அன்னதானகூடம் ஸ்டாலின் திறந்தார்
சென்னை, ஜூன் 10:மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயிலில் ரூ. 13 லட்சம் செலவில் கட்டப்பட்ட அன்னதான மண்டபத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
.
முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி, இவரது மகள் எழிலரசியும், அவரது கணவர் டாக்டர் ஜோதிமணி ஆகியோர் மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் கோயில் அருகே டாக்டர் ஜோதி மணியின் தந்தை கரந்தை. கப்பல் முருகேசன் செட்டியார், தாயார் ஜானகி அம்மாள் ஆகியோரது நினைவாக ரூ. 13 லட்சம் செலவில் அன்னதான மண்டபத்தை கட்டியுள்ளனர்.
இன்று காலை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் அன்னதான மண்டபத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார். முதலமைச்சரின் மனைவி தயாளு அம்மாள் குத்து விளக்கேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சாந்தா ஸ்டாலின், செல்வி, மு.க. அழகிரி மகள் கயல்விழி, அவரது கணவர் வெங்கட், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மனைவி பிரியா, கலாநிதி மாறனின் மனைவி காவேரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
மேலும் எஸ்.வி.சேகர் எம்எல்ஏ, தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜே. அன்பழகன், 144வது வட்ட திமுக செயலாளரும், முண்டகக்கண்ணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவருமான எல்.உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத், முதன்மைச் செயலாளர் முத்துச்சாமி, ஆணையாளர் (பொறுப்பு) காவேரி, ஆலய செயல் அலுவலர் த.மோகனசுந்தரம் மற்றும் அறங்காவலர்கள் வாசுதேவன், டில்லி, கிருஷ்ணவேணி, ராமநாதன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதிய அன்னதான மண்டபம் திறப்பு விழாவையொட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அமைச்சர் பேட்டி¦தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:தமிழ் நாட்டில் 360 திருக்கோயில்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து திருக்கோயில்கள் வளாகத்திற் குள்ளேயே தற்போது அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன் அருகிலேயே தனியாக அன்னதான மண்டபங்களை உருவாக்கி தொடர்ந்து அன்னதானம் வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அந்த வகையில் டாக்டர் ஜோதிமணி எழிலரசி குடும்பத்தினர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கு ரூ. 13 லட்சம் செலவில் இந்த அன்னதான மண்டபத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். அற நிலை யத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கு நடந்து வருகிறது.
தற்போது மத்திய அரசின் 13வது நிதிக்குழு கோயில் திருப்பணிக்காக தமிழகத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கியிருக்கிறது. இந்த தொகை முழுவதையும் கொண்டு இன்னும் ஏராளமான திருக்கோயில்களில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
பொது மக்களும் தாராளமாக நன்கொடை தந்தால் திருப்பணிகளுக்கும் இதுபோன்ற அன்னதான மண்டபங்கள் கட்டுவதற்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்..
முண்டகக்கண்ணி கோயிலில் முதல்வர் குடும்பத்தினர்
சென்னை, ஜுன்.10 (டிஎன்எஸ்) சென்னை மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயிலில் முதல்வரின் துணைவியார் தயாளு அம்மாள் உட்பட அக்குடும்பத்தினர் அம்மனை தரிசனம் செய்தனர்.
முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எதிரே முதல்வரின் பேத்தி எழிலரசி மற்றும் அவரது கணவர் டாக்டர் ஜோதிமணி ஆகியோர் 13 லட்சம் ரூபாய் செலவில் அன்னதான மண்டபம் ஒன்றை கட்டியுள்ளனர். இந்த மண்டபத்தை துணை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வரின் மனைவி சாந்தா ஸ்டாலின், முதலமைச்சரின் மகளும், ஏழிலரசியின் தாயாருமான செல்வி, மு க அழகிரியின் மகள் கயல்விழி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மனைவி பிரியா, கலாநிதி மாறனின் மனைவி காவேரி, முதல்வரின் மகன் மு க தமிழரசு குடும்பத்தினர் உட்பட முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அன்னதான திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஆணையர் சம்பத், முதன்மைச் செயலாளர் முத்துசாமி, முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் மோகன சுந்தரம், ஆணையாளர் காவேரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.