையும் சேர்த்துக்கோண்டு விரிவாக்கம்செய்து இந்திய சமூகத்தை ‘ஆய்வு’ செய்ய ஆரம்பித்தது.

 

இந்திய சமூகத்தை பலவகையான வகுப்புகளின் ஒட்டுமொத்தத் தொகையாக அக்கமிட்டி வரையறை செய்தது. இந்த வகுப்புகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியவை என்று அது தீர்மானித்துக்கொண்டது. அத்தனை வகுப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் ‘பிரதிநிதிகள்’ யாரென தாங்களே தீர்மானித்து அவர்களை அழைத்து, அவர்கள் அனைவரின் தரப்புகளையும் கேட்டு பதிவுசெய்துகொண்டது. இருநூறு வருடம் பிரிட்டிஷார் இந்தியாவின் பேதங்களை ஆழமாக கவனித்திருக்கிறார்கள், அனைத்து ஞானமும் அப்போது உதவிக்கு வந்தது.

 

மிகவும் பாரதூரமான விளைவுகளை உருவாக்கும் ஒரு திட்டம் இது என்பதை எவரும் உணரலாம். மொத்த இந்திய சமூகமே ஒன்றுடன் ஒன்று போரிடும் குழுக்களாக உருவகிக்கப்பட்டுவிட்டது. அந்தக் குழுக்கள் முன்னால் அவர்கள் முட்டிமோதி பிய்த்துப்பிராண்டி சண்டை போடும் பொருட்டு தூண்டிலில் இரட்டை ஆட்சிமுறையும், மாகாண அரசுகளும் எடுத்து வைக்கப்பட்டன. இந்தியாவின் யதார்த்தம் தெரிந்த ஒருவருக்கு என்ன நடக்கும் என்பதை சொல்லியா கொடுக்கவேண்டும்?

 

இன்று பலரும் எண்ணுவதுபோல பிரிட்டிஷ் அரசு தலித்துக்களையும் முஸ்லீம்களையும் அழைத்து அவர்களின் தரப்பைக் கேட்கவில்லை. மாறாக அன்று எந்த குழுக்கள் எல்லாம் காங்கிரஸின் மீது அதிருப்தி கொள்ள வாய்ப்புள்ளனவோ அவர்களையெல்லாம் அழைத்து கருத்து கேட்டார்கள். அவர்களில் அன்றைய பழைமைவாத பிராமணர்களும் பெருவணிகர்களுமே அதிகம். ஒவ்வொருவருமே தங்கள் வகுப்புக்குத்  தனிச்சலுகைதான் கேட்டார்கள்.

 

அவர்களின் பெயர்களை இன்று பார்க்கும்போது மூவர் மட்டுமே உண்மையான அரசியல் கொண்டவர்களாக பிற்காலத்தில் ஆனார்கள் என்பதை காணமுடிகிறது. அம்பேத்கார், ஜின்னா இருவரைத்தவிர மில் தொழிற்சங்கத் தலைவரான வாடியா. இவ்வாறு பிரிட்டிஷார் உருவாக்கிய ஒரு பெரும் ராஜதந்திரத்தின் பகுதியாக அரசியலுக்குள் நுழைந்தவர் அம்பேத்கார். அவர் பங்குபெற்ற அந்த சவுத்பரோ கமிட்டி முன் ஆஜரானவர்களின் பெயர்களை இன்று பார்த்தால் அப்பட்டியலில் அம்பேத்காரைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. பதுக்கல்வணிகம் செய்த பணமுதலைகள், அதிகாரத் தரகர்கள், கவர்னர்களுடன் குடிக்க அமரும் ராவ்பகதூர்கள், குத்தைகைதாரர்கள்….

 

இவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஆதரவாளராக, பிளவுபடுத்தும் கருவியாக, அரசியலில் நுழைந்த அம்பேத்கார் அவ்வாறே காங்கிரஸாலும் காந்தியாலும் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டார், அது மிக இயல்பானதே.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இங்கே அருண் ஷ¥ரி போன்றவர்கள் செய்யும் தந்திரம் என்னவென்றால் அதுவே அம்பேத்கார் என்று காட்ட அந்த ஆவணங்களை பயன்படுத்துவதே. அதாவது காந்தியை சாதியவாதி என்று முத்திரைகுத்த அவரது ஆரம்பகால பேச்சுக்களை மேற்கோளாக்கும் தலித்தியர்கள் செய்யும் அதே உத்தி. அம்பேத்காரின் அரசியல் மிகத்தீவிரமாக பல்வேறு படிகள் வழியாக பரிணாமம் அடைந்த ஒன்று.

 

 

அதிகாரத்தின் பேரமேஜையில்…

 

 

காங்கிரஸில் ஒரு பெரும் பிளவை உருவாக்க பிரிட்டிஷார் எடுத்த முயற்சி பலிக்கவில்லை. சுயராஜ்யக் கட்சிக்கு எங்குமே ஆதரவு கிடைக்கவில்லை. காந்தியின் ஒருமைப்படுத்தும் வல்லமை எப்படிப்பட்டது என்று பிரிட்டிஷார் உணர்ந்தார்கள். 1921ல் காங்கிரஸ் காந்தியின் தலைமையில் முழுச்சுதந்திரமே [ஸ்வராஜ்]  தன் இலக்கு என்று அறிவித்தது. அன்னியத்துணி புறக்கணிப்புப்போராட்டம் ஆரம்பித்தது.

 

காந்தி அவருக்கும் காங்கிரஸ¤க்கும் கிடைத்த மக்களாதரவின் பலத்தால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பெரிய போராட்டங்களை உருவாக்கினார். ஒத்துழையாமைப் போராட்டம். அதன்பின் 1930ல் அவரது மிகப்பெரிய போராட்டமான உப்பு சத்தியாக்கிரகம். உச்சபட்ச மக்கள் கலந்துகொண்ட போராட்டம் இது– இந்தியவரலாற்றில் அதன் பின்னரும் கூட அத்தகையதோர் ஒட்டுமொத்த தேசியப்போராட்டம் நிகழ்ந்ததில்லை.

 

கைதுகள் அடக்குமுறைகளுக்குப் பின்னர் தொடர்ச்சியான மக்கள்போராட்டங்களின் விளைவாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இறங்கிவந்தனர். சமரச நோக்குடன் முதல் வட்டமேஜைமநாடு 1930ல் நடந்தது.  1931 மார்ச் மாதம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் நடந்து போராட்டம் நிறுத்திக்கொள்ளப்பட்டு காந்தி பேச்சுவார்த்தைக்கு வந்தார்.   

 

இக்காலகட்டத்தில் அம்பேத்கார் என்ன செய்துகொண்டிருந்தார்? 1919ல் அவர் சவுத்பரோ கமிட்டிமுன் பேச அழைக்கப்பட்டதுமே அவரது பெயர் பரவ ஆரம்பித்தது. 1920ல் அம்பேத்கார் ஊமைகளின் தலைவர் [மூகநாயக்] என்ற இதழை ஆரம்பித்து தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினையைப் பற்றி பேச ஆரம்பித்தார். மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளைப்பேசும் அறிவுஜீவியாக அறியப்பட்டார்.புறக்கணிக்கப்பட்டோர் கருத்துருவாக்க சபை [பகிஷ்கிருத ஹிதகாரிணி சபா] என்ற அமைப்பை உருவாக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வியை பிரச்சாரம் செய்தார். இந்தச்சபை தாழ்த்தப்பட்டவர்களுக்கான எல்லா கமிட்டி முன்னும் அறிக்கைகளை அளித்திருக்கிறது.

 

இக்காலகட்டத்தில் அம்பேத்கார் எழுதிய எழுத்துக்களில் காங்கிரஸ் எதிர்ப்பும், பிரிட்டிஷ் ஆதரவும் ஓங்கி ஒலிக்கின்றன. காங்கிரஸை சாதி இந்துக்களின் அமைப்பு என்று முத்திரை குத்தும் அம்பேத்கார் அது இந்தியாவின் பிரதிநிதி அல்ல என்று வாதிடுகிறார். பிரிட்டிஷார் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க முடியும் என்று கோருகிறார்.

 

காந்திக்கும் அம்பேத்காருக்கும் நடுவே நேரடியாகவும் மறைமுகமாகவும் விவாதங்கள் நிகழ்ந்தன. அம்பேத்காரை காந்தி இந்தியப்போராட்டத்தைப் பிளவுபடுத்த பிரிட்டிஷார் முன்னால் நிறுத்தும் பல்வேறு பொம்மைமனிதர்களில் ஒருவராகவே ஆரம்பத்தில் கருதினார்.  ஏற்றத்தாழ்வற்ற ஒரு சாதியமைப்பும், தொழில்சார்ந்த வருண அமைப்பும், தான் கனவுகாணும் கிராமசுயராஜ்யத்தை உருவாக்க இன்றியமையாதவை என எண்ணம் கொண்டிருந்தார்.

 

காந்தியை கடுமையாக விமரிசித்தாலும் அம்பேத்கார் காந்தியை நோக்கி ஆழமாக ஈர்க்கப்பட்டமைக்கு ஆகச்சிறந்த உதாரணம் 1927ல் அவர் நடத்திய முதல் மக்கள்போராட்டமான மகத் குடிநீர் சத்யாக்கிரகம். பிரிட்டனில் கல்விகற்று ஐரோப்பிய நாகரீகம் மீது நம்பிக்கை கொண்டிருந்த அறிவுஜீவியான அம்பேத்கார் நடைமுறையில் மக்கள் போராட்டத்தை நடத்த காந்தி காட்டிய சத்யாக்கிரகமே மிகச்சிறந்த போராட்டவழிமுறை என உணர்ந்தார்.

 

1928 ல் சைமன் கமிஷனுக்கு உதவிசெய்ய பம்பாய் ராஜதானி கமிட்டி [Bombay Presidency Committee] அமைக்கப்பட்டது.பம்பாய் மாகாணசபையின் உறுப்பினராக இருந்த அம்பேத்கார் அந்த கமிட்டியில் ஆலோசனைசொல்ல அழைக்கப்பட்டார். பரிஷ்கிருத ஹிதகாரிணி சபாவின் சார்பில் அம்பேத்கர் முன்வைத்த கோரிக்கைகளில் பிரிட்டிஷ் ஆதிக்கம் மீதான விசுவாசமும் அவர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு நன்மை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் தொனித்தாலும் ஆழத்தில் அவர்களின் நோக்கங்கள் மீது அவர் ஐயப்பட்டதையும் காணலாம்.

 

1931ல் உப்புசத்யாகிரகப் போராட்டத்தின் விளைவாக காந்தி – இர்வின் ஒப்பந்தம்  உருவாகி அதன் வாக்குறுதியின்படி இரண்டாவது வட்டமேஜை மாநாடு லண்டனில் கூட்டப்பட்டது. கோடிக்கணக்கான இந்திய மக்கள் சாதி சமய பேதமில்லாமல் பங்குகொண்ட ஒரு மாபெரும் போராட்டம் சமரசமாகி அப்போராட்டத்தின் தலைவனிடம் பேச்சுவார்த்தை நடத்தும்பொருட்டு கூட்டப்பட்ட மாநாடு அது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

அந்த மாநாட்டில் அம்பேத்கார் பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்டார். அவர் அங்கே இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக முன்னிறுத்தப்பட்டார். இந்திய தாழ்த்தப்பட்டோரின் ஒரே பிரதிநிதியாக அங்கே நிற்க அப்போது அம்பேத்கார் அம்மக்களால் எவ்வகையிலும் தேர்வு செய்யப்படவில்லை — அவர் அதற்கு முழுக்க முழுக்க தகுதிகொண்டவர் என்பது வேறு விஷயம். அந்த மாநாட்டில் அம்பேத்கார் காந்தியை மிகக் கடுமையாக நேரடியாக எதிர்த்துப்பேசினார். பேச்சின் பல இடங்கள் ராஜதந்திர உரையாடலின் எல்லைகளை மீறின. காந்தி அங்கே அப்போது ஒரு தனி மனிதனாக சென்றிருக்கவில்லை. கோடிக்கணக்கான மக்களின் ஒரே பிரதிநிதியாகச் சென்றிருந்தார்

 

சொல்லப்போனால் அந்த மாநாட்டை தகர்க்க அம்பேத்காரை பிரிட்டிஷார் பயன்படுத்திக்கொண்டார்கள்.  அம்மாநாட்டில்  பிரிட்டிஷார் எல்லா வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பது என்ற பேரில் இந்தியாவின் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகளை அழைத்து அவர்களில் ஒருவராக காந்தியையும் அமரச்செய்து பேச முற்பட்டார்கள். காந்தி தவிர அங்கே வந்த அத்தனைபேருமே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தவர்கள், அவர்களால் அழைத்துவரப்பட்டவர்கள்.  அம்பேத்கார் அம்மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரினார்.  அதேபோல அங்கே வந்த ஒவ்வொரு பிரதிநிதியும் சிறப்பு வாக்குரிமை கோரினார்கள்!

 

ஏற்கனவே முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இரட்டை வாக்குரிமை இருந்தது என்பதையும் அது உருவாக்கிய  எதிர்மறை விளைவுகளை காந்தி கண்டுகொண்டிருந்தார்  என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அம்பேத்காரின் கோரிக்கையின் நியாயம் என்னவாக இருந்தாலும் சரி, அந்த மாநாட்டில் காந்தியை அவமானப்படுத்தி வெளியேற்ற பிரிட்டிஷ் ராஜதந்திரம் மேற்கொண்ட உத்தியையே அவர் நிறைவேற்றினார்.

 

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் காந்தி முன்வைத்த எந்தக் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை. ‘வெறும் கையுடன் திரும்புகிறேன்’ என்று காந்தி காங்கிரசுக்குச் சொன்னார். ஆனால் அம்பேத்கார் கோரிய வகுப்புவாரி இரட்டை வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டது.  அதாவது, யார் மக்கள் பங்கேற்புள்ள போராட்டத்தை நடத்தி பேச்சுவார்த்தைக்கு வந்தார்களோ அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பிரிட்டிஷார் அவர்களே அழைத்ததனால் வந்து பங்கேற்ற ஒருவரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.

அவ்வாறு காங்கிரஸை முழுக்கவே புறக்கணித்து , காங்கிரஸின் போராட்டங்களை பிளவுபடுத்தும் நோக்குடன் முன்வைக்கப்பட்டதே இரட்டை வாக்குரிமை. அதை காந்தி அவரது முழுச் சக்தியுடன் எதிர்த்ததை எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் காந்தி அச்சந்தர்ப்பத்தில்கூட அம்பேத்காரை குறைசொல்லவில்லை. அவரது நோக்கங்களை ஐயப்பட்டு ஏதும் சொல்லவில்லை. அந்த ஏற்பாட்டை தான் ஏற்கமுடியாது என்றார். அதற்கான தன் தரப்பு விளக்கங்களை முன்வைத்தார்.

 

இர்வின் பிரபுவுக்குப் பின்னர் வந்த வெலிங்டன் பிரபு கடுமையான அடக்கு முறைகளைக் கொண்டுவந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறைமூலம் ஒடுக்கப்பட்டார்கள். அந்த வன்முறைச்சூழலில் உறுதியாக பிரிட்டிஷ் ஆட்சியை, அதன் அடக்குமுறையை, அம்பேத்கார் அங்கீகரித்தார். 1932ல் ஒருபக்கம் காங்கிரஸ்மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டுக்கொண்டு மறுபக்கம்  அம்பேத்காரின் கோரிக்கையை ஏற்று இரட்டை வாக்குரிமைக்கான அங்கீகாரத்தை ஆங்கில அரசு முறைப்படி வழங்கியது.  

 

ஆகவே கைதுசெய்யப்பட்டு எரவாடா சிறையில் இருந்த காந்தி சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். அது அவர் எப்போதெல்லாம் தன்னால் வழிநடத்தப்படும் அமைப்பு கட்டுமீறுகிறதோ, எப்போதெல்லாம் தான் உறுதியாக நம்பும்  ஒரு விஷயத்தை திட்டவட்டமாக நிலைநாட்ட விரும்புகிறாரோ அப்போதெல்லாம் கடைப்பிடிக்கும் வழிமுறை.

 

காந்தியின் உண்ணாவிரதத்தின் அரசியல் தளத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.  அவரது உண்ணாவிரதம் மிரட்டலோ இரக்கம் சம்பாதிக்கும் உத்தியோ ஒன்றும் அல்ல. அந்த வழிமுறைகளை காந்தி பிரிட்டிஷாருடனான  அவரது போராட்டங்கள் எதிலும் கடைப்பிடித்தது இல்லை. உண்மையில் காந்தி அதன் வழியாக மறைமுகமாக உணர்த்தியது ஒன்றையே, ‘நான் ஜனநாயகத்தை மதிப்பவன், மாற்றுக் கருத்துக்களை வரவேற்பவன், அனைவரையும் அணைத்துச்செல்ல விரும்பும் சமரசவாதி. ஆனால் உண்மையில் நானே இங்கே மக்கள் ஆதரவுள்ள ஒரே தலைவன். நான் அவர்களின் குரல். அதை நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது’

 

உண்ணாவிரதங்கள் காந்திக்கு இருந்த எல்லையற்ற மக்கள் ஆதரவை திட்டவட்டமாக அடிக்கோடிட்டுக் காட்டின. தேசியத்தேர்தல்களோ அல்லது பிற ஜனநாயக வழிகளோ இல்லாத காலம். அன்று இந்திய மக்களின் குரலாக அவர்களின் பிரதிநிதியாக தன்னை முன்வைக்க காந்தி அவ்வழியை பின்பற்றினார். கோடானுகோடி இந்திய சாமானியர்களின் கருத்து தன்னைச்சார்ந்தே இருக்கிறது என்று ஐயம் திரிபற அவர் பிறருக்கு அந்த உண்ணாவிரதங்கள் மூலம் காட்டுவார். அதன் பின் எவருக்குமே அந்தக் கருத்தை புறக்கணிக்க இயலாது. இதுதான் அவரது உண்ணாவிரதத்தின் ஆற்றல்.

 

அவ்வாறுதான் அம்பேத்கார் இறங்கிவந்தார். அன்று அம்பேத்கார் ஒரு மக்கள்தலைவரே அல்ல. ஏன், இந்திய தலித்துக்களின் ஒட்டுமொத்தத் தலைவர்கூட அல்ல. அரசியலியக்கமாக அம்பேத்காரின் அமைப்பு என்றுமே குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை, மகாராஷ்டிரத்துக்கும் மகர் சாதிக்கும் வெளியே அது நீளவே முடியவில்லை என்பது வரலாற்று உண்மை. அப்போது அது இன்னும் ஆரம்பநிலையிலேயே இருந்தது. ஆகவே தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட்ட இந்தியாவின் கோடானுகோடி மக்களின் குரலை, அதாவது காந்தியின் குரலை, அவர் பொருட்படுத்தியே ஆகவேண்டும். வேறுவழியில்லை. அதுவே நடந்தது.

 

இன்று இரு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. ஒன்று, காந்தி இறந்தால் தலித்துக்கள்மேல் வன்முறை வெடிக்கும் என்ற பயத்தால் அம்பேத்கார் இறங்கிவந்தார் என்று. காந்தி நடத்திய காங்கிரஸ் இயக்கம், அவருக்குப் பின்னால் ஜனநாயகவாதியான நேருவின் தலைமையில் அப்படி ஒரு வன்முறையை நிகழ்த்தும் என்பதெல்லாம் அன்றே ஒரு மிகைக் கற்பனை. அம்பேத்கர் காந்தியின் மீதுள்ள அடிப்படை மரியாதையால் இறங்கி வந்தார் என்பது அடுத்த விளக்கம்.

 

பிற்பாடு கசப்புடன் இந்த ஒப்பந்தம் குறித்து அம்பேத்கார் சொல்லியிருந்தாலும்கூட காந்தி மீது உள்ளார்ந்த மதிப்புள்ளவராகவே அவர் இருந்தார் என்பது உண்மையே. அம்பேத்காரை முன்னிறுத்தி இன்று எழுதுபவர்களில் பலர் காந்தி அம்பேத்காரை அவமானப்படுத்தினார் என்றும் அம்பேத்காருக்கு காந்திமே மனகக்சப்பு மட்டுமே இருந்தது என்றும் எழுதுகிறார்கள். பூனா ஒப்பந்தம் குறித்த உரையாடலக்ள் பதிவாகி வெலியாகியிருக்கின்றன. அவற்றில் காந்திமீதான தன் மதிப்பை மீண்டும் மீண்டும் சொல்கிறார் அம்பேத்கார். அதை வெறும் பசப்பு அல்லது தந்திரம் என்று நான் நினைக்கவில்லை.

 

பூனா ஒப்பந்தம் காங்கிரஸின் பழைமைவாதிகளும் பிற தலித் செயல்வீரர்களும் இணைந்து அம்பேத்காரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விளைவாக எட்டப்பட்ட ஒன்று. 1932 செப்டெம்பர் 24 அன்று உருவான இந்த ஒப்பந்தம் இன்றும் பல கோணங்களில் விவாதிக்கப்படுகிறது. இன்று இதைப்பற்றிய மிகமிக விரிவான ஆராய்ச்சிகள், அதே அளவுக்குத் திரிபுகள் வாசிக்கக் கிடைக்கின்றன.

 

அன்றைய சூழலை வைத்துப் பார்த்தால் பூனா ஒப்பந்தத்தை எப்படி விளக்கலாம்? காந்தியின் காங்கிரஸே உண்மையான மக்கள் பிரதிநிதித்துவம் கொண்ட பெரும்பான்மை அமைப்பு. அம்பேத்கார் மிகச்சிறுபான்மையை பிரதிநிதித்துவம் செய்தவர். அவர் பெரும்பான்மையின் எண்ணத்தை ஏற்றுக்கொண்டது தவிர்க்கமுடியாதது. அவரது தரப்புக்கும் பெரும்பான்மையின் தரப்புக்கும் நடுவே உள்ள ஒரு சமரசப்புள்ளிதான் பூனா ஒப்பந்தம். அம்பேத்காரின் தரப்பின் தீவிரம் மற்றும் தார்மீகம் காரணமாக நடைமுறையில் அது பெருமளவுக்கு அம்பேத்காருக்குச் சாதகமாக நிகழ்ந்தது.

 

அம்பேத்கார் காந்திக்கு இணையான மறுதரப்பாக வரலாறு கொண்டு வந்து அமரச்செய்த சக்தி. காந்தியைப்போலவே உறுதியான அகிம்சைவாதி, முழுமையான ஜனநாயகவாதி. இருவரும் ஒரு முரணியக்கத்தின் இரு விசைகள். ஒருவரை ஒருவர் மறுத்து, ஒருவரில் இருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, ஒருவர் செய்யத்தவறியதை இன்னொருவர் செய்து, ஒருவரை ஒருவர் நிரப்பிய வரலாற்றுப்போக்குகள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 காந்தியும் தலித் அரசியலும் 4

 

4. அதிகாரப்பகிர்வின் பின்னணி

  

பூனா ஒப்பந்தத்தைப்பற்றி இன்று பேசப்படும் பக்கம் பக்கமான பேச்சுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றின் வாதங்களை ஒவ்வொன்றாக மறுப்பதென்பது மணலை எண்ணி கணக்கிடுவதைப்போன்ற வீண்வேலை. பல ஆய்வுகள் ஏராளமான தரவுகள் கொண்டவை. ஆனால் அவற்றின் நோக்கம் முன்னரே வகுக்கப்பட்டிருக்கிறது. காந்தி அல்லது அம்பேத்காரின் உத்தேசங்களை  தங்கள் தேவைக்கு ஏற்ப முன்னரே தீர்மானித்துவிட்டு தரவுகளை அதன் அடிப்படையில் தொகுத்து வைத்து விளக்கம் அளிக்கும் முயற்சிகள் அவை.

 

தமிழில் எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகமிகச் சிலவே ஏதேனும் ஒரு வகையில் ஒரு தரமான வாசகன் பொருட்படுத்தக்கூடியவை. ஒரு வரலாற்று நிகழ்வுக்கு நியாயம் செய்யவேண்டும் என்பதற்கு மேலாக அதை ஒட்டி தன்னை எப்படி காட்டிக்கொள்வது என்றோ, அல்லதுந்தான் சார்ந்துள்ள தரப்பை எப்படி முன்வைப்பது என்றோ மட்டும்தான் இவை கவனம் கொள்கின்றன. பெரும்பாலான வாதங்கள் கசப்பு மண்டிய முன் தீர்மானங்களில் இருந்து எழுபவை. அதற்கேற்ப அனைத்துமே அவற்றில் திரிபு கொள்கின்றன

  

முன்தீர்மானங்களின் பட்டியல்

  

பூனா ஒப்பந்தம் குறித்து பொதுவாக நமக்குக் கிடைக்கும் விவாதங்களில் காந்தியை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் அடிப்படையான குற்றச்சாட்டுகளை கீழ்க்கண்டவாறு தொகுத்துச் சொல்லல்லாம்.

 

 

1. பூனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகிய அம்பேத்காருக்கும் உயர்சாதியினரின் பிரதிநிதியாகிய காந்திக்கும் இடையே நடைபெற்றது.

 

2. பூனா ஒப்பந்தம்மூலம் காந்தி தலித்துக்களுக்கான ஜனநாயக உரிமைகளை முற்றாக நிராகரிக்கச்செய்தார்.

 

3 காந்தி தலித்துக்களுக்காக எதையுமே செய்தவரல்ல. பூனா ஒப்பந்தத்துக்கு பிறகு எழுந்த அதிருப்தியை சமாளிக்கவே அவர் ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார்.

 

4 இரட்டை வாக்குரிமைக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த காந்தி தீண்டாமைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கவில்லை. அவர் காங்கிரஸில் இருந்த உயர்சாதியினரின் ஆதரவாளர்.

 

 

இந்தக் கருத்துக்களை ஒவ்வொன்றாகவே ஆராயலாம்.

 

 

காந்தியும் அம்பேத்காரும் யாருடைய பிரதிநிதிகள்?

 

 

பூனா ஒப்பந்தம் நடக்கும் நாட்களில் அம்பேத்கார் இந்திய அரசியலில் தலித்துக்களின் ஒரே பிரதிநிதியாக இருக்கவில்லை. சொல்லப்போனால் தன் வாழ்நாளில் எப்போதுமே அம்பேத்கார் ஓர் அரசியல் சக்தியாக ஆகவில்லை. அவரது மகர் சாதிக்கு வெளியே அவரது ஆதரவுப்புலம் விரியவில்லை. தலித்துக்களை தன் குடைக்கீழ் நிறுத்த அவர் மேற்கொண்ட எந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

 

அம்பேத்கார் பிரிட்டிஷாரால் அரசியலுக்குக் கொண்டுவரப்பட்டவர். அவர்களால் முன்னிறுத்தப்பட்டவர். சவுத்பரோ கமிட்டியிலும் சரி ,பின்னர் சைமன் கமிஷனுக்கான ஆலோசனைக்கமிட்டியிலும் சரி, இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டிலும் சரி ,பிரிட்டிஷார்தான் அவரை பங்கெடுக்க வைத்தார்கள்.

 

அம்பேத்காரைப் பற்றிய குற்றச்சாட்டு அவர் என்றுமே அரசியலில் ஓர் மக்கள்தலைவராக இருக்கவில்லை என்பதே. இந்தியாவெங்கும் உள்ள தாழ்த்தப்பட்டவர்களைச் சென்று சந்திக்கக்கூட அவர் செல்லவில்லை. அவர் எப்போதுமே அரசியல் சதிகள், பேரங்களில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தார். பிரிட்டிஷ் அரசுடன் பேரம்பேசி அவர்கள் அளிக்கும் அதிகாரங்களைக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களை மேம்படுத்தலாம் என்று எண்ணினார். அம்மக்களின் வாழ்க்கை, என்ண ஓட்டங்கள், பலவீனங்கள் ,சிக்கல்கள் எதுவுமே அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

 

அவர் மட்டுமல்ல, அன்று தாழ்த்தப்பட்ட மக்களின் அதிகாரத்துக்காகப் பேசிய எவருமே அந்த மக்களில் ஒருவராக வாழ்ந்தவர்கள் அல்ல. அவர்களுடன் நேரடி உறவு வைத்திருந்தவர்களும் அல்ல. பிரிட்டிஷார் நியமனம் மூலம் தங்களுக்கு தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக இடம் அளிக்கவேண்டும் என்று வாதிட்டவர் எம்.சி.ராஜா. அவ்வளவே அவர்களின் கோரிக்கை.

 

ஒரு சமூகத்தில் இருந்து கல்வி மற்றும் செல்வம் மூலம் அதிகாரத்துடன் பேரம்பேசும் தகுதிக்கு வருபவர்களே அச்சமூகத்திற்காக பேச முடியும் என்பதே அக்குற்றச்சாட்டுக்குச் சொல்லவேண்டிய பதில். அம்பேத்காரும் எம்.சி.ராஜாவும் அப்படி வந்தவர்கள். அவர்கள் தங்கள் சமூகத்துக்கான குரலை எழுப்பியது இயல்பானதே.

 

ஆனால் அவர்களின் போராட்டங்கள் முழுக்கமுழுக்க காங்கிரசுக்கு எதிரானவையாகவே இருந்தன. முழுக்க முழுக்க பிரிட்டிஷாருக்கு ஆதரவான சக்திகளாக அவர்கள் இருந்தனர். ஆகவே ஆட்டத்தில் காங்கிரசுக்கு எதிரான துருப்புசீட்டுகளாகவே அவர்கள் எப்போதும் பயனபடுத்தப்பட்டார்கள்.

   

மாறாக காந்தி ஏற்கனவே இந்திய அரசியலில் ஒரு பெரும் சக்தியாக இருந்தார். அவரது ஆதரவுத்தளம் இந்தியாவின் சிறுபான்மையினரான உயர்சாதியினரால் ஆனது என்று அவர் நடத்திய ஒத்துழையாமை இயக்கம், உப்புசத்யாக்ரகம் போன்ற பிரம்மாண்டமான மக்களியக்கங்களை கவனிக்கும் எவருமே சொல்லிவிட முடியாது.

 

காந்தியின் அந்தக்கால மக்களியக்கத்தில் தலித்துக்களின் பங்களிப்பு கணிசமான அளவுக்கு இருந்தது. வெளிப்படையாக முன்வைக்கவில்லையே ஒழிய தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளியல் சமூகவியல் சூழலை மேம்படுத்தும் பணிகளை காங்கிரஸ் முன்னெடுத்து ஓர் விழிப்பை உருவாக்கியிருந்தது. கதரியக்கம், கள்ளுக்கடை மறியல் போன்றவற்றின் பாதிப்பு தாழ்த்தப்பட்டவர்களின் சமூகங்களில் அதிகம் இருந்தன. ஆகவே அம்பேத்கார் அளவுக்கே காந்தியும் அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராகவே இருந்தார்.

 

முக்கியமாக பூனா ஒப்பந்தம் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையே நடைபெற்ற ஒன்று அல்ல. அம்பேத்காருக்கும் காங்கிரஸ¤க்கும்  இடையே நடைபெற்றது. தனித்தொகுதி முறையால் சீண்டப்பட்ட காங்கிரஸின் இதர சாதியினருக்கும் அம்பேத்காருக்கும் இடையே நடைபெற்றது என்றே சொல்லவேண்டும். மனக்கசப்புகள் மோதல்களாக மாறாமல் இருக்க இரு தரப்பினர் நடுவே ஒரு புரிந்துணர்வுக்காகவே காந்தி தன் அழுத்தத்தை அளித்தார்.

பூனா ஒப்பந்தம் உரிமை நிராகரிப்பா?

 

 

பூனா ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை இப்போது படிக்கும்போது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அன்றைய சூழலில் அளிக்கப்பட்ட ஆகப்பெரிய வாய்ப்பு அது என்றே படுகிறது. அந்த ஒப்பந்தத்தை அவ்வாறு தங்களுக்குச் சாதகமாக அமைப்பதில் அம்பேத்கார், எம்.சி.ராஜா, ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோர் வெற்றிபெற்றார்கள். அவர்கள் ஒன்றும் முட்டாள்களாகவோ ஏமாளிகளாகவோ இருக்கவில்லை.

 

பூனா ஒப்பந்தம் தாழ்த்தப்பட்டவர்களின் ‘ஜனநாயக’ உரிமைகளை பறித்தது என்று சிலர் இன்று சொல்வதைப்போல அப்பட்டமான பொய் ஏதும் இல்லை. சொல்லப்போனால் அது ஜனநாயகத்தை கொஞ்சம் அழுத்திச் சொன்னது. தலித் மக்களும் இந்திய சமூகத்தின் உறுப்பினரே என்றும் அவர்களுக்குச் சம உரிமை உண்டு என்றும் சொன்னது. அத்துடன் வரலாறெங்கும் ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் ஆதலால் அவர்களுக்கு தனியாக தங்கள் வேட்பாளர்களை தேர்வுசெய்து தங்கள் குரலை ஒலிக்கச்செய்யவும் போராடவும் உரிமை உண்டு என்றது

 

இதுதான் வேறுபாடு. மண்டேகு செம்ஸ்போர்டு சிபாரிசின்படி பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்ட் முன்வைத்த திட்டப்படி நாடெங்கும் தாழ்த்தப்பட்டோர் பொதுத்தேர்தல்முறைக்குச் சம்பந்தமில்லாமல் தனியாகவே ஓட்டளித்து தங்கள் பிரதிநிதிகளை தேர்வுசெய்வார்கள். பொதுத்தேர்தலில் இன்னொரு ஓட்டை அளித்து பொதுவேட்பாளர்களையும் தேர்வுசெய்வார்கள்

 

பூனா ஒப்பந்தத்தின்படி அவர்களும் பிற மக்களைப்போல பொதுவாக்கெடுப்பில் வாக்களிப்பார்கள். அந்தப் பொதுத்தேர்தல் முறைக்குள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியாக தொகுதிகள் ஒதுக்கப்படும். அதில் தாழ்த்தப்பட்டோர் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களை தாங்களே கூடி தனியாகத் தேர்வுசெய்து நிறுத்துவார்கள். அந்த நான்குபேரில் ஒருவரை அந்த தொகுதி மக்கள் தேர்வுசெய்வார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டோரின் தனிப்பிரதிநிதிகளாக செயல்படுவார்கள்.

 

அதாவது இந்திய சிவில் சமூகத்துக்குள் ஒதுக்கப்பட்ட ஒரு தனிச்சமூகமாக தாழ்த்தப்பட்டோர் நிறுத்தப்படுவதை மட்டுமே பூனா ஒப்பந்தம் தடைசெய்தது. அதேசமயம் பொதுதேர்தலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி உரிமையை அது அங்கீகரித்தது. இந்தியாவெங்கும் மொத்தம் 148 இடங்களை அது தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கி வைத்தது.

  

இன்று இதிலுள்ள முக்கியமான ‘சதி’ என்று எது சொல்லப்படுகிறதென்றால் இங்கே தலித்துக்களின் பிரதிநிதியாக தலித்துக்கள் நிறுத்தும் ஒருவரை பிற இந்துக்களும் சேர்ந்து வாக்களித்து தேர்வுசெய்யவேண்டியிருக்கிறது, ஆகவே சாதி இந்துக்களுக்கும் பிடித்தமான ஒருவரை தான் தலித்துக்கள் தலைவராக அடைய முடியும் என்பதே. ஆனால் இது அபத்தமான ஒரு வாதம். அந்த நான்கு வேட்பாளர்களையும் முழுக்கமுழுக்க தாழ்த்தப்பட்டோர்தான் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் நான்குபேருமே சாதி இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றால் அவர்களில் ஒருவரை சாதி இந்துக்கள் வாக்களித்து தேர்வுசெய்தே ஆகவேண்டும்.

 

அபப்டியானால் இந்த ஒப்பந்தம் ஏன் இதை முன்வைக்கவேண்டும்? ஒரே காரணம்தான். தாழ்த்தப்பட்டோரால் தேர்வுசெய்யப்பட்டாலும் ஒரு தாழ்த்தப்பட்ட வேட்பாளர் பொது வாக்காளர்களை எதிர்கொண்டாக வேண்டும். அதாவது வெறும் பிரிவினைவாதம் மற்றும் கசப்பு மூலம் அவர் வெல்ல முடியாது. இதன் மிகச்சிறந்த அம்சம் என்னவென்றால் இதன்மூலம் சாதி இந்துக்கள் உட்பட்ட ஒரு தொகுதியில் அவர்கள் அனைவருக்குமே பிரதிநிதியாக தாழ்த்தப்பட்டோர் ஒருவர் வருகிறார் என்பதே.

 

சாதி இந்துக்கள் தங்களுடைய பிரதிநிதியாக ஒரு தலித்தை தெரிவுசெய்வது அவர்களுக்கு ஒரு சவால் என்றால் அந்த தலித்தைப் பொறுத்தவரை தன் சாதி அரசியலில் இருந்து பொது அரசியலுக்குள் வர வேண்டியது அவருக்குச் சவால். இதன் மூலம் இரு சாராரும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது. ஒருபோது இரு தரப்பாகப் பிரிந்து கசப்புகொள்ள முடியாமலாகிறது. காந்தி உத்தேசித்தது இதுவே.   

 

பூனா ஒப்பந்தம்தான் முதல்முறையாக இந்திய பொது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியிர்மை அளித்த நிகழ்வு. இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளாக இருந்து அவர்களை மேம்படுத்தும் எல்லா சலுகைகளுக்கும் அதுவே தொடக்கம். அது தாழ்த்தப்பட்டோர் அல்லாத சமூகங்களால் ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்டது. அமைதியாக பேச்சுவார்த்தைகள் மூலம் அளிக்கப்பட்டது அது. 

 

இத்தனை சலுகைகளை தலித்துக்கள் எப்படிப் பெற்றார்கள் என்பதை நாம் இங்கே கவனிக்கவேண்டும். அவர்கள் அப்போதுகூட ஓர் அரசியல் சக்தியாக திரட்டப்படவில்லை. இதை அக்கால வரலாற்றை மேலோட்டமாகப் புரட்டும் எவரும் அறியலாம். தாழ்த்தப்பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக போராட்டத்தை நடத்தி தங்கள் கோரிக்கைகளை கவனித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்கிவிடவில்லை. வழக்கமாக ஜனநாயகப்போராட்டங்கள் உரிமைகளை பெறும் முறை அதுதான்.  

 

மாறாக, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியால் காங்கிரஸ¤க்கு எதிராக உள்ளே கொண்டுவரப்பட்ட தரப்பு அவர்கள். அவர்களுக்கு இருந்த ஒரே வல்லமை என்பது அவர்களால் பிரிட்டிஷ் தரப்புக்குப் போய்விடமுடியும் என்பதே. இந்திய சமூகத்தை மேலும் ஒருமாபெரும் பிளவுக்குக் கொண்டுசெல்ல அவர்களால் முடியும் என்பதே. அதை காந்தி உயிரைவிட அஞ்சினார் என்பதே அவர்களின் பலம். அதை வைத்தே அவர்கள் காந்தியிடம் பேரம் பேசினார்கள்.

 

வரலாற்றை ஓரளவு நடுநிலையுடன் பார்க்கும் எவருக்குமே உண்மையில் ‘மிரட்டல்’ விடுத்தது யார் என்பது புரியும். யெரவாடா ஒப்பந்தம் குறித்த பேரங்கள் அச்சில் கிடைக்கின்றன. அம்பேத்கார் காந்தியிடம் பேசும் பேச்சுக்களில் கறாரான ஓர் பேரம்பேசும் தொனியே உள்ளது. தங்களுக்கு இந்து சமூகம் இழைத்த அநீதிகளுக்காக அது பிராயச்சித்தம் செய்து சலுகைகளை அளித்தேயாகவேண்டும் என்கிறார் அம்பேத்கார். அதை காந்தி ஏற்றுக்கொள்கிறார். இந்தியப் பொதுச் சமூகத்தில் இருந்து பிரிந்து தனிச்சமூகமாகச் செயல்படும் இரட்டை வாக்குரிமை என்ற பிரிவினைக்கோரிக்கையை மட்டுமே காந்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்.

 

காந்தியிடம் அம்பேத்கார் வாதிடுகிறார் ”எனது சமூகத்துக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். நாங்கள் அது இல்லாமல் எழுச்சி கொள்ள முடியாது. எங்களுக்கு தேவையானவற்றை பெறாமல் வேறுவழியே இல்லை என்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையாக இருக்கவேண்டும். ஹிந்துக்களிடம் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றுதான், எங்களுக்கான இழப்பீடு தரப்பட்டே ஆகவேண்டும்”

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இழப்பீடு என்று அம்பேத்கார் சொல்வதை காந்தி முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்கிறார். அரசியல் அதிகாரம் தேவை என்று சொல்லப்படுவதையும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இரட்டை வாக்குரிமைதான் தேவை என்ற கோரிக்கையின் காரணத்தை அம்பேத்காரால் சொல்லமுடியவில்லை என்கிறார். தனித்தொகுதியையும் பிற சலுகைகளையும் ஏற்கிறார். இரட்டை வாக்குரிமை மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் பொதுச்சமூகத்திற்கு வெளியே தனியாகவே அரசியல் செயல்பாட்டில் ஈடுபட நேரும் என்றும் அது பிரிவினையையே உருவாக்கும் என்றும் சொல்கிறார்.

 

அனைத்துக்கும் மேலாக ஒன்றுண்டு. இரண்டுவருடங்களுக்கு முன்னர் 1929 ல் சைமன் கமிஷனுக்கு முன்பாக அம்பேத்கார் தலைமையில் பகிஷ்கிருத ஹிதகாரிணி சபா சபா அளித்த மனுவில் அம்பேத்காரே கோரியது பூனா ஒப்பந்தம் மூலம் அவர் என்ன அடைந்தாரோ அதே தனித்தொகுதிமுறையைத்தான். ” தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை பொதுத்தொகுதிகளில் பொதுவான தேர்தல் சாத்தியமல்ல என்பதே சபாவின் கருத்தாகும். ஆனால் வகுப்பு அடிப்படையிலான தேர்தல் தொகுதிகளை சபா விரும்பவில்லை. பொதுதொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் அதுவே போதுமானது என்பதே சபாவின் கருத்து” என்று அதில் அம்பேத்கார் சொல்கிறார்.

 

 1929 ல் அம்பேத்காரும் சரி எம்.சி.ராஜாவும் சரி கோரியது பூனா ஒப்பந்தத்தில் அவர்கள் பெற்ற தனித்தொகுதி ஒதுகீட்டையே. ஆனால் பின்னர் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் அளிக்கப்பட்டிருந்த தனி வாக்குரிமைக்கு நிகரான , அல்லது ஒரு படி மேலானஇரட்டை வாக்குரிமைக் கோரிக்கையாக அதை அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். அந்த மாற்றம் அவர்கள் இரண்டாம் வட்டமேஜைமாநாட்டில் 1931ல் நடந்தது.  அன்று அவர்களுடன் இரட்டை வாக்குரிமைக்காக மேலும் பல சிறுபான்மையினர் கோரிக்கை விடுத்தனர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை கொடுப்பதை முஸ்லீம் லீகும் தந்திரமாக ஆதரித்தது.

 

பூனா ஒப்பந்தம் மூலம் நடந்தது இவ்வளவுதான். திடீரென்று இரண்டாவது வட்டமேஜைமாநாட்டில் தாழ்த்தப்பட்டோர் முதலியோரால்  எழுப்பப்பட்டு பிரிட்டிஷாரால் அப்போதே வழங்கப்பட்ட இரட்டை வாக்குரிமை என்ற சலுகையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தாழ்த்தப்பட்டவர்களின் நெடுநாள் கோரிக்கையான தனித்தொகுதிமுறையை ஏற்றுக்கொண்டது.

 

 

 

 

 

காந்தி தாழ்த்தப்பட்டவர்களுக்காக என்ன செய்தார்?

 

 

 

பூனா ஒப்பந்தம் மூலம் தாழ்த்தப்பட்டவர்களை காந்தி தோற்கடித்து காங்கிரஸில் உள்ள சாதியவாதிகளை மகிழ்வித்தார் என்ற உச்சகட்ட பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் தனித்தொகுதி ஒதுக்கீடு மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த தனிச்சலுகை காங்கிரஸைக் கொந்தளிக்கச் செய்தது. காந்தி அதன் ஈடிணையற்ற தலைவராக இருந்த ஒரே காரணத்தால் மட்டுமே அன்று அந்தக் கோரிக்கைகளை காங்கிரஸ் வேறு வழியில்லாமல் ஏற்றது.

 

அன்றைய இந்திய சமூகத்தில் பெரும்பலான தாழ்த்தப்பட்டோர் அல்லாத சாதியினரின் நிலைமையும் தாழ்த்தப்பட்டோரின் அதே இழிநிலையிலேயே இருந்தது. உண்மையில் இந்தியச் சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சற்றுமேல் வாழும் சாதிகளின் வாழ்க்கை என்பது சிறு அடையாள மேன்மையை தவிர்த்தால் தாழ்த்தப்பட்டவர்களின் அதே வாழ்க்கைதான்.

 

ஆகவே தாழ்த்தப்பட்டவர்கள் பிரிட்டிஷ் ஆட்சி அளித்த வாய்ப்பை பயன்படுத்தி அடைந்த அந்த சலுகை அவர்களை கொந்தளிக்கச் செய்தது. இன்று , எழுபது வருடங்கள் கழித்து, தனித்தொகுதிமுறைக்கு எதிராக உருவாகிவந்துள்ள கோபங்களை வைத்து அன்றைய நிலையை எண்ணிப்பார்க்க சிந்திக்கும் திறனுள்ள எவராலும் இயலும்.

 

அன்று பிற்படுத்தப்பட்ட சாதிகள் பலவும் தங்களை தாழ்த்தபப்ட்ட சாதிகளாக அறிவிக்கவேண்டும் என்று கோரின. அதற்கு தாழ்த்தப்பட்ட சாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பூனா ஒப்பந்தத்துக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இருந்து உருவான எதிர்ப்பும் கசப்பும் காந்தியின் உறுதி ஒன்றினாலேயே தவிர்க்கப்பட்டது. அதை அம்பேத்காரே பதிவு செய்திருக்கிறார்.

 

தாழ்த்தப்பட்டவர்களின் தரப்புக்காக காந்தி வெளிப்படையாகவே ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்தார். அந்தப்பிரச்சாரம் என்பது பெரும்பாலும் காங்கிரஸிடம்தான் என்பதை எவரும் காணலாம். சாதியமைப்பு குறித்த தன் கருத்துக்களை காந்தி பெரிதும் மாற்றிக்கொண்டு அம்பேத்கரின் தரப்பை நோக்கி நகர ஆரம்பித்தார். அம்பேத்கருடன் தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபட்டார் அவர்.

 

பூனா ஒப்பந்தம் முடிந்த எட்டாவது மாதம் 1933ல், காந்தி அவரது வாழ்நாளில் செய்த நீண்ட உண்ணாவிரதங்களில் ஒன்றைச் செய்தார். ஏறத்தாழ மூன்றுவாரம் நீடித்து அவரது உயிரை விளிம்புவரைக் கொண்டுசென்ற அந்த உண்ணாவிரதம் இந்தியாவையே உலுக்கியது. அது எவருக்கு எதிராக? தாழ்த்தப்பட்ட மக்களின் விஷயத்தில் இந்து சமூகம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாகவும் தன்னை அதிலிருந்து தூய்மைப்படுத்திக்கொள்ளவும் அதைச் செய்ததாக அவர் அறிவித்தார். வரலாற்றை வாசிக்கத்தெரிந்தவர்களுக்கு அது காங்கிரஸில் இருந்த தனித்தொகுதி எதிர்ப்பாளர்களுக்கு அவரளித்த எதிர்ப்பே என்று எளிதில் புரியும்.

 

வழக்கம் போல உண்ணாவிரதம் மூலம் இந்தியசமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவை தனக்காகத் திரட்டி எதிர்ப்புகளை காந்தி முறியடித்தார். காங்கிரஸை தாழ்த்தப்பட்டோருக்கான சேவைசெய்யும் இயக்கமாக மாற்றவும் செய்தார். எத்தனையோ நூற்றாண்டுகளாக நீடிக்கும் சமூக அமைப்புக்கும் மனநிலைக்கும் எதிராக கோடிக்கணக்கான மக்களை திருப்புவதென்பது சாதாரண விஷயம் அல்ல. தனது அபரிமிதமான வசீகரம் மூலமே காந்தி அதைச் செய்தார்.

 

இந்திய வரலாற்றை கவனிப்பவர்களுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேல் நேரடியாக வந்து தொட்ட முதல் வெகுமக்களியக்கம் என்பது காந்தியின் ஹரிஜன இயக்கமே என்பது தெள்ளத்தெளிவாகவே தெரியும். அம்பேத்கார் முதலியவர்களின் அன்றையச் செயல்பாடென்பது மத்திய,மாகாண சபைகளில் அதிகாரத்தைப் பெறுதல் ,அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைகளை முன்வைத்தல் என்ற அளவிலேயே நின்றுவிட்டது. ஓர் அறிவுஜீவியான அம்பேத்கார் அவரது அனைத்து மேதமையுடனும் ஒரு மேல்மட்ட ‘கனவான் – தலைவ’ராகவே இருந்தார். வசீகரமான மக்கள்தலைவராக அல்ல. அவர் இந்தியா முழுக்க அறியப்பட்ட தலைவராக ஆனதே ஐம்பதுகளுக்குப் பின்னர்தான். ஐயமிருந்தால் உங்கள் ஊரில் முதல் அம்பேத்கார் சிலை எப்போது வைக்கப்பட்டதெனச் சென்று பாருங்கள்.

 

காந்தியின் ஹரிஜன இயக்கம் சிலமாதங்களிலேயே பிரம்மாண்டமான ஒரு தொண்டர்படையை ஹரிஜன சேவைகென கிராமங்களுக்கு அனுப்பியது. இந்தியாவெங்கும், அம்பேத்காரின் பெயரையே கேள்விப்பட்டிராத பகுதிகளிலெல்லாம்கூட,  தாழ்த்தப்பட்ட மக்களிடையே அவர்களின் சமூக முன்னேற்றத்துக்கு முதற் தூண்டுதல் ஹரிஜன இயக்கத்தால்தான் அளிக்கப்பட்டது. அவர்களுக்கு கல்வி, கைத்தொழில் முதலியவை அறிமுகம்செய்யப்பட்டன. அனைத்துக்கும் மேலாக சமூகநீரோட்டத்திலேயே இல்லாமலிருந்த அவர்கள் அரசியல்மயப் படுத்தப்பட்டார்கள்.

 

அந்த மாபெரும் சேவைக்கான பதிலாகவே தாழ்த்தப்பட்ட மக்கள் முக்கால் நூற்றாண்டுக்காலம் காங்கிரசின் அடித்தள வல்லமையாக இருந்தார்கள். அம்பேத்கார் ஆரம்பித்த குடியரசுக் கட்சி கூட காங்கிரசுக்கு இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள்செல்வாக்கை பாதிக்க முடியவில்லை என்பது வரலாறு. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் தனிக்கட்சி ஆரம்பிக்கும்வரை தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி காங்கிரஸே. கேரளத்தில்  கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியைப் பிடித்து அரைநூற்றாண்டு ஆகியும்கூட இன்றும் தாழ்த்தப்பட்டவர்களின் கட்சி காங்கிரஸே.

 

இன்று காந்திக்கும் காங்கிரஸ¤க்கும் எதிராக விஷம்துப்பும் கம்யூனிஸ்டுக் கட்சிகளும் திராவிடக் கட்சிகளும் ஒன்றை மறந்துவிட்டன.  இந்திய அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் அளித்த இடத்தில் பாதியைக்கூட இக்கட்சிகள் அளிக்கவில்லை. இந்த நிமிடத்தில்கூட இக்கட்சிகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் அதிகாரப்பங்கேற்பு என்பது பூஜ்யமே. 

 

எண்பதுகளில் உருவான தலித் கட்சிகள்மட்டுமே காங்கிரஸின் தாழ்த்தப்பட்டோர் ஆதரவை கொஞ்சமேனும் பாதிக்க முடிந்தது. ஆனாலும் இன்றும் இந்தியாவில் தலித்துக்கள் மிக அதிகமாக ஆதரிக்கும் கட்சி காங்கிரஸே. அதுவே இன்று வரை காங்கிரஸை அசைக்க முடியாத வல்லமையாக நிலைநாட்டி வருகிறது. இப்போதே தலித் அரசியல் கட்சிகளில் ஏமாற்றம் கொண்டுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸை நோக்கிச் செல்கிறார்கள். ஆகவே வரும்காலத்திலும் காங்கிரஸே தலித்துக்களின் கட்சியாக இருக்கும். ஏனென்றால் அவர்களின் குடிசை முற்றத்துக்குச் சென்ற முதல் கட்சி காந்தியின் காங்கிரஸ். காங்கிரஸின் ஊழல், சீர்கேடுகள், ஏகாதிபத்தியப்போக்கு எல்லாவற்றுக்கும் அப்பால் அந்த உண்மை நிலைநிற்கிறது.

 

காந்தியின் வற்புறுத்தலான் பூனா ஒப்பந்தம் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு தனித்தொகுதி அளிக்கப்பட்டமைக்காக காந்தி  பிற சாதியினரின் கடும் சினத்துக்கு உள்ளானார். அன்றைய காங்கிரஸ் தலைவர்களிலேயே அந்தக்  கசப்பு இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை காந்தி திசை திருப்புகிறார் என்று சிலர் ண்ணினார்கள். காந்தியின் ஹரிஜன இயக்கம் மீது சுபாஷ் சந்திரபோஸ் கடுமையான விமரிசனம் கொண்டிருந்தார். ஆனால் உக்கிரமான சினம் வழக்கம்போல இந்து உயர்சாதி குழுக்களிலேயே இருந்தது

 

1934ல் மட்டும் காந்தியை கொல்வதற்கு மூன்று முயற்சிகள் நடந்தன. அவற்றில் இரண்டு முயற்சிகள் பெரிய அளவில் விளையவில்லை. ஒன்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. [ஒரு நிகழ்ச்சியின் அடிபப்டையில் பொவானி ஜங்ஷன் என்ற ஹாலிவுட் படம் வெளிவந்திருக்கிறது] அவற்றில் அனேகமாக எல்லாவற்றிலுமே ஏதோ ஒருவகையில் இந்து மகா சபாவின் ஒரு தரப்பினர் பங்கு வகித்தனர் என்று பியாரேலால் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். முயன்றிருந்தால் ஒருவேளை காந்தியின் படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

 

1933 முதலே காந்தி ஹரிஜன இயக்கத்தை பிரச்சாரம் செய்ய பயணம்செய்துகோண்டிருந்தார். அது ஹரிஜனயாத்ரா என்று அழைக்கப்பட்டது. 1934 ஜூன் 25 ஆம் தேதி காந்தி கஸ்தூரிபாயுடன் ஹரிஜன யாத்திரையின் பொருட்டு பூனா வந்தார். இருகார்களில் இரண்டாவது காரில் காந்தியும் கஸ்தூர்பாயும் சென்றனர். முதலில் சென்ற கார் நிகழ்ச்சி நடக்கவிருந்த கார்ப்பரேஷன் அரங்கைச் சென்றடைந்ததும் ஒரு குண்டு அதன்மேல் வீசப்பட்டது. இரு போலீஸ்காரர்களும் ஏழு பொதுமக்களும் பூனா முனிசிப்பல் கார்பரேஷனின் சீ·ப் ஆபீஸரின் உதவியாளரும் கடுமையான காயம் அடைந்தார்கள். காந்தி மயிரிழையில் உயிர்தப்பிய நிகழ்ச்சி இது.

 

அன்று காந்தி இறந்திருந்தால் பூனா ஒப்பந்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அரசியல் பிரவேசத்துக்கும், அதன் பின் ஹரிஜன இயக்கம் மூலம் அவர்களின் வாழ்க்கையின் மறுமலர்ச்சிக்காக வழியமைத்தமைக்கும் அவர் களப்பலியாகிருந்திருப்பார். இன்று அவர்மேல்தான் இந்த அவதூறுகள் சுமத்தப்படுகின்றன.

 

பூனா ஒப்பந்தத்தை மழுப்பவா ஹரிஜன இயக்கம்?

 

 

பூனா ஒப்பந்தத்துக்குப் பின்னர்தான் காந்தி ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார் என்பது உண்மை. ஆனால் அதற்கு முன்னர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களைப்பற்றிக் கவலைப்படவே இல்லை என்பதும் சரி, ஹரிஜன இயக்கத்தை அவர் அம்பேத்காரின் இயக்கத்தை வலுவிழக்கச்செய்யவே ஆரம்பித்தார் என்பதும் சரி , அப்பட்டமான திரிபுகள் அன்றி வேறல்ல. உள்நோக்கம் கற்பித்தபின் எதைவேண்டுமானாலும் நிரூபிக்கலாம்.

 

இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் இயக்கத்தை நேரடியாக தலித் தலைவர்களிடமிருந்து ஆரம்பிக்கும் ஒரு வழக்கம் இப்போது உள்ளது. சலிக்காமல் ஆங்கிலத்தில் இதை எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில் பின்னுக்குச் சென்றால் மிஷனரிகளில் தலித் விடுதலை இயக்கத்தின் வேர்களை கண்டுகொள்வார்கள். மகாத்மா பூலே போன்ற நாலைந்து பெயர்களுக்குப் பின் நேரடியாக அம்பேத்கரில் வந்து முடிப்பார்கள். இவர்களின் கண்ணில் இந்திய மதச்சீர்திருத்த இயக்கங்களின் பங்களிப்பு கொஞ்சம்கூட விழாது.

 

ஆனால் வரலாறு அப்படி அவரவர் சமைத்துக்கொள்வது அல்ல. உண்மையில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்சிக்கான குரல் பெருமளவில் எழுந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும் மதச்சீர்திருத்த இயக்கங்களில்தான். அதற்கு முன்னரே மிஷனரிகள் இந்திய தாழ்த்தப்பட்ட மக்களின் மீட்புக்கான ஆரம்பகட்ட பணிகளைச் செய்திருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் இந்தியாவில் அவர்கள் பணியாற்றிய பகுதிகள் ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவே. அவர்கள் எப்போதுமே மக்களியக்கமாக இருக்கவில்லை. 

 

ஆரியசமாஜம், பிரம்ம சமாஜம்,ராமகிருஷ்ண இயக்கம் போன்ற அமைப்புகள் உருவாக்கிய விழிப்புணர்ச்சியே இந்தியாவில் சாதியமைப்பிற்கு எதிரான முதல் நகர்வு. இவ்வியக்கங்கள் லட்சக்கணக்கான அர்ப்பணிப்புள்ள ஊழியர்களால் ஆனவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். 1869ல் ஆரம்பிக்கப்பட்ட ஆரியசமாஜமும் 1828ல் ஆரம்பிக்கப்பட்ட பிரம்ம சமாஜமும் திட்டவட்டமாகவே சாதிமுறையை நிராகரித்து அவர்றுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டவை.  ராமகிருஷ்ணமடம் சாதியமைப்பை இந்துமதத்தின் இருளாக எண்ணியது.

 

இவற்றைத்தவிர ஏராளமான பிராந்திய மதசீர்திருத்த அமைப்புகள் சாதிய ஒழிப்பில் அரும்பணி ஆற்றியிருக்கின்றன. மிகச்சிறந்த உதாரணம் கேரளத்தில் நாராயணகுருவின் இயக்கமும் தமிழகத்தில் வடலூர் ராமலிங்க வள்ளலாரின் இயக்கமும் ஆகும்.  இந்த வகையான இந்துமதச்சீர்திருத்த நோக்குள்ள துறவிகளும் அமைப்புகளும் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக அளித்த கொடை சாதாரணமல்ல. அத்வைதமகாசபை, சுவாமி சகஜானந்தர், சுவாமி ஆத்மானந்தர், சாதுஜன பரிபாலன சபாறென பலநூறு அமைப்புகளை நாம் சுட்டிக்காட்ட முடியும்

 

இவை உருவாக்கிய கருத்தியல் மாற்றமே பல்லாயிரம் வருட வரலாறுள்ள சாதியமைப்பு குறித்த மறுபரிசீலனையை இந்தியாவில் உருவாக்கியது. படித்த உயர்வட்டத்தில் அச்சிந்தனைகள் வலுப்பெற்றன. தனிவாழ்க்கையில்கூட அம்பேத்கார் அந்த அலையின் நேரடிப்பயன்பெற்று உருவாகிவந்தவர் என்பதைக் காணலாம்.

 

இந்திய சுதந்திரப்போராட்டம் கூட இந்தியமறுமலர்ச்சி என்று சொல்லப்படும் இந்துமதச்சீர்திருத்த அலையின் விளைவாக உருவாகி வந்ததே. அந்த சீர்திருத்த அலையின் நீட்சி எப்போதும் காங்கிரஸில் இருந்தது. ஆகவேதான் காங்கிரஸ் அத்தகைய ஒரு லட்சியவாத அலையை அத்தனை விரிவாக அனைத்து சாதிகளையும் உள்ளடக்கி உருவாக்க முடிந்தது.

 

இன்று தலித் அரசியலெழுத்தாளர்களில் ஒருசாராரும் திராவிட இயக்கத்தினரும் காங்கிரஸை உயர்சாதியினரின் அமைப்பு என்ற அப்பட்டமான பொய்யை மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். காங்கிரஸின் தலைமை பிராமணர் கையில் இருந்தது என்றும் பார்ப்பனர்களும் பனியாக்களும் அந்த பேரியக்கத்தை ஏமாற்றி வழிநடத்தினர் என்றும் சொல்கிறார்கள்.லட்சக்கணக்காக  காங்கிரஸில் இணைந்து போராடி தியாகங்கள் செய்த அத்தனை பிறசாதியினரையும் முட்டாள்கள் என்றும் ஏமாளிகள் என்றும் இழிவுபடுத்தும் பேச்சு என்று மட்டுமே அதைச் சொல்லமுடியும்

 

காந்தி  அவரது பொதுவாழ்க்கையின் ஆரம்பம் முதலே திட்டவட்டமாக தீண்டாமையையும் சாதியின் ஏற்றதாழ்வுகளையும் எதிர்ப்பவராகவும்தான் இருந்திருக்கிறார். பிறரைப்போல அதை மேடைகளில் சொல்லிவிட்டுச் செல்பவரல்ல அவர்.  அவரது சொந்த வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் அவர் எதை நம்பினாரோ அதைச் செய்தும் வந்தார்.

 

தென்னாப்ரிக்காவில் அவரது தல்ஸ்தோய் பண்ணையில் அவர் தன்னுடன் தாழ்த்தப்பட்டவர்களை தங்க வைத்தார். ஒரு சாதிஇந்து ஒருபோதும் செய்யத்துணியாத விஷயங்களை , தாழ்த்தப்பட்டவர்களின் கழிவறையை சுத்தம்செய்வதை, அவர் செய்தார்.சாதி எண்ணத்தில் இருந்து மீளாத தன் மனைவியையும் குடும்பத்தையும் அச்செயலை ஏற்கச்செய்தார்.

 

இந்தியா திரும்பிய காந்தி முதன்முதலில் காங்கிரஸ் மாநாட்டில் கண்டு எதிர்ப்பு தெரிவித்த விஷயமே அங்கே சுகாதாரப்பணிகளை பிறசாதியினர் செய்யாமையினால் நிலவிய அசிங்கத்தைத்தான். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தானே சுகாதாரப்பணிகளைச் செய்ய ஆரம்பித்தார் அவர். தன்னுடைய ஆசிரமத்தில் தாழ்த்தப்பட்டவர்களை ஒன்றாகச் சேர்த்து தங்கவைத்து அதன் விளைவாக கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார். ஆசிரமங்களையே மூடிவிடும் நிலையை அடைந்தும் அக்கருத்தில் அவர் மாற்றம் கொள்ளவில்லை.

 

சாதியமைப்பு மக்களை இயல்பான தன்னதிகாரமும் சுதந்திரமான செயல்பாடும் கொண்ட சமூகக் குழுக்களாக ஆக்குகிறது, ஆகவே அதுதேவை என்ற எண்ணம் கொண்டிருந்த காந்தி அதை வெளிப்படையாக சொன்னார். முற்போக்கு முகமூடிகள் போட்டுக்கொள்ளவில்லை. அதே சமயம் சாதி ஏற்றத்தாழ்வு இருக்கலாகாது என்று நம்பிய அவர் தன் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் அதைக் கடைப்பிடித்து வழிகாட்டினார்.

 

இந்தியாவில் மதச்சீர்திருத்த இயக்கங்கள் மூலம் உருவான சமூகமாற்ற அலையின் கடைசிக்கண்ணிதான் காந்தி. அதை இன்றைய எந்த தலித்தியர்கள் அறிந்திருக்கிறார்களோ இல்லையோ அம்பேத்கார் அறிந்திருந்தார். ஆகவேதான் யெரவாடா சிறையில் காந்தியிடம் உரையாடும்போது நீங்கள் மட்டுமே எங்களுக்கு இன்று பாதுகாப்பு என்று சொல்கிறார் அம்பேத்கார்.

 

”நீங்கள் இருப்பது எங்களுக்குப் பெரும் உதவி” என்று காந்தியிடம் சொல்கிறார் அம்பேத்கார். ” ஆனால் உங்களிடம் எங்களுக்குள்ள சச்சரவு ஒன்றே ஒன்றுதான். எங்கள் நலனுக்காக மட்டுமில்லாமல் தேசநலன் என்று நீங்கள் சொல்லிக்கொள்ளும் ஒன்றுக்காகவும்  நீங்கள் பணியாற்றுகிறீர்கள்.மாறாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மட்டுமே நீங்கள் பணியாற்ற வந்தால் எங்கள் தலைவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள்…” 

 

காந்தியைப் பொறுத்தவரை தனித்தொகுதியும் சரி மாகாண அரசியலில் ஈடுபடுவதும் சரி அர்த்தமற்ற அரசியல் நடவடிக்கைகளே. ஒருபோதும் அவர் அதில் ஆர்வம் காட்டியதில்லை. பெரும்பாலும் காங்கிரஸை அதிலிருந்து விலக்கவே முயன்றிருக்கிறார். இந்திய சுதந்திரம்ந் நெருங்கிவிட்டது என்ற எண்ணம் ஏற்பட்ட பின்னரே ஜனநாயகப்பயிற்சிக்காகவும் அதிகார கையகபப்டுத்தலுக்காகவும் அவர் அதில் ஈடுபடுவதை முகுந்த நிபந்தனைகளுடன் ஆதரித்தார். அதன்படி அரசமைத்த எந்த காங்கிரஸ் அரசும் நீடித்து ஆளவுமில்லை.

 

பூனா ஒப்பந்தம் காந்தியைப் பொறுத்தவரை அதிகாரப் பகிர்வோ ஒன்றுமில்லை. காரணம் அவ்வாறு பிரிட்டிஷாரிடம் இருந்து பெறும் அதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவரல்ல அவர். மேலும் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் மீது ஆழமாந அவநம்பிக்கை அவருக்கு எப்போதும் உண்டு. அதிகாரம் இருப்பது மக்களிடையே என நம்பியவர் அவர். சிவில் சமூகத்தின் அதிகாரத்தை மட்டுமே அதிகாரம் என நினைத்தவர்

 

ஆகவே அவர் இரட்டைவாக்குரிமையில் தலையிட்டது அது பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கான ஆயுதமாகிவிடக்கூடாது என்பதற்காகவே. மாகாண தேர்தல்களில் இரட்டை வாக்குரிமை மூலம் உருவாகும் பூசல்கள் பிளவுக்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே. மற்றபடி பிரிட்டிஷாரின் கீழ் மாகாண அரசில் சென்று அமர்ந்து கொண்டு காங்கிரஸ¤ம் சரி அம்பேத்காரும் சரி ஏதும்செய்யப்போவதிலலி என நன்கு அறிவார். அதுவே யதார்த்தமும்கூட

 

ஆகவேதான் எது உண்மையான சமூக மாற்றத்துக்கும் எளியவருக்கு அதிகாரப்பகிர்வுக்கும் வழிவகுக்குமோ அதைச் செய்ய ஆரம்பித்தார் அவர். அந்த மக்களிடையே இறங்கிச்சென்றார். அவர்களுக்கு அரசியல் விழிப்பையும், கல்வியையும், மாற்றுத்தொழில் வாய்ப்புகளையும் அளிக்கும் இயக்கத்தை ஆரம்பித்தார். தேசத்தையே அம்மக்களை நோக்கி திருப்பினார்.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 திசைதிருப்பும் சுட்டுவிரல்கள்…

 

 

காந்தியைப்பற்றி இன்று சில தலித்தியர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் இருவகை நோக்கம் கொண்டவை. ஒன்று, ஏற்கனவே சொன்னதுபோல   தலித் ஆதரவை காங்கிரஸ் பக்கமிருந்து தலித் கட்சிகளுக்கு திசைதிருப்பும் அரசியல் திட்டம் கொண்டவை. காங்கிரஸ் தலித் நலன்களைக் காக்கவில்லை என்று எண்ண அவர்களுக்கு உரிமை உள்ளது. அதற்கான அரசியலிலும் அவர்கள் ஈடுபடலாம். ஆனால், அதற்காக வரலாற்றை திரிப்பதும் அவதூறு செய்வதும் உகந்தது அல்ல. அது அவர்களின் அற அடிப்படையைத்தான் பலவீனப்படுத்தும்.

 

தலித் அல்லாதவர்கள் இதே அவதூறுகளை இன்னமும் வேகமாகக் கூறுகிறார்கள். இதைவிட கருத்தியல்மோசடி என்று எதுவுமே இன்றைய இந்தியச் சூழலில் இருக்கமுடியாது. இன்றைய தலித் எழுச்சிக்கும் அதிகாரப்பகிர்வுக்கும் உடனடித்தடையாக இருப்பது இன்றுள்ள பிற்பட்டோர் அரசியலே. இன்றும் அது ஆவேசமான ஒரு சாதிய அடிப்படைவாத அரசியல் என்பதை எவரும் அறிவர். அந்த பச்சையான யதார்த்தத்தை போலியான தலித் ஆதரவு கோஷங்கள் மூலம், காந்தியை அல்லது உயர்சாதியினரை மொத்தப் பழியையும் சுமக்கசெய்வதன் மூலம், மழுப்புவதற்கான அரசியல் தந்திரம் அன்றி வேறல்ல அது.

 

வேடிக்கையான ஒரு விஷயம் இன்று கவனத்துக்கு வருகிறது. ஈ.வே.ரா-ம் திராவிட இயக்கமும் தலித்துக்களுக்கு என்ன செய்தது என்ற கேள்வி இன்று தலித்துக்கள் மத்தியில் இருந்து வலுவாக எழுந்து வருகிறது. ஏறத்தாழ ஐம்பதாண்டுக்கால அரசியல் வரலாறுள்ள திராவிட இயக்கம் காங்கிரஸ் அளித்த முக்கியத்துவத்தைக்கூட தலித்துக்களுக்கு அளிக்கவில்லை என்பது வரலாறு. அக்கேள்விக்குப் பதிலாக பதற்றம் அடையும் பெரியாரியர் மேடைகளில் ஈ.வே.ரா பேசிய மிகையுணர்ச்சி கொண்ட தடாலடி மேற்கோள்களை எடுத்து வைத்து வாதிடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களை காங்கிரஸில் இருந்து பிரிப்பதற்காக ஈவேரா பேசிய தூண்டிவிடும் பேச்சுக்கள் மட்டும்தான் அவை.

 

இன்று தலித்தியர் அதைச்சொல்லிக் ஈவேராவைக் குற்றம் சாட்டும்போது திராவிடக் கட்சிகளில் இருந்து தலித் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக தலித்தியர் செய்யும் அரசியல் அது என்று வாதிடுகிறார்கள் பெரியாரியர்கள். ஐம்பதாண்டுக்காலமாக காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்காக அவர்கள் செய்த அதே வேலை அல்லவா அது? 

 

இந்த அவதூறு அரசியலில் கிறித்தவ மதப்பரப்பு அமைப்புகளுக்கு உள்ள நேரடியான, மறைமுகமான பங்கும் எந்த ஒரு பொதுப் பார்வையளனும் எளிதில் கண்டு கொளக்கூடிய ஒன்றே. கிறிஸ்துவை அறிந்த கிறிஸ்தவனுக்கு காந்தி பிற எவரைவிடவும் நெருக்கமானவர். ஆதிக்க அரசியலுக்கு மதத்தை கருவியாக்கும் அமைப்புகளுக்கு அவர் எப்போதுமே  எதிர்இலக்கு.

 

[மேலும்]

 

 

 

1932 ஆம் ஆண்டு யெரவாடா சிறையில் காந்தியுடன் அம்பேத்கார் நடத்திய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அம்பேத்காருக்கும் காங்கிரஸுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 

 

 

1) தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு பிராந்திய பிரதிநிதி சபைகளில் பொதுத் தேர்தல் இடங்களிலிருந்து பின்வருமாறு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்

மெட்ராஸ் 30; பம்பாயும் சிந்துவும் 25; பஞ்சாப்  8; பீகாரும் ஒரிஸாவும் 18; மத்திய மாகாணங்கள் 20; அஸாம் 7; வங்காளம் 30; ஐக்கிய மாகாணங்கள் 20. மொத்தம் 148.மிவை பிரிட்டிஷ் முக்கிய மந்திரியின் தீர்மானத்தின் பேரில் அடையப்பெற்ற எண்ணிக்கை ஆகும்.

2) இந்த இடங்களுக்கான தேர்தல் பொது தேர்தல் முறையை பின்பற்றியதாக இருக்குமென்றாலும் பின்வரும் முறைமைகள் அதில் கையாளப்படும்: ஒவ்வொரு தொகுதிக்கும் வாக்காளர் அட்டவணயில் பதிவு செய்யப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அனைவரும் ஒரு வாக்காளர் கணமாக கருதப்பட்டு அவர்கள் அந்த தொகுதிக்கு நான்கு உறுப்பினர்களை ஒற்றை வாக்கு முறை மூலமாகத்  தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வருமே பொது தேர்தலுக்கு அந்த தொகுதிக்கான வேட்பாளர்களாக இருப்பார்கள்.

3) மத்திய பிரதிநிதி சபையில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவமானது கூட்டுத்தொகுதி முறையிலும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் மேல்கூறிய பிராந்திய பிரதிநிதி சபைகளுக்கான அடிப்படை தேர்ந்தெடுத்தல் முறையிலும்,  அமையும்.

மத்திய பிரதிநிதி சபை

4) மத்திய பிரதிநிதி சபையில் பிரிட்டிஷ் இந்தியாவின் பொது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள இருக்கைகளில் 18 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

5) இந்த முதன்மை தேர்தலின் மூலம் வேட்பாளர்களை மத்திய மற்றும் பிராந்திய பிரதிநிதி சபைகளில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொகுதிகளிலிருந்து அனுப்பப்படும் இந்த முறை முதல் பத்து ஆண்டுகளில் அல்லது பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் கலந்தாலோசித்த கூட்டு சம்மதத்துடன் அதற்கு முன்னதாக முடிவுக்கொண்டு வரப்படலாம். அது இந்த ஒப்பந்தத்தின் ஆறாவது ஷரத்தின் படி அமையும்.

6) இந்த ஒப்பந்தத்தின் 1 ஆவது மற்றும் 4 ஆவது ஷரத்துகளின் படி அமைக்கப்பட்ட இந்த பிரதிநிதித்துவ முறை, தொடர்பான சமுதாயக்குழுக்களின் ஒத்த முடிவின் படி சமரசம் கண்டடையும் வரை தொடரும்.

7) மத்திய மற்றும் பிராந்திய பிரதிநிதி சபைகளுக்கான தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் வாக்காளர்கள் லோத்தியன் கமிட்டியின் அறிக்கையின் படி அமைக்கப்படுவர்.

8 )  அந்தந்த வட்டார மற்றும் ஊள்ளூர் அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கோ அல்லது அரசு பணிகளில் பொதுத்துறைகளில் நியமிக்கப்படுவதற்கோ, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மக்களுக்கு எவ்வித தடையும் இருக்காது. இந்த துறைகளில் உரிய கல்வி தகுதிப் பெற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு நியாயமான இடங்கள் கிடைத்திட எல்லாவித முயற்சிகளும் செய்யப்படும்.

9) ஒவ்வொரு மாகாணத்திலும் ஒரு கணிசமான தொகை தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் கல்வி முன்னேற்றத்துக்கு ஒதுக்கப்பட்டு அவர்களுக்கு கல்விகற்பதற்கான ஆதார வசதிகள் உருவாக்கப்படும்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காந்தியும் தலித் அரசியலும் 5

October 7, 2009 – 12:02 am5. உரிமை என்னும் அதிகாரச் சமநிலை

 

 

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை குறித்து இன்று உருவாக்கப்படும் பிரமைகளில் கடைசியானது இந்திய தலித்துக்களின் வாழ்க்கையில் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியை உருவாக்கி அவர்களை எங்கோ கொண்டுபோயிருக்கக் கூடிய ஒரு மாபெரும் திட்டம் அது என்பதாகும். அதை காந்தி கெடுத்ததனாலேயே இன்றும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழ்நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் படும் எல்லா துயரங்களுக்கும் காரணம் காந்தியே என்று சொல்ல அதுவே அடிப்படை

 

பூனா ஒப்பந்தத்தைப்பற்றி இன்று புறவயமாகச் சிந்திக்கும் ஒருவர் கீழ்க்கண்ட கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை எவ்வாறு அடையப்பெற்றது? அதற்குப்பின்னால் உள்ள ஜனநாயகக் காரணிகள் என்ன? எந்த ஒரு உரிமையும் அதிகாரத்துக்கான போராட்டத்தாலும் சமரசத்தாலும் அடையப்பெறுவதே என்னும்போது தாழ்த்தப்பட்டோரின் அதிகாரம் யாருடன் போராடி, யாருடன் சமரசம்செய்து அடையப்பட்டது?

 

இக்கேள்விகளுக்கான பதில்களை இதுவரை பேசிய வரலாற்றுப்பின்னணியில் வைத்து நோக்கினால் மட்டுமே இந்த விஷயம் சார்ந்த ஒரு தெளிவை நாம் அடைய முடியும்.

.

ஏன் அளிக்கப்பட்டது இரட்டை வாக்குரிமை?

 

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை என்பது அம்பேத்காரோ அல்லது தாழ்த்தப்பட்ட சாதியினரோ ஜனநாயக முறைப்படி ‘போராடி’ப் பெற்ற உரிமை அல்ல அது என்பது முக்கியமாகக் கவனிக்கபப்டவேண்டிய வரலாற்று உண்மை. அது அவர்களுக்கு பிரிட்டிஷ் அரசு வழங்க முன்வந்த ஒரு சலுகை மட்டுமே. இன்று கோரிக்கை விட்டதை ஒரு போராட்டமாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்தான். ஆனால் அதை பிரிட்டிஷ் அரசு  வழங்க முன்வந்த காலகட்டத்தில் தலித்துக்களோ அம்பேத்காரோ இந்திய அரசியலில் ஒரு பொருட்படுத்தத் தக்க சக்தியே அல்ல.

 

ஏன் அதை பிரிட்டிஷார் வழங்க முன்வந்தார்கள்? இந்தியாவில் 1750 முதல் பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்ற ஆரம்பித்தது. 1800களில் பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவை முழுக்கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்துவிட்டது. 1919 வரை ஏன் தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களின் கண்ணுக்குப் படவில்லை? இஸ்லாமியர்களையும் சீக்கியர்களையும் ‘ஒடுக்கப்படும் சிறுபான்மையினராக’ எண்ணிய பிரிட்டிஷார் கண்களுக்கு ஏன் தாழ்த்தப்பட்டோர் படவிலை? அதை அம்பேத்காரே முதல் வட்டமேஜை மாநாட்டில் ஆணித்தரமாகக் கேட்டிருக்கிறார்.

 

இந்திய சமூகத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் சுரண்டலையும் தடுக்க எந்த முயற்சியையும் பிரிட்டிஷ் ஆட்சி எடுக்கவில்லை என்பதே வரலாறு. பிரிட்டிஷ் ஆட்சியை கிட்டத்தட்ட ஆட்சியை ‘அவுட் சோர்ஸிங்’ விடுதல் என்றே சொல்லவேண்டும். சமஸ்தான மன்னர்கள், நவாபுகள்,ஜமீந்தார்கள் ஆகியவர்களே பிரிட்டிஷாருக்காக ஆட்சியை நடத்தினர்.  அவர்களிடம் வரிவசூல் செய்தலை மட்டுமே ஆட்சியாகச் செய்து வந்தது பிரிட்டன்.

 

அந்த ஆட்சியாளர்கள் கிட்டத்தட்ட அனைவருமே முந்தைய மன்னராட்சிக்காலத்தின் பாரம்பரியங்களால் அதிகாரம் கொண்டிருந்தவர்கள். ஆகவே மரபாக என்ன ஆசாரங்களும் நம்பிக்கைகளும் பேணப்பட்டனவோ அதையே அவர்களும் பேணினார்கள். அதில் சாதிமுறை முதன்மையானது. இந்தியாவின் பாரம்பரிய ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட இந்தியப்பெருநிலத்தின் பெரும்பகுதியில் பிரிட்டிஷ் மேலிடத்தில் இருந்து எந்தவிதமான தலையீடும் இல்லாமல் சாதிய ஒடுக்குமுறை கடைப்பிடிக்கப் பட்டது.

 

அதை பிரிட்டிஷ் ஆட்சி ஏன் ஆதரித்தது என்பதைக் காண நம்முடைய வேளாண்மைப் பொருளியலை கவனிக்கவேண்டும். மிகக் குறைவான ஊதியத்தில் தலித் மற்றும் பிற குடியானவ சாதியினரை வேளாண்மையில் ஈடுபடுத்தினால் மட்டுமே லாபகரமாக வேளாண்மையைச் செய்ய முடியும் என்ற நிலை இந்தியாவில் இருந்தது. தலித்துக்களுக்கு நியாயமான கூலி கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவானபின்னரே இந்திய வேளாண்மை பொருளியல் ரீதியாகச் சரிந்தது.

 

காரணம் இந்திய வேளாண்மை உடலுழைப்பை அதிகமாக நம்பி இருப்பது. சில பகுதிகள் தவிர பிற இடங்களில் மேடும் சரிவுமான நிலம் வயலாக ஆக்கப்பட்டிருப்பதனால் இந்திய வயல்வெளிகளில் வண்டிகள் பயன்படுத்தப்படுவது இயலாது. சேறுமிக்க வயல்கள் கொண்ட இந்தியாவில் இயந்திரப் பயன்பாடு அன்று அனேகமாக சாத்தியமில்லை. இந்தியாவின் பல பகுதிகளில் நீர்பாசனம் கடுமையான மானுட உழைப்பு மூலமே செய்யப்பட்டது.

 

இந்தியாவின் நிலவரியை மட்டுமே நம்பி உலகளாவிய பேரரசுப் பரவலை நிகழ்த்திக்கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு இங்கிருந்த சாதியச் சுரண்டலை அனுமதித்து, ஊக்குவித்து, தன் பொருளியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டது. அது முதலாளித்துவ அரசின் ஆதார மனநிலை.உற்பத்தியையும் லாபத்தையும் பெருக்குவதற்காக மட்டுமே அது சமூக மாற்றங்களில் ஈடுபடும். பிரிட்டனின் சுரங்கத்தொழிலாளர்கள் இந்திய தலித்துக்களைப்போலவே கேவலமான சுரண்டல் சூழலில் வாழ்ந்த காலம் அது என்பதை நாம் மறக்கக் கூடாது.

 

இக்காரணத்தால்தான் பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் கிறித்தவ மதத்தைப் பரப்ப பெரிய அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. கத்தோலிக்கர்கள் மட்டும் அல்ல, லண்டன்மிஷன் கூட ஆங்கில ஆட்சியாளர்களின் பெரிய ஊக்குவித்தலை அடையவில்லை. அவர்கள் நகர்ப்புறங்களில் கல்விச்சேவைசெய்து குமாஸ்தாக்களை உற்பத்திசெய்தால்போதும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்தியாவில் பிரிட்டிஷார் வேரூன்றி ஒருநூற்றாண்டுக்காலத்துக்கு பிரிட்டிஷ் மிஷனரிகள் இந்தியாவுக்கு வராமல் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பார்த்துக்கொண்டது. அதன்பின்னர் பிரிட்டன் பாராளுமன்றத்தின் தலையீட்டினாலேயே லண்டன் மிஷன் இந்தியாவுக்கு வந்தது. காரணம் மிஷனரிகள் சமூக அமைப்பை மாற்றுவார்கள் என ஆட்சியாளர் அஞ்சினார்கள். கடைசிக்காலம் வரை மிஷனரிகளுக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் பூசல்தான் நிலவியது.

 

அதையும் மீறி இந்தியாவில் சமூக விழிப்புணர்ச்சிக்கான விதைகள் பரவியமைக்குக் காரணங்களாக மூன்று விஷயங்களைச் சொல்லலாம். ஒன்று, இந்தியாவில் தங்களுக்கு ஆட்சியில் உதவும் வற்கத்தை உருவாக்கும் பொருட்டு பிரிட்டிஷார் பரப்பிய ஆங்கிலக் கல்வி. அக்கல்வி மேலைநாட்டு நவீனத்துவத்தை இங்கே அறிமுகம் செய்தது. அதுவே இந்துமதச்சீர்திருத்த இயக்கங்களை உருவாக்கியது.

 

இரண்டு, இந்தியாவில் பரவிய அர்ப்பணிப்புள்ள கிறித்தவ மிஷனரிகள். அவர்கள் சாதிய அடிமைத்தனத்தில் இருந்து அடித்தள மக்கள் தப்பிப்பதற்கு ஒரு வாசலை திறந்து வைத்தார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு சமூகப்பாதுகாப்பையும் பொருளியல் உறுதிப்பாட்டையும் அளித்தார்கள். அதில் அவர்களின் நீதியுணர்ச்சி பெரிதும் செயல்பட்டது. அந்த வாய்ப்பை பலர் பயன்படுத்திக்கொண்டு முன்னேறி பிறருக்கு அதற்கான விழிப்பை அளித்தார்கள். அந்த சாத்தியக்கூறே இந்துக்கள் மத்தியில் சாதிய ஒடுக்குமுறையைப்பற்றி மறுபரிசீலனைசெய்ய வைத்தது.

 

மூன்று, இந்தியாவில் பிரிட்டிஷார் அவர்களின் தேவைக்காக உருவாக்கிய இன்றியமையாத நவீனமயமாக்கம். ராணுவம், துறைமுகம், ரயில்வே ஆகியவற்றில் உழைப்பாளர்களுக்கு உருவான தேவையானது  ஏராளமான மக்களை அவர்கள் வாழ்ந்த சாதிமையக் கிராம அமைப்பை விட்டு வெளியேறவும் வேறு சாத்தியக்கூறுகளை கண்டடையவும் செய்தது.

 

இம்மூன்று காரணிகளின் உருவாக்கமே அம்பேத்கார். அவரது தந்தை ஒரு ராணுவ வீரர். அவரது கல்வியில் ஆங்கில மிஷனரிகளும் இந்து சீர்திருத்தவாதிகளும் பங்களிப்பாற்றியிருக்கிறார்கள். அம்பேத்கார் தாழ்த்தபப்ட்ட சமூகத்தை விழிப்புணர்வுசெய்ய வைத்தவர் மட்டுமல்ல அதற்கு முன்பே இந்து சமூக சீர்திருத்த இயக்கங்களால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்ச்சியின் விளைவும்கூட!

 

அந்த இந்து விழிப்புணர்ச்சி இயக்கங்களுக்கு அப்பால், சுரண்டல் அமைப்பாக, அச்சுரண்டலுக்கு இந்தியாவின் பேதங்களை திறம்பட பயன்படுத்திக்கொள்ளும் மையமாக, மட்டுமே பிரிட்டிஷ் அரசு இருந்தது. அது இந்து சீர்திருத்த இயக்கங்களை மட்டுமல்ல கிறித்தவ சீர்திருத்த இயக்கங்கலையும் ஊக்குவிக்கவில்லை. அதன் ஆதரவு இந்திய நிலப்பிரப்புத்துவ சக்திகளுக்கே இருந்தது.

 

அத்தகைய பிரிட்டிஷ் அரசு சட்டென்று தாழ்த்தப்பட்டவர்களின் நலனை அக்கறை எடுத்துக்கொண்டு கவனிக்க ஆரம்பித்தமைக்குக் காரணம் அதன் மூலம் இந்திய சமூகத்தை பிளவுபடுத்தும் வாய்ப்பு ஒன்று உள்ளது என்பதே. ஏற்கனவே அதே உத்திமூலம் இஸ்லாமியர்களை பிரிப்பதில் அவர்கள் வெற்றிபெற்றிருந்தார்கள். காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முதல் உப்புசத்தியாக்ரகம் வரையிலான போராட்டங்களில் இருந்த மாபெரும் மக்கள் பங்கேற்பைக் கண்டு அஞ்சித்தான் படிப்படியாக அம்முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

 

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இரட்டைவாக்குரிமை எதுவரை? 

 

தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமையைப் பற்றிய விவாதங்களில் நாம் முதலில் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி 1932க்குப் பின்னர் எந்தெந்த தருணங்களில் அம்பேத்கார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமையைப்பற்றிப் பேசியிருக்கிறார், என்ன போராட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார் என்பதே.

 

அம்பேத்கார் அவரது பிற்காலத்தில் சிற்சில இடங்களில் காந்தி குறித்து மனக்கசப்புடன் பேசியிருக்கிறார். அதுவும் அவர் ஆரம்பித்த அரசியல் இயக்கம் வெற்றிபெறமுடியாத நிலையை கண்டபின்பு  தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை இருந்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என்ற அளவில் சில சொல்லியிருக்கிறார். அவ்வரிகளை மேற்கோளாக்கி இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமையை  அம்பேத்கார் கடைசிவரை கைவிடவில்லை என்றும், அது காந்தியால் முறியடிக்கப்பட்டமை ஒரு மாபெரும் தீங்கு என்று எண்ணினார் என்றும் ஒரு பாடம் உருவாக்கப்படுகிறது.

 

முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல்சட்டக்குழுவின் தலைவராகவும்  பணியாற்றிய காலங்களிலும் சரி, பின்னர் தலித் அரசியல் இயக்கம் ஒன்றை முன்னெடுக்க முயன்ற காலத்திலும் சரி  தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமைக்காக எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. அறைகூவல் எதையும் விடுக்கவில்லை. எவ்வகையிலும் அதை ஓர் ஜனநாயகக்கோரிக்கையாக முன்னிறுத்தவில்லை. ஏன்?

 

இரட்டை வாக்குரிமையின் எல்லைகளை அறிந்திருந்தால் இதற்கான பதில் எளிதில் கிடைக்கும். 1982 ல் மறைந்த தாணுலிங்கநாடார் அவர்களிடம் இந்திய அரசின் நாற்பதாண்டுக்கால சாதனை என்ன என்று கேட்டேன். சிந்தித்துவிட்டு‘தலையெண்ணி ஓட்டுதான் தம்பி. இல்லாட்டா இந்த ஜனநாயகத்திலே பனைஏறுதவனையும் மண்ணுசுமக்குதவனையும் தேடி எவனாவது வருவானா? அவனுக்காக ஏதாவதுசெய்யணும்னு நெனைப்பானா? அங்கேருந்துதான் எல்லாமே தொடங்குது” என்றார்.

 

ஆம் அது ஒரு மாபெரும் ஜனநாயக பாய்ச்சல். மன்னாராட்சியில் வெறும்பெயர்களாக வாழ்ந்த மக்களுக்கு அதிகாரம் உண்மையிலேயெ அதன் மூலம்தான் கைக்குக் கிடைத்தது. தங்கள் கிராமத்துக்கு வெளியே எதுவுமே தெரியாத மக்களுக்கு தேசத்தை தீர்மானிக்கும் வல்லமை கிடைத்தது. தன் தலையெழுத்தையே சாதிக்குழுவுக்கும் ஆண்டைகளுக்கும் கொடுத்துவிட்டு வாழ்ந்த மக்களுக்கு தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்புவந்து சேர்ந்தது

 

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. மக்களில் யார் வரிகட்டுகிறார்களோ, யாருக்கு கல்வித்தகுதி இருக்கிறதோ அவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். தாழ்த்தப்பட்டவர்களில் எத்தனை சதவீதம்பேர் அதில் வாக்களக்க முடியும், அத்தகைய தேர்தல்மூலம் தாழ்த்தப்பட்டவர்களில் எந்த தரப்பினர் பதவிக்கு வரமுடியும் என்று  எவரும் ஊகிக்கலாம். தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற பிரிட்டிஷார் ‘முனைந்த’ இக்காலகட்டத்தில் தலித் நில அடிமைகள், மலைவாழ்மக்கள் போன்ற கோடானுகோடி எளிய மக்களுக்கு எந்தவகையான ஜனநாயக உரிமையும் சலுகையும் இல்லை என்பதை நாம் மறக்கக் கூடாது.

 

உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட, எளிய மக்களுக்கான விடுதலையை பிரிட்டிஷார் மனதில் கொண்டிருந்தால் வயதுவந்தோர் வாக்குரிமையைச் சட்டமாக்கியிருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கே தயங்கிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். தன்னை ஆதரிக்கும் உயர்மட்டம் மட்டுமே வாக்களித்து உருவாக்கும் அரசுகளையே பிரிட்டிஷ் அரசு உத்தேசித்தது.

 

ஆக இரட்டை வாக்குரிமை உட்பட எந்த தேர்தல் சலுகையும் உண்மையான மக்களுக்கு அளிக்கப்பட்டவையல்ல. அவை ஜனநாயகபூர்வமானவையும் அல்ல. அம்பேத்கார் இரட்டை வாக்குரிமை சலுகை மூலம் பிரிட்டிஷ் அரசின் மத்திய மத்திய சபைகலில் அத்தனை இருக்கைகளையும் வென்று சென்று அமர்ந்திருந்தாலும்கூட அதற்கும் இந்தியாவின் தாழ்த்தப்பட்ட- பழங்குடி மக்களுக்கும் ஜனநாயகபூர்வமான உறவு எதுவுமே இல்லை!

 

அரசியலுக்கு வந்தது முதல் த்ன் கோரிக்கைகளில் எல்லாமே அம்பேத்கார் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படவேண்டும் என்பதையே கோருகிறார். அவ்வாறு அளிக்க முடியாவிட்டால் அதற்குப் பதிலாகவே தனித்தொகுதி முதலிய சலுகைகளை கோருவதாகச் சொல்கிறார். சைமன் கமிஷன் முன்பாக அம்பேத்கார் முன்வைத்த கோரிக்கை மனுவில் வலுவாகவே இதை குறிப்பிட்டிருக்கிறார்.

 

காங்கிரஸ் எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதே வயதுவந்த அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை வந்துவிட்டது. அதை அம்பேத்காரே அவரது கைகளால் எழுதி அரசியல் சட்டமாக்கினார். 1952ல் இந்தியாவில் வயதுவந்தோர் அனைவரும் வாக்களிக்கும் முதல் தேர்தல் நடந்தது.  மாபெரும் இந்தியச்சூதாட்டம் என டைம் இதழ் வருணித்த அந்தத் தேர்தலில் தேர்தல் என்றால் என்ன என்றே மக்களுக்குக் கற்பிக்கவேண்டியிருந்தது.

 

அந்தத் தேர்தலின் முக்கியமான பிரச்சினை அதில் இருந்த உண்மையான சவாலை நமக்குக் காட்டுகிறது. இந்தியாவின் பல லட்சம் பெண்கள் தங்கள் பெயர்களை கணக்கெடுப்பின்போது சொல்ல மறுத்துவிட்டார்கள். இன்னாருடைய அம்மா இன்னாருடைய மனைவி என்றே சொன்னாரக்ள். அதுவே அவர்களின் பெயர், அடையாளம். அதேபோல ஏராளமான தலித் மக்கள் தங்கள் ஞமான் அல்லது குலக்குழுத்தலைவன் பெயரை மட்டுமே சொன்னார்கள். பழங்குடிகள் தங்கள் குலப்பெயரை தங்கள் பெயராகச் சொன்னார்கள்.

 

இந்த சிகக்லை என்னசெய்வது என பல மாதங்கள் விவாதம் நடந்தது. ஆம், அன்று இந்தியாவின் கோடானுகோடி பேருக்கு தனியடையாளமே இல்லை. அவர்கள் உண்மையில் தனிமனிதர்களே அல்ல. குழுக்கள். அவர்களுக்குத்தான் தேசத்தைத் தீர்மானிக்கும் வாக்குரிமை  அளிக்கப்பட்டது. இந்தியாவின் ஈராயிரம் வருட வரலாற்றில் மாபெரும் புரட்சி என்பது அதுவே.

 

தேர்தல்முறைகளைப் பற்றி பலகோடி ரூபாய் செலவில் கிராமம் கிராமமாக பிரச்சாரம்செய்யப்பட்டது.வேட்பாளர்களுக்குச் சின்னங்கள், கையில் அமிலத்தில் தோய்த்த அடையாள மை , கட்சிக்கு தனி நிறமுள்ள பெட்டி என்று இந்தியாவுக்கே உரிய உத்திகள் கண்டுபிடிக்கப்பட்டன. நேரு தேசம் எங்கும் பல்லாயிரம் கிலோமீட்டர் விமானத்திலும் ரயிலிலும் காரிலும் படகிலும் கழுதைமேலும்கூட பயணம்செய்து ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசினார். காங்கிரசின் பல லட்சம் தொண்டர்கள் கிராமம் கிராமமாக அனுப்பப்பட்டார்கள்.ஆதுவே இந்தியாவை நவீன யுகம் வந்து உசுப்பி எழுப்பிய முதல் தருணம்.

 

அக்காலத்தில் படிப்பறிவில்லாத, சாதி இன மொழி பேதங்களால் எளிதில் தூண்டப்படக்கூடிய, அடித்தள மக்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டமை குறித்த கடுமையான அச்சம் இருந்தது. வயதுவந்தோர் வாக்குரிமைக்காக போராடிய, அதைச் சட்டமாக்கிய  நேருவுக்கே அந்த அச்சம் உள்ளூர இருந்தது. அதற்கேற்ப அந்த தேர்தலில் இனவாத மதவாத பிராந்தியவாத அமைப்புகள் புதியவீறுடன் எழுந்து தேர்தலைச் சந்தித்தன. குறிப்பாக மொழிவாரி மாநிலக்கோரிக்கை இந்தியாவைவே ஒன்றை ஒன்று வெறுக்கும் பிராந்திய உணர்வுகளின் குவியலாக ஆக்கிவிட்டிருந்தது.

 

ஆனால் மக்களை பிரிக்கும் சக்திகளைவிட இணைக்கும் சக்தியான காங்கிரஸ் அன்று வல்லமையோடிருந்தமையால் அந்த ஆரம்ப கட்டச் சோதனையில் இந்தியா வென்றது. அதன்பின்னரே இந்தியாவில் உண்மையான ஜனநாயக அரசியல் ஆரம்பித்தது. அதற்கு உதவியது நேருவின் மீதிருந்த ஈடிணையற்ற கவர்ச்சி. அதை  அக்கால இந்தியா குறித்த நூல்களில் பெரும் வியப்புடன் வரலாற்றாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த கவர்ச்சியை அவருக்களித்தது அவர் காந்தியின் சீடர் என்ற முத்திரை. அதையே இந்தியாவெங்கும் கோடிக்கணக்கான மகக்ளிடம் அவர் மீண்டும் மீண்டும் சொன்னார்.

 

இதில் ஒரு வேடிக்கையான விஷயம் உண்டு. வயதுவந்தோர் தேர்தல்முறைக்காக கோரிக்கை விடுத்தவராகவும் , அதை ‘வாங்கித்தந்தவராகவும்’ அம்பேத்காரை இன்று சில தலித் சிந்தனையாளர்கள் புகழ்கிறார்கள். வயதுவந்தோர் உரிமையை அளிக்க மறுத்த பிரிட்டிஷாரிடம் இந்திய சுதந்திரத்தை  போராடிப்பெற்று ,அதற்கான மாபெரும் ஜனநாயகக் கட்டமைப்பை உருவாக்கிய காங்கிரஸை அதற்கு எதிரான சக்தியாக சித்தரிக்கிறார்கள். வயதுவந்தோர் வாக்குரிமையின் சிற்பிகளான நேருவும் படேலும் எதிரிகளாகிவிடுகிறார்கள்.

 

ஆனால் அதே மூச்சில் வயதுவந்தோர் வாக்குரிமை மூலம் தாழ்த்தப்பட்டோரின்  இரட்டை வாக்குரிமையைப் பறித்தவர்களாகவும் அவர்களையே குற்றம் சாட்டுகிறார்கள். ஏன் என்றால் அம்பேத்கார் கூடவே இரட்டை வாக்குரிமையையும் ஆசைப்பட்டாராம். ஆனால் அவரே அரசியல் சட்ட வரைவாளராக இருந்தும்கூட அதற்காக  போராடவில்லையாம்!

 

அதாவது இந்தியாவில் அடையப்பெற்ற எல்லா ஜனநாயக உர்¢மைகளும் வெறும் கோரிக்கை மூலமே அம்பேத்கார் பெற்றுத்தந்தவை , பிரம்மாண்டமான மக்களியக்கமான காங்கிரஸ் அவற்றுக்கு எதிரான கோட்டை , கிடைக்காத எல்லா உரிமைகளும் காங்கிரஸின் துரோகம் மூலம் மறுக்கப்பட்டவை! இந்த அப்பட்டமான, அபத்தமான வெறுப்புப் பிரச்சாரம் இந்நூற்றாண்டில் வேறு எந்த தேசத்திலாவது இந்த அளவுக்கு ஆதரவை ஈட்டியிருக்குமா என்பதே ஐயம்தான்

 

அம்பேத்கார் கோரியபடி எப்போது வயதுவந்தோர் வாக்குரிமை வந்ததோ அப்போதே தேர்தல் சலுகைகளின் காலம் முடிந்துவிட்டது. ஆகவேதான் அம்பேத்காரை தலைவராகக் கொண்ட இந்திய அரசியல்சட்ட நிர்ணய சபை அன்றுவரை பிரிட்டிஷ் அரசு முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் அளிக்கப்பட்ட எல்லா தேர்தல் சலுகைகளையும் முழுமையாக ரத்து செய்தது. அதை நியாயப்படுத்தி அம்பேத்கார் பேசிய உரைகளை அரசியல்சட்ட நிர்ணயக்குழு விவாதங்களில் எவரும் இன்று வாசிக்கலாம்.

 

அரசியல் நிர்ணய சபையில் முஸ்லீம்களின் சலுகைகளை கோரிய பி.பாக்கர் பகதூர் முதலிய இஸ்லாமிய பிரதிநிதிகள் இருந்தனர். பெண்களுக்கும் வேறு பல சிறுபான்மையினருக்கும் தனிச்சலுகைகள் கோரப்பட்டன.  அகாலிகள் மாஸ்டர் தாராசிங் தலைமையில் தங்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்த தேர்தல் சலுகைகளுக்காக கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தனர். ஆனால் இந்தியக்குடிகள் அனைவரும் சமம் என்ற முறையில் அவை ஏற்கப்படவில்லை.

 

ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடும் பிற சலுகைகளும் மட்டும் ‘மகாத்மாவின் எண்ணங்களுக்கு பணிந்தும் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்த நெடுங்காலத் துன்பங்களை கருத்தில் கொண்டும்’ அளிக்கப்பட்டது. நேருவால் தலைமை தாங்கப்பட்ட காங்கிரஸ் அந்த சிபாரிசை சிறுபான்மையினர் உட்பட அத்தனை உறுப்பினர்களைக் கொண்டும் அங்கீகரிக்கச் செய்தது. அதற்கு அது காந்தியின் ஆணை என்ற மந்திரச் சொல்லே பயன்பட்டது.

 

இன்றுவரை அம்பேத்கார் பெற்றுத்தந்த வெற்றி என்று சொல்லப்படும் எல்லா சலுகைகளும் வந்த விதம் இதுவே. இன்று வரை தலித்துக்கள் அடைந்த எல்லா சமூகப் பொருளியல் வெற்றிகளுக்கும் இன்றைய அவர்களின் அரசியல் எழுச்சிக்கும் காரணம் இதுவே.

 

1929 வரை இரட்டை வாக்குரிமைக்காக அம்பேத்கார் கோரவில்லை என்பதுடன் அன்று முஸ்லீம்களும் சீக்கியர்களும் தங்கள் பிரதிநிதிகளை தாங்கள் மட்டுமே வாக்களித்து தேர்வுசெய்யும் முறை இருந்ததை அம்பேத்கார் எதிர்த்தார். சில வகுப்பாருக்கு சிறப்பு பிரதிநிதித்துவம் வேண்டுமெ ந்று நான் கேட்கிறபோதிலும் தனி வாக்காளர் தொகுதிகள் மூலம் அந்த பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை நான் எதிர்க்கிறேன்” என் று  பம்பாய் ராஜதானி கமிட்டியில் சொன்னார் அம்பேத்கார். பொன்னான வழிமுறை  என்பது தனித்தொகுதி உடன்பாட்டுடன் கூடிய பொது வாக்காளர் தொகுதிகளே. இதற்கு குறைவானது போதுமானதல்ல. இதற்கு அதிகமானது நல்ல அரசாங்கத்தின் நோக்கங்களை தோற்கடித்துவிடும்”

 

பூனா ஒப்பந்நதத்திற்கு வெறும் இரண்டு வருடம் மின்பு ஆணித்தரமாக இப்படிச் சொன்ன அம்பேத்கார் எதை பொன்னான வழிமுறை [The golden mean] என்று சொன்னார் தெரியுமா, அது தான் பூனா ஒப்பந்தம் மூலம் அவர் பெற்றது, சுதந்திர இந்தியாவில் அரசியல் சட்ட வரைவாளராக அமர்ந்து அவர் உருவாக்கியது, இன்றும் நீடிப்பது!

 

இரட்டை வாக்குரிமை கோரும்படி அம்பேத்காரை நிர்ப்பந்தித்ததும் அவர் அம்முடிவை எடுக்கவைத்ததும் தென்னக தாழ்த்தப்பட்டோர் தலைவராக இருந்த எம்.சி.ராஜா. ஆனால் 1932 தேர்தலில் பூனா ஒப்பந்தத்துக்கு முன்னர் அவரே இந்துமகாசபையுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு தனித்தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத்தார். அவர் எடுத்த அந்த முடிவையே பூனா ஒப்பந்தமும் அவர்களுகு அளித்தது.   அம்பேத்கார் உட்பட்ட தாழ்த்தப்பட்ட தலைவர்களுக்கு பூனா ஒப்பந்தம் வெற்றி என்ற எண்ணமே உள்ளூர இருந்தது.

 

காங்கிரசுடன் முறித்துக்கொண்டபின்னர் தாழ்த்தப்பட்டோருக்கான அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி  1952 ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில்  போட்டியிட்ட அம்பேத்கார் காங்கிரஸ் வேட்பாளர் கஜ்ரோல்கர் என்பவரிடம் தோல்வியடைந்தார். அதன்பின்னரே அம்பேத்கார் பொதுவாக்குரிமையின் ‘எல்லைகளை’ பற்றி உணர ஆரம்பித்தார். அதற்குப்பின்னரே மீண்டும் இரட்டை வாக்குரிமையைப்பற்றிய சொற்களை ஆங்காங்கே சொல்ல ஆரம்பித்தார்.

 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

உரிமையை உண்மையிலேயே அளித்தது யார்?

 எந்த ஓர் அரசியலுரிமையும் எப்படி அடையப்படும்? அதற்குரியவர்கள் தங்கள் ஒற்றுமை மூலமும் தங்கள் தரப்பு நியாயங்கள் மூலமும் தங்களின் தொடர்போராட்டம் மூலமும் மாற்றுத்தரப்புக்கு அளிக்கும் அழுத்தத்தின் வழியாகவே அதை அடைவார்கள். அந்த உரிமை என்பது எப்போதுமே அந்த இரு தரப்புக்கும் நடுவே உள்ள ஓரு சமரசப்புள்ளியாகவே இருக்கும். இருபக்கமும் உள்ள நியாயங்களை இரு தரப்புமே புரிந்து கொண்டு சாத்தியமானவரை விட்டுக்கொடுத்து அந்த முடிவை எட்டுவார்கள். ஜனநாயகப்போராட்டத்துக்கு மட்டுமல்ல ஆயுதப்போராட்டத்துக்கும் இதுவே விதி.

 அப்படித்தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை அடையப்பட்டதா? கண்டிப்பாக இல்லை. அந்த உரிமையைக் கோரிய அம்பேத்கார் போன்றவவர்களால் தங்கள் தரப்பில் மிக எளிமையான ஒரு மக்கள் ஆதரவைக்கூட தொகுக்க முடியவில்லை. அதை அளித்தவர்களோ அந்த பிரச்சினையுடன் சம்பந்தமே இல்லாத ஓர் அன்னியத்தரப்பு. எந்தவகையான ஜனநாயக நடவடிக்கை அல்லது உரிமைப் போராட்டம் மூலமும் அடையப்பட்ட ஒன்றல்ல அந்த சலுகை. ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தங்களுக்குக் கிடைத்த வாய்ப்ப்பு ஒன்றை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அம்பேத்கார் முதலியோர் அடைந்த ஒரு வாக்குறுதிமட்டும்தான் அது.

 ஒருபேச்சுக்கு கேட்போமே. தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு தரப்புடன் பிரிட்டிஷ் அரசு போட்டுக்கொண்ட ஓர் ஒப்பந்தத்தை ஏன் காங்கிரஸ் பொருட்படுத்தவேண்டும்? காங்கிரஸின் முதன்மையான எதிரி அந்த அன்னிய அரசு. காங்கிரஸின் போராட்டங்களை பொய்யான வாக்குறுதிகள் மூலமும் ரௌலட் சட்டம் போன்ற கொடிய அடக்குமுறைகள் மூலமும் ஒடுக்கியவர்கள் அவர்கள். காங்கிரஸ் ஒட்டுமொத்தமாகவே அம்பேத்காரையும் அவரது அரசியல் திட்டங்களையும் நிராகரித்திருந்தால் என்ன? உலகின் எந்த அரசியலியக்கமும் அதைத்தானே செய்யும்? சொல்லப்போனால் காங்கிரஸிலேயே கணிசமானவர்களுக்கு அந்த எண்ணமே இருந்தது.

 ஏன் காங்கிரஸ் அதைச் செய்யவில்லை என்றால்  அம்பேத்கார் சொன்ன நியாயங்களை காந்தி தன் மனசாட்சியின் அடிப்படையில் புரிந்துகொண்டார் என்பதனாலேயே. நூற்றாண்டுகளாக தங்கள் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இப்போது பிராயச்சித்தம் செய்யப்படவேண்டும் என்றார் அம்பேத்கார். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை சம்பந்தமாக தாழ்த்தப்பட்டோர் தரப்பின் ஏதேனும் ஒரு நியாயவாதம் சொல்லப்படமுடியும் என்றால் அது இது மட்டுமே. அதை முழுமையாக, உணர்ச்சிகரமாக, ஏற்றுக்கொண்டார் காந்தி. ஆகவேதான் அவர் அம்பேத்காரிடம் பேசினார். மீண்டும் மீண்டும்.

 எளிமையான ஒரு கேள்வியை இங்கு எவருமே இந்த சந்தர்ப்பத்தில் விவாதிப்பதில்லை. இந்தியத் தேர்தல்களில் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் தலித்துக்களுக்கும் சலுகை கொடுக்க பிரிட்டிஷாருக்கு என்ன உரிமை என்ற கேள்விதான் அது. அவர்கள் இந்த மண்ணுக்கோ இங்கிருந்த மக்களுக்கோ உரிமையாளர்கள் அல்ல. இங்குள்ள சமூகக் கட்டுமானத்தில் அவர்கள் இடம்பெறவில்லை. இந்த நாட்டின் மேலும் இங்குள்ள சமூகத்தின் மேலும் வன்முறை மூலம் அதிகாரத்தைச் செலுத்திய ஒரு சாம்ராஜ்ய சக்தி மட்டும்தான் அவர்கள்.

 பின்னர் பூனா ஒப்பந்தம் குறித்துப் பேசும்போது இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் இந்த விஷயத்தை அழுத்தமாகச் சொல்கிறார்.  ஆதிக்க சக்தியிடம் அடிபணிந்து சிலர் பெறும் சலுகைகள் சமூக மாற்றத்தை உருவாக்காது, பரவலான ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமே பயனளிக்கும் என்று. [கிட்டத்தட்ட இ.எம்.எஸ் சொன்ன விஷயங்கலையே மார்க்சிய ஆய்வாளர் அருணன் அவரது ‘காந்தி அம்பேத்கார், மோதலும் சமரசமும்’ என்ற சிறு நூலில் சொல்கிறார். பாரதி புத்தகாலயம் பிரசுரம்]

 அப்படியானால் அச்சலுகையைக் கொடுக்க உரிமை கொண்டவர்கள் யார்? இந்திய சமூகம்! இங்குள்ள கோடானுகோடி மக்கள். அம்மக்களின் பிரதிநிதியாக உள்ள ஓர் அமைப்பு. அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு. அது அன்றும் இன்றும் காங்கிரஸ். அந்த அமைப்பின் தலைவராக அமர்ந்துதான் அம்பேத்காருடன் பேசினார் காந்தி. அதுவன்றி இன்று சொல்லப்படுவதுபோல அந்தப் பேச்சுவார்த்தை காந்தியின் விருப்புவெறுப்புகள் சார்ந்தது அல்ல.

 காந்தியுடனான பேச்சுவார்த்தையின்போது அம்பேத்காரே அதைச் சொல்கிறார் ”– நீங்கள் இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக நின்று பேசுகிறீர்கள் நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குரலாகப் பேசுகிறேன்” என்று. இந்திய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஓர் அன்னிய சக்தியிடம் ஒரு தவறான பேரத்தால் பெற்ற ஒரு சலுகைக்கு இந்திய சமூகத்தின் உண்மையான அங்கீகாரத்தைப் பெற்ற ஓர் அமைப்பின் ஆமோதிப்¨ப்ப பெறவே அம்பேத்கார் காந்தியிடம் பேசினார்.

 காங்கிரஸ் பிரதிநிதித்துவம் செய்த அந்த சமூகம் எப்படிப்பட்டது? நூற்றுக்கணக்கான சமூக அதிகார மையங்களின் ஒட்டுமொத்தம் அது. ஆயிரக்கணக்கான சாதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பேர் பங்கு கொண்ட அமைப்பு. அவர்களில் பலர் தலித் சாதிகளின் அதே வாழ்க்கைத்தரத்தில் வாழ்ந்தவர்கள். அனைத்துக்கும் மேலாக நூற்றாண்டுகளாக இருந்துவந்த சாதிய அமைப்பில் பிறந்து அதிலேயே வாழ்ந்து வந்தவர்கள்

 அந்த அமைப்பு தன் கோரிக்கைகளை அங்கீகரிக்கும்படிச்செய்ய அம்பேத்கார் என்ன செய்தார்? அவர் அவ்வமைப்பைச் சேர்ந்தவர்களிடம் எப்போதாவது பேசியிருக்கிறாரா? தன் நியாயங்களை அவர்களுக்குச் சொல்லி அவர்கள் ஏற்கச்செய்திருக்கிறாரா? தன் சமூகத்துக்கு மட்டும் ஒரு தனிச்சலுகை தேவை என்ற அவரது கோரிக்கைகளை அவர்கள் எப்படி  ஏற்றுக்கொள்வார்கள் என்று எப்போதாவது அவர் சிந்தனைசெய்திருக்கிறாரா?

 மாறாக வகுப்புவாரி அளிக்கை வந்தபோது பொருளியல், சமூக ரீதியாக தங்கள் வாழ்க்கைநிலையிலேயே இருந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்  தங்களையும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களாகக் கருதவேண்டும் என்று கோரிய எளிய மிகவும்பிற்படுத்தபப்ட்ட மக்களை அவர் எதிர்களாகவே கண்டார். அவர்களைப்பற்றி கடும் விமரிசனத்தையே பதிவுசெய்கிறார். 1930ல் தமிழகத்தின் வன்னியர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் சமூக அந்தஸ்திலும், பொருளாதாரத்திலும்  என்ன பெரிய வேறுபாடு இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள். இருசாராருமே பஞ்சம் பிழைக்க கண்டிக்கும் மலாயாவுக்கும் கப்பலேறிக்கொண்டிருந்தார்கள்.

 உண்மையில் இந்திய சமூகத்திற்குப் பதிலாக அம்பேத்கார் பிரிட்டிஷ் ஆட்சியின் சர்வ வல்லமையையே நம்பினார். அதன் ஆதிக்கம் ஒருபோதும் இந்தியாவை விட்டு நீங்காது என்று எண்ணினார். 1932ல்  நவீனத்துவத்தில் நம்பிக்கை கொண்ட எல்லா சராசரி அறிவுஜீவிகளும் அதையே நம்பினார்கள். அம்பேத்கார் தன் சாதிக்கான உரிமையை பிரிட்டிஷார் அளித்து அதை பாதுகாப்பார்கள் என்றே எண்ணியிருந்தார்.

 வெறும் பதினைந்தே வருடத்தில் பிரிட்டனின் ஆட்சி இந்தியாவை விட்டு தூக்கி எறியப்பட்டது என்ற உண்மையில் இருந்தே நாம் சிந்திக்கவேண்டும். அந்த யதார்த்தம் காந்திக்கு தெரிந்திருந்தது. உருவாகிவிட்ட மக்கள் எழுச்சி இந்திய சிவில்சமூகம் பிரிட்டிஷாருக்கு அளித்த அங்கீகாரத்தை ரத்து செய்துவிடும் என அவர் அறிந்திருந்தார். அதை அவரது எழுத்துக்களில் செயல்பாடுகளில் தெளிவாகவே காணலாம். உப்புசத்யாகிரகத்தையே காந்தி கடைசிப்போர்  என்றுதான் சொன்னார்.

 1920ல் காந்தி காங்கிரஸ் மாகாணசபை தேர்தல்களில் பங்குகொள்வதை அதி தீவிரமாக எதிர்த்தார் . அது காங்கிரஸை அதன் போராட்டகுணத்தை இழக்கச்செய்துவிடும் என எண்ணினார். ஆனால் 1932ல் அவர் பிரிட்டிஷார் அளித்த வாய்ப்¨ப்ப பயன்படுத்தி தேர்தலரசியலில் ஈடுபட சம்மதித்தார். காங்கிரஸ் ஜனநாயகச் செயல்பாடுகளுக்குப் பழக்கப்படவேண்டும் என எண்ணினார். காரணம் அதிகாரக் கைமாற்றம் நெருங்குவதை அவர் உணர்ந்திருந்தார்.

 பிரிட்டனின் அடக்குமுறையேகூட அந்த உண்மையை அவர்கள் அறிந்திருந்ததனால்தான் என அவர் ஊகித்திருந்தார். விட்டுச்செல்வதற்கு முன்பாக பிரிட்டிஷார் செய்யும் கடைசி தந்திரமே பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் அதை மட்டும் தாக்குப்பிடித்தால் அனேகமாக வரலாறு அதன் இயல்பான பரிணாமமாக இந்திய விடுதலையை அடையும் என்றும் அவர் நினைத்தார்.

 அம்பேத்காரின் கோரிக்கைகளை செவிகொள்ள வேண்டிய, அங்கீகரிக்கவேண்டிய, உண்மையான அதிகார அமைப்பு காங்கிரஸே. மக்களின் அமைப்பு அது. அந்த அமைப்பின் அங்கீகாரத்தை எப்படி அம்பேத்கார் பெற்றார்? அவர் ஒரே ஒரு நபரை தன் வாதத்தால் வென்றெடுத்தார். ஒரே ஒரு நபரின் மனசாட்சியை தன் அழுத்தமான நியாயங்களால் தொட்டார். அந்த மனிதர் காங்கிரஸையே அம்பேத்காரை நோக்கி திருப்பினார். அவர் கோரிய தனித்தொகுதிமுறைக்கு அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார்.

 

அதற்காக காந்தி காங்கிரஸின் பழமைவாத அடித்தளம் மீது தன் முழு ஆன்ம வலிமையாலும் மோதினார். தன் வாழ்நாளின் ஆகப்பெரிய உண்ணாவிரதத்தை நிகழ்த்தினார். இந்தியாவெங்கும் பயணம்செய்து அந்தத் தரப்பை சாதியில் ஊறிய இந்திய மக்கள் முன் எடுத்துரைத்தார். அதன் பொருட்டு தன் உயிரையே பணயம் வைத்தார். தலித்துக்கள் அளவுக்கே வறுமையில் இருந்த மக்கள், சாதிநோக்கை தங்கள் வாழ்க்கைக் கண்ணோட்டமாகக் கொண்ட மக்கள், அவர் சொன்னதன் பேரிலேயே தலித்துக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஏற்றனர். அந்த மக்கள் ஏற்காமல் எந்த ஆதிக்க அரசும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவ்வுரிமையை கொடுத்துவிட முடியாது.

 

1909 முதல் இந்தியாவில் இட ஒதுக்கீடு பிரிட்டிஷாரால் சில வழிகளில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவையெல்லாமே மிகக்குறைவான அரசாங்கப்பணிகளில் உள்ள ஒதுக்கீடுகள் மட்டுமே. 1918 ல் மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி மாகாண அரசுகள் அமைய வாய்ப்பு வந்தபோதுதான் இட ஒதுக்கீடு ஒரு அதிகாரப்பகிர்வுப்பிரச்சினையாக எழுந்து வந்தது. ஆனால் அப்போதுகூட அது இந்தியசமூகத்தின் மிகச்சிறிய அதிகார வர்க்கத்திற்குள்ளேயே பேசப்பட்டது

 

1932 ல் இரட்டை வாக்குரிமை முதலிய தேர்தல் ஒதுக்கீடுகள் வந்தபோதுதான் இந்திய சமூகத்தில் முதல்முறையாக இட ஒதுக்கீடு ஓரு முக்கியமான அரசியல் பிரச்சினையாக ஆகியது. அப்போதே பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகள் பேசப்பட ஆரம்பித்தன. தேர்தல்கள் நிகழ ஆரம்பித்த பின்னர்தான் வெகுமக்கள் அதிகார அரசியலைப் பற்றிய நேரடியான பிரக்ஞையை அடைந்தார்கள்.

 

அந்தச்சூழலில் இந்தியசமூகத்தை ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவம் செய்யும் ஓர் அமைப்பின் தலைவரின் நிலைபாடு ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட சாதியின் நலன்களை மட்டும்  பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு தலைவரின் நிலைபாட்டுக்கு முழுமுற்றாக ஒத்துப்போவதாக இருக்க இயலாது. இன்று, இத்தனை வருடங்களுக்குப் பின்னர்கூட, தனித்தொகுதிமுறைக்கு இருக்கும் எதிர்ப்பை வைத்தே இதைப் புரிந்துகொள்ள முடியும்.

 

அதாவது அம்பேத்கார் காங்கிரஸ¤டன் நிகழ்த்திய பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும் உண்மையில் தலித் அல்லாத மொத்த பிறசமூகத்தினருடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தையும் ஒப்பந்தமும்தான். அந்த பேச்சுவார்த்தையில் அவரது மறுதரப்பில் இந்திய சமூகத்தின் மனசாட்சியின் குரலாக காந்தி இருந்தமையால்தான் காங்கிரஸின் நிலைபாடு தலித்துக்களுக்குச் சாதகமானதாக அமைந்தது.

 

ஆம், பிரிட்டிஷ் ஆட்சி கொடுத்த சலுகைகளினால் அல்ல, காங்கிரஸ் கொடுத்த சலுகைகளினாலேயே தலித்துக்கள் அவர்களுக்கான அரசியல் பங்களிப்பைப் பெற்றனர். காங்கிரஸ் கொடுக்காமல் ஒருபோதும் அந்தச் சலுகைகள் நடைமுறைக்கு வந்திருக்காது. பிரிட்டிஷ் ஆட்சி காங்கிரஸை எதிர்த்து அச்சலுகைகளைக் கொடுத்திருந்தால்கூட வெறும் பதினைந்துவருடம் மட்டுமே அவற்றால் நீடித்திருக்க முடியும்.

 

ஆனால் காங்கிரஸ் பூனா ஒப்பந்தம் மூலம் அளித்த சலுகைகள் இன்றுவரை நீடிக்கின்றன. இன்றுகூட அச்சலுகைகளை போராடிப்பெறும் அரசியல் ஒற்றுமையுடன் தலித்துக்கள் இல்லை என்பதை மறுக்க முடியாது. சுதந்திரத்துக்குப் பின்னர் உருவான பிற்பட்டோரின் அரசியல் ஆதிக்கத்துக்குப் பின்னர் அந்த கோரிக்கை ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது என எவரும் அறிவார். அன்று அது சாத்தியமானதற்குக் காரணம் காந்தியே.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 அம்பேத்காரும் காங்கிரஸின் மனசாட்சியும்

1931 மார்ச் மாதம் கராச்சியில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. காந்திக்கும் லார்ட் இர்வினுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக ஏற்றுக்கொள்வது என்று அந்த மாநாடு முடிவுசெய்தது. கடந்த முப்பது வருடங்களாக காங்கிரஸ¤க்குள் வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை தேவை என்ற வலுவான குரல் எழுந்துகொண்டிருந்தது. சிறுபான்மையினர் அதை எதிர்த்தனர். வயதுவந்தோர் வாக்குரிமைக்கான தேவையை வலியுறுத்தியவர்கள் காந்தியும், நேருவும், படேலும்.

 

மறுதரப்பில் சொல்லப்பட்ட வாதம் என்னவென்றால் போதிய கல்வியோ தேசிய உணர்ச்சியோ ஊட்டப்படாத அடித்தள மக்களுக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட்டால் அதை அவர்கள் தங்கள் இன,மத அடையாளம் சார்ந்தே பயன்படுத்துவார்கள் என்றும் ஜனநாயகம் அடிபட்டுப்போகும் என்றும்தான். அம்மக்களுக்கு அடிப்படைவசதிகளையும் கல்வியையும்தான் முதலில் அளிக்கவேண்டும் என்றனர் அவர்கள். அந்ததரப்பிலும் பல முற்போக்கான சிந்தனையாளர்கள் இருந்தார்கள்.

 

அதேசமயம் காந்தி பிரிட்டிஷார் அளிக்கும் சலுகையாக மாகாணாமத்திய அரசுகளில் ஒரு ‘டம்மி’ அரசை உருவாக்கி அமர்வதில் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே தேர்தல் சீர்திருத்தம் வாக்களிப்பு போன்ற விஷயங்களை அவர் பெரிதாக பொருட்படுத்தவுமில்லை. காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி காங்கிரஸ் பிரிட்டிஷாருடன் கூட்டாட்சிக்கு சம்மதிக்கும் நிலை உருவானதனால்தான் வாக்குரிமை குறித்த கேள்வி எழுந்தது. கடுமையான விவாதத்திற்குப் பின் வயது வந்த அனைவருக்கும் இன,மத,மொழி,பாலினப் பாகுபாடில்லாமல்ல் வாக்குரிமை தேவை என்ற கோரிக்கையை காங்கிரஸ் அதிகாரபூர்வமாக தீர்மானம் நிறைவேற்றி ஏற்றது.

 

ஆனால் மோதிலால்நேரு போன்ற பழைய தலைவர்களால் உருவாக்கபப்ட்ட அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு அளிப்பதைப்பற்றி எதுவுமே பேசப்படவில்லை. அதிலிருந்தே காங்கிரஸின் ஒட்டுமொத்த அமைப்பு அத்தகைய சலுகைகளுக்காக அன்று தயாராக இல்லை என்று தெரிகிறது. ஏன் என்றால் அன்றைய காங்கிரஸ் தாழ்த்தப்பட்டவர்களை இந்து சமூகத்திற்கு வெளியே இருப்பவர்களாக பார்க்கவில்லை என்பதே. ஒட்டுமொத்தமாக சுதந்திரம் பெறுவதேபோதும் சமூக மாற்றம் தொடங்கிவிடும் என்ற நம்பிக்கை நிலவியது.

 

அதேபோல 1931 ஜூலையில் காங்கிரஸ் காரியக்கமிட்டி கூடி எடுத்த தீர்மானங்களில்  எதிர்கால இந்தியாவில் வயதுவந்த அனைவருமே பொதுவாக்காளர் தொகுதியில் வாக்களிப்பார்கள் என்றும், பஞ்சாப் சிந்து வங்கம் பகுதிகளில் சிறுபான்மையினருக்கு அவர்களின் மக்கள் தொகை அடிப்படையில் கூடுதல் இருக்கைகள் வரும்படி தனி ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. அதிலும் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றிச் சொல்லப்படவில்லை.

 

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குச் செல்வதற்கு முன்பு 1931 ஆகஸ்ட் 14 ஆம்தேதி அம்பேத்காரை காந்தி சந்தித்தார். அன்று காங்கிரஸின் முதன்மைத்தலைவராக இருந்த காந்தி, மகாத்மா என்று கோடிக்கணக்கானவர்களால் வழிபடப்பட்ட காந்தி, அம்பேத்கார் விரும்பிய நாளில் அவரை தான் வந்து சந்திப்பதாக எழுதினார். ‘இல்லை நானே வந்து சந்திக்கிறேன்’ என்று பதில் எழுதினார் அம்பேத்கார்

[இங்கே ஒரு வம்பு நினைவுக்கு வருகிறது. தனஞ்சய் கீர் எழுதிய அம்பேத்காரின் வாழ்க்கை வரலார்றில் காந்தியை பூனா ஒப்பந்தப்பேச்சுவார்த்தைக்காக அம்பேத்கார் சந்திகக்ச் சென்றபோது காந்தி அவரை ‘பொருட்படுத்தாமல்’ பழங்களைத் தின்றவாறு தன் கட்சிக்காரர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் என்றும் முஸ்லீம்களையும் ஐரோப்பியர்களையும் சந்திக்கும்போது தவிர பிற எவரைச் சந்தித்தாலும் காந்தி அவ்வாறு தான் நடப்பார் என்றும் , அந்த அவமானம் அம்பேத்காரை கொதிக்கச் செய்தது என்றும், கூட இருந்தவர்கள் அவரை சமாதானம்செய்தார்கள் என்றும் சொல்கிறார்.பல தலித் எழுத்தாளர்கள் இச்சம்பவத்தை மேற்கோள் காட்டிப் பேசுவதுன்டு.

ஆனால் அந்த உரையாடல் பதிவாகியிருக்கிறது. அதில் அம்பேத்கார் அம்மாதிரி கொதிப்புநிலையில் இருப்பதாக தெரியவில்லை. நல்ல வேளையாக தனஞ்சய் கீர் காந்தி அம்பேத்கார் ஒரு தலித் ஆகையால் அவரை அப்படி நடத்தியதாக எழுதவில்லை. எல்லா இந்துக்களையும் காந்தி அப்படி நடத்தியதாகவே எழுதுகிறார்

அது உண்மையாக இருந்தால்கூட அதில் காந்தி அம்பேத்காரை ஒரு சக இந்துவாக எண்ணியதாக மட்டுமே பொருள்படுகிறது. முஸ்லீம்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் தனியான உபசரிப்பு ஆசாரங்கள் இருப்பதனால் காந்தி அவற்றை பின்பற்றியிருக்கலாம். அது குஜராத்தி வணிகர்களின் வழிமுறை. பொய்யான உபசாரங்களை அவர்கள் நெருக்கமானவர்கலிடம் செயதில்லை. காந்தி எந்த இடத்திலும் அம்பேத்காரைப்பற்றி ஒரு சொல்கூட எதிர்மறையாக சொன்னதில்லை, கடிதங்களில் எழுதியதில்லை என்ற உண்மை இங்கே கருததக்கது

மேலும் ஒன்று, இன்று தலித் எழுத்தாளர்களால் அதிகமாக பேசபப்டும் தனஜ்சய்கீர் இந்துமகாசபை தலைவர் சவார்கக்ரின் வரலாற்றை எழுதியவர். இந்துமகாசபையின் ஆதரவு மனநிலையும் கடுமையான காந்திய வெறுப்பும் கொண்டவர்]

இந்தச் சந்திப்பில் காங்கிரஸின் நிலைபாட்டைப்பற்றி தன்னுடைய கடுமையான மனவேறுபாட்டை அம்பேத்கார் காந்தியிடம் சொன்னார். அம்பேத்காரின் உரையாடல் பதிவாகியிருக்கிறது. உங்களால் காங்கிரஸை தீண்டாமை ஒழிப்பை நோக்கி தள்ள முடியவில்லை, நீங்கள் எங்களுக்காக செய்த ஆத்மார்த்தமான முயற்சிகள் நடைமுறைப்பயன் அளிக்காமல் இருப்பதற்கு காங்கிரஸே காரணம் என்று அம்பேத்கார் சொன்னார். தன் தரப்பை ஆவேசமாகவும் உணர்வுபூர்வமாகவும் அம்பேத்கார் முன் வைத்தார்.

 

இச்சந்திப்பு காந்தியில் மிக ஆழமான பாதிப்பை உருவாக்கியது என்று பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். அம்பேத்காரின் நேர்மையும், உணர்வெழுச்சியும், மேதமையும் காந்தியை அக்கணமே அவர் தரப்புக்கு மாறச்செய்தன. உண்மையில் இந்த ஒரே சந்திப்பில் அம்பேத்கார் காந்தியின் ஆழத்துடன் உரையாடிவிட்டார். இந்தச் சந்திப்புக்குப் பின் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையில் எப்போதுமே காங்கிரஸ¤க்குள் அம்பேத்காரின் குரலாக ஒலித்திருக்கிறார் காந்தி. மொத்த காங்கிரஸையும் தாழ்த்தப்பட்டோர் தரப்பை நோக்கி இழுத்திருக்கிறார்.

 

காந்தி அதற்கு முன் தாழ்த்தப்பட்டோர் பிரச்சினையைப்பற்றி என்ன நினைத்தார்? அவரது கோணத்தை ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால் ‘உயரிய தார்மீகத்தால் தூண்டப்பட்ட மக்கள் இணைந்து தங்கள் குறைகளை தாங்களே களைந்துகொள்வதே’ அவரைப்பொறுத்தவரை போராட்டம் என்பது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஒடுக்கப்படுவதென்பது இந்து சமூகத்தின் மாபெரும் இழிவு என்று எண்ணிய காந்தி அதற்கு எதிராக இந்து மனசாட்சி எழவேண்டும் என்றும் அது தாழ்த்தப்பட்டவர்களுக்காக போராடவேண்டும் என்றும் சொன்னார்.

 

அம்பேத்காரைச் சந்தித்தபின் காந்தியின் மனதில் எழுந்த மாறுதல் என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்களும் உயர்சாதியினரும் இணைந்து நடத்தும் போரட்டம் தேவை என்பதே. அத்துடன் சாதி என்ற அமைப்பில் இருந்து ஏற்றதாழ்வை ஒருபோதும் களையமுடியாது, ஆகவே சாதியை கலைவதே நல்லது என்றும்தான். அவ்வெண்ணம் ஹரிஜன இயக்கம் ஆரம்பித்தபோது உருவாகி பதினைந்து வருடங்கலில் அவரில் ஆழமாக வேரூன்றியது

 

1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது இந்திய அரசியல்சட்ட வரைவுக்குழுவின் தலைவராக அம்பேத்காரை அழைத்து பதவிஏற்கச் செய்தது காங்கிரஸ். அந்த நாள் வரை காங்கிரஸின் சுதந்திரப்போராட்டத்தை கடுமையாக விமரிசனம்செய்துவந்தவர் அவர். கடைசிக்கணம் வரை பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைத்து பதவியில் இருந்தவர்.காந்தியும் காங்கிரஸ¤ம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதையுமே செய்யவில்லை என நூல்களை எழுதியவர். ஆனால் இந்திய தேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் அரசியல் சட்ட வரைவுக்குழுவில் அவரது கருத்துக்களுக்கு மைய இடம் அளிக்கப்பட்டது.

 

அதற்குக் காரணம் காந்தி. எதிர்கால இந்தியாவின் குடிமைச் சட்டத்தை அம்பேத்கார் வரைய வேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். சுதந்திர இந்தியாவின்  அமைச்சர் பட்டியல் அவர் பார்த்து அங்கீகரித்த பிறகே வெளியாகியது. அரசியல் சாசன வரைவுக்குப் பின்னர் திட்டம் அல்லது வளர்ச்சித்துறை அளிக்கவேண்டும் என்றும் காந்தி எண்ணினார். ஏன், கிராமசுயராஜ்யம் குறித்த தன் இலட்சியத்தை அம்பேத்காரிடம் விவாதித்து அவரை ஏற்கச்செய்யலாமென்றும் காந்தி கனவுகண்டிருந்தார்!

 

அம்பேத்காரின் சொற்களிலேயே சொன்னால் உயர்சாதியினரின் கூடாரமாகிய ஒரு அமைப்பு, ஒரு சனாதனியால் வழிநடத்திக்கொண்டுவரப்பட்ட அமைப்பு, ஒரு நூற்றாண்டுக்கால போராட்டத்தின் விளைவாகப் பெற்ற ஓர் அரசியல் உரிமையை பகிர்ந்துகொள்ள அவரை அழைத்து சபைநடுவே அமரச் செய்தது. ஆயிரம் சொற்களில் மழுப்பினாலும் இந்த வரலாற்று உண்மை மறைந்து போய்விடாது. இதற்கு இணையான ஒரு வரலாற்று நிகழ்வை இன்னொரு தேசத்தின் வரலாற்றில் சுட்டிக்காட்டிவிடவும் முடியாது.

 

 

அரசியல்சட்டத்தின் வரைவில் அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை நிறுவினார். தேர்தல்கள், கல்வி, வேலைவாய்ப்பு, உயர்கல்வி உட்பட அனைத்திலும் தலித்துக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்டோருக்கு அளித்த சலுகைகள் இருபது வருடங்களுக்கு மட்டுமே. காந்தி அளித்த சலுகை எக்காலத்துக்குமாக!  1947 முதல் மூன்றுவருடம் பாராளுமன்றத்தில் நிகழ்ந்த கடுமையான விவாதங்களில் பழமைவாதிகளின் எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்தது நேருவின் ஈடிணையற்ற மக்களாதரவே ஒழிய வேறு எதுவுமே அல்ல. 1951ல் அரசியல்சட்டம் ஏற்கப்பட்டது.

 

அதை காங்கிரஸ் எப்படி ஏற்றுக்கொண்டது என்பதையே நாம் காணவேண்டும். அப்போதும் காங்கிரஸ் உயர்சாதியினர் அதிகமாகப் பங்குகொண்ட கட்சியே. அப்போதும் காங்கிரஸில் சாதியவாதிகள், பழமைவாதிகள் இருந்தார்கள். அவர்கள் வாய்மூடிக்கிடக்க நேர்ந்தது. ஏன் என்றால் அது காந்தியின் காங்கிரஸ். காந்தி அந்த இடத்தை நோக்கி காங்கிரஸைக் கொண்டு வந்து சேர்த்திருந்தார். நூற்றாண்டுக்கால சாதிப்பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்த மக்களினால் ஆன ஓர் அமைப்பை அவர் ஆன்மீகமான வளர்த்தெடுத்து அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்துக்குத் தகுதியானதாக ஆக்கியிருந்தார்.

 

உண்மையில் இந்திய சமூகத்தில் 1952 தேர்தல்களுக்குப் பிறகு உருவான சாதி,சமூகங்களின் அதிகாரப்போட்டி அப்போது வலுவாக உருவாகியிருக்கவில்லை. இந்தியமக்கள் காந்தியின் நினைவு என்ற உணர்வெழுச்சியில் மூழ்கிக்கிடந்த காலம். தன் சொற்களை நேரு பேசுவார் என காந்தி சொன்ன சொற்கள் நேருவை தேசநாயகனாக நிறுத்திய காலம். ஆகவேதான் அந்த சலுகைகளைச் சட்டமாக்க முடிந்தது. 1952க்குப்பின் அதை சட்டமாக்க எந்த சக்தியாலும் முடிந்திருக்காது.

 

இன்று தலித்சிந்தனையாளர்களில் ஒருசாரார் எழுதும்போது இடஒதுக்கீடு அளித்த நன்மைகளைப் பட்டியலிட்டு அது அம்பேத்காரால் தலித்துக்களுக்கு வழங்கப்பட்ட மாபெரும்கொடை என்று மீண்டும் மீண்டும் பதிவுசெய்கிறார்கள். கண்டிப்பாக அம்பேத்காரின் கோரிக்கையும் வடிவமைப்பில் அவரது பங்களிப்பும் இட ஒதுக்கீட்டில் முக்கியமான இடம் வகித்தன. ஆனால் அவர் அதை எந்தப் போராட்டத்தையும் நடத்தி அடையவில்லை. காங்கிரஸ் அவரை அழைத்தமைக்குக் காரணம் காங்கிரசின் மனசாட்சி அவரது தரப்பை ஏற்றுக்கொண்டிருந்தது என்பதே. அந்த மனசாட்சியின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

6. இறந்தகாலத்தை மாற்றி எழுதுதல்

 

தலித்துக்கள் இன்று ஓர் அரசியல் சக்தியாக திரள்வதற்கு அச்சமூகத்தின் உள்ளே உள்ள பலநூறு சாதி ஏற்றத்தாழ்வுகளும் பேதங்களுமே காரணமாக இருக்கின்றன. அத்துடன் அரசியலில் இன்று உருவாகியிருக்கும் ஊழல் என்ற மாபெரும் தொற்றுநோய். ஆகவே அவர்கள் எண்ணும் இலக்குகள் வெகுதூரத்திலேயே உள்ளன.

 

தங்கள் இன்றைய நிலைக்குக் காரணமாக இறந்தகாலத்தில் வந்து நழுவிய ஒரு வாய்ப்பைச் சொல்லி ஆறுதல் செய்துகொள்வதற்காகவே பூனா ஒப்பந்தம் இன்று மிகைப்படுத்தப்படுகிறது. அந்த நோக்கத்துக்காக மொத்த இறந்தகாலமும் காலயந்திரப் பயணம் மூலம் தலைகீழாக மாற்றிக் கட்டப்படுகிறது. தங்களை பின்னிழுக்கும் ஆயிரம் சிக்கல்களை களைவதற்கான அரசியலியக்கத்துக்குப் பதிலாக இந்த  இறந்தகால நிகழ்வு குத்திக் குத்தி புண்ணாக்கபப்டுகிறது. ஒரு பொது எதிரியைக் கொண்டு தங்களை தொகுத்துக்கொள்ளலாம் என்ற திட்டமன்றி வேறல்ல.

 

தங்கத்தட்டில் ஒரு விடுதலை வாக்குறுதி

ஒரு பேச்சுக்காக பூனா ஒப்பந்தம் நிறைவேறவே இல்லை என்று வைத்துக்கொள்வோம். பிரிட்டிஷ் அரசு அம்பேத்காருக்கு அளித்த வாக்குறுதியின்படி இரட்டை வாக்குரிமையை அளித்து 1932ல் தேர்தல்களை நடத்தியிருந்தது என்றால் இந்தியாவில் என்ன நடந்திருக்கும்? இன்றைய தலித் சிந்தனையாளர்களில் ஒருசாரார் சொல்வதை வைத்துப்பார்த்தால் தலித்துக்களின் வாழ்க்கை பரிபூரண விடுதலை பெற்றிருக்கும்! அதை உண்மையிலேயே ஒருவர் நம்பிச் சொல்கிறார் என்றால் அத்தகைய தலைவர்களைப் பெற்றமைக்காக தலித்துக்களை எண்ணி பரிதாபப் படுவதல்லாமல் வேறு வழி இல்லை.

 

1932ல் தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகள் அப்போதுதான் அரசியல் பிரச்சினையாக உருமாற ஆரம்பித்தன.அன்றுவரை அது ஒரு சமூகப்பிரச்சினையே. இந்தியாவெங்கும் உள்ள தாழ்த்தப்பட்ட சாதிகளில் அரசியல் அறிமுகம் பெற்றவை மிகமிகச்சிலவே. அச்சாதிகளுக்குள் ஓர் ஒற்றுமையை உருவாக்குவதற்கான பணி ஆரம்பிக்கப்படவே இல்லை. பின்னர் அம்பேத்கார் புகழும் அதிகாரமும் பெற்ற பிறகும்கூட அவரால் தலித் ஒற்றுமையையும் அரசியல்மயமாக்கத்தையும் நிகழ்த்த முடியவில்லை. அரைநூற்றாண்டுகழிந்து எண்பதுகளில் தலித் இயக்கங்கள் மூலமும் பகுஜன் சமாஜ் போன்ற அரசியலியக்கங்கள் மூலமும் அந்த பணி உயர்வேகத்தில் ஆரம்பித்தும்கூட இன்றும் சொல்லும்படியாக ஏதும் நிகழவில்லை.

 

ஏனென்றால் அது அத்தனை எளிய விஷயமல்ல. இந்திய சமூகத்தின் அபாரமான பன்மைத்தன்மையை ஒருகுறிப்பிட்ட தளத்தில் ஒருங்கிணைப்பதற்கு உத்வேகமான இலட்சியவாதமும், பொதுவானதும் நடைமுறைச்சாத்தியமானதுமான ஒரு கோட்பாட்டுத்தளமும் ,அதை அடிமட்டம் வரைக் கோண்டுசெல்லக்கூடிய நெடுநாள் உழைப்பும் தேவை. படிப்படியாகவே அது நிகழமுடியும்.

 

ஆகவே அப்போதே இப்போதுள்ள தலித்தியர் சிலர் சொல்வதுபோல தங்கத்தட்டில் பிரிட்டிஷார் அள்ளிவழங்கிய இரட்டை வாக்குரிமையை எந்தவிதமான தடையும் இல்லாமல் அடைந்து, தேர்தல்களில் வென்று, ஒரு நூறு தலித் உறுப்பினர்கள் பிரிட்டிஷாரின் மேலதிகாரத்துக்கு கீழே இருந்த மத்தியசபையில் சென்றமர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? தாழ்த்தப்பட்டவர்களிலேயே கல்வியோ நிலமோ உள்ளவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் வாய்ப்பு என்ற நிலையில் தலித்துக்களுக்குள்ளேயே யார் அதிகாரத்துக்குச் சென்றிருப்பார்கள்?

 

அம்பேத்காரும், எம் சி ராஜாவும், ரெட்டைமலைசீனிவாசனும் சில பதவிகளை அடைந்திருப்பார்கள். மத்திய சபையில் ஆவேசமாகப் பேசியிருப்பார்கள். இவர்கள் அனைவருமே தலித்துக்களுக்குள் மேல்சாதி. தலித்துக்களுக்குள் உயர்வற்கமாகத் திகழ்ந்தவர்கள். இவர்கள் அறிவுஜீவிகளான, பார்லிமெண்டேரியன்களே ஒழிய நேரடியாக மக்களிடையே சென்று பணியாற்றிய மக்கள்தலைவர்கள் அல்ல. அதை அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இருந்தே உணர முடியும்.

 

அவர்களின் பேச்சையும் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு மளமளவென சட்டங்கள் நிறைவேற்றி ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்டவர்களையும் பொருளியல் அரசியல் தளங்களில் முழுமைபெறச்செய்யும் நடவடிக்கைகளில் பிரிட்டிஷ் அரசு உடனடியாக ஈடுபட ஆரம்பித்திருக்குமா என்ன? இருநூறாண்டுகள் அவர்கள் கண்களுக்குப் படாத யதார்த்ததை இவர்கள் சொன்னதுமே உணர்ந்துகொண்டு மனிதாபிமானம் பீரிட கிளம்பியிருப்பார்களா என்ன?

 

தங்கள் ஆட்சியின் வேர்களாக இருந்த சமஸ்தான மன்னர்களையும் ஜமீந்தார்களையும் கடைசிவரைக் கைவிட பிரிட்டிஷார் தயாராக இருக்கவில்லை என்பதே வரலாறு. அவர்கள் பெரும்பாலும் அனைவருமே சாதியில் ஊறியவர்களாக தாழ்த்தப்பட்டோருக்கான விடுதலையை கடைசிவரை தடுப்பவர்களாக இருந்தார்கள் என்பதும் உண்மை. 1947ல் அரசியல்சட்ட வரைவுக்குழுவும் அதை ஆவேசமாகப் பேசிய அம்பேத்கார் அந்த அதிகார மையங்கள் எந்த வகையிலும் நீடிக்க விடக்கூடாது என்று வாதாடியிருக்கிறார். பிரிட்டிஷாரிடம் அவர் அதற்காக கோரியிருக்கவேண்டியதுதானே?

 

நேர்மாறாக இரண்டாம் வட்டமேஜைமாநாட்டில் அம்பேத்கார் அந்த குறுநில மன்னர்கள் திவான்கள் மற்றும் நிலப்பிரபுக்களுடன் இணைந்து ஒரே அணியாக பிரிட்டிஷ் ஆதரவாளராகவே செயலாற்றினார். காந்தியை அங்கே தனிமைப்படுத்தினார் என்பதே வரலாறு. அந்த மன்னர்களில் பலர் வயதுவந்தோருக்கு வாக்குரிமை போன்ற கோரிக்கைகளுக்கு எதிராக மிகக் கடுமையான நிலைபாடு கொண்டவர்கள்.

 

1932ல் அளிக்கப்பட்ட இரட்டை வாக்குரிமை என்பது ஒரு போலி அதிகாரத்தை மட்டுமே உருவாக்கியிருக்கும் என்பதைக் காண நுண்ணோக்கு ஒன்றும் தேவை கிடையாது. தாழ்த்தப்பட்டோருக்கான விடுதலை என்பது அம்மக்கள் அனைவரையும் அடித்தளம் வரை ஊடுருவிச்சென்று அவர்களின் கருத்தியலில் மாற்றத்தை உண்டுபண்ணும் மக்களியக்கங்களினாலேயே சாத்தியமாகியிருக்கும். அவர்களை அடிமைப்படுத்தியிருக்கும் சமூகக் கட்டுமானத்தையும் எதிர்மனநிலைகளையும் பலவீனப்படுத்துவதன் மூலமே சாத்தியமாகியிருக்கும். ஆனால் அம்பேத்கார் அரசியலதிகாரத்தின்மூலம் மேலிருந்து அதைச் செய்யமுடியுமென எண்ணினார்.

 

ஒரு ஜனநாயக அமைப்பில் மேலிடஅதிகாரமேகூட மக்களியக்கம் மூலமே உண்மையில் கையில்வரும். தாழ்த்தப்பட்டவர்களுக்கான அதிகாரம் என்பது இந்திய சமூகத்தின் ஒட்டு மொத்தத்தை எதிர்த்தும் சமரசம் செய்தும் தாழ்த்தப்பட்டவர்கள் கைப்பற்றிக்கொள்வதாகவே இருக்க முடியும். இன்று உத்தரபிரதேசத்தில் நடப்பது கிட்டத்தட்ட அதுவே. அம்பேத்கார் அதை ஓர் அன்னிய அடக்குமுறை அமைப்பின் தயவால் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றே என்ணினார். அது ஒருபோதும் சாத்தியமாகியிருக்காது.

 

ஆம், எந்த ஒரு அரசியல் அதிகாரமும் ஒரு நீண்ட சமூக முரணியக்கம் மூலமே சாத்தியமாகும். அதிகாரச் சதிகள் மூலமோ, சம்பந்தப்படாத ஒருவர் பரிந்தளிப்பதன் மூலமோ பழுத்து மடியில் விழாது. போராட்டமும் சமரசமும் அந்த முரணியக்கத்தின் படிநிலைகளாக மாறி வரும். இந்த விஷயத்தை ஆரம்பம் முதலே இந்திய இடதுசாரிகள் சொல்லிவந்தார்கள்.மக்கள் பங்கேற்பு மூலமும் நெடுங்கால போராட்டம் மூலமும் மட்டுமே சமூகவிடுதலை சாத்தியம், அதை ஏகாதிபத்தியம் பிச்சைபோடமுடியாது என.

 

தாழ்த்தப்பட்டவர்களுக்கான உண்மையான அதிகாரத்தை அவர்கள் ஈட்டிக்கொள்வதற்கான மக்களியக்கமாக நிகழ்ந்தது காந்தியின் ஹரிஜன இயக்கமே. ஒருபக்கம் அது இந்தியா முழுக்க தாழ்த்தப்பட்ட எளிய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை அளித்தது. மறுபக்கம் அவர்களின் நிலையைப்பற்றிய பிரக்ஞையையும் அதில் பிறருக்கு உருவாகவேண்டிய பொறுப்புணர்ச்சியையும் பிற மக்களில் ஏற்படுத்தியது.அ ம்பேத்கார் செய்திருக்கவேண்டிய, காந்தி செய்த, பெரும்பணி அது.

 

தெலுங்கானா முதலிய பல இடங்களில் இடதுசாரி இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளுக்காக பிற ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நேரடியாக எதிர்ப்பைத்தெரிவித்துப் போராடுவதற்கான வழிமுறையைக் காட்டின. கேரளத்திலும் தமிழகத்திலும் தலித்துகளுக்கான நில உரிமைப்போர்களை கம்யுனிஸ்டுக்கட்சி முன்னின்று நடத்தியது. இன்றுவரை தலித் அரசியலின் அடித்தளமாக இருப்பது இவைபோன்ற மக்களியக்கங்களே.

 

பிரிட்டிஷாரின் இலவசமாக இரட்டை வாக்குரிமையைப் பெற்று அரசியலதிகாரத்தையே தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்தார்கள் என்று கொள்வோம், அது எத்தனைநாளுக்கு நீடித்திருக்கும்? 1932ல் அப்போதே இந்தியாவின் எல்லா சமூகங்களும் அரசியல் விழிப்பு கொள்ள ஆரம்பித்துவிட்டிருந்தன. சுதந்திரப் போராட்டத்தின் இறுதிநாட்களில் காங்கிரஸின் கட்டுமானத்தில் பிற்பட்டோரின் இடம் வலுவாக நிகழ ஆரம்பித்து விட்டிருந்தது.

 

எண்ணிக்கையே ஜனநாயகத்தின் முதல்பலம் என்றநிலையில் சுதந்திரத்துக்குப் பின் காங்கிரஸ் உருவாக்கிய வயதுவந்தோர் ஓட்டுரிமை அதுவரையிலான அரசியல் சமநிலைகளை எல்லாமே தலகீழாகத்திருப்பிவிடவிருந்தது. விளைவாக மேலும் சில வருடங்களில் இந்தியாவின் சமூக அதிகாரம் என்பது ஒட்டுமொத்தமாகவே பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் கைக்குச் செல்லவிருந்தது. அவர்கள் அந்த இரட்டைவாக்குரிமைச் சலுகையை தாங்களும் அங்கீகரித்து அப்படியே தூக்கிக் கொடுத்துவிடுவார்களா என்ன?

 

இந்தியசமூகத்தின் பலநூறு ஒடுக்கப்பட்ட சாதிகள் அதிகாரத்துக்காக முண்டியடிக்கும் ஒரு சூழலில் ஒரு தரப்பு மட்டும் பிரிட்டிஷாருடன் சமரசம் செய்துகொண்டு பெறும் ஓர் அரசியலதிகாரம் எந்த அளவுக்குச் செல்லுபடியாகும்? எத்தனை காலம் செல்லுபடியாகும்? அந்த சமூகப்பேரமைப்பை ஒரு பொருட்டாகவே எண்ணாமல், அதற்கெதிராக  இந்திய அளவிலான ஒரு சிறிய மக்களியக்கத்தைக்கூட கட்ட முடியாமல், வெறுமே அதிகாரப்பேரம் மூலமே அம்பேத்கார் அடைய முற்பட்ட அந்த இரட்டை வாக்குரிமையினால் என்ன நடைமுறைப்பயன் விளைந்திருக்கும்?

 

பிரிட்டிஷ் சலுகையாகிய இரட்டைவாக்குரிமை இருந்து, அதன் மூலம் ஒரு அதிகாரத்தையும் தாழ்த்தப்பட்டோர் அடைந்திருந்து,அந்நிலையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து மெல்ல அதிகாரம் பிற்படுத்தப்பட்டோர் கைக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? பிற்பட்டோரின் அதிகாரம் அவர்கள் பிரிட்டிஷ் அரசை வென்று அடைந்தது. தாழ்த்தப்பட்டோர் அதிகாரம் அந்தப்போராட்டத்தை எதிர்த்து பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்து அடையப்பெற்றது. அந்நிலையில் அந்த தாழ்த்தப்பட்டோர் அதிகாரம் எவ்வாறு  எதிர்கொள்ளப்பட்டிருக்கும்? ஒட்டுமொத்த தலித் அரசியலும் பிற்படுத்தப்பட்டோரின் மாபெரும் எண்ணிக்கை பலத்தால் குப்பைக்கூடைக்குத் தூக்கி வீசப்பட்டிருக்கும். இதனை இன்றைய இந்திய அரசியலைக் கொஞ்சம் கவனிக்கும் எவருமே உணர முடியும்.

 

அப்படி நிகழாது போனது காந்தி தலைமை வகித்த காங்கிரஸ¤டன் அம்பேத்கார் நடத்திய பேச்சுவார்த்தைகள் மூலமே. அப்போது காங்கிரஸ் ஒத்துக்கொண்ட விஷயங்கள் மூலமே. அதுமட்டுமே தாழ்த்தப்பட்டோர் உண்மையிலேயே ஈட்டிய வெற்றி. அந்த வெற்றியை அடைய தாழ்த்தப்பட்டோர் கையில் இருந்த ஆயுதம் அவர்கள் தரப்பில் இருந்த நியாயம். அதனை பிரம்மாண்டமான வரலாற்றுப்பிரக்ஞையுடன், வன்மையான சொற்களில் தீவிரமாக முன்வைத்த அம்பேத்கார் போன்ற ஒரு மாபெரும் அறிவுஜீவி. அத்துடன் மறுமுனையில் தன் மூளைக்குப் பதில் மனசாட்சியை வைத்து விவாதிக்க வந்த ஒரு மகத்தான தலைவன்.

 

அவனுடைய மனசாட்சியின் வல்லமையாலேயே இந்திய சமூகம் தாழ்த்தப்பட்டோருக்கான சலுகைகளை அவர்களின் உரிமைகளாக புரிந்துகொண்டது.இன்று இந்தியா காங்கிரஸ¤ம் காந்தியும் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்பவர்களிடம் தாழ்த்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகளை அவர்கள் எவ்வகையிலும் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் யார் என்ன செய்திருக்க முடியும் என்ற எளிமையான கேள்வியை கேட்க முடியும். அவர்களுக்கிருந்த மாபெரும் மக்கள்செல்வாக்கை வைத்து அந்தக்கோரிக்கைகளை அப்படியே தூக்கி வீசியிருந்தால் ஒருபாராளுமன்றத்தேர்தலில் கூட ஜெயிக்கமுடியாத இவர்கள் என்ன செய்திருப்பார்கள்?

 

உலகின் எத்தனையோ நாடுகளில் அன்று அதுதான் நடந்தது. ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்துப் போராடி மிகப்பெரிய தியாகங்களின் விலையாகத்தான் சிறிய அளவிலேனும் உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள். அரசியலதிகாரம் என்பது ஈவிரக்கமில்லா பேரங்கள் வழியாக இம்மி இம்மியாகவே அடையப்படுகிறது. ஆனால்  இந்தியாவில் நிகழ்ந்தது அதுவல்ல. இந்தியாவின் அதிகாரத்தை அடைந்த பெரும்பான்மையின் மனசாட்சியே தலித்துக்களுக்கான அதிகாரமாக ஆகியது. அந்த அப்பட்டமான வரலாற்று உண்மைமேல்தான் இந்தப் பொய்கள் மூலம் சாயம் பூசிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

காந்தி ஏன் இரட்டை வாக்குரிமையை எதிர்த்தார்?

 

இந்தியாவில் தனித்தொகுதி ஒதுக்கீடு என்பது புதியவிஷயமல்ல.  1909 லேயே மிண்டோ–மார்லி இந்திய அரசினர் சட்டம் [Government of India Act 1909] மூலம் இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும்  தனித்தொகுதி மற்றும் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்திருந்தது. அதன் பின்னர் பிரிட்டிஷ் ஆதரவுள்ள அரசுகள் அமைத்த மாகாண அரசுகளில் பல கோணங்களில் தேவைக்கேற்ப இட ஒதுகீடுகள் உருவாக்கப்பட்டிருந்தன.

 

இந்த இட ஒதுக்கீடுகளின் அரசியல் என்பது அக்காலச் சூழலில் வைத்து பார்க்கும்போது மிகவும் சிக்கலான ஒன்று. இரு அடிப்படைகளிலேயே அந்த இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. தங்கள் ஆதிக்கத்துடன் ஒத்துப்போகும் வகுப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. சீக்கியர்கள் என்றுமே பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் பின்புலச் சக்தியாக இருந்தார்கள். இந்தியாவில் மட்டுமல்ல பிரிட்டனின் ராணுவத்திலும், ஆஸ்திரேலிய ராணுவத்திலும்கூட அவர்கள் பெரும்பங்காற்றினர். அதற்குப் பிரதியுபகாரமாக அவர்களுக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

 

அதேபோல் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடும் அம்மக்களின் உயர்மட்டத்தினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழங்கிய ஆதரவிற்குப் பதிலாகவே வழங்கப்பட்டது. 1857ல் நடந்த சிப்பாய்க்கலவரத்தில் இஸ்லாமிய உயர்குடிகள் மற்றும் பத்தானியர்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அனுசரணையாக இருந்து அந்தச் சலுகைகளை பெற்றார்கள். அவர்களை இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, அன்னியர்கள் என்று அடையாளாபப்டுத்தி தனித்தேசமாக கண்டு அந்தச் சலுகைகள் அளிக்கப்பட்டன.

 

அன்று தாழ்த்தப்பட்டோரின் சில அமைப்புகள் உட்பட ஏராளமான சிறிய சமூகக்குழுக்கள் தாங்களும் பிரிட்டனுக்கு விசுவாசமானவர்களே என்று அறிவித்து, காங்கிரஸ¤க்கு எதிரானவர்களாக நடந்துகொண்டு, பிரிட்டிஷார் அச்சலுகைகளை தங்களுக்கும் அளிக்கவேண்டும் என்று கோரிவந்தார்கள். அக்காலத்தில் நடைபெற்ற விவாதங்களை இன்று வாசிக்கும்போது மிகவும் ஆச்சரியமும் வருத்தமும் உருவாகும். ஆப்ரிக்காவிலும் அரேபியாவிலும் சமீப காலம் வரை வெள்ளையர் செய்துவந்த அப்பட்டமான பிரித்தாளும் சூழ்ச்சி மட்டுமே அது. அந்த எளிய தந்திரங்களைக்கூட புரிந்துகொள்ள முடியாதவர்களாக நம்மவர் இருந்திருக்கிறார்கள்.

 

ஆங்கிலேயர்களின் செயல்பாடு பல படிகள் கொண்டது. முதலில், காங்கிரஸ் அமைப்பு உயர்சாதி அமைப்பு அல்லது இந்து அமைப்பு என்றும் அவர்கள் பிறருக்கு நியாயம் வழங்க மாட்டார்கள் என்றும் ஆங்கில அரசும் அதன் அறிவுஜீவிகளும் பிரச்சாரம் செய்வார்கள். அதன் பின்னர் ஒரு சமூகத்தில் பிரிட்டிஷ் அரசுக்குச் சாதகமான மனநிலை கொண்ட உயர்மட்டத் தலைவர்கள் சிலர்  தனிச்சமூகமாக தங்களை அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பார்கள். அதை ‘ஆழமாக’ப் பரிசீலனை செய்து ஆங்கில அரசு அதை அனுமதிக்கும். அதன்மூலம் அந்த உயர்மட்டத்தவருக்கு மட்டுமே ஏதேனும் லாபம் இருக்கும்.

 

அந்த இட ஒதுக்கீடு பெரும்பாலான நேரங்களில் பிற சாதியினரைச் சீண்டுவதாக, அவர்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதாக இருக்கும். அதற்கு எதிராக அம்மக்கள் சினம் கொள்ளும்போது சமூகம் இரண்டாகப் பிரியும். பதற்றம் தொடர்ந்து நீடிக்கும். சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடுகள் மூலம் அம்மக்களின் பெரும்பாலாரான அடித்தளத்தினருக்கு எவ்வகையான உரிமைகளும் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அவர்களின் வாழ்க்கையில் சிறு மாற்றம்கூட நிகழவில்லை. மாறாக அவர்களுக்கும் பிற வகுப்ப்¢னருக்கும் இடையே ஆறாத கசப்புகள் உருவாயின. அக்கசப்புகள் பல தளங்களில் தொட்டுத்தொட்டு வளர்ந்தன. அவற்றை சமரசம்செய்வது சாதாரணமான செயலாக இருக்கவில்லை.

 

உண்மையிலேயே அம்மக்களின் அடித்தட்டுக்கு ஏதேனும் நன்மை செய்யவிரும்பியிருந்தால் பிரிட்டிஷார் வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்திருப்பார்கள். அதை அவர்கள் செய்யவில்லை. அதை செய்தது காங்கிரஸ். அக்காலத்திலேயே மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் பிரிவினைஅரசியலை இந்திய மனங்களில் கூர்ந்தவை கண்டுகொண்டிருக்கின்றன. ‘களங்கமுறும் மார்லிநடம்’ என்று பாரதி அதைப்பற்றிப் பாடினார். காந்தி பின்னர் பிரிட்டிஷார் உருவாக்கிய பிரிவினைகளை கூர்ந்து ஆராய்ந்திருக்கிறார்.

 

இந்திய அரசியலில் 1915 வாக்கில் நுழையும்போதே காந்தி முஸ்லீம் சமூகமும் சீக்கிய சமூகமும் இந்திய மையஓட்டத்தில் இருந்து பெருமளவுக்கு பிரிக்கப்பட்டுவிட்டன என்று உணர்ந்தார். குறிப்பாக 1908ல் மிண்டோ-மார்லி சீர்திருத்தம் குறித்த விவாதங்களில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து நடந்த பொதுவிவாதங்களை அக்கால இதழ்களில் இன்று வாசிக்கும்போது கசப்புகள் பொங்கிவழிவதையே காணமுடிகிறது.

 

அந்த மனக்கசப்பு என்பது ஒரு வரலாற்றுப் பூதத்தை புட்டியில் இருந்து வெளியே திறந்து விடுகிறது என்பதைக் கண்டார். இன்று  அந்த விவாதங்களை வாசிக்கையில் 1947 ன் ரத்த ஆறுக்கான விதை போடபப்ட்டுவிட்டது என்பதை தெள்ளத்தெளிவாகவே காணமுடிகிறது. காந்தி இந்திய அரசியலில் நுழைந்த 1918 லேயே இந்த விஷயத்தைப்பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசியிருக்கிறார். அவரது அரசியலின் முதல் செயல்திட்டமே இஸ்லாமியரை மைய ஓட்டத்துக்குக் கொண்டுவருவதாகவே இருந்தது.

 

சீக்கியர்களுக்கான இட ஒதுக்கீட்டிலும் அதேபோல ஒரு வரலாற்றுப்பூதம் எழுப்பப்பட்டது. சீக்கியர் இந்தியாவில்  ஒடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களுக்குள்ளேயே தலித்துக்கள் உண்டு. அவர்கள் கீழ்நிலையில்தான் இருந்தார்கள். ஆனால் ஒட்டு மொத்த சீக்கியர்களையும் ஒரு தனி வகுப்பாக கண்டு இரட்டைவாக்குரிமை சலுகை அளித்தது பிரிட்டிஷ் அரசு. அவர்களின் தனியடையாளவிருப்பு எதிர்காலத்தில் ஒரு மாபெரும் பிளவாக ஆகும் என அது கணித்தது.

 

ஒரு தனி வகுப்பாக கணிக்கப்பட்டு சலுகை அளிக்கப்படும் சமூகம் அந்தச் சலுகைக்காகவே தன்னை தனியாகப் பிரித்துக்கொள்ளும். பிற சமூகங்களுடன் போராடும். அதன் விளைவாக உருவாகும் கசப்புகள் ஒருபோதும் மறையாது. சீக்கியர்களின் இந்த மனநிலையை ஒரு வரலாற்றுத்தொடராகவே இன்று பார்க்கலாம். அவர்கள் தங்களை சலுகைபெற்ற தனிக்குழுவாகவே  எப்போதும் உணர்ந்தார்கள், உணர்கிறார்கள் இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்ட முப்பது வருடங்களுக்குள் அவர்கள் தங்களை ஒரு தனித்தேசமாக உணர ஆரம்பித்துவிட்டார்கள்.1942லேயே காலிஸ்தான் கோஷம் ஆரம்பித்துவிட்டது.

 

இந்தியவிடுதலையின்போது சீக்கியரைக் கவர பல தனி வாக்குறுதிகளை அளித்தார் நேரு. அதனால் பிற சமூகங்கள் கசப்படைந்தன. அக்கசப்பின் விளைவாக உருவான பிளவு மீண்டும் மீண்டும் பல்வேறு அதிகாரப் பகிர்வுப்பிரச்சினைகளால் , வளப்பகிர்வுப்பிரச்சினைகளால் முற்றி பஞ்சாப் பிரச்சினை வரை வந்து குருதிகொப்பளிக்கச் செய்தது.

 

வகுப்புபேதங்களின் வெடிமருந்து புதைக்கப்பட்ட நிலம் இந்தியா. அதை காந்தி அளவுக்கு எவரேனும் உணர்ந்திருந்தார்களா என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் பிரிவினை நோக்குக்கு எதிரான சமரசம் குறித்து காந்தி பேசியது இதற்காகவே. மிண்டோ மார்லி இட ஒதுக்கீடுகள் மூலம் உருவான வகுப்புவாத மனக்கசப்பை வெல்லவே காந்தி 1920 ல் கிலா·பத் இயக்கத்தை ஆதரிக்க முற்பட்டார்.

 

காந்தி கிலா·பத் இயக்கம் மூலம் முஸ்லீம்களுடன் உருவான பேதங்களை சரிசெய்ய முயன்றார். சலுகைகளைப் பெற்றுக்கொண்டு பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்த இஸ்லாமிய ஆளும் வர்க்கத்துக்கு எதிராக உருவாகி வந்த ஒரு மக்களியக்கமாகவே அவர் கிலா·பத் இயக்கத்தைக் கண்டார். அதன்மூலம் அன்று வலுவாக உருத்திரண்டுவந்த மனக்கசப்பை வெற்றிகொள்ள முடியும் என எண்ணினார். அவரது முயற்சிகளுக்கு எதிராக காங்கிரஸில் இருந்த மனக்கசப்புகளை வெல்ல மாபெரும் உண்ணாவிரதத்தை நிகழ்த்தினார்.

 

காந்தியின் கனவு சாத்தியமாகவில்லை என்பதும் கிலா·பத் இயக்கம் மெல்ல மத அடிப்படைவாதிகள் கைக்குச் சென்று அழிவுசக்தியாக ஆகியது என்பது துயரமான வரலாறே. கிலா·பத் இயக்கம் தற்காலிகமாகத்தான் ஒரு இந்து முஸ்லீம் ஒற்றுமையை உருவாக்கியது. முஸ்லீம்களுக்கு தனி வாக்குரிமை அளித்து பிரித்து நாட்டுக்குள் ஒருநாடாக இயங்கச்செய்த வெள்ளையர் அதை இருநாடு கோரிக்கையாக ஆக்குவதில் வெற்றி பெற்றனர். 1930ல் ‘இந்தியா இருநாடு’ என்ற கோஷம் வலுப்பெற ஆரம்பிதது. பாகிஸ்தான் என்ற சொல் பிறந்துவிட்டது.

 

அந்த வரலாற்று பேரபாயத்துக்கு எதிராக காந்தி போராடிக்கொண்டிருந்த தருணத்தில்தான் 1932ல் மாண்டேகு செம்ஸ்போர்டு பரிந்துரையின்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டைவாக்குரிமை மூலம் தனிப்பிரதிநிதித்துவம் என்ற திட்டம் முன்வைக்கப்படுகிறது. இந்திய சமூகத்துடன் எந்த உறவும் இல்லாமல் அவர்கள் நாட்டுக்குள் ஒருநாடு போல ஓட்டுபோட்டு தங்கள் பிரதிநிதிகளை பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கலாம் என்று உரிமை அளிக்கப்பட்டது.

 

எந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பிளவையும் பேரழிவையும் உருவாக்கும் என்று காந்தி எண்ணினாரோ, எதற்கு எதிராக தன் நெடும்போராட்டத்தை மேற்கொண்டிருந்தாரோ, அதற்கு எதிராக அவர் தன் உயிரையே பணயம் வைத்துப் போராடியதில் என்ன தவறிருக்க முடியும்? அப்படி அவர் செய்யவில்லை என்றால்தான் அது மாபெரும் முரண்பாடு.

 

இன்று காந்தியைப்பற்றி சொல்லப்படும் ஓர் அவதூறு, அவர் இஸ்லாமியர்களுக்கும் சீக்கியர்களுக்கும் அளிக்கப்பட்ட தனித்தொகுதிமுறையை ஆதரித்தார், தலித்துக்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையை எதிர்த்தார் என்பது. அப்பட்டமான திரிபல்லாமல் வேறல்ல இது. காந்தி சொன்னது முஸ்லீம்களுயும் சீக்கியர்களும் அவர்களின் சொந்த மத அடையாளத்தால் தனித்தவர்களாக கருதப்படுகிறார்கள், தாழ்த்தப்பட்டவர்கள் பிறர் அவர்களை இழிவுசெய்வதனால் அப்படி கருதப்படுகிறார்கள், அதை அப்படியே நீடிக்க விடலாமா என்றே

 

தீண்டப்படாதார் என்ற தனி வகுப்பாக பிரிப்பதை நான் விரும்பவில்லை. சீக்கியர் சீக்கியராக நிரந்தரமாக இருக்கலாம். அப்படி முஸ்லீம்களும் கிறித்தவர்களும் இருக்கலாம். தீண்டப்படாதோரும் அப்படியே தீண்டபப்டாதாராக எக்காலமும் நீடித்திருக்க வேண்டுமா என்ன? தீண்டாமை அப்படி நிரந்தரமாக இருக்கும் என்றால் இந்துமரபே அழியட்டும் என்றே நான் சொல்வேன்” என்று வட்டமேஜை மாநாட்டுக்கான உபகுழுவில் காந்தி பேசினார்.

 

விவேகத்தின் உச்சத்தில் நின்ற அரசியல்ஞானியின் வினா இது. தீண்டப்படாதவர்களை தனிச்சமூகமாக்கும்போது தீண்டப்படாதவர்களாக இருத்தல் என்பதே அரசியல் அடையாளம் ஆகிறது. தீண்டப்படாதவர்களாக இருக்கும்போது மட்டுமே உரிமைகளும் சலுகைகளும் உள்ளன. அப்படியானால் என்றாவது தீண்டாமை ஒழியுமா? தீண்டாமையையும் சாதி இழிவையும் ஒழிப்பதுதான் முக்கியமே ஒழிய அவர்களை அப்படியே வைத்திருந்து தீண்டாமைக்கு விலையாக அவர்களுக்குச் சலுகைகளை அளிப்பதல்ல என்றார் காந்தி.

 

இதைச் சொல்பவர்கள் காந்தி இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை எதிர்த்தார், அதற்கு எதிராகச் சதி செய்தார் என்று பாகிஸ்தானிய பாடபுத்தகங்களும் இந்திய இஸ்லாமிய  இதழ்களும் எழுதுவதற்குத்தான் பதில் சொல்லவேண்டும். சீக்கியர்களின் தனியுரைமையை காந்தி அழித்தார் என்று சொல்லும் அகாலிகளுக்குப் பதில் சொல்லவேண்டும்.

 

தாழ்த்தப்பட்டோருகு இரட்டை வாக்குரிமை அவர்களை இந்துக்களிடமிருந்து பிரிக்கும் என்ற நோக்கில் அதை ஆதரித்த, அதேசமயம் தங்கள் மதத்துக்குள் இருந்த தாழ்த்தபப்ட்ட சாதியினருக்கு  எந்த வித தனியுரிமையும் சலுகையும் [ இன்று வரை] அளிக்காத,  முஸ்லீம்லீகிடம் இது தான் உங்கள் தீர்க்கதரிசி கூறிய அடிப்படை அறமா என்று கேட்டார் காந்தி. [முஸ்லீம் சமூகத்திற்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இல்லை என்பவர்கள் அம்பேத்காரின் ஆதாரம் மிக்க கட்டுரைகளை புரட்டிபபர்க்கலாம்]

 

அதேதான் சீக்கியர்களிலும். முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் ராணுவத்துக்குச் செய்த சேவைகளின் கூலியாக, குறிப்பாக நியூசிலாந்தில் பழங்குடிகளை ஒடுக்குவதில் உதவியதற்குக் கைமாற்றாக, இரட்டை வாக்குரிமைச் சலுகையைப் பெற்ற சீக்கியர்கள் இன்றுவரை அவர்களுக்குள் உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு எளிய தனிச்சலுகைகளைக்கூட அனுமதித்ததில்லை. அது சமூகத்தை பிளக்கும் என்றார்கள். அதேசமயம் இந்துதலித்துக்கள் தனித்தேசம் என்று வாதிட்டார்கள்.

 

தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட இரட்டை வாக்குரிமை மூலம் என்ன நடக்கிறது என்றால் அவர்கள் தனித்துவிடப்படுகிறார்கள். அவர்கள் பிரச்சினைகளில் பிறர் ஈடுபடும் வாய்ப்பு முற்றாகத்தவிர்க்கப்படுகிறது. அன்று ஒரு முஸ்லீம் இந்துவுக்கு வாக்களிக்க முடியாது, இந்து முஸ்லீமுக்கும் வாக்களிக்கமுடியாது. சிறுபான்மையினர் நலனை மேம்படுத்த பிரிட்டிஷ் அரசு கண்டுபிடித்த வழிமுறை அது. அதையே தாழ்த்தப்பட்டோருக்கும் அது பரிந்துரைத்தது. காந்தி அஞ்சியது அந்த பிரிவினைப்போக்கையே.

 

அந்த அடிப்படையிலேயே காந்தி இரட்டை வாக்குரிமையை எதிர்த்தார்.  வட்டமேஜை மாநாட்டுக்கு போவதற்கு முன்னர் காந்தி அம்பேத்காரையும் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளையும் கண்டு பேசினார்.ஆனால் இக்காலகட்டத்தில் அம்பேத்காரின் நிலைபாடுகள் கடினமடைந்தபடியே சென்றன. இரட்டை வாக்குரிமையில் இருந்து இறங்க அவர் தயாராக இல்லை.

 

1932 ஆகஸ்ட் 17 அன்று பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மக்டொனால்டின் வகுப்புவாரி அளிக்கை வந்தது.  கொடிய ஒடுக்குமுறைகளை காங்கிரஸ் சந்தித்த காலம் அது. அன்றிருந்த 24 மாகாணங்களில் மொத்தமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் 71. தாழ்த்தப்பட்டவர்கள் இரட்டை வாக்குகளை அளிக்கலாம். ஒரு வாக்கு பொதுவேட்பாளருக்கு இன்னொரு வாக்கு தாழ்த்தப்பட்ட வேட்பாளாருக்கு. ஆனால் சொத்தோ கல்வியோ உள்ளவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

 

அப்போது மீண்டும் மீண்டும் பிரிட்டிஷ் பிரதம்ருக்கு காந்தி கடிதம்  எழுதினார் ” ஒடுக்கப்பட்டோர் கூடுதல் பிரதிநிதித்துவம் பெறுவதை நான் எதிர்க்கமாட்டேன்….அவர்கள் அரசியல் சாசனரீதியாக பிரிக்கப்படுவதை மட்டும்தான் நான் எதிர்க்கிறேன். உங்கள் முடிவு அரசியல் சாசனத்தில் ஏற்றப்படுமேயானால் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் தங்கள் ஒடுக்கப்பட்ட சகோதரர்களை மேம்படுத்த இந்து சீர்திருத்தவாதிகள் செய்து வரும் அற்புதமான பணியை தடுத்துவிடும் என்று நீங்கள் உணர்கிறீர்களா?”

 

அந்த யதார்த்தத்தைப் பற்றி எவருமே இங்கு பேசுவதில்லை. காந்தி அதைச் சொல்லும்போது இந்தியாவில் ராமகிருஷண மடம், ஆரியசமாஜத்தைச்சேர்ந்த பல ஆயிரம் தொண்டர்கள் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நாராயணகுருவின் இயக்கத்தைச்சேர்ந்த ஆயிரம்பேர் சேரிகளில் சேவைசெய்தனர், அவர்களில் அத்வைத மடம் சார்ந்து சென்னையில் பணீயாற்றிய நடராஜகுருவும் ஒருவர். அவர்கள் அனைவரையுமே அன்னியர்களாக ஆக்குகிறது அந்த இரட்டை வாக்குரிமை என்றார் காந்தி.

 

காந்தி அந்த பிளவுபடுத்தும் போக்குக்கு எதிராகவே உண்ணாவிரதம் இருந்தார். தான் தன்னை தாழ்த்தப்பட்டோரின் ஒருவராகவே உணர்கிறேன் என்று காந்தி எரவாடா சிறையில் இருந்து அரசாங்கத்துக்கு எழுதினார் ”சட்டச்சபைகளில் அவர்களது பிரதிந்தித்துவத்தை நான் எதிர்க்கவில்லை. அவர்களில் வயது வந்த ஆண் பெண் இருபாலரும் கல்வி மற்றும் சொத்துத் தகுதி இன்றியே வாக்காளர்களாக பதிவுசெய்யப்படவேண்டும். பிறருக்குக் கூட வாக்குரிமை கட்டுப்படுத்தப்படலாம். அவர்களுக்குக் கூடாது” என்று எழுதி ஆனால் இந்துக்களில் உள்ள ஒவ்வொரு சாதியும் ஒருவரை ஒருவர் சார்ந்து ஒரே இடங்களில் வாழக்கூடியவர்கள் என்றும் பிரிவினை போக்கு பேராபத்தை விளைவிக்கும் என்றும் வாதாடினார்.

 

தன்னுடைய உண்ணாவிரதம் இந்து சமூகத்தை பிளக்கும் பிரிட்டிஷ் சூழ்ச்சிக்கு எதிரானது மட்டுமல்ல இந்துசமூகத்தின் ஆறிலொருபங்கு மக்களை தாழ்த்தப்பட்டோராக எண்ணும் தன் கட்சியைச்சேர்ந்த உயர்சாதியினருக்கும்கூடத்தான் என்று காந்தி அறிவித்தார். உண்ணாவிரதம் முடிந்தபின்  இரட்டை வாக்குரிமையை ரத்துசெய்துவிட்டதாக எண்ணி காங்கிரசார் தங்கள் கடமையில் இருந்து வழுவி தூஙகப்போய்விடக்கூடாது என்றும் அந்தக் கடமை தாழ்த்தப்பட்ட மகக்ளுடன் இணைந்து அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பதே என்றும் சொன்னார்.

 

விளைவாகவே பூனா ஒப்பந்தம் கையெழுத்தாகியது. பூனா ஒப்பந்தம் அம்பேத்காரின் கோரிக்கைகள் அனைத்தையும் ஒத்துக்கொண்டது, காந்தியின் கோரிக்கை இந்துசமூகம் பிளவுபடலாகாது என்பது மட்டுமே. மெக்டொனால்டின் வகுப்புவாரி அளிக்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளித்தது 71 இடங்கள். பூனா ஒப்பந்தம் அளித்தது 148 இடங்கள்.

 

அதன்பின் வெளியேவந்த காந்தி தன் ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார். தாழ்த்தப்பட்டோருக்கான பணிகளை அதற்கு முன்னரும் காங்கிரஸ் செய்துவந்தது. ஜமுனாலால் பஜாஜ் தலைமையில் அதற்கான கமிட்டியும் இருந்தது. காந்தியின் முதல் திட்டமாக இருந்தது தேச சுதந்திரமே. ஆனால் அந்த முதல் திட்டத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சேவையாக ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார்.

 

கடும் பொருளியல் மந்தம் நிலவிய சூழலில் எட்டு லட்ச ரூபாயை அவர் அதற்காக வசூல் செய்தார். ஹரிஜன சேரிகளில் மட்டும் ஏறத்தாழ முப்பதாயிரம் கதர்நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்பப்ளிக்கப்பட்டது. கோயில்களையும் பொதுஇடங்களையும் தாழ்த்தப்பட்டோருக்குத் திறந்துவிடும் இயக்கங்கள் நாடெங்கும் தொடங்கின. இந்த மாற்றங்களை எதிர்ப்பியக்கங்களாக காந்தி நடத்தவில்லை. மாறாக இந்து சமூகத்தின் சுய சுத்தீகரிப்பு இயக்கமாகவே நடத்தினார்.

 

அம்பேத்காரின் தரப்பைச் சேர்ந்த ஒருவர் சற்றே சமநிலையுடன் காந்தியின் தரப்பையும் பார்த்தார் என்றால் அது எத்தனை பெரிய தீர்க்கதரிசனம் என்று தெரியும். சீக்கியர் என்றுமே இந்தியாவில் மதிக்கப்படும் சமூகம். இஸ்லாமியர்கள் மீது ஒரு வரலாற்றுக் கசப்பு இந்துக்கள் மத்தியில் இருந்தது என்றாலும் அவர்கள் இந்தியாவில் அஞ்சப்பட்டவர்களும்கூட. அவ்ர்கள் மீதான கசப்புகளே இந்திய சமூகத்தில் ஆபத்தான பிளவை உருவாக்கின

 

ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் அப்போது இந்திய சமூகத்தால் மதிக்கப்படவில்லை. வெறுத்து கீழ்நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். மேலும் சீக்கியர்களையும் இஸ்லாமியர்களையும்போல தாழ்த்தப்பட்ட மக்கள் இந்தியாவில் சில பகுதிகளில் பெரும்பான்மை கொண்டு வாழவில்லை. இந்திய சமூகத்திற்கு உள்ளே வாழ்ந்தார்கள் அவர்கள். அவர்களின் வாழ்க்கையும் பிற சாதியினரின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. அவர்கள் அதிகாரப்பகிர்வின் பூசல் மூலம் அன்னியப்படுத்தப்பட்டு கசப்புகளுக்கு ஆளாகியிருந்தால் அதன் விளைவுகள் சாதாரணமானவை அல்ல.எத்தனை முறை காந்தி அவருக்கே உரித்தான நாசுக்குடன் அதைச் சொல்கிறார் என்றுபாருங்கள்

 

அம்பேத்காரே அவரது கட்டுரைகளில் பல இடங்களில் சொல்வதுபோல இரட்டை வாக்குரிமைக்கு எதிராக இருந்தவர்கள் காங்கிரஸ¤ம் காந்தியும் மட்டுமல்ல. உண்மையிலேயே எதிர்த்தவர்கள் பிற்படுத்தப்பட்ட சாதிக்குழுவினர், இஸ்லாமிய மேட்டிமைவாதிகள், சீக்கியர்கள் அனைவரும்தான். அத்தனைபேரையும் எதிர்த்து தான் இரட்டைவாக்குரிமையை அடைந்ததாக அம்பேதார் சொல்கிறார். தன் செல்வாக்கான ஆதரவாளர்களான அத்தனைபேரையும் பகைத்துக்கொண்டு அதை பிரிட்டிஷ் ஆதிக்க அரசு ஏன் வழங்கவேண்டும் என்ற வினாவே எஞ்சி நிற்கிறது.

 

ஆகவேதான் இன்னொரு பிளவுக்கும் கசப்புக்கும் இடம்தர முடியாது என்று காந்தி உறுதியாக இருந்தார். அப்படி நிகழுமென்றால் அது தன் மரணத்துக்குச் சமம் என எண்ணினார்.  அம்பேத்காருடன் அவர் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளிலும் பிற்பாடு நிகழ்ந்த உரையாடல்களிலும் காந்தி அதை மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

 

அத்தனை எதிர்ப்புக்கும் உள்ளான அந்த சலுகைகளில் இரட்டைவாக்குரிமை என்ற பிளவுபடுத்தும் அம்சத்தை தவிர பிற அனைத்துக்கோரிக்கைகளையும் காங்கிரஸ் சார்பாக காந்தி ஏற்றுக்கொள்கிறார். அவ்வெதிர்ப்புகளை முழுக்க தன்னுடைய இணையற்ற மக்கள்செல்வாக்கைக்கொண்டே அவர் மழுங்கடித்து தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைப்போராட்டத்தின் பாதையை சுமுகமாக்கினார். சலுகைகள் பெறும் மக்கள் மேல் பிறருக்கு உருவாகும் கசப்புகளை காந்தி இல்லையேல் தடுத்திருக்க முடியுமா என்ன?

 

ஆகவேதான் தாழ்த்தப்பட்ட மக்களை இந்திய மையச் சமூகத்திற்குள்ளேயே நிறுத்திக்கொண்டு அவர்களுக்கான சலுகைகளை அவர்கள் அடையவேண்டும் என அவர் சொன்னார். தாழ்த்தப்பட்டோரால் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்றம் செல்லும் ஒரு தாழ்த்தப்பட்டவர்களின்பிரதிநிதி அந்த தொகுதியின் அனைத்து மக்களின் பிரதிநிதியாகச் செல்லட்டுமே என்றார். அதற்கான மனநிலைகளை உருவாக்க பிற சமூகத்தினரின் மனசாட்சியைத் தீண்டி அவர்களையும் அந்தப்போராட்டத்தில் ஈடுபடுத்த அவர் ஹரிஜன் இயக்கம் மூலம் முயன்றார். அவர் கண்முன்னால் கண்ட ஒரு மாபெரும் சமூகப் பிளவை தவிர்க்க அவர் கண்டடைந்த ஆகச்சிறந்த வழி அதுவே.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 

 என்ன நடந்தது இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில்?

 

இரண்டாம் வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்காரை பிரிட்டிஷார் திறம்பட பயன்படுத்திக்கொண்டு அதற்கு ஊதியமாகவே இரட்டை வாக்குரிமை என்ற போலிச்சலுகையை அளித்தார்கள் என்று ஏற்கனவே சொன்னேன். அந்த மாநாட்டின் விரிவான சித்திரத்தை இதுவரை பேசியவற்றின் வெளிச்சத்தில் விரிவாகவே பார்க்கவேண்டும்.

 

அந்த வட்டமேஜை மாநாட்டில் இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவம் செய்பவராக, ஒரு மாபெரும் போராட்டத்துக்குப் பின்னர் சமரசப் பேச்சுவார்த்தைக்காக காந்தி சென்றிருந்தார். ஆனால் அந்த மாநாட்டுக்கு பிரிட்டிஷ் அரசு வகுப்புவாரி பிரதிநிதித்துவப்படி அழைப்பதாகச் சொல்லி பல்வேறு சமூகங்களில் இருந்து பிரிட்டிஷ் அரசை ஆதரிப்பவர்களை அழைத்திருந்தது. அம்பேத்காரும் அவர்களில் ஒருவர்.

 

மிக மிக ஆச்சரியகரமான விஷயம் அந்த மாநாட்டில் பிரிட்டிஷாரை எதிர்த்துப்போராடிய அமைப்பைச்சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே வந்திருந்தார், அவர்தான் காந்தி. பிற அத்தனைபேருமே பிரிட்டிஷாரை ஆதரித்தவர்கள். இந்தியாவின் இயல்பான ஆட்சியாளர்களாக பிரிட்டிஷாரைக் கண்டவர்கள். ஜின்னா உட்பட முஸ்லீம்லீக் பிரதிநிதிகள். இந்துமகாசபையின் பிரதிநிதியான டாக்டர் மூஞ்சே.சீக்கியப் பிரதிநிதியான சர்தார் உஜ்ஜல்சிங். மகாராஜாக்கள், திவான்கள்.

 

இதில் மிகவும் கவனிக்கத்தக்க ஒன்றுண்டு. இந்துமகாசபையின் ஆரம்பத்தலைவரான டாக்டர் மூஞ்சே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிதாமகர்களில் ஒருவரும்கூட. முதல் வட்டமேஜைமாநாட்டில் அவர் இந்துக்களின் பிரதிநிதியாக பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்டார். அவர் பிரிட்டிஷாருக்கு ஆதரவானவராக இருந்தார், காங்கிரஸ் எதிர்பாளர் என்பது மட்டுமே ஒரே காரணம். இரண்டாம் வட்டமேஜைமாநாட்டிலும் அவர் கலந்து கொண்டார். உப்புசத்யாக்கிரகம் உட்பட எல்லா தேசிய போராட்டத்துக்கும் எதிர்நிலை எடுத்த அவர், மகாராஷ்டிரத்துக்கு வெளியெ பெயர்கூட தெரியாத அவர், இந்தியாவின் கோடானுகோடி இந்துக்களின் பிரதிநிதி எனப்பட்டார்.

 

அதாவது அம்பேத்கார் தாழ்த்தப்பட்டோர் பிரதிநிதி . ஜின்னா முஸ்லீம்கலின் பிரதிநிதி. உஜ்ஜல்சிங் சீக்கியர் பித்திநிதி. மூஞ்சே இந்துக்களின் பிரதிநிதி. காந்தி? அவர் காங்கிரஸின்  பிரதிநிதி மட்டுமே. இதுதான் வட்டமேஜைமாநாட்டில் பிரிட்டிஷாரின் நிலைபாடு. வட்டமேஜைமாநாட்டில் டாக்டர் மூஞ்சேயும் அம்பேத்காரும் இணைந்தே காந்திக்கு எதிராகச் செயல்பட்டார்கள் ஒருவரை ஒருவர் ஆதரித்தார்கள். மாநாட்டின் விரிவான ஆவணப்பதிவை இன்று எவரும் ஆராயலாம். மேலும் பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ¤க்கு எதிரான அரசியலில் இந்துமகாசபையும் அம்பேத்காரும் ஒத்துப்போனார்கள், பேரம்பேசிக்கொண்டு சேர்ந்து செயல்பட்டார்கள்!அவையெல்லாமே வெளிபப்டையான வரலாறுகள்.

 

அந்த மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக அம்பேத்கார் மட்டும் இரட்டை வாக்குரிமை கோரவில்லை. பார்ஸிகள், கூர்க்காக்கள் உட்பட எட்டு ‘தேசிய சிறுபான்மையின’ருக்கும் முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் அளிக்கப்பட்டதைப்போல தனிவாக்குரிமை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அத்தனை பேரும் சூழ்ந்துகொண்டு காந்தியை தாக்கினார்கள் என்று பிரிட்டிஷ் நிருபர்கள் அன்று எழுதியிருக்கிறார்கள். அவர்களில் ஒருவராகவே அங்கே அம்பேத்காரின் குரல் ஒலித்தது

 

அந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான சாதிகளைச்சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரதிநிதியான, இந்தியாவைவே இணைத்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவரான காந்தியின் குரலே ஒலிக்கவிடவில்லை. அவரது தரப்பை அவர் சொல்லவே முடியவில்லை. அவரது காங்கிரஸ் இந்தியாவை பிரதிநிதிகரிக்கவில்லை என்றும், தங்கள் சாதிகளையும் வகுப்புகளையும் பிரதிநிதிகரிப்பவர்கள் தாங்கள்தான் என்றும், அங்கே வந்திருந்தவர்கள் வாதாடினார்கள். அவர்களில் ஜின்னா தவிர எவருக்குமே எந்தவிதமான மக்களியக்கத்தின் பின்புலமும் இருக்கவில்லை. பிரிட்டிஷாரின் நல்லெண்ணம் மட்டுமே அவர்கள் அங்கே வருவதற்கான தகுதியை அளித்திருந்தது. அன்று, அம்பேத்காரும் அப்படிப்பட்டவராகவே இருந்தார்.

 

வட்டமேஜை மாநாட்டில் பெரும்பாலான நேரங்களில் காந்தி சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டு இருந்தார். அவர் தூங்குவதுபோலக்கூட தோன்றியது என லண்டன் டைம்ஸ் நிருபர் எழுதினார். மாநாட்டில் காந்தி திரும்பத்திரும்ப ஒன்றைச் சொனனர், கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரதிநிதியாக, ஒரு மாபெரும் மக்களியக்கத்தின் விளைவாக, தான் வந்திருப்பதை வலியுறுத்தினார். சாதிமதபேதமில்லாத அந்த இந்தியாவின் பிரதிநிதியாகிய தன் குரலையே இந்தியாவின் குரலாக ஏற்கவேண்டும் என்றார். அது பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடும் இந்திய தேசியத்தின் குரல் என்றார்.

 

அதற்கு மாறாக பிரிட்டிஷார் அழைத்து அங்கே அமரச்செய்திருக்கும் பிரதிநிதிகள் உண்மையில் இந்திய மக்களை ஜனநாயக அடிப்படையில் பிரதிநிநிதிகரிக்கவில்லை என்றார் காந்தி . அவர்கள் சமூகத்தின் உயர்மட்டத்தில் வாழ்பவர்கள். தங்கள் சமூகத்தின் ஏழைகளைக்கூட அவர்கள் பிரதிநிதிகரிக்கவில்லை. அவர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்தியாவை துண்டுபோடவேண்டாம் என்றார். இன்று எந்த நடுநிலையாளனும் உணரும் அந்த மாநாட்டின் அப்பட்டமான யதார்த்தம் அதுவே.

 

அதை காந்தி பிதற்றினார் என்றும், காழ்ப்பைக் கொட்டினார் என்றும் அம்பேத்கார் கசப்புடன் எழுதி வைத்திருக்கிறார். அதையே இன்றும் சிலர் சொல்கிறார்கள். ஜின்னாவும் ஆகாகானும் எந்த இஸ்லாமிய ஏழையின் பிரதிநிதிகள்? அவர்கள் இஸ்லாமியர்களுள் உள்ள எளிய, தாழ்த்தபட்டோரை பொருட்படுத்தியவர்களே அல்ல என்று அம்பேத்காரே பின்னர் எழுதியிருக்கிறார்.

 

வட்டமேஜைக்குழு சொன்னதுபோல தென்னக மக்களை ‘ரைட் ஆனரபில்’ சீனிவாச சாஸ்திரி பிரதிநிதிகரித்தாரா என்ன? மகாராஷ்டிரர்களை மூஞ்சே பிரதிநிதிகரித்தாரா? ஏதாவது ஒரு தேர்தலில் அடுத்த முப்பது வருடங்களிலாவது இவர்கள் சொல்லும்படியான ஏதேனும் மக்களாதவைப் பெற்றார்களா? ஏன், ஜின்னாவின் முஸ்லீம்லீக் ஒருமுறைகூட மொத்த பாகிஸ்தானிலும் ஒட்டுமொத்த பெரும்பான்மை பெற்றதில்லை என்ற எளிய உண்மையே வரலாற்றில் இருக்கிறது.

 

ஒரு மக்கள் அமைப்பு போராடி அதன் உரிமைகளுக்காக பேச்சுவார்த்தைமேஜையில் அமர்ந்திருக்கும்போது அந்த உரிமைகளைப் பங்குபோட வந்தவர்களின் குரலாகவே அவர்கள் அந்த மாநாட்டில் ஒலித்தார்கள். அதைத்தான் வருத்தத்துடன் காந்தி சுட்டிக்காட்டினார். இதுவே  வரலாற்று யதார்த்தம்.

காந்தி காட்டிய வழி

 

 

இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் காந்தி கடைசியாக கேட்ட எளிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. காந்தி ஏமாற்றத்துடன் திரும்பியதுமே பிரிட்டிஷ் பிரதமர் ராம்ஸே மக்டொனால்ட் வகுப்புவாரிஅளிக்கையை [communal award]அறிவித்தார். தாழ்த்தப்பட்டவர்கள் இந்தியாவின் சிறுபான்மை சமூகமாகவும் இந்துக்களோடு தொடர்பற்றவர்களாகவும் அது சொன்னது. அவர்களுக்கு இரட்டை வாக்குரிமையை அளித்தது

 

அன்று ஏற்கனவே இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்ட இஸ்லாமியரும் சீக்கியரும் மிகவிரைவிலேயே தனிநாடு கோரிக்கைக்கு வந்துசேர்ந்தார்கள். பலரும் அறியாத ஒன்று, 1945 லேயே காலிஸ்தான் கோரிக்கையும் உருவாகிவிட்டது என்பது. இவ்விரு ‘தேச’ உருவகங்களே இந்தியப்பிரிவினையின்போது ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு ரத்த ஆற்றை ஓடவிட்டார்கள். காந்தியின் உண்ணாவிரதம் மூலம் வங்கத்தில் அமைதி திரும்பியபோதுகூட சீக்கியர் அவர் குரலுக்குச் செவி சாய்க்கவில்லை.

இதில் மேலும் திட்டவட்டமாகச் சொல்லவேண்டிய விஷயம் காந்தி உயர்சாதியின் பிரதிநிதியாக அப்போது இருந்தார் என்ற அப்பட்டமான பொய்யைப் பற்றித்தான். காங்கிரஸ் அன்று இந்தியாவின் பல்லாயிரம் சாதியைசேர்ந்த பலகோடி மக்களின் கட்சி.  இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள்‘தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த உரிமையைக்கண்டு தாழ்த்தப்பட்டவர்கள்மேல் கொண்ட காழ்ப்பால்’காந்தியுடன் இருந்தார்கள் என்று அம்பேத்காரே சொல்கிறார். ஏன், இந்திய தாழ்த்தப்பட்டவர்களில்கூட பெரும்பாலானவர்கள் அன்று காங்கிரஸ¤டனும் காந்தியுடனும்தான் இருந்தார்கள். இன்றும்கூட அப்படித்தான்.

 

மிக எளிமையாகவே இதைக் காணலாம். இந்தியாவின் தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்புகளில் மிகச்சிலவே அம்பேத்காருடன் இருந்தன. தமிழகத்தில் சில அமைப்புகளைக் குறிப்பாகச் சொல்லல்லாம். ஆனால் தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடிய சுவாமி சகஜானந்தா, சுவாமி ஆத்மானந்தா கேரளத்தின் அய்யன் காளி போன்ற எத்தனையோபேர் காந்தியின் காங்கிரஸ் சார்பாகவே இருந்தார்கள்.

 

ஆகவே தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என அம்பேத்கார் எவ்வாறு தன்னைச்சொல்லிக்கொண்டாரோ அதைவிட அதிகமாகவே காந்தி தன்னை தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று சொல்லிக்கொள்ள முடியும். தன்னை தலைவராக ஏற்ற அந்த எளிய தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாகவும் காந்தி அம்பேத்காருடனான உரையாடலில் பேசுகிறார்.

 

மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை அங்கேயே நிற்காது என காந்தி அறிவார். மேலும் ஏழு கோரிக்கைகள் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கோரிக்கைமேஜைமேல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றான கூர்க்கா கோரிக்கை, பின்னர் வன்முறையை உருவாக்கியது என்றும் பார்க்கும்போது காந்தியின் தீர்க்கதரிசனம் வியப்பூட்டுகிறது. அவை ஏற்கப்பட்டிருந்தால் இந்தியாவின் மற்ற சாதிகள் சும்மா இருக்குமா என்ன? இந்தியாவில் அப்படியானால் எத்தனை தனி வாக்குரிமை இருக்கும்?

 

எண்ணிப்பாருங்கள், இன்றிருக்கும் தேர்தல் முறைக்குப் பதிலாக நாடார் நாடார்பிரதிநிதிகளையும் கவுண்டர்கள் கவுண்டர் பிரதிநிதிகளையும் தேர்வுசெய்யவேண்டுமென நீங்கள் சொல்வீர்களா என்ன? கிட்டத்தட்ட மூவாயிரத்து ஐநூறு சாதிகள் தங்கள் பிரதிநிதிகளை பிறருடன் சம்பந்தமில்லாமல் தாங்களே தேர்வுசெய்தால் எத்தனை பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு வருவார்கள்? அவர்கள் கூடி எப்படி பிரதமரைத் தேர்வுசெய்வார்கள்?

 

சரி, அப்படியே சாதிக்கொரு தேர்தல் என்றாலும்கூட இந்திய சாதிகளைப்பற்றி தெரிந்தவர்கள் அதில் எத்தனை உபசாதிகளை, குலக்குழுக்களைக் காண்பார்கள். தேவருக்கு தனி இருக்கை என்றால் அதில் மறவருக்கும் கள்ளருக்கும் அகமுடையாருக்கும் பிறமலைக்கள்ளருக்கும் தனியாகப் பிரிப்பார்களா என்ன? என்ன வகையான ஜனநாயகம் அது? இந்தியாவின் எந்த ஒரு பிரிவினையும் ரத்த ஆறாக ஆகக்கூடும் என்னும்போது என்ன வகையான எதிர்காலத்தை அது நமக்கு அளிக்கவிருந்தது?

 

போகட்டும், இந்திய தலித்துக்களேகூட ஒரே சாதியா என்ன? இக்கணம் வரை பறையர்களும், பள்ளர்களும், சக்கிலியரும் சேர்ந்து அமர்ந்து பேசும்நிலை உருவாகவில்லையே. ஆக, வகுப்புவாரிபிரதிநிதித்துவம் பின்னர் சாதிவாரி பிரதிநிதித்துவமாகி, உபசாதி பிரதிநிதித்துவமாகி, உள்சண்டையாகி சீரழியும் ஒரு ஜனநாயகத்தையல்லவா நம்மில் சிலர் பிரிட்டிஷாரின் மகத்தான வாக்குறுதி என்று இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறோம்!

அனைத்துகும் அப்பால் ஒரு கேள்வி உள்ளது. இந்த வினாவை இன்றுவரை எவருமே விவாதித்ததாகத் தெரியவில்லை. பிரிட்டிஷார் அளித்த இந்த ‘சலுகை’கள் அனைத்துமே அவரகள் நேரடியாக ஆண்ட நிலப்பகுதிக்கு மட்டுமே.சம்ஸ்தானங்களில் இவை எதுவும் இதேவடிவில் அமலாக்கபப்டவில்லை. குறிப்பாக திருவிதாங்கூரையே எடுத்துக்கொள்வோம். இந்திய சம்ஸ்தானங்களில் மிக முற்போக்கானது என்று சொல்லபப்ட்ட திருவிதாங்கூர் மன்னருக்கான ஆலோசனைச் சபையில் தாழ்த்தபப்ட்டவர்களுக்கு சில நியமன இடங்களை அளிப்பதற்கு மட்டுமே ஒத்துக்கொண்டது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்துச்செல்லும்போது பிரிட்டிஷார் இந்திய சமஸ்தானங்களுக்குத்தான் சுதந்திரம் கொடுத்துச் சென்றார்கள். ஒவ்வொரு சம்ஸ்தானத்துக்கு தனியாக போகவேன்டுமென விரும்பினால் அவ்வாறே செய்ய உரிமை உண்டு என்றார்கள்.  அந்த மன்னர்கள் எலலருமே பழைமையில் ஊறிய, சாதிவெறி கொண்ட, ஆசாரமான ஆட்சியாளர்கள் என்னும்போது அம்பேத்கார் ‘பெற்ற’ சலுகைகளுக்கு என்ன மதிப்பு இருந்திருக்க முடியும்?  அப்படியானால் பிரிட்டிஷாரின் சலுகைகளுக்குப் பின்னால் உள்ள நல்லெண்ணம் என்ன?

ஆனால் காந்தி பூனா ஒப்பந்தம் மூலம் அலித்த சலுகை அப்படிபப்ட்டதல்ல. முக்கால் நூற்றாண்டுக்குமேல் இன்றுவரை காங்கிரஸைக் அக்ட்டுபப்டுத்தும் வாக்குறுதி அது. இந்திய அரசியல் நிர்ணய சபை வயதுவந்தோர் வாக்குரிமை வழங்கியபோது பிரிட்டிஷார் வயதுவந்தோர் வாக்குரிமைக்குப் பதிலாக வழங்கிய எல்லா தேர்தல் சலுகைகலும் ரத்தாயின, ஆனால் காந்தி கொடுத்த வாக்குறுதி என்பதற்காக மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தேர்தல் சலுகைகல் நிலைநிறுத்தப்பட்டன. அச்சொல் அழியலாகாது என நேரு என்ணினார். அதை எதிர்த்த காங்கிரஸாரிடம் அது காந்தியின் வாக்கு என்று சொல்லி அதை நிலைநாட்டினார்.

எந்த ஒரு காழ்ப்பும் உடனடி வன்முறையாக வெடிக்கும் தன்மை கொண்டது இந்தியப்பெருநிலம். அதிக மக்கள்தொகையும் குறைவான வளங்களும் கொண்ட எந்த நாட்டிலும் இருக்கும் நிலைமைதான் இது. ஆனால் இந்திய சமூகத்தில் இஸ்லாமியர் மேல் நிகழ்ந்தது போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட சமூக வன்முறை என்பது தலித்துக்கள்மேல் நிகழவேயில்லை — எண்பதுகளில் பிற்படுத்தப்பட்டோர் அரசியல் வலுப்பெறும் வரை. அதற்குக் காரணம் காந்தியின் ஹரிஜன் இயக்கம் உருவாக்கிய கருத்துப்பதிவே.

 

பிளவுபடுத்தும் உரிமை அரசியலுக்குப் பதிலாக ஒன்றுபடுத்தும் ஜனநாயகத்தைக் கோரியதுதானா காந்திசெய்த மாபெரும் துரோகம்? ஆதிக்க அரசிடம் கெஞ்சிவாங்கும் சலுகைக்குப் பதிலாக சகசமூகத்தினரிடம் பேசிப் பெறும் உரிமையை அளித்ததுதானா காந்திசெய்த அநீதி? என்ன வகையான ஜனநாயக மனப்பான்மையில் இருந்து உதிக்கின்றன இந்த வரலாற்றுக் காழ்ப்புகள்?

 

காந்தி சொன்ன வழியே நவீன ஜனநாயகத்தின் வழி. அனைத்து மக்களுக்கும் குரல் இருக்கக்கூடிய அமைப்புள். ஒவ்வொரு அமைப்புக்குள்ளும் முரண்படும் தரப்புகள் நடுவே இணக்கமான முரணியக்கம். ஒவ்வொரு அமைப்புகள் நடுவேயும் இணக்கமான முரணியக்கம். வன்முறையும் அழிவும் தேவையில்லை என்றால் இதைத்தவிர வேறு வழியே இல்லை.

 

முக்கால் நூற்றாண்டுக்கு முன்பு நடந்த ஒரு விஷயத்தின் பல்வேறு தரப்புப்பேச்சுகளும் சில தரவுகளும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. அன்றைய உணர்ச்சிகளை இன்று உணர்வதே கடினமானது. இது காங்கிரஸில் நடந்த எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். பகத்சிங் தூக்கு, சுபாஷ் சந்திர போஸின் வெளியேற்றம் என எத்தனையோ விஷயங்களில் இக்குழப்பம் நீடிக்கிறது.

 

இத்தகைய சூழலில் வரலாற்றுக்குள் இன்றைய உணர்ச்சிகளை செலுத்தாமல் அது அதிகாரசக்திகளின் முரணியக்கத்தால், உரிமைக்கோரிகைகளின் முரணியக்கத்தால் நிகழும் சிக்கலான ஒரு கூட்டு நகர்வு என்று புரிந்துகொள்ளும் ஆய்வாளனால் மட்டுமே ஏதேனும் ஓர் உண்மைக்குள் செல்லமுடியும். பூனா ஒப்பந்தம் குறித்த விஷயத்தில் மட்டும் பலருடைய தரப்புகளும் உணர்ச்சிகளும் பத்துவருடங்களுக்கு ஒருமுறை மாறியிருக்கின்றன.

 

இன்றைய அரசியல் தேவைக்காக கால யந்திரத்தில் புகுந்து நேற்றைய யதார்த்தத்தையும் நேற்றைய உணர்ச்சிகளையும் விருப்பப்படி மாற்றும் செயல் என்பது மிகமிக அபாயகரமானது. ஒரு தேசத்துக்கு  வரலாறு என வெறும் பரஸ்பர அவதூறுகள் மட்டுமே இருக்கும் என்றால் அந்த சமூகம் வெடிமருந்துமீது நின்றுகொண்டிருக்கிறது என்றே பொருள். அதை உருவாக்குவதைத்தான் காழ்ப்பையே சிந்திப்பதற்கான விசையாகக் கொண்ட நம் அறிவுஜீவிகள் செய்துவருகிறார்கள்.

 

தலித்துகளுக்குள் இருந்து வரலாற்றுரீதியாக, மனசாட்சியின் அடிப்படையில்  எண்ணிப்பார்க்கும் சிலராவது இனியேனும் வரவேண்டும். இந்திய தேசத்துக்குள் இஸ்லாமியர் போல சீக்கியர் போல ஒரு சமுகப் பிளவு நிகழாமல் தடுத்தமைக்காக ஒவ்வொரு இந்தியனும் காந்திக்குக் கடமைப்பட்டிருக்கிறார். வன்முறை இல்லாமல் தங்கள் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தந்தமைக்காக காந்திக்கு ஒவ்வொரு தலித்தும் சிறப்பாக கடமைப்பட்டிருக்கிறார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 October 9, 2009 – 12:03 am

 
                                    7.  இரு நாயகர்கள்
 
காந்தியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு குறைவாகவே ஆய்வுகள் வந்துள்ளன. பெரும்பாலான ஆய்வுகள் ஏதேனும் ஒருபக்கம் சாய்ந்தவை, மறுபக்கத்தை காண மறுப்பவை. சமீபகாலமாக மறுபக்கத்தை வசைபாடக்கூடிய ஆய்வுகள் அதிகமாக வந்துகோண்டிருக்கின்றன. காந்திதான் அதன் களப்பலி. அரசியல் உள்நோக்கத்தை தவிர்த்துப் பார்த்தால் இத்தகைய ஆய்வுகளின் மிகப்பெரிய பிரச்சினை வரலாற்றை ஒற்றைப்படையான ஒரு நகர்வாக மட்டுமே பார்க்கக்கூடிய அனுகுமுறைதான். இது கிட்டத்தட்ட பழங்குடிகளின் வம்சவரலாறு போன்றது. சொந்தக்குல வீரர்கள் X மாற்றுக்குல கொடியோர்கள் என அந்த மொழிபு [Narration ]  விரியும். இது ஒருபோதும் வரலாற்றின் முழுச்சித்திரத்தையும் அளிப்பதில்லை. என்னுடைய வரலாறு வரலாறு, உன்னுடையது பொய் என்ற எளிய சூத்திரமே இதன் இயக்கவிசை வரலாற்றை ஒரு உரைமாற்றாடல் வரலாற்று  [Dialogic history] மொழிபாக அணுகும்போதுதான் வரலாற்றில் இயங்கும் முரணியக்கங்களை நாம் காண முடியும். வரலாறு என்பது பல்வேறு சக்திகள் மோதி முயங்கி ஒன்றை ஒன்று நிரப்பிக்கொண்டு, ஒன்றை ஒன்று முன்னகர்த்திக்கொண்டு, இயங்கக்கூடியது. அத்தகைய ஓர் முரணியக்க வரலாற்று நோக்கு இருந்தாகவேண்டிய மார்க்ஸியர்கள் கூட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அபத்தமான குலமுறை வரலாற்று நோக்கை திராவிட இயக்கங்களிடம் இருந்து கடன் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே இங்குள்ள பரிதாபம். வரலாறு என்பது ஒரு மாபெரும் உரையாடல். ஒரு மாபெரும் விவாதம். ஒரு மாபெரும் பண்டமாற்று. ஒரு மாபெரும் கூட்டுக்கலவி! இருபதாம் நூற்றாண்டின் உச்சத்தில் மானுடம் உணர்ந்த வரலாற்றுத் தரிசனம் இதுவே. பின்நவீனத்துவ சிந்தனைகள் அனைத்துக்கும் பொதுவாக உள்ள முக்கியமான கூறு இந்த வரலாற்றுப்பார்வைதான். அந்தப்பார்வையிலேயே இன்று காந்தி மீட்டு எழுதபப்டுகிறார் ஒரு வரலாற்றுக்காலகட்டத்தில் ஒரே இலட்சியவாதத்தின் இருவேறு அணுகுமுறைகளை வெளிபப்டுத்தியவர்கள் அம்பேத்காரும் காந்தியும். அம்பேத்காரின் அணுகுமுறை  மைய அதிகாரம் சார்ந்து செயல்படுவது. அறிவார்ந்த இலட்சியவாத நோக்கு கொண்டது. காந்தியின் அணுகுமுறை என்பது மக்களின் அதிகாரம் சார்ந்தது. உரையாடல்தன்மை கொண்டது. அம்பேத்கார் நவீனத்துவர். காந்தி நவீனத்துவத்தை தாண்டி சிந்தனை செய்தவர்     அம்பேத்கார் என்ற இந்திய முன்னோடி   அம்பேத்காரைப்பற்றிய என் சொந்த மதிப்பீட்டை இங்கே சொல்லிவிட்டே முன்னே செல்ல முடியும். இத்தகைய ஒரு விவாதத்தை ஒருவர்  கீழ்நிலையில் எதிர்கொள்வதற்கான வழிமுறை என்பது சொற்களை திரித்து நான் அம்பேத்காரை அல்லது வேறு எவரையாவது அவமதிக்கிறேன் என்று காட்டுவதே. அதைத்தான் பலவருடங்களாக இங்கே அறிவுச்செயல்பாடாகச் செய்து வருகிறார்கள்.   நவீன இந்தியாவின் ஆளுமைகளில் காந்திக்குப் பின் என்னை மிக அதிகமாகக் கவர்ந்தவர் அம்பேத்காரே.  காந்திக்கு பின் எவரது எழுத்துக்களையாவது வருடக்கணக்காக பின் தொடர்ந்து வாசித்திருக்கிறேன் என்றால் அது அம்பேத்காரின் எழுத்துக்களையே. அவரது பங்களிப்பை நான் மூன்று நிலைகளில் மதிப்பிடுவேன்   இந்திய மண்ணில் காலூன்றி நின்று இந்தியசிந்தனையையும் பண்பாட்டையும் ஆராயக்கூடிய தன்னம்பிக்கை கொண்ட ஒரு மரபை உருவாக்கிய முன்னோடி என்று நான் அம்பேத்காரை நினைக்கிறேன். அவரது ‘புத்தரும் அவரது தம்மமும்’ அவ்வகையில் ஒரு மாபெரும் செவ்வியல் நூல் என்பதே என் எண்ணம். [தமிழில் பெரியார்தாசன்] என் வரையில் இந்திய சிந்தனைகுறித்த என் ஏராளமான தடுமாற்றங்களை சரிசெய்த நூல் அது. அந்நூலை நேருவின் ‘இந்தியாவைக் கண்டடைதல்’ போன்ற மேலைவாடை வீசும் ஒரு நூலுடன் ஒப்பிட்டால் மட்டுமே அது முன்வைக்கும்  இந்திய அணுகுமுறையின் பிரமிக்கவைக்கும் தனித்தன்மை நமக்குப் புரியும். அந்நூலையும் அம்பேத்காரையும் அவ்வகையில் எனக்கு விளக்கியமைக்காக நான் என் குரு நித்ய சைதன்ய யதிக்கு எப்போதும் கடமைப்பட்டவன்    இந்தியப் பண்பாட்டையும் வரலாற்றையும் புறவயமான நவீன ஆய்வுநோக்கில் சமூகவியல், தத்துவப்பரிணாமக் கருத்துக்களைக் கருவிகளாகக் கொண்டு, ஆராய்வதில் முன்னுதாரணமாக அமைந்த மூன்று பேரறிஞர்கள் எம்.என்.ராய், அம்பேத்கார், டி.டி.கோஸாம்பி.  [அவர்களை வாசித்திருப்பதனால்தான் அறிஞர் என்ற அடைமொழியை நான் கவனமாகப் பயன்படுத்துகிறேன் ]அவர்களின் கருத்துக்களுடன் முரண்படவும் , முடிவுகளை ஐயப்படவும் எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவர்களின் ஆய்வுமுறையே நவீன மனம் பின்பற்றக்கூடிய ஒன்று. இந்த விவாதத்தின் எல்லைக்குள் அம்பேத்காரின் அந்த மாபெரும் பங்களிப்புகளைப்பற்றி பேச வாய்ப்பு அமையவில்லை.   அம்பேத்காரின் அரசியல் பங்களிப்பு இந்திய சமூக உருவாக்கத்துக்கு மிக முக்கியமானது என்பது என் எண்ணம். இந்திய சமூகம் தலித்துக்களுக்கு இழைத்த வரலாற்றுக்கொடுமையை ஆணித்தரமாக சமூக மனசாட்சிக்கு முன் எடுத்து வைத்தவர் அவர். அதன் மூலம் நாம் நம் தேசத்தை நவீன அரசாகக் கட்டி எழுப்பிய தொடக்ககாலத்திலேயே அதற்கான பரிகாரங்களைச் செய்ய வைத்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராக அவரைப்போன்ற ஒரு  பேரறிஞர் உருவானது இந்தியாவின் நல்லூழ்.  அவர் தன் போராட்டங்களுக்கு காந்திய  வழிமுறைகளையே தேர்வு செய்தார். அதன் மூலம் இச்சமூகம் காழ்ப்பாலும் வன்முறையாலும் அழியாமல் காத்தார்.   அம்பேத்கார் இந்திய சமூகத்தின் பெருமக்களுள் ஒருவர். ஒரு தலித் மட்டுமல்ல, சிந்திக்கும் பழக்கம் கொண்ட எந்த இந்தியனும் அவரை தன்னவராக உணரமுடியும். தன் ஞான வழிகாட்டியாக ஏதேனும் ஒரு தளத்தில் அடையாளம் காணமுடியும். எனக்கு ராஜ்காட் புனித தலமாகும் என்றால் அதேயளவுக்கு மகத்துவம் வாய்ந்த புனிதத்தலமாகவே நவீனகால போதிசத்துவன் உறங்கும் மகாசமாதித்தலமும் இருக்க முடியும். நான் ராஜ்காட்டுக்கு சென்று நின்ற அதே மனநிலையில்தான் அங்கும் நின்றிருக்கிறேன்.   ஆனால் இந்த பெருமதிப்பு  அம்பேத்காரை புறவயமாக மதிப்பிட எனக்கு தடையாக அமையக்கூடாது என எண்ணிக்கொள்கிறேன். நான் அம்பேத்காருடன் முரண்படும் இடங்கள் எல்லாமே அவரது அது நவீனத்துவம் சார்ந்த கருத்துக்களே. மையப்படுத்தல், மத்திய அதிகாரம், கருத்துக்களை நிர்வாகத்தின் ஆதிக்கம் மூலம் கீழே கொண்டுசெல்லுதல் ஆகியவற்றில் அவருக்கு இருந்த நம்பிக்கை எனக்கு ஏற்புடையதல்ல. அவர்காலகட்டத்து அறிவுஜீவிகளில் அனேகமாக அனைவருமே நம்பியதுதான். நேருவால் தோரோவை புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அம்பேத்கார் அவரது மேதமையால் தோரோவைக் கொஞ்சம் நெருங்கியிருக்கலாமே என்று எண்ணுகிறேன்.   அம்பேத்கார் ஒரு மாபெரும் அறிவுஜீவி. அவ்வகையில் அரசியலுக்கு பிரிட்ட்ஷாரால் கொண்டுவரப்பட்டவர். ஆனால் அவர்களின்  எதிர்பார்ப்பை மீறி அவர்களின் வெறும் கைப்பாவையாக நின்றுவிடாமல் தன் மக்களுக்கான போராளியாக மாறினார். தனக்கு வரலாறு விடுத்த சவாலை முழுமையுடன் எதிர்கொண்டார். தன் வரலாற்றுப்பாத்திரத்தை நிறைவேறினார். அச்செயலில் அவரது பலம் வெளியானதுபோலவே அவரது பலவீனமும் வெளியாகியது.   அவற்றை நான் இவ்வாறு வரையறைசெய்துகொள்கிறேன். ஒன்று, அம்பேத்கார் எந்நிலையிலும் தன்னை ஒரு தலித் தலைவராக மட்டுமே எண்ணிக்கொண்டார். அந்த தரப்பின் குரலாக மட்டுமே ஒலித்தார். அந்நிலைபாட்டில் இருந்தே பேரங்களில் ஈடுபட்டார். ஒரு தருணத்திலும் அவர் ஒட்டு மொத்த மக்களுக்கான அரசியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை.  அந்த  ஒட்டுமொத்தத் தரப்பு எப்போதும் அவருக்கு எதிரிநிலையில்தான் இருந்தது. ஆகவே அம்பேத்காரின் அனைத்துக் கருத்துக்களையும் தாழ்த்தப்பட்டவர்களின்  அரசியல் குரலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.   பல விவாதங்களை இன்று தலித் அல்லாத ஒருவர் வாசிப்பாரென்றால் அம்பேத்கார் ஒரு மூர்க்கமான ஒற்றைப்படை நிலைப்பாட்டில் நின்றுகொண்டு பரவலான யதார்த்ததை புரிந்துகொள்ள மறுத்து வாதிடுகிறார் என்றே நினைப்பார். அவரது மொத்த விவாதமும் மாற்றுச் சமூகங்கள் மேல் அவர்கொண்ட ஆழமான அவநம்பிக்கையில் இருந்து மட்டுமே  உருவாகியிருப்பதாகவும் தோன்றும்.   மேலும் இந்திய சமூகமே தன் நூற்றாண்டுக்கால அடிமைத்தளையில்  இருந்து விடுபடுவதற்காகப் போராடும்போது தன் சமூக நலனுக்காக அந்த ஒட்டுமொத்தப் போக்குக்கு எதிரான நிலைபாடு எடுத்தார் என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. சுதந்திரத்துக்குப் பின்னர்தான் இந்திய சமூகத்தில் கல்வியும் பொருளியலும் மலர்ச்சி அடைந்தன என்னும்போது, ஏன் தாழ்த்தப்பட்டோரின் வாழ்க்கையில் இன்றுள்ள எல்லா முன்னேற்றங்களும் இந்திய தேசிய சுதந்திரத்தின் விளைவுகள் மட்டுமே என்னும்போது, அம்பேத்கார் எதற்கு எதிராக போரிட்டார் என்ற வினா அவன் நெஞ்சில் எழும்   இந்த கோணத்தை விரிவாக்கியே இன்று அம்பேத்கார் மீதான கடுமையான விமரிசனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் இக்கோணத்தில்தான் திரட்டப்படுகின்றன. நான் இந்தத் தரப்பை காந்தி மீதான தலித்தியர்களின் அவதூறுகளுக்கு கொடுக்கும் அதே மதிப்பை அளித்துக் குப்பைக்கூடைக்குத்தள்ள தயங்க மாட்டேன்.   அம்பேத்கார் உருவாகி வந்த சூழலை கருத்தில் கொள்ள வேண்டும். நூற்றாண்டுக்கால சுரண்டல் மற்றும் இழிவில் இருந்து மெல்லக் கண்விழித்து உரிமைகளுக்காக எண்ணமிடும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குரல் அவர். அந்தக்குரல் அன்று மிகமிக சிறுபான்மையினரால் எழுப்பப்பட்டது. ஆகவே எத்தனை உக்கிரமாக அது ஒலிக்கிறதோ அந்த அளவுக்கு மட்டுமே அது பயனுள்ளதாக இருக்க முடியும்.   ஒருசமூகத்தின் பரிணாம மாற்றம் என்பது அதன் பல்வேறு தரப்புகளின் முரணியக்கம் மூலம் நிகழும் என்று தெரிந்த ஒருவருக்கு அம்பேத்கார் அவரது தரப்பை தீவிரமாக முன்வைத்ததன்மூலம் ஆக்கபூர்வ விளைவே உருவானது என்று ஊகிக்கச் சிரமம் இருக்காது. இந்திய சமூகம் மேம்பட்ட நீதியுணர்வுடன் இருப்பதற்கு அவரது பங்களிப்பு மிகமிக முக்கியமானது.   தன் உக்கிரத்தால், அதை விரிவாக விளக்கும் சமரசமற்ற வாதத்திறனால், அவர் காந்தியின் கருத்தியல்நிலைபாட்டையே மாற்றியமைத்தார். அவரது மனசாட்சியை தன் தரப்பின் பிரதான போராளியாக சேர்த்துக்கொண்டார். அவ்வகையில் காங்கிரஸ் உருவாக்கிய மாபெரும் ஹரிஜன் இயக்கத்துக்கும் அது பிரச்சாரம் செய்த நீதியுணர்வுக்கும் அம்பேத்காரே காரணகர்த்தா.  அவரில்லாமல் இந்திய வரலாறு  இல்லை.   அம்பேத்காரின் அரசியல் ஆசைகள் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்தன. அம்பேத்கார் பதவிகளை, அதிகாரத்தை நாடியவர். ஆனால் அது அவருக்காக அல்ல என்பதை அவரது தனிவாழ்க்கையை பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். வாசிப்பதிலும் ஆய்வுசெய்வதிலும் தவிர பிற எதிலுமே அவர் மெய்மறந்து ஈடுபட்டவரல்ல. அவருக்கு தாழ்த்தப்பட்டோர் அரசியல் சார்ந்த அக்கறை இல்லாவிட்டால் அவர் கோஸாம்பியைப்போல ஒரு பேராசிரியராக இருப்பதை மட்டுமே விரும்பியிருப்பார்.   அம்பேத்கார் பதவிகளையும் அதிகாரத்தையும் விரும்பியது  மேலிருந்து அதிகாரம் மூலம் சமூக மாற்றத்தை கீழே கொண்டுசெல்ல முடியும் என்ற அவரது நம்பிக்கையினாலேயே. அதற்காகவே அவர் அரசியலை நாடினார். மக்களிடையே அரசியல்மூலம் உருவாக்கும் கருத்தியல் மாற்றத்தை அவர் பெரிதாக நம்பியவரல்ல. ஆனால் அரசியல் மூலம் அவர் நாடிய அதிகாரத்தை அவர் அடையவேயில்லை. அவர் அடைந்த ஆகப்பெரிய பதவி இந்திய அரசியல் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் பதவியே. அதை பயன்படுத்திக்கொண்டு அவரால் செய்ய முடிந்ததன் அதிகபட்சத்தை அவர் செய்தார். அந்தப்பதவி அவருக்கு அவரது எதிர்தரப்பான காங்கிரசால் அளிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மை எத்தனை மழுப்பினாலும் திட்டவட்டமாக கண்முன் நிற்கிறது. 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஜனநாயகமும் அம்பேத்காரும்   அம்பேத்காரின் ஆளுமையில் உள்ள மிக முக்கியமான குறைபாட்டை அவரது ஆதரவாளர்களே  எப்போதாவது விவாதிக்கும் காலம் வரக்கூடும். அவர் எந்த அளவுக்கு ஜனநாயகத்தை புரிந்து கொண்டிருந்தார் என்ற கேள்விதான் அது. அம்பேத்கார் பதவி வெறியர் அல்ல. அவர் தன்மைய நோக்கு கொண்ட அதிகாரவிரும்பியும் அல்ல. உறுதியான ஜனநாயகவாதி என்பதிலும் ஐயமில்லை   ஆனால் அவர் ஜனநாயகத்தின்  நடைமுறை இயல்பை உள்வாங்கிக் கொண்டிருந்தாரா என்பது ஐயத்திற்குரியதே. ஜனநாயகம் என்பது தகுதியுடையவ்ர்களின் அதிகாரம் அல்ல, பெரும்பான்மையின் அதிகாரம். அதில் தகுதிகொண்டவர்கள் பெரும்பான்மைக்குக் கட்டுப்பட நேரலாம். சரியானது பெரும்பான்மையால் நிராகரிக்கப்படலாம். ஜனநாயகத்தில் எந்தக்கருத்தும் ஒரு தரப்பு மட்டுமே. சரியான கருத்தும் தவறான கருத்தும், முற்போக்கான கருத்தும் பிற்போக்கான கருத்தும். ஒரு கருத்து பிற்போக்கானது என்பதற்காக அது நிராகரிக்கபப்டும் என்றால் அது ஜனநாயகமே அல்ல. அதன் குரலும் ஒலித்தாகவேன்டும். அதுவும் பரிசீலிக்கப்பட்டாக வேண்டும்.ஜனநாயகம் முற்போக்கானது, ஆனால் அதன் விளைவுகல் எப்போதும் முற்போக்கானவையாக இருக்கவேன்டும் என்றில்லை.அந்த தரப்புகள் நடுவே உள்ல முரணியக்கமே முன்னகரும் சக்தி   ஆகவே ஜனநாயகத்தில் எதிர்க்கப்படாத ஒரு கருத்து இருக்க இயலாது. விவாதமில்லாது எதுவும் நிகழாது. அதனாலேயே ஜனநாயகத்தில் எந்த ஒரு மாற்றமும் அதற்கான வளர்சிதை மாற்றம் மூலம் மெல்லவே நிகழமுடியும். ஜனநாயகத்தின் செயல்பாடுகளை பொறுமையுடன், மாற்றுத்தரப்பின் நியாயங்களை புரிந்துகொள்ளும் சமநிலையுடன், அணுகுபவரால் மட்டுமே வெற்றிகரமாக நிகழ்த்த முடியும். தத்துவ சிந்தனையாளரும் அநீதி இழைக்கப்பட்டவர்களின் தரப்புமான அம்பேத்காரால் ஜனநாயகத்தின் முரணியக்கத்தை அதன் விரிவுடன் உள்வாங்க இயலவில்லை. அவரது கோபங்கள், கசப்புகள், காந்தி உட்பட பிறர் மீது அவர் கொட்டிய குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் காரணம் அதுவே.   முக்கியமான ஓர் உதாரணம் மூலம் இதைப்பற்றிப் பேசலாம். நேருவும் அம்பேத்காரும் இணைந்து 1950-51 ஆம் ஆண்டுகளில் இந்து சட்ட மசோதாவைக் கொண்டுவந்து அதை சட்டமாக ஆக்க முனைந்தார்கள். 1950ல் இந்து குடிமை மசோதாக்கள் [ Hindu Code Bills] என்றபேரில் நான்கு சட்டங்களுக்கான முன்வரைவை அம்பேத்கார் முன்வைத்தார். நேரு அம்பேத்கார்  இருவருக்கும் அதன் உட்கூறுகளில் நூறுசதவீத ஒருமித்த கருத்து நிலவியது.   அதற்கு முன்பு இருந்த பிரிட்டிஷ் இந்து குடிமைச்சட்டத்தில் இந்திய நடைமுறைகள் தொகுக்கப்பட்டிருந்தன. மானுடமேன்மை சார்ந்த மைய வழிகாட்டுதல்கள் இருக்கவில்லை, நிர்வாக வழிகாட்டல்கள் மட்டுமே இருந்தன. அம்பேத்கார் அச்சட்டத்தை நவீன மானுட உரிமை நோக்கின் அடிப்படையில் மறு ஆக்கம்செய்து தொகுத்திருந்தார். உண்மையில் அந்த மசோதா இந்து சமூகத்தைப்பொறுத்தவரை ஒரு பிரம்மாண்டமான முன் அடிவைப்பு. அதை தொகுத்தளித்தமைக்காக இந்து சமூகம் என்றென்றும் அம்பேத்காருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.   மறைந்த வழக்கறிஞர் நண்பர் சோதிப்பிரகாசம் அவர்களுடன் அச்சட்டத்தின் பல பகுதிகளை படித்து விவாதித்திருக்கிறேன். மூன்றுவகைகளில் அச்சட்டம் மகத்தானது. ஒன்று அதன் அற்புதமான இலட்சியவாத நோக்கு. அவ்வகையில் பிரெஞ்சு,அமெரிக்க குடிமைச் சட்டங்களின் மகத்தான மானுடக்கனவுகளை ஒத்தது அது. மானுட சமத்துவம், அடிப்படை அறம், ஒழுக்கம் என்ற மூன்று அம்சங்களையும் அது தன் அடித்தளமாகக் கொண்டிருக்கிறது. இரண்டாவதாக ஒவ்வொரு நுண்ணிய விஷயத்தையும் அது கணக்கில் கொண்டிருக்கும் விதம். மூன்றாவதாக அதன் அற்புதமான ஆங்கில நடை. பலசமயம் அது ஒரு மானுட சாசனம் போலவே ஒலிக்கிறது.   ஆனால் அத்தகைய ஒரு சட்டத்தை  அவர்கள் நினைத்த அளவுக்கு எளிதாக நிறைவேற்றிவிடமுடியாது என்பதே இந்திய யதார்த்தம். ஏன் என்றால் பாரம்பரியமான இந்து சட்டங்கள் என்பவை மிகமிகச் சிக்கலானவை. மேல்தளத்தில் இந்து தர்மசாஸ்திரங்களின் ஒருங்கிணைந்த நீதி இருக்கும். அதேசமயம் கீழ்த்தளத்தில் பழங்குடிச்சட்டங்களும் , சாதி ஆசாரங்களும் நிலவும். ஒவ்வொரு தளத்திலும் இந்த முரணியக்கம் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் தர்ம சாஸ்திரங்களே பலவகையானவை.   ஆகவே இந்தியாவில் பிராந்தியத்துக்கு ஒரு நீதி, சாதிக்கு ஒரு நீதிதான் நிலவியது. தமிழகத்துச் சாதிகளின் விவாகரத்து முறையை மட்டும் எடுத்துப்பார்த்தால் தெரியும். தேவர் போன்ற போரிடும் சமூகங்களில் பெண் நினைத்தால் உடனே விவாகரத்து உண்டு. பிராமணர், வெள்ளாளர் போன்றவர்களில் பெண் நினைத்தால் அனேகமாக விவாகரத்தே கிடையாது. இந்துசட்டம் அமலாகி அரைநூற்றாண்டுகழிந்த பின்னரும் பல இடங்களில் சாதிப்பஞ்சாயத்துகளில் இந்த பழங்குடிச்சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.   இந்த மாபெரும் இடியாப்பச்சிக்கலை இருபதாம் நூற்றாண்டின் மானுட உரிமை, சமத்துவம், ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சீர்திருத்த முயன்றனர் அம்பேத்காரும் நேருவும். ஏற்கனவே நேருவுக்கு கட்சிக்குள் மதச்சார்புகொண்ட மரபுவாதிகளின் கடும் எதிர்ப்பு இருந்தது.  காந்தியின் ஆசி ஒன்றே அவரை காப்பாற்றிக் கொண்டிருந்தது. அவர்கள் நேருவை வீழ்த்த இந்து குடிமைச்சட்ட சிபாரிசுகளைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். 1952 தேர்தலில் அவர்கள் அதை இந்தியா முழுக்கப் பிரச்சாரம் செய்தார்கள்.   அந்தத் தரப்பில் காங்கிரஸின் பெருந்தலைவரும் இந்திய ஜனாதிபதியாக ஆகவிருந்தவருமான டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் இருந்தார். புருஷோத்தம் தாஸ் தாண்டன் போன்றவர்கள் கட்சிக்குள் ஒரு தீவிரக்குழுவை உருவாக்கினார்கள். ஆச்சாரிய கிருபளானி போன்றவர்கள்   தனிக்கட்சி உருவாக்கினார்கள் . ஒரு வகையில் அதுவும் ஜனநாயகமே. பல ஆயிரம் வருடங்களாக நிலவிவந்த ஆசாரங்களை மாற்றியமைக்கையில் முன்னரே நிலவிவரும் அமைப்பு எதிர்ப்பு தெரிவிக்கத்தான் செய்யும். அதன்பின்னரும் எல்லா சமூக சீர்திருத்த நோக்குள்ள சட்டங்களுக்கும் அமைப்பின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பதும் வருவதும்,   பழமைவாதக் கருத்தும் முற்போக்கு கருத்தும்,  முரண்பட்டு விவாதித்து முன்னகரும் நகர்வே ஜனநாயகத்தின் மிகச்சிறந்த வழிமுறை.   அன்று எதற்கெல்லாம் விவாதம் நடந்தது என்றுபார்த்தால் இந்திய சமூகத்தின் நிலை புரியும். அம்பேத்காரின் இந்து குடிமைச்சட்டத்தில் இருந்த பலதாரத்தடை இந்து சமூகத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும், அது மதச்சுதந்திரத்தின் மீதான அடி என்றார்கள். சுவாமி கற்பாத்திரி மகராஜ், பிரபுதத் பிரம்மசாரி போன்றவர்களின் தலைமையில் இந்துத்துவ சக்திகள் தெருவுக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல பெண்களுக்கு சொத்துரிமை மற்றும் ஜீவனாம்சம் ஆகிய சட்டக்கூறுகள் நாடெங்கும் நிலஉடைமைச்சாதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நடுவே கொந்தளிப்பைக் கிளப்பின. சொத்து பிரிந்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள்.   நேருவும் அம்பேத்காரும் வசைபாடப்பட்டார்கள்.  இந்து குடிமைச் சட்ட எதிர்ப்பாளர் தரப்புக்கு கணிசமான ஆதரவு இருந்தது, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும். ஆகவே நேருவால் அம்பேத்கார் அமைத்த வடிவில் அச்சட்டத்தை அன்று கொண்டுவர முடியவில்லை. நேருவின் ஆதரவு தனக்கு இருப்பதை உணர்ந்தாலும் அவரால் தான் கைவிடப்பட்டதாக எண்ணி பொறுமையிழந்தார் அம்பேத்கார். 1951ல் தன் சட்ட அமைச்சர் பதவியை துறந்தார்.   இந்த உதாரணம் அம்பேத்காரின் ஜனநாயகத்தைப் புரிந்துகொள்ளாத மனநிலைக்கு உதாரணம். பழமைவாதிகளாக இருந்தாலும் அவர்களும் மக்களில் ஒரு தரப்பே. அவர்களின் வாழ்க்கை குறித்த ஒரு சட்டத்தை அவர்களின் சம்மதமில்லாமல் அவர்கள் மேல் மேலிருந்து திணிக்க முடியாது. எந்த ஒரு ஜனநாயகச்செயல்பாடும் அதன் முரண்படும் சக்திகள் நடுவே உள்ள ஒரு புரிதல் வழியாகவே நடைமுறைக்கு வரமுடியும். நேரு மூர்க்கமாக தன் தரப்பை அவர்கள் மேல் சுமத்த விரும்பவில்லை. மேலும் விவாதிக்க விரும்பினார். ஆனால் அதைக்கூட தாங்கிக்கொள்ளாமல் பதவி விலகினார் அம்பேத்கார்.   1952 தேர்தலில் இந்து குடிமைச்சட்டம் நேருவுக்கு எதிராக பெரும் ஆயுதமாக நாடெங்கும் கொண்டுசெல்லப்பட்டது. ஆனால் தேர்தலில் நேரு மிகப்பெரும்பான்மை பெற்று வென்று வந்தார். அதற்கு அவருக்குப் பயன்பட்டது காந்தியின் பெயரே.  புருஷோத்தம்தாஸ் தாண்டன் போன்றவர்கள் காந்திக்கு எதிரான மதவாதக்கூட்டணியில் நிற்பதாகவும் தான் காந்தி சொன்ன விழுமியங்களைச் சார்ந்து நிற்பதாகவும் சொல்லி ஓட்டுகேட்டார் நேரு. அதன் விளைவாக தேசமே அவருடன் நின்றது. வென்றுவந்ததும் தான்டனை மரியாதையாக அரசியல் ஓய்வுக்கு அனுப்பினார் நேரு.அதன் பின்னர் கட்சியில் அவருக்கு எதிரான முணுமுணுப்பே எழாமல் ஆகியது.   அம்பேத்கார் எழுதியபடியே 1955,56ல் இந்து குடிமை மசோதாவை ஐந்து தனிச்சட்டங்களாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார் நேரு.. இந்து திருமணச்சட்டம் [ Hindu Marriage Act 1955]  இந்து வாரிசுரிமைச் சட்டம் [Hindu Succession Act 1956] இந்து சிறுபான்மை மற்றும் பாதுகாவலர் சட்டம் [Hindu Minority and Guardianship Act 1956] இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் [ Hindu Adoptions and Maintenance Act 1956] அச்சட்டங்கள் தன் கண்ணெதிரே தான் எழுதியவடிவிலேயே நிறைவேறுவதை அம்பேத்காரே கண்டார். சட்டமேல்சபை உறுப்பினராக எதிர்தரப்பில் அமர்ந்து ஒரு சொல் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தார்.   ”இந்தச்சட்டத்தில் கண்டுள்ள விஷயங்களின் விரிவும் புதுமைப்போக்கில் காட்டப்பட்டுள்ள தைரியமும் நெப்போலியனின் சட்டத்துடன் மட்டுமே ஒப்பிடுவதற்குரியவை” என்று பிரிட்டிஷ் அறிஞர்களால் பாராட்டப்பட்டது இந்து குடிமைச்சட்டம். [ இந்தச் சட்டம் நிறைவேறிய சித்திரத்தை முழுமையாக ராமச்சந்திர குகாவின் ‘காந்திக்குப்பின் இந்தியவரலாறு’ நூலில் பார்க்கலாம். கிழக்கு பிரசுரம்] அம்பேத்காருக்கு பின்னர் அஞ்சலி செலுத்திய நேரு ”அவர் இந்து சமூகத்தை அடக்கிவைக்கும் சக்திகளுக்கு எதிரான புரட்சியின் சின்னம் .இந்து சட்ட சீர்திருத்த விஷயத்தில் அவர் காட்டிய ஆர்வத்துக்கும் செய்த தொண்டுகளுக்கும் என்றும் நினைவில் கொள்ளப்படுவார். பெருமளவுக்கு அவர் எழுதியபடியே அந்தச் சட்டம் நிறைவேறியதை அவர் நேரில் கண்டது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.   ஆனால் அதற்கு பத்தாண்டுக்காலம் தேவைப்பட்டது. பலநூறுபாராளுமன்ற உறுப்பினர்கள், சிந்தனையாளர்கள், பழமைவாதிகள், புரட்சியாளார்கள், மதகுருக்கள், சமூகச்செயல்வீரகள் அதைப்பற்றி விவாதித்து விவாதித்து பொதுக்கருத்தை எட்டவேண்டியிருந்தது. அதுவே ஜனநாயகத்தின் பாதை. ஆனால் அதற்குள் அம்பேத்கார் மனம் கசந்து வெளியேறி, நேருவை வசைபாடி, அவருக்கு எதிரான அணியில் சென்று அமர்ந்திருந்தார். அதுதான் அம்பேத்காரின் குணச்சித்திரம்.   இந்து சட்டம் மேலும் மேலும் திருத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அதற்கு அம்பேத்கார் அளித்த இலட்சியக்கனவை நெருங்க மேலும் பல வருடங்கள் தேவைப்பட்டன. அதன் பல கூறுகள் வருடக்கணக்காக விவாதித்த பின்னரே ஏற்கப்பட்டன. பல துணைப்பகுதிகளை இந்திய மாநில அரசுகள் சட்டங்கள் வழியாக ரத்து செய்து வைத்திருந்தன. சில இடங்களில் சமூக அமைப்பே தலைகீழாகக் கவிழ்ந்து பெரும் மானுடச்சிக்கல்கள் உருவாயின. உதாரணம் கேரளத்தில் இருந்த பெண்வழி நிலஉரிமையை ஒட்டுமொத்தமாக கவிழ்த்துவிட்டது அச்சட்டம். அதன் விளைவுகள் சீரடைய மேலும் பதினைந்து வருடம் ஆகியது.   அம்பேத்கார் இந்து சட்டத்தை மாற்றியமைத்தார். அதற்கு எழுந்த எதிர்ப்பை இன்று அம்பேத்காருக்கு எதிரான எதிர்ப்பாக சொல்லிக்காட்டுகிறார்கள். ஆனால் அவர் இஸ்லாமிய ‘சரி அத்’ சட்டங்களைத் தொடவில்லை. அதன் சில அம்சங்கலைப்பற்றிய குறித்த மிகமிகக் கடுமையான கண்டனங்கள் அவருக்கு இருந்தன. ஆனால் அச்சமூகம் அதை ஏற்காது என அவர் அறிவார். ஏன் கிறித்தவ குடிமைச்சட்டமேகூட மேலும் முப்பது வருடம் கழிந்து பல்வேறு மத அமைப்புகளின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டுதான் நடைமுறைக்கு வர முடிந்தது. அரசியல் சட்ட வரைவுக்குழுவில் சரி அத் சட்டங்களை அப்படியே இஸ்லாமிய சட்டமாக ஆக்கியமைக்காக அம்பேத்காருக்கு இஸ்லாமிய உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தார்கள்!   அம்பேத்கார் தன்னை இந்து அல்ல என்று அறிவித்து  பின்னர் மதம் மாறியவர். தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்கள் அல்ல என்று சொல்லும் இன்றைய சிந்தனையாளர்கள் இந்த ஒருவிஷயத்தையே மீள மீள மேற்கோள் காட்டுகிறார்கள். ஆனால் அவர் இந்து என உள்ளூர உணர்ந்திருந்த காரணத்தால்தான் இந்து சட்டத்தை மறு அமைப்புசெய்தார். இஸ்லாமிய கிறித்தவச் சட்டங்களில் அவரால் கையை வைக்க முடியவில்லை. அவரே அதைச் சொல்லியும் இருக்கிறார்.   அவர் என்ன எண்ணினாலும்  அவரை இந்து என்றே இந்து சமூகம் அங்கீகரித்தது. தன் மரபின் ஈராயிரம் வருட சட்டங்களை அவர் மாற்றியமைத்தபோது ஒரு அன்னியன் வந்து எபப்டி தன் சட்டத்தை தீண்டலாம் என்ற குரலே எழவில்லை. மிகமிகக் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் வந்தன. குல ஆசாரங்கள் கெடுகின்றனவே என்று மக்கள் தெருவிலிறங்கினார்கள். ஆனால் இதே சீர்திருத்தங்களை ஒரு முஸ்லீம் அல்லது கிறித்தவர் செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பார்த்தால் அன்று அந்த இந்து வெறியர்கள்கூட அம்பேத்காரை  இந்து என்றே பார்த்தார்கள் என்று புரியும். இன்றும் அதே எண்ணம்தான் அவரைப்பற்றி இந்திய மனத்தில் உள்ளது. என்றும் அது அப்படித்தான் இருக்கும்.   இன்று யோசித்தால் ஆச்சரியம்தான். இரண்டாயிரம் வருடக்கால குடிமைமுறை, பல்லாயிரம் சாதிகளின் பல்லாயிரம்  ஆசாரங்களினால் ஆன நடைமுறை பத்தே வருடங்களில் புரட்சிகரமாக தலைகீழாக்கப்பட்டது! இதற்கிணையான நிகழ்வே உலகில் குறைவுதான். முப்பதுகோடிக்குமேல் இந்துக்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் சட்டத்தை அவர்களில் தீண்டத்தகாதவராக கருதப்பட்ட சாதியின் நாயகர் உருவாக்கி அளித்தார். அதற்கு இந்திய சமூகத்தின் வாக்கை நேரு பெற்றபின் அது சட்டமாகியது   ஜனநாயகத்தை புரிந்துகொண்ட எவருமே இதுதானே இயல்பான நடைமுறை என்று எண்ணுவார்கள். பல்லாயிரமாண்டு வழக்கங்களை மாற்றிக்கொண்டு ஒரு சமூகம் புதிய காலகட்டத்திற்குச் செல்லும்போது எதிர்ப்புதரப்புகள் எழுவதில் என்ன தவறிருக்கிறது? அவர்களை விவாதித்து சமரசம்செய்து பொதுப்புரிதலுக்குக் கொண்டு வருவதல்லவா ஜனநாயகம்?   ஆனால் 1951 முதல் 1956ல் இந்து சட்டம் நிறைவேறும்வரை நேருவைப்பற்றி அம்பேத்கார் சொன்ன விமரிசனங்களை இன்று வாசித்துப்பார்த்தால் ஆச்சரியமும் வருத்தமுமே மிஞ்சுகிறது. நேருவை சாதியவாதிகள்,மதவாதிகள் முன் மண்டியிட்டவர் என்கிறார் அம்பேத்கார். நேருவின் தனிப்பட்ட நாணயம், நல்லெண்ணம் அனைத்தையுமே ஐயப்படுகிறார்.   


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அம்மேற்கோள்களைப்பிடுங்கி தொகுத்து நேரு உண்மையில் இந்துத்துவக் கையாள் என்று இப்போது சிலர் வாதிடும் அபத்தமும் நிகழ்கிறது. பார்க்க எஸ்.வி ராஜதுரையின் ‘இந்து இந்தி இந்தியா’ என்ற கீழ்த்தரமான அவதூறு நூல். தர்மசாஸ்திரங்களால் ஒடுக்கப்பட்ட ஒரு வகுப்பின் தலைமகனிடம் அச்சமூகத்துக்கான புதிய தர்மசாஸ்திரத்தை அமைக்கும் பொறுப்பை அளித்த நேருவை மதவாதி என்று நம்பவைக்க நாளை தலித்தியர்களும் கிளம்பி வரலாம்   அம்பேத்காரின் இந்த மனநிலையை அவரது நவீனத்துவம் சார்ந்த அணுகுமுறையை வைத்துத்தான் விளக்கிக்கொள்ள வேண்டும்.  அன்று உலகமெங்கும் பிரபலமாக இருந்தது நல்லெண்ணம் கொண்ட சர்வாதிகாரம் என்ற கவற்சிகரமான கருத்தே. துருக்கியின் முஸ்தபா கமால் பாஷா உலகம் எங்கும் பேசப்பட்டார். ஸ்டாலின் சீர்திருத்தங்கள் உலகமெங்குள் உள்ள முற்போக்காளர் நடுவே பெரும் கவற்சியை அளித்திருந்தன. ஆட்சியைப் பிடித்தபின் மேலிருந்து அதிகாரம் மூலம் சீர்திருத்தங்களை எளிதில் நடைமுறைப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கையே உலகை ஆண்டது.   அந்த நம்பிக்கையை தானும் கொண்டிருந்தார் அம்பேத்கார். கிராமசுயராஜ்யம் குறித்த அரசியல் சட்ட நிர்ணயக்குழு விவாதங்களில் அரசதிகாரத்தைக் கொண்டு இறுகிப்போன கிராமங்களை உடைத்தெறிவதைப்பற்றி பேசுகிறார். மாற்றங்கள் மக்களின் மனநிலையில் உருவாகவேண்டும் என்றும், அவை ஜனநாயகபூர்வமாக உருவாகவேண்டும் என்றால் கருத்துக்களின் முரணியக்கம் நடந்து மெல்லமெல்லத்தான் மாற்றம் கண்ணுக்குப்படும் என்றும் அவர் நம்பவில்லை. அத்தகைய மாற்றமே அழிவுகளை உருவாக்காமல் என்றும் நீடிக்கும் விளைவுகளை உருவாக்கும் என்பதை வரலாறு காட்டியது.   ஆனால் அம்பேத்கார் மிகச்சீக்கிரத்திலேயே பொறுமையிழந்தார். பல்லாயிரம் வருட மனநிலைகளும் வாழ்நிலைகளும் கண்ணெதிரே புரண்டு மறிய வேண்டும் என எதிர்பார்த்தார். அரசாங்கம் அதை இரும்புக்கையால் உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும், வேண்டுமென்றேதான் செய்யவில்லை என்று எண்ணினார். ஆகவே கசப்பும் கோபமும் கொண்டார். அவை அவரது கடைசிக்காலத்துச் சொற்களில் வந்தபடியே இருந்தன. அக்கசப்பையே இன்று தலித் சிந்தனையாளர் சிலர் அள்ளி தங்கள் பிளவுவாதக் காழ்ப்புகளுக்கு ஆதாரமாக ஆக்குகிறார்கள்.   பூனா ஒப்பந்தமும் இந்த வெளிச்சத்தில் பார்க்க வேண்டியதே. ஒரு சமூக மாற்றத்தில் சமூகத்தின் பங்கை முற்றாக நிராகரித்து,  மேலிட அதிகாரத்தை பேரங்கள் மூலம் அடைந்து தலைகீழ் மாற்றங்களைக் கொண்டுவந்து விடலாமென எண்ணினார் அம்பேத்கார். அந்தச்செயல்பாட்டில் ஒரு ஜனநாயகம் அளிக்கும் தடைகளை, மறுதரப்புகளை, அவர் புரிந்துகொள்ளவில்லை. அவற்றைக் கண்டு அவர் பொறுமையிழந்தார். அவற்றை ஆயிரமாண்டுக்காலம் தன் வகுப்புக்கு எதிராக நடந்த சதியின் பகுதியாக விளங்கிக்கொண்டார். அவர் மக்களிடையே இறங்கி வேலைசெய்ததில்லை என்ற யதார்த்தத்தில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த மனநிலை.   பூனா ஒப்பந்தத்திலும் சரி, காங்கிரஸ் தாழ்த்தப்பட்டோர் விஷயத்தில் எடுத்த நடவடிக்கைகளிலும் சரி, அம்பேத்கார் வைத்த கடும் விமரிசனங்கள் சமூக மாற்றத்தின் முரணியக்கத்தை அவர் புரிந்து கொள்ளாமல் பொறுமை இழந்ததையே காட்டுகின்றன. ஒருவேளை அம்பேத்கார் இந்திய அளவில் தன் சமூகத்தை ஒருங்கிணைக்க ஒரு கட்சியை ஆரம்பித்து மக்களிடையே நேரடியாக சென்று செயல்படுபவராக இருந்திருந்தால் அவர் அதைப் புரிந்து கொண்டிருப்பார். தமிழ்நாட்டுப் பள்ளர் வீட்டுத் திண்ணையில் சக்கிலியரை அமரச்செய்யவே அவருக்கு முப்பதாண்டுக்கால பொறுமையான உழைப்பு தேவைப்பட்டிருக்கும்.   ஏடுகளின் வழியாக இலட்சியக் கனவுகளை உருவாக்கியவராக இருந்தார் அம்பேத்கார். இலட்சியவாதிகளுக்குரிய தீர்க்கதரிசிகளுக்குரிய இறுதிக்காலம் அவருக்கும் வாய்த்தது. பொறுமையிழந்தவராக, கசப்படைந்தவராக, தனிமைப்பட்டவராக இருந்தார். அவரது எதிர்பார்ப்புகளுக்கும்  நடைமுறைக்கும் இடையே இருந்த மாபெரும் வேறுபாடு அவரை துயரத்தில் ஆழ்த்தியது. அது காந்தியும் சந்தித்த முடிவுதான். அவர்கள் இருவரின் வாழ்க்கைகள் இணைகோடுகள் போல.   அம்பேத்காரின் விமரிசனங்களும் எதிர்விமரிசனங்களும்     ஏன் அம்பேத்கார் அரசியலில் தோற்றார்? அவர் அறிவுஜீவி என்பதனால்தான். அறிவுஜீவிகள் அல்லது தத்துவ சிந்தனையாளர்கள் நேரடியாக அரசியலில் வெல்ல முடியாதென்றே நான் எண்ணுகிறேன். எளிய மக்கள் அவர்களைப் புரிந்துகொள்வதில் பெரும் தடை இருக்கிறது. மிகச்சிறந்த உதாரணம் அம்பேத்காரைப்போலவே அசாதாரண மேதையான எம்.என்.ராய். மக்கள் இயக்கங்களை உருவாக்குவதற்கான பயிற்சியை நேரடியாகவே ஐரோப்பிய- ருஷ்ய கம்யூனிஸ்டுகளிடமிருந்து பெற்றவர். மாபெரும் சாகசக்காரர். ”கீழைநாட்டில் இருந்து வந்த மேதை” என்று லெனினால் பாராட்டப்பட்டவர். ஆனால் இந்திய அரசியல் சூழலில் அவரது ராடிகல் ஹ்யூமனிஸ்டுக் கட்சி ஒரு பெரும் தோல்வி.   மக்களிடையே செல்லும் அறிவுஜீவி அரசியல்வாதிகள் இன்னொரு மக்கள்தலைவரின் தோளில் ஏறிச்சென்றால்தான் சென்றுசேர முடியும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம்  இ.எம்.எஸ். மக்கள்தலைவரான ஏ.கே.கோபாலன் இல்லையேல் அவரை  சாதாரண மக்கள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். காந்தி இல்லையேல் ஒருபோதும் நேருவுக்கு மக்களாதரவு உருவாகியிருக்காது. ஒருவேளை கல்வி வளர்ச்சி உள்ள முதல் உலகத்தில் நிலைமை வேறாக இருக்கலாம்.   காந்தி மக்கள்தலைவராக ஆனது ஏன் என்றால் அவரது மொழி அறிவுஜீவியுடையதல்ல என்பதனாலேயே. காந்தியை ஓர் அறிவுஜீவி என்று சாதாரண அர்த்தத்தில் சொல்லிவிட முடியாது. அவருக்கு அம்பேத்கார் அல்லது எம்.என்.ராய் போல விரிவான வரலாற்றுப் புரிதலோ சமூகப்பரிணாமம் குறித்த கொள்கைகளோ இருக்கவில்லை. அவரால் தன் தரப்பை ஒருபோதும் தர்க்கபூர்வமாக விளக்கவும் முடிந்ததில்லை. காந்தி தன் அபாரமான உள்ளுணர்வாலும், நடைமுறை விவேகத்தாலும், புறவயமான ஆராய்ச்சிமனப்பான்மையினாலும் சமூக, அரசியல் தரிசனங்களை அடைந்த தத்துவஞானி. அவற்றை நடைமுறைவாழ்க்கையாக முன்வைக்க முயன்ற முயன்ற கர்ம யோகி. அவரது மொழி தர்க்கம் அல்ல படிமங்களே. அப்படிமங்கள் மிக எளிதாக கோடிக்கணக்கான மக்களுக்குச் சென்று சேர்ந்தன.   அம்பேத்கார் அவரது அரசியல் தோல்விகளால் கடைசிக்காலத்தில் ஆழமான மனச்சோர்வை அடைந்தார். குறிப்பாக அரசியல்நிர்ணயசபையில் இருந்து விலகிக் கொண்டபின்பு. அத்துடன் அவருக்கு தூக்கமின்மையும் மனச்சோர்வுநோயும் இருந்தது. அவருக்கிருந்த நீரிழிவுடன் அது இணைந்துகொண்டது. உடல்நலம் குறித்து கவலையே படாமல் அறிவியக்கத்தில் மட்டுமே மூழ்கி வாழும் பழையபாணி அறிவுஜீவி அவர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மாபெரும்  உலகச்சிந்தனையாளர்களின் வழித்தோன்றல் அவர். அவர்கள் அனைவருமே அடைந்த அந்த மரணமே அவருக்கும் வாய்த்தது.   அரசியல் வாழ்க்கையின் கடைசிக்காலத்தில் அம்பேத்கார் அவரது தகுதிக்கேற்ற அரசியல் வாழ்க்கை கிடைக்கவில்லை என எண்ணியிருந்தார். அது உண்மை. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்களை அவர் அதற்காக மனச்சோர்வுடன் சுட்டிக்காட்டியிருக்கிறார். அவரை கடைசிநிமிடம் வரை ஆதரித்து நின்ற நேருவைக்கூட அவர் குறைசொல்லியிருக்கிறார். காந்தியையும் குறைசொல்லியிருக்கிறார். இரட்டை வாக்குரிமை கிடைத்திருந்தால் தனது கட்சி ஒரு வலிமையான அமைப்பாக ஆகியிருக்குமோ என அவர் எண்ணியிருக்கலாம். அவரது கசப்பை அப்படித்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். அம்பேத்காரின் கசப்புகளை நாம் இன்று தேசியப்பிரச்சினையாக ஆக்கியிருக்கிறோம். ஆனால் அவர் காந்திபோல என்றாவது அதிகாரத்தின் சின்னமாக வருவாரென்றால் அவர்மீதான கசப்புகளும் கண்டிப்பாக முன்னணிக்கு வரும். அவற்றை அறிவது இப்பிரச்சினையின் மாற்றுமுகங்களை உணர்வதற்கு உதவும்.   இந்திய அரசியல் நிர்ணயசபையின் தலைவராக அமர்ந்து முஸ்லீம்களுக்கும் சீக்கியர்களுக்கும் இருந்துவந்த தனித்தொகுதிச் சலுகைகளை முற்றாகவே ரத்து செய்தவர் அம்பேத்கார். அரசியல் நிர்ணய சபையில் பி.பாக்கர் பகதூர் என்ற உறுப்பினர் இஸ்லாமியருக்கு பிரிட்டிஷார் அளித்துவந்த  தனிவாக்குரிமைச்சலுகை   தொடரவேண்டும் என்று கோரியபோது அம்பேத்கார் உள்ளிட்டவர்கள் அதை நிராகரித்தார்கள். அம்பேத்கார் வயதுவந்தோர் வாக்குரிமை அளிக்கப்பட்டுவிட்டமையால் அதற்கான  தேவை இல்லை என்று அவர் வாதிட்டார்.   ஆனால்  அவர் தலைமைதாங்கிய தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எல்லாவகையான சலுகைகளையும் காங்கிரஸ் அளித்ததை  அம்பேத்கார்பெற்றுக்கொண்டார். இது அவரது பாரபட்ச நோக்கையும் சுயநலத்தையும் மட்டுமே காட்டுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக டார்ஜிலிங் போராட்டம் உருவானபோது கூர்க்காக்களின் தலைவரான சுபாஷ் கிஷியாங் அதை குறிப்பிட்டிருக்கிறார். மலைவாழ் மக்களான கூர்க்காக்களுக்கு இந்திய அரசு சலுகைகளை வழங்கவில்லை. முன்பு பிரிட்டிஷ் அரசு வாக்குறுதி அளித்திருந்த இரட்டை வாக்குரிமை அல்லது தனித்தொகுதி கூட அம்பேத்காரால்தான் இல்லாமலாக்கப்பட்டது என்று கூறப்பட்டது.   அரசியல் நிர்ணயசபை விவாதங்களின்போது மகாவீர் தியாகி என்ற காந்தியவாதி தாழ்த்தப்பட்ட சாதிகளிலேயே எல்லாரும் சமம் அல்ல என்ற உண்மையை எடுத்துச் சொன்னார். அவர்களில் ஒப்புநோக்க முன்னேறிய தாழ்த்தப்பட்ட சாதியினர் கல்வி,பதவி இரண்டிலும் எல்லா வாய்ப்புகளையும் பெறும்போது  அவர்களால் கீழ்வகுப்பாராக கருதப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் எதையுமே அடையாமல் போகலாம் என்றார். ஆகவே தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் சாதிவாரியான உள் ஒதுக்கீடு அல்லது அதற்கான வழிகாட்டு நெறி இருக்கலாம் என்றார்.   ஆனால் அம்பேத்காரை அந்தக்கோரிக்கை எரிச்சலூட்டியது. அவர் அந்த வாதத்தை தன் வாதங்களால் முறியடித்தார். அப்படி ஒரு உள் ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட சமூகத்தை பிளவுபடுத்தும் என்றும் அவர்கள் தங்களுக்குள் போரிட்டு அழிய வழிவகுக்கும் என்றும் எண்ணினார். அதாவது பூனா ஒப்பந்தத்தைப்பற்றி பேசும்போது காந்தி சொன்ன அதே வரிகள். அம்பேத்காரின் சாதியான மஹர்கள் ஒப்பீட்டளவில் முன்னேறியவர்கள். அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டே அவர் உள் ஒதுக்கீட்டை ஏற்கவில்லை என்று இன்று ராஜஸ்தானிலும் அஸாமிலும் எல்லாம் குற்றச்சாட்டு எழுகிறது.   இன்னும் சிக்கலான ஒரு குற்றச்சாட்டு உள்ளது. 1947 ன் இறுதியில் தனித்தொதி, இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளுக்கான முதல் அறிவிக்கை வெளியான போது அம்பேத்காரின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்பட்ட அந்த அறிவிக்கையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே தனித்தொதி,இடஒதுக்கீடு உட்பட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. பழங்குடிகள் முற்றாகவே விடப்பட்டிருந்தனர்! இந்த மாபெரும் சமூக அநீதியை அப்போது அரசியல்நிர்ணய சபையில் காங்கிரஸின் நியமன  உறுப்பினராக இருந்த ஜெய்பால்சிங் என்ற பழங்குடியினர்தான் சுட்டிக்காட்டி கடும் வருத்தம் தெரிவித்தார். அதன்பின்னரே அவர்கள் சேர்க்கபப்ட்டார்கள்.   இன்று இந்திய இட ஒதுக்கீட்டு விகிதத்தில் பழங்குடிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகக் கருதுபவர்கள் அம்பேத்காரின் பாரபட்சத்தை அதற்கு குற்றம்சாட்டுகிறார்கள். ‘டிப்ரஸ்ட் கிளாஸஸ்’ என்ற சொல்லையே அம்பேத்கார் எப்போதும் தன் கோரிக்கைகளில் பயன்படுத்தி வந்தார். அவர் உத்தேசித்தது தன் சாதியினரான தாழ்த்தப்பட்டோரை மட்டுமே என்றும் பழங்குடியினரை அவர் பொருட்படுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அந்தப் பொதுச்சொல்லைப் போர்த்தி அவர் பழங்குடிகளின் மீது தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டவர்கள்  நடத்தும் சுரண்டலை மறைக்க முயன்றார் என்று குற்றம் சுமத்துகிறார்கள். முன்பு வடகிழக்கு மாநிலங்களில் பேசப்பட்ட இக்குற்றச்சாட்டு  இன்று ஜார்கண்டிலும் ஒலிக்கிறது.   இக்குற்றச்சாட்டுகள் அனைத்துமே அம்பேத்கார் என்ற மாமனிதனின் நோக்கம் மீது களங்கம் கற்பிப்பவை என்றே நான் நினைக்கிறேன். காந்தியின் நோக்கம் மீது கற்பிக்கப்படும் களங்கத்துக்கு நிகரானது இது. இத்தகைய சிறுமைகளுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட இலட்சியவாதி அவர். டிப்ரஸ்ட் கிளாஸஸ் என்ற சொல்லை மிக விரிந்த ஒரு இலட்சியவாத அர்த்தத்தில் மட்டுமே அவர் கையாண்டார். அந்த மக்களிடையே உருவாகும் பேதம் அவர்களின் போராட்ட வல்லமையைக் குறைக்கும் என்று எண்ணினார்.   உரிமைக்காகப் போராடிய முன்னோடிகள் அனைவர் மேலும் இலாபங்கள் பங்கு வைக்கப்படுகையில் பாரபட்சம் என்ற குற்றச்சாட்டு எழும் என்று படுகிறது. பங்குவைக்கவேண்டியவை பெருகும்தோறும் குற்றச்சாட்டுகள் மேலும் வலுப்பெறும். காந்தியும் அதன் விளைவாகவே கரிபூசப்படுகிறார். பூனா ஒப்பந்தம் உயிர்த்தெழுந்ததன் காரணம்     என்ன காரணத்தால் இப்போது பூனா ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் வீரியத்துடன் முன்வைக்கப்படுகிறது? ஏற்கனவே சொன்னதுபோல காங்கிரசின் குடைக்கீழ் இருக்கும் தாழ்த்தப்பட்டவர்களை வென்றெடுக்கும் அரசியல்தேவையே அதற்கான முதல் காரணம். காந்தி மீதான முதல்தலைமுறை தலித் மக்களின் நம்பிக்கையைத் தாக்குதல் என்பது இரண்டாம் தலைமுறையை வென்றெடுப்பதாகவே முடியும். அது ஓரளவு வெற்றியும் பெற்ற ஒரு திட்டம். அதற்கு மிக வசதியாக வாய்த்தது பூனா ஒப்பந்தம். ஏன் என்றால் பூனா ஒப்பந்தம் குறித்து அம்பேத்கார்  கசப்புடன் சொல்லிய விஷயங்கள் எளிய மேற்கோள்களாக கிடைக்கின்றன.   இரண்டாவதாக, தலித்துக்கள் இந்துக்களே அல்ல என்ற ஒற்றை வாக்கியத்தை இந்திய தலித் மனத்தில் நிறுவ முனையும் கிறித்தவ மதமாற்ற சக்திகளின் நெடுநாள்திட்டம். அவர்கள் தலித் அமைப்புகளுக்கு அளிக்கும் மறைமுகமான வழிகாட்ட, ஊக்குவித்தல். அந்த வாதத்தை நிறுவ காந்தியில் நல்லெண்ணத்தை ஐயப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு பூனா ஒப்பந்தம் ஒரு வரலாற்று சாக்கு.   ஆகவே மண்டேகு செம்ஸ்போர்டு திட்டம் மூலம் முன்வைக்கப்பட்ட இரட்டை வாக்குரிமைத்திட்டம் ஒரேயடியாக தலித்துக்களின் வாழ்க்கையை மலரச்செய்திருக்கும் என்றும் அதை தடுத்ததன் மூலம் காந்தி தலித்துக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பூனா ஒப்பந்தம் மூலம் கிடைத்ததும் இன்றும் தலித்துக்களின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பதுமான இட ஒதுக்கீடுக்கு காந்தியின் காங்கிரஸே முக்கியமான காரணம் என்பது முற்றாக மறுக்கப்பட்டது.  பதிலுக்கு அது அம்பேத்கர் போராடிப்பெற்றதே என்று விளக்கப்பட்டது. ஹரிஜன் இயக்கத்தின்  ஒட்டுமொத்த சமூகப் பங்களிப்பும் வெறும் அரசியல் சமாளிப்பே என்று  ஒதுக்கப்பட்டது. இது அரசியல் நோக்குடன் செய்யப்படும் அப்பட்டமான வரலாற்றுத்திரிபு மட்டுமே.   ‘காந்தியும் காங்கிரஸ¤ம் தலித்துக்களுக்கு செய்தது என்ன’ என்ற அம்பேத்காரின் நூல் இந்திய மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு ஏறத்தாழ துண்டுபிரசுரம்போல வினியோகிக்கப்பட்டது. அந்நூலை எழுதியபின்னர்தான் அம்பேத்கார் காந்தி வாங்கித்தந்த சுதந்திரத்தை ஏற்று அவரது கட்சியால் நியமிக்கப்பட்டு அரசியல் நிர்ணய சபை தலைவராக பணியாற்றி தன் ஒதுக்கீடு கோரிக்கைகளை தானே சட்டமாக்கினார்  என்பது மறைக்கப்படுகிறது. அல்லது அவர் காங்கிரஸை எதிர்த்து போராடி சட்ட அமைச்சராக ஆகி அதையெல்லாம் செய்தார் என்று திரிக்கப்படுகிறது.   இந்திய தலித்துக்கள் அரசியல் அதிகாரத்தில் அவர்களுக்குரிய பங்கைப் பெற்றிருக்கிறார்களா? கண்டிப்பாக இல்லை என்பதே என் கருத்து.  அது இன்றியமையாதது என்பதும் அதன் மூலமே அவர்களின் சமூக அதிகாரத்தில் அடுத்த படி நிகழ முடியும் என்றும் நான் நினைக்கிறேன்.  அதை இந்திய ஜனநாயகம் அளிக்கும் வாய்ப்புகளினூடாக அரசியல் செயல்பாடுகள்மூலமாக மட்டுமே அவரக்ள் அடைய முடியும்.   அவர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளைப் பயன்படுத்திக்கொண்டு எந்த அளவுக்குச் சாத்தியமோ அந்த அளவுக்கு முன்னேற தலித்துக்களால் முடியவில்லை என்பது ஓர் கண்கூடான உண்மை. இந்திய சாதிகளில் சுதந்திரத்துக்குப் பின்னர் இட ஒதுக்கீட்டின் வலிமையால் வலிமையான பொருளியல் சக்திகளாக மாறிய பல சாதிகள் உண்டு. தலித்துக்களிலேயே கூட சில சாதிகள் ஒப்புநோக்க அதிகபட்ச வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. ஆனால் சீரான ஒரு வளர்ச்சி சாத்தியமாகவில்லை.   காரணம் எங்குமே தலித்துக்கள் ஒரு அரசியல் சக்தியாகத் திரளமுடியவில்லை. இந்தியசாதிகளில் பிற எதற்கும் இல்லாத ஒரு வாய்ப்பு தலித்துக்களுக்கு உள்ளது. அவர்கள் அதே அடையாளத்தில் தேசிய அளவில் இணைய முடியும். அபப்டி இணைந்தால் பெரும் நிர்ணாயக சக்தியாக அமையவும் முடியும். ஆனால் இன்றுவரை தேசிய அளவிலான ஒற்றுமை சாத்தியப்படவில்லை.  அதற்கான காரணங்களை தலித்துக்களின் சமூகமனத்தில், பழக்க வழக்கங்களில் தேடலாம். அவர்கள் வாழும் சூழல்களில் தேடலாம். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களில் தேடலாம். அது இந்த நிமிடம் வரை நடக்கவில்லை. நடக்க நமது அறிவுலகின் அரசியல்சரிநிலைகள், இடக்கரடக்கல்கள் இன்றுவரை விடவில்லை.   இன்று தலித்துக்களின் எந்த ஒரு சிக்கலுக்கும் தலித்துக்களின் ஏதேனும் ஓர் இயல்பு காரணமாக இருக்க முடியுமோ என்று ஐயப்படக்கூட எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர் மீது சாதிவெறியின் மொத்த முத்திரைகளும் வந்துவிழும், அவரது குரல் கூச்சல்களில் அமுங்கி மறையும். எப்போதாவதுதான் ஓர் அரசியல்வாதி மென்மையாகச் சொல்ல முற்படுகிறார். அதுவே அவருக்கு எதிராகத் திரும்பிவிடும்.   மிகமிக துரதிருஷ்டவசமான விஷயம் என்னவென்றால் இன்றும்கூட, அம்பேத்கார் மறைந்து அரைநூற்றாண்டு தாண்டியும்கூட, தலித்துக்களின் சிந்தனையை பிறர்தான் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான். இன்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியைச்சேர்ந்த கட்டுரையாளர்கள், மத அமைப்புகள் தங்கள் தூண்டிவிடும் எழுத்துக்கள் மற்றும் திரிபுகள் மூலம் தலித்துக்களை காழ்ப்பும் கசப்பும் கொண்டவர்களாக ஆக்குகின்றனர். அக்காழ்ப்பின் விளைவுகளில் தங்கள் லாபங்களை நோக்கி நகர்கின்றனர்.   காழ்ப்பு இருமுனை கொண்டது. உங்களுக்கு மேலே உள்ளவர்களின் மீது கொள்ளும் காழ்ப்பு அப்படியே கீழே உள்ளவர் மீதும் பாயும் என்பதே மானுட இயற்கை. ஏனென்றால் நான் என்ற சுய அடையாளத்தில் இருந்தே காழ்ப்பு உருவாகிறது. பிராமணர் மீதான காழ்ப்புடன் தொடங்கப்பட்ட பிராமணரல்லாதோர்- பிற்படுத்தப்பட்டோர் அரசியல் அப்படியே தலித்துக்கள் மீதான காழ்ப்பாக மாறியிருப்பதை இதை வாசிக்கும் எந்த ஒரு தலித்தும் தன் அனுபவத்தில் உணர்ந்திருப்பார். அரசியல் இடக்கரடக்கல் காரணமாக அவை சொற்களாக ஆகாமலிருக்கலாம். படோடோபமான சாதி ஒழிப்பு பேச்சுக்கள் பொதுச்சூழலில் ஒலிக்கலாம். உண்மை இதுவே.   தமிழகத்தில் இன்று நடக்கும் மலம் ஊட்டுதல், சுவர் கட்டுதல், சாணிப்பால் கொடுத்தல் முதலிய அடக்குமுறைகள் அனைத்துமே திராவிட இயக்கம் ஆழ வேரூன்றிய இடங்களில், இன்றும் திராவிட இயக்கக் கோட்டைகளாக திகழும் இடங்களில் நடக்கின்றன என்பது இந்த மனநிலை ஒரு சமூக உண்மை என்பதையே காட்டுகின்றது.   காழ்ப்பு கொள்வதென்பது தலித்தியர்களுக்கு அவர்களின் மாபெரும் இலட்சியத்துக்கு குந்தகமே விளைவிக்கும். அக்காழ்ப்பினால் அவர்கள் அவர்களை விட கீழாக இருப்பவர்களிடம் கசப்பை வளர்த்துக்கொள்ளவே நேரும். இன்று எல்லையில்லாத பொறுமையும், ஒவ்வொரு கணமும் சமரசம் செய்துகொள்ளும் ஜனநாயகப்பண்பும், மீண்டும் மீண்டும் ஒருங்கிணைப்பை மட்டுமே நாடும் மனநிலையும் கொண்டு செய்யப்படும் இலட்சியவாதச் செயல்பாடுகளே தலித் சாதிகளின் ஒருங்கிணைப்புக்கு அவசியம்.   அதற்கு அவர்களுக்கு உதவக்கூடியவர் காந்தியே. அஷிஷ் நந்தி கூறும் நாலாவது காந்தி.  மார்ட்டின் லூதருக்கும், நெல்சன் மன்டேலாவுக்கும், ஆங் சான் சூகிக்கும் வழிகாட்டியாக இருக்கும் காந்தி. அம்பேத்காரின் இலட்சியமும் காந்திய வழிமுறைகளும் இணைவது மட்டுமே அவர்களை வழிநடத்தமுடியும். அதைத்தான் இந்நிலத்தின் முக்கியமான சிந்தனையாளர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். டி.ஆர்.நாகராஜ் முதல் ராமச்சந்திர குகா வரை.   காந்திய வழி என்பது ‘பிறனை’ உருவாக்கி வெறுப்பை திரட்டிக்கொள்ளும் வழி அல்ல. வாழ்நாள் முழுக்க ஆங்கிலேயரை எதிர்த்தாலும் அவர்களையும் விரும்பிய வழி அது. காந்தியப்போராட்டம் என்பது உண்மையில் தனக்கு எதிரான போராட்டமே. தன் பலவீனங்களுக்கு எதிரான போராட்டம். தன்னை அடிமைப்படுத்தும் சக்திகளுக்கு எதிராக தன்னை ஆன்மீகமாக தார்மீகமாக வளர்த்துக்கொள்ளும் போராட்டம். அது எளிய வழி அல்ல. அஷிஷ் நந்தி சொல்வது போல காந்தி மிகமிக அபாயகரமானவர், ஏனென்றால் அவரிடம் குறுக்குவழிகள் இல்லை.   நடைமுறை உதாரணம் ஒன்றைச் சொல்லலாம். தலித் மக்களின் முன்னேற்றத்துக்கு இன்றுவரை பெரும்தடையாக இருப்பது குடிப்பழக்கம். எல்லா காலத்திலும் சேரிகளில்தான் கள்ளுக்கடை இருந்திருக்கிறது, மிகவும்பிற்படுத்தப்பட்டவர்கள் அதை நடத்தி பணம் அள்ளியிருக்கிறார்கள். தலித்துக்களின் முன்னேற்றத்துக்கு அடுத்த பெரும் தடையாக இருப்பது கந்துவட்டிக்கு கடன் வாங்கும் வழக்கம். கணக்குகள் வைத்துக்கொள்ளாமல் செலவழிப்பது அவர்களை கடனாளியாக ஆக்குகிறது. குடிப்பழக்கமும் சேர்ந்துகொள்கிறது.   சென்ற நூறு வருடத்தில் இந்த நடைமுறைத்தடையை உணர்ந்து தலித்துக்கள் இவற்றில் இருந்து விடுபடவேண்டும் என ஓர் அரசியல் போரை நடத்தியது காந்தியின் ஹரிஜன இயக்கமே. தலித்துக்கள் பாரம்பரியமான தொழில்களில் கட்டுண்டுகிடப்பதும் அவர்களின் முன்னேற்றத்துக்குத் தடை என உணர்ந்து அவர்களுக்கு மாற்றுக் கைத்தொழில்களை முன்வைத்ததும் அதுவே. அந்த இயக்கமே இன்று நினைவாக பழங்கதையாக ஆகிவிட்டிருக்கிறது. அதன்பின் சென்ற காலங்களில் அம்மக்களை நோக்கி அவர்களின் குறைகளைச் சீர்திருத்திக்கொள்ளும்படி, அவர்களின் சமூக இயக்கத்தை ஊக்குவிக்கும்படி, பேசிய அரசியல்தலைவர் யார்?   தலித் ஒற்றுமைக்கு வெளியே இருந்து என்ன தடை உள்ளது? தமிழ்நாட்டிலேயே தேவேந்திரகுல வேளாளர்களும் பறையர்களும் அருந்ததியர்களும் ஒரே அரசியல் சக்தியாக ஆக ஏன் முடியவில்லை? அது நினைப்பது போல் எளிய விஷயம் அல்ல. இந்தியா என்ற மாபெரும் பன்மை அமைப்பின் சிக்கல் அது. அம்பேத்காரே புரிந்துகொள்ள முடியாத புதைகுழி அது.   அதைப்புரிந்துகொள்ள சாதியை ஓர் ‘ உயர்சாதிச்சதியாக’ எண்ணும் எளிய வாய்ப்பாடுகள் உதவாது. சாதி என்பது ஒடுக்குமூறைக்கான ஆயுதமாக ஆகியிருக்கலாம். ஆனால் அது அம்மக்களின் அடையாளமும் பாரம்பரியமும் கூட.  அந்நிலையில் போலியான சாதிய ஒழிப்புக்கூச்சல்கள் மேடைச்சத்தங்கலாக மட்டுமே நிற்கும். சாதியைப்பற்றிய புறவயமான யதார்த்தம் சார்ந்த புரிதல் தேவைபப்டுகிறது.   அதற்கு கோஸாம்பியை நினைவுறுத்துகிறேன். சாதி அம்மக்களின் தொன்மையான குல அடையாளம். அவர்களின் பழங்குடி வேர் அது. அதை ஒருபோதும் அவர்களால் கைவிட முடியாது. எந்த சாதியடையாளத்தால் ஒருவன் அவமதிக்கப்படுகிறானோ அதே சாதியடையாளம் அவனுக்கு பெருமிதமளிக்கும் சுயமாகவும் இருக்க முடியும் என்ற விசித்திரம் அது.   நடைமுறையில் மீண்டும் மீண்டும் காண்கிற ஒன்றுண்டு. ஒரு பிராமணர் தலித் பெண்ணை மணக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தப்பிராமணர் வீட்டில் என்ன அதிர்ச்சியும் எதிர்ப்பும் இருக்குமோ அதேயளவு அதிர்ச்சியும் எதிர்ப்பும் தலித் வீட்டிலும் இருக்கும். அவர்களுக்கு தங்கள் சாதி சம்பந்தமான இழிவு ஏதும் அந்தரங்கமாக இல்லை. அது அவர்களின் அடையாளம். அதை ஒருபோதும் விடமாட்டார்கள். அவர்கள் பொருளியல் வல்லமையாக ஆகும்தோறும் அவ்வடையாளம் மேலும் திடம் பெறும் என்பதே சமூக யதார்த்தம்.   தலித் என்ற பொது அடையாளத்தை ஏற்க இந்திய சாதிகளுக்கு அவர்களின் சுயமே தடையாக இருக்கிறது. அந்த சுயத்தை இழக்காமல், பரஸ்பரம் உள்ள அவநம்பிக்கைகளைக் களைந்து ஒரே அரங்கில் அவர்களை அமரச்செய்ய தேவைப்படுவது காந்தியம். அதன் இடைவிடாத சமரசப்போக்கு, சோர்வுறாத பேச்சுவார்த்தை, அடிப்படை விழுமியங்களில் பிடிவாதத்துடன் எத்தனை தூரம் போக முடியுமோ அத்தனை தூரம் போகும் நேசப்போக்கு…   அதைச்செய்யும் தலைமை இன்று அவர்களுக்கு இல்லை. காந்தியைப்போல நாக்கில் பிரக்ஞையின் முழுக்கட்டுப்பாடுள்ள தலைமை தேவைப்படுகிறது. எந்நிலையிலும் எந்த தரப்பையும் உதறிவிடாத பொறுமை தேவைப்படுகிறது. பூரணமான தியாகம் தேவைபப்டுகிறது. அது சாத்தியமாகவில்லை என்பதை இந்திய அரசியலைக் கூர்ந்து பார்ப்பவர்கள் எளிதில் உணரலாம்.     இந்தப் பலவீனங்களுக்கான பொறுப்பை தாங்கள் ஏற்கத் தயங்கும் மனநிலையில் இருந்துதான் பூனா ஒப்பந்தம் குறித்த பேச்சுகள் மீண்டும் எழுகின்றன. 1932ன் மண்டேகு செம்ஸ்போர்டு திட்டம்  இன்றைய தலித்துக்களின் நிலைமையை அன்றே மாற்றியிருந்திருக்கும் என்றும் காந்திதான் தடுத்தார் என்றும் ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.   இத்தகைய வாதங்களுக்கு இந்திய அரசியல் சூழலில் பஞ்சமே இல்லை. ஒட்டுமொத்தமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது இதெல்லாம் எப்படித்தான் அறிவுபூர்வமாக முன்வைக்கப்படுகிறதோ என்ற பிரமிப்பே ஏற்படுகிறது. காந்தி தன் வாழ்நாளெல்லாம் மாறுபடும் பல்வேறு தரப்புகள் நடுவே சமரசத்தையும் ஒத்திசைவையும் உருவாக்கி ஒரு நவீன சமூகத்தை உருவாக்க ஓய்விலாது முயன்றார். ஆனால் அத்தனை தரப்பும் தங்கள் நலன்களைச் சார்ந்து ஒரு தீவிரநிலைபாடு எடுத்து அவருடன் உக்கிரமாக மோதுகின்றன. அவர் மேல் சேறுபூசி தங்களை நியாயப்படுத்திக்கொளிகின்றன. 
 


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தலித்தியமும் காந்தியமும் சுருக்கமாக   1. காந்தி பிரிட்டிஷாரின் சலுகைகள் மூலம் சமூகமாற்றம் உருவாகும் என நம்பவில்லை. பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் எவ்வித அதிகாரமும் இல்லாத மாகாணசபைப் பதவிகள், அதற்கான தேர்தல்கள், அதில் உள்ள சலுகைகள் ஆகியவற்றை அவர் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை   2. ஆனால் அச்சலுகைகளுக்கான பரஸ்பரப்போராட்டத்தில் இந்திய சமூகம் பிளவுபடுவதைக் கண்டால். இஸ்லாமியர் மற்றும் சீக்கியகளுக்கான  தனிவாக்குரிமை நாட்டை ஏற்கனவே பிளவுபடுத்தி விட்டதை உணர்ந்தார். அப்பிளவை சரிசெய்யவே அவர் கிபா·பத் இயக்கத்தை ஆதரித்தார். ஆனால் அம்முயற்சி கைகூடவில்லை   3. இந்நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு இரட்டைவாக்குரிமை அளித்து அவர்களையும் தேசத்திற்குள் ஒரு தனித்தேசம் போல நடத்த முனைந்த பிரிட்டிஷாரின் முயற்சியை தடுக்கவே காந்தி அதை எதிர்த்தார். உண்ணாவிரதம் இருந்து தன் தரப்பை அம்பேத்கார் ஏற்கச்செய்தார்   4. அதன் மூலம் உருவான பூனா ஒப்பந்தம் இரட்டை வாக்குரிமை தவிர அம்பேத்கார் கோரிய எல்லா சலுகைகளையும் ஏற்றுக்கொண்டது. இந்தியாவின் உண்மையான அதிகாரத்தை கையில்வைத்திருந்த மக்கள் அமைப்பான காங்கிரஸ் அளித்த இச்சலுகைகளே உண்மையில் தாழ்த்தப்பட்டோர் அடைந்த சலுகைகள் எனலாம். அச்சலுகைகள் சுதந்திரத்துக்குப் பின்னரும் நீட்டிக்கப்பட்டன. இன்றுவரை தொடரும் சலுகைகளுக்கான தொடக்கமும் அதுவே   4. அச்சலுகைகளுக்கு எதிராக காங்கிரஸ¤க்குள் உருவான எதிர்ப்பை வெல்ல காந்தி 21 நாள் உண்ணாவிரதம் இருந்து அதை காங்கிரஸ¤ம் பெருவாரியான இந்தியர்களும் ஏற்கச் செய்தார். தாழ்த்தப்பட்டோருக்கு தனிச்சலுகை தேவை என்பதை அவரது வற்புறுத்தலால்தான் சாதியில் ஊறியிருந்த இந்திய தேசம் ஏற்றுக்கொண்டது   5. மக்களின் மாற்றம் மூலமே உண்மையான அதிகார மாற்றம் வரும் என்ற தன் கொள்கையின்படி காந்தி தாழ்த்தப்பட்டோருக்காக ஹரிஜன இயக்கத்தை ஆரம்பித்தார். இந்தியாவின் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களைச் சென்றடைந்த முதல் வெகுஜன இயக்கம் அதுவே. அது அவர்களுக்கு உரிமை குறித்த உணர்வு, கல்வி, மாற்று வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளித்தது.   6. கோடிக்கணக்கான பிறசாதியினரை தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைப் பற்றிய பிரக்ஞை கொள்ளசெய்தது ஹரிஜன இயக்கமே. பலலட்சம்பேரை சேவைசெய்ய அது சேரிகளுக்கு அனுப்பியது. அந்த பிரக்ஞையே பின்னர் தாழ்த்தப்பட்டோர் எந்தபோராட்டமும் செய்யாமல் உரிமைகளைப் பெற வழிவகுத்தது   7. அம்பேத்கார் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக எந்தஒரு ஒட்டுமொத்த மக்கள் இயக்கத்தையும் போராட்டத்தையும் நடத்தவில்லை. அதிகாரம் மூலம் கொண்டுவரும் மாற்றமே அவரது இலக்காக இருந்தது. அம்முயற்சி அவருக்கு வெற்றியை அளிக்கவில்லை.   9. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது காந்தியின் கொள்கைரீதியான செல்வாக்கின் காரணமாகவே காங்கிரஸையும் இந்தியாவின் சுதந்திரத்தையும் எதிர்த்துவந்த அம்பேத்கார் நேருவால் அழைக்கப்பட்டு சட்ட அமைச்சர் ஆக்கப்பட்டார். அரசியல் நிர்ணயக்குழு உறுப்பினர் ஆக்கபப்ட்டார்   10. பிரிட்டிஷ் அரசு வழங்கிய எல்லா தேர்தல் சலுகைகளும் வயதுவந்த அனைவருக்கும் ஓட்டு என்ற உண்மையான ஜனநாயகத்தை மறுத்து அதற்குப் பதிலாக அளிக்கப்பட்டவையே. அதற்குப் பதிலாகவே அம்பேத்கார் சலுகைகளை கோரிவந்தார். சுதந்திர இந்தியாவில் நேருவின் விருப்பப்படி அம்பேத்காரே வயதுவந்தோர் வாக்குரிமையை சட்டமாக்கினார். அதனால் முஸ்லீம் சீக்கியர் உட்பட அனைவருக்கும் இருந்துவந்த இரட்டை வாக்குரிமை உட்பட்ட எல்லா சலுகைகளும் ரத்தாயின   11 ஆனால் காந்தியின் உணர்ச்சிகளையும் ஆணையையும் கருத்தில்கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் பலவகையான இட ஒதுக்கீடுகளும் சலுகைகளும் அளிக்கப்பட்டன   12. இலட்சியவாதியாக இருந்த அம்பேத்கார் ஜனநாயகம் என்பது பல்வேறு எதிர்தரப்புகளுடன் உரையாடி மெல்லமெல்லத்தான் முன்னேரும் என்ற உண்மையை உள்வாங்காதவராக இருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களின் உள்முரண்பாடுகளையும் சமூகச் சிக்கல்களையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. மேலிருந்து அதிகாரம் மூலம் மாற்றங்களை செய்யமுடியும் என நினைத்தார். அது நடைமுறைச்சாத்தியமல்ல. ஆகவே பொறுமை இழந்தார். பிறரை அதற்காகக் குற்றம் சாட்டி கசப்புகளை கொட்டினார்   13. சுதந்திர இந்தியாவில் தலித்துக்கள் ஒரு ஒட்டுமொத்த சக்தியாக திரண்டு வாக்குவங்கி மூலமே எல்லா லாபங்களையும் அடைய முடியும். ஆனால் தங்கள் பாரம்பரியமான உள்முரண்பாடுகளாலும் பல்வேறு சமூக உளவியல் காரணங்களாலும் அவர்களுக்கு அது சாத்தியப்படவில்லை. அந்த உண்மையை மழுப்பும்பொருட்டே இன்று பூனா ஒப்பந்தம் மிகைப்படுத்தப்படுகிறது. அதன் மூலம் தாழ்த்தப்பட்டோருக்கு எல்லாவகையான முன்னேற்றங்களும் சாத்தியமாகியிருக்கும் என்று சொல்லப்படுகிறது.   14. தாழ்த்தப்பட்ட மக்களில் ஒரு சதவீதம் பேருக்குக் கூட வாக்களிக்க வாய்ப்பு அளிக்காத பிரிட்டிஷ் சீர்திருத்தமான இரட்டை வாக்குரிமையால் எவ்வித நலனும் சாத்தியமாகியிருக்காது என்பதே உண்மை. அதை முஸ்லீம்களின் விஷயத்தைப் பார்த்தாலே உணரலாம்   15. இன்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரஸ் மேல் கொண்டிருக்கும் பற்றை களைந்து அவர்களை காங்கிரஸில் இருந்து பிரிக்கவே காந்தி கரி பூசப்படுகிறார்.   16. அம்பேத்கார் மேலிருந்து சமூக மாற்றத்தைக் கொண்டுவர முனைந்தவர். பிரிந்து செயல்பட்டு முன்னேற முயன்றவ. காந்தி மக்களியக்கம் மூலம் முன்னேற வழிகாட்டியவர். இணைந்து செயல்படுவதன் மூலம் வெற்றி உள்ளது என்றவர். இருவரும் தங்கள் வழிகளில் தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக அரும்பணி ஆற்றினார்கள்.      நமது பலவீனங்களைச் சுமக்கும் கிழவர்  காந்தியம் மீதான அவதூறுகளை உருவாக்கியதில் வங்க எழுத்தாளர்களுக்கு பெரும்பங்குண்டு. சுரேந்திரநாத் பானர்ஜி 1918ல் கட்சியைவிட்டுபோனபோது ஆரம்பித்த கசப்பு அது. பின்னர் சுபாஷ் சந்திர போஸ் வழியாக அது வளர்ந்து மார்க்ஸியம் மூலம் வலுப்பெற்றது.   தேசிய மொழிப் பிரச்சினையில் அவர் உருது சார்ந்த இந்துஸ்தானிக்குக்குச் சாதகமான நிற்கிறார் என தூய இந்தி வாதிகளுக்கு மனக்கசப்பு. உருது வாதிகளுக்கு அவர் இந்தி ஒழிக்கும்படிச் சொல்லவில்லை என்று கசப்பு. இந்துக்களுக்கு அவர் இந்து விரோதி. முஸ்லீம்களுக்கு அவர் இதுவெறியர்.இந்த எல்லா தனிக்குழுக்க்களும் இன்றும் தொடர்கின்றன. இவர்களை எல்லாம் இணைத்து ஒரு நவீன தேசத்தை உருவாக்கி இன்றுநாம் காணும் சிவில்சமூகத்தையும் ஜனநாயகத்தையும் உருவாக்கிய மனிதன் இவர்கள் அனைவராலும் வசைபாடப்படுகிறா¡   இந்திய இடதுசாரிகளுக்கு காந்திமேல் கடும் கோபம். அந்த பனியா மட்டும் இல்லாவிட்டால் இந்தியாவில் அவர்கள் அன்றே புரட்சியை நடத்தி இந்தியாவின் வறுமைக்கு முழுத்தீர்வு கண்டிருப்பார்கள்! அவர் இந்திய முதலாளிகளின் ஆயுதம்! சுபாஷ் சந்திரபோஸ் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை சுபாஷ் தீவிரமான ஆயுதப்போராட்டம் மூலம் இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்திருப்பார். அகிம்சை பேசிய கிழவர்தான் தடுத்தார்! ஆங்கிலேயர்கள் உண்மையான சுதந்திரப்போராட்டம் உருவாகாமல் தடுப்பதற்காக உருவாக்கிய பொம்மை அவர். பகத் சிங் தூக்கிலே தொங்கவும் அவரே காரணம். இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அவர் இந்துவெறியர். ஆண்ட வம்சமாகிய இஸ்லாமியர் மீண்டும் ஆள முடியாமல் தடுத்த நயவஞ்சகர் அவர். திராவிடவாதிகளுக்கு திராவிட ஒற்றுமை உருவாகாமல் தடுத்த சதிகாரர்.   இந்துத்துவர்களைப் பொறுத்தவரை இந்தியாவின் ஷத்ரிய சக்தியையும் பிராமண சக்தியையும் அழித்தவர் அவர். வைசிய சக்தியை முதன்மைப்படுத்தி இந்தியாவின் ஆன்மீக வலிமையையும் போராடும் குணத்தையும் கெடுத்தவர். அதன் மூலம் இந்து சாம்ராஜ்யம் உருவாகாமல் தடுத்தவர். ஆங்கிலேயர்களால் இந்த காரணத்துகாகவே ஆப்ரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு இந்திய சூழலில் வளர்க்கப்பட்டவர் காந்தி! தலித்தியர்கள் நோக்கில் ஆங்கில அரசு அவர்களுக்கு தட்டில்வைத்து நீட்டிய பொன்னுலகை தட்டிவிட்ட சாதி வெறியன்!   காங்கிரஸைப் பொறுத்தவரை அவர் ஒரு மகான், ஆனால் உபயோகம் இல்லாதவர். பெருதொழில்கள், பெருமுதலீடுகள், கமிஷன்கள், ஊழல்கள் ஆகிய நவீனக் கருத்துக்கள் எதையுமே புரிந்துகொள்ளாமல் அரைவேட்டியும் குச்சியுமாக நிற்கும் புராதனமான குலதெய்வம். சாமானியர்களுக்கு சாலைதோறும் சர்க்கார் நட்டுவைத்த எல்லைச்சாமி. ஆக, யாருக்குத்தான் காந்தி எதிரி இல்லை?   இவர்கள் எவருக்குமே இவர்களின் கருத்துக்களின் பலவீனங்கள் தெரிவதில்லை. இவர்கள் எதிர்கொண்டுள்ள சூழல்களின் சிக்கல்கள் கூடத் தெரிவதில்லை. இவர்களின் வரலாற்றுப்பாத்திரம் தெரிவதில்லை. இவர்களின் பலவீனமான மனங்களின் பிரமையின்படி இவர்களின் எல்லா தோல்விகளுக்கும் காந்தியே காரணம்.   நிகாஸ் கசந்த் ஸகீஸின் ‘ஏசுவின் இறுதிச் சபலம்’ [Last Temptation of Christ : Nikos Kazantzakis ] நாவலில் ஒரு உவமை வரும். பழங்காலத்தில் யூதர்களுக்கு ஒரு சடங்கு இருந்தது. வருடத்தில் ஒரு நாளில் ஒரு ஆட்டைப் பிடித்து தங்கள் அனைவரின் பேய்களையும் நோய்களையும் அதன் மீது ஏற்றி அதன் கழுத்தில் கொஞ்சம் நீரையும் வைக்கோலையும் கட்டிதொங்கவிட்டு பாலைவனத்தில் விட்டுவிடுவார்கள். பசித்து தாகித்து பாலையில் அலைந்து அது சாகும். அதனுடன் சென்ற எல்லா தீங்குகளும் பாலைவனத்திலேயே திசைதவறி நின்றுவிடும்! ஏசு அந்த ஆடுதான் என்கிறார் கசந்த் சக்கீஸ். நமக்குரிய ஏசு காந்தி. சிலுவையை கொடுக்காமல் விட்டுவிடுவோமா என்ன?   எப்பேற்பட்ட தெய்வம்! நமது சகல பாவங்களையும் தானே சிலுவையாகச் சுமந்தபடி கையில் குச்சியும் பொக்கை வாய்ச்சிரிப்புமாக நம் தெருமுனைகளில் நிற்கிறது. உங்கள் சுயநலத்தை பிறரின் சுயநலம் தடுக்கிறதா, உங்கள் சகோதரனுடன் நீங்கள் அமர்ந்து பேசமுடியவில்லையா, உங்கள் சொந்தபலவீனங்களை நீங்கள் வெல்லமுடியவில்லையா, உங்களுக்கு ஏமாற்றங்கள் இருக்கின்றனவா, கையாலாகாதவராக உணர்கிறீர்களா,  வாருங்கள் வந்து  வசைபாடுங்கள், செருப்பாலடியுங்கள்! அது இதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தெய்வம்.
 
                                                           [முற்றும்]
 
 
            Responses to “காந்தியும் தலித் அரசியலும் 7”
  1. அன்புள்ள ஜெயமோகன்,
    காந்தி பற்றிய கட்டுரைகளை படித்த பிறகு அவரை எவ்வளவு thavaraaga புரிந்து கொண்டிருந்தேன் என என்னும்போது தாங்க முடியாத குற்ற உணர்வு எழுகிறது. எவ்வளவு நுட்பமாக எல்லோருக்கும் பயன்படக்கூடிய வகையில் அரசியல் , சமூக பிரச்சினைகளுக்கு வழிமுறைகளையும், தீர்வுகளையும் கொடுத்திருக்கிறார். ஆயினும் உண்மை அழியாதது என்பதற்கேற்ப இப்போது அது வெளிவந்திருக்கிறது… அது வரை மகிழ்ச்சியே ..

     

    By சங்கரன் on Jan 26, 2010

  2. வணக்கம்!
    “காந்தியும் தலித் அரசியலும் 7″ கட்டுரையில் நிரைய முரன்பாடுகள் எமக்குன்டு, காந்தியின் மேல் உங்களுக்கு மறியாதையில்லை மாறாக அவரை தெய்வமாக அல்லது மாபெரும் மனுட தீர்க்கதரிசியாக எண்ணுகிறீர்கள். அதே நிலைப்பாட்டோடு அம்பேட்கரை அனுக முயலுகிறீர்கள்!

     

    முதலில் “காந்தி வாங்கித்தந்த சுதந்திரத்தை” என நீங்கள் சொல்வது எந்த வகையில் உண்மை இல்லை,”freedom at midnight “டை படிக்காதவர் அல்ல நீங்கள்!

    “who is sudha and who is adi சுற்ற ” வையும் வாசித்திறுப்பீர்கள், மிக நேரடியாக அம்பேட்கர் தலித் மக்களுக்கு மட்டுமே பாடுபட்டார் என்ற எண்ணம் கொண்ட ஓர் இந்திய நிலக்கீழார்கள்/முதலாலிகள் பேசுவது போலிருக்கிறது உங்கள் எண்ணம், ஒருவிதத்தில் அதுவும் உண்மைதான்.

    அடுத்து “தலித்துக்களின் சிந்தனையை பிறர்தான் தீர்மானிக்கிறார்கள் என்பது” என்ற கருத்துத்தையும் சாதிய பார்வையால் மட்டுமே அனுகுகின்றீர்கள், இன்று பரவலாக மாநில மற்றும் ஆங்கில ஏன் பல்வேறு உலக‌ மொழிகளில் பரவிவரும் தலித் அறிவுஜீவிகளையும் அவர்களுடைய சிந்தனையும் கொச்சப்படுத்த முயல்வது காந்தி செய்த அதே உள்குத்து வேலை! சிறப்பு!! சும்மாவ பின்ன, வலி இருக்கத்தானே செய்யும்!

    மேலும் “தலித் சாதிகளின் ஒருங்கிணை அவசியம்” என்ற உங்கள் கருத்தை எல்லா தலித்துக்களும் ஆதறிக்கிறார்கள், ஏற்றுக் கொள்ளிறார்கள் ஆணால், சூத்திர கூட்டம் தான் குழிதோண்டுகிறது.

    நான் கேட்கிறேன் வெள்ளையர்கள்களுக்கு பின்பு ஆட்சியைப் பிடித்த பார்பன மற்றும் கூத்திரர்களால் சீனா அளவிற்க்கு இந்தியாவை ஏன் வளர்க்க முடியவில்லை? ஒரே பதில் சாதிய சங்கிலியால் கட்டப்பட்டிறுக்கிறது இந்திய ஜனநாயகம் என்பதுவே!

    By ablingan on Jun 7, 2010 கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard