New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு


Guru

Status: Offline
Posts: 24601
Date:
இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு
Permalink  
 


இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 1

April 1, 2012


(தங்கமும், வைரமும் அனைவருக்கும் நன்கு அறிமுகமானதுதான். இருந்தும் ஒன்றை உருக்கி வெவ்வேறு வடிவத்திலும், அளவிலும் நகைகளாகவும், மற்றதை வெவ்வேறு கோணங்களில் பட்டை தீட்டியும், வெவ்வேறு இடங்களில் பொருத்தியும் அழகு பார்க்கிறோம். அதுபோல நம் அனைவருக்குமே நன்கு அறிமுகமான இராமாயண காவியத்தை, வால்மீகி முனிவரின் மூலச் செய்யுட்களில் சிலவற்றை எடுத்தாட்கொண்டு, வேறு கோணத்தில் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கம் இத்தொடர். ராம ராஜ்ஜியம் நமக்கு வேண்டும் என விரும்புவோர் அனைவருமே, முதலில் காவியத் தலைவன் இராமனைப் போலத் தனது வாழ்க்கை நெறியை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொன்னால் மிகையாகாது.)

முன்னுரை:

இந்திய விமானப் படையின் வானிலைப் பிரிவில் சுமார் முப்பது வருடங்கள் பணியாற்றியபின் 1989-ம் வருடம் ஒய்வு பெறும்போது, மூல ஆசிரியர் திரு. லக்ஷ்மிநாராயணன் அவர்களுக்கு, அவரது விருப்பங்களை நன்கு புரிந்து கொண்ட சக ஊழியர்கள், ஒரு வால்மீகி ராமாயணம் புத்தகம் ஒன்றை நினைவுப் பரிசாக அளித்தனர். அந்த நூலை வான்மீகி முனிவர் 24,000 செய்யுட்கள் வடிவில் 500 அத்தியாயங்களில் இயற்றியுள்ளார். அதை ஆசிரியரும் நாள் ஒன்றுக்கு ஒரு அத்தியாயமாக படித்து, தனது குறிப்புகளையும் எழுதி வந்தார். அப்படி அவர் அந்த நூலை மூன்றாம் முறையாகப் படித்து வரும் போது, வால்மீகி முனிவர் எந்தக் காரணத்தை முன்னிட்டு ராமாயணத்தை எழுதியிருக்கக் கூடும் என்று அவருக்குத் தோன்றியதை “Rama: a Model for Mankind” என்ற தலைப்பில் தனது ஆங்கில நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்குப் பொருத்தம் என்று தோன்றிய மூல சம்ஸ்க்ருத சுலோகங்களை தேர்ந்தெடுத்து, அதை ஆங்கிலத்தில் விளக்கி அதன் தொடர்பான இராமாயண நிகழ்ச்சிகளையும் விவரித்துள்ளார். அந்த மூல நூலை நான் படிக்க நேர்ந்தபோது, நான் பெற்ற இன்பத்தை தமிழ்ஹிந்து வாசகர்களுக்கும் மொழியாக்கம் செய்து அளிக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.

உடனே ஆசிரியரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு அதற்கு அவர் அனுமதியைக் கேட்டேன். அவரோ, “பகீரதன் தனது முன்னோர்களுக்கு அர்ப்பணம் செய்வதற்கு என்று கங்கை நதியைக் கொண்டு வந்தான்; நாம் எவருடைய அனுமதியைப் பெற்று கங்கை நீரைப் பருகுகிறோம் என்று போஜ மகராஜா சம்பு ராமாயணத்தில் சொல்வதைச் சொல்லி, தாங்கள் மொழியாக்கம் செய்ய அனுமதி அளிப்பதற்கு நான் யார் ? ராமாயணம் மக்கள் அனைவரின் சொத்து. தங்கள் பணியைத் தாராளமாகச் செய்யுங்கள்” என்று மிக்க பெருந்தன்மையுடன் ஆசீர்வதித்தார். ஆசிரியர் தேர்ந்தெடுத்துள்ள மூலச் செய்யுட்களையும், சில சொற்களின் பொருளையும் நான் IIT Kanpur தொகுத்தளித்துள்ள வால்மீகி இராமாயண இணையதளத்திலிருந்து ( http://valmiki.iitk.ac.in/index.php?id=translation ) அப்படியே எடுத்து தொடர் கட்டுரையில் பொருத்தியுள்ளேன். நாரதர், வால்மீகி முதற்கொண்டு லக்ஷ்மிநாராயணன் உள்ளிட்ட நம்முடன் என்றும் வாழும் பாரதப் பெரியோர்களை மானசீகமாக வணங்கி, எனது பணியை வரும் ராம நவமி முதற்கொண்டு இத்தொடர் மூலம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருந்து எல்லாம் நல்லபடி நடந்தேற அருள் புரிவானாக.

1. கற்ற பின் நிற்க அதற்குத் தக
तपःस्वाध्यायनिरतं तपस्वी वाग्विदां वरम् ।
नारदं परिपप्रच्छ वाल्मीकिर्मुनिपुङ्गवम् ।। 1.1.1 ।।

தப​:ஸ்வாத்⁴யாயனிரதம்ʼ தபஸ்வீ வாக்³விதா³ம்ʼ வரம் | நாரத³ம்ʼ பரிபப்ரச்ச² வால்மீகிர்முனிபுங்க³வம் || 1.1.1 ||

तपस्वी ascetic, वाल्मीकि: Valmiki, तप: स्वाध्यायनिरतम् highly delighted in the practice of religious austerities and study of vedas, वाग्विदां वरम् eloquent among the knowledgeable, मुनिपुङ्गवम् pre-eminent among sages, नारदम् Narada, परिपप्रच्छ enquired.

முனிவர்களுள் சிறந்தவரும், வேதம், யக்ஞம் மற்றும் பலவிதமான கலைகளைக் கற்று அவை சொல்வதற்கு ஏற்ப வாழ்பவருமான நாரத முனியை வால்மீகி முனிவர் கேட்கிறார் ( உலகில் வாழ்வாங்கு வாழ்பவனின் குணங்கள் எத்தகையது என்று).



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

வான்மீகி முனிவர் “தபஸ்”, “ஸ்வாத்யாயம்” என்ற இரண்டு உபநிடதச் சொற்களைக் கொண்டே ராமாயணத்தை எழுத ஆரம்பிக்கிறார். அவை இரண்டுமே யஜுர் வேதத்தில் உள்ள தைத்ரிய உபநிடத வார்த்தைகள். எவன் ஒருவனும் தானும் கற்று, தான் கற்றதை மற்றவர்களுக்கும் அளிப்பதையே ஒவ்வொருவரின் கடமை என்று தைத்ரிய உபநிடதம் வலியுறுத்திச் சொல்கிறது. மற்றெல்லாவற்றிலும் “ருதம், சத்யம், தவம்” என்ற மூன்று குணசீலன்களே தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் உணர்த்த வேண்டியவைகளில் முதன்மையாக இருப்பவை. ருதம் என்பது ஒரு மனிதன் வாழ்விலும், பிரபஞ்ச இயக்கங்களிலும் நடப்பதில் ஒரு ஒழுங்குமுறையை வகுத்துச் செல்லும் பேரியக்கம் என்று கொள்ளலாம். சத்யம் என்பது என்றும் எங்கும் உள்ளபடி உள்ளது என்றும், தவம் என்பது ஒருவனை உந்திச் சென்று இயக்கும் ஒரு தகிக்கும் உள்ளுணர்வு என்றும் ஆகும்.

“தபஸ்” என்ற சொல்லே “தப்” என்ற சம்ஸ்க்ருத மூலத்தில் இருந்து வருவது. “தப்” என்பது உஷ்ணத்தைக் குறிக்கிறது. அந்த சக்தியே வெளிப்படும்போது இயக்கங்களாக, செயல்களாகப் பரிணமிக்கிறது. தவம் என்பது தீவிர அனுஷ்டானத்திற்கும், பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும் கடந்து இருப்பது. தவத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக வால்மீகி முனிவரே உள்ளார். ஒரு யோகியும், ஞானியுமான வால்மீகி முனிவருக்கு நற்குணங்கள் பொருந்தி, நல்லொழுக்கத்துடன் வாழும் ஒருவனின் குணாதிசயங்களைப் பட்டியலிட்டுக் காட்டி அதன்படி நல்வாழ்வு வாழ அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனாலும் வெறும் பட்டியலிட்டால் மட்டும் மனித குலத்திற்குப் போதாது; அதன்படி வாழ்ந்து காட்டும் ஒரு மனிதனை உதாரணமாகக் காட்ட வேண்டும் என்ற உந்துதலினாலேயே அவர் இராமனை முன்னிறுத்தி ராமாயணத்தை இயற்றியுள்ளார். இப்படியாக ராமாயணத்தை இயற்றி, அதனை லவ-குசர்கள் மூலம் பலருக்கும் கொண்டு சென்றதே அவர் செய்த தவம்.

“ஸ்வாத்யாயம்” என்ற சொல்லில் “ஸ்வ” என்றும் “அத்யாய” என்றும் இரண்டு பாகங்கள் உள்ளன. அதற்கு “சுயமாகவே கற்றுக் கொள்வது” என்று பொருள். அதாவது, ஒருவன் எவ்வளவு படித்து அறிந்து கொண்டாலும், மற்றவர் மூலம் கற்றுக் கொண்டாலும், இறுதியில் அவன் தானாகவே எவ்வளவு புரிந்து கொள்கிறானோ அவ்வளவுதான் அவனுக்கு அறிவாக மிஞ்சும். எவ்வளவுக்கு எவ்வளவு அவன் உள் வாங்கிக்கொண்டு அதனைத் தன்னுடைய ஒரு பாகமாக இருத்திக் கொள்கிறானோ அதுவே அவன் கற்ற கல்வியின் அளவாக இருக்கும். அதுவே அவனது தினப்படி எண்ணங்களிலும், செயல்களிலும் பரிமளிக்கும். மற்றவர்க்கு அவன் அளிக்கும் எண்ணப் பரிமாற்றங்களிலும், செயல்களிலும் அது ஒன்றே அவனது திறனைக் காட்டிக் கொடுக்கும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்றி, அவன் சொல்வதை தனது வாழும் நெறியில் காட்டும்போதுதான் அவனது சொல்லுக்கும் செயலுக்கும் மதிப்பு இருக்கும்.

காவிய காலத்து இராமபிரானும், நமது காலத்து மகாத்மா காந்தியும் அப்படியாக வாழ்ந்து காட்டியவர்கள்தான். இதைத்தான் உபநிடதங்களும் “ஸ்வாத்யாய ப்ரவச்சநேச” என்று கூறுகிறது. அதாவது கற்றுக்கொண்டு அதை மற்றவர்க்கும் கற்றுக்கொடு என்று கூறுகிறது. கற்றுக்கொள்பவன் அதன்படியே வாழ்ந்தால், கற்றுக் கொடுப்பதற்கும் எளிதாகும். ஆக வால்மீகி முனிவர் மிகப் பொருத்தமான உபநிடதச் சொற்களைக் கொண்டு தனது காவியத்தை ஆரம்பித்து வைக்கிறார்.

வேதங்கள் “எது எப்படி இருக்கும் அல்லது இருக்க வேண்டும்” என்று கூறுமே தவிர, அதன் காரணங்களை விவரமாகக் கூறி விளங்க வைக்காது. அதனாலேயே அவைகள் ஒருவன் இப்படி இருந்ததால் இப்படி ஆயிற்று என்று விவரங்கள் தராது. அதனாலேயே கலை மற்றும் கவி நயத்துடன் காவியங்கள் படைத்து வால்மீகி போன்றோர் உதாரண புருஷர்களையும் காட்டி புராணங்களைப் படைத்தனர். அவை மூலம் வேதங்கள் கூறும் நீதி, நேர்மை சார்ந்த நல்லொழுக்கம் மிக்க ஆன்மிக வாழ்க்கை வாழும் வழியை கதாபாத்திரங்கள் மூலம் காட்டி நல்லுலகத்தைப் பற்றிய செய்தியைப் பரப்பினர். அப்படிப்பட்ட ஒரு பாத்திரம்தான் நம் காவிய நாயகனான இராமபிரான்.

அவரது குணாதிசயங்களைப் பற்றி படித்தோ, கேட்டோ அறிபவர்கள் அவரைப் போலவே நல்ல வாழ்க்கை வாழ மாட்டார்களா என்ற ஆதங்கமே வால்மீகி போன்றோரை காவியங்களைப் படைக்க வைத்தது. உபநிடத காலத்தில் வால்மீகி வாழ்ந்திருந்தார் என்றால், “ராமாயணம் படித்து ராமபிரானைப் போல அனைவரும் வாழ்ந்து நன்னெறிகளைப் பரப்ப வேண்டும்” என்று உபநிடத வாக்கியங்களே அமைந்திருக்கக் கூடும்! வேத ரிஷிகளைப் போல அல்லாது வால்மீகி வித்தியாசமாக இராமனை நன்கு விவரித்து அவர் போல வாழவேண்டும் என்று சொல்லாது சொல்கிறார். இராமாயணத்தைப் படித்தும், கேட்டும் நாம் அனைவரும் கற்க வேண்டியதைக் கற்று, அதன்படி வாழ்ந்து, அது சொல்லும் கருத்துக்களையும் பரப்புவோம் என்று வால்மீகி நம் மீது திடமாக நம்பிக்கை வைத்துள்ளார் என்றே சொல்லலாம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


2. பதினாறும் பெற்ற பெருவாழ்வு

को न्वस्मिन् साम्प्रतं लोके गुणवान् कश्च वीर्यवान् ।
धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ।। 1.1.2 ।।

கோ ந்வஸ்மின் ஸாம்ப்ரதம்ʼ லோகே கு³ணவான் கஸ்²ச வீர்யவான் | த⁴ர்மஜ்ஞஸ்²ச க்ருʼதஜ்ஞஸ்²ச ஸத்யவாக்யோ த்³ருʼட⁴வ்ரத​: || 1.1.2 ||

अस्मिन् लोके in this world, साम्प्रतम् now, गुणवान् endowed with excellent qualities, क: नु who indeed, वीर्यवांश्च with prowess, धर्मज्ञ: च knower of righteousness, कृतज्ञ: च grateful (who remembers even little help done by others), सत्यवाक्य: truthful in his statements, दृढव्रत: firm in his vows (till such time he achieves the results), क: who?

चारित्रेण च को युक्तः सर्वभूतेषु को हितः ।
विद्वान् कः कः समर्थश्च कश्चैकप्रियदर्शनः ।। 1.1.3 ।।

சாரித்ரேண ச கோ யுக்த​: ஸர்வபூ⁴தேஷு கோ ஹித​: |
வித்³வான் க​: க​: ஸமர்த²ஸ்²ச கஸ்²சைகப்ரியத³ர்ஸ²ன​: ||  1.1.3 ||

क: who?, चारित्रेण with good conduct, युक्त: is endowed, क: who?, सर्वभूतेषु for all living beings, हित: benefactor, क: who?, विद्वान् learned man (knower of everything which is to be known), क: who?, समर्थ: च competent (capable of doing things which cannot be done by others), क: who? एकप्रियदर्शन: च solely delightful in appearance to everyone,

आत्मवान् को जितक्रोधो द्युतिमान् को ऽनसूयकः ।
कस्य बिभ्यति देवाश्च जातरोषस्य संयुगे ।। 1.1.4 ।।

ஆத்மவான் கோ ஜிதக்ரோதோ⁴ த்³யுதிமான் கோ (அ)நஸூயக​: | கஸ்ய பி³ப்⁴யதி தே³வாஸ்²ச ஜாதரோஷஸ்ய ஸம்ʼயுகே³ || 1.1.4 ||

आत्मवान् self-restrained, क: who?, जितक्रोध: one who has conquered anger, द्युतिमान् one who is endowed with splendour, अनसूयक: one who is free from envy (envy – depicting one’s merits as weak points), क: who?, जातरोषस्य excited to wrath, कस्य to whom, संयुगे in the battle, देवा: च celestial beings, devatas, बिभ्यति are afraid of.

நற்குணங்களின் குன்று, வீரன், கடமையில் கருத்துடையவன், நன்றி மறவாதவன், உண்மை விளம்பி, மனத்திடம் மிக்கோன், நற்குணத்தை ஒக்கும் செயல்கள் கொண்டோன், அனைவரின் நலம் விரும்பி, கல்வி மிக்கோன், திறமை மிக்க தொழிலாளி, பழகுதற்கு எளிமையானவன், தன்னிலே இன்புற்றோன், சீற்றத்தை அடக்கியவன், அழகன், அழுக்காறு அகன்றோன், சீண்டினால் சீறுவோன் என்ற இப்பதினாறு குணங்களைக் கொண்டவனே குணசீலன் என்று இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் இப்படிப் பட்டியலிட்டு ஒவ்வொருவனும் இப்படி இருக்கவேண்டும் என்று கூறாமல், இந்தக் குணங்கள் எல்லாவற்றையும் கொண்ட ஒரு வாழும் அல்லது வாழ்ந்த மனிதன் ஒருவனின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் மூலம் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் எப்படி ஒரு குணவானாக இருக்க வேண்டும் என்று கூற விரும்பி, அப்படிப்பட்ட ஒருவன் இருக்கிறானா என்று வால்மீகி முனிவர் தவச்சீலர் நாரதரிடம் கேட்கிறார்.

குணங்கள் என்று வந்துவிட்டாலே நல்லவை, கெட்டவை என்ற இருமை வந்துவிடும். இதில் ஒருவனுக்கு ஒரு சமயத்தில் எது மிகுந்து காணப்படுகிறதோ, அந்த சமயத்தில் அவனை நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ குறிப்பிடுகிறோம். அதாவது ஒருவனுக்கு நல்லவனாகவோ, தீயவனாகவோ இருப்பதற்கு சரிசம வாய்ப்புகள் இருக்கின்றன. நீதி, உண்மை கலந்த தூய எண்ணங்களோடு வாழ்ந்து, அவை ஒட்டிய செயல்களைப் புரிய விரும்புவோன் நல்லவனாகவே வளர்வான், இருப்பான். அப்படி எத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்? இதை எல்லாம் யோசித்த வால்மீகி முனிவர் மேற்கண்டவாறு பதினாறு நற்குணங்களைப் பட்டியலிட்டார்.

சாதாரண மக்களிடம் இந்தப் பட்டியலைக் கொடுத்தால், இவ்வளவா என்று மலைத்துப் போய் இதெல்லாம் நமக்கு ஆவாது, நம்மால் முடியாது என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சி, இக்குணங்கள் அனைத்தையும் உள்ளடக்கி வாழும் ஒருவனைப் பற்றிச் சொன்னால் நன்மை பயக்குமே என்று எண்ணினார். அப்படியும் ஒருவன் இருக்கிறானா, அப்போது நம்மாலும் அப்படி வாழ இயலும் என்று தோன்றுவது மக்களின் சாதாரண இயல்புதானே? ஆதலால் நாரதரை அணுகி அவர் வினவும் போது, அவரும் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருந்த இராமனின் வரலாற்றைப் பற்றிச் சொல்வதாக அமைந்துள்ளது இராமாயண காவியம். அதன் முதல் அத்தியாயத்திலேயே நூறு செய்யுட்களில் ராமனின் கதையாக இராமாயணக் காவியம் முழுவதும் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் தொடக்கமே மேலே நாம் கண்ட அந்த பதினாறு குணங்களின் விரிவான பட்டியல்தான்.

இன்று வேண்டுமானால் இராமனை நாம் தெய்வமாகக் கொண்டாடலாம். ஆனால் வால்மீகியின் இராமாயணத்திலோ இராமன் ஒரு சாதாரண மனிதனைப் போல்தான் காட்சி அளிக்கிறார். அதில் அவர் எந்த விதமான அமானுஷ்ய அல்லது தெய்வீக குணாதிசயங்களைக் காட்டவில்லை. ஆக இராமன் மதித்து, நேசித்து, வாழ்ந்த நெறிமுறைகள் அனைத்துமே எந்த மனிதனாலும் எளிதாகக் கடைப்பிடிக்க முடியும். வால்மீகி முனிவர் தந்த இராமனை நாம் எவருமே நம் வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கொள்ள முடியும்.

(தொடரும்)

ஆங்கில மூலம் : எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம் : எஸ். ராமன்



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

2.1 காலம் கனிந்தது

நூறு செய்யுட்களில் நாரதர் சுருக்கமாகச் சொல்லிவிட்டுச் சென்ற இராமாயண நிகழ்ச்சியை, படிப்போர் மனத்தைக் கவர்ந்து அவர்களை நல்வழிக்கு இட்டுச் செல்லும் வண்ணம் ஒரு காவியமாக அளிப்பதற்கான காலம் கனிவதற்கு வால்மீகி முனிவருக்கு வேறு ஒரு நிகழ்ச்சி அமைய வேண்டியிருந்தது. ஓரளவு விவரங்கள் தெரிந்த உடனேயே கவிநயத்தோடும், மக்களை ஆர்வத்தோடு ஈடுபட வைக்கும் எழுச்சி மிக்க உணர்வைத் தூண்டுமாறும் ஒரு காவியம் அமைப்பது என்பது பொழுதுபோக்குடன் கூடிய வெறும் அறிவு மட்டும் சார்ந்த முயற்சி அல்ல. அது தானாகவே உள்ளத்தில் உணர்வு வெள்ளமாகப் பொங்கி, சொல் அலங்காரங்களோடு வெளிவர வேண்டும். வால்மீகி முனிவரின் ஆர்வத்தினாலும், ஆதங்கத்தினாலும் உலகில் வாழ்வாங்கு வாழ்பவனின் குண நலன்கள் தொடர்பாக இராமபிரானின் வாழும் முறை பற்றி தெரிய வந்தது. ஆனாலும் அது மட்டுமே அவருக்கு இராமயணத்தை இயற்றும் அளவுக்கு ஒரு தூண்டுதலாக அமையவில்லை. அவர் உள்ளத்தைத் தொட்டு அது சம்பந்தமான உணர்வுகளை வெளிப்படுத்த வேறொரு நிகழ்ச்சி தேவைப்பட்டது. ஏனென்றால் அந்த சமயத்தில் அவர் உலக விவகாரங்களில் ஈடுபடாத ஒரு துறவியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

ஒரு படைப்பு என்பது உள்ளம்-உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு பௌதிக மற்றும் உயிரியல் கூடிய உருவாக்கம் ஆகும். படைத்த பின்னர் படைத்தவனும், அவனது படைப்பும் வெவ்வேறாகத் தனித்தனியே காணப்பட்டாலும், அந்தப் படைப்பே அதைப் படைத்தவன் பெயரை அவ்விருவரின் வாழ்நாள் மட்டுமன்றி பின்னரும் பறைசாற்றிக் கொண்டிருக்கும். அப்படி அமரத்துவம் பெறுவதனாலேயே, இன்றும் நாம் வால்மீகி முனிவரையே அவரது மற்ற பெருமைகளைவிடவும் அவர் படைப்பான இராமயணத்தினால்தானே நன்கு நினைவில் வைத்திருக்கிறோம்? சிவ-சக்தி என்பது ஒன்றே ஆனாலும், உள்ளார்ந்து இருப்பது சிவ கோணம்; அதுவே வெளியே வந்து பலப்பலவாகத் தோன்றுவது சக்திக் கோணம். ஞானிகள் கண்டுணர்ந்த உண்மை இதுவே. ஆதலால் ஒரு மனித முயற்சிக்கும் அப்பாற்பட்ட காவியம் ஒன்றைப் படைப்பதற்கு எது நடந்தாலென்ன என்றதொரு துறவு மனமற்று, சுற்றுமுற்றும் பார்த்து உள்ளம் கனிந்து உருக வேண்டிய நிகழ்ச்சி ஒன்று தேவைப்பட்டது. அதுவும் வால்மீகி முனிவருக்குத் தானாகவே அமைந்தது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அவர் நாள்தோறும் குளிக்கச் செல்லும் கவின் மிக்க சரயு நதிக் கரையில் அது நேர்ந்தது. காதலாகிக் கசிந்து உருகி ஒரு மரக் கிளையில் குலவிக் கொஞ்சிக் கொண்டிருந்த  இரு கிரௌஞ்சப் பறவைகளைக் குறி பார்த்து ஒரு வேடுவன் அம்பெய்தி ஒன்றைக் கொன்றான். வேடனை எந்தவிதத்திலும் பாதிக்காது, தங்கள் இருப்பிலேயே மெய்மறந்து, தனது உணர்வுகளை மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டு மரத்தின் மீது களித்து இருந்த பறவைகளைத் தனது விருப்பத்திற்காக கொல்ல முயன்ற வேடன் மேல் அவருக்குக் கட்டுக்கடங்காத கோபமும், வெறுப்பும் உண்டாயிற்று. அதனால் அவருக்கு ஏற்பட்ட துயரமே அவரை, அதுவரை வெளிவராத சந்தம் ஒன்றில் கவி நயத்துடன் ஒரு ஸ்லோகம் வழியே தனது உணர்வுகளை வெளிப்படுத்தி, அந்த வேடனைச் சபிக்கும் அளவுக்குக் கொண்டு சென்றது. அந்தச் செய்யுள்தான் இது:

மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ த்வமக³மஸ்²ஸா²ஸ்²வதீஸ்ஸமா​: |
யத்க்ரௌஞ்சமிது²னாதே³கமவதீ⁴​: காமமோஹிதம் || 1.2.15 ||

நிஷாத³ – O! Fowler, ஏ! வேடனே!
த்வம் – you, நீ
யத் for which reason, எதற்காக
க்ரௌஞ்சமிது²னாத் – from the pair of krauncha birds, ஜோடி கிரௌஞ்சப் பறவைகளில்
காமமோஹிதம் – when they were infatuated by love, காதல் களியாட்டத்தின்போது
ஏகம் = one, ஒன்றை
அவதீ⁴: – have killed, கொன்றாய்
(தத் for that reason), அதனால்
ஸா²ஸ்²வதீ: permanently, எப்போதும்
ஸமா: for long years, பல காலமாக
ப்ரதிஷ்டா²ம்ʼ glorious, பெருமையுடன்
மா க³ம: you will never get, உனக்குக் கிட்டாது.

“ஏ! வேடனே! காதலுடன் களித்திருந்த ஒரு ஜோடி கிரௌஞ்சப் பறவைகளைப் பிரித்து, ஒன்றைக் கொன்றப் பாதகச் செயலால் நீ வெகுநாட்கள் வாழமுடியாது போவாய்!”

என்று சபித்தார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இது ஏதோ ஒரு தற்செயலாக நிகழ்ந்தது போலத் தோன்றினாலும், வனத்தில் இராமனுடன் நிம்மதியாக வசித்துக் கொண்டிருந்தபோது,  இராமனைப் பிரிய நேர்ந்த சீதாப் பிராட்டியாரின் கதையைச் சொல்லப்போகும் இராமாயணத்திற்குக் கட்டியம் கூறுவது போல அமைந்திருப்பது எவருக்கும் கண்கூடு.

வேடனை அப்படிச் சபித்தாரே தவிர, தனக்கு எப்படி கவித்தன்மையுடன் அதைச் சொல்ல வந்தது என்பதை யோசித்த வால்மீகி முனிவருக்கே நடந்தது மிக ஆச்சரியமாக இருந்தது. ஆசிரமத்திற்குத் திரும்பிய அவர், நடந்த நிகழ்ச்சியைப் பற்றித் தீவிரமாக யோசிக்கும் வேளையில், படைப்பின் பிறப்பிடமான பிரமன் அவர் முன்னே தோன்றி அவர் முன்பு நாரதரிடம் கேட்டறிந்த இராமாயண நிகழ்வைக் காவியமாகத் தீட்ட வேண்டிய காலம் கனிந்து விட்டதை உணர்த்தினார். அன்று வேடன் முன் தோன்றிய அந்தச் சந்தத்திலேயே வால்மீகியும் இராமாயணத்தை இயற்றினார். இப்படியாக நம் பாரத தேசத்திலேயே முதன் முறையாக கவிநயத்துடன் தோன்றிய முதல் காவியமாக இராமாயணம் உருவாயிற்று. மக்கள் அனைவரிடமும் இரக்கம், தயாளம் மற்றும் நல்லது நடக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன், கவித்துவமும் அவரிடம் புகுந்த போதுதான் வால்மீகிக்கு இராமாயணம் இயற்றுவது சாத்தியமாயிற்று. எதுவும் முறைப்படி நடப்பதற்கு, ஒருவனது உத்வேகம் மட்டுமல்லாது நிகழ்வு நடப்பதற்கான காரண சூழ்நிலை உருவாகும் காலமும் கனிந்து வரவேண்டும்.

2.2 தசரதர் ஆட்சியில்

அயோத்யாவில் தசரதர் ஆட்சி புரியும்போது அவரிடம் ஆலோசனை சொல்லும் அமைச்சர்களும், மற்ற அதிகாரிகளும் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் விதிமுறை வகுத்ததைப் பற்றி வால்மீகி சொல்கிறார். அவையெல்லாம் அன்று மட்டுமல்லாது இன்றும் மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது. எந்த அமைச்சரோ, அதிகாரியோ எவரிடமும் பேசும் போது இன்முகத்துடன் இருக்கவேண்டும்; எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்கள் தயக்கத்துடனோ, உண்மைக்குப் புறம்பாகவோ பேசக் கூடாது. அதிகாரிகள் அரசு விவகாரத்தில் தேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். தங்கள் நண்பர்களின் கருவிகளாக அவர்கள் செயல்படக் கூடாது. அப்படி நண்பர்கள் ஏதேனும் செய்யச் சொல்லியோ, அல்லது ஆலோசனையோ கொடுத்தால் அதன் விவரங்களைத் தீர ஆராய்ந்து பலாபலன்களைத் தெரிந்து கொள்ளவேண்டும். அவர்களிடமோ வேறு எவரிடமோ கோபத்திலோ, அல்லது தனது ஆதாயத்துக்காகவோ எதையும் செய்யக்கூடாது.  குற்றவாளி என எவரேனும் கருதப்பட்டால் அது பற்றித் தீர விசாரணை செய்ய அதற்கான சட்ட திட்டங்களுக்கு அவர்களை உட்படுத்தி, தக்க தண்டனை கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதிகாரத்தில் உள்ள எவரும் குற்றவாளி ஒருவேளை தனது மகன்களே ஆனாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்புவதற்கு உதவக்கூடாது. இவ்வாறாக அவர் கூறுவதுதான் கீழ் வரும் செய்யுட்களில் தெரிகின்றது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கீர்த்திமந்த: ப்ரணிஹிதா: யதா²வசனகாரிண: |
தேஜ: க்ஷமாயஸ²:ப்ராப்தா ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: || 1.7.6||

கீர்த்திமந்த: renowned, கீர்த்தியுடன்
ப்ரணிஹிதா: fixing their attention on their thoughts, எண்ணங்களில் கவனம் செலுத்துவோராக யதா²வசனகாரிண: doing in accordance with word, சொல்வதைச் செய்வோராக
தேஜ:க்ஷமாயஸ²:ப்ராப்தா: possessing splendour forgiveness and fame, அழகும், புகழும், மன்னிக்கும் ஆற்றலும் கூடியோராக
ஸ்மிதபூர்வாபி⁴பா⁴ஷிண: speaking with a smile, இன்முகத்துடன் பேசுவோராக.

க்ரோதா⁴த்காமார்த²ஹேதோர்வா ந ப்³ரூயுரன்ருʼதம்ʼ வச: … || 1.7.7||

க்ரோதா⁴த் either in anger, கோவத்தினாலோ
காமார்த²ஹேதோர்வா or for the reason of pecuniary gains or for desire, பேராசையினாலோ, பணம் சம்பாதிக்கும் நோக்கிலோ
அன்ருʼதம் untruth or unjust, நேர்மைக்கும், நீதிக்கும் புறம்பாகவோ
வச: word, வார்த்தைகளை
ந ப்³ரூயு: do not utter, சொல்லாதவர்கள்.

குஸ²லா வ்யவஹாரேஷு ஸௌஹ்ருʼதே³ஷு பரீக்ஷிதா: |
ப்ராப்தகாலம்ʼ து தே த³ண்ட³ம்ʼ தா⁴ரயேயுஸ்ஸுதேஷ்வபி || 1.7.8||

தே those ministers, அந்த அமைச்சர்கள்
வ்யவஹாரேஷு in their dealings, தங்கள் பொறுப்புகளில்
குஸ²லா: competent, தலை சிறந்தோர்
ஸௌஹ்ருʼதே³ஷு in friendship, நட்பு வட்டாரத்தில்
பரீக்ஷிதா: tested, சரி பார்த்து
ஸுதேஷ்வபி even in the matter of sons, தங்கள் மகன்கள் விஷயத்திலும்
ப்ராப்தகாலம் appropriately, தக்கதொரு
த³ண்ட³ம் punishment, தண்டனை
தா⁴ரயேயு: used to impose, வழங்க வேண்டி.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அவர்களும் அப்படி கண்ணியத்துடனும், கட்டுக்கோப்பாகவும் இருந்தார்கள் என நம்ப இடமிருக்கிறது. அதையெல்லாம் கேட்கும்போது தற்காலத்திய அவல நிலையையும் நினைத்து வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. இன்று அரசில் உள்ள பெரும்பான்மையோர் மக்களிடம் முரட்டுத்தனமாகவும், வாக்குவாதம் செய்பவர்களாகவும், பொய் பேசத் தயங்காதவர்களாகவும், கையூட்டுப் பெறுபவர்களாகவும், உலக மகா லஞ்ச ஊழல் பேர்வழிகளாகவும், தன் சுற்றத்திற்கே நன்மை செய்பவர்களாகவும், குற்றவாளியைத் தப்புவிக்கவிட்டு நிரபராதிகளுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பவர்களாகவும் இருப்பது, அன்றைய மேன்மையான நிலையிலிருந்து ஒரு மோசமான நிலைக்கு எப்படி மாறி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

நம் அனைவருக்கும் ராம ராஜ்ஜியம் வேண்டும் என்ற ஒரு கனவு இருக்கிறது. ராம ராஜ்யத்தில் அதிகாரிகள் மட்டுமல்லாது மக்கள் அனைவருமே ராமரைப் போலவே நீதி, நேர்மையுடன் வாழ்வதால் அரசு என்றோ அரசாங்கம் என்றோ ஒரு அதிகாரத்துடன் கூடிய அமைப்பு கூடத் தேவை இல்லாத நிலை உருவாகும். அப்படிப்பட்ட உன்னத நிலை இல்லாவிட்டாலும், நமக்கு மேலே சொல்லப்பட்ட தசரதரது போன்ற ஒரு ஆட்சியாவது கிடைக்காதா என்ற ஏக்கம்தான் மிஞ்சுகிறது.

2.3 தானம் தருவோனின் மனோநிலை

தசரதருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தபோது, அதற்கேற்ப யாகங்களை அவர் செய்தால் அவருக்கு வாரிசாக சந்ததி உருவாகும் என ஆலோசனை சொல்லப்பட்டது. யாகம் என்றாலே, தனது என்று எதையும் தக்க வைத்துக் கொள்ளாமல், தான, தருமங்கள் பல செய்வதன் மூலமும் அனைத்தையும்  தியாகம் செய்வது என்று பொருள். அதற்கேற்ப அவரும் தன் செல்வங்கள் எல்லாவற்றையும் அள்ளிக் கொடுத்ததும் அல்லாமல், தனது ராஜ்ஜியத்தையும் தானமாகக் கொடுக்கிறார். ஆனால் அதைப் பெற்றவர்களோ, எப்படி ராஜ்ஜியத்தை ஆளுவது என்று அறியாது, நன்கு ஆட்சி செய்து கொண்டிருந்த அவருக்கே அதைத் திருப்பிக் கொடுத்து, அவரையே அரசுக் கட்டிலில் அமர்த்துகின்றனர்.

வாழ்க்கை என்றாலே மற்றோருக்கு அளித்து, தானும் மற்றவரிடம் இருந்து பெறல் என்றுதான் ஆகிறது. அதுவே எல்லோரும் எல்லோரையும் சார்ந்து இருப்பது என்றும் சொல்லலாம். சில சமயம் நாம் நமது ஆசைக்காகக் கொடுக்காவிட்டாலும், நமது முன்னோர் செய்துகாட்டிய வழக்கத்தை விடாது காக்கும் போதும் தான தர்மங்கள் செய்கிறோம். அப்படிப்பட்ட சமயத்தில் நமக்கு கொடுப்பதற்கு ஆசை இல்லாது போகலாம். அது மாதிரியான தருணங்களில், அரசு அலுவல்களின் ஒரு பகுதியாக தானம் செய்யவேண்டிய அதிகாரிகளுக்கு, தசரதரின் ஆஸ்தான குருவாகிய வசிஷ்ட மகாமுனிவர் அவர்கள் எத்தகைய மனப்பான்மையுடன் தானம் அளிக்கவேண்டும் என்று இப்படிக் கூறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

தத:ப்ரீதோ த்³விஜஸ்²ரேஷ்ட²ஸ்தான் ஸர்வானித³மப்³ரவீத் |
அவஜ்ஞயா ந தா³தவ்யம்ʼ கஸ்யசில்லீலயா(அ)பி வா|| 1.13.30||
அவஜ்ஞயா க்ருʼதம்ʼ ஹன்யாத்³தா³தாரம்ʼ நாத்ர ஸம்ʼஸ²ய:|

தத: then, அப்போது
ப்ரீத: pleased, திருப்திப்பட்டு
த்³விஜஸ்²ரேஷ்ட²​: best among brahmins, அந்தண சீலரான (வசிஷ்டர்)
தான் ஸர்வான் addressing all of them, அவர்களைப் பார்த்து
இத³ம் these words, இந்த வார்த்தைகளை
அப்³ரவீத் said, சொன்னார்
கஸ்ய சித் to any one, எவருக்கும்
அவஜ்ஞயா with insult, அவமரியாதையுடன்
லீலயாபி வா or casually, ஏனோ தானோ என்று
ந தா³தவ்யம் should not be gifted, அளிக்கப்படக் கூடாது
அவஜ்ஞயா with contempt, வெறுப்புடன்
க்ருʼதம் done, செய்தல்
தா³தாரம் donor, கொடுப்பவனுக்கு
ஹன்யாத் destroys, அழிவு தரும்
அத்ர in this aspect, இது பற்றி
ஸம்ʼஸ²ய: ந no doubt, ஐயம் வேண்டாம்.

தானம் அளிக்கும்போது தானம் பெறுபவரை அவமதிக்கும்படியோ, அல்லது அதை ஒரு தமாஷாகவோ செய்யக்கூடாது. அப்படி வேண்டா வெறுப்பாகச்  செய்யும் எவனுக்கும் தானத்தினால் வரும் நன்மை கிடைக்காது; மாறாக அவனுக்கு நிச்சயமாக அது அழிவு தரும்.

தானம் அளிப்போரும், தானம் பெறுவோரும் உண்மையில் பாக்கியம் செய்தவர்கள் ஆவார்கள். ஆதலால் ஒன்றைக் கொடுக்கும்போது ஆத்மார்த்தமான மனநிறைவுடன் ஒருவன் வழங்குதல் அவசியம். தானம் பெறுபவனை எவ்விதத்திலும் அவமதிக்கக்கூடாது. தைத்திரீய உபநிடதமும் இவ்வாறு கூறுகிறது: “ஸ்ரத்தயா தேயம், அஸ்ரத்தயா அதேயம்”. அதாவது கொடுக்கும்போது, அதைப்  பெறுபவனுக்கு மரியாதை தரும் வண்ணம் சிரத்தையுடன் கொடு, அசிரத்தையுடன் ஏனோ தானோ என்றெண்ணிக் கொண்டு கொடுக்காதே.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

3.1 ஆள்பவன் மக்களின் காவலன்

புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாய் தசரதருக்கு இராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் என்று நான்கு மகன்கள் பிறக்கின்றனர். அவர்கள் அஸ்திர, சஸ்திர கலைகள் எல்லாம் கற்று நன்கு வளர்ந்து வரும் வேளையில், ஒரு நாள் வனத்தில் தவம் செய்துவரும் விச்வாமித்திர மகரிஷிகள் தனது தவம் மற்றும் யக்ஞத்திற்கு இடையூறு செய்து வரும் அரக்கர்களின் கொட்டத்தை அழிக்க ஏதுவாய் தசரதரின் உதவியை நாடி வந்தார். அவரும் இராமன், லக்ஷ்மணன் இருவரையும் அவருடன் அனுப்பி வைத்தார். அவர்கள் போகும் வழியிலேயே தாடகை என்னும் கொடிய, எவராலும் அடக்கமுடியாத அரக்கி அவர்களைத் தாக்க வந்தாள். அவளது அட்டகாசம் அங்கு தாங்க முடியாமல் இருந்ததால், அவளைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்று விச்வாமித்திரர் கூற, ராம-லக்ஷ்மணர்கள் அவளிடம் போர் புரிந்து அவளைக் கொன்றுவிடுகின்றனர்.

சாதாரணமாக, பெண்மணியைக் கொல்வது ஒரு பாவச் செயல். தாடகை பெண் என்பதால், அவளைக் கொல்வதும் பாவச் செயல் என்றுதானே ஆகிறது. இங்குதான் நீதி, நேர்மை என்பதைப் பற்றிச் சொல்லும்போது, மக்களுக்குச் சொல்லப்படும் நீதி வேறு, ஆள்பவர்க்குச் சொல்லப்படும் ராஜ நீதி வேறு என்று  புரிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாகக் கொல்வது என்பது பாவம் என்றாலும், ஒரு அரசனுக்கு மக்கள் அனைவரையும் காக்கும் கடமை இருக்கிறது. அதனால் ஒரு ஆட்சி மக்களைக் காக்கும் வண்ணம் அமையவேண்டும்; மக்களைத் தாக்கும் வண்ணம் இருக்கக் கூடாது, மாறாக மக்களைத் தாக்குபவர்களைத் தாக்கும் வண்ணம் செயல் புரியவேண்டும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.

ந்ருʼஸ²ம்ʼஸமன்ருʼஸ²ம்ʼஸம்ʼ வா ப்ரஜாரக்ஷணகாரணாத்|
பாதகம்ʼ வா ஸதோ³ஷம்ʼ வா கர்தவ்யம்ʼ ரக்ஷதா ஸதா|| 1.25.17||

ரக்ஷதா while protecting, காக்கும் போது
ஸதா by a virtuous man, நற்குணங்கள் கொண்டவனால்
ப்ரஜாரக்ஷணகாரணாத் for the welfare of the subjects, மக்களின் நலனுக்காக ந்ருʼஸ²ம்ʼஸம்ʼ வா either cruel, கொடூரமானதோ
அன்ருʼஸ²ம்ʼஸம்ʼ வா or not cruel, கொடூரமற்றதோ
பாதகம்ʼ வா or a sin, அல்லது பாவச் செயலோ
ஸதோ³ஷம்ʼ வா or involving a mistake, அல்லது தவறானதோ
கர்தவ்யம் should be done, செய்யவேண்டும்.

மக்களைக் காக்கும் பணியில், சாதாரணமாகக் கருதப்படும் தவிர்க்கப்பட வேண்டிய செயல், அல்லது கொடூரமான, மனிதாபிமானமற்ற செயல் என்றாலும் அரசு அதைச் செய்யவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அரசு அப்படி கொடூரமாகத் தண்டனை வழங்கும்போது, அது தனது காக்கும் கடமையைத்தான் செய்கிறதே தவிர, ஒரு பாவச் செயலை அல்ல. அது நல்ல செயல் அல்ல என்று நினைத்து, அப்படிச் செய்வதற்குத் தயங்கி அந்தச் செயலைத் தவிர்ப்பது கூடாது.

3.2 பொறுமை என்னும் நகை

ராம-லக்ஷ்மணர்களை அழைத்துக்கொண்டு விஸ்வாமித்திரர் தன் தவச்சாலைக்குச் செல்லும் வழியில், தன் முன்னோர்களின் வரலாற்றைச்  சொல்லிக்கொண்டே போகிறார். அவரது தந்தை பெயர் கதா என்றும், பாட்டனார் பெயர் குஷானபா என்றும் சொல்லி, குஷானபாவிற்கு நிறைய மகள்கள் இருந்தனர் என்றும் சொல்கிறார்.

அந்தப் பெண்களின் அழகில் மயங்கி, வாயு பகவான் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்கிறான். அவர்கள் வாயுவின் வேண்டுகோளை மறுத்து, தங்கள் தந்தை எவரைக் கல்யாணம் செய்துகொள்ளச் சொல்கிறார்களோ அவர்களைத்தான் மணப்போம் என்று கூறுகின்றனர். அதைக்கேட்டு வாயு மிக்க கோபமுற்று அவர்களைக் குரூரமாக்கி, கூனிகளாயும் ஆக்கிவிட, அவர்கள் நடந்த உண்மையை தங்கள் தந்தையிடம் சொல்கின்றனர். குஷானபா ஒரு அறிவு மிக்க அரசன். வாயுவிடம் சண்டையோ, சச்சரவோ போட்டுப் பயனில்லை என்று உணர்ந்து தன் மக்களை பொறுமையாக இருக்கச் சொல்கிறான். பின்னர் அவன் ஒரு முனிவர் மகனான பிரம்மதத்தன் என்பவனுக்கு அவர்களை மணம் செய்து கொடுத்துவிடுகிறான். திருமணத்தின்போது அவனது கையை அவர்கள் பிடிக்கும்போது, அதிசயமாக அவர்கள் அனைவரின் அழகும் திரும்பி, கூனலும் மறைகிறது. பொறுமையைக் கடைப்பிடியுங்கள் என்று அரசன் தன் மக்களுக்குக் கூறும் சுலோகம் இது:

அலங்காரோ ஹி நாரீணாம்ʼ க்ஷமா து புருஷஸ்ய வா|
து³ஷ்கரம்ʼ தச்ச யத் க்ஷாந்தம்ʼ த்ரித³ஸே²ஷு விஸே²ஷத:|| 1.33.7||

நாரீணாம் for women, பெண்ணுக்கோ
புருஷஸ்ய வா or for men, ஆணுக்கோ
க்ஷமா forbearance, பொறுமை
அலங்காரோ ஹி is an ornament, ஒரு நகை
க்ஷாந்தம் இதி யத் which act of forgiving, மன்னித்தல் எனும் காரியம்
தத் து³ஷ்கரம் that one is difficult, அது கடினமானது
த்ரித³ஸே²ஷு even for gods, கடவுளுக்குக் கூட
விஸே²ஷத: especially difficult, மிகக் கடினமானது.

ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ  பொறுமை என்பது நகைபோல அமைந்து அவர்களின் அழகைக் கூட்டிக் காட்டும். ஆனாலும் மன்னித்தல் என்பது எவருக்குமே கடினமான ஒரு காரியம்; கடவுளுக்குக் கூட அது மிகக்  கடினமானதாக இருக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அநியாயமாக ஒருவன் அவதிப்பட நேர்ந்தால், ஆத்திரம் வருவதும் இயற்கையே; அதுபோல அதிலிருந்து உடனே அவன் நிவர்த்தியும் தேடுவான். அப்போது அவன் பொறுமை இழந்து தவறான வழியில் சென்று மேலும் துயரங்களை வரவழைத்துக் கொள்வான். ஆதலால் அவன் பொறுமையைக் கடைப்பிடித்து, அமைதியாகவும், பின்விளைவுகளை யோசித்தும் தான் செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபட்டால் அவனுக்கு வேண்டிய நல்ல தீர்வும் கிடைக்கும்.

3.3 விழிமின்! எழுமின்!!

ராம-லக்ஷ்மணர்கள் இளவரசர்களாக மாளிகையில் சுகபோகத்துடன் வசித்தவர்கள். அதனால் அவர்கள் உல்லாசமாகவும், எந்தவித இன்னல்கள் தெரியாதவர்களாகவும்  வாழ்ந்துகொண்டு  இருந்தவர்கள். அவர்கள் பின்பு வரப்போகும் வாழ்க்கையின் இன்னல்களைப் பற்றி அறியாதவர்களாக இருந்தனர். காட்டின் உள்ளே தான் இருந்த பர்ணசாலைக்கு விஸ்வாமித்திரர் அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார். அப்படிச் செல்லும்போது அவர்கள் கல்லிலும், முள்ளிலும் நடந்து செல்லவேண்டி இருந்தது; வழியில் கிடைக்கும் காய், கனிகள் மட்டுமே அவர்களின் உணவாக இருந்தது; மற்றும் உறங்குவதற்கோ கட்டாந்தரையே  கட்டிலாகவும், வான்வெளியே போர்வையாகவும் இருந்தன. இப்படியாக அவர்களுக்கு வரப்போகும் வாழ்க்கை முறைக்கு அவர்களை முனிவர் தயார் பண்ணிக்கொண்டிருந்தார். காலை புலர்ந்ததும் அவர்களை முனிவர் இப்படியாக எழுப்புவார்:

கௌஸல்யா ஸுப்ரஜா ராம! பூர்வா சந்த்⁴யா ப்ரவர்த்ததே |
உத்திஷ்ட² நரஸா²ர்தூல கர்த்தவ்யம் தை³வமாஹ்நிகம் ||

(ஆம், இது அனைவரும் அறிந்த வெங்கடேச சுப்ரபாதத்தில் வரும் தொடக்க வரிகள்தான். ஆனால், எத்தனை பேருக்கு இது வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்லோகம் என்று தெரிந்திருக்குமோ?)

கௌஸல்யா ஸுப்ரஜா: O! Beloved son of Kausalya, (a son by whom Kausalya became a blessed mother), கௌசல்யாவின்செல்ல மகனான (ஒரு மகனால் ஆசீர்வதிக்கப்பட்ட கௌசல்யாவின்)
ராம O!Rama, ராமனே!
பூர்வா ஸந்த்⁴யா the day-break, வைகறைப் பொழுது
ப்ரவர்ததே is commencing, புலர்ந்து விட்டது
நரஸா²ர்தூ³ல O!Best among men, புருஷோத்தமனே
உத்திஷ்ட² awake (fromsleep), உறக்கத்திலிருந்து எழு
தை³வம் oblations to gods, தெய்வத்திற்குச் செய்யவேண்டிய
ஆஹ்னிகம் religious rite to be performed every day at a fixed hour, நித்ய கர்மானுஷ்டானங்கள்
கர்தவ்யம் are required to be done, செய்யப்படவேண்டி காத்திருக்கின்றன.

கௌசல்யையின் செல்ல மகனே! வைகறைப் பொழுது புலர்ந்து விட்டது. புருஷர்களில் உத்தமனே! விழித்துக் கொள். இன்று நீ ஆற்ற வேண்டிய தெய்வீகக் கடமைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஆனந்தம் என்பது படுக்கையில் சோம்பேறித்தனமாகப் படுத்துக் கொண்டிருப்பதில் இல்லை; அது நாம் தினப்படி செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் இறைவனுக்கு ஆற்றுவதாக எண்ணிக்கொண்டு செய்வதில்தான் இருக்கிறது. ஆதலால் ஒருவன் காலையில் எழும்போதே தனது கடமைகள் அனைத்தையும் உணரவைக்கவும், அவைகளைச் செவ்வனே ஆற்றவைக்கவும் இறைவனை வேண்டிக்கொள்ளவேண்டும். வாழ்வில் துன்பங்களும், இடையூறுகளும் கூட இறைவனின் தயவால் வருபவைதான். அவைகளே ஒருவனை வாழ்வில் போராடவைத்து உயர்த்தி வைக்கும், தூய்மைப்படுத்தும். இராமரும் அப்படித்தான் பிரச்சினைகளைச் சந்தித்து எதிர்கொண்டார். இந்த ஸ்லோகத்தின் மூலம் வரும் அறிவுரை, இராமனை எழுப்புவதல்லாமல் நம் அனைவரையுமே தட்டி எழுப்பி,  உறக்கத்திலிருந்து விடுவித்து தம்தம் செயல்களில் ஈடுபடவைக்க உதவுவது என்றே கொள்ளவேண்டும். அப்படிக் கொண்டால் அந்த ஸ்லோகத்தைக் காலையில் மட்டும்தான் சொல்லவேண்டும் என்பதில்லை; நம்மை இறைவன் காக்க வேண்டி ஸ்லோகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.

உபநிடத வாக்கியமான “உத்திஷ்டத ஜாக்ரத ப்ரப்யா வரன் நிபோததா” கூறுவதின் பொருளும், சுவாமி விவேகானந்தர் அடிக்கடி குறிப்பிடும் “எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும்வரை விடாது முயன்றிரு” என்பதுதானே.

3.4 உலகே மாயம்

விஸ்வாமித்திரரின் லீலைகளைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கிய சம்பவம் ஒன்றுண்டு.  இஷ்வாகு பரம்பரையில் த்ரிசங்கு என்றொரு அரசன் இருந்தான். நற்பண்பு மற்றும் நல்லொழுக்கத்துடன் கூடிய நல்ல அரசனாக அவன் ஆண்டுகொண்டு இருந்தான். அரசனாகத் தான் பணியாற்றிய நல்ல செயல்கள் எல்லாமும் தன்னை சுவர்க்க லோகத்திற்கு இட்டுச் செல்லும் என்றும், அதையும் தான் இறந்தபின் அல்லாது, உயிருடன் இருக்கும்போதே அடையவேண்டும் என்றும் அவன் அளவுக்கதிகமாக விரும்பினான். அப்படி சுவர்கத்தை அடைய தனது குருவாகிய வசிஷ்ட முனிவரின் உதவியை நாடினான். வசிஷ்டரோ எவனும் உயிருடன் இருக்கும்போதே தனது உடலுடன் சுவர்கத்தை அடையமுடியாது என்று கூற, அதை அவன் ஏற்க மனமில்லாது வசிஷ்டரின் புதல்வர்களை நாடினான். அவர்களும் தங்கள் தந்தை கூறியவாறே சொல்ல, அவனோ தாங்கள் எவருக்கும்   அப்படிச் செய்ய மனமில்லையோ அல்லது முடியவில்லையோ என அகம்பாவத்துடன் கூறி, எவர்களால் அது முடியுமோ அவர்களிடம் செல்கிறேன் என்று அவமதிக்கும்படியாகவும் சொன்னான். அந்த பொறுப்பற்ற வார்த்தைகளைத் தாங்க முடியாத அவர்களும் அவனை ஒரு காட்டுவாசியாகப் போய்விடுவாய் எனச் சாபமிட்டனர். அதேபோல் அவன் காட்டுவாசியாக உடனே மாற, நடந்ததை எதிர்பாராத த்ரிசங்கு வெறுத்துப்போய் விச்வாமித்திர ரிஷியிடம் தஞ்சம் புகுந்து அவரிடம் நடந்ததைச் சொன்னான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 


விஸ்வாமித்திரரும் அவனிடம் இரக்கப்பட்டு, காட்டுவாசியாய் இருக்கும் அவனது உடலுடனேயே அவன் ஸ்வர்கத்தை அடைவதற்கு அவர் உதவுவதாகச் சொன்னார். சொன்னபடியே அவரும் திரிசங்கு தன் உடலுடன் மேலுலகம் செல்வதற்காக, அதற்குண்டான தேவர்களைப் ப்ரீத்தி செய்யும் யாக, யக்ஞங்களைச் செய்தும், அந்தப் பொறுப்பில் உள்ள தேவர்கள் உடலுடன் செல்ல அனுமதி தருவதற்கு மறுத்துவிட்டனர். ஆனாலும் அவன் அவரால் மேலுலகம் அனுப்பப்பட அவர்கள் அவனை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டனர். விஸ்வாமித்திரர் கோபப்பட்டு தனது யோக சக்தியால் திரிசங்குவிற்காக என்று தனியே இன்னுமொரு ஸ்வர்கத்தைத் தயார் செய்து, கீழே விழும் அவனைத் தடுத்து அங்கே இருக்கச் செய்தார். அந்தப் புது ஸ்வர்கமோ தலை கீழானதாக அமைந்திருந்தது. அந்த இடத்தை அவர் மேலும் விரிவாக்கும் வேலையில் ஈடுபட்டபோது, தேவர்கள் அவரிடம் வந்து மானிடர்கள் உடலுடன் மேலுலகம் வருவது இறைவனின் நியதிப்படி சரியில்லை என்றும், அவர் மேற்கொண்டு அந்தப் பணியில் ஈடுபடாது அதை உடனே நிறுத்தவும் வேண்டினர். அவரும் அவர்களின் வேண்டுகோளைப் புரிந்துகொண்டு அந்தப் பணியை நிறுத்தினாலும், திரிசங்குவை அவருக்காக ஏற்படுத்திய ஸ்வர்கத்திலேயே விட்டுவிட்டார். இன்றும் அவன் அங்கு இருப்பதாகத்தான் ஐதீகம்.

மனித முயற்சிக்கு அப்பால் உள்ளவைகளுக்கு திரிசங்கு ஆசைப்பட்டான். அதனால் இறைவனின் நியதிக்கு எதிராக அவன் செயல்பட்டான். அப்படி அவன் செய்ததன் வீணான வேலையை நொந்து அப்போது அவன் சொன்னது:

தை³வமேவ பரம்ʼ மன்யே பௌருஷம்ʼ து நிரர்த²கம்|| 1.58.22||
தை³வேனாக்ரம்யதே ஸர்வம்ʼ தை³வம்ʼ ஹி பரமா க³தி:|

தை³வமேவ destiny alone, தெய்வ நியதி ஒன்றே
பரம் is all-powerful, முடிவான ஒன்று
மன்யே I am thinking, எனக்குத் தெரிந்தவரை
பௌருஷம் து the effort of a man, மனித முயற்சி
நிரர்த²கம் is in vain, வீணானது
ஸர்வம் everything, எல்லாமே
தை³வேன by destiny,
ஆக்ரம்யதே is occupied,
தை³வம் destiny, விதி
பரமா supreme, முடிவானது
க³தி: ஹி way indeed, சரியான வழி

இறைவனது ஆளுமையின் முன் மனிதனின் முயற்சி வெல்லமுடியாது. ஆதலால் இறைவனின் வழியைப் பின்பற்றிச் செல்வதே அறிவார்ந்த செயல். அது ஒன்றே சரியான வழி.

இறைவனின் நியதிப்படி செல்லாது அதனை எதிர்த்துத் தன் வழியே செல்ல முயன்ற திரிசங்கு தனக்கு மேலும் துன்பங்களை வரவழைத்துக் கொண்டான். நம்மால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செவ்வனே செய்வது ஒன்றே அறிவுடையவன் செயலாகும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

3.5 மனைவி ஒரு தோழி

அரக்கர்களுக்கு எதிராக விஸ்வாமித்திரரின் யாகங்களுக்கு உதவி செய்துவிட்டு ராம-லக்ஷ்மணர்கள் அவருடன் ஜனக மகாராஜாவின் நாடு வழியே திரும்பி வந்தனர். அப்போது தனது மகளான சீதைக்கு அவர் சுயம்வரம் நடத்திக் கொண்டிருந்தார். அதில் எவர் தன்னிடம் உள்ள பரசுராமர் தந்த முன்பு சிவபெருமானிடம் இருந்த வில்லுக்கு நாண் ஏற்றித் தனது வீரத்தை நிரூபிக்கிறார்களோ, அவருக்கே தன் மகளை மணம் செய்துகொடுப்பதாக ஒரு ஏற்பாடு செய்திருந்தார். சுயம்வரத்திற்கு வந்த பல இளவரசர்களும் முயற்சி செய்துவிட்டு தோல்வியையே அடைந்தனர். விஸ்வாமித்திரர் அனுமதி தந்ததால் இராமன் வில்லை எடுத்து நாண் ஏற்றும்போது, அந்த வில்லே இரண்டாக முறிந்துவிட்டது. அதைப் பார்த்த ஜனகர் சீதைக்கு இராமனே தகுதி வாய்ந்த கணவன் என அறிவித்து, அவர்களுக்கு விஸ்வாமித்திரர் முன்னிலையில் திருமணமும் செய்துவைத்தார்.

திருமணம் செய்து வைக்கும்போது தனது பெண்ணை அவனது மனைவியாக ஏற்றுக்கொள்ளும்படி மந்திரங்களுடன் இராமனிடம் கீழ்க்கண்டபடி, ஒரு பெண் தனது கணவனை எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லி, தாரை வார்த்துக் கொடுக்கிறார்.

இயம்ʼ ஸீதா மம ஸுதா ஸஹத⁴ர்மசரீ தவ|
ப்ரதீச்ச² சைனாம்ʼ ப⁴த்³ரம்ʼ தே பாணிம்ʼ க்³ருʼஹ்ணீஷ்வ பாணினா|| 1.73.27||

மம my, எனது
ஸுதா daughter, மகள்
தவ your, உனது
ஸஹத⁴ர்மசரீ with you observing righteous deeds, உன்னுடன் தர்மகாரியங்களைச் செய்ய
ஸீதா Sita, சீதை
இயம் this girl, இந்தப் பெண்
ஏனாம் her, அவளை
ப்ரதீச்ச² ச accept, ஏற்றுக்கொள்
தே ப⁴த்³ரம் prosperity to you, உனக்கு மங்களம் உண்டாக
பாணிம் her hand, அவளது கைகளை
பாணினா with your hand, உனது கைகளால்
க்³ருʼஹ்ணீஷ்வ hold, பற்றிக்கொள்.

எனது மகளான இந்த சீதை உனது தர்மகாரியங்கள் மேலும் நன்கு தொடர உறுதுணையாய் இருப்பாள். மங்களமே உங்களுக்கு உண்டாகட்டும். அவள் கையைப் பிடித்து ஏற்றுக்கொள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

பதிவ்ரதா மஹாபா⁴கா³ சா²யேவானுக³தா ஸதா³|
இத்யுக்த்வா ப்ராக்ஷிபத்³ராஜா மந்த்ரபூதம்ʼ ஜலம்ʼ ததா³|| 1.73.28||

மஹாபா⁴கா³ highly fortunate, பாக்கியசாலியான
பதிவ்ரதா devoted, faithful and loyal wife, பக்தி, நேர்மை, நன்றியுடன் கூடிய மனைவி
ஸதா³ always, எப்பொழுதும்
சா²யா இவ like shadow, நிழலைப்போல
அனுக³தா follows, தொடர்வது
இதி thus, இப்படியாக
உக்த்வா having spoken, சொல்லிவிட்டு
ராஜா king, அரசன்
ததா³ then, அப்போது
மந்த்ரபூதம் sanctified with mantra, மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட
ஜலம் water, நீரால்
ப்ராக்ஷிபத் released, வார்த்தார்.

பக்தியுடனும், நன்றியுடனும், நேர்மையுடனும் உன்னுடன் வாழப்போகும் இந்தப் பாக்கியசாலியான சீதா உன்னை எப்போதும் நிழல்போலத் தொடரட்டும், என்றிவ்வாறு மந்திரங்களுடன் சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அல்லவா? வால்மீகியின் இலக்கணப்படி ஒரு நல்ல மனைவி என்பவள் கணவனுக்கு இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் கலந்துகொண்டு, எப்போதும் உறுதுணையாக இருந்து தோள் கொடுக்கும் ஒரு நல்ல தோழியாவாள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 4

April 29, 2012

ஆங்கில மூலம்: எஸ். லக்ஷ்மிநாராயணன்
தமிழாக்கம்: எஸ். ராமன்

முந்தைய பகுதிகள்

4.1 மனம் ஒரு குரங்கு

தசரத மகாராஜா தனக்குப் பிறகு அரசாட்சி செய்ய தனது மூத்த மகன் இராமனை வாரிசாக அங்கீகரித்து பட்டம் சூட்டிவிட, அயோத்யா மக்களின் பொதுக்குழு ஒன்று கூட்டி, கலந்தாலோசித்தார். தாம் அதிக நாட்கள் வாழமாட்டோமோ என்ற சந்தேகமும் தசரதருக்கு வரவே, அவர் அந்த முடிவில் சற்று அவசரம் காட்டினார். அவரது மற்ற இரண்டு மகன்களான பரதனும், சத்ருக்குனனும் அச்சமயம் அயோத்தியில் இல்லை. அவர்கள் பரதனுடைய தாய் மாமனின் அழைப்பின் பேரில் கேகய நாட்டிற்குச் சென்றிருந்தனர். தசரதரோ கேகய நாட்டு அரசனுக்கு பட்டம் சூட்டுதல் தொடர்பான முக்கியமான கூட்டத்திற்கு அழைப்பும் அனுப்பவில்லை; ஒரு தகவலும் சொல்லி அனுப்பவில்லை. ஒன்று ராமனே பட்டத்திற்குரிய இளையராஜா என்பதால் அதை வரவேற்பார்கள் என்றும், மேலும் தூர தேசமான கேகய நாட்டிற்குத் தகவல் சொல்லி அனுப்புவதால் காலதாமதம்தான் ஆகும் என்றுமாக இரண்டு நொண்டி சாக்குகள் அவருக்கு இருந்தன.

ஒரு அரசனுக்கு பல மகன்கள் இருந்தால், அடுத்து ஆளப்போவது யார் என்பதில் அவர்களிடையே சண்டை, சச்சரவு சாதாரணமாக வருவதுதான். ராமன்தான் ஆளப்போவது என்று அறிவித்துவிட்டால், பரதன் ஆட்சிக்குப் போட்டி போடமாட்டான் என்று தசரதர் திடமாக நம்பினார். என்னதான் நல்லவன், மனதில் திடமானவன் என்றாலும் சில சமயம் அவர்களுக்கே சபலமும் வந்து மனமும் மாறக்கூடும் என்று தசரதருக்கு ஒரு பயமும் இருந்தது. ஆதலால் பரதன் என்ன செய்யக்கூடும் என்பதில் தசரதருக்குக் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. அதனால் பட்டாபிஷேக விழாவை அவசரம் அவசரமாக அறிவித்து, ராமனை மறுநாளே விழாவிற்குத் தயாராக இருக்குமாறும் சொன்னார்.

பரதனுக்கோ தன் அண்ணனாகிய இராமன் மேல் அன்பும், மரியாதையும் மிகுதியாகவே இருந்தது. மேலும் அவன் நியாய-அநியாங்களைப் பற்றி நன்றாகவே தெரிந்திருந்ததும் அல்லாமல், நல்ல பண்பு, ஒழுக்கம் உடையவனாகவும் இருந்தான். அதெல்லாம் தசரதருக்கு நன்கு தெரிந்திருந்தும், ஒருவனுக்கு ஆசை என்று வந்துவிட்டால் அவன் எப்படி இருப்பான் என்பதை முன்கூட்டியே சொல்லமுடியாது என்பதும் அவரது எண்ணமாக இருந்தது. புகழ் மிக்க நல்ல குணவான்களே கடைசி நிமிடத்தில் மனம் மாறி பாதை தடுமாறி தவறாகச் சென்றிருக்கிறார்கள் என்பதையும் அவர் அறிவார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

கிந்து சித்தம்ʼ மனுஷ்யாணாமனித்யமிதி மே மதி:|
ஸதாம்ʼ ச த⁴ர்மனித்யானாம்ʼ க்ருʼதஸோ²பி⁴ ச ராக⁴வ!|| 2.4.27||

கிந்து yet, இருந்தாலும்
த⁴ர்மனித்யானாம் those fixed in righteousness, தர்ம சிந்தனையுள்ள
ஸதாம்ʼ ச virtuous people, நற்குணம் மிகுதியான
மனுஷ்யாணாம் men(அ)s, மனிதர்கள்
க்ருʼதஸோ²பி⁴ made propitious, (இடம், காலம், மற்றும்) தேவைக்கேற்றபடி
சித்தம் mind, மனம்
அனித்யம் இதி is fickle, நிலையில்லாதது
மே my, என்
மதி​: my opinion, எண்ணம்.

இருந்தாலும் தர்ம சிந்தனை மிக்கவும், பண்பு, ஒழுக்கம் மிக்கவும் உள்ள மனிதர்களின் மனம்கூட இடம், காலம், தேவைக்கேற்ப நிலையில்லாத வண்ணம் மாறலாம் என்பதே எனது எண்ணம். அதற்கேற்றபடி அவர்கள் தங்கள் ஆசைக்குப் பணியக்கூடும்.

ஒருவன் ஒரு சமயத்தில் நல்லவனாக நடக்கிறான் என்பதால், அவனுக்குச் சாதகமாக வாய்ப்புகள் வந்து அவனும் அதில் மயங்கிவிட்டால், அவன் நல்லவனாகத்தான் தொடர்ந்து நடப்பான் என்று சொல்லமுடியாது. பழைய கால நடவடிக்கைகளைக் கொண்டு ஒருவனை எடைபோடுதல் பல சமயம் தவறுதலாகப் போயிருக்கிறது. ஆதலால் நேர்மையான வழியில் ஒரு நல்லவன் செல்வான் என்பது பூவா-தலையா ஆட்டத்தின் முடிவு போன்றதுதான். எதிர்பாராமல் அவன் தவறான வழியில் செல்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அனைவரும் உணரவேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

4.2 வெள்ளம் வடிந்தபின் பாலமா?

கூனி எனச் சிறுவர்களால் கேலியாக அழைக்கப்படும் மந்தரா, கைகேயியின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவள். மறுநாளே ராமனுக்கு மணிசூட்டு விழா என்று அவளுக்குத் தெரிந்த உடனேயே அவள் கைகேயியிடம் போய் அந்தச் செய்தியைச் சொல்கிறாள். ராமனைத் தனது மகனாகவே கருதிய கைகேயிக்கு அது தெரிய வந்ததும் அவள் மனமகிழ்ந்து மந்தராவுக்கு பல வெகுமதிகள் கொடுக்கிறாள். ஆனால் மந்தராவுக்கோ ராமனின் பட்டாபிஷேகம் நடந்தால், அதன் பலாபலன்களைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் கைகேயி இருக்கிறாளே என்று அதிர்ச்சி அடைகிறாள். முடிசூட்டப்படுவதால் ராமனின் அன்னையான கௌசல்யாவுக்கு மகாராணி என்கிற அந்தஸ்து கிடைத்து, அதனால் கைகேயி கீழ்நிலைக்குத் தள்ளப்படுவாளே என்று நினைக்கிறாள். மாறாக பரதனுக்கு மணிசூட்டு விழா நடந்து, அவனே ஆள்வதற்கும் தகுதி வந்தால், கைகேயி மகாராணி ஆகலாமே என்றும் நினைக்கிறாள். ஆதலால் கைகேயிக்கு தசரதன் எப்போதோ முன்பு கொடுத்த இரண்டு வரங்களை ஞாபகப்படுத்தி, ராமனுக்குப் பதிலாக பரதன் ஆட்சிக்கு வருவதற்கு யோசனை சொல்கிறாள். அன்று இரவே தசரதனைப் பார்த்து அதைக் கேட்டு அவரை நிர்பந்தப்படுத்தாமல் விட்டுவிட்டால் நிலைமை அவளுக்குச் சாதகமாக இருக்காது என்று சொல்லி, கீழ்க்கண்டவாறும் சொல்கிறாள்.

க³தோத³கே ஸேதுப³ந்தோ⁴ ந கல்யாணி! விதீ⁴யதே|
உத்திஷ்ட² குரு கல்யாணி! ராஜானமனுத³ர்ஸ²ய|| 2.9.54||

கல்யாணி O fortunate one, பாக்கியவதியே!
க³தோத³கே after the water has flown out, வெள்ளம் வடிந்தபின்
ஸேதுப³ந்த⁴: construction of a bridge, பாலம் கட்டுவது
ந விதீ⁴யதே not undertaken, செய்வதில்லை
உத்திஷ்ட² you may arise, எழுந்திரு
கல்யாணம் auspicious act, நல்ல காரியத்தை
குரு perform, செய்
ராஜானம் (to the) king, அரசனிடம்
அனுத³ர்ஸ²ய show(such act) காட்டு.

எனதருமை கைகேயியே! வெள்ளம் வடிந்தபின் பாலம் கட்டுவது வேண்டாத காரியம்; அதனால், சொல்லவேண்டிய செய்தியை கூடிய சீக்கிரம் அரசனிடம் சொல்லி நடக்க வேண்டிய நல்லதைச் செய்.

இதைப் போலவே வெள்ளம் வந்தபின் அணை கட்டுவதா என்றும் சொல்வார்கள். இதையெல்லாம் படித்தால், ஆங்கிலத்தில் உள்ள “closing the gate after the horse has bolted” என்றதொரு வழக்குச் சொற்றொடர் ஞாபகம் வருகிறதோ? ஆம், மந்தரையின் வாயிலிருந்து இங்கு வந்திருந்தாலும், சரியான அறிவுரை என்பது எக்காலத்திலும், எந்தத் தேசத்திலும் ஒரே மாதிரியானதுதான். காலத்தில் செய்யவேண்டியதைச் செய்யாமல் இருப்பது நன்மை பயக்காது என்பதை உணர்தல் அவசியம்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

4.3 சொன்னதைச் செய்பவன்

மந்தராவின் அந்த சூழ்ச்சி யோசனை கைகேயியின் மனதை வெகுவாகவே பாதித்துவிட்டது. முன்பு ஒருமுறை போர்க்களத்தில் சத்தியம் செய்து வாங்கிய வரங்களை தசரதரிடம் ஞாபகப்படுத்தி, தான் வேண்டுவதைச் சொல்லி அவைகளை நிறைவேற்றச் சொல்கிறாள். அன்றைய போர்க்களத்தில் தசரதருக்கு உதவியாக அருகில் கைகேயிதான் இருந்தாள். ஒரு சமயத்தில் அவரால் போர் புரியமுடியாது அவரது உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவானபோது கைகேயிதான் அவரை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு இட்டுச் சென்று அவரைக் காப்பாற்றினாள். அதற்கு நன்றிக்கடனாக தசரதரும் அவளுக்கு இரண்டு வரங்கள் கொடுக்க, சத்தியப் பிரமாணம் வாங்கிக்கொண்டு அவள் தான் வேண்டும்போது அவைகளைப் பின்பு கேட்டுப் பெறுவதாகச் சொல்லியிருந்தாள். காலம் சென்ற பழைய நிகழ்ச்சி என்பதால் தசரதருக்கு அது மறந்துகூட போய்விட்டது. அதை இப்போது ஞாபகப்படுத்தி அவைகளை நிறைவேற்றக் கோருகிறாள். இரண்டு வரங்களில் ஒன்றின்படி இராமனுக்கு அல்லாது தன் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும்; மற்றதன்படி அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்கு இராமன் வனவாசம் செய்யவேண்டும்.

இதைக்கேட்ட தசரதருக்குத் தலையில் இடிவிழுந்தது போல ஆயிற்று. முதலில் அவள் கேட்பதில் உள்ள அநியாயங்களைப் பற்றி அவளுக்கு விளக்க ஆரம்பித்தார். அதற்கு அவள் செவி சாய்க்காதபோது அவளைக் கடிந்துகொண்டு அவச்சொற்களை வீசினார். இதற்குள் கைகேயிக்கு மனம் இறுகிப்போயிருந்தது. அவள் என்ன வந்தாலும் தனக்கு வேண்டியதைப் பெறாமல் விடுவதாக இல்லை. அவள் தசரதரைக் கோழை என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத கையாலாகதவன் என்றும் ஏசினாள். அதற்குத் துணையாகத் தங்களுக்கு என்னதான் இழப்பு வந்திருந்தாலும், தங்கள் வாக்கைக் காப்பற்றியவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டாள்.

ஸம்ʼஸ்²ருத்ய ஸை²ப்³யஸ்²ஸ்²யேனாய ஸ்வாம்ʼ தனும்ʼ ஜக³தீபதி: |
ப்ரதா³ய பக்ஷிணே ராஜ ந்ஜகா³ம க³திமுத்தமாம்|| 2.14.4||

ராஜன் O king, ஏ! அரசனே!
ஜக³தீபதி​: king, ராஜா
ஸை²ப்³ய​: Saibya, சைபியர்
ஸ்²யேனாய பக்ஷிணே to a hawk, a bird, ஒரு கழுகுக்கு
ஸ்வாம் his own, தனது
தனும் body, உடலை
ஸம்ʼஸ்²ருத்ய having promised, கொடுத்த வாக்கால்
உத்தமாம் highest, உன்னதமான
க³திம் state, பதவி
ஜகா³ம attained, அடைந்தார்.

அரசனே! ஒரு கழுகுக்கு தான் கொடுத்த வாக்கால் தனது உடலையே கொடுக்கத் துணிந்த சைபிய என்னும் ராஜா உன்னதமான மேலுலகப் பதவி அடைந்தார்.

ததா² ஹ்யலர்கஸ்தேஜஸ்வீ ப்³ராஹ்மணே வேத³பாரகே³|
யாசமானே ஸ்வகே நேத்ரே உத்³த்⁴ருʼத்யாவிமனா த³தௌ³|| 2.14.5||

ததா² In the same way, அதே போன்று தேஜஸ்வீ powerful, சக்திவாய்ந்த அலர்க​: king Alarka, ராஜா அலர்க்கர் வேத³பாரகே³ to a person who mastered vedas fully, வேதவிற்பன்னர் ஒருவருக்கு யாசமானே while he was soliciting, யாசித்தபோது ப்³ராஹ்மணே (to) the brahmin, அந்தணருக்கு ஸ்வகே his own, தனது நேத்ரே eyes, கண்களையே உத்³த்⁴ருʼத்ய having plucked, தோண்டிப் பறித்து அவிமனா​: without hesitation, தயக்கமின்றி த³தௌ³ ஹி gave it indeed, ஈன்றார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

அதே போன்று, வேதவிற்பன்னரான ஒரு அந்தணர் யாசித்தார் என்பதற்காக, எவ்விதத் தயக்கமும் இல்லாமல் மகாராஜா அலர்க்கரும் தனது கண்களையே தோண்டிப் பறித்துத் தானமாக அவருக்குக் கொடுத்தார்.

இப்படியாக இரண்டு சம்பவங்களைச் சொல்கிறாள். ஒரு வல்லூறிடம் மாட்டிக்கொண்ட குருவியொன்று தப்புவதற்காக, சிபி என்னும் அரசனின் மகனான சைபிய என்னும் ராஜாவிடம் தஞ்சம் புகவே, அவரும் அதைக் காப்பாற்ற முயலும் போது, அந்த வல்லூறோ குருவி தனது இயற்கையான உணவு என்று கூறுகிறது. அதன் வாதத்தை ஏற்றுக்கொண்ட ராஜாவும் குருவிக்குப் பதிலாக தனது உடலிலிருந்து சதையைக் கொடுப்பதாகக் கூறினார். தான் சொன்ன வாக்குப்படி குருவியின் எடைக்குச் சமமாக தனது சதையை ஒரு தராசில் வெட்டிவைக்க, எவ்வளவுதான் அப்படி வைத்தாலும் எடை சரிசமமாக ஆகாததால், தானே தராசில் ஏறி தன்னையே தானமாகக் கொடுக்கிறார். அப்போதுதான் அவ்விரு பறவைகளும் சைபியனின் வாக்கு, மற்றும் வள்ளல் தன்மையைச் சோதிக்க வந்த தேவர்கள் என்று தெரியவருகிறது. தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எண்ணம்தான் அரசனுக்கு இருந்ததே தவிர தனது உயிரையும் அதற்காகக் கொடுக்கத் துணிந்த விவரத்தை இங்கே கைகேயி தசரதருக்குச் இடித்துக் காட்டுகிறாள். அதேபோன்று அலர்க்கா என்ற அரசன் எவ்விதத் தயக்கமும் இன்றி தன் கண்களைப் பறித்தே செய்த தானம் பற்றியும் சொல்கிறாள்.

ஸரிதாம்ʼ து பதிஸ்ஸ்வல்பாம்ʼ மர்யாதா³ம்ʼ ஸத்யமன்வித:|
ஸத்யானுரோதா⁴த்ஸமயே ஸ்வாம்ʼ வேலாம்ʼ நாதிவர்ததே|| 2.14.6||

ஸரிதாம்ʼ பதி​: து as regards the lord of rivers, ஆறுகள் அனைத்தையும் கொள்ளும் கடல்
ஸத்யம் அன்வித: one who follows the truth, என்றும் உள்ளதை மதிக்கும்
ஸ்வல்பாம் very little, மிகச் சிறிய
மர்யாதா³ம் as boundary, எல்லையாக
ஸ்வாம் his own, தனது
வேலாம் shore, கரை
ஸமயே even during parva days, பருவ காலங்களிலும்
ஸத்யானுரோதா⁴த் in obedience to truth, உள்ளதை மதிக்கும் வண்ணம்
நாதிவர்ததே does not transgress, தாண்டுவதில்லை.

பருவ காலங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும், ஆறுகள் அனைத்தின் நீரையும் தன்னகத்தே கொள்ளும் கடல் என்றும் உள்ள தனது கரை என்னும் சிறிய எல்லையை மதித்து அதைத் தாண்டுவதில்லை.

ஸத்யமேகபத³ம்ʼ ப்³ரஹ்ம ஸத்யே த⁴ர்ம: ப்ரதிஷ்டித:|
ஸத்யமேவாக்ஷயா வேதா³ ஸத்யேனைவாப்யதே ஸ்பரம்|| 2.14.7||

ஸத்யம் truth, உண்மை
ஏகபத³ம் in the form of one word, ஒரு வார்த்தையில்
ப்³ரஹ்ம Brahman, பிரம்மம்
ஸத்யே on the truth, உண்மையைப் பற்றி
த⁴ர்ம​: righteousness, தர்மம்
ப்ரதிஷ்டி²த​: is established firmly, நன்கு வேரூன்றி
ஸத்யமேவ truth alone, உண்மை மட்டுமே
அக்ஷயா​: is imperishable, என்றும் உள்ளது
வேதா³​: in vedas, வேதங்களில்
ஸத்யமேவ by truth alone, உண்மையால் மட்டுமே
பரம் supreme state, உன்னத நிலை
ஆப்யதே will be attained, அடையப்படும்.

பிரம்மம் என்பதை ஒரே வார்த்தையில் விளக்கச் சொன்னால் அந்த வார்த்தைதான் “உண்மை” என்றாகும். உண்மை இருந்தால்தான் அங்கு தர்மம் என்பதும் இருக்கும். உண்மை என்றும் மாறாதது. வேதங்கள் கூறும் உண்மையை ஒருவன் சொன்னால் அது அவனை மிக உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லும்.

நாம் மேலே பார்த்தவாறு கைகேயி நடந்த நிகழ்ச்சிகளை விவரித்துவிட்டு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றினால்தான் ஒருவன் உண்மையாக இருக்கிறான் என்று பொருள் என்பதைச் சொல்கிறாள். உண்மையைக் காப்பாற்றுவது எந்த ராசிகளுக்குமே பொருந்தும். அதனாலேயே ஆற்றில் நீர் பெருகினாலும், அதைக் கொள்ளும் கடலோ தனது கரையாகிய உண்மையை மீறுவதில்லை. மனிதர்களைப் பொறுத்தவரை, உள்ளத்தே ஒன்று உள்ளதே உண்மை எனப்படுகிறது. உண்மையாகிய சத்தியம் இருக்குமிடத்தில்தான் தர்மம் தழைக்க முடியும். அப்போதுதான் ஒருவன் வாழ்வில் உன்னத நிலையான பிரம்மத்தை உணரமுடியும். ஆதலால் என்ன நடந்தாலும் – சாவோ, பிரளயமோ, தாழ்வோ எது வந்தாலும் – ஒருவன் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி உண்மையாக இருக்கவேண்டும்.

(உண்மை எனும் சொல்லின் பரிமாணங்கள் பற்றி மேலும் யதார்த்தமாக அறிந்துகொள்ள “வாய்மை வெல்கிறதா? வாய் மெய்யை மெல்கிறதா?” என்ற இத்தளத்தில் வந்த கட்டுரையைப் பார்க்கலாம்)



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 5

May 5, 2012

5.1 தர்மத்தின்படி வாழ்வு

கைகேயியின் ஆளுமைக்குத் தான் உள்ளான நிலையை விவரித்து, அண்மையில் நடந்து முடிந்த தர்ம சங்கடமான நிகழ்ச்சிகளை இராமனிடம் சொல்வதற்கு வேண்டிய மனோதைரியம் தசரதருக்கு இல்லை. ஆனால் கைகேயிக்கு அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. முன்பொருமுறை போர்க்களத்தில் தசரதர் அவளுக்குத் தந்த இரு வரங்களையும், தான் அப்போதைக்கு அல்லாது பின்னால் உபயோகிப்பதற்கு அவர் தந்த வாக்குறுதியையும் சொல்லி, தற்போது அவள் கேட்க, அவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவர் தார்மிக ரீதியாகக் கட்டுப்பட்டிருப்பதையும் இராமனிடம் சொன்னாள். அதன்படி அவளது முதல் கோரிக்கையாக இராமனுக்குப் பதில் பரதன் முடிசூட்டிக் கொள்ளவேண்டும் என்றும், இரண்டாவது கோரிக்கையாக இராமன் அடுத்த பதினான்கு வருடங்கள் வனவாசம் செய்யவேண்டும் என்றும் நாக்கூசாமல் சொன்னாள்.

இராமனோ பரதன் முடிசூட்டிக் கொள்வதற்குத் தனக்குப் பரிபூரண சம்மதம் என்றும், அதைக் கூடிய சீக்கிரம் செய்வதற்கு ஆட்களை அனுப்பி பரதனை அயோத்திக்கு உடனே வரவழைக்க வேண்டும் என்றும் சொல்லி, அதுவரை தான் அயோத்தியில் இருக்கவேண்டுமா என்று கைகேயியையே பார்த்துக் கேட்கிறான். அவளும் பரதன் வரும்வரை இராமன் இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லி, அதனால் இராமன் உடனே காட்டுக்குப் புறப்படலாம் என்கிறாள். ஒருவேளை இராமன் புறப்படாது அங்கு இருந்தால் ஏதாவது ஒரு வகையில் நிர்ப்பந்தம் வந்து இராமனின் மனமும் மாறலாம் என்று கைகேயி நினைத்தாள் போலும். கைகேயிக்குத் தான் சொல்லும் வார்த்தைகளில் முழுநம்பிக்கை வரவில்லை என்று இராமனுக்கு யூகிக்க முடிகிறது. அதனால் பொதுவாக எல்லோருக்கும் உள்ளது போலே தனக்குச் செல்வத்திலும், பதவி போகங்களிலும் விருப்பமில்லை என்றும், காட்டில் தவம் செய்யும் முனிவர்களின் வாழ்க்கையே தனக்கும் விருப்பம் என்றும் கைகேயிடம் இராமன் சொல்கிறான்.

நாஹமர்த²பரோ தே³வி! லோகமாவஸ்துமுத்ஸஹே |
வித்³தி⁴மாம்ருʼஷிபி⁴ஸ்துல்யம்ʼ கேவலம்ʼ த⁴ர்மமாஸ்தி²தம்|| 2.19.20||

தே³வி O devi, தேவி
அஹம் I, நான்
அர்த²பர​: interested in wealth, செல்வத்தில் விருப்பம் கொண்டவனாக
ந not, இல்லை
லோகம் this world, இந்த உலகில்
ஆவஸ்தும் to follow, பின்பற்றி
உத்ஸஹே am striving, முயற்சி செய்கிறேன்
கேவலம் only, மட்டும்
த⁴ர்மம் righteousness, தர்மம்
ஆஸ்தி²தம் devoted to, முதன்மையாக
மாம் me, என்னை
ருʼஷிபி⁴​: with ascetics, தபஸ்விகளோடு
துல்யம் similar, ஒன்றாக
வித்³தி⁴ you may know, தெரிந்து கொள்.

தேவி, செல்வத்திற்காக இந்த உலகில் வாழவேண்டும் என்ற விருப்பம் எனக்குக் கிடையாது. தர்ம சிந்தனை ஒன்றே குறிக்கோளாக வாழும் தவச் சீலர்களுக்கு ஒப்பானவன் நான், இதைத் தெரிந்து கொள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

ஒருவன் வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்று நம் முன்னோர்கள் மிகவும் துல்லியமாக வகுத்துச் சென்றிருக்கின்றனர். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்று அவர்கள் சொன்ன நான்கையும் ஒருவன் நான்கு தூண்களாக்கி அவைகளின் மேல் வாழ்க்கை எனும் மண்டபத்தை எழுப்பினால் அவனே அறிஞன் ஆவான். அவை ஒவ்வொன்றுக்கும் அனர்த்தம் கற்பிப்பவன் வெறும் அடுக்குச்சொல் அறிஞனாகத்தான் வளர்வான். எண்ணம்-சொல்-செயல் என்ற மூன்றும் ஒன்றிய ஒழுக்கம் மிகுந்த, அனைவர்க்கும் பயன் தரும் வாழ்வை வாழ்வதே தருமமிகு வாழ்வு. அத்தகைய தர்மத்தின்படி செயல்கள் புரிந்து ஈட்டப்படும் செல்வமே அர்த்தம் எனப்படும். அந்தச் செல்வத்தைக்கொண்டு தனது ஆசைப்படி இகலோக வாழ்க்கையை நடத்துவதே காமம் ஆகும். இவை அனைத்தையும் செவ்வனே செய்து ஒருவன் பரலோக வாழ்க்கைக்குத் தன்னையும், முடிந்தால் உற்றார் சுற்றார்களையும் தயார் செய்வதே விடுதலை எனப்படும் மோக்ஷம். இப்படிச் செய்பவனுக்கே அவனது வினைகளின் பயன் அவனைத் தொடர்ந்து, மேலும் அவனை வினைக்கடலில் வீழ்த்தாது, பிறந்ததன் பயனான பேரறிவை அளித்து, பிறவிக் கடலிலிருந்து மீட்டு, என்றும் உள்ள நிலையை உணர்த்தி, ஆனந்த மயமான அந்த உன்னத நிலையில் நிறுத்தும். அதுவே விடுதலை அல்லது மோக்ஷம் எனப்படுகிறது.

அதன் அடிப்படை ஆரம்பம்தான் தருமமிகு வாழ்வு. இப்படிப் படிப்படியாக மோக்ஷத்தை அடையத்தான் நாம் அனைவரும் மறுபடி மறுபடி பிறக்கிறோம். பிறந்ததன் பயன் அறியாது குறிக்கோள் தவறும்போது, நாம் செய்யும் தவறான காரியங்களால் பரமபத சோபனம் விளையாட்டில் வரும் பாம்பு-ஏணிகள் போல, பல பிறவிகள் வந்துபோகின்றன.

5.2 தர்மம் தலை காக்கும்

காட்டிற்குச் செல்வதற்கு இராமன் ஒத்துக்கொண்டதை லக்ஷ்மணன் கடுமையாக எதிர்த்தான். அவனைப் பொறுத்தவரை வயோதிகர் ஆகிவிட்ட தசரதருக்கு புத்தி பேதலித்துவிட்டதால், அவர் கைகேயியால் தவறான வழிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். தான் அரசுரிமையைக் கைப்பற்றி, தசரதரைக் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டு, இராமனுக்கு முடிசூட்டிவிடத் தான் தயாராக இருப்பதாகவும் அவன் சொன்னான். ஆனால் இராமனோ நடக்கும் எல்லாவற்றையும் தான் நீதி, நேர்மை ஒழுக்கம் மிகுந்த தர்மத்தின் வாயிலாகப் பார்ப்பதாகச் சொன்னான். அதன்படி தந்தை கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தனயனும் எல்லா விதத்திலும் உதவ வேண்டும். அவரது உயிர் போர்க்களத்தில் காப்பாற்றப்பட்டபோது கைகேயிக்கு இரண்டு வரங்களைத் தந்தார். இப்போது அவள் அந்த வரங்களைக் கேட்கிறாள். கைகேயியின் விருப்பங்கள் வேண்டத்தகாதவையாக இருக்கலாம்; ஆனால் அவைகளை நிறைவேற்ற தசரதர் மறுத்தால் அவர் இதுவரை வாழ்ந்துகாட்டிய தார்மிக நிலையிலிருந்து தவறியவராக ஆவார். ஆகவே தார்மிகம் தழைக்க ஒரு மகனும் தன் தந்தை பக்கம் நின்று அவரது கௌரவத்தைக் காக்க உதவவேண்டும் என்கிறான்.

யஸ்மிம்ʼஸ்து ஸர்வே ஸ்யுரஸன்னிவிஷ்டா த⁴ர்மோ யத ஸ்ஸ்யாத்தது³பக்ரமேத |
த்³வேஷ்யோ ப⁴வத்யர்த²பரோ ஹி லோகே காமாத்மதா க²ல்வபி ந ப்ரஸ²ஸ்தா || 2.21.57||

யஸ்மின் in which ever man, எவனொருவனிடம்
ஸர்வே all these three, இம்மூன்றும்
அஸன்னிவிஷ்டா​: ஸ்யு​: are not combined (in that state), சேர்ந்து இல்லையோ
யத​: by which, எதனால்
த⁴ர்ம​: righteousness, தர்மம்
ஸ்யாத் pervading, தழைக்கிறதோ
தத் that one, அதனை
உபக்ரமேத should be performed, செய்யவேண்டும்
லோகே in the world, இவ்வுலகில்
அர்த²பர​: a seeker of wealth, செல்வம் சேர்ப்பவன்
த்³வேஷ்ய​: is abhorred, வெறுக்கப்படுகிறான்
ப⁴வதி ஹி happens, நடப்பது
காமாத்மதாபி subjecting to fulfilment of desires also, ஆசையினால் உந்தப்பட்டுக் கூட
ந ப்ரஸ²ஸ்தா க²லு is not admired by the wise men, சான்றோர்களால் புகழப்படுவதில்லை.

நீதி, நேர்மை, ஒழுக்கம் இல்லாத வழிமுறைகளை எல்லாம் விட்டொழித்து, ஒருவன் தார்மிக முறைப்படிதான் வாழ வேண்டும். இன்பம் ஒன்றையே நாடும் மனிதனை வெறுக்கும் சான்றோர்கள், ஆசையினால் உந்தப்பட்டு செல்வம் சேர்க்கும் மனிதனையும் புகழ்வதில்லை.

தார்மிக வாழ்வு வாழும் ஒருவன் பல சமயம் சோதனைகளையும் சந்திக்கவேண்டும்; பலத் தியாகங்களைச் செய்யவேண்டியும் வரும். அப்போது தரம் மிக்க தார்மிக வாழ்வைத் தூக்கி எறிந்துவிடாது, சோதனைகளை ஏற்று, தியாகங்களையும் செய்வதே மேலான செயல்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5.3 சமத்துவ மனப்பான்மை

மறுநாள் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்றபோதுதான் நாம் கண்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தேறின. அன்றிரவு வரை ராமனிடம் எந்தவித வெறுப்பும் இல்லாது, மாறாக அவனைத் தன் மகன் போல்தான் கைகேயி பார்த்து மகிழ்ந்திருந்தாள். அதை நன்கு அறிந்த ராமனுக்கும், கைகேயி அப்படி மனம் மாறுவதற்கு என்னதான் நடந்திருக்கும் என்று புரியவில்லை. அது பற்றி யோசித்தபோது, இன்பம்-துன்பம், தைரியம்-அச்சம், லாபம்-நஷ்டம், பிறப்பு-இறப்பு என்றிவ்வாறான இருமைகள் வாழ்வில் சில சமயம் திடீரென்று தோன்றும்போது அது எதனால் அப்படி நிகழ்கின்றது என்று சொல்ல முடியாது என்றே அவருக்குத் தோன்றியது. “எல்லாம் இறைவன் செயல்” என்று சொல்வதுபோல் அவை எல்லாமே கடவுளின் செயல்தான். அதை ஏன், எதற்காக, எப்படி என்றெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கமுடியாது. அந்தச் சமயங்களில் நடப்பது அனைத்தையும் எல்லாம் ஒன்றே என்ற சமத்துவ மனப்பான்மையுடன் பார்ப்பது ஒன்றே குணவான் செய்யக்கூடியது என்று ராமன் லக்ஷ்மணனுக்குச் சொல்கிறார். மேலும் அயோத்தியில் இருந்து ஆட்சிபாரத்தைச் சுமப்பதைவிட காட்டிற்குச் சென்று வாழ்வதே மேலானது என்கிறார்.

மா ச லக்ஷ்மண! ஸந்தாபம்ʼ கார்ஷீர்லக்ஷ்ம்யா விபர்யயே|
ராஜ்யம்ʼ வா வனவாஸோ வா வனவாஸோ மஹோத³ய:|| 2.22.29||

லக்ஷ்மண! Lakshmana,
லக்ஷ்ம்யா​: of kingdom, அரசுரிமை
விபர்யயே due to its loss, நஷ்டமாகியதே என்று
ஸந்தாபம் sorrow, துக்கம்
மா கார்ஷீ​: do not experience, அனுபவிக்காதே
ராஜ்யம்ʼ வா either kingdom, ஆள்வது அல்லது
வனவாஸோ வா or exile to forest, வனவாசம் செய்வது
வனவாஸ​: exile to the forest, வனவாசம்
மஹோத³ய​: is glorious, புகழைத் தருவது

ஓ, லக்ஷ்மணா!, அரசுரிமை போய்விட்டதே என்று வருந்தாதே. ஆள்வது அல்லது காட்டில் வனவாசம் செய்வது இவ்விரண்டில், வனவாசமே புகழைத் தரும்.

துரதிருஷ்டமோ துக்கமோ நேரும்போது மனச்சாந்தி மிக அவசியம். இருளாகிய துரதிருஷ்டத்திற்கு, ஒளிமிக்க காலை விடியும்போது, ஒரு முடிவு உண்டு. கெட்டகாலம் வரும்போது நல்ல காலம் கூடிய சீக்கிரம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன், எல்லாம் நல்லதற்கே என்ற சமத்துவ மனப்பான்மையும் வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5.4 வலிமையே வெல்லும்

கைகேயியின் மனமாற்றத்திற்கு தத்துவ ரீதியாகவோ, புரிந்து கொள்ளும்படியாகவோ எந்தவித காரணங்களும் சொல்ல இயலாததால் இராமன் அதனை இறைவனின் செயல் என்றே எடுத்துக்கொண்டார். மேலும் தனது தம்பியான லக்ஷ்மணன் சொன்னது போன்று வலிமை கொண்டு, போரிட்டு ஆட்சியைப் பிடிப்போம் என்றதையும், தந்தையின் வாக்கைக் காப்பாற்ற உதவும் கடமையிலிருந்து தவறுவதால், அது அதர்மமானது என்றும் சொல்லி மறுத்து விட்டார். ஆனால் லக்ஷ்மணனுக்கோ தர்மத்தின் பாதை என்றெல்லாம் சொல்லப்படும் சாதுவான முறைகளிலும் நம்பிக்கை இல்லை; இறைவனின் செயல் எனப்படும் காண்பதற்குப் புறம்பான சொற்களிலும் நம்பிக்கை இல்லை. தான் தனது வலிமை கொண்டு எதையும் அடையும் முறையே அவனுக்குச் சரியெனப்படுகிறது.

விக்லபோ³ வீர்யஹீனோ யஸ்ஸ தை³வமனுவர்ததே |
வீராஸ்ஸம்பா⁴விதாத்மானோ ந தை³வம்ʼ பர்யுபாஸதே || 2.23.16||

ய​: who, எவர்
விக்லப³​: one who is overcome with fear, பயத்தால் முடியாதவர்கள்
வீர்யஹீன​: a cowardly man, கோழைகள்
ஸ​: that one, அவர்கள்
தை³வம் the destiny, விதி
அனுவர்ததே follows, பின்பற்றுவார்
ஸம்பா⁴விதாத்மான​: respected souls, தன்னம்பிக்கை உடையோர்
வீரா​: valiant people, வலிமை கொண்டோர்
தை³வம் destiny, விதியை
ந பர்யுபாஸதே do not depend upon, சார்ந்திருக்க மாட்டார்கள்.

கோழைகளும், பயத்தால் முடியாதவர்களுமே விதி என்று சொல்லி செயல்களைத் தவிர்ப்பார்கள். தனது உரிமையை நிலை நாட்டக்கூடிய வலிமை கொண்டோர் விதியை எதிர்த்துப் போராடுவார்கள்.

ஆட்சியில் இருக்கும்வரை அதை உபயோகித்து தனக்கு வேண்டியதைப் பெற்றுக்கொள்; ஆண்டவனின் விருப்பமே ஆள்பவனின் விருப்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம், என்று இப்படித்தான் தோள் வலிமை, மற்றும் வாய் வலிமையில் பெரிதும் நம்புவோர் சொல்லிக் கொள்வார்கள். அப்படிச் சொல்லிவிட்டு ஏதோவொரு தவறால் ஆட்சியை இழந்து தவிக்கும்போது அவர்களே ஆண்டவனிடம் அழுதுகொண்டு உதவி வேண்டுவார்கள். அப்படித்தான் ஆண்டவனிடம் வேண்டுவோர்களில் அவர்களும் உண்டு என்று பகவான் “அர்த்தோ ஜிஞாசுர் அர்த்தார்த்தி ஞானி ச” என்று கீதையில் (7:16) கூறுகிறார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

5.5 வாழ்க்கைத் துணையின் கடமை

இராமரின் தாயார் கௌசல்யை அவரிடம் வனவாசத்திற்குப் போகவேண்டாம் என்றுதான் முதலில் பேச ஆரம்பித்தார். ஆனால் இராமரோ தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால் அவரது மனத்தைக் கலைக்க முடியவில்லை. அப்படியே போகத்தான் வேண்டுமென்றால் காட்டிற்குத் தன்னையும் அழைத்துப் போகச் சொல்லி வற்புறுத்தினார். ஆனால் இராமரோ, தசரதர் தவறு என்று என்னதான் செய்திருந்தாலும் அவரது வயோதிக நிலையில் அவரைத் தனியே விட்டு வருவது என்பது நல்லதல்ல என்றார். அவரது கடைசி காலத்தில் அவரது துணைவியாக அவரை நன்கு பராமரித்தல் அவசியம் என்றும் சொன்னார்.

ஸு²ஸ்²ரூஷாமேவ குர்வீத ப⁴ர்து​: ப்ரியஹிதே ரதா|
ஏஷ த⁴ர்ம​: புரா த்³ருʼஷ்டோ லோகே வேதே³ ஸ்²ருத​: ஸ்ம்ருʼத:|| 2.24.27||

ப⁴ர்து​: husband(அ)s, கணவரின்
ப்ரியஹிதே upon the welfare and pleasure, சுக துக்கங்களில்
ரதா an interested woman, பங்கு கொள்ளும் மனைவி
ஸு²ஸ்²ரூஷாமேவ service alone, சேவை ஒன்றையே
குர்வீத shall render, செய்வார்கள்
ஏஷ​: alone, மட்டுமே
புரா in ancient times, பாரம்பரியமாக
லோகே in this world, இவ்வுலகில்
த்³ருʼஷ்ட​: is seen, பார்க்கப்படுகிறது
வேதே³ in vedas, வேதங்களிலும்
ஸ்²ருத​: is heard, கேட்கப்பட்டிருக்கிறது.
ஸ்ம்ருʼத​: declared in Smritis, சொல்லப்பட்டிருக்கிறது,
த⁴ர்ம​: is truth, அதுவே உண்மை

ஒரு மனைவி தனது கடைமையாகத் தன் கணவரின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளவேண்டும். இது நமது பாரம்பரிய பெருமை; வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது, தலைமுறைகளாகச் செவி வழியாகவும் கேட்கப்பட்டிருக்கிறது.

வாழ்வின் இறுதி நாட்களில் ஒருவன் மற்றோர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தாலோ, முதுமையினால் தளர்ச்சி அடைந்திருந்தாலோ மனைவி அவருக்கு எல்லாவிதமான உதவிகளையும், சேவையையும் பாசத்துடனும், இன்முகத்துடனும் செய்யவேண்டும்.

வால்மீகி முனிவர் இப்படிச் சொல்வதால் இதை ஆண்களுக்கேன்றே ஒருதலைப் பட்சமாகச் சொல்வதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இந்தச் சூழ்நிலையில் தசரதர் முதுமையினாலும், தாங்க முடியாத துக்கத்தில் வீழ்ந்திருப்பதாலும் வெகுநாட்கள் அவர் உயிருடன் இருக்க முடியாது என்பதே உண்மை. ஆதலால் தனது தாய்க்கு அவள் தன் கணவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி இராமர் சொல்வதாக அமைந்திருப்பதால், இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களோ, சாஸ்திரங்களோ ஆணையும் பெண்ணையும் பிரித்துப் பார்ப்பதே இல்லை. அந்தந்தச் சூழ்நிலையைத்தான் கவனிக்கவேண்டும். மனைவிக்கு இந்த மாதிரி துயரம் வந்திருக்குமானால் இதேபோல் சேவை செய்யவேண்டும் என்று கணவனது கடமையாகச் சொல்லப்பட்டிருக்கும். இங்கு காளிதாசர் குமார சம்பவத்தில் சிவன் பார்வதியிடம் “நான் உனக்குச் சேவை செய்யும் அடிமை” என்ற பொருள் வரும்படி “தவஸ்மி தாச” என்று சொல்வதாக அமைத்திருப்பதையும் கவனிக்கவேண்டும். வேதங்களையோ, சாஸ்திரங்களையோ ஆணாதிக்கத்திற்கு அடிபோடுவதாக தவறாகத் திரித்து மேற்கோள் காட்டக்கூடாது.



__________________


Veteran Member

Status: Offline
Posts: 52
Date:
Permalink  
 

Doubting Seedha's virginity is a black mole on Raman
Without acceptance of Seedha, Ravan did not have intercourse with Seedha, which shows supremacy of Ravan over Raman

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard