New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அர்த்தமுள்ள இந்துமதம்– கவியரசு கண்ணதாசன்


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: அர்த்தமுள்ள இந்துமதம்– கவியரசு கண்ணதாசன்
Permalink  
 


கனவுகள்

ஆண்டாள் கனவு காண்கிறாள்; அற்புதமான கனவு; இனிமையான கனவு. கலியாணமாகாத ஒவ்வொரு கன்னிப் பெண்ணும் காணுகின்ற கனவு. நிறைவேறாத காரியங்களைப் பற்றிக் கனவு காண்பதிலே தான் எவ்வளவு சுகம்!

இந்தக் கனவுகளிலே பலவகை உண்டு. அரைகுறைத் தூக்கத்தில் வரும் கனவு, நினைவின் எதிரொலி.

பகல் தூக்கந்தான் பெரும்பாலும் அரைகுறை தூக்கமாக இருக்கிறது. ஆகவேதான், `பகல் கனவு பலிக்காது’ என்கிறார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவு பெரும்பாலும் பலிக்கிறது. ஆழ்ந்த தூக்கம் என்பது அதிகாலையில் தான் வருகிறது. ஆகவே, `காலைக் கனவு கட்டாயம் பலிக்கும்’ என்கிறார்கள். ஆண்டாள் காண்பதோ காலைக் கனவுமல்ல; பகல் கனவுமல்ல. அது ஆசையின் உச்சம்; பக்திப் பெருக்கு; பரவசத் துடிப்பு. கண்ணனை மணவாளனாகக் காண்கிறாள் கோதை.    `உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்று தன்னை அவன் கையில் தருகிறாள் நாச்சியார். கண்ணாடி முன் நிற்கிறாள். பூச்சூடி, குழல் முடித்து, பொட்டிட்டு நின்று, தன் திருமுகத்தைத் தானே பார்க்கிறாள். ஆண்டாளின் ஸ்தூலத்திற்குக் கண்ணாடியில் தெரியும் அவளது உருவமே தோழியாகிறது. “அடி தோழி!

நான் கனவு கண்டேன். வாரண மாயிரம் சூழ வலம்வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்.”

- “எல்லே இளங்கிளியே! என் கனவைக் கேட்டாயா?

ஆயிரம் யானைகள் சூழ நாரண நம்பி வந்தான்;

அவன் வரும்போது பூரண கும்பங்கள் எழுந்தன;

தோரணங்கள் நாட்டப்பட்டன. கதிரொளி தீபம் கலசமுட னேந்தி சதிரிள மங்கையைர் தாம்வந் தெதிர்கொள்ள மதுரையார் மன்னர் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான். – ஆம்!

ஒளி மிகுந்த தீபங்களைக் கையிலேந்திக் கொண்டு சதிராடும் இளமங்கையர் வந்தார்கள். அவனை எதிர்க்கொண்டார்கள். அந்த மதுரையார் மன்னர், மாயக் கண்ணன், எனது பாதத்திலிருந்து உச்சிவரை உடம்பே அதிர்ந்து போகுமாறு புகுந்ததாகக் கனவு கண்டேன். அந்த மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனவு கண்டேன். அடி தோழி! என் கனவு நனவாகும்.”

- ஆம், ஆண்டாளின் கனவு, அவளது ஆசையின் விரிவு! ஏக்கத்தின் இலக்கியம்!

இத்தகைய கனவுகளைப் பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது. கனவுகள் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தால், அவை பலிக்கும் என்கிறது. சிலப்பதிகாரத்தில் `கனாத்திறம் உரைத்த காதை’ வருகிறது. `முத்தொள்ளாயிர’ நாயகிகளும் கனவு காண்கிறார்கள். திருக்குறளிலும் கனவுக் குறிக்கப் பெறுகிறது. கனவு என்பதை இறைவன் விடும் முன்னறிவிப்பு என்றே நான் கருதுகிறேன்.

இந்துக்களுக்கு கனவு நம்பிக்கை அதிகம். எனக்கு மிக அதிகம். காரணம், நான் கண்ட கனவுகள் பெரும்பாலும் பலித்திருக்கின்றன. 1948-ஆம் ஆண்டு நான் சேலத்தில் வேலை பார்த்தபோது அரிசிப்பாளையத்தில் தங்கியிருந்தேன்.

என்னோடு பூந்தோட்டம் திருநாவுக்கரசு என்ற நண்பரும், சாந்தி மா. கணபதி என்ற நண்பரும் தங்கியிருந்தார்கள். அவர்களில் பூந்தோட்டம் திருநாவுக்

கரசு இப்பொழுது சிங்கப்பூரில் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார். சாந்தி மா. கணபதி என்ற நண்பர், 1960-ல் காலமானார். ஒருநாள் காலையில், காந்தியடிகளைச் சுட்டுக் கொன்று விட்டதாக எனக்கொரு கனவு வந்தது. காலையில் எல்லாரிடத்திலும் அதைச் சொன்னேன்.    “சீ சனியனே! உன் கருநாக்கை வைத்துக்கொண்டு சும்மாயிரு. எதையாவது உளறித் தொலைக்காதே” என்று எல்லாரும் என்னைக் கோபித்துக் கொண்டார்கள். அன்று மாலை வானொலி கண்ணீரோடு ஒரு செய்தியைச் சொன்னது, “காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்று. எனது நண்பர்கள் திகைத்துப் போனார்கள்; என்னை எச்சரித்தார்கள். “இதோ பார்! நீ கனவு கண்டதாகச் சொன்னால் யாரும் நம்பமாட்டாகள். இதிலே உனக்கும் சம்பந்தமிருப்பதாகச் சொல்லிவிடுவார்கள். ஆகவே, வாயை மூடிக் கொண்டு சும்மாயிரு” என்றார்கள். எனக்கு, அந்தப் பயம் தெளியவே வெகு நாளாயிற்று. சில கனவுகள் ஆணியடித்தாற்போல் எதிர்மறை பலன்களைக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு, என் கனவில் மலம் வந்தால் மறுநாள் எங்கிருந்தாவது பணம் வருகிறது. நூற்றுக்கணக்கான முறை அந்தக் கனவைக் கண்டு மறுநாளே பலனடைந்திருக்கிறேன். பல் விழுவதாகக் கனவு கண்டால், மறுநாளே என்மீது கோர்ட்டில் புது வழக்கு வருகிறது. இருபது வருடங்களாக அடிக்கடி நான் படிப்பது போலக் கனவு காண்கிறேன்.

ஒவ்வொரு தடவையும் அந்தக் கனவு வந்த பிறகு என் புகழ் உயர்ந்து வந்திருக்கிறது. பல தடவை ரயிலுக்குப் போகும்போது ரயிலைத் தவற விடுவதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவதொரு நல்ல சந்தர்ப்பத்தை நான் இழந்திருக்கிறேன். உயரமான இடத்தில் ஏறி இறங்க முடியாமல் தத்தளிப்பதாகக் கனவு கண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் வாழ்க்கையில் ஏதாவது சிக்கல் வந்து தீர்க்க முடியாமல் கலங்கியிருக்கிறேன்.

ஏறிய உயரத்திலிருந்து மளமளவென்று இறங்கி வருவது போலக் கனவு கண்டால், வந்த சிக்கல் தீர்ந்து விடுகிறது. கனவில் வெள்ளம் வந்தால், காலையில் பணம் வருகிறது. அந்த வெள்ளம் வடிந்து போவது போல் கனவு கண்டால், பணம் செலவழிந்து போகிறது. 1967- ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தபோது, காங்கிரஸ் தோற்றுப் போவதையே கனவில் கண்டேன். ஒரு கோட்டை!

நானும் மற்ற காங்கிரஸ் நண்பர்களும் அங்கே நிற்கிறோம். மூவேந்தர் காலத்து ஆடை அணிந்து, தி.மு. கழக நண்பர்களெல்லாம் படைகள் போல வந்து, அந்தக் கோட்டையைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.அந்தக் கனவைப் பற்றி அப்பொழுதே எனது நண்பர்கள் பலரிடமும் கூறினேன்; அது பலித்து விட்டது. 1971- ஆம் ஆண்டுத் தேர்தலில் யானை என்னைத் துரத்திக் கொண்டு ஓடி வந்து, எனக்கு மாலை போடுவது போலக் கனவு கண்டேன். அந்தத் தேர்தலில் நான் சார்ந்திருந்த இந்திரா காங்கிரசுக்குப் பலத்த மெஜாரிட்டி கிடைத்தது. இரண்டாண்டுகளுக்கு முன், ஒரு மலை மீது நான் சுற்றி வருவதாகவும், அந்த மலையில் எங்கும் நாமம் போட்டிருக்கவும் கனவு கண்டேன். திருப்பதிக்குச் சென்று திரும்பி வந்தேன். பல தொல்லைகள் மளமளவென்று தீர்ந்தன. அதன் பிறகுதான், “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா – உன் விருப்பம் கூடுமடா” என்ற பாட்டை எழுதினேன். என் கனவில் கண்ணன் அடிக்கடி வருகிறான்; ஆனால் என்னோடு பேசுவதில்லை. ஒருவேளை இது என் நினைவின் எதிரொலியாக இருக்கலாம். தி.மு.க. விலிருந்து நான் பிரிந்த பிறகு, நானும் சம்பத்தும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் பெங்களூரில் ஒரு கூட்டத்தில் பேசச் சென்றோம். மத்தியானம் உட்லண்ட்ஸ் ஓட்டலில் நான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தபோது, நான் கூட்டத்திற்குச் செல்வதாகவும், அங்கே கல்லெறி நடப்பதாகவும், என் கார்க் கண்ணாடி உடைந்ததாகவும் கனவு கண்டேன். அது பகல் கனவுதான், என்றாலும் ஆழ்ந்த தூக்கத்தில் வந்த கனவு. என்ன ஆச்சரியம்! நான் கண்ட கனவு அன்று மாலையே அப்படியே நடந்தது. காரில் எந்தக் கண்ணாடி உடைந்ததாகக் கனவு கண்டேனோ அதே கண்ணாடி உடைந்தது. கனவில் வந்த முகங்களே என் கண் முன்னாலும் காட்சியளித்தன. வாய் நிறைய ரோமம் இருப்பதாகவும், அது இழுக்க இழுக்க வந்து கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்.

அப்பொழுதெல்லாம் தொல்லை மாற்றித் தொல்லை வரும்.

சிவனடியார்களின் கனவில் ஆண்டவன் வந்து, `இந்த இடத்துக்கு வா’ வென்று சொன்னதாகவும் அவர்கள் அந்த இடத்திற்குச் சென்று அமைதி கொண்டதாகவும் செய்திகள் படிக்கிறோம். அவை பொய்யல்ல என்றே நான் நினைக்கிறேன். `நிர்மலமான தூக்கத்தில் களங்கமற்ற உள்ளத்தில் தோன்றும் கனவுகள் பலிக்கின்றன’ என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்தக் கனவுகளை நாம் வரவழைக்க முடியாது. அவை ஆண்டவன் போட்டுக் காட்டும் படங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன்

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

இந்துக்களின் நெற்றி மதச் சின்னத்தைக் காட்டுகிறது.

கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதைக் குறிக்கிறது.

முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவாக்குகின்றன.

ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லாத நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு கதை உண்டு.

ஒரு மனிதன் பன்னிரண்டு மொழிகள் பேசுவானாம்.

ஒவ்வொரு மொழியையும், அந்தந்த மொழிக்காரர்கள் எப்படிப் பேசுவார்களோ அப்படியே, அதே தொனியோடும் உச்சரிப்போடும் பேசுவானாம்.

அவனுடைய தாய் மொழி எது என்று யாருக்கும் தெரியவில்லையாம்.

அவனைக் கேட்டால் அவனும் சொல்ல மறுத்து விட்டானாம்.

அவனது தாய் மொழியைக் கண்டுபிடிக்க அவனது நண்பர்கள் ஒரு வேலை செய்தார்களாம்.

ஒருநாள், அவன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது `பளார்’ என்று அவன் முதுகிலே ஓங்கி அடித்தார்களாம்.

அவன், ஆத்திரத்தோடு, “எந்தடா நாயாடி மோனே” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தானாம்.

அவனது தாய் மொழி மலையாளம் என்பது தெரிந்து விட்டதாம்.

தன்வயமற்ற நிலையில் ஒருவன் பேசுகிற பேச்சுத்தான் உண்மையான பேச்சு.

அது போதையாயினும் சரி, உற்சாகமாயினும் சரியே.    நடக்கும் வழியில் ஒரு கல் தடுக்கிவிட்டதென்றால் ஒருவன் `கடவுளே’ என்கிறான்; அவன் இந்து.

`அல்லா’ என்றால், அவன் முஸ்லீம்.

`கார்த்தரே’ என்றால், அவன் கிறிஸ்தவன்.

ஒவ்வொரு மதத்துக்காரருக்கும் முக்கியமான கட்டங்களில் எல்லாம், தனது மத தத்துவம், தனது கடவுள் நினைவுக்கு வருவதுபோல், ஒவ்வொரு மதக் கவிஞனுக்கும், தனது எழுத்துகளில் தனது கடவுள் பற்றிய சிந்தனையே வரும்.

வள்ளுவனும் அப்படியே!

இறைவனைப் பற்றி, அவன் குறிப்பிடுகிற சில வார்த்தைகள் வேறு சில மதக்கடவுளுக்கும் பொருந்தும் என்றாலும், பெரும்பாலானவை நேரடியாக இந்துமதக் கடவுள்களையே குறிக்கின்றன.

உதாரணமாக, `வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்பது, எல்லா மதத்தின் மூலவருக்கும் பொருந்தும் என்றாலும், விருப்பு வெறுப்பற்றவன் என்று இந்துக்களே இறைவனை அதிகம் கூறுகிறார்கள்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும் இந்த எண்ணம் பிரதிபலிக்கிறது.

`கடவுள்’ என்ற வார்த்தையை வள்ளுவன் பயன்படுத்தவில்லை என்றாலும், `கடந்து உள்ளிருப்பவன்’ என்ற பொருளில் இந்துக்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துகிறார்கள்.

`இறைவன்’ என்ற சொல் `கடவுள்’ என்ற பொருளில் வள்ளுவனால் இரண்டு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஐந்தாவது குறளில், `இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’ என்றும்,

பத்தாவது குறளில், `பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்’ என்றும், அது ஆளப்படுகிறது.

கடவுளை `இறைவன்’ என்று பௌத்தர்களோ, முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களோ கூறத் தொடங்குவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வள்ளுவன் கூறியிருக்கிறான். (மற்றவர்கள் பின்னால் எடுத்துக் கொண்டார்கள்.)

வள்ளுவன் காலத்தில் பௌத்த மதமும், இந்தியாவிலேயே பிறந்த வேறு சில மதங்களும் மட்டுமே இருந்தன.

அந்நாளில் அவை, கடவுளை `இறைவன்’ என்று அழைத்ததில்லை.

ஆனால், இந்துக்களின் கடவுள் பாடல்கள், பிரபந்தங்கள் அனைத்திலும் அந்த வார்த்தை வருகிறது.

அதிலும் வினைகள் இருவகை; அவை நல்வினை, தீவினை எனச் சொல்வோர் இந்துக்கள்.

அஃதன்றியும், இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற பொருளில் 690, 733, 778 ஆவது குறள்களில் வள்ளுவன் கையாள்கிறான்.

இறைவனையும், அரசனையும் வேறு எந்த மதத்தவரும் ஒன்றாகக் கருதுவதில்லை. ஒரே சொல்லால் அழைப்பதில்லை.    பிற்காலத்தில் தமிழ் இந்துக்கள் இன்னும் ஒரு படி மேலே போய், `கோ’ என்ற வார்த்தைக்கு `இறைவன், அரசன், பசு’ என்ற மூன்று அர்த்தத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

`இறைவனடி சேர்வது’ என்ற மரபு இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்

என்ற குறளில் வரும், `வானுறையும் தெய்வம்’ இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

தெய்வம் வானத்தில் இருக்கிறது என்பதை மற்ற மதத்தவர் ஒத்துக் கொள்வதில்லை.

`பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர்’ என்ற குறள், “திருப்பாற்கடல் கடையப்பட்டபோது ஆலகால விஷத்தை அள்ளியுண்ட பரமசிவனையே குறிக்கிறது” என்கிறார் பேராசிரியர் திரு. ஜி. சுப்பிரமணிய பிள்ளை. `அடியாருக்கு, நஞ்சமுதம் ஆவதுதான் அற்புதமோ?’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

நற்றிணையில் வரும், `நஞ்சுண்பர் நனிநாகரிகர்’ என்ற தொடரும் சிவனாரைக் குறிப்பதாக நான் சொன்னால் யார் மறுக்க முடியும்?

அஃதன்றியும், ஒரு குறளில் இந்துக்களுக்கு மட்டுமே உரிய இந்திரனைச் சாட்சிக்கழைக்கிறார் வள்ளுவர். வேறு எந்த மதத்தவருக்கும் `இந்திரன்’ என்று ஒருவன் இல்லை. அதிலும் இந்திரன் சம்பந்தப்பட்ட இந்து மதம் ஒன்றையே வள்ளுவர் உவமிக்கிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல்அகல் விசும்புளார் கோமான்

இந்திரனே சாலுங் கரி.

ஐந்து பொறிகளையும் அடக்காது சாபம் எய்திய இந்திரன், அடக்குவோனுடைய ஆற்றலுக்குச் சான்றாகிறான் என்கிறார்.

கெட்டுப் போனவனைக் காட்டி நல்லவனைப் புகழ்வது போல், பொறி அடக்காத இந்திரனைக் காட்டி அடக்குவோரின் ஆற்றலை வியக்கிறார் வள்ளுவர்.

இந்துக்களின் புராணப்படி, `அகல் விசும்புளார் கோமான்’ என்றே இந்திரனை அழைக்கிறார்.

அவர் கூறும் உவமான கதை அகலிகையின் கதையாகும்.

இன்னுமோர் இடத்தில்,

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை -என்கிறார்

இந்துக்களின் இறைவனுக்கு மட்டுமே எட்டு குணங்கள் கற்பிக்கப்பட்டிருக்கின்றன. (அதாவது, பரமசிவனுக்கு.)

பரிமேலழகர் சொற்படி அந்த எட்டு குணங்கள் கீழ்க்கண்டவை.

தன் வயத்தனாதல்

தூயவுடம்பினனாதல்

இயற்கையுணர்வினனாதல்

முற்றுமுணர்தல்

இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்

பேரருளுடைமை

முடிவிலாற்றலுடைமை

வரம்பில் இன்பமுடைமை

- சைவ ஆகமத்திலும் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அப்பர் சுவாமிகளும், `எட்டு வான் குணத்து ஈசன்’ எனப் பாடினார்.

கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.

என்றொரு குறள்.

இதில் `வாலறிவன்’ என்பது, மற்ற மதக் கடவுள்களையும் குறிக்கக்கூடிய மயக்கத்தைத் தரும். ஆயினும், எங்கும், எப்பொழுதும், தானாகவே அனைத்தையும் அறியும் ஞானத்தைக் குறிப்பதால், `அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தமூர்த்தியாகி’ நிற்கும் ஈசனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

அதுபோலவே, `தனக்குவமை இல்லாதான்’ என்ற சொல்லும் மயக்கத்தைத் தரும். ஆயினும், அதுவும் ஈசனைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ள முடியும்.

அப்பர் சுவாமிகள் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் ஜி. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் இதனை விளக்கியிருக்கிறார்கள்.

ஒரு குறளில் வரும் `மலர்மிசை ஏகினான்’ என்ற வார்த்தை பல பொருள் தருமாயினும், பரிமேலழகர் உரைப்படியும், பிற்கால நாயன்மார்கள் பாடல்களின் படியும், அதுவும் சிவபெருமானையே குறிக்கின்றது.

பிறவியைப் `பெருங்கடல்’ என்று இந்துக்கள் மட்டுமே குறிப்பதால், நான் முன்பு சொன்ன அந்தக் குறளும் வள்ளுவன் ஓர் இந்துவே எனக் காட்டுகிறது.    மற்றும்,

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

- என்றும்,

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு

- என்றும்,

இந்துக்களின் துறவுத் தத்துவத்தையும், தலைவன் பெயரையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

வள்ளுவர் கூறும், `தானமும் தவமும்’ இந்துக்களின் மரபுகளே.

துறவறத்தின் பெருமையைப் புத்தமதமும் கூறுமாயினும், இந்திரனைப் பற்றிய குறிப்பு வள்ளுவரின் `நீத்தார் பெருமை’ என்ற அதிகாரத்திலேயே வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வள்ளுவப் பெருந்தகை, தொட்ட இடமெல்லாம், இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையுமே கூறுவதால், அவரும் ஓர் இந்துவே என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை.

அவரைத் தூக்கத்தில் தட்டி எழுப்பியிருந்தாலும், `இறைவா’ என்றுதான் சொல்லி இருப்பார்.

அறத்துப்பாலில் காணும் அறமும், பொருட்பாலில் காணும் பொருள்களும், தமிழர்களுக்கு மட்டுமே உரியவையாக அன்று இருந்தன.

ஆகவே, தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே ஒரு தமிழனே என்பது எனது துணிபு.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 

எனக்குத் தெரிந்தவரை…

“அன்புள்ள கவிஞ!

தாங்கள், `அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற தலைப்பில் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். கட்டுரைகளில் எழும் ஐயங்களையும் அவற்றிற்குரிய தங்களின் பதில்களையும் உடனுக்குடன் இலங்கையிலிருந்து தொடர்புக் கொண்டு பெறமுடியாதிருப்பதால், இக்கடிதத்தின் மூலம் விளக்கம் பெற முனைந்துள்ளேன்.

1. தாங்கள் மூன்று வகை நண்பர்களைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். அவர்கள் பனை, தென்னை, வாழை போன்றவர்கள் என்று. `வாழை’ என்பது தவறானது. கமுகு என்பது சரியானது. இதனை நாலடியார் என்னும் நூலில் வரும் பாடல் ஒன்று விளக்குகிறது.

கடைஆயார் நட்பில் கமுகுஅனை யார் ஏனை
இடைஆயார் தெங்கின் அனையர் – தலைஆயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை உடையார் தொடர்பு (நாலடியார் 216)

2. “ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்” என்று கூறியவர் வள்ளுவன் என்று கூறியுள்ளீர்கள். இப்படிக் கூறியவர் இளங்கோ அடிகளார்; வள்ளுவர் அல்லர்.

3. “அர்ச்சுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை” என்று எழுதியுள்ளீர்கள். பரந்தாமன் என்றழைக்கப்படும் மகாவிஷ்ணுவால் உபதேசிக்கப்பட்டதோ அல்லது கூறப்பட்டதோ அல்லது எழுதப்பட்டதோ அல்ல பகவத்கீதை. யாரோ ஒருவரோ அல்லது சிலரோ கூறிய கருத்துக்களைக் கண்ணன் கூறியது -அருளியது என்று வேறு யாரோ கதை கட்டிவிட்டார்கள்.

`கீதை பரந்தாமனால் பகரப்பட்ட கருத்து’ என்று திட்ட வட்டமாகத் தெரிந்திருந்தால், சங்கம் மருவிய காலத்தில் பிற்கூற்றில் வாழ்ந்த முதல் ஆழ்வார்களான பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேய் ஆழ்வார் போன்றோர், அல்லது பிற்காலத்தில் வாழ்ந்த ஏனைய ஒன்பது ஆழ்வார்கள் தமது பிரபந்தங்களில் விளக்கி காட்டியிருப்பர். கீதையைப் பற்றியோ அது பரந்தாமனால் ஆக்கப்பட்டது என்பது பற்றியோ எந்தவிதக் கருத்தையும் அவர்கள் கூறவில்லை. வைணவ மதத்துக்கும் அதன் கருத்துகளுக்கும் முன்னோடிகளான ஆழ்வார்கள் கூறாத கருத்தைப் பிற்காலத்தவர் தவறாக எடை போடுவது அறிவுக்கு ஏற்றதல்ல.

4. தங்களின் கட்டுரைகளில், `தமிழர் என்றால் இந்துக்கள், இந்துக்கள் என்றால் தமிழர்’ என்ற முரண்பாடான `தொனி’ காணப்படுகிறது. தமிழர் வேறு; இந்துக்கள் வேறு. தமிழிரில் ஒரு பகுதியினர் பிற்காலத்தில் இந்துக்களாக மாறினரே ஒழியத் தமிழர் அனைவரும் இந்துக்களல்லர். புத்த சமயம், கிறிஸ்தவ சமயம் முதலியன போல், `இந்துமத’மும் மிகப் பிற்காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்து புகுந்ததேயன்றி, `தமிழர்’ என்ற ஓர் இனம் உருவானபோது, அவர்களிடையே எந்தவித மதப் பாகுபாடோ, மூடக் கருத்துகளோ இன்று காணப்படுவது போல் காணப்படவில்லை. அன்று வாழ்ந்த திராவிடத்தார் `மதம்’ அற்றவர்கள். அன்பு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.

`இந்து’ என்ற சொல்லே, மிக்க அண்மைக்காலத்தில் தோன்றியதென்று அறிஞர்கள் ஆராய்ந்துள்ளார்கள். `அநேகமாக இந்தியாவில் முஸ்லீம் படையெடுப்புகள், தொடங்கிய கி.பி. 1001-க்குப் பின் உள்ள காலத்திற்றான் `இந்து’ என்ற சொல் ஒரு மதத்தைச் சுட்டி வருகிறது. அச்சொல் முதன் முதல் கி.பி. 8 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நூலிலேயே காணப்பட்டது என்று கூறப்படுகிறது. முஸ்லீம் படை எடுப்பாளர், இந்தியாவை `இந்துஸ்தான்’ என்றே அரேபியப் பெயரால் அழைத்தனர். அவர்களே முதன்முதலாக இந்திய மக்களின் மதத்தை `இந்துமதம்’ என்றும், அதனைப் பின்பற்றுவோரை இந்துக்கள் என்றும் அழைத்தனர்’ – ஆதாரம், அமெரிக்கக் கலை களஞ்சியம்.

(பிபகுக் ஞிசூக் ச்கி ஞ்குக் ஞுச்சுஙீக்ஷ பிஏகூஙூக்ஷஞிபீ ஞ்ச் க்ஷக்சூஷசுகூஸக் ஹ சுக்ஙீகூகீகூச்ஙூ சிசுச்ஸஹஸஙீட் சிச்சூஞ்க்ஷஹஞ்க்சூ ஞ்குக் ஙுஞிசூஙீகூஙு கூஙூஞீஹசூகூச்ஙூ ச்கி ஐஙூக்ஷகூஹ ஞுகுகூஷகு ஸக்கீஹஙூ கூஙூ 1001 அ.ஈ. ஞ்குக் ரச்சுக்ஷ கூஞ்சூக்ஙீகி கூசூ சூஹகூக்ஷ ச்கி ச்ஷஷஞிசு கிச்சு ஞ்குக் கிகூசுசூஞ் ஞ்கூஙுக் கூஙூ ஹ ஸச்ச்ஙி ச்கி ஞ்குக் 8ஞ்கு ஷக்ஙூஞ்ஞிசுட் அ.ஈ. பகுக் ஙஞிசூஙீகூஙு கூஙூஞீஹக்ஷக்சுசூ ஞுகுச்சூக் அசுஹஸகூஷ ஙூஹஙுக் கிச்சு ஐஙூக்ஷகூஹ ஞுஹசூ பிஏகூஙூக்ஷஞிசூஞ்ஹஙூபீ ஞுகுச் கிகூசுசூஞ் ஷஹஙீஙீக்க்ஷ ஞ்குக் சுக்ஙீகூகீகூச்ஙூ ச்கி ஞ்குக் சிக்ச்சிஙீக் ச்கி ஐஙூக்ஷகூஹ பிஏகூஙூக்ஷஞிகூசூஙுபீ ஹஙூக்ஷ கூஞ்சூ ஹக்ஷகுக்சுக்ஙூஞ்சூ ஏகூஙூக்ஷஞிசூ பகுக் உஙூஷட்ஷஙீச்சிக்க்ஷகூஹ அஙுக்சுகூஷஹஙூஹபீ.)

வரலாறு இப்படி இருக்கும்போது, தங்களின் கட்டுரை ஒன்றில் (மங்கல வழக்குகள்), “அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது சாப்பாடு மட்டமாக இருந்தாலும் அற்புதமாக இருக்கிறது என்று சொல்வது இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம்”.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்

“நமது (இந்துக்கள் -?) நாகரிகமோ 2000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிவிட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

தங்களின் கூற்றுப்படி பார்த்தால் மதப் பாகுபாடற்ற – மதத்தைப் பற்றிப் பொருட்படுத்தாத `மதம்’ என்று ஒன்று இருக்கிறது; என்று எவ்விடத்திலும் கூறாத திருவள்ளுவரும், ஒர் இந்து; அவர் எழுதிய திருக்குறளும் இந்துமத நூல். ஏன், சங்க நூல்களே இந்துமத நூல்கள் என்றல்லவோ மக்கள் தவறாகக் கருதிவிடுவார்கள் என்று எண்ணுகின்றேன்.

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்

என்று, திருக்குறளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்த சங்க நூலான நற்றிணை, மேற்காட்டப்பட்ட திருக்குறளுடன் ஒத்த கருத்தைக் கூறுவதால், நற்றிணைக் காலத்துத் தமிழரும் இந்துக்களாகவன்றோ மாறிவிட்டிருப்பர்?

நான் இவ்வாறு கருதுவதற்குக் காரணம், தாங்கள் வேறோர் கட்டுரையில் `நான் ஒரு இந்து என்ற முறையில் எனது மதத்தின் மேன்மைகளை நான் குறிப்பிடுகிறேன்’ என்று, பெரியாரின் பள்ளியில் படித்த பாடத்தையும் மறந்து கூறியதாம்.

இவற்றிற்குத் தாங்கள் தக்க பதில் அளிப்பீர்கள் என்று கருதுகிறேன்.

யாழ்பாணம் அண்ணா இராசேந்திரம்

பதில்

நண்பரே, தங்கள் கேள்விக்குத் தாங்கள் கொடுத்துள்ள எண் வரிசையிலேயே நானும் பதில் தருகிறேன்.

1. தாங்கள் குறிப்பிட்டுள்ள நாலடியார் பாடல் எனக்கும் நினைவுக்கு வருகிறது.

இந்த நாலடியார் பாடலைக் கொண்டே `நல்ல நண்பர்கள்’ என்ற தலைப்பில் முன்பு தென்றலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

அதில் பனை, தென்னை, பாக்கு என்றே குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் பின்பு ஒரு முறை திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் விரிவுரை ஒன்றைக் கேட்டபோது, கடை நண்பர்களுக்குப் பாக்கு மரத்தைவிட வாழை மரம் பொருத்தம் என்று கருதினேன்.

வாழை மரத்தைச் சுட்டி அவரொரு பாடலும் சொல்லியதாக நினைவு.

தங்களைப் போலவே வேறு சில நண்பர்கள் சில பாடல்களைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு நன்றி.

2. நீங்கள் சொன்னது சரி.

`ஊழ்வினை உறுத்து வந்தூட்டும்’ என்பது இளங்கோவடிகளின் கூற்றே. அது எனக்குத் தெரியும்.

ஆனால், எதை எடுத்தாலும் `வள்ளுவன் வள்ளுவன்’ என்று சொல்லிப் பழக்கப்பட்டு விட்டதால், மேற்கூறிய சொற்களையும் கவனக்குறைவாக வள்ளுவன் சொல்லியதாக எழுதிவிட்டேன்.

இதுநாள்வரை இதனைத் தங்களைத்தவிர வேறு யாரும் கவனப்படுத்தவில்லை.

காரணம், நான் தவறாகச் சொல்ல மாட்டேன் என்ற நம்பிக்கையாக இருக்கலாம்! அல்லது மேற்போக்காகப் படித்தபோது, இந்தத் தவறு புரியாமல் இருந்திருக்கலாம். எனது கவனக்குறைவை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.    3. பார்த்தனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது தான் `கீதை’ என்பதிலே எனக்கு எந்தவித ஐயப்பாடுமில்லை.

அர்ஜுனன் கண்ணனை விளித்துக் கேள்விக் கேட்பதும், கண்ணன் பதில் சொல்லுவதுமாகவே கீதையின் வடிவம் இருக்கிறது.

அதனை இடைச் செருக்கல் என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

அன்றியும், திருக்குறளை ஒரு தொகுப்பு நூல் என்று சொன்னால், அது எவ்வளவு தவறாகுமோ, அவ்வளவு தவறு கீதையையும் தொகுப்பு நூல் என்பது.

சங்கம் மருவிய காலத்தில் வாழ்ந்த ஆழ்வார்களோ, பிற்கால ஆழ்வார்களோ, தமது பிரபந்தங்களில் `கீதா சாரியன் கண்ணன்’ என்று கூறுவதால், கீதை வெறும் தொகைநூல் என்றாகி விட்டது.

திருக்குறளை மேற்கோளாகக் கொள்ளும் இளங்கோ அடிகள், குறள் வள்ளுவன் பாடியது என்று கூறாததால் அது வேறு எவரோ பாடியது ஆகாது.

பிற்காலக் கம்பன், சிலப்பதிகாரத்தையும் இளங்கோவையும் சுட்டிக் காட்டாததால், சிலம்பு இளங்கோ பாடியதல்ல என்றாகி விட்டது.

கண்ணனைப் போலவே, தங்களையும் ஆசாரியர்களாகக் கருதிக்கொண்ட ஆழ்வார்கள், அதனைச் சுட்டிக் காட்டாதிருக்கலாம்.

அதற்காகக் கீதையிலே மிகத் தெளிவாக தெரியும் பார்த்தன் – பரந்தாமன் உரையாடல் வடிவத்தைக் கட்டுக்கதை என்று ஏற்றுக் கொள்ள நான் தயாராயில்லை.

4. எனது கட்டுரைத் தொடரில் தமிழர் என்றால் இந்துக்கள் என்றோ, இந்துக்கள் என்றால் தமிழர்கள் என்றோ, மொத்தமாக நான் எங்கேயும் கூறவில்லை.

தமிழர்களில் இந்துக்களாக உள்ளவர்களின் பழக்க வழக்கங்களையே நான் குறிப்பிட்டிருக்கிறேன்.

தாங்கள் கூறுவதுபோல, தமிழர்களில் ஒரு பகுதியினர், பிற்காலத்தில் இந்துக்களாக மாறினார்கள் என்பதையும் வாதத்துக்காக நான் ஒப்புக் கொள்கிறேன்.

நான் செய்துக் கொண்டிருப்பது `இந்து மதம்’ எப்போது தோன்றியது? என்ற ஆராய்ச்சி அல்ல.

இந்து மதத்திலுள்ள பண்பாடுகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், வழக்குகள் ஆகியவை பற்றிய விரிவுரையே.

`தமிழர்’ என்றொரு இனம் உருவானபோது, `அவர்களிடம் எந்தவிதமான மதக்
கருத்துகளும் இல்லை’ என்று நீங்கள் சொல்வது நகைப்புக்கு இடமானது.

உலகில் எந்த இனம் பிறந்தபோதும், மதமும் கூடவே பிறந்ததில்லை.

பிற்காலத்தில், அந்தந்த இனங்கள் ஒவ்வொரு அடிப்படைத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கொரு பெயர் வைத்துக்கொண்டது தான், மதத்தின் வரலாறு.

அப்படித்தான் தமிழர்களிலும் ஒரு பகுதியினர் இந்துக்கள் ஆனார்கள்.

`அன்று வாழ்ந்த திருவிடத்தார் மதம் அற்றவர்கள்’ என்பது வெறும் கட்டுக்கதை.

`பகுத்தறிவு’ என்ற பெயரால், பழைய தமிழனின் வரலாற்றையும் மலிவான விலைக்கு வாங்கித் திருத்தம் பெற்ற புதிய பதிப்பாக வெளியிட்டுச் சிலர் செய்த திருக்கூத்து.

சிந்துவெளி நாகரிகத்திலேயே தமிழர்களுக்கு இறை வழிபாடு இருந்திருக்கிறது.

இறைவழிபாடு உள்ளவர்களைத் தான் `மதம்’ என்ற சொல் ஒன்று சேர்க்கிறது.

தமிழர்களிடையே பலவகையான மதங்கள் இருந்தன என்பது உண்மையே தவிர, `மதமே இல்லை’ என்பது ஈரோட்டுக் கடைத் தெருவில் வாங்கி வந்து காஞ்சிபுரம் சந்தையில் விலையான வாதம்.

`இந்து’ என்ற சொல் எந்தக் காலத்தில் வந்தது என்ற ஆராய்ச்சி எனக்குத் தேவையில்லை என்றாலும், அது பிற்காலத்தில் வந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

அதற்காக, `இந்து’ என்ற வார்த்தை பிறந்த பிறகுதான் மதம் பிறந்தது’ என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?

`சைவர்கள்’ என்றும் `வைணவர்கள்’ என்றும் தனித் தனியாக அழைக்கப்பட்ட எல்லாரையும் ஒன்றாகச் சேர்த்துப் பிற்காலத்தில் சூட்டப்பட்ட பெயரே `இந்து’ என்பது. அது நீங்கள் குறிப்பிட்ட காலத்தில்தானா அல்லது வேறு காலத்திலா என்பது, அதுபற்றி ஆராய்ச்சி செய்வபவர்தாம் கூறவேண்டும்.

வள்ளுவர் குறள்களில் பல்வேறு சமயக் கருத்துகளும் காணக் கிடக்கின்றன.

பௌத்த கருத்துகளும் அதில் இருந்தாலும், வள்ளுவன் ஒரு புனிதமான இந்து என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

அவன் இறைவனை `ஆதிபகவன்’ என்றழைக்கிறான்.

“பகவான் என்றால் என்ன?”

“பகவானே ஈசன்; மாயோன் பங்கயன் சினனே புத்தன்” – என்பது சூத்திரம்.

`பகவான்’ என்ற வார்த்தை, `ஈசன்’ என்ற சிவனையும், `மாயோன்’ என்ற திருமாலையும், `பங்கயன்’ என்ற பிரம்மாவையும், `சினன்’ என்ற ஜைனனையும், புத்தனையும் குறிக்கிறது.

(நான் முதல் இதழில் `ஆதிபகவான்’ என்பது ஜைன – சமணக் கடவுள்களையே குறிக்கிறது என்றே எழுதியிருக்கிறேன்.

ஆனால், சூத்திரப்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற இந்துக் கடவுள்களையும், அந்த வார்த்தை சுட்டிக் காட்டுகிறது.

அஃதன்றியும்,

`தாமரைக் கண்ணன்’ என்றும், `அறவாழி அந்தணன்’ என்றும், `வேண்டுதல் வேண்டாமை இலான்’ என்றும் பல இடங்களில் அவன் குறிப்பிடும் இறைவன் கருத்து, இந்துமதக் கருத்தாகவே இருக்கிறது.

(அடுத்த இதழில், `வள்ளுவன் ஒரு இந்துவே’ என்பதை நிலைநாட்ட ஒரு முழுக் கட்டுரையே எழுதுகிறேன்.)

“நாகரிகம்’ பற்றிய கருத்து நற்றிணையிலும் காணப்படுவதால், “நற்றிணைக் காலத் தமிழர்கள் இந்துக்களா?” எனக் கேட்கிறீர்கள்.

அதே நாகரிகம் இன்று இந்துக்களாக இருக்கிற தமிழர்களிடம் காணப்படுகிறது என்றுதான் நான் கூறினேனே தவிர, அந்த நாகரிகத்திற்கு என்ன வயது என்று நான் ஆராயவில்லை.

நற்றிணைக் காலத்தில் இந்துமதம் இருந்ததில்லை என்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் என்ன?

நீங்கள் இரண்டு வரி ஆதாரம் காட்டினால், இருந்தது என்பதற்கு நான் நான்கு வரி காட்டுவேன்.

அது வெறும் ஆராய்ச்சியே!

கடந்து போன காலங்களைப் பற்றிக் கற்பனாவாத ஆராய்ச்சியில் நான் ஈடுபட விரும்பவில்லை.

இந்து மதத்தில் என்னென்ன அர்த்தங்கள் உள்ளன என்பதே நான் எழுதும் விரிவுரை.

நான் பெரியார் பள்ளியில் படித்தவன் என்பதை மறந்து விட்டதாகக் கூறுகிறீர்கள்.

நான் சுயமரியாதை இயக்கத்திலோ கருஞ்சட்டைப் படையிலோ, திராவிடர் கழகத்திலோ இருந்ததே இல்லை.

தி.மு.க. ஆரம்பிக்கப்பட்டபோது அதில்தான் நான் சேர்ந்தேன்.

அங்கேயும் நாத்திக வாதம் நாலைந்து ஆண்டுகள் தான் நடந்தது.

பிறகு, அவர்களே `ஒன்றே குலம்; ஒருவனே தேவன்’ என்று ஆரம்பித்து விட்டார்கள்.

அவர்கள் சொல்லும் ஒருவன் `யார்’ என்பதை அவர்களுக்குச் சொல்வதே என் கட்டுரை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி!

பேச்சு மூச்சற்ற பேரின்ப வெள்ள முற்று

நீச்சுநிலை காணாமல் நிற்கும்நாள் எந்நாளோ!

இப்படி, சாவை அழைக்கவில்லை தாயுமானவர்;

எல்லாம் கடந்த பேரின்ப நிலையை அழைக்கிறார்.

சர்வாங்கமும் ஒருமுகமாகி இன்ப துன்பங்களைக் கடந்து நிற்கும் நிலையே பேரின்ப நிலையாகும்.

புலன்களும் பொறிகளும் மனிதனுக்குள் உள்ளவையே.

அவற்றைக் கட்டுப்படுத்த மனிதனால் முடியும் என்பது நமது ஞானிகளின் வாதம்.

சமயத் துறையின் மூலம் அதனைச் சாதிக்க முடியும் என்பதை அவர்கள் காட்டினார்கள்.

சராசரி மனிதன் புற உணர்ச்சிகளால் அகவுணர்ச்சி பாதிக்கப்படுகிறான்.

அகவுணர்ச்சியின் பாதிப்பால் புறத் தோற்றத்திலும் மாறுதலடைகிறான்.

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்

என்றார் வள்ளுவர்.

இப்படி மனத்தால் உடலும் உடலால் மனமும் பாதிக்கப்படுவதிலிருந்து நீங்கி, பேச்சு மூச்சற்ற பேரின்ப வெள்ளத்தைக் காண விழைகிறார் தாயுமானவர்.

துன்பங்களிலிருந்து விடுபட, நமது சித்தர்களும் ஞானிகளும் சொல்லிப்போன வழிகள் ஏராளம்.

பாதிப்புகள் தவிர்க்க முடியாதவை.

அந்தப் பாதிப்புகளைத் தாங்கிக் கொள்ளும் சகிப்புத் தன்மை, பயிற்சியின் மூலமும் அனுபவங்களின் மூலமும் வரும்.

நான் முன் கட்டுரைகளில் சொன்னபடி ஒவ்வொரு துன்பத்திற்கும் மூலமிருக்கிறது.

ஏதோ ஒன்றின் தொடர்ச்சியே அது.

அது போன ஜென்மத்தின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம்; இப்பிறப்பில், ஒரு கட்டத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு எதிரொலியாகவும் இருக்கலாம்.

காலிலே ஒரு முள் குத்துவதற்குக் கூட உனக்கு விதிக்கப்பட்ட விதி காரணமாக இருக்கிறது.

ஆகவே துன்பம் எத்தகையதாயினும், அது நீயே உண்டாக்கிக் கொண்டதாயினும், உன்னை உண்டாக்கும்படி தூண்டிய சக்தி ஒன்றிருக்கிறது.

அந்த சக்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டால் பலன் தருகிறது.

“எல்லாத் துன்பங்களுக்கும் விதி காரணமென்றால் நிலையானதும் நிரந்தரமானதுமான அந்த விதி, பிரார்த்தனையின் மூலம் எப்படி மாறிவிடும்!” என்று ஒருவர் கேட்கிறார்.

ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளத்தை அணை கட்டி நிறுத்துவதுபோல், பிரார்த்தனை துயரங்களை நிறுத்துகிறது.

இயற்கையாகவே, அது ஒரு மனச் சாந்தியை உண்டாக்குகிறது.   துன்பம் ஓரளவு குறைந்தாலும், பிரார்த்தனை பலனுள்ளதாகத் தோன்றுகிறது.

நீ நம்பிக்கை வைக்கின்ற டாக்டர் மருந்துக்குப் பதிலாக வெறும் தண்ணீரையே ஊசி மூலம் ஏற்றினாலும் நோய் குறைந்துவிட்டது போல உனக்குத் தோன்றுகிறது.

அது தோன்றுவதுதான் முக்கியம்.

அது தோன்றுவதற்கு நம்பிக்கைதான் பிரதானம்.

மருந்து பாதி, மன நம்பிக்கை பாதி!

பிரார்த்தனை பாதி, நம்பிக்கை பாதி!

நம்பிக்கையோடு பிரார்த்தித்தால், விதியின் வேகம் குறைந்து விட்டதாக உனக்கே தோன்றுகிறது.

விரோதித்து நின்ற விதி, ஒத்துழைப்பதாகவும் தோன்றுகிறது.

`கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்று, ஒரு வரியில் சொல்லி வைத்தார்கள் நம்முடைய மூதாதையர்கள்.

நம்பிக்கையே வெற்றிக்கும் நிம்மதிக்கும் அடிப்படை.

ஆதி மனிதன், கடலைக்கண்டு பயந்தான்.

அடுத்த மனிதன், கொஞ்ச தூரம் கடலுக்குள் நடந்து பார்த்தான்.

அவனுக்கு அடுத்தவன், நீந்திப் பார்த்தான்.

இன்னொருவன் கட்டையைப் பிடித்துக் கொண்டு பயணம் போனான்.

கட்டை, படகு ஆயிற்று; படகு கப்பலாயிற்று; பயணம் சுலபமாயிற்று.

கடலும் கடக்கக்கூடியதே என்ற நம்பிக்கை வந்தது.

உலகம் உருண்டை என்ற உண்மையும் தெரிந்தது.

விமானத்தின் பறக்கும் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சங் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொண்டே போன மனிதன், சந்திரமண்டலம் வரை பயணம் போகலாம் என்ற நம்பிக்கை கொண்டான்.

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

பையன் ஒழுங்காகப் படிப்பான் என்ற நம்பிக்கையால் தான், அவனை வெளிரில் படிக்க வைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார் தந்தை.

மனைவியைப் பிரிந்து வாணிபத்திற்காக வெளிர் போகிறவன், திரும்பி வரும்வரை மனைவி பத்தினியாக இருப்பாள் என்ற நம்பிக்கையில்தான் போகிறான்.

இன்பமும் நிம்மதியும் நம்பிக்கையில்தான் தோன்றுகின்றன.

நான் கடவுளிடம் நம்பிக்கை வைத்தது வீண்போகவில்லை.

அதிலும் ஒருவனையே பற்றி நிற்பது என்ற முடிவு கட்டிக்கொண்டு `சிக்கெனப் பிடித்தேன் தேவனே உன்னை’ என்று கண்ணனைப் பற்றி நிற்பது, பலனளித்தது.

சிலருக்கு சக்தி நம்பிக்கை பலம் தருகிறது.

சிலருக்கு சிவ நம்பிக்கை.

சிலருக்கு முருக நம்பிக்கை.

இன்னும் எத்தனையோ!

நீ நல்ல தொழிலாளியாக இருந்தால், மோசமான முதலாளிகூட உன்னிடம் அன்பு காட்டுகிறான்; கருணை காட்டுகிறான்.

நீ நம்பிக்கையுள்ள பக்தனாக இருந்தால் குட்டித்தேவதைகள் கூட உன்னை ரட்சிக்கின்றன.

துன்பங்களைக் களைவதற்கு நம்பிக்கையே முக்கியம்.

முதன் முதலில் ஒரு பத்திரிகையில் போய் நான் சேர்ந்தபோது, “உனக்கு புரூப் பார்க்கத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.    உண்மையில் எனக்குத் தெரியாது.

துணிந்து `தெரியும்’ என்று கூறி விட்டேன்.

அதற்கொன்றும் `டிப்ளமா’ தேவையில்லையே!

நேரே அச்சகத்திற்குப் போனேன்.

முன்பு திருத்தப்பட்ட புரூப்புகளைப் பார்த்தேன்.

உடனே நானும் திருத்த ஆரம்பித்துவிட்டேன்.

அந்தக் கலையில் எனக்கு வெகுநாளாகப் பயிற்சி இருப்பதுபோல் பத்திரிகையாளருக்குத் தோன்றிற்று.

பிறகு, “தலையங்கம் எழுதத் தெரியுமா?” என்றார்கள்.

“தெரியும்” என்றேன்; எழுதிவிட்டேன்!

“அற்புதம்! அற்புதம்!” என்றார்கள்.

அதன் பலன் ஆசிரியருக்கு வேலை போய்விட்டது; நான் ஆசிரியனாகி விட்டேன்!

எதிலுமே நம்பிக்கை பலன் தருகிறது என்றால், அத் துன்பங்களைக் களையத் தெய்வநம்பிக்கை பலன் தராதா?

“நம்பினோர் கெடுவதில்லை; நான்கு மறை தீர்ப்பு” என்றார்கள்.

உண்மையில், நம்பிக்கை என்பது இயற்கையாகவோ செயற்கையாகவோ வெற்றி பெற்று விட்டது போல் தோற்றமளித்து, நிம்மதியைத் தருகிறது.

சீதை இலங்கையிலிருந்தபோது, `ராமன் வருவான்’ என்று நம்பினாள்.

ராமனும், `சீதையைக் காண்போம்’ என்று நம்பினான். ராவணனும் `ராமன் வரத்தான் போகிறான்’ என்று எதிர்பார்த்தான்.

அந்த நம்பிக்கை ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்ததாலே ஏற்பட்ட நம்பிக்கை.

தெய்வத்தை நம்பும்போது அறிந்து நம்பவேண்டும்.

ஏதோ கஷ்டம் வந்துவிட்டது, கோவிலுக்குப் போய் வருவோம் என்று போய் வருவதில் அர்த்தமில்லை.

அறிவு ஒரு சக்தியின் மீது லயித்து நம்பிக்கை உதயமாக வேண்டும்.

அதற்குப் பகுத்தறிவு தேவையில்லை.

`இந்தத் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்’ என்று உனக்கே தோன்றி, அந்த லயத்தில் நம்பிக்கை பிறக்கவேண்டும்.

உலகத்தில் பகுத்து அறியவேண்டிய விஷயங்கள் சில உண்டு.

அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு.

மனைவியின் உள்ளத்தை நீ பகுத்தறிய முயலலாம்.

உடலைப் பகுத்தறிய முயன்றால், அவள் அழகு தெரியாது. எலும்பும் சதையுந்தான் தோன்றும்.

ஸ்தூலங்களைப் பகுத்தறிந்தால் அவை வெறும் கல்லும் செம்புமாகத் தோன்றும்.

அப்படியே ஏற்றுக்கொண்டால், அந்த சக்தி உன்னை ஆகர்ஷிக்கும்.

நம்பிக்கை கொண்டவர்களை அந்தச் சக்தி எப்படியும் ஒரு கட்டத்தில் வாழவைக்கும்.

மனிதனின் பலவீனமான மனத்தை அறிந்துதான் இந்துக்கள் நம்பிக்கையோடு வழிபடுவதை வற்புறுத்தினார்கள்.

எத்தகைய துயரங்களிலிருந்தும் விடுபடுவதற்கு வழி சொன்னார்கள்.

ஒவ்வொரு சிருஷ்டியிலும் சிக்கல் இருக்கிறது என்பதை முதலில் உணர்ந்துக் கொள்ளவேண்டும்.

அந்தச் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்கே ஒவ்வொரு ஜீவனும் வாழ்க்கையை நடத்துகிறது.

ஆகவே, பிரார்த்தனையே ஒரு யோகமாகவும் பயிற்சியாகவும் கொண்டு, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டே வந்தால், துன்பங்கள் விலகாவிடினும் அவற்றைப் பற்றிய பயம் நீங்கி, நிம்மதி ஏற்பட்டுவிடும்.

நெஞ்சுக்கு நிம்மதி;

ஆண்டவன் சந்நிதி!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வரும் ஏற்றுக் கொள்; தரும் பெற்றுக்கொள்!

லௌகீக வாழ்க்கையில் நாம் தவம் செய்கிறோம் என்றும், அந்தத் தவம் எத்தகையது என்றும் விளக்கி, ஸ்ரீ ராம்சந்த்ரஜி கூறியுள்ள கருத்துக்களை நான் முன்னே விவரித்தேன்.

உலக இச்சைகளுடனேயே உடைமைகளையும் பெற்றுப் பற்றற்று வாழ்வது என்ற கருத்து மிகவும் புதியது.

நம்முடைய சுற்றத்தாரும், நண்பர்களும், ஊழியர்களும் நமக்கு இழைக்கின்ற துயரங்களால் நமது மனம் பக்குவப்படுகிறது என்கிறார் அவர்.

அது மிகவும் உண்மை.

சிலர் நாக்கிலும் உடம்பிலும் ஊசியைக் குத்திக் கொள்கிறார்கள்.

சிலர் கூர்மையான ஆணிகளின் மீது படுத்துப் புரளுகிறார்கள். சிலர் கண்ணாடித் துண்டுகளை விழுங்கிக் காட்டுகிறார்கள்.

இந்த யோகங்கள் எல்லாம் சரீரத்தின் புறத்தோற்றம் பதப்படுத்தப்பட்டு, பக்குவம் பெற்றுவிட்டதைக் குறிக்கின்றன.

கடுந் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம் சரீரம் யோகம் செய்வதுபோல், பிறர் நமக்கு இழைக்கும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதன் மூலம், உள்ளம் தவம் செய்கிறது.

ஆரம்பக் கட்டத்தில் சிறிய துன்பங்கூடப் பெரிதாகத் தெரியும்.

அது வளர வளர உள்ளம் மரத்துக் கொண்டே வரும்.

ஒரு கட்டத்தில் எதையும் தாங்கிக் கொள்கிற சக்தி வந்துவிடும்.

துன்பங்களின் மூலம் உலகத்தைக் கற்றுக் கொண்டவன் ஒரு ஞானியைவிடச் சிறந்த மேதையாகி விடுகிறான்.

ஓரளவு துன்பம் வந்தால் அழுகை வருகிறது.

தொடர்ந்து துன்பங்கள் வந்துக்கொண்டே இருந்தால், அழுவதற்கு சக்தி இல்லாமற் போய், வெறுப்பும் விரக்தியும் கலந்த சிரிப்பு வருகிறது.

ஒரு கட்டத்தில் எந்தத் துயரம் வந்தாலும் சிரிப்பது பழக்கமாகி விடுகிறது.

அதுவே ஞானம் வந்துவிட்டதென்பதற்கு அடையாளம்.

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்
தள்ளவொணா விருந்துவர சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கள்வந்து தட்சணைகள் கொடு என்றாரே!

என்றொரு பாடல்.

ஒரு மனிதனுக்கேற்பட்ட துயர அனுபவமாம் இது!

கற்பனை தான்!

ஆனால், ஒரே நேரத்தில் வரும் துயரங்களின் வரிசையைப் பாருங்கள்.

பசு மாடு கன்று போட்டதாம்.

அடாத மழை பெய்ததாம்.

வீடு விழுந்து விட்டதாம்.

மனைவிக்குக் கடுமையான நோய் வந்ததாம்.

வேலைக்காரன் இறந்து போனானாம்.

வயலில் ஈரம் இருக்கிறது.

விதைக்க வேண்டுமென்று ஓடினானாம்.

வழியில் கடன்காரர்கள் மடியைப் பிடித்து இழுத்தார்களாம்.

“உன் மகள் இறந்து போனாள்” என்று சாவுச் செய்தியோடு ஒருவன் வந்தானாம்.

இந்த நேரத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சேர்ந்தார்களாம்.

பாம்பு அவனைக் கடித்துவிட்டதாம்.

நில வரி வாங்க அதிகாரிகள் வந்து நின்றார்களாம்.

குருக்களும் தட்சிணைப் பாக்கிக்காக வந்திருக்கிறாராம்.

ஒரே நேரத்தில் இவ்வளவு வந்து சேர்ந்தால் ஒருவனுக்கு அழுகையா வரும்?

இவ்வளவு துன்பங்களையும் சந்தித்த பிறகு, ஒருவன் மனம் மரத்துப் போகும்.

மரத்துப்போன நிலையில், துன்பங்களைக் கண்டு பிடிக்காமல் அலட்சியப்படுத்தத் தோன்றும்.

“நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்ற தைரியம் வந்துவிடும்.

சிறிதளவு இன்பமும் பெரியதாகத் தோன்றும்; பேராசை அடிபட்டுப் போகும்.

பல ஆண்டுகள் தவம் செய்து பெறுகிற ஞானத்தை விட இந்த ஞானம் அழுத்தமானது; ஆழமானது; உண்மையானது; உறுதியானது.

ஆகவே, லௌகீக வாழ்க்கைதான் அதில் ஏற்படும் இன்ப துன்பங்கள்தான் ஒரு மனிதனைப் பக்குவம் பெற்ற ஞானியாக்குகின்றன.

எனக்கு இதிலும் அனுபவம் உண்டு.

என் ஞானம் என்பது என் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து திரட்டப் பெற்ற தொகுப்பு நூல்.

பூனையின் மலமே புனுகு ஆவதுபோல, மோசமான அனுபவங்களே உண்மையான அறிவை உண்டாக்குகின்றன.

அனுபவங்களே இல்லாமல், இருபது வயதிலேயே ஒருவன் பற்றற்ற வாழ்க்கையைத் தொடங்கினால், அடுத்துச் சில ஆண்டுகளிலேயே அவன் லௌகீக வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவான்!

இல்லையேல் கள்ளத்தனமான உறவுகளில் இறங்குவான்.

அந்தத் துறவு போலித்தனமானது.

அண்ணா ஒரு முறை சொன்னதுபோல் “படுக்கையில் படுக்க வேண்டும்; பாம்பு வர வேண்டும்; கடிக்க வேண்டும்; உயிர் துடிக்க வேண்டும், ஆனால் சாவு வரக்கூடாது” இப்படித் தினமும் ஒருவனுக்கு நேர்ந்தால், பாம்பே அவனுக்கு வேடிக்கையான ஜந்து ஆகிவிடும்!

பிறகு அது வருமென்று தெரிந்தே அவன் படுப்பான்.

“கடிக்கும் என்று தெரிந்தே தயாராயிருப்பான், கவலைப்பட மாட்டான்”.

ஸ்ரீ ராம்சந்த்ரஜி கூறும் `லௌகீக வாழ்க்கையில் `தவம்’ என்பது இதுதான்.

யார் யாருக்கு நான் சோறு போட்டேனோ, அவர்கள் எல்லோரும் என் கையைக் கடித்திருக்கிறார்கள்.

அதிலிருந்து யாருக்குப் போடலாம், யாருக்குப் போடக்கூடாது என்ற புத்தி எனக்கு வந்துவிட்டது.

என் படுக்கையிலும் பாம்பு வந்து என்னைக் கடித்திருக்கிறது. இப்போதெல்லாம் பாம்பைப் பற்றிய பயமே எனக்கு இல்லாது போய்விட்டது.

துன்பம், துன்பம் என்று ஒவ்வொருவரும் தலையிலடித்துக் கொள்கிறார்களே! அவர்கள் அந்தத் துன்பந்தான் அவர்களுடைய குரு என்பதை மறந்து போகிறார்கள்.

கிராமங்களிலே `பட்டறி, கெட்டறி’ என்பார்கள்.

பட்டால் தான் அறிவு வரும்.

கெட்டால்தான் தெளிவு வரும்.

அறிவும் தெளிவும் வந்த பின்பு ஞானம் வரும்.

அந்த ஞானத்திலே அமைதி வரும்.

அந்த அமைதியில் பேராசை, கெட்ட எண்ணங்கள் எல்லாம் அடிபட்டுப் போகும்.

பற்று அளவோடு நிற்கும்.

உள்ளம் வெள்ளையடிக்கப்பட்டு நிர்மலமாக இருக்கும்.

அதுவே ஸ்ரீராம்சந்த்ரஜி கூறும், `லௌகீகத்தில் நாம் செய்யும் தவம்.’

“எனக்கு என்ன சீர் கொடுத்தீர்கள்!” என்று சகோதரி ஒருபக்கம் கண்ணீர் வடிப்பாள்.

“ஒரு நகையுண்டா, நட்டுண்டா?” என்று மனைவி உயிரை வாங்குவாள்.

பந்துமித்திரர்கள், நாம் வாழ்ந்தாலும் ஏசுவார்கள்; கெட்டாலும் ஏசுவார்கள்.

வறுமை ஒரு பக்கம் உடலை வாட்டும்.

அமைதியோடும் நிதானத்தோடும் இவற்றைச் சமாளித்து உள்ளத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டால், இந்தத் தவம்பலித்து விடும்.

எனக்கு வரும் கடிதங்களில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைத் துயரத்தால் விம்முவதை நான் காணுகிறேன்.

அந்தத் துயரங்களை அவர்கள் அலட்சியப்படுத்தியோ ஜீரணித்தோ தான் அமைதி
அடையவேண்டும்.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போக இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

என்றொரு வெண்பா.

நீ வருந்தி வருந்தி அழைத்தாலும் வரமுடியாதவை வரமாட்டா?

உன்னோடு ஒட்டிக்கொள்பவை போகச் சொன்னாலும் போகா!

நினைத்து நினைத்து அழுவதேன்?

ஸ்ரீ ராம்சந்தரஜி சொல்வதுபோல், துயரங்களை ஒரு தவம் என்றெண்ணு.

லௌகீக வாழ்க்கையிலே கிடந்து உழலு.

துயரங்களின் மூலம் அனுபவங்களைச் சேகரி.

இதுதான் உலகம் என்று முடிவுக் கொள்.

இதுதான் நமக்கு விதிக்கப்பட்ட பாதை என்று அறிந்துக் கொள்.

இறைவனை வழிபடு!

காலை முதல் மாலை வரை நடந்தவற்றையெல்லாம் இரவிலே மறந்துவிடு.

மறுநாள் பொழுது மயானத்தில் விடியாது;

அமைதியில் விடியும்.

அளந்து வாழும் மனத்தின் சமநிலை திருடனுக்குக்கூடக் கிடைத்துவிடும்!

பரிதாபத்துக்குரிய கிரகஸ்தனுக்கு அது ஏன்கிடைக்காது?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இதிகாசங்கள்

லௌகிக வாழ்க்கையின் சகல பகுதிகளையும் உள்ளடக்கி, ஒரு பெருங்கை எழுதக்கூடிய சக்தி இன்று எந்த எழுத்தாளருக்காவது உண்டா?

நாகரிகம் வளர்ந்துவிட்ட நிலையில், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்துவிட்ட நிலையில், பல நாட்டுக் கதைகளையும் படிக்கின்ற வாய்ப்பு அதிகப்பட்ட நிலையில், நம் மூதாதையர்களைவிட நாம் அறிஞர்கள் என்று கருதுகின்ற நிலையில், சகலவிதமான குணாதிசயங்களைக்கொண்டு பல பாத்திரங்களை உருவாக்கி ஒரே கதையாக எழுதுகின்ற சக்தி இன்று யாருக்காவது உண்டா? எனக்குத் தெரிந்தவரை இல்லை.

நம்முடைய இதிகாசங்களை வெறும் கற்பனைக் கதைகள் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அந்தக் கற்பனைக்கு ஈடு கொடுக்க உலகத்தில் இன்னும் ஓர் எழுத்தாளன் பிறக்கவில்லை.

பெருங்கதைகளும் அவற்றுக்குள் உப கதைகளுமாக எழுதப்பட்ட நமது இதிகாசங்களின் பாத்திரப் படைப்புத்தான் எவ்வளவு அற்புதம்!

அவை கூறும் வாழ்க்கைத் தத்துவங்கள்தான் எத்தனை!

நம்பிக்கை
அவநம்பிகை
ஆணவம்
மீட்சி
காதல்
ராஜதந்திரம்
குறுக்குவழி
நட்பு
அன்பு
பணிவு
பாசம்
கடமை

- இப்படி வாழ்க்கையில் எத்தனை கூறுகள் உண்டோ அத்தனையும் நமது இதிகாசங்கள் காட்டுகின்றன.

மகாபாரதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
பொறுமைக்குத் தருமன்
துடிதுடிப்புக்குப் பீமன்
ஆண்மைக்கும் வீரத்திற்கும் அர்ச்சுனன்.

மூத்தோர் வழியில் முறை முறை தொடர நகுலன், சகாதேவன்

பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்ட சக்தி மிக்க ஆன்மாவாக, பாஞ்சாலி.

உள்ளதெல்லாம் கொடுத்து, கொடுப்பதற்கு இல்லையே என்று கலங்கும் வள்ளலாகக் கர்ணன்.

நேர்மையான ராஜதந்திரத்திற்கு எடுத்துக்காட்டாகக் கண்ணன்.

குறுக்குவழி ராஜதந்திரத்திற்கு ஒரே உதாரணமாகச் சகுனி!
தீய குணங்களின் மொத்த வடிவமாக கௌரவர்கள்!

தாய்பாசத்திற்கு ஒரு குந்தி!

நேர்மையான கடமையாளனாக விதுரன்.

பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்கள் கருக்கொண்டுவிட்டன.

இந்தப் பாத்திரங்களின் குணங்களை மட்டும் சொல்லி விட்டால் கதை என்ன என்பது தற்குறிக்கும் புரியும்.

இந்தக் கதை வெறும் ஆணவத்தின் அழிவை தருமத்தின் வெற்றியை மட்டும் குறிப்பதல்ல.

லௌகிக வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் பயன்படக்கூடிய படிப்பினை இருக்கிறது.

கதையின் இறுதிக் களமான குருஷேத்திரத்தில் கதையின் மொத்த வடிவத்திற்கும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதுவரை சொல்லி வந்த நியாயங்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன.

பகவத் கீதை, மகாபாரதக் கதையின் சுருக்கமாகி விடுகிறது.

அரசியல் சமுதாய நீதிக்கு அதுவே கைவிளக்காகி விடுகிறது.

கண்ணனை நீ கடவுளாகக் கருத வேண்டாம்.

கடவுள் அவதாரம் எடுப்பார் என்பதையே நம்ப வேண்டாம்.

பரந்தாமன், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்டவன் என்றே எண்ணிப்பார்.

கீதையைத் தேவநீதியாக நீ ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், மனித நீதியாக உன் கண்முன்னால் தெரியும்.

கண்ணன் வெறும் கற்பனைதான் என்றால், கற்பனா சிருஷ்டிகளில் எல்லாம் அற்புத சிருஷ்டி, கண்ணனின் சிருஷ்டி.

ஊழ்வினை பற்றித் தெரிய வேண்டுமா? – பாரதம் படி.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையுமா? – பாரதம் படி.

ஒன்றை நினைத்தால் வேறொன்று விளையுமா? – பாரதம் காட்டும்.

செஞ்சோற்றுக் கடனா? நன்றியறிதலா? – பாரதம் காட்டும்.

பெற்ற மகனைத் தன் மகன் என்று சொல்ல முடியாத பாசக்கொடுமையா? – குந்தியைப் பார்.

ரத்த பாசத்தால் உன் உள்ளம் துடிக்கிறதா? சொந்தச் சகோதரர்களை எதிர்த்துப் போராட வேண்டிவருகிறதா? அப்போது உனக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லையா?

-கீதையைப் படி.

ஏழைக்கும் பணக்காரனுக்கும் நட்பு இருக்கமுடியுமா?

-கண்ணன் கதைக்கு உபகதையான குசேலன் கதையைப் படி.

விஞ்ஞானம் வளராத காலத்தில், போர்த்துறையில் எத்தனை வகையான ராஜதந்திரங்கள் இருந்தன.

அத்தனையும் ஒட்டுமொத்தமாக அறிந்துகொள்ள மகாபாரதம் படி.

ஒரு பாத்திரத்திற்கு ஒரு குணம் விசேஷம் என்றால், அதைக் கதையின் இறுதிவரையில் கொண்டு செலுத்திய கறபனைச் சிறப்பை அளவிட வார்த்தைகள் இல்லை.

ராம கதைக்கு வா!

காதல் என்றால் என்ன என்பதைக் காட்டக் கூடிய இலக்கியம் அதற்குமேல் ஒன்றில்லை.

சகோதரப் பாசம் ராமனுக்கும், லட்சுமணனுக்கும், பரதனுக்குமிடையே முழு வடிவில் சதுராடுகிறது.

குகனைப்போல் ஒரு நண்பன் கிடைத்தால்,நான் இருந்த இடத்தில் இருந்தபடியே கோட்டைகளைப் பிடிப்பேன்.

அனுமானைப் போன்ற ஓர் ஊழியன் கிடைத்தால், அகிலத்தையே விலைக்கு வாங்குவேன்.

சீதையைப் போன்று ஒரு தேவதை கிடைத்தால், கம்பனோடும் போட்டி போடுவேன்.
விபீஷணனைப் போன்ற ஒரு நியாயவன் கிடைத்தால், இன்றைய ஜனநாயகத்திற்கு நான் மரியாதை செலுத்துவேன்.

பாரதத்திற்குக் கர்ணனைப்போல் இதிலே செஞ்சோற்றுக் கடன் கழிக்கும் கும்பகர்ணன், நன்றிகெட்ட உறவுகளுக்கு ஒரு சவால்!

கோசலையைப் போல் ஒருதாயும், தசரதனைப்போல் ஒரு தந்தையும் யாருகும் அமைந்துவிட்டால், கொடிய வறுமைக்கூட தோன்றாது.!

இவ்வளவு நல்லவர்களக் கொண்ட ராம காதையை இரண்டே தீயவர்கள் நடத்திச் செல்கிறார்கள்.

முதல் பகுதியைத் தள்ளிவிடுகிறாள் மந்தரை. இரண்டாவது பகுதியை ஏற்று நடத்துகிறான் ராவணன்.

ஆயிரம் நல்லவர்களுக்கு அவதியைத் தர, இரண்டு மூன்று தீயவர்கள் போதுமென்றது ராம காதை.

மந்தரையும், சூர்ப்பநகையும், ராவணனுந்தாம் ராமனுக்குத் தெய் வடிவம் தருகிறார்கள்.

நிழல் அருமை வெயிலிலே நின்று அறியப்படுகிறது.

வைணவ இதிகாச சிருஷ்டி இப்படி வானோங்கி நிற்பது கண்டு, சைவர்கள் சிருஷ்டித்ததே முருகன் கதை.

அங்கே வில்;
இங்கே வேல்!
அங்கே ராமன்;
இங்கே முருகன்!
அங்கே ராவணன்;
இங்கே சூரபத்மன்!
அங்கே ராவணனுக்குச் சில தம்பிகள்.
இங்கே சூரபத்மனுக்குச் சில தம்பிகள்.

இரண்டிலும் ஏறத்தாழ ஒரே வகையான பாத்திரப் படைப்புகள்.

(விவரமாக் தெரிந்துகொள்ள திரு ரா.பி. சேதுப்பிள்ளையின் ‘வேலும் வில்லும்ய படியுங்கள்)

ஆயினும், வைணவர்களின் அற்புதக் கற்பனையைச் சைவர்கள் வெல்ல முடியவில்லை!

சைவர்கள் பெரும்பாலும் நாமாவளியாகவே பாடி இருக்கிறார்கள்.

“ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று” என்று இருக்கின்ற முகங்களுக்குக் கணக்குக் சொன்னார்களே தவிர ஆழ்ந்த த்த்துவங்களை அதன்மூலம் உணர்த்த வில்லை.

ஆண்டாள் திருப்பாவையைப் படித்தாற்கூட நமக்கு மெய்சிலிர்க்கிறது.

மனித ஆன்மாவின் தெய்வீக ராகத்தை அது மெய் சிலிர்க்கக் காட்டுகிறது.

அஃதன்றியும், கடவுளைக் காதலனாக பாவிப்பது என்ற சம்பிரதாயத்தை முதலில் துவக்கியது வைணவந்தான்.

பிறகு சைவமும் அதைப் பின்பற்றியது.

சைவத்திலும், முருகனையும் பரமசிவனின் வேறு சில வடிவங்களையும், காதலனாகப் பாவிப்பது வழக்கில் வந்தது.

ஆனால், சக்தியையோ,பிற பெண் தெய்வங்களையோ காதலியாகப் பாவிப்பதாக இல்லை. அங்கேயும் இந்துக்கள் பண்பாடு கார்த்தார்க்க்.

காதல் என்பது பாசத்தின் முதிர்ச்சியாகவே காட்டப்பட்டது.

சில இடங்களில் காம உணர்ச்சி அதிகரித்து இருந்தால் அது பரிபூரண நிலையைக் குறிக்கும்.

ஆதிமூலத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட தெய்வீக நிலையைக் குறிக்கும்.

வேறு எந்த மதத்தவரும், இந்துக்களைப் போல் இறைவனோடு நேரடியாகப்பேசுவதில்லை.

உனக்கு ஏன் மாடு என்றும், வீடு கிடையாதா என்றும், தாய் தகப்பன் இல்லையா என்றும், அதனால் தான் ஒருவன் வில்லால் அடித்தானா என்றும், ஏதோ நீண்ட நாள் பிரிந்திருந்த சொந்தக்கார்களைக் கேட்பது போல, இறைவனைக்கேட்பவர்கள் இந்துக்கள்தான்.

இறைவனுக்கும் மனிதனுக்கும் அதிக இடைவெளியில்லாமல் சிருஷ்டித்தவர்களும் இந்துக்கள்தான்.

மூலமாக முளைத்தெழுந்தவனை உறவின்ன் ஆக்கிக் கொண்டவர்களும் இந்துக்கள்தான்.

காதல் வாழ்க்கையையும் திருமண வாழ்க்கையையும் கடவுளிடம் கண்டவர்களக் இந்துக்கள்தான்.

ஸ்தூலத்தை சிவமாகவும் ஆன்மாவை சக்தியாகவும் கண்டவர்கள் இந்துக்கள்தான்.

கடைசி ஏழைக்கும் கடவுளைச் சொந்தக்காரனாக அவனை ஆண்டியாகக் கொண்வர்களும் இந்துக்கள்தான்.

அந்தத் தமிழக இந்துக்களிலே சைவர்கள், முருகனைத் தமிழனாக் கண்டார்கள்.

சைவர்கள் அவனைத் தமிழனாக்க் கண்டபோது, வைணவர்கள் திருமாலைத் தமிழாலேயே அழைத்தனர்.

சைவர்கள் ‘ஸ்ரீரங்கம்’ என்று சொன்னால், வைணவர்கள் அதைத் தமிழில் ‘திருவரங்கம்’ என்று சொல்லுவார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஆன்மாவும் ஆதூலமும் ஆனந்தமாக ஆடிப்பாட வேண்டம் என்பதே இந்துக்களின் நோக்கமாக இருந்தது.

அந்த நோக்கத்தின் வடிவங்கள்தான் சைவ நடராஜரும் வைணவக் கண்ணனும்.

எங்கே தொட்டாஉம், எதைப் படித்தாலும், இந்துக்கள் உருவாக்கிய பாத்திரங்கள் நம்மை வெறும் அதீத உலகத்திற்கு கொண்டு போகவில்லை.

லௌகிக உலகத்தை எடுத்துக் காட்டுகின்றன.

கதைகளைப் பொய் என்று சொல்ல்லாம்.

அந்தக் கற்பனையின் சிறப்பை வியக்காமலிருக்க முடியாது.

சொல்லப்போனால், அத்தகைய கற்பனை, உலகத்தில் இந்தப் பல்லாயிரம் ஆண்டுகளில், வேறு எவனுக்கும் கிடையாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

எல்லாம் இறைவன் செயல்

நான் சமய மேடைகளில் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன்; நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது என் ஜாதகத்தைப் பற்றியது.

`ஐம்பது வயதுக்கு மேல் நான் ஒரு சாமியாராகவோ அல்லது, அந்தக் குணங்கள் கொண்டவனாகவோ மாறிவிடுவேன்’ என்று குறிப்பிட்டதே அது.

அப்படி ஒருவர் குறிப்பிட்டபோது எனக்கு வயது இருபத்து ஒன்று. இப்போது ஐம்பதைக் கடந்துவிட்டேன். இந்த முப்பது ஆண்டுக் காலமும் அவர் சொன்னது போலவேதான் வாழ்க்கை ஓடியிருக்கிறது. இப்போது மனோபாவம் மட்டுமின்றி, உணவு முறை கூட சாமியார் முறையாகி இருக்கிறது.

எந்தெந்தக் காரியங்களை நான் பிரியத்தோடு செய்வேனோ, அதையெல்லாம் இறைவன் வெறுக்க வைத்திருக்கிறான். எவ்வெவற்றை நான் விரும்ப மாட்டேனோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி கட்டளை இட்டிருக்கிறான். உணவில் ஒவ்வொரு பொருளாக வெறுக்க வைக்கிறான். ஆனால், சிந்தனையில் நிதானத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.

எனக்கு எதிர்காலம் சொன்னவர், என் கைரேகைகளை மட்டும் தான் பார்த்துச் சொன்னார். ரேகை, ஜோசியம், ஜாதகம்-இவை சரியாகப் பார்க்கப்படுமானால், விஞ்ஞானம் உலகத்தைக் கணிப்பது போலவே இவை வாழ்க்கையைக் கணித்து விடும்.

இறைவனுடைய படைப்பில் ஒரு கன்றுக்குட்டிக்கும் கூட ஜாதகம் இருக்கிறது. கன்றுக்குட்டி என்ன, கடவுளுக்கே கூட ஜாதகம் இருக்கிறது. திருப்பதியில் நிற்கும் பெருமாள்தான் அழகர் கோயிலிலும் நிற்கிறார்.

ஆனால், திருப்பதி சமஸ்தானாதிபதி கோடீஸ்வரராகத் திகழ்கிறார்; அழகர் கோயிலில் பெருமாள் அன்றாடம் தடுமாறுகிறார். இத்தனைக்கும் காலத்தால் திருப்பதிக்கு முந்தியது அழகர் மலை என்று கருதப்படுகிறது.

கட்டியவன் ஜாதகம் எப்படியோ யார் கண்டது?

எனக்குத் தெரிந்த நல்ல குடும்பத்திலே பிறந்த அழகான பெண்ணொருத்தி, வசதி இல்லாத ஒரு அரைப்பைத்தியத்தை மணந்து கொண்டு, இட்லி சுட்டு வியாபாரம் செய்கிறாள். பார்த்தால் பொத பொதவென்று இருப்பாள் ஒருத்தி. வீதியில் போகும் விலங்குகள் கூட அவளை ஏறெடுத்துப் பார்க்க மாட்டா; அவளுக்கு லட்சாதிபதி வீடு; அழகான மாப்பிள்ளை கிடைத்து விட்டது.

கோயிலுக்கு ஜாதகம் இருக்கிறது. குருக்களுக்கு ஜாதகம் இருக்கிறது. கோயில் கட்டியவனுக்கும் ஜாதகம் இருக்கிறது. ஸ்ரீராமனுடைய ஜாதகத்திலும், பெண்டாட்டியைப் பறிகொடுக்கும் கட்டம் இருக்கிறது. சீதை பிறக்கும்போதே அவள் கை ரேகையில், அவள் காட்டுக்குப் போவாள் என்றிருக்கிறது.

ஒரு காரியம் நடைபெறுகிறது என்றால், அதற்கு நாம் காரணமில்லை என்றால், ஏதோ நமக்குத் தெரியாத ஒரு சக்தி தானே காரணம்?

தேர்தல் நடத்துவதும் நடத்தாததும் ஒருவர் கையில் இருந்த போது, அவர் தேர்தல் நடத்துவானேன்? தோல்வியுற்று அவதிப்படுவானேன்?

பெரிய பெரிய சாமர்த்தியசாலிகளையெல்லாம் ஜாதகம் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.

இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்த அதே நேரத்தில் பாகிஸ்தானும் பிரிந்தது.

பாகிஸ்தான் ஜாதகத்தில் ராணுவ ஆட்சி என்றும், இந்தியாவின் ஜாதகத்தில் கலப்படம், குழப்பம் என்றும் இறைவன் அப்பொழுதே எழுதி வைத்திருக்கிறான்.

நினைக்காத ஒன்று நடக்கும்போது அதுவே ஜாதகப் பலன் என்றாகி விடுகிறது.

இது மாதிரி விஷயங்களில் இந்துக்களின் நம்பிக்கை எவ்வளவு அர்த்த புஷ்டி வாய்ந்தது என்பதைக் காண முடிகிறது.

நட்சத்திரங்களைக் கொண்டு, பிறந்த தேதியைக் கொண்டு பலன் சொல்லும் பழக்கம் நாகரிகத்தில் முன்னேறிய மேல்நாட்டுக்காரருக்கும் உண்டு.

அங்கேயும் நீங்கள் பார்த்தால் மேஷம் ரிஷபத்திற்கு நாம் என்ன படம் போடுகிறோமோ அதே படங்களைத் தான் ஆங்கிலேயர்களும் போடுகிறார்கள்; ஜெர்மானியர்களும் போடுகிறார்கள்.

காரணம், இந்த ஜோதிட சாஸ்திரத்துக்கு மூலம் வடமொழி.

விண்ணியல் அறிவும், விஞ்ஞான அறிவும் இந்துக்களிடமிருந்து எழுந்ததே.

சந்திர மண்டலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் இந்துமதம் கூறிற்று; சந்திர கிரணம் பிடிப்பதையும் அதுதான் கூறிற்று.

இன்று செயற்கைக்கோள் பறக்கவிடப்படுகிறது. அதற்கு `ஆரியப்பட்டா’ என்று பெயர் வைக்கப்படுகிறது.

இந்த ஆரியப்பட்டா என்பவர் இந்து ஞானி, விஞ்ஞானி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வாழ்ந்தவர். முதன் முதலில் வான மண்டலத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தியவர்.

வம்சங்களையே மாற்றி அமைத்த சாணக்கியர், பல காலங்களுக்குப் பொருந்தக் கூடிய ராஜ தந்திரத்தை எழுதினார்.

சில கோயில்களில் பிராகாரச் சுவர்களில் இன்ன காலத்தில் இன்ன காரியம் நடக்கும் என்பதே எழுதப்பட்டிருக்கிறது.

உலக வாழ்க்கையில் இந்துக்கள் தொடாத பகுதிகளே இல்லை.

எத்தனை பகுத்தறிவுகள் பொத்துக் கொண்டு ஓடி வந்தாலும், கடைசியில் எங்கே போகிறோம் என்று தெரியாமலே தான் கண் மூட வேண்டியிருக்கிறது.

அந்த இடத்தைத்தான் இந்துமதம் `ஈஸ்வரன்’ என்று அழைக்கிறது.

சொல்லப்போனால், இந்துமதச் சக்கரத்திற்குள்ளே தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது.

இந்து மதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டுதான் மற்ற மதங்கள் உருவாக்கப்பட்டன.

ஜயதேவர், புத்தரைக் கூட ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம் என்கிறார்.

`கிறிஸ்து’ என்ற வார்த்தைக்கும் `கிருஷ்ணன்’ என்ற வார்த்தைக்கும் உள்ள பொருத்தம் பற்றியும், இருவரும், மாட்டுக் கொட்டிலிலே வளர்ந்தவர்கள் என்பது பற்றியும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் ஒரு கட்டுரையில் கூறி இருக்கிறார்கள்.

மலேசியாவின் பெரிய ராணிக்கு, `பரமேஸ்வரி நாச்சியார்’ என்று பெயர். ஆனால் அவர் ஒரு முஸ்லிம்.

மலேசியாவிலும், இந்தோனேஷியாவிலும் ஆட்சியை, `பாதுகா’ என்றார்கள்.

பரதன் ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டதும், ஆட்சி நடத்தியதும் நமக்கு நினைவிற்கு வருகின்றன.

தாய்லாந்திலும், கம்போடியாவிலும் சகுன நம்பிக்கை, விக்கிரக ஆராதனை, இந்துப் பண்டிகைகள் போன்ற விழாக்கள் ஏராளம்.

மெக்சிகோவில் ஒரு விநாயகர் கோயிலைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

அந்நாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளி வந்திருப்பதாகவும், அதிலே ஆதிவாசிகள் நடனமாடும் படம் ஒன்று வெளி வந்திருப்பதாகவும், ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் கூறுகிறார்கள். அதிலே நடனமாடும் எல்லாப் பெண்களுக்கும் நெற்றியில் ஒரு கண் வரையப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

கடல் கொள்ளப்பட்ட லெமூரியா கண்டத்தில் எல்லோருக்குமே மூன்று கண்கள் இருப்பதாக பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் தன் ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

பார்க்கப்போனால் இந்துமதத்தின் தத்துவங்கள் எல்லாமே ஆழமான அர்த்தம் உடையவை என்பது மட்டுமல்ல; இறை வழிபாடும் சமய சார்பும் முதன் முதலில் உருவாக்கப்பட்டதே இந்துக்களால் என்று தோன்றுகிறது.

மரத்தடி கிளி ஜோசியனில் இருந்து, மெக்சிகோ பேராசிரியர் வரை எல்லோரும் நம்புவது, `எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியது இந்துமதம் ஒன்றே’ என்பதைத்தான்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 

ஞானத்தின் பரிபக்குவ நிலை

இந்து தெய்வங்கள் மனித வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத உன்னத நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை. `தெய்வத்துக்கு இணையாக எதையும் சொல்லக் கூடாது’ என்று கட்டளை போடுவதில்லை.

இந்து தெய்வம் மனித வடிவில் இயங்கும்.

மனித வாழ்க்கையின் பல கூறுகளிலும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளும்.

அது காதலிக்கும்; பரவசப்படும்; அது போர் புரியும்; யுத்த தர்மத்தைப் போதிக்கும்.

அது தூது செல்லும்; அரசு தர்மத்தைப் புகட்டும்.

காதலனையும் காதலியையும் சேர்த்து வைக்கின்ற வேலைக்குக் கூட அது துணை புரியும்.

ஆகவேதான் இந்து இதிகாசங்களோ, புராணங்களோ வறட்டுத்தனமாக இல்லை.

மற்ற மதத்தவர்கள் படித்தால் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுவதாக இல்லை.

நமது இதிகாசங்களில் லெளகீகத்தின் கம்பீரம் இருக்கிறது.

சுகமான காதலியின் கனவு இருக்கிறது.

அவற்றில் ஒன்று ராதா – கிருஷ்ண பாவம்.

இந்த பாவத்தை ஒரு காம நூல் போலவே வடித்தார் ஜயதேவர்.

அது ஞானத்தின் முதிர்ச்சி பெற்ற நிலையாயினும் காம ரசமாகவே தோற்றமளிக்கிறது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அவர் `அஷ்டபதி கீதகோவிந்தம்’ என்ற தலைப்பில் இதனை எழுதினார்.

ஒவ்வொன்றும் எட்டு சரணங்கள் கொண்ட இருபத்து நான்கு கீதங்களாக அவர் இதனை வடித்தார்.

இதில் ஒரு வேடிக்கை. இதைப் படித்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவர், `இது ஒரு ஆபாச நூல்’ என்று தடை செய்ய உத்தரவிட்டார்.

அதோடு ஜயதேவரைக் கைது செய்யும்படியும், ஆணை பிறந்தது.

அதன் பிறகுதான் ஜயதேவர் வாழ்ந்தது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது விளக்கப்பட்டது.

ராதை, கிருஷ்ணனுக்காக ஏங்குகிறாள்; கிருஷ்ணன், ராதைக்காக ஏங்குகிறான்; தோழி ஒருத்தி தூது செல்கிறாள்; இடையில் அனைத்தும் வருணனைகள்; அவர்கள் வாழ்ந்த கதைகள்.

ஒவ்வொன்றும் சுவையான வருணனை.

சற்று பச்சையாக இருந்தாலும் தேவ பாவத்தோடு அவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, லெளகீக வாழ்க்கையிலும் மனிதனுக்கு இச்சை வருகிறது.

நல்ல காதலன் காதலியின் இலக்கிய பாவம், கீத கோவிந்தம் முழுவதிலும் இழையோடுகிறது.

அதனால், அதன் உபந்யாசகர்கள் இதை மேடையில் எடுத்துச் சொல்வதில்லை.

பக்தி நூல் வரிசையில் பலர் இதைச் சேர்ப்பதும் இல்லை.

ஆனால், நான் இதனைச் சேர்க்க விரும்புகிறேன்.

அண்மையில் கீத கோவிந்தத்தில் இருந்து எட்டு கீதங்களை கவிதைகளாக எனது `கண்ணதாசன்’ இதழில் எழுதியுள்ளேன்.

மற்றவற்றையும் கவிதையாக எழுதி முடிக்க இருக்கிறேன்.

தோழி கண்ணனிடம் சொல்கிறாள்:

`கேசவா! ராதா எவ்வளவு மெலிந்து விட்டாள் தெரியுமா? அவள் கழுத்தில் தங்க வடம் போட்டிருப்பாளே, அதைத் தாங்கக்கூடச் சக்தி இல்லாமற் போய்விட்டது அவளுக்கு; மயங்கி மயங்கி விழுகிறாள்.

கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;

அவள் மயங்கி நிற்கிறாள்!

குளிர்ச்சியான சந்தனத்தை அவள் மார்பில் பூசினேன். `ஐயோ, கொதிக்கிறதே!’ என்றாள்.

`நான் படும் துன்பத்தில் ஏனடி நஞ்சிட்டுக் கொல்கிறாய்?’ என்றாள்.

அவள் நெஞ்சில் நெருப்பு மூண்டிருக்கின்றது. அதனால் வருகின்ற மூச்செல்லாம் அனல் மூச்சாக வருகின்றது.

கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;

அவள் மயங்கி நிற்கிறாள்!

கண்ணா! என்ன வஞ்சனை உனக்கு!

அவள் இவ்வளவு மெலியும்படி வஞ்சித்து விட்டாயே?

கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;

அவள் மயங்கி நிற்கிறாள்!

கண்ணெனும் வலைவீசி உன்னைக் கட்டியிழுக்க நினைத்தாள்; மணிவண்ணன், தப்பிவிட்டான் என்றதும் மாயக்கண்ணீர் வடித்தாள்.

புண்ணாகி விட்டது அவள் நெஞ்சு; புனலாடுகின்றன அவள் கண்கள்; அனல் பட்ட புழுவானாள் ராதை!

கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;

அவள் மயங்கி நிற்கிறாள்!

மாந்தளிர் மஞ்சத்தில் படுக்க வைத்தேன். `ஐயோ! மஞ்சத்தில் ஏனடி நெருப்பை இட்டாய்’ என்றாள்!

கொஞ்சமா அவள் துயரம்…?

கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;

அவள் மயங்கி நிற்கிறாள்!

குன்றத்தைக் குடையாகப் பிடித்தவனே! ஆயர் குலம் காத்தவனே!

கோபியரை முத்தமிடும் கோபாலா!

கம்சக் கூட்டத்தின் வம்சத்தையே கருவறுத்த கண்ணா!

அடியவர்க்குக் கருணை மழை பொழியும் கார்முகிலே!

ராதையைக் காத்தருள மாட்டாயா…?’

-தோழியின் உரை கேட்டான் கண்ணன்.

அவனுக்கும் ஏக்கம் பிறந்தது.

தன்னுடைய தாபத்தையும் அவனிடம் கூறுகிறான்.

ராதையை உடனே அழைத்து வரச்சொல்கிறான்.

தோழி, ராதையிடம் சொல்கிறாள்:

`ராதா! கண்டேன் கண்ணனை!

தென்றல் தாலாட்டுமிடத்தில் அவன் இருக்கிறான். அங்கே செம்பூக்கள் மணம் பரப்புகின்றன.

பிரிந்திருக்கும் காதலர்களை வாட்டி எடுப்பானே மன்மதன், அவன் கண்ணனையும் வாட்டுகிறான்.

மாதைப் பிரிந்து தடுமாறி

மயங்குகிறானே வனமாலி!

மன்மதன் கணைகள் வீச, மதியும் வந்து உயிர் குடிக்க, அந்த வெண்ணிலா ஒளியில் தன்னை மறந்து தன்னைந் தனியே வாடுகிறான்.

மாதைப் பிரிந்து தடுமாறி

மயங்குகிறானே வனமாலி!

நள்ளிரவு.

தேனீக்கள் இசை பாடுகின்றன. அந்தப் பாடல்களில் மலர்கள் உறங்குகின்றன; ஆனால் மாயவன் உறங்கவில்லை.

அங்குமிங்கும் அலைகிறான்; ஏங்குகின்றான்!

மாதைப் பிரிந்து தடுமாறி

மயங்குகிறானே வனமாலி!

அவன் தன் இல்லத்தைத் துறந்தான். காட்டுப் பூக்களால் மெத்தை விரித்துக் காட்டிலே காத்திருக்கிறான்.

எப்பொழுதும் அவன் வாயிலிருந்து, `ராதா! ராதா….!’ என்ற ஒலியே புறப்படுகிறது.

புல் மஞ்சத்தில், பூப்படுக்கையில் உண்ணாமல், உறங்காமல், முல்லைச் சிரிப்புதிர்த்து மோகத்தால் வாடுகிறான்.

மாதைப் பிரிந்து தடுமாறி

மயங்குகிறானே வனமாலி!

இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் குயில்கள் சிறகடித்தால், `என் ராதை தான் வருகிறாளோ…?’ என்று அங்குமிங்கும் ஓடுகிறான்; ஆசையுடன் தேடுகிறான்.

நங்கை உன்னைக் காணாவிட்டாலும் அவன் நம்பிக்கை தளரவில்லை.

மங்கலான இந்த இரவு, உன்னை அவன் சந்திக்கும் நேரமடி!

மாதைப் பிரிந்து தடுமாறி

மயங்குகிறானே வனமாலி!

வானில் இடி இடித்தால், `இது ராதையின் கால் சிலம்பு ஒலி,’ என்கிறான்.

கானகத்தில் அவன் உன்னைக் கட்டி அணைத்ததை எண்ணி எண்ணி உன் அழகையே புகழ்ந்து கொண்டிருக்கிறான்.

மாதைப் பிரிந்து தடுமாறி

மயங்குகிறானே வனமாலி!

பட்டாடை புனைந்து பரிமளிக்கும் கூந்தலுடன் இட்டமுடன் விளையாட ஏற்ற இடம் நாடி, கட்டழகன் செல்கிறான்; காதலி நீ பின் தொடர்க, முட்டியெழும் ஆசையை மோகனமாய்த் தீர்ப்பதற்கு!

ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!

பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்

கொங்கை தழுவி வனமாலி விளையாட!

`ராதை! ராதை!’ என வேய்ங்குழல் ஊதுகிறான்!

பாவை மென்னுடல் தழுவும் சற்றே பரிமளிக்கும் பூவை நின்னாசை நினைப்பால் கூறுகிறான்.

ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!

பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்

கொங்கை தழுவி வனமாலி விளையாட!

பறவை சிறகடிக்க, பசுங்கொடிகள் அசைந்தாட, `பாவை வருவாள்’ என்று எதிர்பார்த்து ஏக்கமுற,

புத்தம் புதுமலராய்ப் பூவமளி அமைத்து, அவன் நீ வருவாய் என வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பான்!

ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!

பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்

கொங்கை தழுவி வனமாலி விளையாட!

ஒலிக்கும் நூபுரங்கள், மாபெரும் தொல்லையடி!

மறைவாய் கலவி செய்ய மாபெரும் இடையூறு!

கருப்பில் ஆடையுடன் கங்குல் கவிகையிலே, இருள்சேர் பூப்பந்தல் இனிதாய்ச் சேர்ந்திருக்க, தருணம் இதை உணர்ந்து தடுமாற்றம் அகற்றிவிடு!

ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!

பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்

கொங்கை தழுவி வனமாலி விளையாட!

முரஹரி மார்பிடை முயங்கும் மாலையடி, கார்மேகக் கூட்டத்தில் வெண்பறவைக் காட்சியடி!

மின்னல் இடையாளே!

ஊடல் அகற்றி இனி இன்னல் தீர்க்க வரும் இனியவனைக் கூடிடுக! தருணம் இது, தோழி, தடுமாற்றம் அகற்றிவிடு!

ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!

பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்

கொங்கை தழுவி வனமாலி விளையாட!

பூமகள் விரித்த மஞ்சம்; பொன்னுடலைச் சாய்த்தவுடன், மேகலையை அவிழ்ந்து விடு! மோகத்தோடு உறவாடு!

பங்கயக் கண் திறந்தே பார்த்துப் பருகிடுவான்.

அங்காந்து காத்திருப்பான். ஆரத் தழுவியவன் உடலைப் புறம் தழுவி, உண்ணும் சுவை கூட்டி கேட்டது கேட்டபடி தடைகள் சொல்லாமல், ஏதும் மறைக்காது, எதிர்த்தொன்றும் சொல்லாது, தூமலர்த்தேன் உறிஞ்சும் தும்பியைப் போலவனும் காமவிருத்தாடக்

களிப்போடுறவாடு!ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!

பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்

கொங்கை தழுவி வனமாலி விளையாட!

நாளை வரை அவனும் காத்திருக்க மாட்டான்; பாளைச்

சிரிப்புதிர்க்கும் பாவை நீ புறப்படு!

காளை அவன் மனத்தைக் கண்ணாடிப் பெட்டகம் போல், நோவாது கொள்ள மதுஹரியும் மனங்களிக்க!

மருள்கொள் புலவியிலே மதி மயக்கம் தந்திடவே தருணம் இது தோழி! தயங்காமல் புறப்படுக!

ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!

பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்

கொங்கை தழுவி வனமாலி விளையாட!’

கண்ணனும் ராதையும் கலந்து விளையாடியதை, காமரஸமாகச் சித்திரிக்கும் ஜயதேவர், அதில் ஒரு ஞானரஸத்தையும் ஊட்டுகிறார்.

`காமக் கலவி’ என்பது ஒருவகை லயம்.

ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாகவே காட்சியளிப்பது அது.

அது அத்வைத நிலை, சமாதி நிலை.

பேசுவது சரீரங்களைப் பற்றியேயாயினும், உள்ளுணர்வு ஆன்மாவைப் பற்றியது.

இரண்டற்ற நிலையில் ஜீவராசிகள் முழுவதுமே ஒவ்வொரு கட்டத்தில் இயங்குகின்றன.

அந்த லயத்தில் மானிடஜாதி ஈடுபட வேண்டுமென்று தான் இல்லறத்தை ஒரு புனித `அற’மாக ஆக்கினார்கள்.

ஆடு மாடுகளுக்குக்கூட திடீர் திடீரென்று அந்த உணர்வு பெருக்கெடுக்கிறது.

ராதா கிருஷ்ண பாவம், லெளகீகத்தின் சாரம்.

`பகவானைப் பற்றி இப்படிப்பட்ட கதைகளா?’ என்று கேட்கக் கூடாது.

பகவான், லோகாயத சுகத்தின் குருவாக ஆக்கப்படுகிறான்.

காமத்துக்கெனக் கூறப்படும் சாஸ்திரம், பகவான் வடிவத்தில் காட்டப்படுகிறது.

வாழ்க்கையின் உச்சக்கட்ட உணர்ச்சியாக, அது எழுந்து நிற்கிறது.

செயலின் மூலம் செயலற்ற நிலையே காமம்.

அந்த இயக்கத்தில் மனம் ஒன்று பட்டபின் வேறு சிந்தனைகள் இயங்காமல் நின்று விடுகின்றன.

அவனையே அவளும், அவளையே அவனும் நினைக்கிறார்கள்.

பக்தி தத்துவத்திலும் இதுதானே நிலை!

படுக்கை அறை `பள்ளியறை’ என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டவன் சயனிப்பதும், `பள்ளி’ என்று கூறப்படுகிறது.

உடல் உறவில் அடைகின்ற அமைதி, பக்தியிலும் கிடைக்கிறது.

பக்தியில் கிடைக்கின்ற ஆனந்தநிலை உடல் உறவிலும் கிடைக்கிறது.

சிருஷ்டியில், `ஆண்-பெண்’ என்று இரண்டு படைக்கப்பட்டு, இரண்டுக்கும் உணர்வுகள் உண்டாவது ஏன்?

சிருஷ்டிகர்த்தா, சிற்றின்பத்திற்கு விரோதியாக இருந்திருந்தால், அவன் இப்படிப்பட்ட இரண்டு வடிவங்களை ஏன் படைக்க வேண்டும்?

`சிற்றின்பம்’ என்ற வார்த்தையிலும், `இன்பம்’ இருக்கிறது; பேரின்பத்திலும் இருக்கிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஞானத்தின் பரிபக்குவ நிலை-2

கோபுரங்களில் காமரஸப் பதுமைகளை வைப்பதும் அதற்காகவே.

நேபாளக் கோயில்களில் ஒரு பெண் படுத்திருப்பது போன்ற சிலைகள் உண்டு. அதன் பெண் குறியில் தான் குங்குமம் கொட்டி, வைக்கப்படுகிறது, என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.

ஏன், சிவலிங்க வடிவமே அதுதானே!

காரணம் உலக இயக்கத்துக்கு இது தேவை.

திருமணங்களின் மூலம் குடும்பங்கள் உருவாகிப் பண்பாடுகள் காக்கப்படுகின்றன.

மாதா மாதம் இறைவன் பூமிக்கு வந்து சில உயிர்களைப் படைத்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக அவன் உருவாக்கிய கருவிகளே ஆணும் பெண்ணும்.

அவை சிருஷ்டிக்கான கருவி என்பதால் யந்திரம் மாதிரி இயங்க முடியாது.

 

அந்த உறவு சந்தோஷமில்லாமல், பானை செய்வது போலவும், பாத்திரம் செய்வது போலவும், அதுவும் ஒரு தொழிலாகி விட்டால், அந்த தொழிலாளர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புவார்களே தவிர, பணி செய்ய மாட்டார்கள்.

அதனால் தான் சிருஷ்டி தத்துவத்தில் ஒரு சுகபோக லயம் கலக்கப்பட்டது.

அதுவும் வெறும் சுகமாக இருந்தால் ஆடு மாடுகளைப் போல, அந்த நேரத்து உணர்ச்சியாகி விடும்.

ஆகவே, அது கலையாக விவரிக்கப்பட்டது.

பலவகையாக அது வடிவமெடுத்தது.

ஒவ்வொரு சிறு காரியமும், பிரமாதப்படுத்தப்பட்டன.

வெறும் பார்வையே கூட காவியமாக்கப்பட்டது.

முத்தம் இடுவது கூட வகை வகையாக விவரிக்கப்பட்டது.

வீடு விட்டுக் காடு சென்ற முனிவர்களே கூட அதைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார்கள்.

அங்கங்களின் ஒவ்வொரு மயிர்க்காலும் கூட காவியங்களுக்கான கருவாக அமைந்தது.

வருணனைகளைப் படிக்கும் போதே, `வாழ்ந்து பார்க்க வேண்டும்’ என்று ஆசை கிளர்ந்தெழுமாறு எல்லா பாஷைகளிலும் இந்தத் சுவையே மிகைபடத் தொடங்கிற்று.

ஆகவே, நோக்கம் சிருஷ்டி; அதற்கே இரண்டு கருவிகள்; அந்த இரண்டு கருவிகளைத் தூண்டிவிடும், வருணனைகள்.

மூலநோக்கம் சிருஷ்டி என்பதனை மனத்திலே கொண்டால், சிற்றின்பம் விரஸமாகத் தெரியாது.

காமம், உடலுறவு புனிதமாகி விடும்.

அந்தப் புனிதமான உடலுறவை ஜயதேவர் வருணிக்கிறார்.

`கட்டி உடல் தழுவிக் காதல் புரிகையிலே மட்டில்லா இன்ப வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்க, கண்ணை இமைமூடில் காதல் சுகம் பெருகும்’ என்று கண் இமை திறந்து அங்கே கலவிச் சுகம் கண்டார்.

ஒருவர் இதழ் ஒருவர் கடித்து உறிஞ்சித் தேன்மாந்தும் பருகுவாய்க் கள்ளின் இணை கூறச் சுவையுண்டோ?

கலவிப் போர் இன்னும் வெற்றி தோல்வி என்று பகுத்துரைக்கும் வண்ணம் நடந்து முடியவில்லை.

இதுதான் துவக்கம்!

இன்பத்தின் வருணனைகள் இதுவென்று உரைப்பதற்கு என்னால் இயலவில்லை.

முடிவின் நிலை என்ன?

யார் உரைக்க வல்லாரோ?

கைகள் சிறைபிடிக்க, கடினமுலை மார்தாக்க, கை நகங்கள் உடல் கீற, மையச் சிவந்த வாய் பற்கள் கடித்து உதற, கார் குழலைக் கைப்பிடித்துக் கலைத்து இழுத்து, உயிர்த் துடிப்போடு கனிவாயில் வாய்வைத்துக் கள்ளுறுஞ்சும் வகையுரைக்கப் போமோ!

போதை தலைக்கேற புதுக்கனிகள் சுவைக்கின்றார். காதல் விளையாட்டுக்கென்றே இலக்கணங்கள் ஓதி உணராது உடல் புணர மாட்டாதோ?

கலவி மயக்கத்தின் அடையாளம், அறிவார்கள், உலவும் உள்ளத்து உணர்ச்சி பொங்கி, போர் ஆரம்பித்தவுடன் ஆனந்தம் பொங்குதடி!

தேரா விளையாட்டு தெவிட்டா இன்பச்சுவை; என்னென்ன ஆடலடி! எப்படித்தான் கூடுகிறார்?

கன்னல் பிழிந்தாற்போல் கலவி பிழிந்த சுகம், கடலின் அடுக்கடுக்காய் பொங்கி வரும் அலையாம்!

உடலை ஒருவனுக்கு ஒப்படைத்த மங்கையவள், தலைவன் தாக்கியதும் தான் எதிர்த்து தாக்கியதும், முலைகள் குதித்து வர மெய் தழுவிக் குதித்ததுவும், அலையா மனம் அடக்கி அந்தரத்தில் நின்றதும், வாக்கு மனம் செயல் இம்மூன்றும் மறைந்ததடி!

தாபச் சுரம் பெருக, தணிந்தபின் உடல் சோர, வாடும் மலர்க்கொடிபோல், வாடி உடல் சாய, பேசும் பேச்சிறைக்க, பேசாது மூச்சிறைய, வாசமலர் விழியாள் வைத்தில் கண்ட சுகம் நாசம் அடைவதுண்டோ, நலிவுடலும் கொள்வதுண்டோ?

பேசும் மாந்தர்களே!

புவியில் கூடலுக்கு நேரம் உண்டோ?

`பாற்கடலின் கரை அருகில் பாவை உன் அழகுடலைப் பார்த்த பரமசிவன், `மனம் கொண்ட காதல் இனி நடவாது’ என்று உணர்ந்து, நலிவுற்ற மனத்தாலே சிவகாமி சிந்தை கவர் சிவனார் அந்நாளில் ஆலகால விஷம் அருந்தியதை நானறிவேன்!’

-பற்பலவாம் பேச்சுரைத்துப் பன்மாயக் கள்வனவன் பொற்கொடியின் சோர்ந்த உடல் பூமியில் சாய்ந்துறக்கம் மேற்கொண்ட வேளையிலே,

மெல்ல அவள் மேலாடை அப்புறமாய் ஒதுக்கி, ஆர்த்தெழுந்த கொங்கையினை கொப்பூழ் வனப்போடு குனிந்தபடி பார்த்திருந்தான்!

தீராது விளையாட்டுப்பிள்ளை, என் கண்ணன்

நேராது தீங்கு என்றும் நம்மை தினம் காப்பான்!

காலமெல்லாம் கண்விழித்துக் கண்கள் சிவப்பாக,

பற்பதித்து, செவ்விதழும் வெளுத்துப் பொலிவிழக்க,

நற்கூந்தல் சூடுமலர், சருகாய் வாடிவிட,

ஆடை சீர்குலைய, அங்கம் வெளித்தெரிய

இரவைக் கலைத்தொரு கதிரோன் வெளிப் போந்தான்.

நம்பி முகம் பார்த்து நாணும் கண்ணிரண்டும்

வம்பு செய் காதல் உணர்வை மீட்டி விட,

நம்பியுடன் நங்கை நாடிப் புணர்ந்ததனை

நாவால் எடுத்துரைக்க நல்ல சொல் கிடைக்கவில்லை!

முடித்த குழல் அவிழ்ந்து மொய்த்துத் தரை புரள,

வடித்து உடல் நீரால் கணைக் கதுப்பொளிர,

தடித்த செவ்வாயும் தனிக்காதல் மணம் பரப்ப,

கொங்கை மேல் குதித்து முத்து வடம் குலுங்க,

மங்கையவள் மேகலையும் மண்ணில் சிதறி விழ

அருகிருப்பார் பாராது அல்குல் அணிமார்பாம்

மருளும் பேதை கரம் மறைவாய்க் காத்தபடி

உருகித் தடுமாறும் ராதையைக் கண்டவுடன்

`வருக’ என கண்ணன் விடு கோரிக்கை கண்டவுடன்,

`தையல் காணிக்கை’யென்று,

உடல் உண்ட சுகம் மீண்டும் உண்ண வருவதற்கு,

தண்மாலை துறந்தவளும் தாவி அவன் மேல் விழுந்து

கொண்ட சுவைக்கு ஒருகணக்கும் இல்லையடி!

பனியால் வளர்ந்து வரும் பச்சைப் புல் போல

கனிவாய் முறுவலிக்கும் கன்னி உடல் ஒசிய,

காதல் குரல் எடுக்க,

சொற்கள் பொருளிழக்க,

நாதன் தரும் இன்பத் தடுமாற்றம் நிலைகுலைக்க,

இதழ்கள் ஒவ்வொன்றில் எத்தனையோ பற்குறிகள்!

கோதை முக அழகை உண்டு ரசிக்கையிலும்,

இதமாய் உடல் தழுவி இருக்கும் சேர்க்கையிலும்

எத்தனையோ இன்பமடி!

எடுத்துரைக்க வார்த்தை இல்லை!

-மேலே வடமொழி மூலத்தில் இருந்து என் நண்பர் `ஆஷா’ மொழி பெயர்த்ததை, அப்படியே கொடுத்திருக்கிறேன்.

இந்து மார்க்கத்தின் லெளகீக சுகத்துக்கு உச்சகட்ட உதாரணம், ஜயதேவர் அஷ்டபதி.

என்னைப் பொறுத்தவரை காமத்தைப் பாடி மனிதனை ஞானத்துக்குப் பக்குவப்படுத்துவதைப் பெரிதும் விரும்புகிறேன்.

அண்மைக் காலங்களில் அமெரிக்க நாட்டில் இந்து மதம் பரவி வரும் வேகம் நமக்குத் தெரிந்ததே. அங்கே இந்தியாவில் இல்லாத ஒரு புதுவித யோகத்தைக் கற்பித்தார்கள்.

சுமார் இருபது ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக நின்று கொள்வது; அதுவும் இடுப்பளவு தண்ணீரில் ஒரு ஆண், ஒரு பெண்ணென்று வட்டமாக நிற்பது; ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுக் கொள்வது; ஆனால் யாருக்கும் காம இச்சை வரக்கூடாது. இப்படி ஒரு பயிற்சி.

மூன்றாண்டுகளுக்கு முன் `லைப்’ பத்திரிகையில் இந்தப் படத்தையே நான் பார்த்தேன்.

காம நிலையில் இருந்து கொண்டே காமத்தை மறப்பதென்பது இதன் பெயர்.

அப்படி ஒரு பக்குவம் எல்லாருக்குமே ஏற்பட்டு விடாது.

ஜயதேவரின் ராதா கிருஷ்ண பாவனை, காம உணர்வினையே தூண்டக்கூடும். ஆனால், அதிலிருந்து ஒரு ஞானயோகத்தை உருவாக்கும் முயற்சியை அறிவாளிகள் ஏன் மேற்கொள்ளக் கூடாது.?

வீணாக ஜயதேவரின் அஷ்டபதி கீத கோவிந்தத்தை ஒதுக்கி விடுவதில் பொருளில்லை.

கண் அந்த நூலைக் காண வேண்டும்; மனம் அதைப் படிக்க வேண்டும்; ஆண்மையுள்ள உடம்பு கூட உணர்ச்சியற்றிருக்க வேண்டும்; அதுதான் ஞானத்தின் பரிபக்குவ நிலை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பெண்களை பெருமைப்படுத்துவோம்-கவியரசு கண்ணதாசன்

என்ன குழந்தை பிறந்திருக்கிறது? என்று கேட்கிறார்கள்.

`பெண் குழந்தை’ என்று பதில் வருகிறது.

பாட்டி அலுத்துக் கொள்கிறாள்.

அத்தனைக்கும் அவளும் ஒரு பெண்தானே!

என் தாயாருக்கு முதற்குழந்தை பெண்ணாகப் பிறந்தது.

மருமகளுக்குக் குழந்தை பிறந்தால், மாமியார் வந்து மருந்து இடித்துக் கொடுப்பது எங்கள் குல வழக்கம்.

`பெண் குழந்தையா பெற்றிருக்கிறாள்?’ என்று எங்கள் பாட்டி அலுப்போடு வந்தார்களாம்.

இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.

பாட்டியிடம் போய்ச் சொன்னார்களாம்.

`இவளுக்கு வேறு வேலை இல்லையா…?’ என்று பாட்டி அலுத்துக் கொண்டார்களாம். ஆனாலும் வந்து மருந்து கொடுத்தார்களாம்.

மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.

என் பாட்டியோ, `அவளையே மருந்து இடித்துக் குடிக்கச் சொல்!’ என்று சொல்லி விட்டார்களாம்.

பிறகு, அவர்களைக் கெஞ்சிக் கெஞ்சி அழைத்து வந்தார்களாம்.

நாலாவது குழந்தை வயிற்றில் இருந்த போது என் தாயார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தார்களாம்.

ஆண்டவன் லீலையைப் பாருங்கள்; அதுவும் பெண்ணாகவே பிறந்தது.

கடைசிவரை என் பாட்டி அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லையாம்.

`மலையரசி அம்மன் புண்ணியத்தில் ஐந்தாவதாக என் மூத்த சகோதரர் பிறந்தார்’ என்று என் தாயார் சொல்வார்கள்.

எந்தப் பெண்ணுமே தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.

பெண் குழந்தை பிறந்தால் பெற்ற தாயே சலித்துக் கொள்கிறாள்.

`பெண்ணென்று பூமிதனில்
பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்!’

-என்றான் பாரதி.

பெண் பிறப்பு என்ன அப்படிப் பாவப்பட்ட பிறப்பா?

தாய் என்கிறோம்; சக்தி என்கிறோம்; ஆனால், குழந்தை மட்டும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் பெண் பிறந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கார் விபத்தில் சிக்கி நான் பாண்டிச்சேரி `ஜிப்மர்’ மருத்துவமனையில் இருந்த போது, என்னைப் பார்த்துப் பார்த்து அழுதவை, பெண் குழந்தைகளே!

ஆண் பிள்ளையோ மனைவி வந்து விட்டால், அப்பனை வீட்டை விட்டுக் கூடத் துரத்தி விடுவான்.

பெண் குழந்தையின் பாசமும், பரிவும் ஆண் குழந்தைக்கு வராது.

ஒரு வயதுப் பெண் குழந்தைக்குக்கூட தாய், தகப்பன் மீதிருக்கிற பாசம் தெய்வீகமாக இருக்கும்.

அதிலும், இந்தியப் பெண்மை என்பதே மங்கலமானது.

அதன் இரத்தம், இரக்கம், கருணை, பாசங்களாலே உருவானது.

மேல் நாட்டுப் பெண்மைக்கும் இந்தியப் பெண்மைக்கும் உள்ள பேதம் இதுதான்.

மேல் நாட்டுப் பெண்மை ஒரு இடத்திலும் ஒட்டு, உறவு, பாசம் என்பதை வளர்த்துக் கொள்வதில்லை.

அது தண்ணீரில் விட்ட எண்ணெயைப் போல் தனித்தே நிற்கிறது.

இந்தியாவில்தான் இது சங்கிலி போட்டுப் பின்னப்படுகிறது.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

என் சின்ன வயதில் எங்கள் சமூகத்தில் பெண்கள் குறைவு. அதனால், ஒரு பெண்ணை ஒரு வாலிபன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

நான் வளர வளரக் கவனித்து வந்தேன்.

என் முதல் சகோதரி திருமணத்தின் போது பெண்ணின் விலை, மிக அதிகம்.

இரண்டாவது சகோதரிக்குத் திருமணம் நடந்த போது, அது குறைந்தது.

மூன்றாவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மேலும் குறைந்தது.

நான்காவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மிக மிகக் குறைந்து விட்டது.

ஐந்தாவது திருமணம் வந்த போது மாப்பிள்ளைக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டி வந்தது.

ஆறாவது திருமணத்தில் அது இன்னும் அதிகமாயிற்று.

இப்போது பெண்ணைப் பெறுகிறவர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள்.

நான் ஐந்து பெண்களுக்குத் திருமணம் செய்தேன்.

என் அண்ணனும், தேவரும் கைகொடுத்தார்கள்.

இப்பொழுது அதே திருமணங்களைச் செய்வதென்றால் என்னால் முடியாது.

சுவாமி விவேகானந்தர் சொன்னது போல், பெண் பிறந்து விட்டால் தாய் தகப்பனின் தலை சுழல்கிறது. அந்தப் பொருளாதார நோக்கத்தில் பெண் பிறப்பு வெறுக்கப்படுகிறது.

ஆண் குழந்தை அடி மடையனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல விலை கிடைக்கிறது.

தாய்மையின் கம்பீரத்தை, `சக்தி’ வடிவமாகக் காணும் இந்திய நாடு, பெண்ணை வெறுக்க நேர்வது எவ்வளவு துரதிருஷ்டம்?

வரதட்சணை முறையைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள். ஆனால், அந்தக் கொடுமை இன்னும் நீடித்துக் கொண்டேதானிருக்கிறது.

பெண்மையின் எதிர்காலம் முழுவதுமே பணத்தில் அடங்கிக் கிடக்கிறது. அதன் மேன்மை உணரப்படவில்லை.

உத்தமமான ஏழைப் பெண்மையில் தெய்வீகம் காட்சியளிக்கவில்லை.

ஒரு ஏழைப் பெண், தான் குங்குமம் வைப்பதற்கே கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கிறது.

கழுத்திலே ஒரு பொட்டுத் தாலியைக் கட்டிக் கொள்வதற்குத் தாய் தகப்பனைக் கசக்கிப் பிழிய வேண்டியிருக்கிறது.

கூன், குருடு, செவிடு, நொண்டிக்காவது வாழ்க்கைப்பட்டு, `சுமங்கலி’ என்ற பெயரோடு சாவதற்கு இந்துப் பெண் ஆசைப்படுகிறாள்.

 

ஆனால், அதற்கும் விலை தேவைப்படுகிறது.

நடுத்தரக் குடும்பத்தில் பிரச்சினைகளிலெல்லாம் பெரிய பிரச்சினை, மகளே!

எங்கள் சமூகத்தில் மகளைத் திருமணம் முடித்துக் கொண்டு விடுவதோடு தகப்பன் கவலை தீர்ந்து விடுவதில்லை.

தீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், மகள் பிரசவித்தாலும் அவன் பணம் தேட வேண்டியிருக்கிறது.

இல்லையென்றால், `உன் அப்பன் என்னடி கொடுத்தான்?’ என்று மாமியார் கன்னத்தில் இடிக்கிறாள்.

கட்டிக்கொண்ட கணவனோ கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கிறான்!

அவனுக்குச் சுயதர்மமும் தெரியாது; சுயகர்மமும் புரியாது.

`எனக்கு மனைவிதான் தேவை; மாமனார் வீட்டு சீர்வரிசை அல்ல!’ என்று சொல்லக்கூடிய ஆண் மகனாக அவன் பெரும்பாலும் இருப்பதில்லை.

`அடியம்மா! கதையைக் கேட்டாயா? அண்ணன் மனைவிக்கு சம்பந்தி வீட்டார், போட்ட சங்கிலி காற்றிலே பறக்கும்,’ என்று நாத்தனார் கேலி செய்கிறாள்.

ஒரே வீட்டில் ஒரு மருமகள் ஏழையாகவும், இன்னொரு மருமகள் பணக்காரியாகவும் வந்து விட்டால், அந்த ஏழை மருமகள் படும்பாட்டை இறைவன் கூடச் சகிக்கமாட்டான்.

இந்துக்களின் துயரங்களிலெல்லாம் பெரிய துயரம் இந்தத் துயரமே.

சனாதன வைதிக இந்துக்கள் கூட இதில் கருணை உள்ளவர்களாக இல்லை.

சீதையை ராமன் மணந்ததும்,

ருக்மிணியைக் கண்ணன் மணந்ததும்,

-சீர்வரிசைகளுக்காக அல்ல.

வள்ளி, தெய்வானையிடம் உமா தேவியார் என்ன சீர்வரிசைகளா கேட்டார்கள்?

அகலிகை என்ன கொண்டு வந்தாள், முனிவரின் ஆசிரமத்திற்கு?

`நாளை உதயமாகக் கூடாது’ என்று சூரியனுக்கே கட்டளையிட்ட நளாயினி, கற்பென்னும் அணிமணிகளை மட்டுமே அணிந்திருந்தாள்.

தேவர்களைக் குழந்தைகளாக்கிய அனுசூயையின் கழுத்தில் திருமாங்கல்யம் மட்டுமே பிரகாசித்தது.

இந்து வேதம் படிக்கிறான்; புராணம் படிக்கிறான்; இதிகாசம் படிக்கிறான்.

மகனுக்குப் பெண் தேடும் போது, மனிதாபிமானத்தையே இழந்து விடுகிறான்.

ஊரில் நடக்கும் திருமணங்களை எல்லாம் பார்த்தபடி உள்ளுக்குள் குமுறும் இந்துப் பெண்கள் எவ்வளவு பேர்?

பையன் பட்டப் படிப்புப் படித்து விட்டான் என்பதற்காக, `ஸ்கூட்டர் கொடு; பங்களா கொடு’ என்று வம்பு செய்யும் மாமன்மார் எத்தனை பேர்?

இந்து சமூகத்தில் புரையோடிவிட்ட இந்தப் புற்று நோயை இளைஞர்கள் களைந்தாக வேண்டும்.

அழகான ஒரு அனுசூயையைத் தேர்ந்தெடுப்பதே அவனுடைய பணியே தவிர, ஸ்கூட்டருக்காகவும், வரதட்சிணைக்காகவும் எந்த அலங்கோலத்திலும் சிக்கிக் கொள்வதல்ல.

`ஒரு பெண் புக்ககம் வருகிறாள் என்றால், ஒரு தெய்வம் அடியெடுத்து வைக்கிறது’ என்று பொருள்.

`தெய்வமே வைர நகைகளோடு வந்தாக வேண்டும்’ என்று ஒரு நல்ல இந்து கேட்க மாட்டான்.

கற்புடைய ஒரு பெண்ணைவிட, அவள் அணிந்து வரும் நகைகள் விலையுயர்ந்தவையல்ல.

அழகான புள்ளிமானிடம் கவிஞன், கலையைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே தவிர மாமிசத்தையல்ல!

பையனைப் படிக்க வைக்கும்போதே, தான் செய்யும் செலவுகளையெல்லாம் சம்பந்தியிடம் வட்டி போட்டு வசூலிப்பது என்று தகப்பன் முடிவு கட்டிக் கொள்கிறான்.

அதை ஒரு தார்மிகப் பெருமையாகவும் கருதுகிறான்.

இந்து தர்மத்தின் முழு ஆதார சுருதியையும் அவன் அங்கேயே அடித்துக் கொன்று விடுகிறான்.

அவன் திருநீறு பூசுகிறான்; திருமண் இடுகிறான்; ஒரு மணி நேரம் பூஜையில் அமர்கிறான்; உலக க்ஷேமத்துக்காக பிரார்த்திக்கிறான்; வீட்டில் இருக்கிற சாமி சிலைக்குக் கூட வைர நகை செய்து போட்டு அழகு பார்க்கிறான்; ஆனால், மருமகளைத் தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அவன் யூத வியாபாரியாகி விடுகிறான்.

கண்ணைப் பறிக்கின்ற அழகு- கடவுளே மதிக்கின்ற கற்பு- ஆனால், அவளோ ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பிறப்பு.

அந்த இரண்டு அற்புதமான குணங்களுக்காக ஒரு பணக்காரன் அவளை கட்டிக்கொள்ள முன் வரவில்லையே?

ஒரு அனாதைக்கோ, தற்குறிக்கோ அல்லவா அந்தத் தெய்வப் பெட்டகம் போய்ச் சேருகிறது?

பொருளாதாரம் பெண்ணின் வாழ்வோடு விளையாடுவதை, இளைஞர்கள் தடுக்க வேண்டும்.

`உத்தியோகம் பார்க்கின்ற பெண் எனக்கு வேண்டும்’ என்று ஒரு இந்து இளைஞன் கேட்பது எனக்குப் புரிகிறது.

அந்தப் பொருளாதாரத்தில் அடிப்படை நியாயம் இருக்கிறது.

`நான் படித்திருக்கிறேன்! நாற்பதாயிரம் வேண்டும்’ என்பது தான் எனக்குப் புரியவில்லை.

துர்ப்பாக்கிய வசமாக ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்குமே குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன.

அதிலும் வறுமை மிக்க இல்லங்களில் இறைவன் பெண்ணாகவே படைத்துத் தள்ளுகிறான்.

அவன் இந்துக்களை ஆத்ம சோதனை செய்கிறான்.

`பிரமாத தத்துவம் பேசும் நீங்கள் என் சிருஷ்டியை எப்படி மதிக்கிறீர்கள்? பார்க்கிறேன்!’ என்று சவால் விடுகிறான்.

நாம் ஒருபோதும் அவனது சவாலை ஏற்றுக் கொண்டதில்லை.

ஒரு கையில் தராசையும், ஒரு கையில் பையையும் வைத்துக் கொண்டுதான் பெண்ணைத் தேடுகிறோம்.

நமக்கு வருகிற வியாதிக்கெல்லாம் காரணம், இதுவே.

பெண்ணை மாமியார் வீட்டுக்கு வழியனுப்பும் போது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்களே, ஏன்?

`திருமணத்திற்கு முன் இவ்வளவு பாடுபடுத்தினார்களே, திருமணத்திற்குப் பின் என்ன செய்வார்களோ…?’ என்று அஞ்சுகிறார்கள்.

என்னையே எனது ஒரு பெண்ணின் திருமணத்தில் அழ வைத்திருக்கிறார்கள்.

`இவர் கவிஞராயிற்றே, கவியரசாயிற்றே’ என்ற மரியாதையெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது.

பெண்ணைப் பெற்றவன், கண்ணீர் விட்டே ஆக வேண்டும்; அவ்வளவுதான்.

`பாரதத்தில் ஒருமுறைதானா குருக்ஷேத்திரம் நடந்தது?’

நாம் ஒவ்வொருவரும் குருக்ஷேத்திரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எனக்கு நெருங்கிய நண்பராக இருந்த எழுத்தாளர் காலமானார்; அவருக்கு நான்கு பெண்கள்.

அவர் உயிருடன் இருக்கும்போதே ஒருத்திக்கு முப்பத்தி நான்கு வயது; ஒருத்திக்கு முப்பது வயது; ஒருத்திக்கு இருபத்தி ஆறு வயது; ஒருத்திக்கு இருபது வயது.

ஒருத்திக்கும் திருமணம் ஆகவில்லை.

இங்கே கலப்புத் திருமணத்திற்குத் தங்கப் பதக்கம் கொடுக்கிறார்களாம்!

இந்தக் கொடுமையில் இருந்து சமுதாயம் மீள வேண்டும்.

இது வெறும் வாதப் பிரதி வாதங்களால் நடக்கின்ற காரியமல்ல.

`இறைவா! எனக்கு ஒரு சீதையைக் கொடு; அனுசூயையைக் கொடு; கோலார் தங்கச்சுரங்கம் வேண்டாம்’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

`நான் வரதட்சிணை வாங்காதவன்’ என்பதே ஒரு இந்து இளைஞனின் பெருமையாக இருக்க வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

சொற்களின் சிறப்புகள்

பொங்கல் விழா எப்போதும் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது.

அவை முறையே போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல்.

இந்த நான்கையும் பற்றி பல ஆண்டுகளாகவே பலர் தவறான விளக்கங்கள் கூறி வருகிறார்கள்.

`போகி நாள்’ என்பதைப் `போக்கி நாள்’ என்கிறார்கள்.

அதாவது வீட்டிலுள்ள கழிவுப் பொருட்களை, பழையனவற்றைப் `போக்கும் நாள்’ என்கிறார்கள்.

எப்போதுமே சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக எந்தக் காலத்திலும் கொண்டாடியதில்லை.

`போகி’ என்ற வார்த்தை தெளிவாகவே இருக்கிறது.

விளைச்சல் என்பது, `போகம்’ என்படும்.

போகத்துக்குரியவன் நிலச்சுவான்தார். அதனால் தான் அந்த விழா, நிலம் உள்ளவர்களின் வீட்டில் மட்டும் தடபுடலாக இருக்கும்.

போகத்துக்குரியவனின் விழா `போகி விழா’

வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்கு உள்ள விழா, `பொங்கல் விழா’. அவனுக்குப் பயன்படும் மாடுகளுக்கான விழா, `மாட்டுப் பொங்கல்’ விழா.

அந்த உணவைப் பகிர்ந்து கொள்ளும் நிலமும் இல்லாத, விவசாயமும் செய்யாத பொதுமக்களின் விழா, `காணும் பொங்கல்’ விழா.

 

இதுதானே வரிசை.

நிலத்துக்குரியவன்,

விவசாயி,

காளை மாடு,

பொதுமக்கள்.

நான்கு நாள் விழாவிலும் பொங்கல் என்பது எங்கள் பக்கங்களில் திறந்த இடத்திலேயே வைக்கப்படும்; அதாவது சூரிய வெளிச்சம் படுகிற இடத்தில்.

அது வானத்துக்குச் செலுத்தும் நன்றி.

ஆரோக்கியத்திற்காக எந்தெந்தப் பொருட்களை உபயோகப்படுத்துகிறோமோ, அவை எல்லாம் பொங்கலிலே பயன்படுத்தப்படும்.

திருவிழாக்களின் வார்த்தைகளையும், நோக்கங்களையும், அடிப்படைகளையும், புரிந்து கொள்ளாமல் பலர் விளக்கம் கூறி விடுகிறார்கள்.

`கற்பைக் காப்பாற்றிக் கொள்வது’ என்றால், `கர்ப்பப் பையைக் காப்பாற்றிக் கொள்வது’ என்கிறார்கள்.

கர்ப்பமானவளெல்லாம் கற்பை இழந்து விட்டவளா என்ன?

இடம் நோக்கிப் பொருள் கொள்ளுதல் தமிழ் இலக்கிய மரபு.

எங்கள் பக்கங்களில் `ஆடிவேவு’ என்று ஒன்று எடுப்பார்கள்.

புதிதாகக் கல்யாணமான தம்பதிகளை ஆடியிலே பிரித்து வைப்பார்கள்.

காரணம், ஆடியிலே சேர்ந்திருந்தால், சித்திரை வெய்யிலிலே குழந்தை பிறக்குமே என்பதற்காக.

சுயமரியாதை விளக்கக் கூட்டங்களிலே ஒரு விளக்கம் சொல்லுவார்கள்.

`கலி’யாணம் என்றால், `சனியன் பிடித்தல்’ என்று அர்த்தமாம்.

`கலி’ என்றால் சனியனாம்; `ஆணவம்’ என்றால் `பிடித்த’லாம்.

கலிகலி புருஷன்; சரிதான்.

`ஆணவம்’ என்றால் `பிடித்தல்’ என்று இவர்களுக்கு யார் சொன்னது?

அதோடு அந்த வார்த்தை கல்யாணமா? கலியாணமா?

சில காரியங்களுக்கான காரணங்களை, சிலர் நன்றாகச் சொல்லுகிறார்கள்.

“சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்” என்பது பழமொழி.

அதற்கு வாரியார் சுவாமிகள், “சஷ்டியில் விரதம் இருந்தால், அகம் என்னும் பையில் அருள் சுரக்கும்” என்றார்கள்.

இது ஒரு அற்புதமான விளக்கம்.

`அறப்படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்ததாம்’ என்பார்கள்.

ரொம்பப் படித்த மூஞ்சுறு கழுநீர்ப்பானையில் விழுந்ததென்று சொல்லுவார்கள்.

அதுவல்ல பொருள்.

`அறவடித்த முன்சோறு கழுநீர்ப் பானையில் விழுந்ததாம்’ என்பது பழமொழி. சோற்றை வடிக்கத் தொடங்கும் போது, முன்னால் நிற்கும் சோறு கழுநீர்ச் சட்டியில்தான் விழும்.

இல்லையென்றால் மூஞ்சுறுக்கும், படிப்பிற்கும், கழுநீர்ப்பானைக்கும் என்ன சம்பந்தம்?

`கடவுள்’ என்ற வார்த்தைக்குப் பொருள் சொல்லும் போது, `எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன்’ என்று வராது.

கட+உள்கடவுள்.

`நீ பந்த பாசங்கள் எல்லாவற்றையும் கட, உனக்குள்ளே கடவுள் இருப்பான்’ என்பது பொருளாகும்.

தமிழில், `பகுபதம் பகாபதம்’ என இரண்டு வகை உண்டு. அவை பிரித்துப் பார்க்க வேண்டியவை; பிரித்துப் பார்க்கக் கூடாதவை.

கோ+இல்கோயில்.

-இது பகுபதம்

`புரவி’ இது பகாபதம்.

இதை, புர் + அவி, என்று பிரித்துப் பார்க்கக் கூடாது.

அறிஞர் அண்ணா அவர்களும், மற்றும் நாவலரும் மறியல் செய்து கோர்ட்டில் நின்றபோது, அறிஞர் அண்ணா அவர்கள் என்னிடம் கேட்டார்கள், “மறியல் என்ற வார்த்தையை மறு + இயல் என்று பிரித்துப் பொருள் கொள்ளலாமா?” என்று.

மறு + இயல், `மறுவியல்’ என்று வருமே தவிர, மறியல் என்று வராது.

ஆக, தமிழ் இலக்கண மரபிலும், வடமொழி மரபிலும் லேசான மாற்றங்களே கிராமங்களிலும் ஏற்பட்டிருந்தன.

அற்புதமான இலக்கியச் சொற்களெல்லாம், வழக்குச் சொற்களாகப் பயன்படுகின்றன.

இவற்றை உலகிற்குச் சொல்லும் போது, இளைஞனின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பெரியவர்கள் தவறாகச் சொல்லி விட்டால், அவன் அப்படியே அதை நம்பித் தவறாகப் பொருள் கொண்டு விடுவான்.

என் வாழ்க்கையில் ஒரு உதாரணம்:

பதினெட்டுச் சித்தர்களில் தேரையார் என்பவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.

அதில், `இரண்டடக்கோம்; ஒன்று விடோம்,’ என்று ஒரு இடம் வருகிறது.

அதன் பொருள், `மலஜலம் வந்தால் அடக்கமாட்டோம், விந்தை வீணாக வெளிப்படுத்தமாட்டோம்’ என்பதாகும்.

இந்தப் பொருளே, எனக்கு இப்போதுதான் புரிந்தது.

நான் ஏழாம் வகுப்பு படித்தபோது, ஒரு ஆசிரியர் எனக்கு சொன்ன பொருள்: `இரண்டடக்கேல்’ என்றால் “மலஜலம் வந்தால் அடக்காதே;” `ஒன்றை விடேல்’ என்றால் “சிறுநீரை அடிக்கடி விடாதே” என்பதாகும்.

ஒன்றுக்குப் போவதென்றால் சிறுநீர் கழிப்பதென்றும், இரண்டுக்குப் போவதென்றால் மலம் போவதென்றும் முடிவு கட்டி, அவர் அப்படிச் சொல்லி விட்டார்.

விளைவு, அடிக்கடி ஒன்றுக்குப் போவதென்றால் நான் பயப்பட ஆரம்பித்தேன்; அடக்க ஆரம்பித்தேன்.

வாத்தியார் சொன்னதாயிற்றே! பயப்படாமல் இருக்க முடியுமா?

ஆகவே, அறிஞர்கள் எனப்படுவோர் வார்த்தைகளுக்குப் பொருள் சொல்லும் போது, அது எதிர்கால இளைஞனின் புத்தியைப் பாதித்துவிடாமல் கூற வேண்டும்.

தமிழிலே சில விஷயங்கள் இயற்கையாகவே மரபாகி இருக்கின்றன.

அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, அத்தை, அம்மான் எல்லாமே `அ’ கரத்தில் தொடங்குகின்றன.

தம்பியும், தங்கையும் `த’கரத்தில் தொடங்குகின்றன.

மாமன், மாமி, மைத்துனன், மைத்துனி, `ம’ கரத்தில் தொடங்குகின்றன.

ஆரம்பத்தில் திட்டமிட்டுச் செய்தார்களா இவற்றை என்பது தெரியவில்லை. ஆனால், சொல்லும் பொருளும் சுவையாக ஓட்டிவரும் மரபு தமிழில் அதிகம்.

வடமொழியில் இருந்து ஏராளமான வார்த்தைகளை தமிழ் பின்னாளில் எடுத்துக் கொண்டிருக்கிறது. உருதுக்காரர்களும் வாரி வழங்கிவிட்டுப் போயிருக்கிறார்கள்.

எந்த மொழி வார்த்தைகள் என்று தெரியாமலே பல வார்த்தைகளும் வழங்கப்படுகின்றன.

விவஸ்தை

அவஸ்தை

சபலம்

வஜா

லவலேசம்

லஞ்சம்

லாவண்யம்

ஜீரணம்

-இப்படி ஏராளமான திசைச் சொற்கள், ஒன்றா இரண்டா?

சரியான பொருள் தரும் சொற்களை அப்படியே கையாளுவதால் மயக்கம் நீங்குகிறது.

உலகத்துக்கும், இறைவனுக்கும் சக்தியை வழங்குவதால், உமாதேவியார் `சக்தி’ என்று அழைக்கப்படுகிறார்.

`ஸ்வம்’ என்றால், தானே எழுந்தது; ஆகவே ஆதிமூலம் `சிவம்’ ஆனது.

`பருவத குமாரி’ பார்வதி ஆனாள்.

`ஸீதா ரஸ்தா’ என்றால் ஹிந்தியில் நேரான சாலை.

`ஸீதா’ என்றால் வடமொழியில் `நேரானவள்’ என்று பொருள்.

அவள் ஜனகனின் மகள்; ஆகவே, `ஜானகி.’

மிதிலைச் செல்வியாதலால், `மைதிலி.’

விவேகம் கொண்டவள் ஆதலால், `வைதேகி.’

ரகுவம்சத்தில் தோன்றியதால் ராமன், `ரகுபதி.’

`கோதண்டம்’ என்ற வில்லை ஏந்தியதால், `கோதண்டபாணி.’

தசரதனின் மகன் என்பதால், `தாசரதி.’

அதுபோலவே `மது’ என்ற அரக்கனைக் கொன்றதால் கண்ணன், `மதுசூதனன்.’

கேசியைக் கொன்றதால், `கேசிநிகேதன்.’

அழகாய் இருப்பதால், `முருகன்.’

துன்பங்களை நாசப்படுத்துவதால், `விநாயகன்.’

இடையூறுகளைத் தீர்த்து வைப்பதால், `விக்னேஸ்வரன்.’

யானை முகம் படைத்தால், `கஜானன்.’

கணங்களுக்குத் தலைவனானதால் `கணபதி’, `கணேசன்.’

நீர்வாழ் இனங்களில் தூங்காதது, `மீன்’ ஒன்றுதான்.

தூங்காமலே இருப்பதால் மதுரையில் இருப்பவள், `மீனாட்சி.’

`காமம்’ என்றால் `விருப்பம்.’ மனித விருப்பதை ஆட்சி செய்வதால் காஞ்சியில் இருப்பவள், `காமாட்சி.’

`தாமரை’ யில் இருந்து உள்ளங்களை ஆள்வதால் இலக்குமிக்குப் பெயர், `பத்மாட்சி,’ `கமலாட்சி.’

வடதிசையில் இருந்தபடி அகில பாரதத்தையும் விசாலமாக ஆள்வதால், `விசாலாட்சி.’

-கிட்டத்தட்ட இந்து மதத்தின் சொற்பொருள்களுக்கு ஒரு அகராதியே தயாரிக்கலாம்.

`தேம்’ என்றாலும் தெய்வம்.

`தேவம்’ என்றாலும் தெய்வம்.

`தேங்காய்’ என்று சொல்லே தேம் + காய் தெய்வத்துக்கான காய்; இனிமையான காய் என்ற இரண்டு பொருட்களைத் தரும்.

ஆக, காரணப் பெயர்கள், பொருட் பெயர்கள் என்று எடுத்துக்கொண்டு போனால், தமிழும், வடமொழியும் போட்டி போட்டுக் கொண்டு மோதுகின்றன.

மோசமானது ஒன்றை `கஸ்மாலம்’ என்கிறோம் அல்லவா? இது `கச்மலம்’ என்ற வடமொழியின் திரிபு என்பதை காஞ்சிப் பெரியவாளின் புத்தகத்தில் படித்தேன்.

சொற்களைக் கேட்கின்றபோது பொருட்களைச் சிந்தியுங்கள்! சொற்களுக்கும் பொருட்களுக்குமுள்ள தொடர்பைச் சிந்தியுங்கள்!

அதுவும் மத சம்பந்தமான சொற்களைக் கூர்ந்து கவனியுங்கள்.

கிட்டதட்ட பாதி விஷயங்கள் உங்களுக்கு இயற்கையாகவே புரிந்துவிடும்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

காலம் அறிந்து காரியம் செய் -கவியரசு கண்ணதாசன்

காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள், அவை வீணடிக்கப்பட்டு விட்டால் திரும்பக் கிடைப்பதில்லை.

ஒரு வருஷம் முடிகிறது என்றால், ஒரு வயது முடிகிறது என்று பொருள்.

வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர, இறங்குகிற சக்தி கிடையாது.

எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல; ஒவ்வொரு வயதிலும் அவன் என்ன செய்தான் என்பதே கேள்வி.

மராட்டிய வீரன் சிவாஜியின் வயதைப்பற்றி யார் கவலைப்பட்டார்கள்? அவன் நடத்திய வீர சாகஸங்கள் வரலாறாயின!

ஆதிசங்கரர் சமாதி அடையும்போது வயது முப்பத்து இரண்டுதான்.

ஆனால், அந்த வயதுக்குள் அவர் ஆற்றிய காரியங்களின் பயனே இன்றைய பீடங்கள்.

இந்து தர்மத்தின் மறுமலர்ச்சிக்கு ஆதிசங்கரர் ஒரு மைல்கல்.

இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்தவரும் அவரே.

வயதுகள் கூடலாம், குறையலாம்; ஆனால் ஓடுகிற வருஷங்கள் உருப்படியான வருஷங்களாக இருக்க வேண்டும்.

இன்ன ஆண்டில், இன்ன காரியம் நடந்தது என்று வரலாறு எழுதப்படுமானால், அந்த வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் நம்முடைய பெயர் இருக்க வேண்டும்.

உண்டோம், உறங்கினோம், விழித்தோம் என்று வாழ்கிறவர்கள் விலங்குகளே!

பயனற்ற காரியங்களில் பொழுதைச் செலவழிப்போர் பயனற்ற பிறவிகளே!

எந்தக் காரியத்தை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ, அந்தக் காலத்தில் செய்துவிட வேண்டும். இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும்.

எனது இளமைக் காலங்கள்- அவற்றை நான் எண்ணிப் பார்க்கிறேன்.

எழுத உட்கார்ந்தால் மளமளவென்று என் கைப்படவே நாற்பது ஐம்பது பக்கங்கள் எழுதியதை எண்ணிப் பார்க்கிறேன்.

பரபரப்பான நடை; சுறுசுறுப்பான சிந்தனை; துருதுருவென்றிருந்த மூளை.

எல்லாவற்றையும் எண்ணிப் பார்க்கிறேன்.

அவை, எவ்வளவு வீணாகி விட்டன என்பதை எண்ணும் போது, `இறைவா, இன்னொரு முறை இளமையைத் தர மாட்டாயா?’ என்று கெஞ்சத் தோன்றுகிறது.

`அதைப் புத்தகமாக எழுத வேண்டும். இதைப் புத்தகமாக எழுத வேண்டும்’ என்றெல்லாம் இப்போது ஆசை பெருக்கெடுத்து ஓடுகிறது.

திடீர் திடீரென்று உடம்பு சோதனை செய்கிறது.

இந்தச் சோதனை இல்லாத காலங்களில் பயனற்ற அரசியல் கட்டுரைகளை எழுதினேன்; பயனற்ற மேடைகளில் காட்சியளித்தேன்; வீண் வம்புகளில் ஈடுபட்டேன்; விளையாட்டுகளையே வாழ்க்கை என்று கருதினேன்.

சிந்தனைகளைச் செயல்படுத்தும் ஆசைகள் வளர்ந்தபோது அந்தச் சக்தியை வழங்க, உடம்பு அடிக்கடி மறுக்கிறது.

இரணியனுக்கும் பிரஹலாதனுடைய வயதிருந்தால் அவன் நரசிம்ம அவதாரத்துடனேயே சண்டை போட்டுப் பார்த்திருப்பான்.

அறிவும் உணர்ச்சியும் தாமதித்தே வருகின்றன; ஆனால், காலம் முந்திக் கொண்டு வருகிறது.

இருபது வருஷங்களுக்கு முன்பு குமரியாக இருந்தவள் இப்போது கிழவியாகக் காட்சியளிக்கிறாள்.

அப்போது அவளுக்காக ஏங்கிய ஆடவர்களும், இப்போது அவளிடம் ஆத்ம விசாரம்தான் பேச முடிகிறது.

முன்பு எனக்கு வந்த வருமானம் இப்போது இல்லை.

அந்த வருமானத்தை நான் செலவழித்த போது இதே போல் வந்து கொண்டே இருக்கும் என்று கருதினேன்.

ஆனால், அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் உள்ள பேதம் இப்போதுதான் புரிகிறது.

மலர் பூத்தவுடனேயே அது கூந்தலுக்குப் போகாவிட்டால், அது வாடியவுடனேயே காலடியில் விழத்தான் வேண்டியிருக்கும்.

ஈயம் பத்திரமாக இல்லாவிட்டால், அது பேரீச்சம் பழத்துக்குத்தான் விலையாக இருக்கும்.

குருஷேத்திரம் எப்போது நடந்தது?

பாண்டவர்கள் வனவாசம் முடிந்த பிறகு.

அதற்கு முன்னாலேயே கண்ணன் அந்தப் போரைத் துவக்கி இருக்கலாம். ஆனால் அந்தக் காலம், யுத்த தர்மத்திற்கு நியாயமான காலமாக இருக்காது.

இரண்டாவது உலக யுத்தத்தை ஹிட்லர் தொடங்கிய காலம் அற்புதமான காலம்.

அவன் திட்டம் ஒழுங்காக இருந்திருக்குமானால் அவனே உலகத்தின் ராஜா!

அதுபோலவே, தாமதித்து அமெரிக்கா போரில் இறங்கின காலமும் அற்புதமான காலம்.

பங்களா தேசத்துக்குள் இந்தியா புகுந்த காலமே அருமையான காலம். அதற்கு முந்தி இருந்தால் உலகத்தின் வசை இருந்திருக்கும்; பிந்தி இருந்தால் இந்தியப் பொருளாதாரம் நாசமாகி இருக்கும்.

இளம் பருவத்தில் பைரன் ஒரு இளம் பெண்ணைக் காதலித்தான்; அவள் மறுத்து விட்டாள்.

நாற்பது வயதுக்கு மேல் அவளே அவனைத் தேடி வந்தாள் ஆசையோடு; அவன் மறுத்து விட்டான்.

சகல வசதிகளும் படைத்த இராவணன், சீதையின் சுயம்வரத்திற்கு முன்பே அவளை சிறையெடுத்திருந்தால் அவன் மீது பழி வந்திருக்காது. ஒரு வேளை சீதையே அவனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும்.

அரசாங்க வேலையில் சேருவதற்குக் குறிப்பிட்ட ஒரு வயது நிர்ணயித்திருக்கிறார்கள். அந்த வயது கடப்பதற்கு முன்னாலேயே அதில் சேர்ந்து விடவேண்டும். காலம் போய்விட்டால், பிறகு கடைகளில் தான் வேலை பார்க்க வேண்டிவரும்.

சபரிமலை, ஜோதி கூட ஒரு குறிப்பிட்ட நாளில்தான் தெரிகிறது; தினசரி தெரிவதில்லை.

காலத்தின் பெருமையை உணர்ந்தவன்தான் காரியத்திலும் பெருமை கொள்ள முடியும்.

இன்று நான் செய்யும் புத்தகப் பணிகளைப் பத்து ஆண்டுகளுக்கு முன் நான் துவங்கியிருந்தால், எதிர்கால மாணவன் சிலப்பதிகாரத்திற்கும், மணிமேகலைக்கும் என் உரையைத்தான் படிப்பான்.

`இப்போது திருக்குறள் உரையை மட்டுமாவது எழுதி முடித்து விட முடியாதா?’ என்று தோன்றுகிறது.

`முடியும்’ என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே எனது சினிமாப் பாடல்களையும், இசைத் தட்டுக்களையும் தொகுத்து வைத்திருந்தால், இன்று இது ஒரு தனி `லைப்ரரி’ ஆகியிருக்கும்.

முறையாக 1944-ல் இருந்தே நான் டைரி எழுதத் தொடங்கி இருந்தால், உலகத்தில் வேறு எவனுக்கும் இல்லாத வரலாறு எனக்கு இருப்பதை உலகம் கண்டு கொண்டிருக்கும்.

வெள்ளம் போல வருமானம் வந்தபோது ஒரு தோட்டத்தையும் வாங்கி, ஒரு கிருஷ்ணன் கோயிலையும் கட்டி வைத்திருந்தால், இப்போது அந்த ஆசையால் வெந்து சாக வேண்டியிருக்காது.

அப்போது குழந்தைகள் பெயரால் குறைந்த பட்ச டெபாசிட் போட்டிருந்தால்கூட, மரணத்தைப் பற்றிய நினைப்பு வரும்போது குழந்தைகளைப் பற்றிய கவலை வராது.

அப்போது வாங்கிய சொத்துகளை விற்காமல் இருந்திருந்தால் கூட இப்போது எதிர்காலத்தைப் பற்றிய கவலையிராது.

அப்போது காலம் கனிவாக இருந்தது.

பணம் வந்தது; உடம்பு துடிதுடிப்பாக இருந்தது; `போனால் போகட்டும் போடா’ என்ற புத்தியும் இருந்தது.

இப்போது பழங்கணக்குகள் பரிசீலிக்கப்படுகின்றன.

பாய்மரக் கப்பல், காற்றை நம்பிப் போய்க் கொண்டிருக்கிறது.

புயல் காலத்தில் வானளாவி எழுந்த அலைகள், இப்போது அமைதியாக நாக நர்த்தனமாடுகின்றன.

நம்முடைய நண்பர்களும் காலங்களே; பகைவர்களும் காலங்களே.

காலங்களே தருகின்றன; அவையே பறிக்கின்றன.

காலங்களே சிரிக்கச் செய்கின்றன; அவையே அழவும் வைக்கின்றன.

`ஞாலம் கருதினும் கைகூடும்; காலம்
கருதி இடத்தால் செயின்’

என்றான் வள்ளுவன்.

காலம் பார்த்துக் காரியம் செய்தால், பூமியையே விலைக்கு வாங்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னால் கேரளாவில் பரபரப்பான கொலை ஒன்று நடந்தது.

கேரளா முழுவதிலும் அதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. அடுத்த மாதமே அதைக் கதையாக எழுதிப் படமாக எடுத்து விட்டார் ஒருவர். அவர் லட்சாதிபதியாகி விட்டார்.

கைவண்டிக்காரர்கள் காய்கறி விற்கிறார்கள்; மாம்பழ சீஸன் வந்தால் மாம்பழம் விற்கிறார்கள்.

பனிக்காலத்தில் ஐஸ் கட்டியையும், காற்றடிக்கிற காலத்தில் மாவையும் வியாபாரம் பண்ணக்கூடாது.

`முறைகோடி மன்னவன் செய்யின்; உறைகோடி
ஒவ்வாது வானம் பெயல்’

-என்றான் வள்ளுவன்.

சித்திரை வைகாசி மாதங்களில் ஏரி குளங்களைத் தூரெடுக்க வேண்டும். அப்படித் தூரெடுக்கத் தவறினால், ஐப்பசி கார்த்திகையில் பெய்கிற மழைத் தண்ணீர் குளங்களிலும், ஏரிகளிலும் தங்காது.

வானம் பார்த்த பூமியில் பங்குனி மாதம் விதை விதைக்கின்றவன் விதைத்த விதையையும் சேர்ந்தே இழப்பான்.

`ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள்.

ஆவணியில் தண்ணீர் இறைத்தால் போதும், புரட்டாசியில் இருந்து மழை உதவி செய்துவிடும்.

காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள் அடங்கி இருக்கின்றன.

நல்ல பெண் கிடைக்கும் போது திருமணத்தை முடிக்காமல் விட்டுவிட்டால், பிறகு எந்தப் பெண் கிடைத்தாலும் போதும் என்ற நிலைமை வந்து விடும்.

காலத்தால் கிடைக்கும் நல்ல நண்பர்கள் மீண்டும் கிடைக்க மாட்டார்கள்.

இராவணன் தோற்ற பிறகு விபீஷணன் ராமனைத் தேடி வந்திருந்தால், ராமனே அவனை ஒரு அடிமையாகத்தான் நடத்தி இருப்பான்.

காலம் பார்த்து சுக்ரீவன், ராமனைச் சேராமல் இருந்திருந்தால், வாலி வதமும் நடந்திருக்காது; சுக்ரீவனுக்குப் பட்டமும் கிடைத்திருக்காது.

கம்சன் போட்ட தவறான காலக் கணக்கினால் தான் கிருஷ்ணாவதாரம் நமக்குக் கிடைத்தது.

காலத்தின் கருணையால்தான் அசுரக் கூட்டம் அழிந்தது.

காலத்தைச் சரியாகப் பிடித்துக் கொண்டால், தெருப் பிச்சைக்காரியும் மகாராணியாகலாம்.

சினிமா உலகிலேயே நான் பார்க்கிறேன். காலத்தால் தவறான ஆட்களைச் சந்தித்து, கல்யாணம் என்ற பெயரில் வாழ்வு இழந்து போன நடிகைகளும் உண்டு. பெரும் பணக்காரர்களைப் பிடித்துக் கொண்டு உலகம் முழுவதும் விஜயம் செய்யும் நடிகைகளும் உண்டு.

அதிர்ஷ்டம் என்பது வேறொன்றுமில்லை; வருகின்ற காலத்தை ஒழுங்காகப் பிடித்துக் கொள்வதே.

நீங்கள் அதிர்ஷ்டக்காரர்களா என்பதைச் சோதிக்கக் காலம் அறிந்து காரியம் செய்தீர்களா, என்பதை எண்ணிப்பாருங்கள்.



__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard