New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை


Guru

Status: Offline
Posts: 24603
Date:
DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை
Permalink  
 



DRAVIDA MAYAI - திராவிட மாயை – ஒரு பார்வை

 
திராவிடர்கள் மீது கடவுள் சிந்தனை திணிக்கப்பட்டதா? – சுப்பு 

பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்’ என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் டி.எம். நாயர் அழைப்பு விடுத்ததாகவும், அதையே தான் மீண்டும் கூறுவதாகவும் கருணாநிதி உடன்பிறப்புகளுக்குக் கடிதம் எழுதினார்.

திராவிட இயக்க வரலாற்றை அறிவதற்கு முன்பு, அதில் டி.எம். நாயரின் பங்களிப்பைத் தெரிந்து கொள்வோம்.

இந்திய சட்டமன்றத்திற்கான தேர்தல் 1916-ல் நடந்தபோது, டி.எம். நாயர் வேட்பாளராகப் போட்டியிட்டார். மகாத்மா காந்தியின் நண்பர் என்று அறியப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்திரியாரால் தோற்கடிக்கப்பட்டார். இதே தேர்தலில் நில உரிமையாளர்களுக்கான தொகுதியில் போட்டியிட்ட பி. இராமராயலிங்கரும், பிற தொகுதிகளில் போட்டியிட்ட பிட்டி. தியாகராய செட்டியாரும், கே.வி. ரெட்டி நாயுடுவும் தோற்கடிக்கப்பட்டனர்.

வெகுஜன ஆதரவு இல்லாத காரணத்தால், தேர்தலில் தோல்வி அடைந்த இவர்கள் கூடி, தேர்தல் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்தார்கள். பிராமணர்கள்தான் தங்களைத் தடுத்து விட்டார்கள் என்பது அவர்களுடைய கண்டுபிடிப்பு. எனவே, பிராமண எதிர்ப்பு என்ற கொள்கையை வகுத்துக் கொண்டார்கள். இப்படி அமைந்ததுதான் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’. இந்த அமைப்புதான் ‘ஐஸ்டிஸ்’ என்ற நாளிதழையும் நடத்தியது. நாளடைவில், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை பொதுமக்கள் ஐஸ்டிஸ் கட்சி என்றும், நீதிக் கட்சி என்றும் அழைத்தனர்.

தேசிய எழுச்சிக்குத் தடை போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கில ஆட்சியாளர்கள், நீதிக் கட்சியின் வளர்ச்சிக்கு உதவினார்கள்.

டி.எம்.நாயர், அக்.7, 1917-ல் நிகழ்த்திய சொற்பொழிவு திராவிட இயக்கத்தவரால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. சென்னை நகரத்தின் ஸ்பர்டாங்க் சாலைப் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அந்தச் சொற்பொழிவை ‘வரலாற்றுச் சிறப்புமிக்க வீரஞ் செறிந்த, எழுச்சிமிக்க, உணர்ச்சி ஊட்டக் கூடிய சொற்பொழிவு’ என்று தமது ‘திராவிட இயக்க வரலாறு’ என்னும் புத்தகத்தில் வர்ணனை செய்கிறார் இரா.நெடுஞ்செழியன். இந்த உரை திராவிட இயக்கத்தவரின் கொள்கை விளக்க அறிக்கையாகக் கருதப்படுகிறது. ஆகவே, அதை விவரமாகப் பார்க்கலாம்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திராவிட இயக்க நூற்றாண்டுத் துவக்க விழாவில் பேசிய கலைஞர் மு.கருணாநிதி, ‘திராவிட’ என்ற சொல்லை தானோ, பேராசிரியர் அன்பழகனோ உருவாக்கவில்லை என்றார். இந்திய நாட்டின் தேசிய கீதம் ‘ஜன கண மன’ என்ற பாடலை எழுதிய ரபீந்த்ரநாத் தாகூர் ‘திராவிட உத்கல வங்கா’ என்று எழுதியிருப்பதை அவர் சுட்டிக் காட்டியபோது, அங்கிருந்த உடன்பிறப்புகள் ஆர்ப்பரித்தார்கள். திராவிட இயக்கங்கள் தோன்றுவதற்கு முன்பே, இந்த மண்ணில் திராவிடம் என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆசார்யரான ஸ்ரீவேதாந்த தேசிகர், ‘த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற நூலை எழுதியிருக்கிறார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. ஃபிரான்ஸிஸ் வைட் எல்லீஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த ஆராய்ச்சியின் விளைவு இது. இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி, இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவுபட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல்தான். இந்த இயக்கங்களின் அடிப்படையான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம் கால்டுவெல்லின் கற்பனையில் உருவானதுதான்.... மொழி உணர்வு என்பது ஒற்றுமைக்குப் பயன்பட வேண்டும். அதை வேற்றுமைக்கெனப் பயன்படுத்தியதுதான் கழகத்தவர்களின் சாதனை. திராவிட இயக்க நூற்றாண்டு துவக்க விழாவில் கருணாநிதி, உ.வே.சாமிநாத ஐயரைச் சுட்டிக் காட்டினார். ஆனால், மொழி உணர்வு பற்றி, உ.வே.சா. கூறியதைப் பார்க்கலாம்:

1937-ஆம் வருடம் நடந்த இந்திய இலக்கியக் கழகத்தின் முதல் மாநாட்டில், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் வரவேற்புரை நிகழ்த்தினார். அந்த உரையில் “இந்த பாரதீய சாகித்ய பரிஷத்தின் நோக்கம் எவ்வளவு உயர்ந்தது! இதன் முயற்சிகளால் குறுகிய நோக்கங்களும், சிறு வேறுபாடுகளும் ஒழிந்து தமிழர்களுள் ஒற்றுமை, திராவிட பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை, பாரதீய பாஷா சமூகத்தாருள் ஒற்றுமை ஆகிய மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாக உண்டாகுமென்றே நம்புகிறேன்” என்றார்.

இந்திய மக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டும், அதற்கு மொழி உணர்வைப் பயன்படுத்த வேண்டும் என்று முனைந்த தமிழ்த் தாத்தாவின் உயர்ந்த நோக்கத்தை, தமிழர் பண்பாடு என்று ஏற்றுக் கொள்ளலாம். தகர டப்பாவில் தாரை நிரப்பிக் கொண்டு, மொழிகளுக்கிடையே பகைமையை மூட்டிய கழகத்தவரின் செயலை ஏற்றுக் கொள்ள முடியுமா? ஆரிய திராவிட இன வேறுபாடு என்ற கோட்பாடு, வரலாற்று ஆய்வாளர்களால் கைவிடப்பட்ட விஷயம். அதை தி.மு.க. மேடைகளில் தொடர்ந்து பேசுவது பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒன்று. சென்ற மாதம் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தில் நடந்த ‘உயிரியல் தொழில் நுட்பத்தின் எல்லைகள்’ என்ற கருத்தரங்கில், காசி ஹிந்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் லால்ஜி சிங் பேசினார். ..
 


பள்ளிக் கூடங்களில் சொல்லித் தரப்படுகிற ஆரியப் படையெடுப்பு என்ற கருத்துக்கு அடிப்படையே இல்லை. இன்றைய இந்தியர்கள் அனைவருமே கலப்பினம்தான் என்று மரபணு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரியரும் திராவிடரும் ஒரே பண்பாட்டின் பிரதிநிதிகள்” என்றார் அவர். பல்கலைக் கழக கருத்தரங்கில் மட்டும் பேசப்பட்ட கருத்து அல்ல இது. தி.மு.க. ஆட்சியின்போது நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில், ஃபின்லாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்கோ பர்போலா சிறப்புரையாற்றினார். “தெற்காசியாவின் பண்பாடும் கலாசாரமும் வட இந்தியர்களாலும், திராவிட மொழி பேசும் தென்னிந்தியர்களாலும் ஒன்றாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன” என்றார் அவர். நாடு பிடிக்கும் ஆசைக்காகவும், மத மாற்ற லாபங்களுக்காகவும் தயாரிக்கப்பட்டதுதான் ஆரிய - திராவிட இன வாதம் என்ற நாடகம். இந்த நாடகம், அரிதாரம் வாங்கக் காசில்லாமல், அவையோர் எவருமில்லாமல் இழுத்து மூடப்பட்டு விட்டது. கலைஞர் மட்டும் பழைய வசனங்களையே பேசிக் கொண்டிருக்கிறார். கழகத்தவர் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். .



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

நீதிக் கட்சியின் தோற்றத்திற்குக் காரணம், 1916- ஆம் ஆண்டு நடந்த தேர்தல் என்பதையும், தோல்வி அடைந்தவர்கள் பிராமண எதிர்ப்பைக் கொள்கையாக வகுத்துக் கொண்டார்கள் என்பதையும் முந்தைய இதழில் பார்த்தோம். 

அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இன்னொரு இயக்கமும் துவக்கப்பட்டது. அது தனித் தமிழ் இயக்கம். திராவிட இயக்க வளர்ச்சிக்குத் தனித் தமிழ் இயக்கமும் ஒரு காரணியாக இருந்தது. எனவே, தனித் தமிழ் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம். 

தமிழ், ஸம்ஸ்க்ருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலவராக இருந்தவர் ஸ்வாமி வேதாசலம். இவர் தமிழ் மீது இருந்த ஆர்வத்தால் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். தமிழ் மொழியை ஸம்ஸ்க்ருதச் சார்பில்லாமல் தனித்து இயங்கச் செய்ய வேண்டும் என்பது அவருடைய நோக்கம். மறைமலை அடிகள் உருவாக்கியதுதான் தனித் தமிழ் இயக்கம். 

துவக்கத்தில், தனித் தமிழ் இயக்கம், நீதிக்கட்சிக்காரர்களோடு முரண்பட்டு இருந்தது. தமிழர்களுடைய கடவுள் சிவன்; தமிழர் சமயம் ஹிந்து சமயத்தைவிடத் தொன்மையானது என்று மறைமலை அடிகள் பேசி வந்தார். பிராமணர் அல்லாதாரை மறைமலை அடிகள் கடத்திக் கொண்டு போய் விடுவாரோ என்று நீதிக்கட்சிக்காரர்கள் பயந்து விட்டார்கள். தவிர, நீதிக்கட்சிக்காரர்களுக்கு ‘திராவிட’ என்று சொல்லிக் கொள்ள வேண்டி நிர்பந்தம் இருந்தது. நீதிக்கட்சித் தலைமையும் தமிழ் அல்லாதாரிடம் சிக்கியிருந்தது. மறைமலை அடிகளுக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே காரசாரமாக அறிக்கைகள் பறந்தன. கருத்து மோதல் ஏற்பட்டு கைகலப்பு, கலவரம் என்று தொடர்ந்தது. நீதிக்கட்சிக்காரர்களிடம் இருந்த புஜபலம் மறைமலை அடிகளிடம் இல்லை. நாளடைவில் அவருடைய குரல் வலுவிழந்தது. தனித் தமிழ் இயக்கத்தை திராவிட இயக்கம் கபளீகரம் செய்தது. 

மறைமலை அடிகளின் முயற்சி எப்படிப்பட்ட விளைவுகளை உண்டாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ள, அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைப் பார்த்தாலே போதும். பொதுவுடமையாளர் ஜீவா, மறைமலை அடிகளை நம்பி ஆர்வத்துடன் செயல்பட்டார். ஆனால், மறைமலை அடிகளைச் சந்திக்கச் சென்ற ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

தமிழ் மீது உள்ள ஆர்வத்தால் ஜீவா, தன்னுடைய பெயரை ‘உயிர் இன்பன்’ என்று மாற்றிக் கொண்டிருந்தார். மறைமலை அடிகளைச் சந்திப்பதற்காக சென்னையின் புறநகர்ப் பகுதியான பல்லாவரத்துக்குச் சென்றார் ஜீவா. வீட்டின் உள்ளே இருந்த அடிகளார், வாசலில் காலடி ஓசை கேட்டதும் ‘யாரது, போஸ்ட் மேனா?’ என்று கேட்டார். ‘போஸ்ட் மேன்’ என்ற வார்த்தை தமிழ் இல்லையே என்று யோசித்தார் ஜீவா. யோசித்தபடியே உள்ளே சென்றார். மறைமலை அடிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 

என்ன காரணமாக வந்தீர்கள்?’ என்று கேட்டார் அடிகளார். ஜீவாவால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. ‘காரணம் என்பது தமிழ்ச் சொல்லா?’ என்று கேட்டு விட்டார். ‘காரணம் என்பது எந்த மொழிச் சொல் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார் அடிகளார். 

மறைமலை அடிகளின் வீட்டை விட்டு வெளியே வந்த ஜீவா, ‘உயிர் இன்பன்’ என்ற பெயரை உதறி விட்டார். அடுத்து, தமிழில் உள்ள ஸம்ஸ்க்ருதச் சொற்கள் பற்றி, பண்டித மணி கதிரேசன் செட்டியாருக்கும் மறைமலை அடிகளுக்கும் வந்த கருத்து மோதலைப் பார்ப்போம். 

கரந்தை என்ற ஊரில் நடந்த நிகழ்ச்சிக்கு மறைமலையடிகள் தலைமை வகித்தார். அடிகள் பேசும்போது,‘சங்க நூல்கள் எல்லாம் தனித் தமிழ் நூல்கள்; அவை ஸம்ஸ்க்ருதக் கலப்பு இல்லாதவை’ என்று கூறினார். பண்டிதமணி இதற்குப் பதிலுரையாக, ‘கலித்தொகையில் ‘தேறுநீர் சடக்கரந்து திரிபுரம் தீமடுத்து’ என்று முதல் பாடலிலேயே சடை, திரிபுரம் ஆகிய ஸம்ஸ்க்ருதச் சொற்கள் வந்திருக்கின்றனவே’ என்றார். அடிகளார் அடங்குவதாக இல்லை. தேவார, திருவாசகங்கள் தனித் தமிழில் ஆக்கப்பட்டதென்று கூறினார். 

உடனே, பண்டிதமணி எடுத்துக்காட்டாக திருநாவுக்கரசர் எழுதிய தேவாரத்தில் முதல் பதிகத்தில் ‘சலம் பூவோடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ என்று இருப்பதைச் சுட்டிக்காட்டினார். சலம்; தூபம் இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள் என்பதையும் இவ்வாறு பல இடங்களில் ஸ்ம்ஸ்க்ருதச் சொற்கள் கையாளப் பெற்றிருக்கின்றன என்பதையும் பண்டிதமணி கூறினார். அடிகளாருக்குக் கோபம் வந்து விட்டது; கோபமாக மேஜையைக் குத்தினார். ‘எனக்கும் ஒரு மேஜை போட்டிருந்தால், இதைவிட வலுவாகக் குத்தி ஓசையை எழுப்பியிருப்பேன்’ என்றார் பண்டிதமணி. 

நூறாண்டுகளுக்கு முன்பு மறைமலை அடிகள் தொடங்கி வைத்ததின் தாக்கம் இன்றும் இருக்கிறது. நீதிக்கட்சியில் தொடங்கிய ஸம்ஸ்க்ருதம் கலவாத பெயர் வைத்துக் கொள்ளும் பழக்கம், மறுமலர்ச்சி தி.மு.க. வரை தொடர்கிறது. பெயர் மாற்ற நடவடிக்கையால் ராஜகோபாலன், சுரதாவாக மாறினார்; நாராயணசுவாமி நெடுஞ்செழியன் ஆக மாறினார். சத்யநாராயணன் ஆற்றலரசாக மாறினார். சின்னராஜு சிற்றரசாக மாறினார். இவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டவர்கள், சில விஷயங்களை மட்டும் கண்டுகொள்ளவில்லை. சாதிக் பாட்சா விஷயத்தில் சத்தமே இல்லை. நாகூர் ஹனிஃபா விஷயத்தில் நடவடிக்கையே இல்லை. 

இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. பெயர் வைக்கும்போது ஆங்கிலப் பெயர்கள், ஃப்ரெஞ்சுப் பெயர்கள், அராபியப் பெயர்கள், ரஷ்யப் பெயர்களாக இருந்தால் கூடுதல் மரியாதை உண்டு. பிராட்லா என்ற பெயரை ரசித்தார்கள். ரூசோ என்ற பெயரை விரும்பினார்கள். ட்ராட்ஸ்கி என்ற பெயரை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஸ்டாலின் என்ற பெயர் கொண்டவரைத் தூக்கிச் சுமக்கிறார்கள். இப்படியாக திராவிட மாயையில், தனித் தமிழ் மாயை இரண்டறக் கலந்து விட்டது. 

subbupara@yahoo.co.in 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஆரியம் திராவிடம் ஓர் ஆராய்ச்சி

 
1.jpg

கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழக அரசியலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது என்று ஆராய்ந்து பார்த்தால் அது திராவிடமாக இருக்கும் அல்லது ஆரியமாக இருக்கும்.கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் தமிழர் புழக்கத்தில் பொருள் மாறிப் போன வார்த்தைகள் எவை என்று பார்த்தால் அவை திராவிட இனமாக இருக்கும். அல்லது ஆரிய இனமாக இருக்கும்.

ஆரியம் என்றால் என்ன ? ஆரிய இனம் என்றால் என்ன? திராவிடம் என்றால் என்ன? திராவிட இனம் என்றால் என்ன?
இலக்கியங்களில் வரும் பொருள் எது? அரசியல் மேடைகளில் உணர்த்தப்படும் பொருள் எது? கல்விக்கூடங்களில் சொல்லித்தரப்படும் கருத்து எது? இது தொடர்பாக சில சான்றுகளை முன் வைக்கின்றேன்.
 
முதலில் ஆரியம்.
2.jpg
நம்முடைய வரலாற்றில் தொன்மையானதாகக் கருதப்படும் வேதங்களில் ஆரியம் இருக்கிறதா?
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் ஆரிய இனத்தவருக்கு மற்றொரு இனத்தவருக்கும் இடையே நடந்தவை என்ற கருத்து திராவிட இயக்கத்தவரால் தொடர்ந்து சொல்லப்படுகிறது.
இது தவறான கருத்து.
ரிக் வேதத்தில் சொல்லப்படும் போர்கள் இரண்டு இனங்களுக்கு இடையே நடந்த போர்களல்ல. அவை அந்த சமூகத்திற்கு உள்ளேயே நடந்த மோதல்கள்.
ஆரியர், அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. இதில் இனப்பிரிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதை இங்கே குறிப்பிட வேண்டும். “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை”. ஆரியர்கள் சிவப்பு நிறத்தவர்கள் திராவிடர்கள் கருப்பு நிறத்தவர்கள் என்றும் ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது.
இதுவும் தவறு.
வேத காலத்து முனிவர்களில் சிலர் கருப்பு நிரமுடையவர்கலாக இருந்திருகிறார்கள். கண்வ மகரிஷி கருப்பு நிறம் உடையவர் என்ற வருணனை ரிக் வேதத்தில் இருக்கிறது. (10:31:11)
இஷ்வாகு குலத்தைச் சேர்ந்த ராமனும், யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணனும் கருப்பு. பாஞ்சாலியின் இயற்பெயரான “கிருஷ்ணா” கருப்பு நிறத்தைக் குறிக்கிறது.
வேதங்களில் திராவிட என்ற சொல் இல்லை.
தமிழ் நூல்களில் குறுந்தொகையில் (7:3:5) மேள ஓசைக்கு ஏற்றபடி கயிற்றின் மேல் ஆடுபவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
……………………ஆரியர் கயிறாடு பரையிற் கால்பொரக் கலங்கி வாகைவென் நெற்றோலிக்கும்” என்கிறது குறுந்தொகை.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இறைவன் வடமொழும் தென்மொழித் தோத்திரங்களும் ஆகிய இசையாகத் திகழ்பவர்; சாத்விக குணத்தோடு சிவா சிந்தனையோடு இருக்கும் ஞானிகளுடைய சொல்லாக விளங்குபவர் என்று எழுதப்பட்டுள்ளது. ஆரியம் தமிழோடிசையானவன் கூறிய குணத்தார் குறிநின்றவன்” என்பது திருநாவுக்கரசர் பாடல் (176).
மாணிக்கவாசகர் (கி.பி.எட்டாம் நூற்றாண்டு) ஆசாரியன் என்ற பொருள்பட சிவ புராணத்தில் பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே (64) என்று பாடுகிறார்.
பிறகு, கம்பராமாயணம் (கி.பி. பனிரெண்டாம் நூற்றாண்டு) யுத்த காண்டத்தில் “இற்றைநாள்வரை முதளியான் முன்செய்தன குற்றமுமுளவெனிற் பொறுத்தி கொற்றவர் அற்றதான் முதகத்தினில் விழித்தல் ஆரிய! பெற்றனன் விடையெனப் பெயர்த்து போயினான். (க.ரா.யு.கா. கும்பகர்ணன் வதைப் படலம்) என்று வருகிறது. இந்த இடத்தில் உரையாசிரியர்கள் ஆரிய என்பதைத் தலைவன் என்று எழதுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து மணவாள மாமுனிகள் (1370-1443) வாய்த்ததிரு மந்திரத்தின் மத்திம மாம்பதம்போல் சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்த புகழ் ஆரியர்கள் தாங்கள் அருளிச் செயல்படுவே செர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து” (உபதேசரத்தின மாலை) என்று எழுதுகிறார் வேதாந்த தேசிகர் (1269-1370) கான்பனவு முரைப்பனவு மற்றோன்றிக் கண்ணனையே கண்டுரைத்த கடிய தாதற் பான்பெருமாளருள் செய்த பாடல் பத்தும் பழமறையின் பொருளென்று பரவுகின்றோம் வேண்பெரிய விரிதிரை நீர் வைத்துள்ளே வேதாந்த ஆரியன் என்றியம்ப நின்றோம் நம் பெரியோமல்லோம் நான் நன்றுந்தீதும் நமக்குரைப்பாள ரென்று நாடுவோமே (அம்ருதாஸ்வாதி 37) என்கிறார். இங்கே ஆரியன் என்பதை சிறப்புடையவன் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும்.
இப்படியெல்லாம் சிறப்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்ட ஆரியம், ஒரு பாதிரியாரால் பாதை மாற்றப்பட்டது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) என்ற புத்தகத்தை எழுதிய ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரியார் இதை இன அடியாளமாக மாற்றினார்.
கால்டுவெல் வழியில் வந்த சி.என்.அண்ணாதுரை “ஆரிய மாயை (1943) என்ற புத்தகத்தில் நர்மதை ஆறு நமக்கும் ஆரியத்துக்கும் இடையே மிக்க ரமணீயமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைச் சரித்திரம் படிப்போர் அனைவரும் நன்று அறிவர்” (பக்.26) என்று எழுதினார்.
பூகோளப் படத்தைப் பார்த்தாலே மத்திய பிரதேசத்தின் தெற்குப் பகுதி, குஜராத்தின் தெற்குப் பகுதி, மகாராஷ்டிரம் ஆகியவை நர்மதையின் தெற்க்கே உள்ளன என்று தெரிந்துவிடும் சத்திரபதி சிவாஜியும் நரேந்திர மோதியும் திராவிடர்கள்ள என்பதை அண்ணாவின் தம்பிகள்தான் விளக்க வேண்டும்.
அடுத்தது திராவிடம்.
“திராவிடம்” என்ற பொருளில் த்ராமிடம் என்ற சொல் பாகவதத்தில் (8.5.49) வருகிறது.
தமிழைக் குறிக்க சம்ஸ்க்ருதத்தில் “த்ரமிடம்” என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். கிரேக்க நாட்டைச் சேர்ந்த பெரிப்ளூஸ் என்ற வரலாற்று ஆசிரியர் தமிழகத்தை ‘தாமரி’ என்று எழுதினர். ரோமாபுரியைச் சேர்ந்த தாலமி என்ற அறிஞர் ‘தமிரிசி’ என்று எழுதினார். இந்தியாவின் மேற்குப் பகுதியிலிருந்து வந்த அரேபியர்கள் முதலில் மலபார் கடற்கரையில் இறங்கினார்கள். அவர்கள் அந்த இடத்தையும் தமிழகத்தையும் ‘மலபார்’ என்றே அழைத்தார்கள் எனவே தமிழ் திராவிடமாக ஒழிக்க வாய்ப்புகள் இருந்தன.
சங்க இலக்கியங்களில் திராவிடம் என்ற சொல்லைத் தேடிப்பார்த்தால் தென்படவில்லை.
பழைய ஐம்பத்தாறு தேசப் பட்டியலில் திராவிட தேசமும் உள்ளது. இந்தத் திராவிட தேசம் கிருஷ்ணா நதிக்குத் தெற்கிலும் சோழ தேசத்திற்கு வடக்கிலும் கர்நாடக தேச எல்லை வரையிலும் பரவி இருந்தது. இதற்கும் பகுத்தறிவாளர்கள் கேட்ட திராவிட நாட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது.
வேதாந்த தேசிகர் ‘த்ரமிடோபநிஷத்’ தாத்பர்ய ரத்னாவளி என்ற நூலை எழுதியிருக்கிறார்.
தாயுமானவர் (பதினெட்டாம் நூட்றாண்டு)
“…………..வடமொழியிலே வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்” (சித்தர் கணம் 10) என்று எழுதுகிறார்.
வேதாந்த தேசிகரும், தாயுமானவரும்
‘திராவிடம்’ என்ற சொல்லை தமிழ் என்பதாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், தென்னிந்திய மொழிகளை, ‘திராவிட மொழிகள்’ என்று அழைக்கும் ஆய்வு வெளி வந்தது. பிரான்சிஸ் வைட் எல்லிஸ் என்ற கலெக்டர் (1777-1789) செய்த மொழி ஆராய்ச்சியின் விளைவு இது.
இவரைத் தொடர்ந்து வந்தவர்தான் ராபர்ட் கால்டுவெல். இந்தியர்களைப் பிரித்து, இந்தியாவை ஆள வேண்டும் என்ற ஆங்கிலேயரின் கொள்கைக்கு ஏற்றபடி இவர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டார். இவருடைய முயற்சியால் திராவிட இனம் என்ற கருத்து பரவலாக்கப்பட்டது.
‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று தொடங்கி, சுய மரியாதை இயக்கம், நீதிக் கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெருகி, இன்று மேலும் பிளவு பட்டு இருக்கும் திராவிட இயக்கங்களின் தத்துவ ஆசான் கால்டுவெல் தான். இந்த இயக்கங்களின் அடிப்படை. கால்டுவெல்லின் கற்பனையில் உருவான ‘திராவிட இனம்’ என்ற கருத்தாக்கம்தான்.
கால்டுவெல் செய்த மோசடி பற்றி ஈழத்து அறிஞர் ஒருவர் கூறுவதைப் பார்க்கலாம்.
P.Viii … Psamls of a Saiva Saint/ T Isacc Thabiah/London. Luzee& Co./ 1925
A matter of convenience became a factor of mischief; the application of the name ‘dravida’ which is peculiar to the Tamils, toallied people in inferior grades of culture.
The responsibility is Bishop Caldwell’s. The wrong done to those, to whom alone the dravidian language belongs, is aggregated by employing a philological convention as an
Ethnological distinction. TheCaldwellterminology is unscientific and unsatisfactory.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகளாக அழைத்துக் கொண்டனர் என்றும் இவர் கூறுகிறார்.
ஆங்கிலேயர்களின் அதிகார நோக்கங்களும், சுரண்டல் திட்டங்களும் கிறித்துவப் பாதிரிமார்களின் மதமாற்ற வேட்கையும் துவங்கி வைத்ததுதான் திராவிட இனவாதம். ஈ.வே.ராமசாமியின் அடாவடி அரசியல் இதை பெருமளவில் வளர்த்துவிட்டது. இனவாதம் இயக்கமானது.
ஒரு கட்டத்தில் மலிவான அரசியல் வாதங்களோடு வலுவான தொழில் நுட்பமும் சேர்ந்து கொண்டது. திரைப்படப் பாட்டுப் புத்தகங்களும் இசைத்தட்டுகளும் கிராமங்கள்தோறும் திராவிடப் பொன்னாடும் பெரும்பாலான தமிழர்களை மூளைச் சலவை செய்தன. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். இனவாதம் இங்கே இனிமேல் எடுபடாது.
தொல்லியல் துறை ஆய்வுகளின்படி அடிப்படையில் ஆரிய திராவிட மோதல் பற்றிய வரலாறு இப்போது வலுவிழந்துவிட்டது. இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக இன வாதம் தொடர்ந்து போதிக்கப்படுகிறது.
இலக்கியமல்லாத ஒரு சான்றையும் பதிவு செய்ய வேண்டும். இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு மற்றும் நீதிபதி க்யான் சுதா மிஸ்ரா ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் திராவிட மொழி பேசிய மக்கள் அந்நிய பிரதேசங்களிலிருந்து வந்தவர்கள் . மக்கள் இன அமைப்பியல்படி நாகரிகம் பெற்ற திராவிடகள் என்போர் இனக்கலப்புகள் மூலம் உருவான மக்கள் இனத்தைக் குறிக்கும்.
ஜனவரி 5, 2011.
இது பற்றி மேலும் அறிய:
1) புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள், பி.வி.ஜகதீச ஐயர், 1918.
சந்தியா பதிப்பகம் 2009.
2) மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு
கே.வி.ராமகிருஷ்ண ராவ், திராவிடச் சான்றோர் பேரவை: ௨௦௦௯
ஆரியர் அசுரர் மற்றும் தாசர் என்று ரிக்வேத சமூகம் மூன்று பிரிவுகளாக பிரிந்திருந்தது. இதில் இனப்பிறிவே இல்லை. இது தொடர்பாக பி.ஆர்.அம்பேத்கர் கூறியதி இங்கே குறிப்பிட வேண்டு. “ஆரிய இனம் பற்றிய எந்தக் குறிப்பும் வேதங்களில் இல்லை”.

சுப்பு



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஒரு நூற்றாண்டு கேள்வி

 

என்.அசோகன் | Issue Dated: ஏப்ரல் 29, 2012
 

“நாம் மொழியால் தமிழர்கள்; இனத்தால் திராவிடர்கள்; நாட்டால் இந்தியர்கள்; உலகத்தால் மனிதர்கள்’’ என்று கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திராவிட இயக்கத்தின் நூறாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசினார் கலைஞர் மு.கருணாநிதி. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு என்றதும் ஒரு பக்கம் அந்த இயக்கத்தினர் சுறுசுறுப்பானதும் இன்னொரு பக்கம் தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் சுறுசுறுப்பாகி விட்டார்கள். இவ்வளவு காலமும் திராவிடக் கட்சிகளுடன் சேர்ந்தே அரசியல் செய்த மருத்துவர் ராமதாஸ் திராவிட மாயை என்று கருத்தரங்கம் நடத்துகிறார். நேருக்கு நேராக திராவிடம் பற்றி விவாதிக்கத் தயாரா என்று கேட்ட மதிமுகவின் நாஞ்சில் சம்பத்திடம், உங்கள் தலைவர் வைகோவிடம் வேண்டுமானால் நான் விவாதம் செய்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் எதிர்சவால் விடுகிறார். மக்கள் மாநாட்டுக் கட்சி போன்ற  சிறு  அமைப்பை வைத்திருக் கும் வழக்கறிஞர் சக்திவேல் போன்றவர் கள் சீற்றமாக திராவிடத்தை எதிர்த்து அறிக்கை விடுகிறார்கள். புத்தகம் எழுதுகிறார்கள்; குறுந்தகடு வெளியிடுகிறார்கள். இவர்கள் நடத்தும் கூட்டங்களில்  திராவிட இயக்கமே பிறமொழிக்காரர்களுக்கான இயக்கமாக முன்வைக்கப்படுகிறது. அதன் சாதனைகள் என்று நம் முன்னால் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்த கருதுகோள்களை இவர்கள் சிதைக்கிறார்கள். ஒளிவட்டங்களை அழிக்கிறார்கள். இலங்கை இனப்படுகொலை இவர்களை ஒன்று திரட்டும் பசை ஆகிறது.

சமீபத்தில் மக்கள் மாநாட்டுக் கட்சியின் தமிழ்நாடு தமிழருக்கே என்று குறுந்தகடு வெளியீட்டு விழாவுக்குச் செல்ல நேர்ந்தது. பொதுவுடைமைவாதியாக இருந்து இப்போது தமிழ்த்தேசியராக மாறி இருக்கும் இயக்குநர் வி.சேகர் சொன்ன ஒரு கருத்து மேடையில் இருந்த மருத்துவர் ராமதாசையே நெளிய வைத்தது. ‘‘ராமதாஸ் தன் கட்சிப் பெயரை தமிழ்ப் பாட்டாளி மக்கள் கட்சி என்று மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் தொலைக்காட்சியின் பெயரை தமிழ் மக்கள் தொலைக்காட்சி என்று மாற்றிக்கொள்ளலாம்.  ஏனெனில் எந்த பாட்டாளிகள், எந்த மக்கள் என்று தெரியாமல் போய்விடும்’’ என்றார். அதே மேடையில் திமுக வின் பெயரை அக்கட்சியினர் தமிழர் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி வைத்துக் கொள்ளவேன்டும்  என்றும்  வலியுறுத் தப்பட்டது. மருத்துவர்  பின்னர் பேசுகையில், நான் மட்டுமல்ல, சக்திவேல்கூட தன் கட்சியின் பெயருக்கு முன்னால் தமிழ் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று எளிதாக சிரித்தே இதைச் சமாளித்தார்.

நீண்ட நாளாக தமிழ்த் தேசியம் பேசிவருகிற தமிழ்த் தேச பொதுவு டைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசனும் இம்மேடையில் உரையாற்றினார். ‘‘திராவிடம் என்பது ஆரியர்கள் தமிழர்களுக்கு வைத்த பெயர். அதை ஏன் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்? தமிழ் இலக்கியங்களில் எந்த இடத்திலும் திராவிடம் என்ற சொல் கிடையாது. திராவிடன் என்று ஓர்  இனம் எந்தக்காலத்திலும் கிடையாது. தமிழன் என்றுதான் இருக்கவேண்டும். திராவிட மொழிக்குடும்பம் என்று ஆய்வுசெய்த கால்டுவெல் திராவிடம் என்ற சொல்லை மனுஸ்மிருதியில் இருந்துதான் எடுத்ததாக எழுதுகிறார்’’ என்றார். பின்னர் அவரிடம் இதுகுறித்துப் பேசியபோது,‘‘ திராவிடம்தான் தமிழ் என்று அவர்கள் உண்மையிலேயே நம்பினால் இப்போது தமிழினத் தலைவர் என்று எழுதுபவர்கள்  திராவிட இனத் தலைவர் என்று கலைஞரை அழைக்கத் தயாரா?’’ என்றும் ஒரு கேள்வியைக் கேட்கிறார். ஆனால் இந்த எல்லா கட்சிகளின் கொள்கைகளிலும் சிறியது முதல் பெரியது வரை வேறுபாடுகள் இருந்தாலும் திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை எதிர்ப்பதில் ஒற்றுமை உள்ளது.

நூற்றாண்டு கண்ட ஓர் அரசியல், சமூக இயக்கமாக தன் காலகட்டத்தில் பல சாதனைகளை திராவிட இயக்கம் நிகழ்த்தியுள்ளது. ஒரு பெரும் மக்கள் தொகையை அதிகாரத்தின் மேல் அடுக்குகளுக்கு கொண்டுசெல்லும் பாய்ச்சல் அதன் சாதனை. ஆனால் எல்லா இயக்கங்களையும் போலவே அதற்கும் இன்னொரு பக்கம் உண்டு.

இன்றைக்கு அதை நோக்கி எழுந்திருக்கும் கருத்தியல் கேள்விகள் என்ன என்பதை வேறுபட்ட கோணங்களில் இருந்தும் இங்கே அலச முயற்சி செய்துள்ளோம். இவை நூற்றாண்டு கேள்விகள். ஓர் இயக்கம் தன்னை காலக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ள எப்போதும் கூர்மையான விமர்சனங்கள் உதவி செய்யும்.

‘‘ஏன் என்னையே தமிழன் இல்லேன்னு சொல்றாங்களே? என் தாய்மொழி கன்னடம் என்பதாலே சொல்றாங்க. பெரும்பாலானவங்க என்னைத் தெலுங்கர்-நாயுடு என்றே நினைக்கிறாங்க. ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆரம்பிச்சது சுயமரியாதைக் கொள்கைக்குத்தானே? அதை ஆரம்பிச்சது யார்? சர்.பி.டி.செட்டியார்- தெலுங்கர். டி.எம்.நாயர் & மலையாளி. நான் - கன்னடத்துக்காரன். தமிழன் யார் இதைச் செய்தான்?’’
தந்தை பெரியார் 1972-ல் கலைமகளுக்கு அளித்த பேட்டியில்.
நன்றி: வே.: ஆனைமுத்து வெளியிட்ட பெரியார் ஈவெரா சிந்தனைகள்

குறிப்பு: மேலே சொன்ன குறுந்தகடு வெளியீட்டு விழா நிகழ்வில் மருத்துவர் ராமதாஸ் ஒரு சுவாரசியமான சம்பவத்தைக் குறிப்பிட்டார்: ‘‘ நான் இலக்கணம் என்ற பெயரில் தூயதமிழ் சொற்களைக் கொண்ட ஒரு படத்தைத் தயாரித்து அதை வெளியிட்டேன். ஐந்து நாட்கள் கூட ஓடவில்லை. அந்தப் படத்தை  திமுக தலைவர்  கலைஞருக்குப் போட்டுக் காட்டினேன். பிறமொழிக் கலப்பில்லாத அப்படத்தை கடைசி எழுத்துக்கள் ஓடும்வரை மிகக் கவனமாக அவர் பார்த்தார். கடைசியில் ஆர்வமாக படம் எப்படி இருந்தது என்று கேட்டேன். அவர் சொன்ன பதில்: சிம்பிள் அண்ட் பெஸ்ட்!’’  



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திராவிட அடையாளத்துக்கு மாற்று தமிழ் அடையாளம் அல்ல

 

நீதிக்கட்சியின் ஆட்சி உருவான காலந்தொட்டே அது தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருந்தது.

ரவிக்குமார் | Issue Dated: ஏப்ரல் 29, 2012
 

ரவிக்குமார்,
எழுத்தாளர்  


திராவிட இயக்க நூற்றாண்டு என இந்த ஆண்டை (2012 )  தி.மு.க  தலைவர் கலைஞர் அறிவித்ததை யொட்டி திராவிட அடையாளம் குறித்த சர்ச்சை, மீண்டும் தமிழகத்தில் எழுந்திருக்கிறது. திராவிட அடையாளம் பிற்போக்கானது,  தமிழ் அடையாளமே நம் முன்னேற்றத்துக்கு உதவுவது என்ற பொருளில் சிலர் பேசிவருகின்றனர். இது ஒன்றும் புதிய கருத்தல்ல; இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூர் குணா போன்றவர்களால் பேசப்பட்ட ஒன்றுதான்.

பிராமணரல்லாதார் இயக்கமே பின்னர் திராவிட இயக்கம் என்று அழைக்கப்பட்டது என்பது உண்மைதான் எனினும், அதைத் ‘தெலுங்கு நலனை ஓம்பி நின்ற இயக்கம்’ என குணா போன்றவர்கள் சொல்வது முழு உண்மை ஆகாது. திராவிட அடையாளம் என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால் அந்த விமர்சனம் எந்த நோக்கிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது என்று பார்க்க வேண்டும்.  திராவிட அடையாளத்தை மறுத்து மொழியை மையமாக வைத்துப் பேசப்படும் இன்றைய ‘தமிழ் அரசியல்’ என்பது திராவிட அரசியலைவிடவும் முற்போக்கானதா? என்பது முக்கியமானதொரு கேள்வியாகும். ‘திராவிட’ மற்றும் ‘தமிழ்’ அரசியலின் தன்மையைப் புரிந்துகொள்ள சாதி பேதமற்ற தன்மையை, இவை எந்த அளவுக்குத் தமது உள்ளீடாகக் கொண்டிருக்கின்றன என்று பார்ப்பது மிக மிக அவசியம்.

திராவிட அடையாளத்தை முன்வைத்து முதலில் இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்தவர் அயோத்திதாசப் பண்டிதர் ஆவார். 1891 ஆம் ஆண்டு ‘திராவிட மஹாஜன சபை’ என்ற அமைப்பை அவர் தோற்றுவித்தபோது திராவிடம் என்பதை ‘சாதிபேதமற்ற’ அடையாளமாகவே அவர் விளக்கினார். ஆனால், வெகு விரைவிலேயே அது சாதியால் மாசுபடுத்தப்பட்டது. ‘பிராமணரல்லாதார்’ என்ற பெயரில் சங்கமாகச் சேர்ந்துச் செயல்பட ஆரம்பித்தவர்கள் தமது சாதிகளுக்கான நலன்களைப் பற்றித்தான் கவலைகொண்டிருந்தார்கள். சாதி பேதங்களை ஒழிப்பது பற்றி அவர்கள் அக்கறைகாட்டவில்லை.

பிராமணரல்லாதார் இயக்கம் முளைவிடத் தொடங்கியபோதே, அதன் சாதிச்சார்பை விமர்சித்தவர் அயோத்திதாசர். அவர்கள் கூட்டியிருக்கும் சங்கம், ‘‘சாதியாசாரங்களையும், சமய ஆசாரங்களையும் ஒழித்துள்ள கூட்டமாயிருக்குமாயின்,  அவர்களுடன் சேர்ந்து உழைப்பதற்கு அனந்தம் பேர் காத்திருக்கின்றார்கள்.  பிராமணர் என்போரால் வகுத்துள்ள சாதி ஆசாரங்களையும் சமய ஆசாரங்களையும் வைத்துக்கொண்டு ‘நான் பிராமன்ஸ்’ எனக் கூறுவது வீணேயாகும்’’ என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டார்.  பிராமணரல்லாதாரின் சாதி மற்றும் சமயச் சடங்குகளில் பிராமணர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது தம்மைப் பிராமணர்களிடமிருந்து அவர்கள் வேறுபடுத்திக் கூறிக்கொள்வது எப்படி? என்று அயோத்திதாசர் வினவினார்.

அயோத்திதாசரின் விமர்சனம் உண்மைதான் என்பதை 'பிராமணரல்லாதார் இயக்கம்’ உறுதிப்படுத்தியது. பிராமணரல்லாதார்  எனத் தம்மை அழைத்துக் கொண்டவர்கள் அவ்வப்போது அரசியல் லாபத்துக்காக அந்த வகைப்பாட்டுக்குள் தாழ்த்தப்பட்டோரும் உள்ளனர் எனக் கூறி வந்தாலும், உண்மையில் தாழ்த்தப்பட்டோரை விலக்கியே அந்த அடையாளத்தை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். இப்போது மட்டுமல்ல, திராவிட இயக்கத்தின் முக்கிய நிகழ்வெனக் கருதப்படும் 'பிராணமரல்லாதார் கொள்கைப் பிரகடனத்தில்' கூட தாழ்த்தப்பட்டோர் குறித்து ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை. 'பிராமணரல்லாதார்' என்பதில் தாழ்த்தப்பட்டோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் அந்தப் பிரகடனத்தில் இல்லை. "எங்களைப் பொறுத்தவரை நாங்கள் முன்பே பரிந்துரைத்துள்ளவாறு, இப்போதுள்ள நிலைமைகள் வலியுறுத்தாத மாற்றங்களை இங்கு அறிமுகப்படுத்துவதை நாங்கள் விரும்பவில்லை.  சாதி அல்லது வர்க்கத்தின் ஆட்சியை நாங்கள் மிகவும் கடுமையாக எதிர்க்கமுடியாது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது (P.Rajaram, The Justice party_a historical perspective 1916- 1937, Poompozhil Publishers-1988, பக்கம் 287-288)"சமூக விலக்கமும் சாதி அல்லது வர்க்கத்தின் கடுமையும் மறையத் தொடங்கும்போது சுயாட்சி நோக்கிய முன்னேற்றமும் சந்தேகத்துக்கிடமின்றி திருப்திகரமானதா யிருக்கும். ஆனால், இப்போதுள்ள நிலையில், நடைமுறை சாத்தியமானதை உணர்ந்த அரசியல்வாதி தமக்கு எதிரே என்ன (சூழல்) இருக்கிறதோ அதுபற்றித்தான் அக்கறை கொள்ளமுடியும்" என்று தனது அரசியல் நோக்கத்தை அந்தப் பிரகடனம் வெளிப்படுத்திக் கொண்டது.

இந்த அரசியல் முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக உருவான நீதிக்கட்சி, சில ஆண்டுகளிலேயே சென்னை மாகாணத்தின் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றியது. நீதிக்கட்சியின் ஆட்சி உருவான காலந்தொட்டே அது தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருந்தது. இதனை எம். சி. ராஜா ஆதாரபூர்வமாக தனது நூலில் எடுத்துக் காட்டியுள்ளார் (The Oppressed Hindus, The Huxley Press). பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கென ஏற்படுத்திய 'லேபர் கமிஷனர் துறை'யினை  நீதிக்கட்சி ஆட்சியாளர்கள் மெல்ல மெல்லச் சாகடித்தனர்.  அதற்கு ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைத்தனர்.

தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதிகள் நகராட்சியிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இடம்பெறுவதை நீதிக்கட்சியினர் அனுமதிக்கவில்லை.  சிதம்பரம் தாலுக்கா போர்டில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பிரதிநிதியை நியமிக்காதது ஏன் என்று உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது, "தாலுக்கா போர்டு அலுவலகம் இருக்கும் வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டில் ஆதிதிராவிடர் ஒருவர் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால் அங்கு ஆதிதிராவிடப் பிரிதிநிதியை நியமிக்கவில்லை" என அமைச்சர் பதில் கூறியுள்ளார்.  "எல்லா வகுப்பினரும் சென்று வரக்கூடிய இடத்தில்தான் அரசாங்க அலுவலகம் அமைந்திருக்க வேண்டும் என்று அரசாங்க ஆணைகள் குறிப்பிடும்போது இப்படியொரு இடத்தில் ஏன் அந்த அலுவலகம் செயல்படுகிறது?" என எம். சி. ராஜா கேள்வி எழுப்பியதற்கு, அமைச்சர் எந்தப் பதிலையும் கூறவில்லை.

இப்படி, கல்வி, பொருளாதாரம், அரசியல் பிரதிநிதித்துவம் என எல்லாத் தளங்களிலும் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்கு எதிராகவே நீதிக்கட்சி ஆட்சி செயல்பட்டுவந்தது.  சாதி அபிமானம் கொண்டவர்கள் அதிகாரத்துக்கு வந்தால், அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எவ்வளவு எதிராக இருக்கும் என்பதற்கு நீதிக்கட்சியின் ஆட்சி ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் உச்சகட்டமாக, 1921&ல் நடந்த பி அண்டு சி மில் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது அந்த வேலை நிறுத்தத்துக்கு உடன்போகாத தாழ்த்தப்பட்ட தொழிலாளர்களைத் தாக்கி காயப்படுத்தியும், அவர்களது வீடுகளை எரித்தும் பிராமணரல்லாதார் கொடுமை செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் தமது ஊரிலேயே அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அவ்வளவு பாதிப்புகளையும் செய்துவிட்டு அன்றைய நீதிக்கட்சியின் ஆட்சிக்குத் தலைமை வகித்த பி. தியாகராஜ செட்டி மேலும் ஒரு துரோகத்தைச் செய்தார்.  1821 செப்டம்பரில் அவர் கடிதமொன்றை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எழுதினார்.  ஆதிதிராவிடத் தொழிலாளர்களை சென்னை நகரைவிட்டே அப்புறப்படுத்திவிடலாம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு அந்தக் கடிதத்தில் தியாகராஜ செட்டி ஆலோசனை தெரிவித்தார்.  (எம். சி. ராஜா : பக்கம் 61)
சாதியற்ற அடையாளமாக அயோத்திதாசரால் முன்வைக்கப்பட்ட ‘திராவிட’ அடையாளம் சாதிக்காரர்களால் கையகப்படுத்தப்பட்டு சீரழிக்கப்பட்டது என்பதையே இந்தச் செய்திகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. இதை உணர்ந்ததால்தான், "1890 ஆம் வருடத்தில் பூர்வீக திராவிடர்களென்று கூறி வெளிவந்தபோது இராஜாங்கத்தார் அதை சற்று நிதானிக்குங்கால் பராயர்கள் தோன்றி தமிழ் பாஷைக் குடிகள் யாவரும் திராவிடர்,கன்னடரும் திராவிடர், மராஷ்டியரும் திராவிடர், ஆந்திரரும் திராவிடர் என்று கூறி’’ கலைத்ததாக      அயோத்திதாசர் மனம் நொந்தார் (அயோத்திதாசர் சிந்தனைகள்: தொகுதி  3, பக்கம் 2 )

திராவிட அடையாளம் சாதியால் மாசுபடுத்தப்பட்டதால் தமிழ் அடையாளத்தை அயோத்திதாசர் முனவைத்தார். 1907 ஆம் ஆண்டில், தான் தொடங்கிய வார இதழுக்குத்  ‘தமிழன்’ என்றே அவர் பெயர்சூட்டினார்.மொழி அடையாளத்தை முன்னிறுத்தினால் சாதி அடையாளம் மெல்ல மெல்ல மறையும் என்று அவர் நம்பினார். ‘‘ தமிழ் பாஷைக்குரியோர்கள் யாவரையும் தமிழ் சாதி’’ என்று அழைக்கலாமெனவும் அவர் ஆலோசனை சொன்னார். இப்படி மொழியை முதன்மைப்படுத்திப் பத்திரிகைகளில் எழுதுவதோடு வார்த்தைகளிலும் பேசிக்கொண்டு வந்தால் ‘‘சாதிப் பிரிவினைகள் நாளுக்குநாள் மறந்து பாஷைப் பிரிவினைகள் பெருகிக்கொண்டே வரும்.  அத்தகைய பாஷைப் பிரிவினைகளின் பெருக்கத் தால் மேல்சாதி கீழ்ச்சாதி என்னும் பொறாமைகள் அகன்று தமிழ் பாஷைக்காரர்கள் யாவருமேனும் ஒன்றுகூடி கல்வி விருத்தியிலும் கைத்தொழில் விருத்தியிலும் ஒற்றுமை அடைந்து தேசத்தை சீர்திருத்தாவிடினும் தாங்களேனும் சீரடைவார்கள்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார். (அ.சி. தொகுதி 1, பக்கம் 42).

ஆனால் இன்று தமிழ் அடையாளம் பேசுகிறவர்கள் சாதியைக் கைவிட்டிருக்கிறார்களா? அவர்கள் தாழ்த்தப் பட்ட மக்களை எவ்வாறு நடத்துகிறார்கள்? நாள்தோறும் தமிழகத்தில் நடந்துவரும் சாதிய வன்கொடுமைகளின் பட்டியலில் இதற்கான பதிலை நாம் காணலாம். தமிழ் அடையாளம் என்பது சாதியைக் கைவிடாதது மட்டுமின்றி பிற தேசிய இனங்களுக்கு எதிரான இன வெறியாக வெளிப்படத் தொடங்கியிருப்பதையும் நாம் இப்போது பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகள்அண்டை மாநில அரசுகளால் மறுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அதற்குத் தீர்வு குறுகிய இனவெறி ஆகாது. திராவிட அரசியல் விமர்சிக்கப்படவேண்டும். ஆனால் அதை இன்னொரு குறுகிய அடையாளத்தைக் கொண்டு செய்யமுடியாது. சாதியால் கறையுண்ட திராவிடத்துக்கு மாற்று சாதிபேதமற்ற அரசியல்தானேதவிர, சாதிப்பற்றை மூடிமறைத்துக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் அல்ல. 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

‘‘தேர்தலில் வென்றிருந்தால் ராமதாஸ் இந்த கருத்தைப் பேசுவாரா?’’

 

ஷங்கர்ராமசுப்ரமணியன் | Issue Dated: ஏப்ரல் 29, 2012
 

திராவிடம், தமிழ்த்தேசியம் பற்றிய தனது கருத்துக்களை மூத்த தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரான பேராசிரியர் தொ.பரமசிவன், தசஇ-யிடம் பகிர்ந்துகொள்கிறார்

தமிழர்களின் நலன்களை திராவிட  அரசியல் புறக் கணித்துவிட்டதாக தற்போது ஒரு கருத்தை சில அரசியல் கட்சிகள் சொல்கின்றனவே?
இப்போது திராவிடம் என்ற கருத்தாக்கம் கேள்விக்குள்ளாவது சமூகக் காரணங்களால் அல்ல. அது வாக்குவங்கி அரசியல் சார்ந்தது. இதை இந்த முறை தொடங்கி வைத்திருப்பது ராமதாஸ். கட்சி அரசியல் சார்ந்த குழப்படியாக இது உள்ளது. திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அடையாளச் சொல்லாடல் ஆகும். அந்தப் பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடனேயே தொடர்கிறது. நான்கு தென்மாநிலங்களில் உள்ள பண்பாட்டுக் கூறுகளுக்கிடையில் ஒற்றுமைக்கூறுகள் நிலவுகின்றன. மூன்று பொதுக்கூறுகளைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக் கிறேன். தாய் மாமனுக்கான மரியாதை என்பது இந்த நான்கு மொழிக்காரர் களுக்கிடையே இன்றும் தொடர்கிறது. இரண்டாவது தாய்தெய்வ வழிபாடு. மூன்றாவது இறந்த உடலுக்கான மரியாதை. இது நான்கு மொழிக்காரர்களிடமும் இருக்கிறது.

இன்றைக்கும் பிராமணர்கள் சடலத்துக்கு மரியாதை கொடுப்பதில்லை. பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இன்னும்  நீடித்திருக்கும்  வித்தியாசங் கள் உள்ளன. பிராமணர்கள் இன்றும் கருப்பட்டிக் காப்பி சாப்பிடுவதில்லை. ஏனெனில் கீழ்சாதியினராகக் கருதப்படுபவர்கள் கையில் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால், அவர்கள் அதை விரும்புவதில்லை. பிராமணர் வீடுகளில் பீன்ஸ்கூட போய்விட்டது. ஆனால் இன்னமும் பனங்கிழங்கு செல்லமுடியவில்லை.  ஏனெனில் பூமிக்குக் கீழே விளையும் பொருளை சூத்திரனும், பன்றியும் சாப்பிட்டு விடுகிறார்கள். அதனால் அதை அவர்கள் தொடுவதில்லை. ஆம்லேட் சாப்பிடுகிறார்கள். உருளைக்கிழங்கு சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஏனெனில் அவையெல்லாம் துரைமார் கொண்டு வந்த பொருட்கள். சங்கீத சீசனை  டிசம்பரில் வைப்பது அவர்களது கண்டுபிடிப்புதானே. ஏன் தொண்டைக் கட்டுகிற டிசம்பரில் சங்கீத சீசன் வருகிறது? கோடையில் தானே வைக்க வேண்டும்? வெள்ளைக்காரர்களை மகிழ்விக்க அவர்களுக்கு உகந்த டிசம்பரில் சங்கீத கச்சேரிகளை வைத்தார்கள்.  அவர்களுடைய கிறிஸ்துமஸ் விடுமுறையில் மகிழ்விக்கத்தானே இந்த ஏற்பாடு? இது இன்றும் தொடர்கிறது. அவர்களின் சாமிக்குக்கூட திரையை மூடித்தானே தளிகை வைக்கிறார்கள். ஆனால் சுடலைமாடனுக்கு முன்னால் பகிரங்கமாக ஆட்டை அறுத்துப் போட்டிருப்பார்கள். அதை எல்லாரும் பார்க்கலாம். அதனால் பல வழக்கங்கள் உயிரோடுதான் இருக்கின்றன.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று பெரியார் சொன்னதை தமிழ்த் தேசியர்கள் இன்றும் சுட்டிக்காட்டு கிறார்களே?
பெரியார் நிறைய அதிர்ச்சி மதிப்பீடு களை வைத்தார். ராமன் படத்தை செருப்பால் அடித்தார். பிள்ளையார் சிலையை உடைத்தார். ஆனால்  தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை பெரியார் தானே செய்தார். வேறு எந்த தமிழறிஞரும் முன்வரவில்லையே. அவர் காலத்து தமிழறிஞர்களான மறைமலை அடிகளோ, தெ.பொ.மீயோ, மு.ராகவையங்காரோ செய்ய வில்லையே. காட்டுமிராண்டி பாஷையைத் திருத்துவதற்கு அவர் முயற்சி எடுத்தவர் இல்லையா. உரைநடை என்பது மணிக்கொடியால் தான் வளர்ந்தது என்று வேதவசனம் மாதிரி சொல்கின்றனர். ஆனால் 1925 இல் பெரியாரின் தலையங்கங்களைப் பார்க்கவேண்டும். பெரியாரின் உரை நடை அத்தனை அற்புதமாக இருக் கிறது.  இதுவெல்லாம் பெரியாரைத் திட்டி அதிகாரத்தைத் தக்கவைக்கிற முயற்சிகள்தான்.

கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் தமிழகத்தில் ஆட்சி செய்யமுடிகிறது என்றும், ஆனால் தமிழர்கள் அவர்கள் மாநிலத்தில் போய் முதலமைச்சராக முடியுமா என்று ஒரு தர்க்கம் முன்வைக்கப் படுகிறதே...
தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வாக்களித்தது இங்குள்ள தமிழன் தானே. அவன் ஒரு குறுகிய எண்ணத் துக்குள் அடைபட்டவன் அல்ல என்பதைத்தானே காட்டுகிறது. இந்தி யாவிலேயே அரசியல் தலைவர்கள் சாதிப்பட்டம் போடாமல் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தானே. கருணாநிதி, ஜி.கே.வாசன் ஆகியோரின் சாதி டெல்லியில் யாருக்காவது தெரியுமா? ஆனால் வட இந்தியாவில் பார்த்தீர்கள் எனில் குப்தாக்கள், சர்மாக்கள் என எல்லாரும் சாதிப்பெயர் கொண்டவர்கள்தானே. கேரளாவில் கூட நம்பூதிரி, மேனன் எல்லாம் இருக்கிறார்களே. அந்த வகையில் சாதிப்பட்டத்தைத் துறந்தவன் தமிழன்தானே. இது பெரியாரின் வெற்றி அல்லவா. யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் தெலுங்கனும், மலையாளியும் கேளிர்தான் என்று வாழ்பவன் தமிழன். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர் தமிழனுக்கு விசுவாசமாக இருக்கிறாரா என்றுதான் பார்க்கவேண்டும் என்று பெரியார் தெளிவாகச் சொல்கிறார். காவிரி விஷயத்தில் ஜெயலலிதா தமிழகத்தை விட்டுக்கொடுக்கமாட்டார் அல்லவா? அப்புறம் என்ன? தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்துப் போவதில் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வைகோ தெலுங்கர்தானே. அவரை தமிழர் இல்லையென்று சொன்னால் தமிழன் ஒத்துக்கொள்வானா?

திராவிடர் கழகம் மற்றும் திமுகவை தமிழர் கழகம் என்றும் தமிழர் முன்னேற்றக் கழகம் என்றும் வைக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருப்பது பற்றி...
அதை அவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது புறக்கணிக்க வேண்டும். அது வாக்குவங்கி அரசியலோடு சம்பந்தப்பட்டது. ராமதாஸ் தேர்தலில் வெற்றி பெற்றிருந் தால் இப்படிப் பேசியிருப்பாரா? இது அரசியல். அறிவியல் சார்ந்த பிரச்னை அல்ல.
திராவிடம் என்கிற கருத்தாக்கம் இன்னும் வலுவானது என்று நினைக்கிறீர்களா?
வலுவாக இருக்கிறது என்று கருதவில்லை. அர்த்தமுடையதாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

திராவிடமொழிக் குடும்பம் என்று கால்டுவெல் கூறினார். அவர்தான் இந்த திராவிடக் கருத்தாக்கத்துக்கு ஆணிவேர் என்று அவரையும்கூட தமிழ்த் தேசியர்கள் கூட்டங்களில் விமர்சிக்கிறார்கள்?
அவர் இன்னொன்றையும் சொன்னார். அது  தமிழ்த்தேசியர்களுக்கு உவக்காத விஷயம். பறையர்களை தனது முதல் பதிப்பில் தூயதமிழ் சாதி என்று எழுதியிருந்தார். அதற்கடுத்த பதிப்பில் அந்தப் பகுதி அகற்றப்பட்டு விட்டது. அந்தப் பகுதியோடு சேர்ந்து தற்போது ஒரு பதிப்பு கவிதாசரண் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் கால்டுவெல் இனவரைவி யலாளர்தானே தவிர அரசியல்வாதி அல்ல. அவர் வரலாற்றாய்வாளரும் கூட. அவருடைய கருத்துகளை எடுத்துக்கொள்வதும் மறுப்பதும் இவர்களது நேர்மை சார்ந்தது.

ராமதாஸ் சொல்லும் அதே கருத்துகளின் போக்கிலேயே விரக்தியான மனநிலையில் தலித்து களும் சொல்கிறார்கள். திராவிட அரசியல் ஏமாற்றிவிட்டது என்ற விமர்சனத்தை வைக்கிறார்கள். ஆனால் அம்பேத்கரின் எழுத்துகளை முதலில் மொழிபெயர்த்து இங்கே 1935 லேயே அவரை அறிமுகப்படுத்தியவர் பெரியார். திராவிட இயக்கத் தலைமைகள் பின்பு, இந்தியாவின் போலி ஜனநாயக அமைப்பை நம்பி நாசமாகப் போயின. அப்படி நடந்ததற்கு தொண்டர்கள் அல்ல காரணம்.

தமிழ்த் தேசிய இயக்கத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
எந்த இடத்துக்கும் இந்த இயக்கம் நகரமுடியாது. உலகிலேயே வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுதான் மிகவும் எளிமையானது. ஆனால் அதற்கு நீடித்த மதிப்போ பலனோ கிடைக்காது.

பார்ப்பனர்கள் மேல் உள்ள வெறுப்பை முன்வைத்துதானே பெரி யாரும் அரசியல் செய்தார் என்கிறார் கள்?
பார்ப்பனர்கள் சமூக, அரசியல், பொருளாதாரத் துறைகளில் முழுமை யாக ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் பார்ப்பனரல்லாதார் அரசியலை  முன்வைத்து உண்மை யான சமூக அதிகாரத்தையும் அரசியல் அதிகாரத்தையும் வென்றெடுப்பதற் கான அரசியலைச் செய்தவர் பெரியார். அதை வெறுப்பரசியல் என்று குறுக்கக் கூடாது. இன்று மாறியிருக்கும் தமிழ்ச் சமூகநிலையை வைத்து, அவர்  செய்த அரசியல் வெற்றி பெற்றிருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

திராவிடம் என்பது மாயையா?

 

Issue Dated: ஏப்ரல் 29, 2012
 

திராவிடம்- தமிழ்த்தேசியம் என்கிற இரண்டும் ஒன்றுக்கொன்று இணை கருத்தாக்கங்களாக ஒரு நூற்றாண்டாக இருந்துவருகின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்த்தேசியம் திராவிடத்துடன் முரண்படுகிறது. யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்ற பழந்தமிழ்க் கூற்றை இது காவுகேட்கிறது. இதுபற்றி விவாதிக்க பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் க.சக்திவேல் இருவரையும் தசஇ அலுவலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்தோம். அனல் தெறித்த இச்சந்திப்பில் திராவிடத்தை எதிர்த்து சக்திவேல் பேச, அதை எதிர்கொண்டார் விடுதலை ராசேந்திரன்.

சக்திவேல்:  திராவிடம் என்பது மாயையான ஒன்று. ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும். திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது.  திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும். 1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது;. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல்முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள். இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு  மொழி பேசுபவர்கள்தான்.  அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது. சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை. அந்த அம்மையார்  தமிழ்நாட்டில்  இருந்த தால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது. ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்யவேண்டும். இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்.

விடுதலை ராசேந்திரன்: ஒரு சமூக வரலாற்றைப் பார்ப்பதற்கு அந்த சமூகத்தின் பண்பு என்னவாக அப்போது இருந்தது என்பதிலிருந்து பார்ப்பதுதான் முறை. அப்போது அடையாளம் தேவைப்படுகிறது. மனிதர்கள் என்பது ஒரு அடையாளம். மொழி என்பது ஒரு அடையாளம். மேற்கத்திய நாடுகளில் மொழி, மனிதன் இரண்டுமே ஒன்றுதான். தமிழர் சமுதாயத்தில் பார்த்தீர்கள் எனில், மனிதனாக தமிழன் இருந்தானா என்ற கேள்வி முதலில் எழுகிறது. 1930களில் பிரிட்டிஷ் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், அவனது பெயரில், அவனது தொழிலில், அவன் வாழும் இடத்தில் சாதி ஒன்றுதான் பிரதான அடையாளமாக, இருந்திருக்கிறது. ஒரு தமிழன் இன்னொரு சாதித் தமிழன் தெருவில் நடக்கமுடியாது. இவர்களுக்குள் ஒரு பரிமாற்றமும், கலப்பும் இல்லாமல் எனக்குக் கீழே, எனக்குக் கீழே என்று செங்குத்தாய் இருந்த சமூக அடுக்கைத் தமிழன் பராமரித்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழன்... தமிழன் என்று பேசுவதற்கான நியாயமே கிடையாது.

இந்தியாவுக்குள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நுழையும்வரை தேக்கமுற்ற சமூகமாக இருந்ததென்று கார்ல்மார்க்ஸ் சொல்கிறார். இந்த தேக்கமுற்ற நிலைக்கு ஒரே காரணம் சாதிய, பார்ப்பன அடக்குமுறை நிலவியதுதான். வெள்ளைக்காரன் வந்து ரயிலை விட்டு, சாலைகள், தொழிற்சாலைகள் போட்ட பிறகுதான் இந்த தேக்கமுற்ற சமுதாயம் தகரத் தொடங்கியது. ஒருபக்கம்  வெள்ளைக் காரன் தொடங்கிய காங்கிரஸ் கட்சி, இன்னொரு பக்கம் பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் இந்த மாற்றங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது. பார்ப்பனர் அல்லாதவர்கள் ஆரம்பித்த நீதிக்கட்சிதான் பெண்களுக்கு ஓட்டுரிமையைக் கோரிப்பெற்றது. தமிழ்நாட்டிலிருந்த அத்தனைக் கோவில்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்த வேளையில், அரசு நிர்வாகத்திற்குள் கொண்டுவந்தது நீதிக்கட்சிதான். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைக் கொண்டு வந்தது நீதிக்கட்சிதான். சென்னைப் பல்கலைக்கழகத்தைக் கொண்டுவர சட்டம் போட்டவர்கள் நீதிக்கட்சியினர் தான். மருத்துவக் கல்லூரியில் அடிப்படை கல்வித்தகுதியாக இருந்த சமஸ்கிருதத்தை நீக்கியதற்குக் காரணமானவர்கள் நீதிக்கட்சி யினர்தான். அதில் தெலுங்கு பேசுகிறவர்கள்தான் அதிகமாக இருந்தார்கள் என்று சொன்னால், எந்த ஓர் இயக்கத்திலும் சேர்வோர் வசதிமிக்கவர்களாகவே இருந்தனர்.  அவர்கள் சமூக மாற்றத்துக்கு என்ன செய்தார்கள் என்பதுதான் முக்கியம். இதில் தமிழர், தெலுங்கர் அடையாள வித்தியாசத்தை எப்படிப் புகுத்த முடியும்?

சக்திவேல்:  உலகத்தில் மூடநம்பிக்கை இல்லாத இனமே கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் மூடநம்பிக்கை இருந்தது; இங்கே மட்டும்தான் ஏற்றத்தாழ்வு இருந்தது, சாதிக் கீழ்மைகள் இருந்தன என்று சொல்வதெல்லாம் இவர்களை நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் மோசமான கருத்து. நீதிக்கட்சிதான் சமூக சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்னது, இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தது என்றெல்லாம் இவர் கூறுகிறார். நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இடஒதுக்கீடு அறிமுகமாகி விட்டது. தமிழர்களுக்குத் துரோகம் செய்தது  நீதிக்கட்சி  என்பதே வரலாறு. 1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி வரலாற்றில் ஒரு முதலமைச்சர்கூட தமிழர் கிடையாது. 1919 இல் அன்றைய சென்னை மாகாண அரசு  இடஒதுக் கீடு ஆணையைக் கொண்டு வந்தது. எழுத்தர் போன்ற பதவிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தெலுங்கர், தமிழர்கள் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு தரப்படவேண்டும் என்று அந்த ஆணையில் இருந்தது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த அம்சத்தை எடுத்துவிட்டார்கள். 1923 இல் இரண்டாம் ஆணையில் தெலுங் குப் பகுதிகளில் தெலுங்கர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்று கொண்டுவந்துவிட்டார்கள்.

1909லிருந்து தெலுங்குப் பகுதி தெலுங்கர்களுக்கே என்று போராட்டம் நடத்தியவர்கள், தமிழர்கள் ஆட்சி நடத்தக்கூடாது என்று போராடியவர்கள்தான் இந்த ஆணையைக் கொண்டு வந்தார்கள். ஆந்திராவில் தெலுங்குப் பல்கலைக்கழகம் கொண்டுவந்தார்கள். தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று அப்போது தமிழன் போராட்டம் நடத்தினான். ஆனால் அவர்கள் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.  தெலுங்கர்களின் ஆதிக்கத்தை நிலைத்திருக்கச் செய்ய பார்ப்பனரல்லாதார் இயக்கம் எப்படி தோற்றுவிக்கப்பட்டதோ, அதன் தொடர்ச்சியாகத்தான் நீதிக்கட்சியின் வேலைகளும் இருந்தன. 

விடுதலை ராசேந்திரன்: மொழி அடிப்படையிலான அடையாளம் என்பது சமூகப்பிரச்னைக்குத் தீர்வு காணக்கூடிய அடையாளம் கிடையாது. எல்லா இடத்திலும் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்று அத்தனை சாதாரணமாகச் சொல்லிவிட்டார் இவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் சேரித்தமிழன் சேரியிலேயே தான் இருக்கிறான். ஊர்த்தமிழன் ஊரில்தான் இருக்கிறான். இன்றைக்கே தமிழனின் நிலைமை இப்படித்தான் என்றால் அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? தமிழர்கள் அடையாளம் என்பதே தவறு. அது சாதி அடையாளமாகத்தான் இருக்கிறது என்பது என்னோட கருத்து. 

இரண்டாவது விஷயம், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்களின் நிலை மேலோங்கி இருந்தது என்று பேசும் நீங்கள் பார்ப்பனர்கள் எப்படிப்பட்ட நிலையில் இருந்தார்கள் என்று பேசுகிறீர்களா? அப்போது இருந்தது மெட்ராஸ் மாகாணம். ஆந்திராவில் ஒரு பகுதியும், கர்நாடகத்தில் ஒரு பகுதியும்,கேரளாவில் ஒரு பகுதியும் இருந்தன. மேல்நிலையில் இருக்கிறவர் கள் சென்னையில் இயக்கம் ஆரம்பிக்கிறார்கள்.  உயர்பதவிகளான ஐசிஎஸ் போன்றவற்றில் முழுமையாக பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அந்த ஆதிக்கச் சூழலில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் வந்தது என்பது வரலாற்றுக் கட்டாயமாக இருந்தது.

சக்திவேல்: தெலுங்கு நாடு தெலுங்கர்களுக்கே என்ற கோரிக்கை வலுப்பெற்றது உண்மையா இல்லையா?  நில உடைமையாளர்கள் தான் அன்று வாக்களிக்கும் சூழ்நிலை இருந்தது. நிலவரி கட்டுபவர்கள்தான் வேட்பாளராக இருக்கமுடியும். அப்படி இருந்த சூழலில் ஓட்டுப்போடக்கூடிய, தேர்தலில் நிற்கக் கூடிய சூழலில் தமிழர்கள் இருந்தார்களா? நாயக்கர் ஆட்சிக்குப் பிறகு தமிழர்கள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு பசி, பட்டினியோடு மொரிசியசுக்கும், இலங்கை தேயிலைத் தோட்டங்களுக் கும் கூலிகளாகப் போய்க்கொண்டிருந்த நிலைமை அப்போது. பார்ப்பனர் ஆதிக்கம் இல்லையென்று சொல்லவில்லை. பார்ப்பனர் ஆதிக்கம் என்று சொல்லி தெலுங்கர்கள்தான் எல்லா அதிகாரங்களிலும் இருந் தார்கள்.

விடுதலை ராசேந்திரன்: பார்ப்பனர் ஆதிக்கம்  ஓங்கியிருந்த  காலகட்டத்தில், சமூக ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்த சமயத்தில் சமூக மாற்றத்துக்கான தேவையை முன்னிட்டு எழுந்த இயக்கம் என்றே நீதிக்கட்சியைச் சொல்கிறேன். அது முழுக்க முற்போக்கான இயக்கம் என்று  நானும்  ஏற்றுக்கொள்ளவில்லை. அது தொடங்கப்பட்ட காலகட்டத்தில் செய்த  பங்களிப்புகள்  முக்கியமானவை. அந்த இயக்கம் குறித்த போதாமைகள் மற்றும் முரண்பாடுகள் பெரியார் இயக்கங்களுக்கு உண்டு.

திராவிடர் என்ற பெயர் ஏன் முன்வைக் கப்பட்டது என்று பெரியார் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். மொழியின் அடிப்படையிலான அடையாள அரசியல் என்ற கோட்பாட்டை பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் காலத்தில் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் பிரச்னை என்னவாக இருந்தது என்பதை வைத்துக் கொண்டுதான் சமூக மாற்றத்திற்கு நான் செல்லமுடியும்.  
தமிழ் மக்களுக்குள்ளேயே பலவிதமான ஏற்றத்தாழ்வுகள் ஒடுக்குமுறைகள் நிலவியதால், அதை வைத்து எந்த மாற்றத்தையும் செய்யமுடியாத சூழல் இருந்தது. 1938 இல் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இறங்கி முன்வைத்த முழக்கம் தமிழ்நாடு தமிழருக்கே என்பதுதான். பெரியார் சொன்ன திராவிடர் நாடு என்பது தமிழ்நாட்டை முன்வைத்துப் பேசப்பட்டதுதான். தமிழர்களிடையே நிலவும் வேற்றுமையை அகற்றி அங்கே சமத்துவத்தைக் கொண்டு வருவதற்காக திராவிட அரசியலை பெரியார் பேசினாரே தவிர தெலுங்கர்களின் நலனுக்காகவோ, கன்னடர்களின் நலனுக்காகவோ அவர் பேசவில்லை. பெரியார் முன்வைத்த திராவிடர் இயக்கத்தின் செயல்பாடுகளால் இன்றைய சமூகம் முன்னேறியிருக்கிறதா? சீரழிந்திருக் கிறதா என்பதைப் பார்க்கவேண்டும்.

சக்திவேல்: நீதிக்கட்சித் தலைவர் ஆன பிறகு, தெலுங்கு நாடு தெலுங்கர்களுக்கே  என்று போடப் பட்ட தீர்மானத்தை ஈவெரா வரவேற்றாரா இல்லையா? ஆனால் தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று சொல்வதற்கு மட்டும் ஏன் அவருக்கு இவ்வளவு தயக்கம்? தெலுங்கு நாயக்கர் ஆட்சி இங்கே  ஏற்பட்ட பிறகுதான் தமிழ்நாட்டில்  சாதிய     ஏற்றத்தாழ்வு களும் ஒடுக்குமுறைகளும் அதிகரித் தன. அதுவரை அப்படியான எந்தச் சூழலும் இங்கே இருந்தது இல்லை.

விடுதலை ராசேந்திரன்: சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இல்லையா? நீங்கள் பேசுவது வரலாற்றுப் புரட்டு.

சக்திவேல்: நான் தமிழன் என்று சொல்லும்போது தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட பூர்வக்குடி. அந்த அடிப்படையில் நான் திராவிடன் என்ற அடையாளத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றும்  வேற்று மொழி பேசுவோர் அத்தனை பேரும் தங்கள் பொருளாதார அதிகாரத்தை அரசியல் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காகத்தான் திராவிட கருத்தாக்கத்தை வைத்து, அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை தொடர்கிறது என்கிறேன். நான் தமிழனாக இருக்க விரும்புகிறேன். திராவிடன் என்று சொல்லி பிறமொழிக்காரர்களுக்கு அடிமையாக விரும்பவில்லை.

விடுதலை ராசேந்திரன்: பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டிலேயே இருக்கிறவர்களை தெலுங்கர்,  கன்னடர்  என்று  இவர்  கூறுபோடுகிறார். ஏற்கெனவே சாதி அடிப்படையில் சேரித்தமிழனாக பலர் ஒடுக்கப்பட்டு இருக்கின்றனர். இப்பின்னணியில் மொழி அடிப்படையில் எல்லாரையும் துரத்தியடித்துவிட்டு, குறிப்பிட்ட சில சாதிகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி, தமிழன் என்கிற பெயரில் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் தமிழ்ச்சமுதாயத்தை மேலும் பலவீனமாக்கும் முயற்சிதான் நடக்கும். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசும் தமிழர்களுக்கு தெலுங்கில் எழுதப் படிக்கத் தெரியுமா? அவர்களது குழந்தைகள் தெலுங்கு பேசுவார்களா? தமிழ் பேசுகிற தமிழனாக இருந்தாலும் சரி, தெலுங்கனாக இருந்தாலும் சரி எல்லாரும் ஆங்கிலப் பள்ளியில்தான் குழந்தைகளைக் கொண்டுபோய் சேர்க்கிறார்கள். 

சக்திவேல்:  தமிழரின் அடையாளத்தை திராவிடர் என்ற பெயரால் அழிக்கும் முயற்சி மொழிவாரி பிரிவினைக்குப் பிறகும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழர்களை தமிழ்நாட்டிலேயே அதிகாரமற்றவர்களாக்கும் மூளைச் சலவை வேலையைத்தான் திராவிடம் செய்துவருகிறது என்பதுதான் எனது வாதம்.

விடுதலை ராசேந்திரன்: தமிழினத்திற்கு விடுதலை தேவை, அவர்கள் தனித்த தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளில் எல்லாம் எங்களுக்கு எந்த கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால் தமிழினத்திற்கு யாரிடமிருந்து விடுதலை தேவை என்பதில்தான் எங்கள் பிரச்னையே உள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்னையாக இருந்தாலும் சரி, காவிரிப் பிரச்னையாக இருந்தாலும் சரி மாநிலங்க ளுக்கிடையில் உள்ள பிரச்னைதான். ஆனால்  தீராதவாறு தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது இந்திய அரசுதானே. இது இந்திய அரசின் தோல்விதானே.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கழகங்களின் கண்ணியம்

 

சாதி என்பது எல்லாவற்றுக்குமான முதலீடு. அந்த முதலீட்டை யார் கைவிடுவார்கள்?

வெங்கட் சாமிநாதன் | Issue Dated: ஏப்ரல் 29, 2012
 

வெங்கட் சாமிநாதன்,
விமர்சகர்
 

நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர்.இக்கட்சிகளில் பிரதானமானதும்திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும் கட்சிகளில் மூத்ததுக்கு முக்கிய வாரிசாக தன்னைக் காண்பவரும் தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர்தான்இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை.. சொல்லப் போனால்திராவிட என்னும் அடைமொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது,தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் இந்த அடைமொழிகளுக்கெல்லாம் ஏதும் அர்த்தம் இருந்ததில்லை.இவை எதுவும் தமிழ் நாட்டைப் பற்றியோ தமிழ் மக்களைப் பற்றியோ சிந்தித்தவை இல்லைஆரம்பத்திலிருந்தே இதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரின் நோக்கங்கள் ஒன்றாகவும்ஆனால் முன் வைத்த கொள்கைகளும் கோஷங்களும் பிறிதாகவுமே இருந்து வந்துள்ளன

 

தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்று பெத்த பேருடன் தொடங்கப்பட்டது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்வெள்ளையர்களுக்கு அடிமைச்சேவகம் புரிந்த பட்டு வேஷ்டி ஜரிகைத் தலைப்பாகை முதலியார்கள்ரெட்டியார்கள்செட்டியார்கள்நாயர்கள் எல்லாம் அவர்கள் கால பிராமணர்களைக் கண்டு வளர்த்துக்கொண்டிருந்த பதவிப் போட்டியாலும் பொறாமையாலும் விளைந்தது தான்.பதவிப் போட்டியும் பொறாமையும் தான் இன்றுவரை ஒரு நூற்றாண்டு காலமாக நீடித்து வருகிறது.கொளுந்து விட்டெரியும் இந்த ஆசை தான் வன்னியர்களுக்கு என்றும் மூவேந்தர்களுக்கு என்றும்,இன்னும் எத்தனை ஜாதிகள் உண்டோ அவ்வளவுக்கும் அவரவர் பங்குபெற கட்சிகள் இங்கு முளைத்துள்ளனஅவர்கள் உரத்துச் சொல்லும் கொள்கைப் பிரகடனங்கள் என்னவாக இருந்தாலும் அவரவர் ஜாதி மீறிய சிந்தனைகள் ஏதும் அவற்றுக்குக் கிடையாதுதம் ஜாதிபதவிஇவை சார்ந்த பிற சொந்த நலன்கள்இப்படித் தொடங்கியது தான் நூறாண்டு வரலாறு படைத்துள்ளது.அதைத்தான் “நூறாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் “பார்ப்பனர் நடு நடுங்க “ என்று நினைவுபடுத்துகிறார் இன்றைய தலைவர்அவர் தம் திராவிட இயக்க சிந்தனைகளைப் பெற்றது,பனகல் மகாராஜா பற்றிய பள்ளிப் பாடத்திலிருந்து என்று சொல்கிறார்அவரது பார்ப்பன துவேஷத்துக்கு அவரது நெஞ்சுக்கு நீதியில் காரணம் தேடினால் கிடைக்காது.

 

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் அன்றைய நாயர்கள்பனகல் ராஜாக்கள்,ரெட்டியார்களுக்கும் சரி அவர்களது இன்றைய வாரிசுகளுக்கும் சரி திராவிட என்றால் என்னவென்று தெரியாதுநமது தந்தை பெரியார் கன்னடக்காரர் தான் என்றாலும் காவிரி நீர் ஒரு சொட்டுக் கூடக் கிடைக்காதுநமது கலைஞர்வைகோவிஜயகாந்த்,நேரு எல்லாம் தெலுங்கர்கள் தான் என்றாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது நிற்காது.. டி.எம்நாயரை நாங்கள் நினைவு கொண்டுள்ளோம் நீங்கள் மறந்தாலும் ,எங்கள் இயக்க பிதாமகர் அவர்என்று என்ன கூச்சலிட்டாலும் முல்லைப் பெரியார் தகராறு தொடரும்காரணம் திராவிட பிரக்ஞை அவர்களுக்கு இருந்ததில்லைநமக்கும் இல்லைநமது சிந்தனைகள் ஒரு பக்கம் பிராமணத் துவேஷம் மறுபக்கம் சுயஜாதி வெறிமற்றது பதவி வேட்டைசுயநலம்இதற்கெல்லாம் மேலாகசமீபத்தில் சேர்ந்து கொண்டது அவரவர் குடும்ப நலம்குடும்ப நலமே கட்சி நலமும்கட்சி ஒரு குடும்பம்..அதுவே திராவிட நலனாகக் கோஷமிடப்படும்.

 

மற்றதெல்லாம்நாத்திகம்பகுத்தறிவுவடவர் ஆதிக்கம்தமிழ்ப்பற்றுஈழத்தமிழர் போராட்டம்,இத்யாதி எல்லாம் இப்பயணத்தில் அவ்வப்போது அவசியத்துக்கு சேர்த்துக் கொண்டவை,.பெரியாரின் நாத்திகம் இந்த வகையினது தான்எதுவும் முக்கியமில்லைபகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ரா பெரியாருக்கு தமது 45வது வயது வரை ஜாதி பற்றிய சிந்த்னையோ பிராமண துவேஷமோ நாத்திக சிந்தனைகளோ இருந்ததில்லை. 1925-குடியரசு பத்திரிகை தொடங்கிய போது’ அவர் ஒரு மடாதிபதி சுவாமிகளை ஆசீர்வதிக்கும்படி வேண்டிப் பின்வருமாறு தலையங்கம்எழுதுகிறார்வெகு சீக்கிரம் பகுத்தறிவுப் பகலவன் ஆக இருப்பவர்.

 

இப்பத்திரிகாலயத்தைத் திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீ ஸ்வாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும்.. இறைவன் அருளாலும் சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலை பெற,மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றிச் செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்” பகுத்திறிவு தறிவுப் பகலவன் ஆகப் போகும் ஈ.வே.ராமசாமி நாயக்கர் வேண்டிக்கொண்டது திருப்பாதிரிபுலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞான சிவாசாரியார் சுவாமிகளை.

 

இன்னொரு முகம் வெகுசீக்கிரம் பிராமண துவேஷியாக அவதாரம் எடுக்க இருப்பவர் எழுதியது.இதுவும் அவரது குடியரசு பத்திரிகையிலிருந்து தான். .

 

பார்ப்பன எதிர்ப்பே தன் முழுமுதற் கொள்கையாகக் கொண்ட நீதிக்கட்சித் தலைவர் ஸர்பிட்டி தியாகராஜ செட்டியார் இறந்த போது ஈ.வே.ராஇரங்கல் எழுதுகிறார்:

 

“…”.என்னே மனிதர் தம் வாழ்நாளின் நிலைஅரசியல் உலகில் எனக்கும் அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை வடதுருவம் தென் துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். … நமது தமிழ்நாட்டுத் தவப் பேற்றின் குறைவினால் பார்ப்பனரல்லாதார் கூட்டம் ஒன்று கண்டார்அத்தகைய கூட்டம் ஒன்று காணாது காங்கிரஸ் வழி நின்று தேசத் தொண்டாற்ற வந்திருப்பாராயின் நமது நாட்டின் நிலைமை இன்று வேறுவிதமாகத் தோன்றும் என்பது எனது கொள்கை”.. .

 

கோவை அய்யாமுத்து தன் எனது நினைவுகளில் எழுதுகிறார்: “வைக்கத்துப் போர்க்காலத்தில்,நாயக்கரும் நானும் திருவிதாங்கூர் முழுதும் பயணம் செய்தோம்நாயக்கர் கையில் எப்போதும் பாரதியாரின் பாட்டுப் புத்தகம் இருக்கும்மோட்டாரில் போய்க்கொண்டே வந்தேமாதரம்வாழ்க செந்தமிழ்மறவன் பாட்டு முரசுப் பாட்டு ஆகியவைகளை உரத்துப் பாடுவார்”

குடியரசு தொடங்கப்பட்ட முதல் சில இதழ்களில் முதல் பக்கத்தில் பாரதியார் கவிதை ஒன்று இடம்பெற்றிருந்தது.

இரண்டு மூன்று இதழ்களுக்குப் பிறகு பாரதிக்கு அங்கு இடமிருக்கவில்லைஏனெனில் அவர் பார்ப்பனர் என்று பகுத்தறிவுப் பகலவனுக்குத் தெரிந்து விட்டதுஇந்த மாற்றம்நாத்திகமும்சாதி எதிர்ப்பு என்று லேபிள் தாங்கிய பிராமண துவேஷமும் எப்படி ஒரு மனிதனின் மனத்தில் திடீரென்று இடம்பெறும்காங்கிரஸிலிருந்து விலகியதும் இது எல்லாம் அவரை ஒரு package deal – ஆக வந்தடைகின்றனகட்சி மாறுவதற்குக்கூட வருஷக்கணக்கில் மாதக்கணக்கில் ஆகும்.ஆனால் ஈ.வே.ராமசாமி நாயக்கர் திடீரென்று பகுத்தறிவுப் பகலவனாகதந்தை பெரியாராக ஆகிவிடுகிறார்புராணங்களில் சொல்லப்படும் வரமோ சாபமோ தான் இதைச் சாதிக்கும்

 

இத்தகைய மனமாற்றம்சிந்தனை மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்று அவரும் சொன்னதில்லை.யாரும் அவரைக் கேட்டதும் இல்லைஆனால் அவர் இப்புதிய சிந்தனை பற்றிப் பேசும் போதும் எழுதும்போதும் அது மிக பாமரத்தனமானதாகவும்அவ்வப்போதைய தேவைக்கு ஏற்றதாகவும் இருக்கும். “ராஜாஜி என் நண்பர் தான்ஆனால் அவர் பார்ப்பான்அவர் சிந்தனைகள் பார்ப்பனருக்குச் சாதகமானதாகத் தானே இருக்கும்?” என்று சொல்லும் அவர் தனது சிந்தனையும் நாயக்கர் சாதிக்கு மாத்திரம் தானே சாதகமாகத்தானே இருக்கும்அப்படித்தானே எல்லோருக்கும் அவரவர் சாதிக்கு சாதகமாக இருக்கும் தனது மாத்திரம் எப்படி திராவிட இனம் முழுதுக்குமாக இருக்கக் கூடும்என்று அவர் யோசித்ததாகவோஅதற்கு பதில் கண்டதாகவோ செய்தி இல்லை.சாட்சியம் இல்லைஆனால் ஒரு கட்டத்தில் தன் கட்சியையும் சொத்துக்களையும் தனக்கு நம்பிக்கை தருபவரிடம் ஒப்படைக்கிறேன் என்று தனக்கு சேவை செய்து வந்த 26 வயதுப் பெண் மணியம்மையை மணம் செய்துகொள்கிறார்அண்ணாவிலிருந்து தொடங்கி கடைசித் தொண்டன் வரை யாரிடமும் அவருக்கு நம்பிக்கை இல்லைஅவர் யோசனை கேட்டது ராஜாஜியிடம்.அப்போது பார்ப்பனருக்கு சாதகமான முடிவைச் சொல்வாரே என்ற சந்தேகம் அவருக்குத் தோன்றவில்லைஆகதந்தை பெரியார்பகுத்தறிவுப் பகலவன் சிந்தனையும் பேச்சும் எந்த ஒரு வகைக்கும் உட்படாத அவ்வப்போதைய தன் மனப் போக்குக்கும் சுய நலனுக்கும் ஏற்பத் தான் இருக்கும்என்பது நமக்குத் தான் தெளிவாகிறதுஅவர் சொன்னது கிடையாதுகழகக் கண்மணிகளும் கேட்டது கிடையாது..

 




__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கழகங்களின் கண்ணியம்-2

அவரது எல்லா சிந்தனைகளும் இந்த ரக வெளிப்பாடாகவே இருந்துள்ளன. “சரஸ்வதி நாக்கில் உறைபவள் என்று சொல்கிறார்கள்அப்படியானால் அவள் மலஜலம் எங்கு கழிப்பாள்.? என்பது பகுத்தறிவுப் பகலவனின் கேள்விஇந்த ரகத்தில் தான் அவரது சிந்தனைகள் எல்லாமே இருந்துள்ளனபுராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் அறிவுக்கொவ்வாதவை என்று சொல்லும்போது அவர் சிலப்பதிகாரம் திருக்குறள் போன்ற திராவிட இயக்கத்தவர் தம் தமிழ்ப்பற்றில் போற்றிக் கொண்டாடுவதை எல்லாம் அவர் உதறி எறிந்துள்ளார்.

 

தமிழ்ப் பண்டிதர்கள் என்பவர்களின் யோக்கியதையை நான் பார்த்த பிறகு மக்களை அறிவுக்காகத் தமிழைப் படி என்று சொல்வது மீக மோசமான காரியம் என்றே படுகிறது”


இது குடியரசு பத்திரிகையில் தந்தை பெரியாரின் அருளுரை.

 

ஆனால் தந்தை பெரியாரின் இந்தமாதிரியான கருத்துக்களையும் சரிதமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று திரும்பத் திரும்ப சொன்னதையும் தமிழ் மொழியை வடமொழி ஆதிக்கத்திலிருந்து காப்பாற்றியதாகவும் தமிழ் மொழிதான் தம் மூச்சு என்று சொல்லுபவர்கள் எவரும்தாய்மொழியை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன் என்று சூளுரைத்த பாரதிதாசனும் ஈவெராவை எதிர்த்து முணுமுணுத்ததாகக் கூட செய்தி இல்லைதிராவிடத்தந்தைதமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்றவர்சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூட நம்பிக்கையை வளர்ப்பவை என்று சொன்ன திராவிட தந்தைக்கு என்ன பதில் சொன்னார்கள்?

 

கருணாநிதி காலையில் குளிக்கச் சென்றால் கூட திராவிடத் தந்தைக்கு பொறுப்பதில்லை. ”ஏன்யா அவன் என்ன இங்கே வேலைசெய்ய வந்தானாஇல்லை குளிக்க வந்தானாய்யாஎன்று கடிந்து கொள்வார்பெரியாரும் அண்ணாவும் தமக்கு வழி காட்டியவர்கள் என்று அடிக்கடி சொல்லி தம் சிஷ்ய பெருமையை காட்டிக்கொள்ளும் கலைஞர் அவர்கள்வேறு யாரும் சொல்லியிருந்தால் முரசொலியில் கவிதைதலையங்கம்அல்லது உடன்பிறப்புக்கு கடிதம் எழுதி தந்தை வழி நடக்கச் சொல்வாரா தெரியவில்லை.

 

காரணம் என்னஏன் இந்த மௌனம்எது இவர்களையெல்லாம் ஒன்று சேர்த்தது?. தமிழ்,காட்டுமிராண்டி பாஷை என்றும் சிலப்பதிகாரமும் திருக்குறளும் மூடநம்பிக்கையை வளர்ப்பது என்றும் சொன்ன பெரியார் எப்படி தந்தை பெரியார்பகுத்தறிவுப் பகலவன் ஆனார்அன்றிலிருந்து இன்றுவரை திராவிட கட்சிகள் அனைத்திலும்ஏன் தத்தம் சாதி நலனுக்கு என்றே கட்சிகள் தொடங்கிய அனைத்துமே இதே திராவிட இயக்க சிந்தனையின் பாரம்பரியத்தில்கலாசாரத்தில் வந்தன தான்அவை அனைத்தும் தம் சாதி நலன்பதவி வேட்டைபணத்தாசை இந்த மூன்றின் அடித்தளத்தில் இருப்பது ”பிராமணனை ஒதுக்கி வை” என்னும் மூல மந்திரம் தான்.. இதை நாகரீகமாக ”நாங்கள் வெறுப்பது பிராமணீயத்தைபிராமணணனை அல்ல,” என்று சொல்.கவுண்டரீயம்நாயக்கரீயம் வன்னியரீயம் என்றெல்லாம் ஏதும் கிடையாதுபிராமணரை எல்லா தளத்திலிருந்தும் ஒதுக்க இன்னொரு முக்கிய காரணம் இவர்கள் எல்லாரையும் பீடித்துள்ள தாழ்வு மனப்பான்மைஇந்த தாழ்வு மனப்பான்மை தான் திராவிட இயக்கத்தின் ஒவ்வொரு தலைவருக்கும்ஒவ்வொரு சோட்டா மோட்டா நடிகருக்கும் பட்டங்கள் அள்ளிச் சொரிந்து அந்தப் பட்டங்களையே டமாரம் அடிப்பதுசினிமா வசனம் எழுதினால் கலைஞர்வாத்தியார் வேலை பார்த்திருந்தால்பேராசிரியர்எல்லாம் திலகம் தான்சிகரங்கள் தான்உலகத்தில் வேறு எங்கும் காணாத ஒரு அபத்தக் கலாசாரம்.

 

தொடர்ந்து அன்றைய 1910-களின் தொடக்கத்திலிருந்து இன்று வரை திராவிட இயக்கத்தவர்கள் யாரும்அதன் முந்தைய அவதாரங்களையும் சேர்த்துஇன்றைய அதன் கிளைகள் பிரிவுகளையும் சேர்த்து எவரும் ஆழ்ந்த சிந்தனைவயப்பட்டவர்கள் கிடையாதுஅவரவர்க்கு சொந்த குடும்பஜாதி நலன்கள்அவற்றுக்கு அலங்காரமான வெளியில் சொல்லத்தக்க ஒரு கொள்கை லேபிள்வடவர் ஆதிக்கம் என்று ஆரம்பித்ததுஇன்று அன்னை சோனியா காந்தி சொக்கத்தங்கமாக காட்சி தருகிறதுவிதவை மறுவாழ்வுத் திட்டத்துக்கு மனுச்செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை தரப்பட்ட இந்திரா காந்தி பின்னர் “நேருவின் மகளேநிலையான ஆட்சி தருக” என்று வேண்டப்பட்டார்ஏன்யா தேர்தலுக்கு உஙகள் அணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் சாதிகட்சிகளாகவே இருக்கிறார்கள் என்று கேட்டால்சாதிகளையெல்லாம் இணக்கமாக ஒன்று சேர்த்து விட்டால் சாதியே ஒழிந்து போகுமே அதற்காக என்று பதில் சொல்லப்பட்டதுமதவாதக் கட்சி என்று வசைபாடிய பா..க அணியில் சேர்ந்திருந்தீர்களே என்றால்அதன் மதவாதத்தை கட்டுப்பாட்டில் வைப்பதற்காகச் சேர்ந்தோம் என்று பதில் தரப்படுகிறதுஇதெல்லாம் பெரியார்அண்ணா காட்டியவழியில் சாதியை ஒழிக்கப் பிறந்த கட்சியின் தலைவர் அருளிய வாசகங்கள்ஹிந்தி அரக்கியை ஒழிக்கப்போராடிய கட்சியின் தலைவர் தன் மருமகனுக்கு ஹிந்தி நன்கு தெரியும் என்று மந்திரி பதவிக்கு சிபாரிசு செய்கிறார். ’என் குடும்பத்தில் எவருக்காவது பதவி தேடினால் என்னைச்செருப்பால் அடியுங்கள்,’ என்ற வன்னியர் கட்சித் தலைவர் தன் மகனுக்கு ராஜ்யசபா சீட் ஏந்தக் கட்சி தரும் என்று தேடி அணி சேர்கிறார்தன் மகனை மந்திரியாக்கி அழகு பார்க்கவேண்டும்என்ற அவர் ஆசையும் தீர்கிறது.

 

ஹிந்தி அரக்கியை விரட்டித் தமிழுக்காகவே போராடிய இயக்கம் ஆண்ட 50 வருட கால ஆட்சியில் தமிழ் படிக்காமலேயே கல்லூரி வரை ஒருவர் கல்வி பெறமுடிகிறது தமிழ் நாட்டில்எந்தத் தொலைக்காட்சியிலும் தமிழ் பேசுகிறவர்கள் அரிதாகிக் கொண்டுவருகின்றனர்ஆங்கிலம் பேசுவது நாகரீகமாகக் கருதப்படுகிறதுமுத்தமிழ்க் காவலர் குடும்பத்து SUN, KTV, SUN Music, SUN Newsஎன எதிலும் தமிழ் பேசுபவர்கள் கிடைப்பதில்லை.

 

அறுபது வருட கால திராவிட ஆட்சிக்குப் பிறகுகுழந்தைக்கு தமிழ்ப் பெயர் வைக்க மோதிரம் தரப்படும் என்று ஆசை காட்ட வேண்டியிருக்கிறதுதமிழ்த் திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசு ஆனை பிறக்கிறதுஏன்தம் குடும்பத்திலேயே கூட உதய நிதிகலாநிதிதயாநிதி என்று தான் பெயர்கள்அது போகட்டும்அவர்களுக்கு தங்க மோதிரம் வேண்டாம்தமிழ்ப் பற்றும் வேண்டாம்வேறென்ன வேண்டும்பின் ஏன் எல்லா பெயர்களும் நிதி என்றே முடிகின்றனஇருப்பினும் கோஷம் என்னவோ பொறியியல்மருத்துவம்,வானசாஸ்திரம் எல்லாம் தமிழில் போதிக்கப்படவேண்டும் என்று எல்லாக் கட்சிகளிலிருந்தும் வருகிண்றன பலத்து.

 

வடவர் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய கட்சிஇன்று தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் அத்தனையும் சுரண்டியாகிறதுஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக மழை நீர் தேக்கிவளம் தந்த ஏரிகள் தூர்க்கப்பட்டு வீட்டு மனைகளாகின்றனவிளை நிலங்கள் எல்லாம் தொழிற்சாலைகள் வசமாகின்றனகேட்டால் தொழில் வளம் என்று கோஷமிடுகிறார்கள்நிலத்தடி நீர் எங்கோ அதளபாதாளத்துக்கு போகிறதுஅண்டை மாநிலத் திராவிடர்களோ 1971-லிருந்து எந்த ஆற்று நீரையும் பகிர்ந்து கொள்ளத் தயாராயில்லைஎல்லாவற்றிலும் திராவிடத் தலைமையோ விட்டுக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறதுகாரணம் என்னவென்று தெரியவில்லை.கர்நாடகாவிலிருக்கும் தன் சொத்துக்களுக்கு ஆபத்து என்ற பயமோசுமுகமாகப் பேசித்தான் பிரசினைகளைத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று சொல்லப்படுகிறதுபிராமண துவேஷம் சாதி ஒழிப்பு என்று பெயர் பெறுவது போலபேசித் தீர்த்துக்கொள்வது என்ற சொல் எதை மறைக்க என்று சந்தேகிக்கத் தோன்றுகிறதுஆற்று மணலை அள்ள குத்தகை விடப்படுகிறதுஆற்று மணல் நூற்றுக்கணக்கான லாரிகளில் தினம் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுகிறதுஇது நாட்டின் சொத்துகவலையில்லை அரசியல்வாதிகளுக்கும் குத்தகைதாரருக்கும்ஒரு முறை ஆற்று மனல் முழுதுமாக அள்ளப்பட்டு விட்டால் தமிழ்நாடு இனி சகாரா பாலைவனம் தான்வேறு எந்த மாநிலமும் தன் நில வளத்தைகனிம வளத்தைச் இப்படிச் சுரண்ட விடுவதில்லை

 

.திராவிட இனம்தமிழ் பற்று என்று 60-70 வருடங்களாக உரத்த கோஷம் இட்டவர்கள் தான் தமிழ் நாட்டை மீளமுடியாத ஒரு அழிவுக்கு இழுத்துச் செல்கிறார்கள்இது வரும் தலைமுறை தமிழ் மக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒப்பாகும்.

சாதி ஒழிப்பு என்பது பிராமணர்களைக் கண்ட துவேஷம்சுய ஜாதிப் பற்று என்பதுதிராவிட ஆட்சி ஏற்பட்ட 1967 – லிருந்தே எத்தனை ஜாதிக் கலவரங்கள் படுகொலைகள்கீழவெண்மணியிலிருந்து நேற்றைய உத்தபுரம் வரை நிகழ்ந்துள்ளனபட்டியலி சாத்தியமில்லைஆனால் இவை எல்லாம் திராவிட கட்சிகளின் பாஷையில் திராவிடர்களே ஒருவருக்கொருவர் தம் ஜாதி வெறியினால் நிகழ்ந்தவைஉயிரோடு தீவைத்துக் கொளுத்தியது வரைஇதற்கு என்ன அர்த்தம்எந்த திராவிடகட்சியாவது வாய்திறந்து தன் பகுத்தறிவுப் புலனாயவு செய்ததாஅல்லது தன் கொள்கைகளைத் தான் புனர் ஆய்வு செய்ததாபறையர்களே பள்ளர்களை சமமாக ஏற்பதில்லையேதிருமாவளவனும் டாக்டர். கிருஷ்ணசாமியுமே ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசுவதில்லையேஎந்த பார்ப்பனர் இந்த சுயவெறுப்பை விளைவித்தார்எத்தனை மொக்கையானஅர்த்தமற்ற அபத்தமும் பொய்யுமான சாதிக் கொள்கை இவர்களதுகம்யூனிஸ்ட் கட்சிகள் தான் இவற்றில் தலையிட்டு சமரசத்துக்கும் அமைதிக்கும் வழி தேடுகின்ற்னஅவர்கள் எத்தரப்பு சுயஜாதி வெறியையும் கண்டனம் செய்வதில்லைஏன்?. அவர்களுக்கும் திராவிட கட்சிகள் போலவே ஜாதிவெறியின் முக்கியத்துவம் தெரிகிறதுஎல்லோருமே நாடகமாடுகிறவர்கள் தான்அவர்களின் கோஷங்கள் வெற்றுக் கோஷங்களேஒரு ஜாதியினரைக் கண்டித்தால் மற்ற ஜாதியினரின் ஓட்டை இழக்க நேருமே!

 

இவர்களில் எவருக்கும்திராவிட கழகங்கள் ஆகட்டும் மற்ற கட்சிகள் எதற்கும் சுயஜாதி வெறி தான் ஆதாரமானதுஅதை வைத்துத் தான் தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதும் கட்சிகளின் வெற்றி தோல்வியும் தீர்மானிக்கப்படுகிறதுகல்விபதவி எல்லாவற்றுக்கும் ஜாதி சார்ந்து ஒதுக்கீடுஇதுவே ஜாதிகளை என்றென்றைக்குமாக நிரந்தமாக பாதுக்காக்கும் வழியுமாகிறதுஜாதி என்பது எல்லாவற்றுக்குமான முதலீடுஅந்த முதலீட்டை யார் கைவிடுவார்கள்?

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்ஈழத் தமிழர்களுக்கு இவர்கள் உகுக்கும் கண்ணீரும்,உதறுவதாகப் பயமுறுத்தும் மந்திரி பதவிகளும்டிவி காமிராக்களை வைத்துக்கொண்டு ஆடும் மூன்று மணிநேர உண்ணாவிரத நாடகங்களும்எல்லாமே திரைப்பட வசனங்கள் தாம். . இவர்களது தமிழ்பற்று போலத் தான்எத்தனை லக்ஷம் தமிழர்கள் முள்வேலிக்கம்பிச் சிறைகளில் அடைபட்டிருந்தாலும்ராஜபக்‌ஷேயிடம் தூது சென்று பரிமாறிக்கொண்ட புன்னகைக் காட்சிகள் பெற்று வந்த பரிசுகளும்குலுக்கிக்கொண்ட கைகளும் போதும் தமிழருக்கு நாம் அளித்த துரோகத்திற்கு சாட்சியம் தர.

 

இன்றைய மத்திய அரசுக்கு தமிழகத் தமிழரும் சரிஈழத் தமிழரும் சரி ஒரு பொருட்டே இல்லை என்பதும் அதைவேடிக்கை பார்த்திருப்பது திராவிட கழகங்கள் மாத்திரமல்லகாங்கிரஸ் கட்சியும் தான்அவ்வப்போது ஒரு கழகம் எதிர்க்குரல் எழுப்பினால்மற்றது மத்திய அரசுக்கு தன்னை மிகுந்த விசுவாசியாகக் காட்டிக்கொண்டு தன் எதிரிக்கழகத்தின் எதிர்ப்புக்க்குரலை மடியச் செய்யும்.எத்தனை உதாரணங்கள் தேவைகாவிரி நீராசுனாமியாதானே புயலாஈழத்தமிழர் மரண ஓலமா?எதையும் மத்திய அரசு காதில் விழாதது போல நாடகமாட எதிர் கழகம் துணை போகும்.

 

கழகங்களின் கூச்சலும் பிரசார நாடகமேடை ரக வசனங்களும் சிந்தனைக்கோ இலக்கியத்துக்கோ எந்த கலைக்குமோ வித்தாக முடியாதுஎல்லாத் துறைகளிலும்பத்திரிகைமேடைப் பேச்சு,இலக்கியம்சினிமாநாடகம்இப்போது தொலைக்காட்சி எதையும் இவர்கள் விட்டு வைத்ததில்லைஇவற்றில் எல்லாம் சுமார் 60 – 70 வருட காலமாக திளைத்து உலப்பி வந்தாலும்,எல்லாம் மலையெனக் குவித்திருந்தாலும்எவையும் உயிரற்றவைஉண்மையற்றவைஉரத்த கூச்சல் கலையாவதில்லைபொய்மையும் கலையாவதில்லைதிராவிட இயககங்கள் இதுகாறும் படைத்த எதுவும் இலக்கியம் என்றோ கலையென்றோ சொல்லத் தக்கவை அல்லஒரு அடிப்படையான காரணம்இவர்களிடம் உண்மையுமில்லைகலை உணர்வும் இல்லைகடந்த கால முற்போக்குக்காரர்கள் போலத்தான்கூச்சலும் பிரசாரமும் அரசியலுக்குப் பயன்படலாம்.கலைக்கோ இலக்கியத்துக்கோ அல்லதலித் எழுத்தாளர்கள் இந்த விஷயத்தில் நேர்மையானவர்கள்சிறந்த எழுத்துக்கள் அவர்களிடமிருந்து பிறந்துள்ளன.ஏனெனில் அவர்கள் தம் அனுபவங்களைத் தான் எழுதுகிறார்கள்.

 கிறித்துவமுகம்மதிய மதத்தினரிடம் நாத்திகம் பேச பயப்படுபவர்களீடம்அவர்களிடம் காணும் ஜாதீய தீண்டாமையைப் பேசப் பயப்படுபவர்களிடம் என்ன நேர்மை இருக்கமுடியும்கக்கூசைக் கழுவ என்றே ஒரு சாதி என்ற இழிநிலைக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்று சொன்ன தலித் தலைவரிடம்பெரியார் சொல்கிறார், “இதுக்கு நீங்களே ஒரு வழி சொல்லுங்கவேறே யார் செய்வாங்க?

பறச்சிகள்ளாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்துராதா" என்றாராம் பெரியார்.காமராசன் ஸ்விஸ் பாங்கில் பணம் சேர்த்து வைத்திருக்கிறார் என்றும் காமராசர் என்ற அழகனின் தோலை உரித்தால் இரண்டு டமாரம் செய்யலாம் என்றும் பேசும் தலைவர்களைக் கொண்டது,கண்ணியம் கட்டுப்பாடுகடமை என்று கோஷமிடும் கழகம் ஒன்று. 67 தேர்தலில் பத்து லட்சம் பக்தவத்சலம் என்று கோஷமிட்ட தலைவர்களைப் பற்றி இன்று பேசுவதானால் எததனை ஆயிரம் கோடி என்று சொல்லி கோஷமிடவேண்டும்கண்ணியம் தான்இது கழகம் ப்ராண்ட் கண்ணியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஈவேரா குறித்து சி.என்.அண்ணாதுரை: அண்ணாதுரை குறித்து ஈவேரா

சுயமரியாதையை விட பதவிஆசை அதிகம் ஈவேராவுக்கு - அண்ணாதுரை

 

 

போர்ஜரி செய்பவர்கள் - மோசக்காரர்கள் - ஈவேரா

 

 

 

போற்றிப்பரப்பி வந்த இலட்சியங்களை மண்ணில் வீசும் அளவுக்குத் தலைவரின் சுயநலம் கொண்டு போய் விட்டு விட்டது. இனி அவரின் கீழிருந்து தொண்டாற்றுதலால் பயன் இல்லை. உழைத்து நாம் சிந்தும் வியர்வைத்துளிகள் அவரது "சொந்த" வயலுக்கு நாம் பாய்ச்சிய தண்ணீராகவே ஆகும் என்று கருதி அவரது தலைமை கூடாது அது மாறும் வரை கழகப்பணிகளிலிருந்து விலகி நிற்கிறோம் என்பதாக எண்ணற்ற கழக தோழர்களும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களும் கண்ணீர் துளிகளைச் சிந்தி ஒதுங்கி நிற்கின்றனர் 

...

தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறாரே ஒழிய சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை.... தலைமைப் பெருமையில் ஆர்வத்தையும் ஆசையையும் பதித்திருக்கிறாரே தவிர கட்சி வளரவேண்டும் அதன் செயல்கள் நடைபெற வேண்டும் என்று எண்ணமில்லை.

 

(திராவிட நாடு 21.8.1949) 

 

பழங்காலத்து தபசிகள் சாபம் கொடுப்பார்கள் என்று கதை சொல்வார்களே அது போல பகுத்தறிவுத்தந்தை பலபல சாபமிடுகிறார்!!

விரட்டப்படுவார்கள் விரண்டோ டுவார்கள்

மறைந்து போவார்கள் வேறுகட்சியில் சேர்வார்கள்

தேர்தலுக்கு நிற்பார்கள் தேய்ந்து போவார்கள்

 

என்றெல்லாம் சாபம் இடுகிறார். இந்த ஏசல் சாபம் இவைகளை நான் அவர் அடைந்துள்ள ஏமாற்றத்தின் விளைவு என்று நன்றாக அறிவதால் எனக்கு கோபம் வரவில்லை சிரிப்புதான் வருகிறது.

 

(திராவிட நாடு, 9-10-1949)

 

வீரர் தீரர் என்று அழைத்தார் கண்ணைமூடிக்கொண்டு அவரைப்பின்பற்றுபவராக இருந்தவரையில். அவர் தீட்டிவிட்ட பகுத்தறிவினைத் துணை கொண்டு அவருடைய சொல்லையும் ஆராயும் போக்கு ஒரு சிறிதளவு காட்டினோம் உடனே கோபம் பிறந்துவிட்டது. போர்ஜரி செய்பவர்கள் மோசக்காரர்கள் என்று ஏசுகிறார்.

திராவிட நாடு (16-10-1949)

நன்றி

mvenkat.gif



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Everybody is trying for fishing here,

Dravidian - Created by linguistic scholars, so we have too may confusion because India was ruled by many languages over a period of time like Tamil & Prakrit, Sanskrit, Urdu and English. The Ancient Language (Tamil & Prakrit) & Religion (Ancestor deity, Jainism/Buddhism) identity was lost or mixed with later due to various invaders over a period of time post Christian era say starting from 3rd century AD

In my opinion, Dravidian should be considered as a majority RACE of India. Indians are the one who do not have a RACE identity in the world. The RACE history should be changed to include Dravidian as a RACE of India :)


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard